Kasavu
New member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 17
நெஞ்சம்-6
மே மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ராஜாத்தி, சந்துரு, சந்திரமதி மற்றும் சரயு மதியம் ரயிலில் கிளம்பி மதுரை சென்று கொண்டிருந்தனர்.ராஜாத்தியை வீல் சேரில் அழைத்து வந்து ரயில் ஏற்றி இருந்தனர். சந்திரா அம்மாவோடு அமர்ந்து கொள்ள, மாமனும் மருமகளும் மற்றொரு புறம் அமர்ந்து வந்தனர். இருவருமே உணர்ச்சி வயப் பட்ட நிலையில் தான் இருந்தனர்.
சந்துரு கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருக்க, சரயு எதிர்காலத்தைப் பற்றிய பதட்டத்தில் அடுத்து என்ன ஆகுமோ என்ற தவிப்பிலிருந்தாள். ஏனெனில் அந்த ரக்கடு அத்தைமகன் இதே ரயிலில் எக்சிக்யூடிவ் கோச்சில் ஏறுவதைப் பார்த்திருந்தாள்.
‘சும்மா சொல்றான்னு பார்த்தா, இவன் விடாது கருப்பு மாதிரி தொடர்ந்து வறானே. மாமா கூட கைகலப்பு ஆகிடுச்சுனா?’ என்பதே அவள் கவலை.
இரண்டு நாள்களுக்கு முன் மீண்டும் வந்து தரிசனம் தந்து அவளை மிரட்டிச் சென்றிருந்தான். ஆம் அன்று கடைசி நாள் கல்லூரியில் திட்டப் பணியை ஒப்படைத்து விட்டு, திரும்பும் பொழுது கருப்பு ஸ்கார்ப்பியோவை பார்க்கவும், அவள் அறியாமல் ஒரு நடுக்கம் வந்தது. என்ன இருந்தாலும் இருபத்திரண்டு வயது பதுமை, அவன் இவளை விட ஏழு எட்டு வயது அதிக, கட்டு மஸ்தான உடலோடு, ஒரு தட்டில் அவளை வீழ்த்தி, தூக்கிச் சென்றாலும் கேட்பார் இல்லாத இடத்தில் வந்து வழி மரித்தால், அரண்டு தானே போவாள். இங்கும் அதே தான் நடந்தது.
அவள் அருகில் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி, “வண்டியில் ஏறு . உன் வீட்டுக்குப் போகலாம்” என்றான்.
“ அதெல்லாம் முடியாது” என அவள் மறுத்துப் பேசும் போதே, சட்டென இறங்கி வந்து, அவள் எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அலேக்காக தூக்கி அவன் ஜீப்பில் வைத்து, நொடியில் மறு புறம் வந்து காரை எடுத்து விட்டான்.
“ஏய் , என்னை எப்படித் தூக்க போச்சு. நான் தான் மாட்டேன்னு சொன்னன்ல, வண்டியை நிறுத்து” என ஆக்ரோஷமாகக் கத்தி அவனைத் தாக்கினாள்.
அதாவது, அவன் புஜத்தில் அடித்துக் கிள்ளி தன எதிர்ப்பை காட்டினாள். அவனுக்கு, தட்டிக் கொடுப்பது போலவும், எறும்பு கடிப்பது போலவும் தான் இருந்தது. அடித்த அவள் கை தான் வலித்தது.
“இங்க பாரு, அமைதியா நான் சொன்னதை கேட்டுக்கிட்டேன்னா , எல்லாம் நல்லபடியா நடக்கும். இல்லைனா எல்லாத்தையும் என் இஷ்டத்துக்கு நடத்திக்குவேன்” என மிரட்டினான்.
வெகு அருகில் அவன் முகம் பார்க்கவும், மிரண்டவள் நெஞ்சம் ஏறி இறங்க, அடிப்பதையும் நிறுத்தி இருந்தாள். கண்ணில் நீர் வழிந்தது.
“ஷ்ஷ், அழாதே.” என்றவன், “நான் சொல்றதை பொறுமையா கேளு” என ஆரம்பிக்க,
“ கேட்க எதுவுமே இல்லை. அம்மா, அப்பா இரண்டுமே நான் கண்ணால் பார்க்காத, மனசால உணராத சொந்தம். என்னைப் பாசமா வளர்க்கிற அம்மாச்சி, மாமா, பெரியம்மா, சித்தி குடும்பங்கள் எனக்கு போதும். என் அப்பா வழி சொந்தம்னு சொன்னாளே, இன்னைக்கும் என் அம்மாச்சி தன் மகளை நினைச்சு ரத்த கண்ணீர் வடிப்பாங்க. அவங்க மனசு வருந்துற எந்த சொந்தமும் எனக்கு வேண்டாம். சொன்னா புரிஞ்சுக்குங்க” என்றாள்.
“உன் பாட்டியைப் பத்தி இவ்வளவு யோசிக்கிறேல்லே, அதே தான் எனக்கும். மகன் செஞ்ச தப்புக்காக , காலமெல்லாம் வருந்தி, சாகிறதுக்குள்ள ஒரு தடவையாவது தன் பேத்தியைப் பார்த்திட மாட்டமான்னு தவிச்சிட்டு இருக்க என் தாத்தாவுக்கு என்ன பதில் சொல்ல” அவன் கேட்க அவள் மௌனம் சாதித்தாள்.
அதையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவன், “ ஒரு தடவை, உன் மாமாவையும் கூட்டிக்கிட்டு தாத்தாவோட ஊருக்கு வா. அப்புறம் மத்தத பேசிக்கலாம்” அவன் சொல்ல, இறுகியே அமர்ந்திருந்தாள்.
“ இங்க பாரு, எனக்கும் அப்பா, அம்மா கிடையாது. பெரியப்பாகிட்ட தான் வளர்ந்தேன். சொத்து பத்துக்குக் குறைவு இல்லை. வீடு, எஸ்டேட்…” என அவன் தன் வசதியை அடுக்க, அவள் தன் காதை பொத்திக் கொண்டாள்.
‘ நீ எவ்வளவு பெரிய பணக்காரனாகவும் இருந்துக்கோ. எனக்கு அதை பத்தின அக்கறை இல்லை. ஐ டோண்ட் கேர்’ என்ற அவளின் நடத்தை ,அவனுக்குக் கோபம் தந்தாலும், உள்ளூர ரசிக்கவும் செய்தான்.
காரை நிறுத்தாமல் அவர்கள் வீடு இருக்கும் திசைக்குச் செலுத்த, “ஹலோ, ஸ்டாப் த கார். என் வீட்டுக்கெல்லாம் வரவேண்டாம். ஏற்கனவே அம்மாச்சிக்கு உடம்புக்கு முடியலை. நீ யாருன்னு தெரிஞ்சா டென்சன் ஆகிடுவாங்க. ரொம்ப காலம் கழிச்சு என் மாமாவுக்காக ஒரு நல்லதை ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்.. என் மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நானும் பண்ணிப்பேன். எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடாத. ப்ளீஷ் ஸ்டாப் த கார்” என அவள் படபடக்க,
காரை நிறுத்தியவன், “ அதுக்குள்ள உனக்கு வேற சம்பந்தம் பேசினா, நீ ஓகே சொல்லக் கூடாது” கண்டிசன் போட்டான்.
“அது எப்படி, நான் வீட்டில் சொல்ற பையனைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”
“அப்ப வா, இப்பையே, உன்னை பொண்ணு கேட்கிறேன்” அவன் காரை செலுத்த,
“ கொன்றுவேன், மரியாதையா வண்டியை நிறுத்து” என மிரட்டினாள்.
அப்புறம் என்பது போல் பார்க்க, ஸ்டியரிங் வீலை இப்படி, அப்படிச் சுழற்றினாள். வண்டி அவன் கைகளில் தடுமாற,
“ ஏய் இடியட்” என அவளை இடது கையால் அவளையும், வலது கையால் வண்டியையும் சமாளித்து ஓரமாக நிறுத்தினான்.
அவன் பிடியிலிருந்து நழுவி, செண்டர் லாக்கை விடுவித்து, நொடியில் கதவைத் திறக்க, அவள் பக்கம் சரிந்து அவளைப் பிடிக்க முயல, துப்பட்டா மட்டுமே அவன் கையில் சிக்கியது.
“ ஏய், பின்னாடியே உன் வீட்டுக்கு வருவேன்டி” என்றான்.
“ என் மேல ப்ராமிஸ், என் வீட்டுக்கு வரக்கூடாது” விடுவிடுவென நடந்தாள். மிரட்டுறவன்கிட்ட, பிராமிஸ் எனச் சொல்கிறோமே அவளுக்குக் கொஞ்சம் அபத்தமாகத் தோன்றியது. ஆனாலும், அத்தைமகன், தாத்தா கதை எல்லாம் உண்மை எனும் பட்சத்தில் அதற்கு மதிப்பு கொடுப்பான் எனக் காரணம் சொல்லிக்கொண்டாள்.
அவனும், சீற்றத்தோடு வண்டியைக் கிளப்பி அவள் அருகில் வந்து “ நீயே என்னைத் தேடி வருவ” எனச் சவால் விட்டுச் சென்றிருந்தான். தப்பித்தோம், பிழைத்தோம் என வீடு வந்து சேர்ந்தாள்.
“ வேகாத வெயிலில் நடந்து வராட்டி என்ன குட்டிமா, ஆட்டோ வச்சுட்டு வர வேண்டியது தானே” என சந்துரு கேட்க,
“ இதோ வர்றேன் மாமா” என ஓய்வறையை நோக்கி ஓடியிருந்தாள். முகம் கழுவி நிமிர, வேலைபாடுடன் கூடிய டாப்பில் அவன் ப்ரேஸ்லெட் மாட்டி இருந்தது.
“ ஐயோ” என எடுத்து பிறர் அறியாமல் பத்திரப் படுத்தி வைத்தாள்.
அவனுக்குத் தான் இவள், நதிமூலம் எல்லாம் தெரிகிறதே. அவன் எந்த ஊராக இருப்பான்? என்ற யோசனை ஓடியது. அவள் முன் பாரதியைப் பற்றிப் பேசினாலும், அவள் கணவனைப் பற்றி யாரும் மறந்தும் பேசமாட்டார்கள்.
வரட்டும் பார்க்கலாம் என்ற தைரியத்தில் மதுரை செல்ல ஆயத்தமாகி, பெரியவர்கள் மகிழ்வில் அவளும் கலந்து கொண்டாள்.
மூன்று நாளாக மலரும் நினைவுகளாக வீட்டினர் அவர்கள் வாழ்ந்த மதுரை ஒண்டுக்குடுத்தன வாழ்க்கை கதையை ஓட்டிக் கொண்டு இருக்க, அதில் அடிக்கடி குறிப்பிட்ட சாரு மதியைப் பற்றிப் பேசும் போது மாமாவின் முகம் விகசிப்பதைப் பார்த்து, அவளுக்கும் சாருவைப் பார்க்கும் ஆவல் வந்திருந்தது.
இரயில் பயணத்தில் மாமாவோடு அமர்ந்திருந்தவள், “ நீங்கள் சென்னை வந்த பிறகு, சாரு அத்தை வீட்டோட காண்டேக்ட்டே இல்லையா மாமா” என்று கேட்க,
“ ஏன் இல்லை. பானு கல்யாணம் மதுரையில் தானே நடந்தது. மறுவீட்டுப் பலகாரம் பூரா, சாருவும், அவள் அம்மாவும் தான் போட்டுக் கொடுத்தாங்க” எனப் பழைய நினைவுகளில் மூழ்கி, மருமகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
மதுரையில் திருமணம் , பெண் வீட்டார் தங்குவதற்கு தங்கள் பழைய குடித்தன வீட்டில் காலியாக இருந்த ஒரு வீட்டைத் தான் ஒருவாரத்துக்கு வாடகைக்கு எடுத்திருந்தனர். சமையல் சாப்பாடு சாருவின் வீட்டில் தான். விழிகளால் அவளோடு பேசியதை அகத்தில் மறைத்து, மற்றதை மருமகளிடம் பகிர்ந்தான்.
“ அந்த ஒருவாரம், பழைய வாழ்க்கைக்கு திரும்பின மாதிரி அவ்வளவு சந்தோசம். நான் வேற சென்னையில் காலேஜ் சேர்ந்திருந்தேனா, அலப்பறையை கூட்டிட்டு சுத்துனேன்” சந்துரு சொல்ல,
“அது யாரு மாமா அலப்பறை, உங்க பிரெண்டா” என்றாள்.
ஹாஹாவென சிரித்தவன், “அது மதுரை பாஷைமா, அலப்பறையை கூட்டுறது, லந்த கூடுகிறது, டாப்படிகிறதுனு நிறைய இருக்கு” என ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்ல, “ம்ம்” என அவளும் கதை கேட்டாள்.
“சின்ன வயசுல ரஜினி ரசிகர் மன்ற தலைவன், சென்னை வந்தும் இங்கயும் ஒரு மன்றத்தில் சேர்ந்து இருதேன். அதனால் கொஞ்சம் செல்வாக்கு. சென்னை ஏரியா பசங்களோட சேர்ந்து போய் , தலைவரோட எடுத்த போட்டோவை காட்டியே , மதுரையில் பந்தா காட்டிட்டு இருந்தேன். பயிலுக எதோ தலைவரையே பார்க்கிற மாதிரி, என்னை வந்து, வந்து பார்த்துட்டு போனாய்ங்க. அதெல்லாம் ஒரு காலம்” என முடியைச் சிலுப்பி, ஒதுக்கி விட,
“ஹையோ மாமா, அப்படியே ரஜினி ஸ்டைல். “ என ஆச்சரியப்பட்டவள், “தலைவருக்குக் கூட முடி இல்லை, நீங்க மெயின்டைன் பண்ணுறீங்களே” என சிரிக்க,
“ நான் எவர் க்ரீன் முரட்டு சிங்கிள் குட்டிமா , அதனால முடி தப்பிச்சுச்சு” எனச் சொல்ல விழுந்து , விழுந்து சிரித்தவள், “அது தான் இரண்டு பெரியப்பாக்கும் முடி இல்லையா” எனக் கேட்க, “ஆமாம், கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் ஆச்சோ, அதுக்கு தகுந்த மாதிரி முடி குறைச்சு இருக்கும்” என மாமனும் மருமகளும் பேசி சிரித்தனர்.
“என்னவாம்” எனச் சந்திரா கேட்க, சந்துரு விவரம் சொல்ல,
“உன் மாமன் முடியை காப்பாத்திக்க தான், கல்யாணம் காட்டாமல் இருந்தாரான்னு கேளு. பேசுது பேச்சு” என கோனை வலித்து திரும்பிக் கொண்டாள்
“பெரியம்மாவுக்கு, அதை சொன்னேன்னு கோபம்.” என சந்துரு சிரிக்க,
“ அம்மா கல்யாணம் முடியவும், மாலதி சித்திக்கும் உங்களுக்கும் பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கிற திட்டத்தில் அம்மாச்சி இருந்தாங்களாம். நீங்க தான் பிடி கொடுக்களையாம், ஏன் மாமா? நீங்கத் தனி மரமா நின்னதுக்கு, நானும் என் அம்மாவும் தான் காரணமா?” அவள் கேட்க,
“ அப்படின்னு அம்மாச்சி சொன்னங்களா?” பதிலாகக் கேள்வியைக் கேட்டான்.
“அம்மாச்சி புலம்பும் போது கேட்டு இருக்கேன். அப்ப எல்லாம் ஒன்னும் தோணாது. மெச்சூரிட்டி வந்த பிறகு, எனக்கே தோண ஆரம்பிச்சுடுச்சு” என்றாள்.
“நான் கல்யாணம் பண்ணாமல் போனதுக்கு, நீயோ , உன் அம்மாவோ நிச்சயம் காரணம் இல்லை. கல்யாணத்து மேல பிடிப்பு இல்லை. அது தான் உண்மை. ஆனால் பிள்ளை சுகம் என்னனு, உன்னை வளர்த்து தெரிஞ்சுகிட்டேன்” என அவள் சிகையை வாஞ்சையாகத் தடவ, அவன் தோளில் சாய்ந்து கொண்டவள்,
“ அப்பா ங்கிற வார்த்தைக்கு, உங்க முகம் தான் மாமா நினைவு வரும். நீங்க ஒரு கல்யாணம் பண்ணி இருந்தீங்கன்னா, அவுங்களை நான் அம்மாவா உணர்ந்து இருப்பேன்ல. அம்மாச்சியவோ, பெரியம்மா, சித்தியை நான் குறை சொல்ல. என் அப்பாங்கிற ஃபிகருக்கு, ஒரு ஜோடியைக் கேட்கிறேன்” என்றாள்.
“ புரியுதுடா, வர்றவ உன்னை மகளா பார்த்து இருப்பாளா சொல்லு.” எனவும்,
“அப்போ, எனக்காகத் தான் கல்யாணம் பண்ணாமல் இருந்து இருக்கீங்க. அதை ஒதுக்குங்க. குழந்தையா இருந்த எனக்காக நீங்கக் கல்யாணம் பண்ணாமல் இருந்தீங்க, சுயநலமா நான் கல்யாணம் பண்ணி போயிட்டா, உங்களை யார் மாமா பார்த்துக்குவாங்க. எனக்குக் குற்ற உணர்ச்சியா இருக்கு மாமா. “ என்றாள்.
“ இப்படி கிறுக்குத்தனமா எல்லாம் யோசிக்கக் கூடாது குட்டிமா. எனக்கு பேரன், பேத்தியை கொஞ்சணும்னு ஆசை இருக்காதா. வீட்டோட மாப்பிள்ளை பார்ப்போம், கீதா மகன் தானே? சென்னையில் தனியா தான பொங்கி திங்குறான். கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டோட வந்து இருடான்னா இருந்துட்டு போரான்.” சந்துரு தீர்வை சொல்ல,
“ எனக்கு அம்மாச்சி தான் எல்லாமே பார்த்துக்கிட்டாங்க. என் பிள்ளைகளுக்கு அம்மாச்சி வேணாமா. அதுக்காகவாவது ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க” என்றாள்.
“அப்போ, நான் முடியோட ரஜினி ஸ்டயில் பண்றது உனக்கு பிடிக்கலை” என்றான் கேலியாக.
“இப்போ இருக்க உங்கள் தலைவர் மாதிரி, மனைவி, மகள் , பேரன் பேத்தின்னு இருக்க சொல்றேன்” என்றாள்.
“அவர் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டார். நான் இன்ஸ்டன்ட் பொண்டாட்டிக்கு எங்க போவேன்” சந்துரு புலம்ப,
“ நான் தேடுறேன், அமைஞ்சா ஒத்துக்கணும் .மறுக்கக் கூடாது” என்றாள்.
“இதெல்லாம் அநியாயம் குடிமா. என் மனசுக்குப் பிடிக்க வேணாமா “
“உங்க மனசுக்கு பிடிச்சவங்க எப்படி இருப்பாங்கன்னு சொல்லுங்க, அதே மாதிரி தேடுறேன்” என்றாள்.
“விடுவேன் பாப்பா “ என்றான்.
“ நீங்க யாரையும் விரும்புனீங்களா மாமா” எனக் கேட்க,
“தெரிஞ்சு என்னமா பண்ண போற”
“அவங்களை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணுவேன்” என்றாள்.
“அவ புருஷன் கிட்ட கேட்கணும்னு சொல்லிட்டானா” எனவும் அதிர்ந்த சரயு,
“அப்போ நீங்க ஒரு பொண்ணை விரும்புவது உண்மை. உங்க கடமையை முடிக்கும் முன்ன அவனுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அதனால தான் நீங்க ஒத்தையா நின்னுட்டிங்க, சரியா” அவன் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்க முயல,
“ஏய் குட்டிமா,ஒரு பேச்சுக்கு சொன்னா, அதையே பிடிச்சுக்கிட்டு பேசுற, அப்படியெல்லாம் எதுவும் இல்லை ’ என அவ்விஷயத்தைக் கடக்க முயன்றான்.
“என் மேல ப்ராமிஸ் பண்ணுங்க” என மாமன் கையை, தன் தலைமேல் வைக்க, சட்டென உருவியவன், “இதில் எல்லாம் விளையாடாத குட்டிமா.” எனக் கடிந்தான்
அவள் முகம் திருப்ப, “இப்ப என்ன, நான் காதலிச்சேனான்னு தெரியணும், அவ்வளவு தானே” பேச்சைத் தொடர, அவள் அப்போதும் பிடி கொடுக்க வில்லை.
“திரும்பி வாங்க முடியாத இடத்தில் நெஞ்ச அள்ளி குடுத்துட்டேண்டா. அது அப்படியே காலாவதி ஆகிடுச்சு. அவளைத் தவிர என் வாழ்க்கையில் யாரும் வரவும் முடியது. அவளும் திரும்பி வரமுடியாத தொலைவுக்கு போயிட்டா. இத்தோட விட்டுடுவோம். இதுக்கு மேல பேச வேண்டாமே, ப்ளீஸ் ” எனவும்,
“ சரி மாமா, இப்போதைக்கு இது போதும். உங்க மனசறிஞ்சு நடக்கிறவங்க உங்க வாழ்க்கைத் துணையா வர்ற சான்ஸ் வரும் போது, நான் கேட்பேன், நீங்க மறுக்கக் கூடாது” எனவும், அவன் சிரித்துக் கொண்டான்.
ரயில் வைகை ஆற்றைக் கடக்க, துள்ளிக் குதித்தது அவன் நெஞ்சம்.