அரங்கம் 5
நடைமுறை சிக்கல்கள் . பொதுவாகவே பெண்களால் வெகு சுலபமாக இன்னொரு வீட்டில் பொருந்திகொண்டுவிட முடியும். இனொருவருடைய வீடாக இருந்த ஒன்றை தன்னுடையதாக,தனது குடும்பமாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் பெண்கள்.அதனால்தான் திருமணம் முடித்து பெண்களை இன்னொருவீட்டின் பெண்ணாக அனுப்புவது. இப்போது சுந்தரத்தால் அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை.அங்கேயே இருக்கவும் மனதுக்கு இறுக்கமாக இருக்கிறது.
முன்பு அண்ணன் மகனாக தெரிந்த சுந்தரம். அமெரிக்காவில் டாலர்களில் பணத்தை சம்பாதித்து ஒன்றிற்கு இரண்டு பெரிய வீடுகளை வாங்கிய தங்களது வீட்டு மாப்பிள்ளை சுந்தரம்,இப்போது சும்மா அமர்ந்திருப்பது போல பேசினாள் அத்தை. அவன் அங்கிருந்த வீட்டை விற்று விட்டு வந்ததை சுத்தமாக அவர்களால் நம்ப முடியவில்லை.தங்கள் வீட்டு பெண்ணை இங்கே அனுப்பிவிட்டு இவன் மட்டும் சென்றதில் ஏக கடுப்பு பெண்ணை பெற்றவர்களுக்கு.அது வார்த்தைகளிலும் வெளிப்படாமல் இல்லை.
"என்னென்னவோ யோசிச்சு இந்த கல்யாணத்தை முடிச்சு வச்சேன். இப்போ வேலையும் விட்டு வீட்டையும் வித்து ,எங்க பொண்ணை ஏமாத்தி விட்டுட்டியே சுந்தரம். உனக்கே இது சரியா படறதா சுந்தரம். இப்போவும் ஏதானும் ஒரு வேலைய தேடிக்காம என்னென்னவோ சொல்லிண்டு ஆத்துல இருக்கே. தொழில் தொடங்கறது எல்லாம் நமக்கு சரியா வராது. புரிஞ்சுண்டு வேலையை தேடு. எம்பொண்ணுக்கு ஈஸியா கிடைக்கறது .ஒனக்கு வாய்க்காதா..சொல்றதை கேளு ,பணத்தை வீண் பண்ணாத. "
மாமியாராகிய அத்தையின் வார்த்தைகள் சுந்தரத்தை அனல் என சுட்டது. அவர்கள் சொல்வதும் சரிதான் என்று நிறைய வேலைகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கினான்.ஏனோ அவ்வளவு எளிதாக அவன் மனைவிக்கு கிடைத்த வேலை அவனுக்கு கிடைக்காமல் கண்ணாமூச்சி விளையாடியது.
காரணம்,அவனது திறமையின்மை இல்லை. அளவுக்கு மீறிய மன அழுத்தம். சென்னை வந்து ஆறுமாதங்கள் ,இப்போது ஒண்ணரை வருஷமாகியது. மாலதிக்கு கணவன் மேல் அளவுகடந்த வெறுப்பு கூடியது.வீட்டில் அதிகம் யாரும் அவனிடம் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.தங்களது செலவுக்கு என்று குறிப்பிட்ட தொகையை கொடுத்து விடுகிறான்தான்.ஆனாலும், தங்கள் மகள் கஷ்டப்பட்டு உழைக்க இவன் சும்மா உட்கார்ந்து தாண்ட சோறு சாப்பிடுவது போல ஒரு எண்ணம். ரங்கனை காலையில் பள்ளிக்கு கொண்டு விடுவதும்,மாலையில் அழைத்துவருவதும் ,அவனுக்கு கதைகள் சொல்லுவதும், ஸ்லோகங்கள் சொல்லித்தருவதுமாக சுந்தரத்தின் பொழுதுகள் நகர்ந்தது. ரங்கன் இப்போது அவனது அப்பாவின் சாயலில் இருந்தான். நல்ல வளர்த்தி.யாரும் அவன் ஒன்றாம் வகுப்பில் பயில்கிறான் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்.
இதோ அதோ என்று சுந்தரம் தான் நினைத்தபடிக்கு சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் கம்பனியை ஆரம்பித்தான். அவன் கையிருப்பில் இருக்கும் பணம் மொத்தத்தையும் முதலீடு செய்தான். மொத்தமே ஐந்து பேர்.அவர்களுக்கான ஊதியம். அங்கே வேலைக்கு சேர்ந்தவர்கள் ஐவரும் பொறியியல் படித்தவர்கள். ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. வேலையே இல்லாவிட்டாலும் சம்பளம் கொடுத்து தானே ஆகவேண்டும். ஒரு மாதத்தில் அதிகமாக பத்து நாட்கள் வேலை இருந்தாலே அதிகம் எனும் நிலை.
சுந்தரம் அதிகமாக அலைந்து திரிந்து எப்படியோ ப்ராஜெக்ட் வாங்கி வருவான். வரும் தொகை அவனது செலவுகளுக்கு கட்டி வரவில்லை. திணறினான். மீண்டும் அவன் மனதில் துவளல் . தன்னால் எதுவுமே செய்ய முடியாதா என்ற வெறுமை. ரங்கன் இப்போது இரண்டாம் வகுப்பில் படிக்கிறான்.வேண்டுமென்றே ரங்கனை தங்களால் பார்த்துக்கொள்ள முடியாது என்று பிரச்சனை செய்யும் அத்தை அத்திம்பேர். முன்புபோல் இல்லாமல் அவர்களது இரண்டாவது மகள் தங்கள் குழந்தைகளுடன் வருவதுடன் அவளை கொண்டு விட வருவதும் இரண்டு நாட்கள் தங்குவதும்,திரும்ப அழைத்து செல்ல வருவதும் அப்போது இரண்டு நாட்கள் தங்குவதும் , ரங்கனையும் தங்கள் குழந்தைகளையும் ஒப்பிட்டு பேசி ரங்கனை மட்டம் தட்டுவது போல கூடவே சுந்தரத்தை வம்புக்கு இழுப்பதும் வேறு ஓடிக்கொண்டிருந்தது.
மாலதி தங்கள் இருவருக்குமாக ஏதாவது பேசுவாளா என்று எதிர்பார்த்த சுந்தரத்திற்கு பெருஹதா ஏமாற்றம்.அவள் வாயை திறக்கவே இல்லை. அது சரி., அவர்களுடன் சேர்ந்து அரட்டை கச்சேரி செய்வதும், மறைமுகமாக தங்கை கணவன் தனது கணவனை பேசுவதை ரசித்துக்கொண்டே ,ஓரக்கண்ணால் சுந்தரத்தை அளவிடுவதும் சுந்தரத்தால் சகிக்க முடியவில்லை. தொழிலிலும் பிரச்சனை,வீட்டிலும் பிரச்சனை.
மீண்டும் மன அழுத்தம் உச்சத்தில் சென்றது சுந்தரத்திற்கு. தன்னை கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் தவித்தான். எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை.அப்படி சொல்வதை விட அவன் சரியாக மருந்துகளை எடுத்துக்கொள்வதில்லை என்பது இன்னமும் பொருத்தம்.
உடற்பயிற்சிகள் சரி வர செய்யாததாலா, மருந்துகளின் வீரியமா தெரியவில்லை. எடை கூடியது.அதோடு தொப்பை வர ஆரம்பித்து விட்டது. மாலதி அவனை பார்த்து முகம் சுழித்தாள். அவள் ரசித்த சுந்தரம் இவன் அல்லவே!
முன்புபோல் அவன் இருக்கவென தனியறை இல்லை.ஆத்திரம் தீர கத்தவும்,பொருட்களை உடைக்கவும் முடியவில்லை.வேலை தளத்தில் தனது பொறுமையற்ற நடத்தையால் அங்கே வேலை செய்தவர்கள் அனைவருமே சென்று விட்டார்கள். சம்பளமும் அவர்களுக்கு சரியாக கொடுக்க முடியாத அளவுக்கு அவன் ஆரம்பித்த நிறுவனம் அதள பாதாளம் சென்றுவிட்டிருந்தது.
சென்னையில் இருக்கும் பிரபல மன நல மருத்துவரிடம் சென்று ,இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு மருந்துகளுடன் வீடு வந்து சேர்ந்தவனை கவனிப்பார் இல்லை. அவன் இரண்டு நாட்களாக எங்கிருந்தான்,ஏன் வீட்டில் சொல்லவில்லை என்றெல்லாம் அங்கே அவனை யாரும் கேட்கவே இல்லை,
ஒருவிதத்தில் நிம்மதியாக இருந்தாலும் இன்னொருபக்கம் ரொம்பவே மனம் அடிபட்டு போனது. தன்னிடம் இருந்த லௌகீக விஷயங்களுக்கு இருந்த மரியாதை எப்போதுமே தனக்கு கிடையாதா என்ற எண்ணம் அவனை இன்னமும் கொன்றது.
அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் அங்கே செல்ல அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. பெற்றவர்கள் தன்னை தனது குறைகளோடு அப்படியே ஏற்றுக்கொள்ள கூடும் என்ற எண்ணமே இல்லை. " நா கொஞ்ச கொஞ்சமா பைத்தியம் ஆயிண்டு வரேன் . கொஞ்ச நாள்ல எல்லாரும் என்னை கல்லால அடிப்பா" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
மீண்டும் வேலை தேடினான். நிறைய சம்பளம் என்று சொல்ல முடியாது.மாலதியின் சம்பளத்தை விடவும் குறைவு.ஆனாலும் வேலையை ஏற்றுக்கொண்டு சேர்ந்தான். கொஞ்சநாட்கள் சென்னையில் வேலை செய்தவனை பெங்களூரு அனுப்பியது நிறுவனம்.
வந்த சம்பளத்தை தனக்கென்று கொஞ்சம் வைத்துக்கொண்டு,பெற்றவர்களுக்கும், மாலதிக்கும் அனுப்பினான்,மீண்டும் ஜிம்மில் சேர்ந்து உடல் எடையை குறைத்தான். தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தான். வேலை பளு கூடும் நேரங்களில் தன்னிலை இழப்பது என்பது வழக்கம் ஆகியது. அந்த நேரங்களில் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதும்,லோகினில் வைத்து விட்டு மாத்திரைகளின் வீரியத்தில் தூங்கிவிடுவதுமாக இருந்தது பொழுதுகள்.
மாலதி இவன் அனுப்பும் பணத்தை பெற்றுக்கொள்பவள், இவனிடம் பேசுவதற்கு இன்னமும் இறங்கி வரவில்லை. மனதுக்கு மனைவியின் அரவணைப்பும்,உடலுக்கு மனைவியின் அணைப்பும் அவனுக்கு நிறையவே தேவைப் பட்டது.மாலதி அதை புரிந்துகொள்ளவும் இல்லை. புரிந்துகொள்ள தயாராகவும் இல்லை.
ரங்கன் வளர்ந்து வருகிறான். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள சுந்தரத்திற்கு ஆசை உண்டு.மாலதிக்கு ? இதற்குள் மாலதி இரண்டு முறை வேலைக்காக என்று வெளிநாடுகளுக்கு சென்று வந்துவிட்டாள். நிரந்தரமாக அமேரிக்கா செல்ல வழிகள் இருக்கிறதா என்று யோசித்தது அவள் மனம். அப்படி வாய்ப்பு கிடைத்தால் ரங்கனை கூட்டிக்கொண்டு செல்ல அவள் தயார் தான். வீட்டை தன்னை கேட்காமல் விற்றதை அவளால் மன்னிக்க முடியவில்லை.
காலம் தன் பாட்டுக்கு வேகமாக சென்றது.இருவருக்குள்ளுமான மௌனம் இன்னமும் கலைந்த பாடாக இல்லை.மாலதிக்கு சுந்தரத்தின் மீது ஒரு அலட்சியம் வந்துவிட்டிருந்தது. ஒட்டாத ஒரு வாழ்க்கை. கணவன் மனைவி இருவருக்குமான காதல் அங்கே காணாமல் போய் வெகுகாலம் ஆகிறது.சுந்தரத்திற்கு இப்போதெல்லாம் ரங்கன் மீது இருக்கும் பாசம் சுத்தமாக மனைவி மீது இல்லை.
மகனை பிரிந்து இருக்க முடியாமல் சுந்தரம் வெகுவாக கஷ்டப்பட்டான். ரங்கனை தன்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டுமாக அவனது மனம் தவித்தது. இந்த நிலையில் தான் மாலதிக்கு ஒரு வருஷ ப்ரொஜெக்ட்டுக்காக ஆஸ்திரேஸ்லியா செல்லும் வாய்ப்பு கிடைக்கவே ,"எங்களுக்கும் வயசாறது மாலு.ரங்கனை எங்களால பார்த்துக்கவே முடியாது" என்று மாலதியின் பெற்றவர்கள் சத்தம் போட்டார்கள்.
எல்லா பாரமும் அவர்களை அழுத்துவதாக உணர்வு.சுந்தரமும்,தனது அண்ணா மன்னியும் நிம்மதியாக இருக்க தாங்கள் மட்டும் குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படவேண்டுமா என்ற ஆயாசம். இதெல்லாம் நடக்கும் பொழுது ரங்கன் ஏழாம் வகுப்புக்கு வந்துவிட்டிருந்தான். அவனுக்கு அப்பா மீது அதிக பாசம் உண்டு.இதுவேறு மாலதிக்கும் அவள் பெற்றவர்களுக்கும் மனதில் ஒரு வன்மத்தை கொடுத்திருந்தது.
விளைவு அந்த வருஷ படிப்பு முடியும் சமயத்தில் பெங்களூருவில் ஒரு பள்ளியில் தனது மகனுக்கு படிக்க இடம் வாங்கிவிட்டான் சுந்தரம்.அவன் மனம்முழுவதும் சந்தோசம் வியாபித்து இருந்தது. அதே அளவு சந்தோஷத்தை பிள்ளையும் அனுபவித்தது.
அங்கே அம்மம்மாவும் அம்மாவுமாக அப்பாவை எவ்வ்ளவு பேசி இருக்கிறார்கள்.அப்பாவுடன் இருப்பது .அது சம்திங் ஸ்பெஷல் தான் " என்று மகிழ்ந்தது அந்த குட்டி மனம். சிறுவயதில் ஏற்படும் நிகழ்வுகள் மனதில் ஆழ்ந்த பாதிப்பை கொடுக்கிறது. ரங்கனுக்கு அதற்க்கு விதிவிலக்கு இல்லையே!
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவில் இருக்கும் இந்த பெரிய சுவருக்கு வேண்டுமானானால் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சதா சர்வ காலமும் அம்மாவும் பாட்டியும் பணத்தை பற்றியே பேசுவதும், தாத்தா அடிக்கடி பாட்டியிடம் ,"ஒன்னுமில்லாத உதவாக்கரை. உன்னோட அண்ணன் மகன். என்னமோ அமெரிக்கால வேலைனு நம்ம பொண்ண அவசரமா கல்யாணம் செஞ்சு கொடுத்த.இப்போ பாரு "என்று அப்பாவை பற்றி தவறாக பேசுவதும் ரங்கனுக்கு மிகுந்த ஒவ்வாமையை தந்திருந்தது.
கூடவே சீரங்கத்திலிருக்கும் தாத்தா பாட்டி ,அவர்களும் சென்னை வந்து தன்னை பார்க்கவில்லை என்ற ஏக்கம். இதோ பெங்களூரு வந்த பிறகு அந்த தாத்தாவும் பாட்டியும் மாதம் ஒருமுறை நிச்சயம் வந்து பார்க்கிறார்கள். அதோடு விடுமுறை நாட்களை தானும் அங்கே சீரங்கம் சென்று அவர்களோடு கழிக்க முடிகிறது என்று சந்தோசம் கொண்டது அந்த பிஞ்சு மனம்.
குழந்தைகளில் உலகம் சிறியது.அவர்கள் எதிர்பார்ப்பதும் சிறிய விஷயங்களை தான். அதையும் சரியாக தர முடியவில்லை என்றால் என்ன சொல்வது?
Author: Paithani
Article Title: arangam 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: arangam 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.