• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நெஞ்சம் -8

Kasavu

New member
Joined
Apr 29, 2025
Messages
17

நெஞ்சம் -8

மீனாட்சி சுந்தரேஸ்வரர் நடுநிலைப் பள்ளி. வைரவிழா காணும், இந்த பள்ளிக்கூடம், அகவை ஐம்பதைத் தாண்டிய அப்பகுதி வாழ் மக்கள் அநேகர் கல்விக்குப் பிள்ளையார் சுழி போட்டது . ஓட்டுப் பள்ளிக்கூடமாக அரசு உதவி பெரும் பள்ளியாக இருந்தது, பஞ்சு மில் மூடப்பட்ட போது , ஊராட்சி ஒன்றிய பள்ளியாக மாறியது. இன்று காங்க்ரீட் கட்டிடமாக்கப்பட்ட போதும், அந்த காலத்தவர் நினைவில், அது ஓட்டு பள்ளி கூடம் தான்.

தற்போது சாருமதியின் தங்கை யமுனா, அதன் தலைமையாசிரியராக இருக்கிறாள். இந்த பள்ளியை அடுத்த கட்டம் உயர்நிலைப் பள்ளியாக மாற்ற, நன்கொடையாளர்கள் நிதியும் தேவைப்பட, ரீ யூனியனுக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.

காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி, மதிய உணவு, மாலை டீ காபி வரை தொடர்ந்தது. வயது முதிர்ந்தவர் முதல் நாற்பதுகளிலிருந்த முன்னாள் மாணவர்களை அழைத்திருந்தனர். வயது முதிர்வின் காரணமாகச் சிலருக்கு நீண்ட நேரம் உட்காருவதில் சிரமம் இருந்த போதும், பள்ளிக் கூட நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வில் சோர்வையும் விரட்டி உற்சாகமாக அமர்ந்திருந்தனர்.

முன்னதாக நேற்று சந்துருவுக்கு மதுரை மண்ணை மிதிக்கவுமே, உள்ளிருந்த தயக்கமெல்லாம் பறந்து, உற்சாகம் வந்து சேர்ந்திருந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு பின்பான மதுரையின் மாற்றங்களை ஆச்சரியமாகப் பார்த்து வந்தான்.

பானுமதி, பழங்காநத்ததில் குடியிருந்தாள். வாடகை டாக்சி, திருப்பரங்குன்றம் சாலையில், இரு ரயில்வே பாலங்களுக்கு இடையில் மெஜுரா காலேஜ், பாலிடெக்னிக், ஆண்டாள் புரம் தாண்டி பயணிக்க, ஆச்சரியம் தாங்க வில்லை.

“சந்திரா, என்னடி இவ்வளவு மாறியிருக்கு. நீ கடைசியா எப்போ வந்த” எனக் கேட்க,

ராஜாத்தி “ நாங்கல்லாம் வந்து போயிட்டு தான் இருக்கோம். நீ தான் ஒரு மாசம் லீவுக்கு வந்தாலும், மதுரை பக்கம் தலை வச்சும் படுக்கிறது இல்லை “ என நொடித்தார்.

“ இவன் வரும் முன்ன, உன் பெரிய மக அங்க வந்துடுறா. அப்புறம் எப்பிடி மதுரைக்கு வருவான்.செலவுக்கு பயந்துக்கிட்டு, உன் பெரிய மக, பிள்ளைங்க மூணு பேரு கல்யாணமும் வேற வேற ஊர்ல தான நடத்தினா, அப்புறம் எப்படி அவன் மதுரைக்கு வருவான் “ சந்திரா இரட்டைக்கு சப்போர்ட்டுக்கு வர,

“ சரி விடு. இந்த தடவையாவது பானு மாப்பிள்ளை குற்றப் பத்திரிக்கை வாசிக்காமல் இருக்காரான்னு பார்ப்போம் “ எனப் பேசிக் கொண்டிருக்க, சரயு மாமனைக் கவனித்தாள் அவன் ஆண்டாள் புரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து வந்தான்.

“ அப்பத்தா, இங்க தான் இட்லிக் கடை போட்டு இருந்தாங்க. பக்கத்திலேயே விக்கிரமன் மாமா, டீக்கடை போட்டு இருந்தார்” என நினைவுகளில் மூழ்க,

“ ஆமாம், ஆண்டாள் புரம் அழகு தேவதை நடந்து வந்த வீதி” எனச் சந்திரா கிண்டல் செய்ய,
“ அது யாரு ஆண்டாள் புர அழகு தேவதை?” சரயு வினவ,

“ உன் மாமனை கேளு” என்றாள்.

“ யாரு மாமா” சரயு கேட்க,

“ இப்போ எல்லாம் கிழவி ஆயிருகக்கும். டீன் ஏஜ்ல எல்லா பொண்ணுங்களும் அழகு தேவதையா தான் தெரியும்” எனச் சிரிக்க

“ கிழவி, இரு போட வேண்டிய இடத்தில் போட்டு விடுறேன்” சந்திரா வம்பிழுக்க,

“ சொல்லு, எனக்கென்ன பயம். உள்ளதைத் தானே சொன்னேன்” என்றான் சந்துரு.

சரயுவுக்கு இறங்கியதிலிருந்து , ரகசியமாக ரக்கடு அத்தை மகனைத் தேடினாள். “பேரை பாரு, ரஜினீஷ் ராம். வேற யாராவதா இருந்தா, இந்த பேருக்கே மாமா, என்னை அவனுக்கு தூக்கி கொடுத்துடுவாறு” என நினைக்கும் போதே, கருப்பு ஸ்கார்பியோ அவர்களைக் கடந்தது. அவனோ என எட்டிப் பார்க்க, சாட்சாத் ரஜீனீஷ் தான், கண்ணாடி வழியே அவள் பார்ப்பதைப் பார்த்துச் சென்றிருந்தான். ட்ரெயின்ல தானே வந்தான், அப்புறமும் எப்படி , சென்னையிலிருந்த அதே கார் இங்கேயும்” மனதில் ஆராய்ச்சி ஓட, ஹாண்ட்பேகின் உள் அறையிலிருந்த அவனின் ப்ரேஸ்லெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

‘சாரு எங்க இருக்க. நான் மதுரைக்கு வந்துட்டேன்மா’ அவன் மனதில் பேச,

‘ இப்போவாவது வரனும்னு தோணுச்சே. ஆனால் என்னால , உன்னை நேருக்கு நேர் பார்க்க முடியுமா, உடைஞ்சு அழாமல் பேச முடியுமா? எல்லாருக்கும் முன்னாடியும் காட்சி பொருளாகிடுவேனோன்னு பயமா இருக்கு’ என்றாள். அந்த நேரம், சிலிர்ப்பை உணர்ந்து, க்ருப் போட்டோவில் உள்ள அவன் படத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டு இருந்தாள்.

“ எனக்குமே பயம் தான். ஆனாலும் வந்துட்டேன் பாரு. உன் ஹஸ்பண்டை எனக்கு அறிமுகப் படுத்துவியா. அதை நான் தாங்கிடுவேனான்னு தெரியலையே” என விழி நீரைச் சுண்டி விட, சரயுவும், சந்திராவும் அதைக் கவனித்து இருந்தனர்.

அடுத்து யோசிக்கும் முன் பானுவின் வீடு வந்திருந்தது. கணவனோடு வாசலுக்கே வந்து, அம்மா, தம்பி, தங்கை , சரயுவைப் பாசமாகவே வரவேற்றாள்.

“கும்புடுறேன் அத்தான்” சந்துரு கருணாகரனுக்கு வணக்கம் வைக்க, சரயுவும் அவர் காலைத் தொட்டு வணங்கிக் குளிர வைத்திருந்தாள். “ வா சந்துரு. சரயு நல்லாரும்மா. அத்தை வாங்க” என்றவர் , மாமியாருக்கு வணக்கம் வைத்து, மனைவியோடு உள்ளே அனுப்பி விட்டார்.

சந்திரா, ஹாலில் அமர்ந்திருக்க, “ உன் முந்தியை பிடிச்சே திரிவானே என் தம்பி, அவனை எங்க கழட்டி விட்டு வந்தே” எனக் கேட்க,

“உங்களுக்குப் போட்டிக்கு வர கூடாதேன்னு விட்டுட்டு வந்தேன்” அவள் துடுக்காகப் பேச, “ நான் உன் அக்கா முந்தியை பிடிச்சிட்டு இருக்கேன்னு சொல்றியா” அவர் எகிற,

“அதுல என்ன தப்புன்னு கேட்கிறேன். இருபத்தெட்டு வருசமா, உங்களுக்குச் சேவை செய்யிறாளே. அவளுக்கு மதிப்பு கொடுக்கலாம் தப்பில்லை” மற்றவர் ராஜாதியம்மாளுக்கு அறையில் வசதி செய்து கொடுக்க செல்ல, மச்சினருக்கும், கொழுந்தியாளுக்கும் இடையில் வாக்குவாதம் ஓடியது.

“ சும்மா இருடி, நீங்களும் தான், அவள் வந்ததும், வராததும் அவள் வாயைப் பிடுங்காமல் இருங்களேன்” என் அடக்க,

சந்துரு, “அம்மா உன்னை கூப்பிடுறாங்க.” என உள்ளே அனுப்பி விட்டு, அவரோடு உட்கார்ந்து பேசினான்.

“இப்பயும் , ஸ்கூலுக்கு போகத்தான் வந்திருக்க, மச்சானைப் பார்க்க வரலை” என வம்பிழுக்க,

“அதன் மொத்தமா வந்துட்டேன்ல அத்தான், இனி மாசம் ஒருக்கா வந்து உங்களை பார்த்துட்டு போறேன்” என அவருக்கு இசைவாகவே பேசினான். மதுரையைப் பற்றி பேச்செடுக்கவும், “எங்க ஊரை என்னான்னு நினைச்ச” என அவர் பெருமை பேச ஆரம்பிக்க, அவனும் சுவாரஸ்யமாகவே கேட்டுக் கொண்டிருந்தான்.

பானுவின் சின்ன மகன், மாமனைப் பார்க்க வந்தவன், “மாமா, அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் வரிங்களா” எனக் கேட்க, பத்து மணிக்கு மேல் ஆனா போதும், “வாடா போகலாம்” என உற்சாகமாக மதுரை நகர் வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு வந்தான்.

“தேங்ஸ் டா மாப்பிள்ளை, என் டீன் ஏஜ்க்கே போன மாதிரி இருக்கு” எனவும்,

“எங்க வாழ்க்கை எல்லாம் செட்டில் ஆக, எதோ ஒரு விதத்தில் நீ தான் மாமா காரணம். நீ ஏன் மாமா கல்யாணமே செஞ்சுக்கல, லவ் பெயிலியரா”

“லவ்வை சொன்னா தானடா, அது பாஸா, பெயிலான்னு தெரியும்.” எனவும்,

“என்ன மாமா சொல்ற” அவன் அதிர,

“அக்கா, தங்கச்சிகளோட பிறந்தவன் , ஒரு பொண்ணு கிட்ட போய், லவ்வை சொல்லிட முடியுமா. சினிமால தான் அதெல்லாம் நடக்கும். அதை விடு, உன் கூட வந்ததுக்குத் தூங்கா நகரத்தை ரசிச்சிட்டேன். அது போதும். ப்ரெசெண்ட்ல வாழ்ந்துட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்” என்றான்.


சந்துரு, “ நிகழ்காலத்தில் வாழவேண்டும் “ என்ற ஒன்றையே தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய எதிர் பார்ப்பும், இறந்த காலத்தைப் பற்றிய கவலையும் இல்லாமல் வாழத் தன்னை பழக்கிக் கொண்டான்.

அதனாலேயே, யாருடைய ஏச்சு, பேச்சுக்கள், வன்சொற்கள் , சண்டை சச்சரவு எல்லாவற்றையும் கடந்தவனாக இருந்தான். அவன் கடக்க இயலாத ஒரே விசயம் சாருமதி மட்டுமே. இளமையில் துளிர்த்த காதல் பசுமரத்து ஆணியாகப் பதிந்து இருந்தது.

இதோ, இன்று தங்கள் பள்ளியின் ரீ யுனியனுக்கு, பானு, சந்திரா இருவரோடு சரயுவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.

ஏற்கனவே வாட்ஸ்அப் குழுமத்தில் பழகி இருந்தவர்கள், “ போட்டோவை விட, நேர்ல இன்னும் அம்சமா இருக்கியேப்பு” என ஆச்சரியப் பட்டனர்.

யமுனாவின் அக்கா, கீதா, வேணியும் வந்திருக்க, சேச்சி, சேட்டா என இவர்களோடு உறவு கொண்டாடி, சரயுவையும் உச்சி முகர்ந்தனர்.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் வைத்திருக்க, சரயு, யமுனாவோடு போட்டிகளை நட்த்துவதில், கீதா, வேணி , யமுனா பிள்ளைகளோடு சேர்ந்து துணை புரிந்தாள். அதிலேயே சரயுவை அவர்களுக்குப் பிடித்துப் போனது. நரேன் நாளை மறுநாள் ரிசார்டுக்கு வருவான் என்றார்கள்.

உணவு இடை வேளைக்குப் பின், ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு தர அவரவர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்தனர்.

அந்த நேரம் பள்ளி வளாகத்துக்குள் கருப்பு ஸ்கார்பியோ வர, ரஜினீஷ் வண்டி எனச் சகோதரிகளுக்குத் தெரியும். நூற்றில் ஒரு வாய்ப்பாகச் சாரு வருகிறாளோ என ஆவலாக நோக்கினர். சரயுவும் தன்னை மறந்து திரும்பிப் பார்க்க, அதே ரக்கடு அவதாரத்தில் கூலர்ஸ் மாட்டியபடி, ரஜின்ஷ் வர, பள்ளி ஆசிரியர்கள் அவனைச் சென்று வரவேற்றனர்.

கீதா, வேணியிடம் “ இவன் எதுக்குடி வந்திருக்கான்” என வினவ,

“ அக்கா வீட்டை விட்டு வராது. அது பேருக்கு ஒரு கவுரவத்தைத் தேடி தரனும்னு யமுனா தான் வரச் சொல்லியிருக்கா. முடிஞ்சா பார்க்குறேன்னு சொன்னானாம். ஆனா வந்துட்டான் பாரு. அதிசயம்” என வேணி சொல்ல,

“ நன்கொடை கொடுத்து இருக்கான். பெருமை பீத்தவாவது வருவான்ல” எனப் பேசிக் கொண்டனர்.

கடைசியாக நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொன்னாடை போர்த்தினர்.

ஆயிரம், ஐநூறு தந்தவர்கள் முதல் எல்லோருக்குமே அவரவர் இடத்தில் சென்று மரியாதை செய்தனர்.

ஐம்பதாயிரம், ஒரு லட்சம் கொடுத்தவர்களை மேடை ஏற்றிக் கவுரவித்தனர். அதில் “நம் பள்ளியின் முன்னாள் மாணவர் சந்திர சேகர் ஒரு லட்சம் நன்கொடை வழங்கி இருக்கார். மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்” என யமுனா சொல்ல,

“ இது எதுக்கு” என கீழுருந்தே சந்துரு ஆட்சேபிக்க,

“ மேடைக்குப் போங்க தம்பி, உங்களைப் பார்த்து, மத்தவங்களும் தான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு உதவ வருவாங்கல்ல. நமக்குப் பாராட்டு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னோடிகள் வேணும்” என ஒரு பெரியவர் சொல்ல, சரி என மேடை ஏறினான்.

“ இத்தனை நாள் குடும்பத்துக்காக சம்பாரிச்சேன். என் மருமகளைத் தவிர எல்லாரையும் செட்டில் பண்ணிட்டேன். இனிமே உழைக்க வேண்டியதில்லை, சம்பாரிச்சது போதும்னு நினைச்சேன். இப்போ மேடை ஏறச் சொல்லி ஐயா சொன்னப்ப தான் ஒன்னு உரைச்சது. குடும்ப பொறுப்பு தாண்டா முடிஞ்சு இருக்கு, நீ வளர்ந்த சமுதாயத்துக்கு, நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்குனு. வொர்க் அடிட்டான நான் ஓடுறதுக்கு, வலுவான காரணம் கிடைச்சிருக்கு. இது தொடக்கம் தான். இன்னும் நிறைய செய்யனும். செய்வோம். அதுக்கான சக்தியையும், ஆயுளையும் நம்ம மீனாட்சி கொடுக்கட்டும். இந்த வாய்ப்பைத் தந்த தலைமை ஆசிரியை யமுனாக்கு கோடான கோடி நன்றி” என அவன் பேச, எல்லாருமே கண் கலங்கினர்.

“ இனிமே புதிய ஆரம்பம்னு நினைச்சுக்குங்க. நீங்கள் ஏன் மதுரையிலேயே வந்து செட்டில் ஆகக் கூடாது” என்ற கேள்வி கேட்டு, மற்றொரு எண்ணத்தையும் விதைத்தனர்.

அடுத்த சிறப்பு அழைப்பாளராகப் பள்ளி நிர்வாகத்தினரின் சார்பாக, திருமதி சாருமதி சாகேத்ராமின் பெயர் அறிவிக்கப்பட்டது.

சந்துரு, ‘சாருவா’ என யமுனாவிடம் கண்ணால் கேட்க, அவள் ஆம் எனத் தலை ஆட்டினாள்.

இதயம் படபடக்க, சாரு வந்திருக்கிறாளா எனச் சுற்றும் முற்றும் தேடினான்.

“ ஐந்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கும், திருமதி சாருமதி வர இயலாத காரணத்தால், அவரின் வளர்ப்பு மகன் ரஜினீஷ் ராம், அந்த மரியாதையைப் பெற்றுக் கொள்வார் “ என அறிவிக்க, ரஜினீஷ் மேடை ஏறினான்.

மாமனும் மருமகளும் வைத்த கண் வாங்காமல் அவனை பார்த்தனர்.

மேடை ஏறி பொன்னாடையைக் கையில் வாங்கிக் கொண்டவன், “இது எனக்கான மரியாதை இல்லை. எங்க சாரும்மாவுக்கான மரியாதை.” அவன் சொல்ல, அரங்கத்தில் கைத்தட்டல் பலமாக ஒலித்தது.

கரகோஷம் அடங்கவும்,”சாரும்மா, என் பெரியப்பா வாழ்க்கையில் வந்த தேவதை. பேராசிரியரா இருந்த என் பெரியப்பாவுக்காகவும், பேரண்ட்ஸை இழந்த எனக்காகவும் எவ்வளவோ செஞ்சு இருக்காங்க. பதிலுக்கு நாங்க என்ன செஞ்சோம். எதுவுமே இல்லை. அவுங்க கேட்டு கிட்ட ஒரே விசயம், இந்த ஸ்கூலுக்கு எதாவது செய்யனுகிறது தான். அவுங்க கேட்டதுக்காகப் பணத்தைக் கொடுத்தேன். அவுங்களுக்காக இந்த ஹானரை ஏத்துக்க வந்தேன். எனக்கு முன்னாடி சந்துரு சார் பேசினது, என் இதயத்தை டச் பண்ணிடுச்சு. இனி எங்க கம்பெனி ப்ராபிட்லருந்து சாரிட்டிக்கு பத்து பர்சன்ட் ஒதுக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன்.” எனவும் கரகோஷம் எழுந்து அடங்கியது.

“ இந்த நிகழ்ச்சிக்கு வரலைனா, சந்துரு சார் ஸ்பீச்சை கேட்கலைனா, இந்த எண்ணமே எனக்கு வந்திருக்காது. தாங்க்ஸ் டு யூ சார்.” என சந்துருவைப் பார்த்து தலை வணங்கியவன்,

“ தாங்க்ஸ் டூ , ஹெட் மிஸ்டர்ஸ் , என் சித்தி யமுனா. அண்ட் வந்திருக்க எல்லா பெரியவுங்களுக்கும் நன்றி.” என எல்லாரையும் வானளாவ புகழ்ந்து, மொத்த கூட்டத்தையும் தன்னைப் பற்றியே பேச வைத்தான்.

‘என்ன நடிப்புடா சாமி’ என யமுனாவும், வேணி, கீதாவும் மனதில் குமைந்தாலும், நன்கொடை கொடுத்ததை, அக்காவுக்குப் பெருமை தேடித் தந்ததை எண்ணி மகிழவும் செய்தார்கள்.

சரயுவுக்கு, அவன் சாரும்மா என்றதில் அப்பட்டமான அதிர்ச்சி . அடுத்தடுத்து அவன் போட்ட பிட்டுகளை, தன் மாமாவை மேற்கோள் காட்டி பேசியதை நம்ப முடியாமல் பார்த்து நின்றாள்.

விழா முடிந்து கிளம்பும் முன், சந்துரு மற்றும் அவன் சகோதரிகளிடம் வந்து அறிமுகமாகிக் கொண்டவன், “க்ளாட் டூ மீட் யூ சார். அவசியம் நீங்கள் எல்லாரும் எங்க வீட்டுக்கு வரனும். சாரும்மா உங்களை எல்லாம் பார்த்தா, ரொம்ப சந்தோஷ படுவாங்க. பெரியாப்பா மறைவுக்குப் பிறகு டல்லா இரூந்தவங்க, இந்த பத்து நாளா, பழைய ப்ரண்ட்ஸ் வர்றீங்கன்னு தெரியவும் சந்தோஷமா இருக்காங்க” என சந்துருவுக்குத் தேவையான விஷயத்தையும் சொல்லி அழைப்பு விடுக்க, சந்துருவும் அதிர்ச்சி. நெஞ்சம் பொங்கி அடங்கியது.

“ரஜினீஷ், தலைவர் பேரு . ஓஸோவோட பெயரும் , இரவின் கடவுள், சந்திரன். உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். உங்க வீட்டுக்கு வர முடியுமான்னு தெரியலை. நாங்க ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணியிருக்கோம். “ சந்துரு இழுக்க,

“ தனி ட்ரிப்பா இல்லை யமுனா சித்தி ப்ளான் பண்ணதா” சந்தேகம் கேட்க,

“ யமுனா ப்ளான் பண்ணது தான்” எனவும்.

“ ஓ, இட் இஸ் ப்ளஷர். எங்க ரிசார்ட் தான். சாரும்மாவை கூட்டிட்டு நான் வர்றேன். அங்க மீட் பண்ணுவோம். உங்களை எல்லாம் பார்த்தா நிச்சயமா சந்தோஷ படுவாங்க. கட்டாயம் வாங்க. சந்திக்கலாம்” என அழைப்பு விடுக்க.

“கட்டாயம்” என்றான் சந்துரு. பைனலி சாருவைச் சந்திக்கும் நேரம் வந்து விட்டது, என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

ரஜினீஷ், மற்றவரிடம் ஒரு புன்னகையோடும், சரயுவிடம் ரகசிய கண்சிமிட்டலோடு கிளம்பிச் சென்றான்.

எம்பிக் குதித்து நெஞ்சம்.
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
164
உண்மையாகவே துள்ளிக் குதிக்குது நெஞ்சம்.....
காலம் கடந்து
காதல் நெஞ்சம் பார்க்க
காத்திருக்கிறோம்.... 🤩🤩🤩🤩💐💐💐💐

ரஜினிஷ் .....
ரக்கடு பாய்
ரசிக்க வைக்கிறான்🤩

இந்த பிட்டு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா.....
இப்படி ஐஸ் வைத்து கவுத்துட்டான்.... 😂😂😂😂
 

Kasavu

New member
Joined
Apr 29, 2025
Messages
17
உண்மையாகவே துள்ளிக் குதிக்குது நெஞ்சம்.....
காலம் கடந்து
காதல் நெஞ்சம் பார்க்க
காத்திருக்கிறோம்.... 🤩🤩🤩🤩💐💐💐💐

ரஜினிஷ் .....
ரக்கடு பாய்
ரசிக்க வைக்கிறான்🤩

இந்த பிட்டு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா.....
இப்படி ஐஸ் வைத்து கவுத்துட்டான்.... 😂😂😂😂
me too. lets wait for- Chandru- Charu -meet
 
Top Bottom