• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

arangam 8

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
17

அரங்கம் 8

வீட்டுக்கு வந்த கோதை தனது அகத்துக்காரரிடம் புலம்பி தீர்த்து விட்டாள். ரங்கனும் தனது பாட்டியுடன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்ததால் பாட்டி சொல்லும் விஷயங்கள் அவனுக்கு பெரியதாக தெரியவில்லை.ஆனால், அவனுக்கு பள்ளியில் நடக்கும் விஷயங்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் அவனிடம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருப்பதை உணர்பவன், இப்போது உறவுக்காரர்கள் தங்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் ஒப்பிட்டு பார்த்தான்.

நிறையவே வித்தியாசங்கள் தெரிந்தன. புரிந்தும் புரியாததுமாக குழந்தையால் நடப்பவைகளுக்கு விளக்கம் தெரியவில்லை.ஆனால்,ஏதோ தங்களது வாழ்க்கையில் மட்டும் வித்தியாசமாக இருப்பதாகவே பட்டது. விடலைப்பருவத்தின் ஆரம்ப நிலையில் அப்பாவின் விஷயம் அவன் மனதை அசைத்தது. அப்பாவுக்கு எதனால் இப்படிப்பட்ட மனக்குழப்பம் வந்தது என்றும்,அதற்க்கான நிரந்தர தீர்வு என்னவென்றும் தெரியவில்லை. நிரந்தரமான வேலை எதுவும் அமையாமல் 'காண்ட்ராக்ட் டு எம்ப்லாய் ' என்பதில் சிலகாலமும், தேர்ட் பார்ட்டி கான்ட்ராக்ட்டிலுமாக சென்றது வேலை.

தனது நிலையை தெளிவாக தன்னை பெற்றவர்களிடமும், மனைவியிடமும் மறுக்காமல் சுந்தரம் சொல்லியிருந்திருக்க வேண்டும் . அதன் மூலாம் அவனுக்கு ஏதாவது தீர்வு கிடைத்திருக்கலாம். சுந்தரம் சொல்லாமல் விடுத்ததன் விளைவுகளை அவனது மனைவி அனுபவிக்கவில்லை.மாறாக அவனது ஒரே மகன் அனுபவிக்கிறான். அதுவும் சிறு வயதிலேயே.

கோதையும் திருவேங்கடமும் பெங்களூருவில் இருக்கும் பொழுதே, சுந்தரம் கொஞ்சம் அளவுக்கு அதிகமாக கோவப்படுவதும்,கையில் இருப்பதை தூக்கி எறிவதும்,அலுவலகம் விடுப்பு எடுத்துக்கொண்டு நாள் முழுவதும் உறங்குவதுமாக இருந்தான்.

சுந்தரத்தின் பெற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.ரங்கராஜனது முகமும் முன்னளவுக்கு இப்போது தெளிவாக இல்லை. யாரிடம் கேட்பது என்றும் ஒன்றும் புரியவில்லை.சுந்தரத்தின் அருகே கூட நெருங்க முடியவில்லை. அவனது நிலையை பார்த்த பிள்ளைக்கு நன்றாகவே புரிந்தது 'அப்பா மருந்துகளை சரிவர உட்கொள்ளவில்லை என்பது'.

முகம் கசங்கியவனாக இரவு உணவுடன் மாத்திரைகளையும் பொடி செய்து கலந்து கொடுப்பதை கண்ட கோதைக்கு பகீர் என்றது. ரங்கராஜன் வெளியே வந்ததும் கோதை அவனிடம் ,"அப்பாவுக்கு என்னத்தடா பொடி பண்ணி சாப்பாட்டுல கலந்தே ?' என்று விசாரணை செய்தாள். திருவேங்கடம் அறைக்குள் இருந்தவர் குரல் கேட்டு வெளியே வந்தார்.

இவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவருக்கு முதலில் புரியவில்லை.ஆனால்,ரங்கராஜன் அழுது கொண்டே விஷயம் முழுவதையும் சொல்லுவதை கேட்ட பெரியவர்கள் இருவருக்கும் மனம் நெக்குருகி போனது.திருவேங்கடம் நெஞ்சை பிடித்துக்கொண்டார்.கோதையோ நிறுத்த முடியாமல் அழுதாள்.இருவரும் இவ்வளவு பெரிய பூதம் உள்ளே இருக்கிறது என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

ரங்கராஜன் சொன்னது வெறும் ஒரு சதவிகிதம் தானே!மற்ற பெரிய விஷயங்கள் பற்றி சிறுவன் அறிந்திருக்கவில்லை.அப்பா அடிக்கடி வேலை செய்ய முடியாமல் தடுமாறுவதையும் ,அவரது குணம் மாறி கோவம் கொள்ளுவதையும், மருந்துகள் உட்கொள்வதையும்,அவை மனநோய் சம்மந்தப்பட்டவை என்பதை கூகிள் செய்து பார்த்து தான் அறிந்து கொண்டதையும்,பள்ளியில் மீட்டிங்,ரங்கனது மதிப்பெண்கள்,இப்போது பள்ளியில் அவன் படும் அவமானங்கள் இவற்றை தானே சிறுவன் சொன்னான்.

இன்னமும் அமெரிக்காவில் வாங்கியிருந்த கடன்,அதை அடைக்க வீட்டை விற்றது,இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டது,மாலதியின் மாறாத கோவம் ,இவற்றை பற்றியெல்லாம் சிறுவனுக்கு தெரியாதே!

தலையில் கைவைத்துக்கொண்டு அறையின் வாசற்கால் அருகில் மூக்கை சிந்தியவாறே கோதை அமர்ந்துவிட,திருவேங்கடம் ரங்கனை அழைத்துக்கொண்டு சுந்தரத்தின் அறைக்குள் நுழைந்தார். ரங்கன் தனது அப்பாவின் மெடிக்கல் ரிபோர்டுகளை எடுத்து தாத்தாவிடம் தந்துவிட்டு படிக்க சென்றுவிட்டான்.

மறுநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சுந்தரத்தை அவன் மருத்துவம் பார்த்துக்கொள்ளும் மருத்துவமனையில் சொல்லி ஆம்புலன்ஸ் வரச்செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் திருவேங்கடம். மூன்று நாட்கள் மருத்துவமனை வாசத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சுந்தரம்.

இம்முறை பேசுவதற்கு திருவேங்கடத்திற்கு எந்த தயக்கமும் இல்லை.நேரடியாகவே மகனிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டார்."பாரு சுந்தரம்,இவ்ளோ இங்கே நடந்திருக்கு.நீயோ,உன்னோட ஆம்படையாளோ, இதை பத்தி எங்ககிட்ட எதுவுமே சொல்லல.இதனால தான் மாலதி உன்னோட வாழ வரமாட்டேங்கறாளா.. அது சரி .அவளை நா தப்பு சொல்லல. உன்னோட பையன் ரொம்ப சின்னவன்டா. அவன் எப்படி உன்னை சமாளிப்பான்ன்னு நீ நெனச்ச.உன்னால முடியலைன்னா மாலதிக்கிட்ட குழந்தையை விட்டிருக்கணும்.இல்ல எங்களாண்ட விட்டிருக்கணும். எதுவும் இல்லாம அவனை நரகத்துல விடஎப்படிடா உனக்கு மனசு வந்துது ?"

பேசும்பொழுதே பெரியவருக்கு கோவத்தில் மூச்சு வாங்கியது. கோதை எதுவும் பேசவில்லை. சுந்தரமும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். வீட்டுக்கு மாலையில் வந்த ரங்கனது சட்டை பேண்டு கிழிந்து,உதட்டிலிருந்து ரத்த விளாறாகி வந்தான் .

தனது பெற்றவர்களை பற்றி மோசமாக பேசிய மாணவர்களுடன் சண்டை.ஒரு பையனின் மூக்கெலும்பை உடைத்துவிட்டிருந்தான் ரங்கராஜன். பள்ளியிலிருந்து அடுத்த நாள் வந்து பார்க்கும்படி அலைபேசியில் அழைத்து சொன்னார்கள்.சுந்தரம் இருக்கும் நிலையில் இதுவேறா என்று நொந்து போனார்கள் பெரியவர்கள். மாலதி வேலை விஷயமாக இப்போது இருப்பது பூனாவில். தந்தையுடன் இருக்கும் மகனை பற்றி அவளுக்கு பெரியதாக ஒன்றும் தெரிந்துகொள்ள்ளும் ஆர்வம் இல்லை. 'பெற்றவள் இப்படி இருக்கமுடியுமா' என்று எனக்கே வியப்பாக இருக்கிறது.

அடுத்தநாள் பள்ளியில் ,"உங்க வீட்டு பையனை நல்ல மனநல மருத்துவர்கிட்டே கூட்டிகிட்டு போய் காமிங்க. உங்களுக்கு தான் மனநோய் ன்னு நினச்சா உங்க பையனுக்கு இன்னமும் அதிகமாக இருக்கு. இது ஒன்னும் பைத்தியக்கார ஆஸ்பத்திரி இல்ல " என்று பொரிந்து தள்ளினார் தலைமை ஆசிரியர். சுந்தரம் ஒன்றும் பேசவில்லை. சுந்தரம் வாயை திறந்து ஏதாவது சொல்வதற்குள் முந்திக்கொண்ட பெரியவர் திருவேங்கடம்,"டி சி குடுத்துடுங்கோ சார். நாங்க எங்க சொந்த ஊருக்கு கூட்டிண்டு போயிடறோம்."என்றார் பணிவாக.

திருவேங்கடத்தின் முகத்தை பார்த்து,தலைமை ஆசிரியர் வேறு எதுவும் பேசாமல் ரங்கனுக்கு டி சி கொடுத்து அனுப்பினார். அடுத்த ஒரு வாரத்துக்குள் அவர்களது குடும்பம் பெங்களூருவிலிருந்து நிரந்தரமாக சீரங்கம் வந்து சேர்ந்தது. சுந்தரம் எதற்குமே பேசவில்லை.அவன் மனம் முழுவதும் தான் எல்லா விஷயங்களிலும் ,எல்லா இடங்களிலும் தோற்பதாக தோன்றியது.

இவர்கள் ஸ்ரீரங்கம் வரும்பொழுது கல்வியாண்டில் பாதி முடிந்து விட்டதால் ரங்கன் அந்த வருஷம் வேறு எங்கும் சேர முடியாத நிலை. கோவிலுக்கு வழக்கமாக வரும் ஒரு பெரிய மனிதரிடம் சொல்லி ,திருச்சியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரங்கனுக்கு அட்மிஷன் வாங்கிவிட்டார் திருவேங்கடம். வேறு வழி இல்லை. இப்போது ஒன்பதாம் வகுப்பில் பாதி வருஷம் நிறுத்தி வைக்க முடியாதே.

சுந்தரத்திற்கு திரும்பவும் வேலைக்கு செல்லும் உத்தேசம் இருக்கவில்லை. வீட்டிலேயே இருந்தான். யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. மேலே அமெரிக்காவில் எம்.எஸ் முடித்து வேலையில் சேர்ந்து பதவி உயர்வுகள் பெற்று நன்றாக வாழ்ந்தவன் என்று சொன்னால் நம்புவது கடினம் எனும் அளவுக்கு அவனது தோற்றமும்,நடவெடிக்கைகளும் மாறிப்போய் இருந்தது.

மாலதியின் பெற்றவர்களும்,திருவேங்கடத்தின் தங்கை குடும்பமும் ஆகிய சுந்தரத்தின் மாமனார் வீட்டிலிருந்து ஒரு செய்தியும் இல்லை. இவர்கள் என்னவானார்கள் என்று விசாரிக்கவும் இல்லை.

வருஷங்கள் வேகமாக சென்றது. பத்தாம் வகுப்பில் 96% சி பி எஸ் சி தேர்வில் வாங்கியிருந்தான் ரங்கராஜன். பதினோராம் வகுப்பில் கணினி அறிவியல் மற்றும் அறிவியலை தெரிவு செய்து படித்தான். சுந்தரம் இப்போது கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு ஆராதனை செய்வதை வழக்கம் ஆக்கிக்கொண்டான். மகனுக்கு பாடங்கன் சொல்லி கொடுத்தான்.

அவள் எதிர்பார்த்த அமெரிக்க வாசம் மீண்டும் கதவை தட்டியது. மூன்று வருஷ ப்ராஜெக்ட். அவர்களது வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டில் தங்கி கொள்வதாக மாலதி சுந்தரத்திற்கு கேட்க சுந்தரம் தீர்மானமாக மறுத்துவிட்டான். "என்னோட குடும்பம் நடத்த வரமாட்டாளாம். என்னோட பையன வளர்க்க வரமாட்டாளாம்.என்னோட சொத்து மட்டும் வேணுமா "என்று ஆங்காரம் கொண்டான். அவனுக்கு மெய்யாக அவள் தேவை படும் எந்த நேரமும் அவள் அவனுடன் இருந்திருக்கவில்லை.

ரங்கராஜன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது மாலதியிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தது.என்றிலிருந்தோ எதிர்பார்த்தது தான்.இப்போது வந்து விட்டது.சுந்தரம் ஒன்றும் அலட்டி கொள்ளவில்லை. வீட்டின் பெரியவர்களுக்கு மன வருத்தம்.சிறியவனுக்கு மன அழுத்தம். சுந்தரம் அமைதியாக கையெழுத்து போட்டு கொடுத்து அனுப்பிவிட்டான்.

மாலதி இந்திய மண்ணிலிருந்து கிளம்பி இதோ ஆறு மாதங்கள் ஆகிறது.

ரங்கராஜன் தனது அப்பாவிடம் இருப்பதை உறுதி செய்ததில் மாலதிக்கு லேசாக வருத்தம். மற்றபடிக்கு அவளுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. மாதம் முப்பதாயிரம் ரூபாய்கள் மகனது பராமரிப்பு செலவுக்கு அனுப்பிவைத்தாள்.

 

Author: Paithani
Article Title: arangam 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
160
பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்
வேங்கடம் ❤️ கோதை

பெற்றவர்கள் எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம்
சுந்தரம் 💔 மாலதி

ரங்கனின் வாழ்க்கை
ரம்மியமாக அமையட்டும்
இனி..... 🤩
 
Top Bottom