அரங்கம் 6
தனது மனக்கிடக்கை சொல்வதற்கு அம்மா மாலதியோ, அம்மா வழி தாத்தா பாட்டியோ என்றுமே அனுமதித்ததில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது ரங்கனின் மனம் புழுங்கியிருந்தது. சரியாக சொல்லப்போனால் ஆண்குழந்தைகளுக்கே பல சமயங்களில் அப்பாவின் தோள்சாய்தலும் ஆறுதல் வார்த்தைகளும்,நானிருக்கிறேன் ,கவலை படாதே 'எனும் தேறுதல்களும் தேவைப்படுவதுதான்.
பெண்குழந்தைகளுக்கு பருவ வயதில் அந்தரங்கம் பேச அம்மா தேவைபோல , ஆண் குழந்தைகளுக்கு அப்பா. தவிர்க்க கூடாத உறவு அது. இப்போது தனது அப்பாவுடன் இருப்பதாலோ என்னவோ அவன் சுதந்திரமாக உணர்கிறான். மாலதிக்கு ரங்கனின் தோழமை என்றாலே அலர்ஜி.அவள் அதை ஊக்குவிக்க தயாராக இல்லை.எப்போதும் அந்த வீட்டில் ஒருவித மனப்புழுக்கம். "டூ'ஸ் டூ நாட்ஸ் ' எனப்படும் செய்ய வேண்டியது,செய்யக்கூடாதது 'என்ற பட்டியல் அவர்கள் வீட்டில் மிகப்பெரியது.
பருவ வயதில் இருக்கும் குழந்தையிடம் நாம் பட்டியல்கள் போடலாம்.அதை அவர்கள் அனுசரித்து தான் செல்லவேண்டும் என்றும் நியமத்தை விதித்தல் ,விதி மீறுவதில் அவர்களுக்குள் ஒரு உற்சாகம் . இங்கே பெங்களூருவில் சுந்தரம் அதுபோன்ற எந்த விஷயங்களையும் குழந்தை மீது திணிக்கவில்லை.
மாலதி வீட்டினரை பற்றி குறை கூறியது கிடையாது. அவர்கள் இவனிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய பேச்சுகள் கிடையாது. குழந்தை எதிர்பார்த்த அந்த அரவணைப்பு இப்போது ரங்கனுக்கு முழுமையாக கிடைத்தது.
காலை அப்பாவும் மகனுமாக நாலரை மணிக்கே எழுந்து ,காலைக்கடன்களை முடித்துவிடுவார்கள். குளியல் உட்பட. ரங்கன் இன்னமும் பால் தான் குடிக்கும் வழக்கம். சுந்தரம் முதலில் குளித்துவிட்டு வந்து பாலை காய்ச்சி தனக்கு காபியும்,குழந்தைக்கு பாலுமாக கூடத்தில் தயாராக இருப்பான்.இருவரும் அதைக்குடித்துவிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், திருவாசகம் என்று தமிழ் நூல்களை வாசிப்பார்கள். ரங்கனுக்கு சுந்தரம் கொஞ்சநேரம் தமிழ் வகுப்பு எடுப்பான். அடுப்பில் சமையல் செய்துகொண்டே ரங்கனுக்கு கணினி ,அறிவியல் பாடங்களை சொல்லித்தருவான். பிறகு ரங்கன் தனக்கு அன்றைக்கு வகுப்பில் நடக்கும் தேர்வுகளுக்காக படிப்பது,எழுத்து வேலை பார்ப்பது என்று கழியும் .
மாலை சுந்தரம் வீட்டுக்கு வர தாமதம் ஆகும். ஹாட் கேசில் ரங்கனுக்காக ஏதாவது உணவு இருக்கும். பள்ளி வேனில் வந்துவிடும் ரங்கன் , வீட்டில் இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு அருகே இருக்கும் டென்னிஸ் கோர்ட் சென்று கொஞ்சநேரம் விளையாடுவான். அந்த வகுப்பு இல்லாத நாட்களில் நீச்சல் வகுப்பு. பிறகு கொஞ்சநேரம் அருகே இருக்கும் பூங்காவில் சக தோழமைகளுடன்,விளையாடுவது . சரியாக ஏழுமணிக்கு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அப்பா வருவதற்குள் இருவருக்குமாக ஏதாவது சாப்பிட தயார் செய்து வைத்திருப்பான்.
இரவு சுந்தரம் வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வருவான்.குளித்துவிட்டு மகன் செய்து வைத்திருப்பதை கொறித்துவிட்டு இருவருக்குமான இரவு டிபன் தயார் செய்வான்.இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பேசுவார்கள்.சரியாக பத்தரை மணிக்கு இருவரும் உறங்க சென்றுவிடுவது.
சுந்தரத்தின் பெற்றவர்கள் வரும்பொழுது அப்பாவுக்கும் மகனுக்கும் கொஞ்சம் வேலை குறையும். மற்றபடிக்கு எண்ணெய் போட்ட எந்திரம் தான். சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் இருவருமாக எங்காவது வெளியே சென்றுவிட்டு வருவார்கள்.அம்மா தனது அருகில் இல்லை என்பதையே பிள்ளை யோசிக்க நேரமில்லை. சுந்தரத்தின் அலைபேசிக்கு அழைத்து மகனிடம் கொஞ்சநேரம் வாரஇறுதி நாட்களில் பேசுவதை மாலதி வழக்கமாக்கி கொண்டிருந்தாள். ஆனால், கணவனிடம் ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.
இருவருக்குமான இடைவெளி இன்னமும் பெரியதாக நீண்டதுதான் மிச்சம்.மாலதியை பொறுத்தவரை வெறும் தோல்விகளை மட்டும் கொண்ட ஆண் சுந்தரம்.அவனுடன் சேர்ந்த அவளது வாழ்க்கையும் சூழலில் சிக்கிவிட்டது. இந்த் நினைப்பிலிருந்து அவள் வெளியே வராத வரை எப்படி வாழ்க்கை சரியாக போகும்?
பிரச்சனைகளை சரியாக்க இருவருமாக முயலவேண்டும் .அப்படி இருந்தால்தான் திருமண வாழ்க்கை எனும் இரட்டை மாட்டு வண்டி சுமூகமாக ஓடும். இங்கே முரண்டு பிடித்துக்கொண்டிருக்கும் இரண்டு மாடுகளுக்குமே இந்த உறவில் சலிப்பு தோன்றியிருக்க யாரை சொல்வது!
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படும்பொழுது பிரச்சனைகள் இருக்காது. பணத்தையும் மற்ற பிற விஷயங்களையும் பார்த்து அதன் மேல் நடக்கும் திருமணங்கள் இப்படித்தான்.. முன்னாடி சென்றால் முட்டுவதும் பின்னால் சென்றால் உதைப்பதுமாக மாறிவிடுகிறது.
இப்போது ரங்கன் சந்தோஷமாக உணர்கிறான். மூச்சுத்திணறும் வாழ்க்கை சூழ்நிலை இல்லாததே அவனுக்கு புது உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுக்க அந்த மனதுக்கு போதுமானதாக இருக்கிறதே!பெங்களூரு வாழ்க்கையும்,அதன் சீதோஷ்ண நிலையும் கூட அவனுக்கு நிரம்ப பிடித்துவிட்டது.
ரங்கனிடம் மாலதியின் பெற்றவர்கள் ஓரிருமுறை அழைத்து பேசியதுடன் சரி.பங்களூருவில் இருக்கும் தங்களது இரண்டாவது மகளின் வீட்டுக்கு வருபவர்கள்தான். மருந்துக்கும் எட்டிப்பார்க்கவில்லை.அதிலும் இரண்டாவது மகளின் மாமனார் இறந்த பிறகு மாமியார் வெகுவாக துவண்டு போனதுடன் வீட்டு விஷயங்களிலிருந்தும் தன்னை விடுவித்து கொண்டுவிட்டார்கள். அதற்குப் பிறகு இத்தனை வருஷங்களுக்கு சேர்த்து அடிக்கடி மகளுக்கு துணை என்று மாதத்தில் பாதி பெங்களூரு வாசம்.ஆனாலும் , ரங்கனை பார்க்க அவர்களுக்கு மனம் இல்லை.
ஏன் ,இப்படி எல்லாம் இருக்குமா? அவர்கள் வளர்த்த பிள்ளைதானே என்றீர்கள் எனில்,மனிதனின் ஆசை பிடித்த மனம் எப்படி என்னவெல்லாம் செய்யும் என்பதை அவன் கூட அறியமாட்டான்.
ஆசை நூறு வகை,வாழ்வில் நூறு சுவை... அனுபவிக்காமல் விடுவதற்கு அநேகருக்கு மனம் இருப்பதில்லை.
ஒருவருஷ வெளிநாட்டு வாழ்க்கையை சந்தோஷமாகவே அனுபவித்துவிட்டு திரும்பி இந்தியமண்ணை மிதித்த மாலதிக்கு அங்கிருந்தது வரவே மனது இல்லை."என்ன இருக்கு இங்கே..எப்படித்தான் மனுஷங்க இங்கே வாழறாங்களோ ..என்ற அலுப்பு அவரது மனதை ஆக்கிரமிப்பு செய்திருந்தது.எப்படியாவது அமேரிக்கா சென்றுவிட வேண்டும்.இங்கே வாழ என்னால் முடியாது என்று தீர்மானமாக நம்பினாள். அவளுக்குமே தான் குழந்தை ரங்கனை பிரிந்திருக்க வேண்டியுள்ளதே என்ற வருத்தமெல்லாம் இல்லை.கணவன் மீது முன்பு வைத்திருந்த உரிமையுணர்வு கூட குழந்தை ரங்கன் மீது இப்போதைக்கு அவளிடம் இல்லை. தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இருந்த சுமைகளில் ஒன்று குறைந்ததாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
இந்தியா வந்தவள் மகனிடம்,"ரங்கா..அம்மா இப்போ சென்னை வந்திட்டேன். நீ இந்த அகடெமிக் இயர் முடிச்சிட்டு இங்கே அம்மாகிட்டே வந்துடறியா.. நீ இங்கே என்னோட இல்லாம ரொம்பவே லோன்லியா பீல் ஆறது டா .."என்று கூப்பிட்டவள் குரலில் துளியும் சோகம் இல்லை. ரங்கனுக்கு மனதில் பயம் வந்துவிட்டிருந்தது. திரும்பவுமா..என்று யோசித்தவன் , "பாக்கலாம்மா. ஸ்கூல் ஓபன் ஆகி இப்போதான் த்ரீ மந்த்ஸ் ஆறது. நயந்த் ஸ்டாண்டர்ட் வரும்பொழுது நீ இங்கே சென்னைல இருந்தா வரேன். நீ இங்கே பெங்களூருக்கு வேலை செய்ய வர முடியுமாம்மா?நீ,நா,அப்பா மூணுபேரும் ஒண்ணா சேர்ந்து இருக்கலாம். நம்ம பேமிலி ஹாப்பியா இருக்கும் "என்று கேட்டவனை நேரில் இருந்திருந்தால் நிச்சயம் அடி பிளந்திருப்பாள். அலைபேசி என்பதால், " அதிகப்ரசங்கி,உன்ன இங்கே வாரியான்னு கேட்டா என்னை அங்கே வர சொல்ற.யாரு உங்கப்பா சொல்லி கொடுத்து பேசறியா. ஒங்கப்பாவை வேணா இங்கே வந்துட சொல்லேன். நீ,நா ,அப்பா, அம்மம்மா,தாத்தா எல்லாருமா ஒண்ணா ஹாப்பியா இருக்கலாம் " என்று நக்கலடித்தாள்.
அம்மா கிண்டலிடிக்கிறாள் என்று கூட புரியாமல், 'அவர்களுடனா "என்று மிரண்டான் ரங்கன். "சரிம்மா,எனக்கு இப்போ கிளாஸ் இருக்கு.நா திரும்ப கூப்பிடறேன் " என்று அலைபேசி அழைப்பை துண்டித்தான் மகன்.
அவன் வைத்ததும்தான் மாலதிக்கு தோன்றியது தான் ரங்கனிடம் அப்படி வன்மமாக பேசியிருந்திருக்க கூடாது என்று.அவள் மனதிற்கும் சுய ஆராய்ச்சி பெரியளவில் நடந்து கொண்டிருந்தது.அப்பாவும் அம்மாவும் இப்போது திருநெல்வேலியில் உள்ள கோவில்களை தரிசிக்கவென்று சென்றிருக்கிறார்கள்.வீட்டில் யாருமே இல்லை.தனிமையில் இருக்கும் மனம் எல்லாவற்றையும் யோசித்தது. இவ்வளவு வருஷங்கள் இருந்த அன்பும் காதலும் இவ்வளவு சீக்கிரம் வறளுமா,அப்படியென்றால் கணவன் மீது தான் வைத்திருப்பது காதல் உணர்வு இல்லையா ..என்று யோசித்தவளுக்கு விடை இல்லை என்றுதான் வந்தது.
ரங்கனை பெற்றுக்கொண்டு அவனையும் இந்த சுழலில் சிக்க வைத்திருக்க வேண்டாம் என்றது மனம். இன்னும் யோசிக்க, அம்மாவின் நிர்பந்தத்தால் தான் தான் சுந்தரத்திடம் பழகியதும், அம்மாவின் சொல்லுக்காக தான் விரும்பியதை படிக்காமல் சுந்தரத்தின் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஏற்றவாறு படித்ததும், அவனை திருமணம் முடித்ததும்.என்றாவது ஒருநாள்,ஒரு நொடி தான் கணவனை காதலித்திருப்போமா என்ற கேள்வி பெண்ணை பூதாகாகரமாக மிரட்டியது.
உண்மைதான் . காதல்,பிடித்தம் என்ற வார்த்தைகளுக்கு அவள் வாழ்வில் முக்கியத்துவம் இருக்கவேவில்லை. அவளுக்கான முடிவுகளை எடுத்தது அவள் அம்மா தான். " விடுமுறை நாட்களில் சீரங்கம் நா வரமாட்டேன்.அங்கே போர் அடிக்கும் இங்கே சென்னைல நாம் இருக்கலாம்மா " எண்டு கதறினாலும் அவளது விடுமுறை நாட்கள் அங்கேதான். அந்த வெறுப்புதான்,திருமணம் முடிந்த பிறகு அந்த உறவுகளை தூர நிறுத்த காரணம். சொல்லொணா வெறுப்பு புரையோடிப்போயிருந்தது.
வெளிநாட்டு வாழ்க்கை முறை அவளுக்கு வெகுவாக பிடிக்க இதுவும் ஒரு காரணம்.பிள்ளைகளின் வாழ்க்கையை பெற்றவர்கள் வாழ்வதில்லை. அந்த வார இறுதியில் பெங்களூரு சென்று கணவனையும்,மகனையும் பார்க்கவென்று வந்தாள். சுந்தரத்திடம் சாதாரணமாகத்தான் பேசினாள். மனைவியிடம் அவன் கண்களில் தெரிந்த ஏக்கம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.அவளுக்கும் தேவை என்று ஒன்று உண்டே.கணவனின் ஆசைக்கு இடம் கொடுத்தாள். அங்கே காதல் நிச்சயம் இல்லை.ஆனால் இருவரது தேவைக்கும் வடிகால் கிடைத்தது. இருவரும் அதிகமாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
மனைவி மகனுடன் சந்தோஷமாகவே சுற்றினான் சுந்தரம்.வெகு வருஷங்களுக்கு பிறகு இப்படி ஒரு ஆனந்தம்.
Author: Paithani
Article Title: Arangam 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Arangam 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.