• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -8

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
278
அத்தியாயம் 8

மாலை ஆறரை மணிக்கு எல்லாம் இரவு நேரத்திற்கான உணவைக் கொண்டு வந்த மதுவை, குழப்பத்துடன் பார்த்தான் கிருபா.

தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தவன், "இவ்வளவு சீக்கிரமாவா.?"

"ஸாரி. நான் வெளிய போறேன். வர்றதுக்குப் பதினோரு மணி ஆகும். அதான்."

"எதுக்கு ரிஸ்க் எடுக்கணும். நான் வெளிய சாப்பிட்டுக்குவேன்ல?"

"அதெப்படி? வந்த முதல் நாளே கெஸ்டை‌ வெளிய சாப்பிட வச்சா நல்லாவா இருக்கும்?"

"இப்படி எல்லாம் யோசிச்சா, நமக்கானதை நாம செஞ்சிக்க முடியாது!"

"அதுனால என்ன? கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம். நான் முன்னாடியே டிஃபன் ரெடி பண்ண மாதிரி, நீங்களும் சங்கடப்படாம சூடு கம்மியா இருந்தாலும் சாப்பிடலாம்.?"

அவளது குரலின் ஏற்ற இறக்கத்தில் அனிச்சையாய் இதழ்கள் புன்னகைத்திட, "தேங்க்ஸ் மிஸ் மது‌."

"மோஸ்ட் வெல்கம். சரி, கிளம்புறேன்!" என்றவள் கீழ் இறங்கிச் செல்ல, "ஏய் மெல்ல மெல்ல. எதுக்கு இப்படிச் சக்கரத்தைக் கட்டுன மாதிரி ஓடிக்கிட்டே இருக்க? கொஞ்சம் மெதுவாத்தான் நடந்து போயேன்?" என அழுத்தமின்றி கண்டித்தார் சுந்தரவல்லி.

"ஏது மெதுவா போகவா? லேட்டாகிடும் அம்மாச்சி. எனக்காக எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க."
"அப்புறம் எதுக்கு இந்த வேலை எல்லாம்? என் பேரனுக்கு நான் செஞ்சுத் தர மாட்டேனா.?"

"அடடா! நீங்க‌ செய்யிறது தான? தோசைன்ற பேர்ல இட்லியும், இட்லினு சொல்லி ஊத்தாப்பமும் ஊத்தித் தருவீங்களே? நான் வேற வழியில்லாம சாப்பிட்டேன். அவரு பாவம், வந்த முதல் நாளே உங்க தோசையைப் பார்த்தா உடனே மூட்டையைக் கட்டிடுவாரு. பேரனை நல்லா பார்த்துக்கச் சொல்லித்தான, உங்க மகன் அவரோட பிள்ளையை அனுப்பி வச்சாரு. நீங்களே துரத்தி விட்டுடுவீங்க போல.?"
"வாயி வாயி! என்ன பேச்சுப் பேசுற.?"

"அம்மாச்சி சென்னையில வளர்ந்தவரு‌. வெரைட்டியா சாப்பிட்டுப் பழகி இருப்பாரு. அந்த அளவுக்கு இல்லனாலும், ஏதோ நம்மளால முடிஞ்சதைச் செஞ்சுத் தரலாம்ல.? ஆக்ஸிடெண்ட் ஆகி‌ சாவுல இருந்து மீண்டு வந்த மனுஷன். பத்திரமா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா? அதுக்காகத்தான சாமி பிழைக்க வச்சிருக்கு?"

இருவரது பேச்சும் செவியில் விழ இறங்கி வந்தான் கிருபாகரன்.
"நான் சொன்னதை, எனக்கே திருப்பிச் சொல்லுறியாக்கும்?" என மூத்தவர் அவளின் தலையை வருடிவிட, "போதும் போதும் ஓவர் செண்டிமெண்டா போகுது. உங்கக்கிட்ட பேசுனா, மத்த எல்லாத்தையும் மறக்க வச்சிடுறீங்க அம்மாச்சி. பாருங்க, லேட்டாகி போச்சு." என்று கொண்டை இட்டிருந்த குழலை அவிழ்த்து அவசரமாய்ப் பின்னலிடத் தொடங்கினாள் மது.

"யாரு நானா.? செய்யிறது பேசுறது எல்லாம் நீ. ஆனா, பழி மட்டும் என்மேல! நல்லா பொய் பேசப் பழகி இருக்க!"

"அச்சோ! பொய்யா? அம்மாச்சி நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க வர வர. நான் நல்ல பிள்ள தெரியுமா.?"

"தெரியிது தெரியிது.‌ நல்ல பிள்ள, மறக்காம பூ வச்சிட்டுப் போ. டேபிள்ல வைக்கிறேன்‌. எடுத்துக்கோ!" என அவர் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைக்க, கொண்டை ஊசியைத் தேடிச் சென்றாள் அவள்.

குழலில் மல்லிகை சரத்தைச் சூடிக் கொண்டவள், "சரி அம்மாச்சி கிளம்பட்டுமா.?"‌ என்று கண்ணாடியில் இறுதியாய் ஒருமுறை தன்னைப் பார்த்துக் கொண்டு, "அச்சச்சோ! ஷால்லை எங்க போட்டேன்னு தெரியல!" எனச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

நாற்காலியின் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருந்த அவளின் துப்பட்டாவைப் பார்த்த கிருபா, "இங்க இருக்கு!" என்று எடுத்து நீட்டிட, "தேங்க்ஸ்." என அருகே சென்று வாங்கிக் கொண்டாள்.
இடது பக்கத் தோளில் போட்டு சரி பார்த்தவள், "ஓகே பாய். அம்மாச்சி டாட்டா." என்று இருவரிடமும் விடைபெற்று வெளியேற, திருக்கல்யாண தினத்தின் மாலையில் அவளிடம் அலங்கரித்துச் சென்ற சிறுமிகள் இருவரும், "மது அக்கா." என ஒடி வந்து ஆளுக்கொன்றாய் கையைப் பற்றிக் கொண்டனர்‌.
பத்து நபர்களிற்கும் மேல் ஒன்றாய் இணைந்து கிளம்பிட, "எங்க போறாங்க பாட்டி?" என வினவியபடி மூத்தவரின் பக்கம் திரும்பினான் கிருபா.

"காலையில ஆத்துல இறங்குன அழகர், இப்ப வண்டியூருக்குப் போயிடுவாரு‌. அங்க இருக்க வரதராஜ பெருமாள் கோவில்ல ஏகாந்த சேவை நடக்கும். அதுக்குத்தான் போறாங்க எல்லாரும்."

"ஏகாந்த சேவைனா.?"

"சாமியை மெத்தையில படுக்க வச்சு, நெய்வேத்தியம் செஞ்சு கும்பிடுவாங்க."

"இந்த நேரத்துலயா.?"

"ராத்திரி நேரத்துல தான தூங்குவோம். அதுனால ஏகாந்த சேவை எப்பவும் நைட்ல தான் நடக்கும்."

"ம்ம்.." என்றவன் வெளிப்பக்கம் பார்வையை ஓட்டிட, தெரு விளக்கின் வெளிச்சத்தில் கொசுக்கள் பறந்து கொண்டிருந்தன.

உண்மையில் மதுரைக்கு அன்று காலைதான் வந்தான் என அவனாலேயே நம்ப இயலவில்லை‌. அவ்விடத்தில் அத்தனை இயல்பாய் பொருந்திக் கொள்ள முடிந்தது.

தொடர்வண்டி நிலையத்தில் முதன் முறையாய்ப் பார்த்த ராதா கிருஷ்ணனின் புன்னகையில் தொடங்கி‍, சற்று முன்னர் மது விடைபெற்றுச் சென்றது வரை ஒவ்வொரு நிகழ்வும், அவன் இதுவரை வாழ்ந்த வாழ்வின் தலைகீழ் உணர்வுகள்.

அளந்து அளந்து பேசுபவன், தனக்கு உதவுபவர்களுக்காக கூடுதலாய்ப் பேச வேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டான். அது கட்டாயத்தினால் அல்லாது தானாகவே அவன் அறியாமல் நடந்து போனது.
இடமாற்றம் என்பது ஒரு மனிதனை முழுமையாய் மாற்றம் அடைய வைக்கும் வல்லமை பெற்றதாகும். அவ்விடத்தின் தட்ப வெப்பமும், நீரும், காற்றும், நிலம் கொண்டிருக்கும் மண்ணின் தன்மையும், அங்கு வாழும் மக்களும், அவர்களது பேச்சும் பழக்க வழக்கங்களும் உடல் மற்றும் உணர்வு ரீதியாக நிறையாகவும் குறையாகவும் பாதிப்பை உண்டாக்கும்.

கிருபாவின் விசயத்தில் தாய் தந்தை, செய்யும் வேலை, அறிந்த நண்பர்கள் என அவனின் கூட்டில் இருந்து வேறுபட்டு, மதுவையும் அவளின் தந்தையையும் புதியதாய் அறிமுகம் செய்திருந்தது.
"உட்காரு கண்ணா, எதுக்கு இப்படி நின்னுக்கிட்டே‌ இருக்க.?" என்ற வல்லியின் சொல்லில் உள்பக்கமாய்த் தலையைத் திருப்பினான்.

ஜாதி மல்லி மலரைத் தொடுத்துக் கொண்டிருந்தார் மூத்தவர்‌. அவரின் வயதிற்கு, தற்போது செய்யும் வேலைகள் ஒவ்வொன்றும் வியப்பின் உச்சம் தான்‌.

கைகள் நடுக்கம் காணாமல் துல்லியமாய் பூக்களை நெருக்கி அதன் காம்பிற்கு சேதாரம் விளைவிக்காது முடிச்சிடுவது என்பது தனிகலை‌. சற்று அழுத்தத்தைக் கூட்டினாலும் மலரும் காம்பும் இரண்டு துண்டாகி விடும். சித்திரம் மட்டும் அல்ல, பூ தொடுப்பதும் கைப்பழக்கம் தான்.

கிருபாவின் அன்னை சித்ரா இதை எல்லாம் செய்ய மாட்டார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நேரம் இருக்காது. குடும்ப வருமானத்தில் நாற்பது சதவிகிதத்தை ஈட்டித் தருபவருக்கு, வீட்டு வேலை மற்றும் அலுவலக பணிகளுக்கே ஒரு நாள் போதாது.

ஈன்றவரை நினைத்தபடியே முதியவரின் அருகே சென்று அமர்ந்தவன், "கிருஷ்ணன் சார், உங்களுக்கு ரிலேஷனா பாட்டி.?" என வினவிட, "அது என்ன உங்களுக்கு? நமக்குனு வாய்ல வர மாட்டிது.?"
அவன் புன்னகைத்து சமாளிக்க, "யாரையும் அண்ட விடாமலேயே உங்கப்பன் வளர்த்துட்டான். அதான் நீயும் இப்படி ஆகிட்ட. நான் மட்டும் அப்பப்ப சென்னைக்கு வந்து போகலனா, என்னையும் யாருனே தெரிஞ்சிருக்காதுல.?"

"இதுல என் தப்பு எதுவும் இல்லையே பாட்டி.?"

"உன்னோட தப்புனு யாரு சொன்னா? சேதுவைத்தான் சொல்லுறேன்."

"ம்ம்.. அப்பா பேசுனாரா?"

"நான் பேசுனேன், மதியம்."

"என்னைப் பேச வேணாம்னு சொல்லிட்டாரு."

"அவனுக்கு ஒரு நோக்கம்."

"நான் மனசு மாறிடுவேன்னு நினைக்கிறாரு."

வல்லி புன்னகைக்க, "என்ன பாட்டி சிரிக்கிறீங்க?"

"உன்னோட வயசு அவன் அனுபவம். நான், அதுக்கும் முன்னாடி இருந்தே இந்த உலகத்தைப் பார்க்கிறவ. யாரு நினைக்கிறது சரி, யாரோட எண்ணம் தப்புனு எல்லாம் யாராலயும் சொல்ல முடியாது. ஆனா ஒன்னு தெரியும். எல்லா நாளும் ஒரேமாதிரி இருக்காது. அதேபோல தான் மனுசங்களும்.
இன்னைக்கு சரினு படுறது நாளைக்கு தப்புனு தோணலாம். அதுனால இன்னைக்கே எல்லாத்தையும் முடிவெடுத்திடணும்னு நினைக்கக் கூடாது‌. அன்னன்னைக்கான பசிக்கு, அன்னன்னைக்குத் தான் சாப்பிடணும். முதல்நாளே சேர்த்து சாப்பிட்டா, மறுநாள் பசிக்காம போயிடுமா‌ என்ன?"
"நீங்க மறைமுகமா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க!"

"எது சொல்லுறதா இருந்தாலும் நான் நேராவே சொல்லுவேன் கண்ணா‌. இன்னைக்குத்தான வந்திருக்க, இன்னொரு நாள் பேசுவோம்."

"அப்ப உங்களுக்கு எல்லாம் தெரியும் போல.?" என 'நிலாவைப் பற்றிய நினைவுகளை எவரிடமும் பகிரக் கூடாது!' என்று சேது உரைத்து இருந்ததால், அவளின் பெயரை விடுத்து பொதுவாய் வினவினான் கிருபா.
"ஆக்ஸிடெண்ட் ஆன நேரத்துல, ஒரு வாரம் சித்ரா கூடதான் ஆஸ்பத்திரியில இருந்தேன். கண்ணு முன்னாடி நடக்கிறது எல்லாம் தெரியாமலா போகும்? இல்ல, என் வயசுக்குப் புரியாதா.?"
அவன்‌ வலிந்த முறுவலுடன் தலையைப் பின்னால் சாய்த்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, "கிருஷ்ணன் நமக்குச் சொந்தம் எல்லாம் இல்ல. பழக்கம். ஆனா சொந்தத்தை விட பெரிய உறவு. உனக்கு விபத்து ஆன விபரம் தெரிஞ்சு கிளம்பினப்ப, அவன்தான் கூட வந்து என்னை அங்க விட்டான்."
"அவரும் வந்திருந்தாரா.?"

"ஐ.சி.யூக்கு உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிழைச்சிட்டனு தெரியவும், வெளிய நின்னு பார்த்துட்டு ஊருக்குக் கிளம்பிட்டான். உன்னோட முகத்தைக் கூட பார்க்க விடல டாக்டருங்க."
ராதா கிருஷ்ணனை அன்று காலை முதன்முறையாய் பார்த்த நொடி நினைவிற்கு வந்தது. புதிதான மனிதரைக் காண்பது போல் அல்லாது அவனை அவர் அணுகிய விதத்தின் பின்னணி யாதென தற்போது அறிந்து கொண்டான்.

கிளம்புவதற்கு முன்னர் மது மூத்தவரிடம் பேசியதும் சிந்தனையில் உலா வர, அவளும் தன்னைப் பற்றி அறிவாள் என ஊகமும் முளைவிட்டது.

'ஆனால் எந்த அளவிற்கு?' என்ற வினாவிற்கான விடைதான் தெரியவில்லை‌.

"கிருஷ்ணன் இந்த ஏரியா கவுன்சிலரோட பையன்!" என வல்லி உரைத்திட, அவரின்‌ பேச்சில் ஆடவனின் கவனம் திரும்பியது‌.

"மதுவோட அம்மா சங்கரிக்கு பெத்தானியாபுரம். அவங்கப்பா இங்க கரிமேடு மார்க்கெட்டுல தேங்கா கடை வச்சிருந்தாரு. ரெண்டு பேரும் மன்னர் திருமலை நாயக்கர் காலேஜ்ல ஒன்னா படிச்சவங்க. பஸ்ஸுல சேர்ந்து போக வர, காலேஜ்ல பார்க்கிறப்ப பேசனு இருந்திருக்காங்க.
எப்படியோ ஆசைப் பட்டுட்டாங்க‌‌. கிருஷ்ணனோட அப்பாவுக்குத் தெரிஞ்சு பெரிய கலவரம் ஆகிப்போச்சு. இவன், சங்கரியைத்தான் கட்டுவேன்னு ஒரே பிடிவாதம். அவ வீட்டுலயும் ஒத்துக்கல. பத்தொன்பது வயசு. கிருஷ்ணனுக்கு இருபத்தொன்னு. மூனாவது வருசம் படிச்சு முடிச்ச கையோட கூட்டிட்டுப் போயி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டான்."

"இருபத்தஞ்சு வயசுல என்ன தெரியும்னு மேரேஜ் பண்ணீங்க டேட்.?" என அவனது தந்தையிடம் கேட்டது நினைவிற்கு வந்தது.

அதற்கு சேது அளித்த பதில் கூட சற்று ஏற்புடையதாய் இருந்தது. ஆனால் கிருஷ்ணனின் விசயத்தில் 'இவர்களுக்குள் அந்த வயதில் அப்படி என்ன நம்பிக்கை? வாழ்வைப் பற்றிய புரிதல் எப்படியானதாய் இருந்திருக்கும்.?' என்ற கேள்வி எழுந்தது‌.

அவன் வெளியே உரைத்திடாத வினாவிற்கான விடையை சுந்தரவல்லி தரத் தொடங்கினார்.
"மார்க்கெட்டுல வச்சுதான் ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை ஆச்சு. சங்கரியோட அப்பாவை இங்க கடை போடவே விடல, கிருஷ்ணனோட அப்பா. அவருக்கு மகமேல அந்த கோபம் வேற. 'என்னோட மத்த பிள்ளைகள பார்க்கணும். உனக்காக அவங்க வாழ்க்கையை நான் அழிக்க முடியாது'னு மொத்தமா உறவே வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

கிருஷ்ணனோட வீட்டுல வேற மாதிரி பிரச்சனை. 'அந்தப் பிள்ளைய விட்டுட்டு வர்றதா இருந்தா வா. இல்லேனா இனி வராத'னு சொல்லிட்டாங்க. பாவம் எங்க போறதுனு தெரியாம மார்க்கெட்டுக்கு உள்ள இருந்த முனியாண்டி கோயில்ல உட்கார்ந்துட்டு இருந்தாங்க.
அப்புறம் அந்தப் பிள்ளைய விட்டுட்டு, கிருஷ்ணன் வீடு தேடி ஒவ்வொரு தெருவா அலைஞ்சிட்டு இருந்தான். என்கிட்ட வந்தும் கேட்டான். இப்ப அவங்க குடியிருக்க வீட்டுல, வேறவங்க இருந்தாங்க.
நீ தங்கி இருக்கியே மாடி ரூம், அதுல பழைய பொருள் போட்டு வச்சிருந்தேன். அவசரத்துக்கு வேணும்னா‍, அதை ஒதுங்க வச்சிட்டு தங்கிக்கோங்கனு சொன்னேன்.
'ராத்திரிக்கு அந்தப் பிள்ளைக்கு படுக்க இடம் கிடைச்சா போதும்மா. நான் கோயில் வாசல்லயே படுத்துக்குவேன்'னு, சங்கரியைப் போய் கூட்டிட்டு வந்தான்.
ஏழெட்டு மாசம் அதுலயே தான் இருந்தாங்க. கூட படிச்ச பையன் மூலமா ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பிச்சு, அதுல தான் வாழ்க்கையைத் தொடங்குனாங்க‌. அந்த ரூம்ல இருந்த வரைக்கும் ரெண்டு பேருக்கும் நாலு செட் துணிமணியைத் தவிர வேற எதுவும் வாங்கிக்கல. பொருள்னு எதுவும் வாங்குனா வைக்கிறதுக்கு இடம் வேணும்ல.? ரெண்டு நேரம் கடை சாப்பாடு‌. ஒரு நேரம் பட்டினினு தான் ஓடுச்சு‌.
'இப்ப என்ன, என் வீட்டுலயே சாப்பிடுங்க'னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ரெண்டு பேருமே கேட்கல. அவ்வளவு வைராக்கியம். சங்கரியும் கொஞ்ச நாள்ல, துணி கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா‌.
குடி இருந்தவங்களோடது பெரிய குடும்பம்‌. நாலு பிள்ளைக அவங்களுக்கு. 'இடம் பத்தலம்மா மாறிக்கிறோம்'னு அவங்க காலி செஞ்சதும்‍, கிருஷ்ணன் நான் இருந்துக்கட்டுமானு கேட்டு இங்க வந்துட்டான்.

அவனால முடிஞ்சதை வாடகைனு கொடுத்தான். நாலு மாசம் கழிச்சு, சங்கரி மாசமானா. நமக்கு வீடுனு ஒன்னு இல்லாம, வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடாதுனு அதுவரைக்கும் உறுதியா இருந்திருக்காங்க.
பாவம்! பார்க்க யாரும் இல்ல‌. பக்குவம் சொல்லவும் பெரியவங்க கூட இல்ல. சரியான சாப்பாடும் இல்லாம, மசக்கையில ரொம்ப ஒருமாதிரி ஆகிட்டா.‌ ஆசைப்பட்டுக் கட்டுனவளுக்கு என்னாச்சோனு பயந்து பயந்து, வாரவாரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போய் அதுக்கு வேற செலவழிச்சான் கிருஷ்ணன்.
சின்னப் பிள்ளைக. என்ன செய்யிறது? யாருக்கிட்ட உதவி கேட்கிறதுனு தெரியாம தவிச்சுப் போச்சுக. அப்புறம் 'ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போக வேணாம், நான் பார்த்துக்கிறேன்'னு சங்கரிக்குச் சத்தான ஆகாரமா செஞ்சுக் கொடுத்தேன்.

எட்டு மாசம் வரைக்கும் வயிறே தெரியல. பிள்ளைக்கு எதுவும் பிரச்சனை ஆகிடுமோனு பயம் வேற. அப்புறம் எப்படியோ பாடுபட்டு மதுவை பெத்துட்டா. குழந்தை நல்லா இருக்கிறதைப் பார்த்த பின்னாடி தான், ரெண்டு பேரும் நிம்மதியா மூச்சே விட்டாங்க.

ஒரு ஆறு மாசம் தான். அப்புறம் பிள்ளைய என்கிட்ட விட்டுட்டு, வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டா சங்கரி.‌ மதிய நேரத்துல பால் கொடுக்குறதுக்காகவே வெயில்ல ஓடி வருவா. கிருஷ்ணன் பக்கத்துல இருந்தா ஆட்டோல கூட்டிட்டு வந்துடுவான். இல்லேனா அது வேற செலவுனு, காசை பர்ஸ்ல இருந்து வெளிய எடுக்க மாட்டா.

அவளுக்கு, அந்தப் பணம் முழுசும் அவ புருஷனோட இரத்தம். பார்த்து பார்த்துதான் ஒவ்வொரு செலவையும் செய்யிவா. மூனு வருசத்துல சொந்த ஆட்டோ வாங்கிட்டாங்க. அப்புறம் சங்கரியை வேலைக்கு விடாம, டைப் ரைட்டிங் கிளாஸ் அனுப்பி பரிட்சை எழுத வச்சு அடுத்து மேல என்ன செய்யலாம்னு பார்த்தான் கிருஷ்ணன்.

ஆறு வருசத்துல, ஆளுங்களை எல்லாம் பிடிச்சு கவர்மெண்ட்ல அப்ரூவல் வாங்கி டைப்ரைட்டிங் செண்டரே பொண்டாட்டிக்கு ஆரம்பிச்சு கொடுத்துட்டான். கவுன்சிலர் மகன்றதால, யாரைப் பிடிச்சா எங்க எப்படி வேலை நடக்கும்னு அத்தனையும் அத்துபடி‌ அவனுக்கு.
சுத்தி இருக்க ஜனங்களுக்கு எதுவும் தெரியலேனா இங்கதான் வந்து நிப்பாங்க. கிருஷ்ணனைத் தெரியாத ஆளே இல்ல.‌ மார்க்கெட்ல காய் காறி லோடு இறக்குறவன்ல இருந்து, கலெக்டர் ஆஃபிஸ்ல வேலை செய்யிற அதிகாரிங்க வரைக்கும் அவ்வளவு பழக்கம்!" என்றிட, அவரது வாழ்வின் வளர்ச்சியை ஒவ்வொரு நொடியும் வியப்புடனே கேட்டுக் கொண்டிருந்தான் கிருபா.
'இருபத்தேழு வயதில் நிலையான வருமானம் இருந்தும் தனக்குள் உருவாகாத உறுதியும் நம்பிக்கையும், படிப்பைத் தவிர வேற எதுவும் இல்லாத இருபத்தோரு வயது கிருஷ்ணனிற்குள் எப்படி துளிர்விட்டு விருட்சமாகி இருக்கும்?' என எண்ணிட, பிரமிப்பாய் இருந்தது‌.
ஆனால் அவரிடம் கல்வியோடு சேர்த்து இன்னொன்றும் இருந்தது. அது‍, அவரது நேசம். நேசித்த பெண் அவரின் மீது கொண்டிருந்த பற்றுதல். அப்படியான உணர்வெல்லாம் உயிரோடு உடன் இருந்தால் அல்லவா சாத்தியம்? இல்லாது போனவளிடம் இருந்து எங்கனம் கிட்டும், அந்த அரவணைப்பு?
இதை அறியாது, மரணித்துப் போனவளுடன் மனமும் சென்று விட்டதாய் மாய உலகிலேயே வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருந்தான் கிருபாகரன்.
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
165
கிருஷ்ணன் ❤️சங்கரி
காதல் கல்யாணம்
கஷ்டம்,நம்பிக்கை
குடும்பம்,குழந்தை
அற்புதம்..... 🤩
 
Top Bottom