Kasavu
New member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 17
நெஞ்சம் -7
யமுனா வந்து சென்றதிலிருந்தே, சாருமதியின் மனம் பரபரப்பாகத் தான் இருந்தது. பள்ளி ரீ யுனியனை விட, சந்துருவின் குடும்பம், முக்கியமாக சந்துருவே வருகிறான் என்றதில் மனதில் ஓர் அலைப்புறுதல்.
பானுவின் திருமணத்தின் போது, இளவட்டமாக அவனைப் பார்த்தது, அப்போது அவன் அப்பா இருந்தார். அவனும் கல்லூரியில் படிக்கும் இளைஞனாக வயதுக்குரிய மகிழ்ச்சியோடு திருமணத்தில் கலந்து கொண்டான்.
ஐந்து வருடங்கள் கழித்து சந்தித்ததில் அவளும் மகிழ்ந்து இருந்தாள். தனியாகச் சந்திக்கச் சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனாலும் அவனின் சிகை சிலுப்பலையும், ஸ்டைலையும் ரசிக்கத் தான் செய்தாள்.
கோவில் கடையில் அக்கா தங்கைகளுக்கு அலங்கார பொருள்கள் வாங்க அம்மாவோடு சென்றவன், அவளுக்கென கண்ணாடி வளையலும், பட்டு குஞ்சம் , சந்தனச் சாந்து, தாழம்பூ குங்குமமும் என வாங்கி வந்து ரகசியமாகக் கொடுத்தான்.
“ மாமிக்கு தெரிஞ்சா திட்ட போறாங்க” அவள் அஞ்சினாள்.
“ எல்லாருக்கும் சேர்த்து அம்மா வாங்குனாங்க. நான் சேர்த்து வச்சிருந்த காசுல உனக்காக வாங்கினேன் சாரு . எங்களுக்காக இவ்வளவு செய்யிறியே, உனக்குத் தங்க வளையலே வாங்கி போடனும். இப்போதைக்கு என்னால முடிஞ்சுது இது தான்” அவன் சொல்ல,
“ எனக்கு இதுவே போதும். சந்தோஷம்” என முகம் மலர்ந்தாள்.
அவள் முகம் மலர்ந்ததில் அவனுக்கும் சந்தோஷம். உற்சாகமாகவே கல்யாண வேலைகளைப் பார்த்துத் திரிந்தான்.
“சாரு, ஆராத்தி எடுக்க மஞ்சள், சுண்ணாம்பு எல்லாம் வேணுமாம்”
“ வெத்தலை எங்க வச்ச. கல்கண்டு எங்கே” என ஒவ்வொன்றுக்கும் அவளிடம் தான் வந்தான்.
உறவினர் பாட்டி ஒருவர், “அதென்னடா, கட்டின பொண்டாட்டி மாதிரி அவளையே கேட்கிற” கேலி செய்ய,
“ அவ தான, வீட்டுக்காரி" எனவும், அங்கிருதோர் அதிர, சாருவும் முறைத்ததில், "ஹவுஸ் ஓனரு. வீட்டில எது எங்க இருக்குனு அவளுக்கு தானே தெரியும்” என்று விட்டு, பிறர் அறியாமல் கண் அடித்து விட்டு ஓடினான்.
இருவர் அப்பாவும் இருந்த சமயம், அதனால் இனிமையாகவே கனவு கண்டனர். பானுவின் திருமணத்தின் போது இரு குடும்பங்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ இருந்தது. அதை அவன் அனுப்பி வைக்க, அவளிடம் இன்றும் பத்திரமாக உள்ளது.
பானு மதுரையில் இருப்பதால், அவ்வப்போது வரப் போக இருந்தனர். மூர்த்தியின் மறைவு எல்லாத்தையும் புரட்டிப் போட்டது. இறப்புக்குக் கூட அவள் அப்பா மட்டும் சென்று வந்தார். சந்திராவின் திருமணத்துக்குப் பின் அவன் வெளிநாடு சென்று விட்டான்.
அவள் அப்பா இறப்புக்குப் பானு , கணவனோடு வந்து சென்றாள். இருவரும் அவரவர் குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பித்தனர். இரு பக்கமும் பெண்பிள்ளைகள் நிறைந்த வீடு, அதனால் கடித போக்குவரத்தும் இல்லை. எப்போதும் மனதில் மட்டுமே பேசிக் கொள்வார்கள்.
அவனை மனதில் வடித்திருந்ததால், பிறரை மணக்க மனம் வரவில்லை. வீட்டின் சூழலும் அவளுக்குச் சாதகமாக இருக்க, தகப்பனுக்குப் பின் சாரு, தாய்க்குத் துணையாக நின்று தங்கைக்குத் திருமணம் செய்து வைத்தாள்.
சந்துரு வீட்டில் பாரதி, மாலதி வாழ்க்கையில் விதி விளையாட, சாருவுக்கும் அடுத்தடுத்த தங்கைகளின் கடமை அழைத்தது. ஒரு கட்டத்தில் வீட்டு நிலையைச் சமாளிக்க முடியாமல் , ஆஸ்திரேலிய பேராசிரியர் சாகேத் ராமை மணம் முடித்துக் கொண்டாள். அதை அறிந்த சந்துரு திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான். அது அவளுக்கு அதிர்ச்சி தான்.
இதோ வருடங்கள் உருண்டோடி, இருவரும் அவரவர் கடமையை முடித்து, தனிமரமாக நிற்கின்றனர்.
கீதா மகனுக்கு, பாரதி மகளை மணம் பேசலாம் என யமுனா சொன்னதில் அவளுக்கும் மகிழ்ச்சி. இரண்டு குடும்பங்களும் சேர்ந்து நேரம் செலவழிக்க இரண்டு நாட்களுக்கு ரிசார்டை கேட்டு இருந்தனர். தன்னால் ஆன உதவி என ரஜினீஷிடம் அவளும் பத்து நாட்களுக்கு முன்பே கேட்டு இருந்தாள்.
“அந்த டேட்ஸ்ல , அவைலபில் இருந்தால் கட்டாயம் எடுத்துக்குங்க” என்றிருந்தான்.
யமுனாவிடம் ஆன்லைனில் சரிபார்க்கச் சொல்ல, “நான் வேற இடத்தில் புக் பண்ணிக்கிறேன் போங்க” எனக் கோபப்பட்டாள்.
“கோவிச்சுக்காதடி, கட்டாயம் தந்துடுவான்” என கேரண்டி தர,
“அது மட்டும் இல்லை, ஸ்கூல், ரிசார்ட் இரண்டுக்குமே நீங்க வர்றிங்க” என கண்டிஷன் போட,
“ஸ்கூலுக்கு வர முடியாது. ரஜ்ஜு சரின்னு சொன்னா , ரிஸார்டுக்கு வர்றேன்” என்றாள்.
“உங்களுக்கு பெர்மிஷன் கொடுக்க அவன் யாரு. நீங்கத் தேவையில்லாமல் அவனுக்கு பயப்படுறீங்க” யமுனா கோவிக்க,
“எனக்கு கார்டியன் அவன் தான். அவன் பொறுப்பில் இருக்கும் போது சொல்லாமல் வரமுடியாது” என்றாள்.
“இந்த நிலைமை எதுக்கு, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வாங்க சேச்சி” யமுனா சொல்ல,
‘அது அவ்வளவு சுலபம் இல்லை. ராம் சார், கடைசியா அவன் பொறுப்பை என்கிட்ட கொடுத்து இருக்கார். அவனுக்குக் கல்யாணம் ஆகிற வரையாவது, நான் இந்த வீட்டில் கட்டாயம் இருக்கனும். “ என்றாள்.
“அவரே போயிட்டார், அப்புறம் என்ன. அந்த திமிரெடுத்தவன் உன்னைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்” யமுனா பொரிந்து தள்ள,
“அந்த நன்றிக் கடனை அடைக்காமல், எனக்கு நிம்மதி இருக்காது. என்னை என் போக்குலையே விட்டுடு” என்றிருந்தாள். யமுனா ரிஸார்ட்டுக்காவது கட்டாயம் வரவேண்டும் என நிபந்தனை விதித்துச் சென்றிருக்க, ரஜினீஷுக்காக காத்திருந்தாள். அவனும் பத்து நாளாக பிஸ்னஸ் விஷயமாக வெளியூர் சென்றிருந்தான்.
காலையில் அவனை எதிர்பார்த்து தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்க, பிள்ளையார் கோவிலுக்கு அவனே வந்தான்.
அவனைப் பார்த்து சினேக புன்னகை சிந்தியவள், “நைட்டு தான் வந்தியா ரஜ்ஜு “ எனவும், ஆம் எனத் தலை ஆட்டினான்.
இருவருக்குமே பேச வேண்டியது இருந்தது, தயங்கியபடியே ஒருவர் மற்றொருவரை அழைத்தனர்.
அதுவும் அவன், “சாரும்மா” என அழைத்ததில் , உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது.
“சொல்லு ரஜ்ஜு” அவள் கனிவாகக் கேட்க,
“அது, அது “ எனத் தயங்கியவன்,
“நீங்க எதோ கேட்க வந்திங்களே” என்றான்.
“ இன்னைக்கு அந்த ஸ்கூல் ரீயூனியன்” என்றாள்.
“நீங்க போகணுமா, கூட்டிட்டு போகவா” கேட்க, அவளுக்கு மயக்கம் போடாத குறை , “இல்லை, அங்க எல்லாம் போக வேண்டாம்” அவசரமாகப் பதில் தந்தாள்.
“உங்க பேர்ல தான் டொனேஷன் கொடுத்திருக்கேன். போயிட்டு வாங்களேன், பொன்னாடையெல்லாம் போர்த்தி, கவுரவிப்பாங்கல்ல?”
“ அதெல்லாம் வேண்டாம் பா. எனக்கு நாலு பேரைச் சந்திக்கவே சங்கடமா இருக்கும்” என்றாள்.
“அது உங்க மனப்பிரமை, அப்புறம் உங்க இஷ்டம்” என்றான்.
“யமுனா ரிசார்ட் கேட்டாலே” என நினைவூட்ட,
“ ஒரு வாரத்துக்கு பிரீ தான், அவங்களை யூஸ் பண்ணிக்க சொல்லிட்டேன்”என்றான்.
“தேங்க்ஸ்” எனவும், அவன் ஓர் புன்னகை சிந்தி, “இதெல்லாம் உங்களோடதா இருக்க வேண்டியது. பெரியப்பா கொடுக்க ரெடியா தான் இருந்தார். நீங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க” என்றான்.
“ இருக்க இடம், போட்டுக்க துணி, வேளை வேளைக்குச் சாப்பாடு, இதைத் தவிர எனக்கு வேற ஒன்னும் வேண்டாம். உன் கல்யாண பொறுப்பு இருக்கு, அதை முடிச்சிட்டா போதும்” அவன் அம்மா என்றதில் நெகிழ்ந்து, இன்று இத்தனை பேசிவிட்டாள் . இல்லாவிட்டால் இருவருமே அளந்து தான் பேசுவார்கள்.
அவன் நெற்றியைத் தேய்த்து, “ அது தான், கல்யாண விஷயமா தான் உங்க கிட்ட பேசணும்” என்றவன், நடக்கச் சொல்லி கையை காட்ட, இருவருமாகப் பங்களாவுக்குள் வந்தனர்.
“என் அம்மா வழி தாத்தா, உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்.” அவள் ஆச்சரியமாகப் பார்க்க,
“இன்னும் இருக்கார், படுத்த படுக்கையா. எனக்கு சொந்தம்னு சொல்லிக்க அவர் ஒருத்தர் தான் இருக்கார். ஆறு மாசம் முன்னாடி தான், எங்க குடும்ப கதை எல்லாம் சொன்னார்.” என விவரித்தவன்,
“அவர் கடைசி ஆசை, என் மாமா பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னுகிறது தான் ” என்றான்.
“அவர் விருப்பம் இருக்கட்டும். உன் இஷ்டம் என்னனு சொல்லு. அப்புறம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருந்தா?இல்லை யாரையாவது விரும்பி இருந்தா” வரிசையாக கேட்க, அவளின் நினைவில் அவன் முகம் மலர, சாருவுக்கு அவனின் பிடித்தம் பற்றிய கேள்விக்கு பதில் கிடைத்தது. பார்வைக்கு முரடாக இருப்பவனும் கூட, காதல் வந்தால் கனிந்து தெரிவான் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டாள். யாரந்த பெண் என்ற ஆவலும் தோன்றியது.
அதற்குள் அவன் நவரசங்களையும் முகத்தில் காட்டி “காட்ஸ் கிரேஸ், அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, யாரையும் விரும்பவும் இல்லை. வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் பன்னிப்பாலாம்” என நிறுத்தியவன்,
“என் சார்பா கல்யாணம் பேச யாரும் இல்லை. தாத்தவும் பெட் ரிட்டர்ன். நானே போயி பொண்ணு கேட்கிறதை விட, நீங்க வந்து கேட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன்” என்றான்.
“நானா” அவள் அதிர,
“ எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. டீன் ஏஜ் லருந்து என்னை பார்க்குறீங்க. என் மேல நம்பிக்கை இருந்தா கூட வாங்க.”
“ என்னையவே இவ்வளவு கவனிச்சுக்குற, நிச்சயம் உன் மனைவியை நல்லா வச்சுக்குவ. உன் மேல நம்பிக்கை இல்லாமல் நான் அப்படி கேட்கலை. என்னலா யார்கிட்டயும் போயி பேச முடியுமான்னு தான் எனக்குச் சந்தேகம்” என்றாள்.
“கொஞ்சம் முன்னாடி பொறுப்பு இருக்குன்னு சொன்னீங்க. இட்ஸ் ஒகே, நான் உங்க ரத்தமா என்ன. உங்க தங்கச்சி மகனுக்குன்னா போவீங்க” அவன் குறைபட,
“அப்படிச் சொல்லாதே ரஜ்ஜு, இந்த பதினைந்து வருசத்துல, அம்மா, மகன் உறவு கொண்டாடலயினாலும், நான் உன்னை என் மகனா தான் பார்க்கிறேன். பொண்ணு யாருனு சொல்லு, போவோம்” என்றாள்.
“தேங்க்ஸ்” என்றவன், தன் அலைபேசியை எடுத்து, ஒரு பெண்ணின் படத்தைக் காட்டினான். “பேரு சரயு. இப்ப தான் இன்ஜினியரிங் முடிச்சிருக்கா.”
“ லட்சணமான பொண்ணா இருக்கா. உனக்கு ஏத்தா ஜோடியா இருப்பா. எந்த ஊர்ல இருக்கா” வினவ,
“சென்னையில் , பாட்டி, மாமா வளர்ப்பு ” என்றவன், “உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்” எனப் பீடிகை போட்டான். அவள் கேள்வியாய் நோக்க, “யாருக்காக ரிசார்ட் வேணும்னு கேட்டிங்களோ , அந்த குடும்பத்து பொண்ணு. அவ முழு பேரு சரயு பாரதி கண்ணன், பாரதி உங்க பேமலி பிரென்ட். கண்ணன் என் மாமா.” என அவன் சொல்ல,
நெஞ்சில் கை வைத்தவள், “பாரதி மகளா, அந்த சந்தேக புத்திக்காரன் உன் மாமாவா?” என் வாயைப் பொத்தியவள், கண்ணில் நீரோடு,
“நான் எந்த தைரியத்தில் போயி ரஜ்ஜு பொண்ணு கேட்பேன்” என அதிர,
“ என் மேல நம்பிக்கை வச்சிருந்திங்கன்னா கேளுங்க. இல்லைனா இன்னொரு சந்துருவா நான் இருந்துட்டு போறேன்”
“ரஜ்ஜு” என அவள் அதிர,
“எனக்கு எல்லாமே தெரியும் சாரும்மா, நீங்க நினைச்சிருந்தா என் பெரியப்பாவுக்கு மறு வாழ்க்கை கொடுத்து இருக்கலாம். ஆனால் நான் வேலைக்காரின்னு அவர் கிட்ட இருந்து தள்ளித் தான் நின்னிங்க. அது எதுனாலன்னும் தெரியும். “ எனவும் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய,
“நான் உங்க விஷயத்துக்குள்ள வர விரும்பலை. எல்லா குற்றங்களுக்கும் தண்டனை, பிராயச்சித்தம் இரண்டுமே உண்டு. என் மாமா செஞ்ச குற்றத்துக்குத் தண்டனை அனுபவிச்சிட்டார். தாத்தா பிராயச்சித்தம் பண்ணனும்னு நினைக்கிறார். அவரை வந்து பாருங்க. உங்களுக்கு சரினு பட்டா , எனக்காக பொண்ணு கேளுங்க. இல்லைனாலும் சரி தான்.
அப்புறம் உங்க சிஸ்டர் குற்றம் சொல்ற மாதிரி, நான் உங்களைக் கட்டுப்படுத்தி எல்லாம் வைக்க விரும்பலை. உங்க குடும்பத்தோட நீங்க எங்க வேணாலும், போகலாம் வரலாம். பெரியப்பா உங்களுக்காக பேங்க்ல பணம் போட்டு வச்சிருக்கார். உங்கள் வாழ்நாளுக்கு அது போதும். அதுக்கான பாஸ்புக், ஏடி எம் கார்ட்.” என அவளிடம் கொடுக்க, அதைத் தொட்டும் பார்க்க வில்லை. “காரும், டிரைவரும் இருப்பாங்க. நீங்கப் போக விரும்புற இடத்துக்குப் போகலாம், வரலாம்” என எழுந்து கொள்ள,
சாருமதி அப்படியே அமர்ந்திருந்தாள்.
ஏற்கனவே, சந்துருவைச் சந்திப்பதா, வேண்டாமா என மனம் ஒத்தையா, ரெட்டையா போட்டுக் கொண்டிருக்க, ரஜினீஷ் வேறு புதிய பொறுப்பைக் கொடுத்திருந்தான்.
அவர்கள் பிரிவுக்கு மூல காரணமே, பாரதியின் மரணம் தான். விதி எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஒரே பெண் சரயுவுக்குப் போட்டியாக, அவளது தங்கை மகன் நரேனும், கணவர் என மனம் ஏற்காத போதும், ஊருக்கு முன் அவள் சாகேத் ராம் மனைவி தான், அவரின் வாரிசு ரஜினீஷ். மற்றொரு பக்கம் சரயுவுக்கு முறை பையனும் கூட.
ஆனால் கடந்த காலத்தை மறந்து, பாரதி கணவன் வழி சொந்தத்தை சந்துருவின் குடும்பம் ஏற்பார்களா?
குழம்பி நின்றது அவள் நெஞ்சம்.