• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 6

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
12
Mr. மாமியார் 6


ஸ்ரீசைலமும் சீதளாவும் ஆடி மாதத்தின் பெயரால் தம்பதிகளைப் பிரித்து வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு, நம்பிக்கை இரண்டுமே இல்லை என்றனர்.

இருப்பினும், பாட்டி ஜானகியின் முணுமுணுப்பும், லக்ஷ்மியின் ஆதங்கமும் சேர்ந்ததில், லலிதா ஆடிமாதக் கணக்கிற்கு ஒரு வாரம் பிறந்த வீட்டிற்குச் செல்வதாக முடிவானது.

மகளை அழைத்துச் செல்ல வந்தவர்களிடம் ஸ்ரீசைலம் தனிக்குடித்தனத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். மகளானால் அலைபேசியிலும் நேரிலும் புகுந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கிறாள், இவர் என்னடாவென்றால், மகனும் மருமளும் தனிக்குடித்தனம் செல்வதை ஏதோ, பெரும் பொறுப்பு நீங்கியதுபோல் சொல்கிறாரே என லலிதாவின் பெற்றோர் பதறிவிட்டனர்.

ரங்கராஜன் பேசத் தயங்க, லக்ஷ்மி “லலிதா ஏதாவது தப்பா…”

ஸ்ரீசைலம் “சேச்சே, அப்டி எதுவும் இல்ல, இது முன்னயே ப்ளான் செஞ்சதுதான்” என, லக்ஷ்மிக்கு சீதளாவின் அமைதி உறுத்தியது. ஆனால், மேலும் எதையாவது கேட்டு, பூதம் கிளம்புவதைப் பார்க்க விருப்பமின்றி சீதளா கொடுத்த காஃபி மற்றும் ஸ்விக்கித்த சமோஸாவுடன்
லலிதாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டனர்.

வாமனமூர்த்தியை விருந்துக்கு அழைக்க, “லலிதாவை கூட்டிட்டு வர வரும்போது வரேன்” என்றான்.

லலிதா ஓரிரு உடைகள், அத்தியாவசியமான பொருள்கள், லேப்டாப் என எல்லாம் முன்பே கட்டி அவர்களது அறையில் தயாராக வைத்திருந்தாள்.

வாயில் வரை சென்று, செருப்பை அணிந்தவளுக்கு எதையோ மறந்தது போல் தோன்றவும், தன் கைப்பை, லேப்டாப் பை எனத் தேடியும் கிடைக்கவில்லை. காதைத் தொட்டுப் பார்க்க, ப்ளூடூத் இருந்தது.

சீதளா “லலிதா, என்ன தேடற?”

“என் மொபைலை காணும், அத்தை”

“எங்க போகும், பாத்ரூம்ல போய் பாரு”

லக்ஷ்மி சீதளாவின் தொனியில் இருந்தது நக்கலா, கோபமா என்ற ஆராய்ச்சியில் இறங்க, அறைக்குள் சென்ற வாமனமூர்த்தி “லலிதா, இங்க சார்ஜ்ல இருக்கு பாரு” என ஆகாசவாணியானான்.

நொடிகள் நிமிடங்களாக நீண்டும், அலைபேசியை கணவன் கொண்டு வருவானென நின்ற இடத்திலேயே காத்திருந்த லலிதாவைப் பார்த்த சீதளா, கணவரிடம் புருவம் உயர்த்தி தலையசைத்தாள். அதில் தோள்குலுக்கலுடன் கூடிய ஒரு ‘நான்தான் சொன்னேனே’ அடங்கி இருந்தது.

ரங்கராஜன் மனைவியின் காதில் “குறிப்பறிய மாட்டான் நன்மரம்” என முனக,

லக்ஷ்மி “விரை ஒன்னு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?” என பழமொழிப் போரில் இறங்கினாள்.

“நேரமாகுது, ராகுகாலத்துக்கு முன்ன நல்லநேரத்துல கிளம்பணும்” என்ற பாட்டி ஜானகி, தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் வாமனமூர்த்தியே வெளியில் வந்து அலைபேசியை லலிதாவிடம் நீட்டினான்.

இரண்டரை மாதங்களுக்குப் பின் தொடர்ந்து ஒருவாரம் பிறந்தவீட்டில் தங்கச் செல்லும் குஷியிலும் உற்சாகமாக மிகுதியிலும் லலிதா பொதுவில் பை சொல்லிக் கையசைத்து கிளம்பினாள்.

மகள் கவனிக்காத வாமனனின் கூர்ந்த பார்வையில் தயங்கிய ரங்கராஜன் “வரோம் மாப்பிள்ளை, விருந்துக்கு வாங்க” என்ற அழைப்புடன் விடைபெற்றார்.


இதற்கு முன்பு இரண்டு முறை லலிதா தன் வீட்டில் இரவு தங்கியபோதும் வாமனமூர்த்தியும் உடன் இருந்தான். இப்போது லலிதாவிற்கு விட்டு விடுதலையான உணர்வு. போகவர ஒவ்வொரு அறையாகப் போய் பார்ப்பதும், அலமாரிகளைத் திறப்பதும், ‘‘இதை ஏம்மா இங்க வெச்சிருக்க, அதை எப்பம்மா வாங்கின, புது மிக்ஸியா, மூணாவது வீட்டு பிரபாகரனுக்கு என்ன குழந்தை பிறந்தது?’ என எதையாவது பேசிக்கொண்டே இருக்க, சிரிப்பும் நெகிழ்வுமாகப் பார்த்த பெற்றோருக்கு வீடே புத்துயிர் பெற்ற உணர்வு.

ஞாயிறன்று காலை லலிதாவை அழைத்து வந்த ரங்கராஜன் அன்று மாலையே மூன்று நாள் அலுவல் பயணமாக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றார். தாத்தா ரத்னமும் பேத்தியின் திருமணம் முடிந்தபின் மகனுடன் அமெரிக்கா சென்றிருக்க, அடுத்த மூன்று நாள்கள் தாயும் மகளும் மட்டுமே.

********************


புறணி பேசுதல், வாயடித்தல், ஊர்கதை, வெட்டி நியாயம், வம்படித்தல் என எந்தப் பெயரில் அழைத்தாலும் வம்பு பேசுதல் சுவாரஸ்யமான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

முன்பு வீட்டு முற்றத்தில், தாழ்வாரத்தில், திண்ணையில், தெருவோரத்தில், குழாயடியில், கோவில்களில், ஆற்றங்கரைகளில் தன் வீடு மற்றும் அக்கம்பக்கத்துப் பெண்களோடு பேசியவர்கள்தானே!

இதுபோலப் பேசுவதை பொதுவாக வம்பு பேசுவதாகக் குறிப்பிட்டாலும், இதை எதிர்மறை என முழுவதுமாக ஒதுக்கிவிட முடியாது.

அன்று பெண்களின் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், அழுத்தங்களுக்கு வடிகாலாகவும், அனுபவப் பரிமாறலும், ஆலோசனையும், அறிவுரையும் கிடைக்கும் இடமாகவும் இருந்தது இது போன்ற பேச்சுகளே.

அனுபவமிக்க மூத்த தலைமுறைப் பெண்கள் தங்களுக்குத் தெரிந்த கை மருந்தும், கஷாயமும், பிள்ளை பெற்றவளுக்குப் பத்தியமும், வெள்ளை படுதலுக்கு வைத்தியமும், குழம்பு வகைகளும், தீபாவளி பலகாரங்களும், பொங்கல் விழாவின் முறைமைகளும், கல்யாணம் முதல் (இறுதி) காரியம் வரையான பழக்கங்களைப் போகிற போக்கில் அடுத்த தலைமுறைக்குக் கடத்த மிகச் சுலபமான இடம் அன்றைய பெண்களின் முற்றத்துப் பேச்சு.

பெண்களின் மனநிலைக்கு ஒரு அளவில் இது அவசியமானதும் அரோக்கியமானதும் கூட .

சம்பந்தப்பட்ட ஆள் இல்லாதபோது புறம் பேசினாலுமே, பல சமயங்களில் முகத்துக்கு நேரான விமரிசனமும் ஆலோசனையும் கூட கிடைக்கும்.

இன்று இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக, வீடியோவாக மறு அவதாரம் எடுத்திருக்கின்றன.

‘பெரியவங்க பேசறப்போ வாய் பார்க்காத’ என்று அதட்டியது போய், இப்போது தாயும் மகளும் ஜோடி சேர்ந்து கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது, அறிந்தவர், தெரிந்தவர் அத்தனை பேர் தலையையும் நலங்குத் தேங்காய் போல் உருட்டினர்.

ரங்கராஜன் இருந்தால், லக்ஷ்மியால் ஃபோனில் கூட லலிதாவின் புகுந்த வீட்டினர் பற்றி நலம் விசாரிப்பைத் தாண்டி தூண்டித் துருவி எதையும் கேட்க முடியாது. லலிதாவாகவே அவ்வப்போது எதையாவது சொன்னாலும் கூட மனைவி, மகள் இருவருக்குமே திட்டு விழும்.


லலிதாவை எதையாவது கேட்கப் போய் அவளது புகுந்த வீட்டு மனிதர்களுக்கு எதிராக நாமே அவளைத் தூண்டி விட்டது போல் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவருக்கு உண்டு.

அதற்காக அவருக்கு ஆர்வமில்லை என்று நினைக்க வேண்டாம். தனிமையில் மனைவி வாசிக்கும் செய்திகளை ஒன்று விடாது கேட்டுக்கொள்வார்தான். கேட்டால், பேசத்தான் கூடாது, கேட்கலாம் என்று சிரிப்பார்.


மகளை புகுந்த வீட்டினர் நடத்தும் விதமும், அவர்கள் வீட்டின் தினசரி நியதிகளும், மாமியாரின் தொனியும், பாவமும், மகள் அங்கு எத்தனை பொருந்தி இருக்கிறாள் என்றும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் லக்ஷ்மியை உந்தியது.

இதற்காகவே காத்திருந்தது போல், லலிதா இரண்டு நாள் விடுப்பு விட்டு, கதை சொல்லியானாள். கேட்டிருந்த லக்ஷ்மிக்கு மடு மலையாகவும், துளி கடலாகவும் தெரிந்தது.

சில சமயம் லலிதா மாமியார் சீதளாவைப் பாராட்டியதை லக்ஷ்மி அவ்வளவாக ரசிக்கவில்லை எனலாம்.

மகள் தன்னிடம் இருக்கையில் காலையில் நேரத்தோடு எழாதது, தனக்குக் கூட மாட உதவி செய்யாதது, துணிமணிகளை, அறையை, மேஜையை சுத்தமாகப் பராமரிக்காதது, செருப்பை உதறுவது, அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற டிஃபன் பாக்ஸை பல நாள்கள் கழுவப் போடாதது, ஸ்டோல் , துப்பட்டா, ஹேர் க்ளிப், பேண்ட் என உபயோகித்த பொருட்களை, சோஃபாவில், ஊஞ்சலில், கிச்சன் மேடையில் விட்டெறிவது, மதியம் வரை குளிக்காமல் இருப்பது, நகத்தைக் கடிப்பது, இருட்டியபின் தலைக்குக் குளிப்பது என சீனப் பெருஞ்சுவராக நீண்ட குற்றப்பத்திரிகை, அதையே மகளின் மாமியார் அல்லது கணவன் சொன்னால் அநியாயமாக, பெண்ணுரிமைக்கு எதிராக, சமத்துவத்திற்கு விழுந்த சவுக்கடியாக, உழைத்துக் களைத்து லட்சங்களில் சம்பாதிக்கும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியாகப் பட்டதுதான் விந்தை.

“ஆமாம்மா, ஒரு நாள் நைட்ல இவர் டீ கேட்டார்னு பால் காய்ச்சப் போனேனா, கைல கிடைச்ச பாத்திரத்துல ஊத்தி காய்ச்சி டீயும் போட்டு, நாங்க குடிச்சும் ஆச்சு.

மறநாள் காலைல எழுந்து வரும்போதே அத்தை “அது பால் பாத்திரம் இல்லை, அதுல ஏன் பால் காய்ச்சினே?” ன்னு கொஞ்சம் சீரியஸாவே கேட்டாங்க. பாலுக்குன்னு ரெண்டு, மூணு பாத்திரம், தயிர் உரைஊத்த ரெண்டு, மூணு பாத்திரம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டுனு எல்லாத்துக்கும் தனித் தனியா வெச்சிருக்காங்க. அதுல அதைத்தவிர எதையாவது வெச்சிட்டமோ, அவ்ளோதான்”

“நல்லா தேய்ச்சு கழுவிட்டா என்னடீ பிரச்சனை?”

“ஹூ நோஸ், அதே போல தயிர் கரண்டி, பால் கரண்டி, குழம்பு கரண்டினு அதுக்கொரு பரேட். தேய்க்காம இருந்தா தேய்ச்சு அதையேதான் யூஸ் பண்ணனும்”

“காஃபி குடிச்ச தம்ளரை இருந்த இடத்துல வெச்சுட்டு போவ, இதெல்லாமாடீ செய்யுற நீ?”

“சேச்சே, நான் அன்னைக்கு ஒருநாள் டீ போட்டதோட சரி, இதெல்லாம் பாட்டியோட காஸிப் பண்ணினபோது அவங்க புலம்பினது”

“என்னடா இது, மருமக சரியா இருக்கான்னு எந்த மாமியாராவது புலம்புவாங்களா?”

“என்னோட cribbing partner ரே பாட்டிதாம்மா”

மாப்பிள்ளையைப் பற்றிக் கேட்ட அம்மாவிடம், ஏனோ வாமனமூர்த்தியைப் பற்றி குறையாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. இருந்தும் லலிதாவின் விஷயத்தின் தொடக்கமும் முடிவும் கணவனைச் சுற்றியே இருந்ததில் லக்ஷ்மிக்கு வெகு திருப்தி.

பவித்ரா - ஸ்ரீராமின் காதல், சீதளாவின் ஆளுமை, வியாபகம், மனைவியைக் கேட்காது எந்த முடிவும் எடுக்காத ஸ்ரீசைலம், பவித்ரா கேட்டாளென சீதளா செய்த பக்லாவா (Baklava - துருக்கிய இனிப்பு), சீதளா உடை அணியும் நேர்த்தி, மருமகளிடம் பயமிருந்தாலும், விடாது அவளை குறை சொல்லும் பாட்டி ஜானகி என, இரண்டரை மாதத்தில் ராய்ட்டர் போல் அத்தனை செய்தி சேகரிப்பு.

காரசாரமான தொக்கு, துவையல், அப்பளம், சாதம் என எளிமையாக, ஆனால் வாய்க்கு ருசியாக செய்து, விலாவாரி சமையலுக்கு ஓய்வு கொடுத்து, நிமிர்ந்து, சாய்ந்து, குப்புறப் படுத்து என நானாவித போஸ்களிலும் கதைத்தனர். லலிதா மொபைலை கூட அதிகம் பார்க்கவில்லை.

புகுந்த வீட்டில் இதை செய்யாதே என்றும் செய் என்றும் ஒரே சமயத்தில் சொல்லி ஏற்கனவே குழம்பி இருந்தவளை மேலும் குழப்பினாள் லக்ஷ்மி.

தந்தை இல்லாததில், இருவரும் இரவில் ஓரே அறையில் படுத்து கண் சொக்கும்வரை கதை பேசினர். புகுந்தவீட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும்(!) மகளை எழுப்ப மனமன்றி இஷ்டத்திற்கு உறங்க விட்டாள் லக்ஷ்மி.

செவ்வாயன்று லக்ஷ்மி மிளகு, மஞ்சள்பொடி, ஒரு மிளகாய் வற்றல் போட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்துவிட, லலிதா ஊறியபின் நிதானமாகக் குளித்துவந்தாள். தினமும் மதியம் நல்ல உறக்கம்.

செவ்வாய் மதியம் ஸ்வேதா மகனுடன் வந்திருந்தாள். புறப்படும் சமயம் ‘அண்ணா’ என எதையோ சொல்ல வந்தவள், லக்ஷ்மி வரவும் நிறுத்திக்கொண்டாள்.

அண்ணா என்றால் அவள் கணவன் ராகவா அல்லது தன் கணவனா என யோசித்த லலிதா மறுகணமே அதை மறந்தும் போனாள்.

ஆடி சேல் என இருவரும் ஒரு நாள் முழுதும் ஊரைச் சுற்றினர். பிறகு புதன்கிழமை ஒர்க் ப்ஃரம் ஹோம் செய்ததில் லலிதாவை வேலை இழுத்துக்கொள்ள, இரவு ரங்கராஜன் தன் மும்பை பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பினார்.

மூன்று இரவுகள் தாயிடம் சீராடியவளுக்கு பேச்சு மும்முரத்தில் வேறெந்த சிந்தனையுமே எழவில்லை.

பெற்றோர் அவர்களுடனே உறங்கச் சொல்லியும், ‘இட்ஸ் ஓகே டாடி’ என தனதறைக்கு வந்தவள், விளக்கணைத்து சற்று நேரம் சென்ற பிறகுதான் தனிமையை உணர்ந்தாள்.

கணவனோடு தினமும் மூன்று,நான்கு முறை அலைபேசியபோதிலும் ‘நான் சாப்பிட்டேன், நீ தூங்கினியா, வீட்ல எல்லாரும் என்ன செய்யறாங்க’ போன்ற வழக்கமான விசாரிப்புகள் மட்டுமே.


அவனை, அவனது வீட்டினரைச் சுற்றியே பேச்சு ஓடியதாலோ என்னவோ, லலிதாவிற்கு பிரிவு அத்தனை உறைக்கவில்லை. இப்போது ஏனோ மொபைலில் கூட மனம் செல்லாது இருட்டில் படுக்கையில் புரண்டவளுக்கு எதுவோ குறைந்த, எதையோ இழந்த உணர்வு. குளிர்வது போலிருக்க ஏசியை அணைத்தவள், அடுத்த நிமிடமே வேகிறதென ஆன் செய்தாள்.

மீண்டும் மொபைலை திறக்க, வாமனமூர்த்தி ஆன்லைனில் இருப்பதாகக் காட்டவும், சட்டென அழைத்தவள், அவன் எடுத்ததும் முதலில் இவளே ‘ஹலோ’ என, எதிர்ப்புறம் மௌனமாக இருக்கவே, மீண்டும் ‘ஹலோ’ என்றாள்.

“மேடத்துக்கு என்ன திடீர்னு என் மேல கருணை?” என்றவனின் குரலின் ஆழத்தில்

“எ….ன்ன?”

“என்னைக் கேட்டா, நீதானே கூப்ட்ட, அப்ப நீதான் சொல்லணும்”

“...”

“ஒண்ணுமில்லன்னா வெச்சுடவா, கொஞ்சம் வேலை இருக்கு”

“..ம்…”

“பை”

‘பாதி நாள் பகல்லயே ஃபேக்டரிக்கு போறதில்லை. ராத்திரி பதினோரு மணிக்கு அப்படி என்ன வேலையோ, ஷயத் (ஒருக்கால்) பென்சில் சீவுவானோ?’

வாமனன் பேசிய த்வனி ஏனோ அவளை இம்சித்ததில். சுணக்கத்துடன் நொடித்த லலிதா, இருப்புக் கொள்ளாமல் அறைக்குள்ளேயே நடந்தாள்.

‘அவன் குரலே சரியில்லையே, கோபமாக இருக்கானோ?’

‘இங்க வந்தன்னைக்கு காலைல கூட என்னோட ஷவர்ல…’

லலிதாவின் உடல் சிலிர்த்து உதற, நினைவு தந்த வெம்மை தாளாது தொப்பென தரையில் அமர்ந்தாள்.

அங்கிருந்து புறப்படும் முன் அவளது கைப்பையில் வைத்த மொபைலை காணாமல் தான் தேடியதும், அறையில் இருப்பதாக வாமனன் உள்ளே அழைத்ததும், பெற்றோர்களின் சங்கடமான பார்வையும் சரேலென நினைவு வர, தன் தவறு புரிந்தது.

‘புத்தூ ஹூம் மேய்ன். சரியான தத்தி நான். மட்டி மாதிரி இருந்திருக்கேன்’

‘நான் புறப்படற முன்னால என்னை தனியா பார்க்கணும்னு அவன் நினைச்ச மாதிரி எனக்கு ஏன் தோணல?’

‘அதை விட்டாலும் இந்த நாலு நாள்ல கூட அவனை நான் அதிகம் தேடலையே, ஏன்?’

‘அரேன்ஜ்ட் மேரேஜ்ல எல்லாரும் இப்படிதான் இருப்பாங்களா, இல்ல எனக்குதான் ஃபீலிங்ஸே வரலையா?’

வாமனமூர்த்தியை நினைத்துக்கொண்டே அவனை தான் நினைக்கவில்லையோ என தன் வழக்கம்போல் குழப்பத்தில் இருந்தவளின் மொபைல் ஒளிர்ந்தது. அவனேதான்!

‘இப்பயாவது சொதப்பாம பேசு லலிதா’ என தனக்கே சொல்லிக்கொண்டவளின் ‘ஹலோ’ வே தழுதழுத்தது.

“இன்னும் தூங்காம என்ன செய்யற?”

“தூக்கம் வரலை”

“ஏன்?”

“ம்ப்ச்… தெரியல…. கில்ட்டியா இருக்கு”

“ ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவா பேசற அளவுக்கு என்ன தப்பு செஞ்ச?”

“...”

“லால்ஸ், சத்தம் போடாம வந்து கதவைத் திற”

“நீங்க தூங்கலையா?”

“ஹலோ, கதவைத் திறடீ”

“வாட்…?” என்றவளின் வேகத்தில்,

“மெதுவாடீ, ஊரைக் கூட்டிடாத. ஆடி மாசத்துல அடிவாங்கக் கூடாது”

ஃப்ரிட்ஜ், டீவி, மோடம் எல்லாம் பச்சையும் சிவப்புமாகக் கண்களை உருட்டி விழிக்க, ஏதோ அரிய பெரிய கொள்ளைக்காரி போல் நடந்து கதவைத் திறந்தவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவையும் இழுத்துச் சாத்தினான் வாமனமூர்த்தி.

“வா” என அவளது அறையை நோக்கி நடந்தவனை மந்திரித்த கோழிபோல் பின்தொடர்ந்தவள் அறைக்குள் சென்றதும் திருதிருத்ததைக் கண்ட வாமனமூர்த்தியின் முகத்தில் சிரிப்பும் உல்லாசமும்.

அவளையே பார்த்திருந்தவன், இது வேலைக்காது எனப் புரிய,

“ஹக்?”

விரிந்த கைகளில் அடங்கியவள்,

“ஸாரி”

“அடடா, இந்த ரூம்ல போதி மரம் எதுவும் இருக்கான்ன?”

லலிதா மீண்டும் “ஸாரி”

“மிஸ் பண்ணினியா?”

“ம்…”

“எப்பத்துல இருந்து, உங்கப்பா திரும்பி வந்து உங்கம்மா உன்னை கழட்டி விட்ட அப்புறமா…”

கணவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு சிரிப்பு வந்து விட்டது. ‘ரெண்டு நிமிஷம்” என ஓய்வறைக்கு சென்று க்ளோஸப் மணக்க வந்தவன், சட்டமாக படுக்கையில் அமர்ந்து, முழங்கால் வரையிலான தின் ஸ்ட்ராப் நைட்டியில் நின்றிருந்த லலிதாவை மேலும் கீழும் பார்த்தவன்…

“இந்த ட்ரெஸ்ஸை நீ ஏன் நம்ம வீட்ல போடலை?”

“...”

“சரி வா, தூங்கலாம்”

‘ஐயோ, சும்மா இருந்தவனை ஃபோன் பண்ணி கிளப்பி விட்டுட்டேன் போலவே’

“அம்மா, அப்பா…”

“அவங்களுக்கென்ன…?”

“இல்ல… ஆடி மாசம்னு…”

கையை நீட்டி மனைவியைத் தன்னிடம் இழுத்து “டெலிவரிய குளுகுளுன்னு ஊட்டில வெச்சுக்கலாம்டீ” என்றவன் கணவனின் கடமையை செவ்வனே செய்தான்.

******************

ஆவணி முதல் தேதியே பால் காய்ச்சுவதால், ஆடி மாதத்தின் கடைசி வாரம் முழுவதும் லலிதாவிற்கு சமையல், வீட்டுப் பராமரிப்பு, புகுந்த வீட்டின் அடிப்படை நியதிகள் என பல்வேறு சப்ஜெக்ட்டுகளில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

சீதளா ஆஃப்லைனிலும் லக்ஷ்மி ஆன்லைனிலும் வகுப்பெடுத்தனர்.

லலிதாவிற்கு சமையல் நன்றாகவே தெரியும். ஆனால், தினசரி செய்யப் பிடிக்காது. சமையலறையில் சீஃப் குக் போல் கிண்டிக் கிளறுபவளுக்குப் பின்னாலேயே திறந்ததை மூடவும் கொட்டியதை அள்ளவும் ஆள் வேண்டும். அந்த பயத்திலேயே லக்ஷ்மி டீயைத் தாண்டி மகளை அடுக்களைக்குள் அதிகம் அனுமதித்ததில்லை.

ஃபேக்டரி, க்ளப், சமூக சேவை என பன்முகம் கொண்ட சோஷியலைட் பெண்மணியான சீதளாவின் தோற்றமும் உடையும் மட்டுமன்றி காரியமும் நறுவிசுதான்.

எண்ணெயை, குழம்பை, பாத்திரம் மாற்றுகையில், காலி செய்த வாணலியை, கீழேயும் எதுவும் சிந்தாது, பாத்திரத்தின் வெளிப்புறத்திலும் வழியாது
அதை நிமிர்த்தும்போதே துணியால் துடைத்தபடி நிமிர்த்திய மாமியாரின் நேர்த்தியில் லலிதா அயர்ந்தாள்.

காய்கறி, பழம் , இஞ்சி, பச்சை மிளகாய் கட்டி வந்த பிளாஸ்டிக் பைகளின் இறுக்கமான முடிச்சை அவிழ்க்கப் பொறுமையின்றி விரலை வைத்து கிழித்த லலிதாவிடம் “அப்படி என்ன அவசரம், ஏன் இந்த கற்பழி கந்தன் வேலை?” என்றாள் சீதளா.

சுருங்கச் சொல்லின் சீதளா சொல்லாமல் சொன்னது
செய்வன திருந்தச் செய் என்பதே.

சுத்தம் செய்வது வேறு, திருத்தமாக வேலை செய்வது வேறு என்று மாமியார் சொன்னது புரிந்தாலும், கடை பிடிப்பதுதான் கடினமாக இருந்தது.

லலிதா பரமேஸ்வரி சோம்பேறி அல்ல. பெரும்பாலான இளையதலைமுறையைப் போலவே சில விஷயங்களின் மீது ஒருவித அலட்சியமும் ஏளனமும் உண்டு.

ஒற்றைப் பெண்ணாக, செல்லமாக வளர்ந்து, நன்கு படித்து, பெற்றோருக்குப் பெருமை சேர்த்து, சலுகைகளை அனுபவித்து, வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்ந்த லலிதா, இன்றுவரை வசதியான தன் வட்டத்திலிருந்து (Comfort zone) வெளியே வர நேரவும் இல்லை, அதற்கான அவசியமும் அவளுக்கு ஏற்படவில்லை.

இதனிடையில் எதிர் வீட்டில் இருந்த சில பழைய சாமான்களை சரி செய்து, வீட்டு உபயோகப் பொருட்கள், சோஃபா, திரைச் சீலைகள் என வாங்கி வீட்டை சீர் செய்தனர்.

வெளியில் பெரியவர்கள் இருக்க, ‘ஹஷ் ஹஷ்’ குரலில் அறைக்குள் அனுபவித்த அந்தரங்கமும் நெருக்கமும் , இனி இதே போன்றதொரு பெரிய வீடு முழுவதும் தாங்கள் இருவர் மட்டுமே என்பது போன்ற தனிக்குடித்தனம் குறித்தான கனவுகள் லலிதாவின் மனதில் முகிழ்க்கத் தொடங்கியது.

ஆவணி முதல் தேதி, புதன் கிழமை காலை நல்ல அமிர்த யோகத்தில் எதிர் வீட்டில் பால் காய்ச்சி, லலிதா பரமேஸ்வரியும் வாமன மூர்த்தியும் தங்கள் கனவுக் குடித்தனத்தைத் தொடங்கினர்.

பெற்றோரை விட்டு வேறு ஊரில் இருப்பது ஒருவிதம். குறைந்த பட்சமாக ஒரே ஊரில் சிலபல கிலோமீட்டர்களாவது தள்ளி இருப்பது இன்னொரு விதம்.

மாடியிலும் எதிர்வீட்டிலும் குடியிருப்பது தனிக்குடித்தனமே அல்ல என்பதும், அது மாமியார் வீட்டின் நீட்சியே என்பதும் லலிதாவிற்கு விரைவிலேயே புரிய வந்தது. புரிய வைத்தான் வாமனமூர்த்தி.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
56
கூட்டு குடும்பமாக வாழ்க்கையில பல செளரியங்களும் சில அசெளரியஙகளும் உண்டு. விட்டுக்கொடுத்தல் என்பது வளரும்.
தனிக்குடித்தனதில் நேர்த்தியும், நேரத்தை ஆளும் திறத்தில் தான் மட்டுமே வாழ்க்கையில் பல ரகசியங்களை சந்தோசமாக மாற்றலாம்
அடிப்படை. புரிதல் காதலை வளர்க்கும்.
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
56
நீட்சியை வீட்சி ஆகாமல் மாட்சிமை பெற லலிதாவை மட்டுமல்ல வாம்ஸ்யும் வாழ்த்துகிறேன்
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
17
Super ma 🥰 🥰 🥰
இன்னும் "Husband of feelings" வரலையே லல்லிக்கு 🤔🤔
பால் காச்சுவதற்கு, சமையல், வீட்டு பராமரிப்பு, ..... பல்வேறு பயிற்சியும், ஆன்லைன், ஆஃப்லைனிலும் வகுப்பு .....ha ha ha 🤣🤣🤣😂😂😂

இன்னும் எதிர் வீட்டில் தனிக் குடித்தனம் பத்தி வேறு வாமன்ஸ் class எடுப்பார் போலவே 😛🤗🤗
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
17
இன்னும் comfort zone விட்டு வெளியே வர விரும்பாத, வரத்தெறியாத பெண்ணும், ஆணும் இருக்கத்தான் செய்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், அவர்களாகவே பட்டு, அனுபவித்து திருந்தினால்தான் உண்டு 😔😄
 
Top Bottom