• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
274
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 12

கண்ணாடி வாழ்க்கையில்
விரிசல்கள் அதிகமாகி
வேதனைகளும் வலிகளும்
எல்லையை மீறும்போது
கண்ணாடி உடைந்து சிதறி
உடலையும் மனதையும் காயப்படுத்துகிறது!
ஆடியை அகற்றி எறிந்துவிட்டு
புதுமையை அணைப்பதே
புத்திசாலித்தனமாகும்!

வீட்டுக்குள் நுழைந்த புதிய மருமகளை பாவை அத்தையும், மாமாவும் வரவேற்கவில்லை. வா என்று கூடச் சொல்லாமல் தங்கள் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்கள். திருநாவுக்கரசுவும் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்று விட்டான். மணிமாறனை ஏதோ வேலை சொல்லி வெளியே அனுப்பியிருந்தான் திருநாவுக்கரசு.

மணிமேகலையும், மாதவியும் சேர்ந்து ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். மணிமேகலை, அவசர அவசரமாக ஒரு கேசரி செய்து அவர்களுக்கு இனிப்பை வழங்கினாள். மணிமாறனுடன் பேசிப் பழகியது போல, செழியனுடன் அதிகம் பேசியதில்லை மணிமேகலை. அவனும் கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவன் என்பதால் அதிகம் பேச மாட்டான். பொறியியல் கல்லூரியில் படித்தபோதும் ஹாஸ்டலில் தங்கியிருந்ததால் வீட்டில் வந்து அதிகம் தங்கி அண்ணியுடன் பழகியதில்லை செழியன். இருந்தாலும் மணிமேகலையின் பேரில் மதிப்பும், அண்ணி என்கிற விதத்தில் மரியாதையும் வைத்திருந்தான். மாதவி சிறியவள் என்பதால் செழியனின் வயதுதான் இருக்கும். அவளுடன் கொஞ்சம் இயல்பாகப் பேசிப் பழகுவான் செழியன். இருவருக்கும் சம வயதாக இருக்கலாம்.

“ தம்பி, அம்மா, அப்பா இப்போ கோபமா இருக்காங்க. நீங்க காதல் கல்யாணம் பண்ணிகிட்டதுனாலதான் அவங்களுக்கு உங்க மேல கோபமான்னு என்னால உறுதியாச் சொல்லமுடியலை. ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு தான் அவங்க கோபமே! அதுவும் சீக்கிரம் கரைஞ்சு போயிடும். அவங்க இடத்துல இருந்து பாத்தா, அவங்க கோபத்தோட நியாயம் உங்களுக்கும் புரியும். கொஞ்சம் பொறுமையா இருங்க. அம்மா, அப்பா மனசு மாறி உங்களைக் கூடிய சீக்கிரம் ஏத்துக்குவாங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தாள்.

கொஞ்ச நாட்கள் கழித்து பாவையும் , அவளுடைய கணவரும் நிச்சயம் மனம் மாறியிருப்பார்கள். ஆனால், வீட்டில் நடந்த சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அவர்களை அதிகமாகப் பாதித்து விட்டன. படுகுழியில் தள்ளப்பட்டு நிலைகுலைந்து போனார்கள் முதியவர்கள் இருவரும்.

செழியன் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மணிமாறனின் கவலை அதிகமானது பெரியவர்களுக்கு. மணிமாறனின் வாரிசு இன்னமும் உருவாகாத கவலை பெரியவர்களை வாட்டியது. அவர்களுடைய தூண்டுதலால், மருத்துவரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருந்த மணிமாறனும் மாதவியும் அவரைச் சந்திக்கச் சென்றார்கள்.

“ இரண்டு பேருக்கும் எந்த பிராப்ளமும் இருக்கிற மாதிரி தெரியலை. அதிகம் வயசாகலையே உங்களுக்கு! கொஞ்ச நாட்களுக்கு வெயிட் பண்ணிப் பாருங்களேன்” என்று தான் எடுத்த எடுப்பில் அறிவுரை கூறினார் டாக்டர்.

“ இல்லை டாக்டர். வீட்ல எல்லாரும் டென்ஷன் ஆறாங்க. எங்களையும் டென்ஷன் ஆக்கறாங்க. அப்புறம் மாதவிக்கும் சீக்கிரம் அம்மாவாகணும்னு ஆசை” என்று உள்ளது உள்ளபடி உண்மையைக் கூறினான் மணிமாறன்.

“ கரு உருவாகாமல் இருக்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். என்ன, ஏதுன்னு புரிஞ்சுக்காமல் பெண்களிடம்தான் குறை இருக்குன்னு ரொம்ப ஈஸியா அவங்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏத்திடறாங்க பெரியவங்க. ஆனால், உண்மையில் கருப்பை பலவீனமாக இருக்கிறது, ஆண்களுக்கு ஸ்பர்ம் கௌன்ட் கம்மியா இருக்கறது, பிறவிக் கோளாறுகள் இந்த மாதிரி எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இரண்டு பேரும் சேர்ந்திருக்கும் அந்தச் சமயத்தில் ஆண், பெண் இருவருக்கும் சரியான மனநிலை, சரியான சூழ்நிலைனு மனோதத்துவ ரீதியான காரணிகளும் உண்டு. பொத்தாம் பொதுவாக மலடுன்னு சொல்லி முடிக்கறது ரொம்பத் தப்பு” என்று பெருமூச்சு விட்டவர் மேலும் தொடர்ந்தார்.

“ சரி, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு இன்ட்ரஸ்டடா இருக்கறதுனால என்ன பிராப்ளம்னு பாத்துடலாம். உங்கள் விருப்பத்தை நிறைவேத்திடலாம். முதலில் இன்னைக்கு எல்லா டெஸ்டும் எடுக்கலாம். இரண்டு நாள் கழிச்சு ரிப்போர்ட் ரெடியானதும் வந்து பாருங்க. ஏதாவது குறை இருந்தாலும் பெரிய பிரச்சினை இல்லை. இப்போ எல்லாத்துக்கும் ட்ரீட்மென்ட் வந்துடுச்சு. சரி பண்ணிடலாம். நல்லதையே நினைப்போம். கவலைப்படாமல் போயிட்டுவாங்க” என்று சொன்ன மருத்துவர் அவர்களுக்கு எல்லா டெஸ்டுகளையும் எழுதிக் கொடுத்து அவற்றை எடுக்கவைத்தார்.

எல்லாப் பரிசோதனைகளும் எடுக்கப்படன. இரண்டு நாட்களில் ரிப்போர்ட் கிடைக்கும் என்று அனுப்பிவிட்டார்கள்.

அந்த இரண்டு நாட்களும் மன உளைச்சலுஞன் கழித்தார்கள் மாதவி, மணிமாறன் இரண்டு பேரும். இரண்டு நாட்கள் கழித்து இறைவனிடம் ஆயிரத்தெட்டுப் பிரார்த்தனைகளை வைத்துவிட்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றார்கள் அவர்கள். பாவையும், மணிமேகலையும் ஆண்டவனிடம் பக்தி சிரத்தையுடன் வேண்டிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

மருத்துவர் சிரித்த முகத்துடன் அவர்களை எதிர்கொண்டதைப் பார்த்து அவர்களுடைய மனங்கள் நிம்மதி அடைந்தன. ரிப்போர்ட்டைப் பற்றி அவர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ பெருசா பிராப்ளம் ஒண்ணும் இல்லை. சின்னச் சின்ன பிரச்சினைகள்தான். அதுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாப் போதும். நீங்க சீக்கிரமே ஒரு குழந்தைக்குப்
பெற்றோராகலாம். இப்போ தனித்தனியா ரெண்டு பேரோட ரிப்போர்ட்டையும் எடுத்துப் பாக்கலாம்.

மாதவி மேடமோட ரிப்போர்ட்படி அவங்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லை. நல்ல ஹெல்தியாகவே இருக்காங்க. குழந்தையைத் தாங்கற அளவுக்கு அவங்க கருப்பை சரியா இருக்கு. ஹார்மோன் லெவல் எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கு. அவங்களுக்கு எந்தவிதமான மெடிசினும் தேவையில்லை.

உங்களுக்கு மட்டும் ஒரு மைனர் பிரச்சினை. அதுவும் சரி பண்ணக் கூடியதுதான். உங்களோட ஸ்பர்ம் கவுன்ட் மட்டும், நார்மலை விடக் கொஞ்சம் கம்மியா இருக்கு. அதுக்கான மருந்தை நான் பிரிஸ்கிரைப் செய்யறேன். அதுல நிச்சயமா இம்ப்ரூவ் ஆயிடும். அப்படி ஒருவேளை ஆகலைன்னா அடுத்து என்ன பண்ணறதுன்னு பாக்கலாம். கவலைப்படாமல் நிம்மதியாப் போங்க. இப்போ மெடிக்கல் ஃபீல்டிலயும் எத்தனையோ முன்னேற்றங்கள் வந்தாச்சு. எல்லாத்துக்கும் நம்ம கிட்டத் தீர்வு இருக்கு” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பினார்.

என்னதான் அவர் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசினாலும் தன்னிடம் தான் குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டதில் இருந்து இடிந்து போயிருந்தான் மணிமாறன்.

“ இந்த அநியாயத்தைப் பாத்தயா மாதவி? பிரச்சினை எங்கிட்ட இருக்கு. ஆனால், அம்மா உன்னை வார்த்தைகளால் வதைக்கறாங்க. நீ ரொம்பப் பாவம். எனக்காகத் தானே எல்லாத்தையும் தாங்கிக்கறே? அரசு அண்ணனை மாதிரி சாமர்த்தியம் எனக்கு இல்லை. செழியன் மாதிரிப் படிப்பும் இல்லை. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உனக்கு ஒரு சுகமும் இல்லை. கல்யாணமாகி வந்து நீ என்னிடம் இதுவரை இது வேணும், அது வேணும்னு எதையுமே கேட்டதில்லை. நீ ஆசைப்பட்டது என்னவோ இந்தக் கொழந்தை பாக்கியம் மட்டும்தான். அதைக் கூட நிறைவேத்த முடியாத பாவி நான்” என்று வழியில் மாதவியிடம் புலம்பிக் கொண்டே வந்தான் மணிமாறன்.

“ உங்க கிட்ட எந்தக் குறையும் இல்லை. அதுதான் டாக்டர் சரி பண்ணிடலாம்னு சொன்னார் இல்லையா? நீங்க அவர் சொன்னபடி மருந்து, மாத்திரை ரெகுலரா எடுத்துக்கிட்டாப் போதும். சீக்கிரம் நமக்குக் குழந்தை பாக்கியம் கெடைக்கும். இதையே நெனைச்சு மனசைத் தளர விடாதீங்க. எதுவும் நடக்கும்னு நாம வைக்கற நம்பிக்கை, கடவுள் மாதிரி வேலை செஞ்சு அந்தக் காரியத்தை நடத்தி வைக்கும். இப்போ வீட்டுக்குப் போனதும் எல்லாரும் கேட்டா, முழு விவரங்களும் அவங்க கிட்ட எக்ஸ்பிளெயின் செய்ய வேண்டாம். ரெண்டு பேர் கிட்டயும் எந்தக் குறையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்னு சொல்லிடலாம்” என்றாள் மாதவி. யாராவது ஏதாவது தேவையில்லாத வார்த்தைகளை விட்டால் மணிமாறனின் மனம் இன்னமும் அதிகமாகக் காயப்பட்டுவிடும் என்று பயந்தாள் மாதவி.

“ என்னாச்சு, டாக்டர் என்ன சொன்னார்னு அவங்க கேட்டா எப்படி மாதவி பொய் சொல்லறது? ” என்றான் அந்த அப்பாவி.

“ நான் ஒண்ணும் உங்களைப் பொய் சொல்லச் சொல்லலை. உண்மையை மறைக்கச் சொல்லறேன். ரெண்டுத்துக்கும் வித்தியாசம் இருக்கு. பாதி உண்மையயை மறைக்காமல் சொல்லத்தானே போறோம்? ”

” ம்ம்ம்” என்று சொன்ன மணிமாறன், அதன் பிறகு அமைதியாகவே வந்தான். மாதவியும், தான் சொன்னதைக் கணவன் ஏற்றுக்கொண்டு விட்டான் என்று நிம்மதி அடைந்தாள். ஆனால், அவளுடைய எதிர்பார்ப்பைக் குலைத்து, மணிமாறனின் மனதைக் காயப்படுத்த விதியெனும் ராக்ஷஸன், திருநாவுக்கரசுவின் வடிவில் காத்துக்கொண்டிருந்தான்.

வீட்டிற்குள் நுழைந்தார்கள் இருவரும். வரவேற்பறையில் அவர்களுக்காகவே அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“ என்னடா ஆச்சு மணிமாறா? டாக்டர் என்ன சொன்னாரு ? ” என்று படபடப்பாகவே கேட்டாள் பாவை.

மணிமாறன் பதிலெதுவும் சொல்லாமல் மாதவியின் முகத்தைப் பார்க்க, மாதவியே முந்திக்கொண்டு பதில் கூறினாள்.

“ ஒண்ணுமே பிரச்சினை இல்லைன்னு சொல்லிட்டார்மா டாக்டர். சீக்கிரம் நாங்க ஆசைப்படறபடி குழந்தை பொறந்துடும்னு சொன்னாரு அத்தை” என்றாள் மாதவி. பாவை அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால், திருநாவுக்கரசு ஏதோ சரியில்லை என்று உணர்ந்தான்.

“ நீ என்னவோ நல்ல வார்த்தை சொல்லறே? ஆனா என் தம்பி மொகத்தைப் பாக்கும்போது எனக்கு சந்தேகமா இருக்கு. பேயறைஞ்சது மாதிரி இல்லை நிக்கறான்? எனக்கு என்னவோ நீங்க எதையோ மறைக்க மாதிரித் தோணுது! ” என்றவன், சடாரென்று மணிமாறனின் கையில் இருந்த கவரைப் பிடுங்கி அதிலிருந்த ரிப்போர்ட்டை எடுத்துப் பக்கம் பக்கமாகப் பார்க்க ஆரம்பித்தான். நாகரீகம் இல்லாத அந்தச் செயலைக் கண்டு மாதவி முகம் சுளித்தாள். மணிமேகலைக்குக் கோபம் வந்தது.

“ ஏங்க, அவங்களோட பர்சனல் விஷயத்துல நீங்க எதுக்குத் தலையிடறீங்க? ” என்று துணிந்து கேட்டே விட்டாள். அவன் செய்தது தவறு என்று எல்லோருக்கும் புரிந்தாலும் மணிமேகலை மட்டுமே அதைத் தட்டிக் கேட்டாள்.

“ நீ எதுக்குடி எனக்கு அட்வைஸ் பண்ணைறே? வாயை மூடிக்கிட்டு நில்லு. அண்ணன், தம்பிக்குள்ள என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு? நாளைக்கே என் தம்பிக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்தா அவனைக் குணப்படுத்த வேண்டியது என்னோட பொறுப்பு இல்லையா? எங்க வீட்ல எல்லாம் பொதுதான். பர்ஸனல்னு ஒண்ணுமே கெடையாது” என்று எகத்தாளமாகப் பேசிவிட்டு கவனத்தை ரிப்போர்ட்டில் திருப்பினான் மீண்டும்.

“ அடடா, இப்பத்தான் புரியுது. புருஷன் பேரைக் காப்பாத்த பொண்டாட்டி அவசர அவசரமாப் பூசி மெழுகிருக்கா. அம்மா, உங்க மகன் கிட்டக் கொறை இருக்காம். கிளியரா ரிப்போர்ட்டில் எழுதிருக்காங்க. உங்க மகனோட விந்தணுக்கள் கொறைச்சலா இருக்கறதுனாலதான் இவ்வளவு நாட்களா உங்க மருமக உண்டாகலையாம்” என்று பட்டென்று உண்மையைப் போட்டு உடைத்தவன், தம்பியின் பக்கம் திரும்பினான்.

“ ஏண்டா படிப்பில தான் வீக்கா இருந்தே? வேலையும் கெடைக்கலை. சரி, கடையில உக்காருன்னு அப்பா அந்த வேலையைக் கொடுத்தார். அதிலயும் பிரமாதமா ஒண்ணும் சாதிக்கலை. கல்யாணம் செஞ்சு வச்சோம். பொண்டாட்டியும் தளதளன்னு இருக்கும்போது அதிலயும் தோத்துட்டயேடா? என்னடா ஜென்மம் நீ? ” என்று நேரடியாக அவனைத் தாக்கி விட்டான். அதுவும் மிகவும் கடுமையான வார்த்தைகள் அத்தனையும். அங்கிருந்த அனைவருமே அவன் பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து நின்றார்கள். அதுவும் மாதவியைப் பற்றி அவன் அடித்த கமென்டைக் கேட்டு, மணிமேகலை அருவருப்படைந்தாள்.
தன் தம்பியின் மனைவியைப் பற்றி அண்ணன் பேசும் பேச்சா இது?

புயலுக்குப் பின்னர் அமைதி நிலவியது. அமைதி என்றால் அசாதாரணமான அமைதி. அனைவரின் மனங்களும் கலங்கிக் கிடந்தன. தெளிவாக இருந்த குட்டையில் கல்லை எறிந்து சலனத்தை உண்டுபண்ணிய காரணகர்த்தா, பின்விளைவுகளைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து அகன்றான். மற்றவர்களின் வீழ்ச்சிகளைக் கொண்டாடி, அவர்கள் மனப்புண்களைக் குதறிக் கிளறி வேதனையை அதிகமாக்கும் ஸேடிஸ்ட் மனப்பான்மை கொண்டவன் தன் கணவன் என்று மணிமேகலைக்கு அன்று நன்றாகப் புரிந்தது. மாதவி, மணிமாறன் இருவரையும் கண்டு பரிதாபப்பட்டாள் அவள். மாதவியின் அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டாள் மணிமேகலை. மாதவியோ, மணிமேகலையின் தோளில் சாய்ந்து குமுறிக் குமுறி அழுதாள்.

பெரியவர்கள் இருவரும் நடப்பதைப் பார்த்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் கையாலாகாதவர்களாகவே நின்று கொண்டிருந்தார்கள். பெற்றோர்களாக அவர்கள் இருவரும் செய்யத் தவறியது என்னவென்றால் மூத்த மகனின் வார்த்தைகளால் அவமானப்பட்டுக் கூனிக் குறுகி நின்ற இளைய மகனை அரவணைத்து ஆறுதலாகப் பேசவில்லை அவர்கள்.

“நாங்கள் உன்னுடன் இருக்கிறோம். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நீ மனதைத் தளரவிடாதே” என்று தைரியம் சொல்லத் தவறிவிட்டார்கள் அவர்கள். மணிமாறனுடைய மனம், கீழே விழுந்த கண்ணாடியாகச் சுக்குநூறாக உடைந்து போனது. மணிமேகலையும் மாதவிக்கு ஆறுதல் சொன்னாள். மணிமாறனிடம் எதுவும் பேசவில்லை. அது அவளுடைய தவறும் இல்லை. இந்த விஷயத்தை அவளால் எப்படி மணிமாறனிடம் பேசமுடியும்?

அடுத்த நாள் காலை வழக்கம் போல எல்லோரும் எழுந்திருந்து இயந்திரகதியாக இறங்கினார்கள். திருநாவுக்கரசு எப்போதும் போல மனைவியை அதிகாரம் செய்து அதட்டி மிரட்டி விட்டு வெளியே கிளம்பினான். பாவை, மாதவியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் மாதவியிடம் ஆறுதலாகப் பேசி நம்பிக்கை தர நினைத்தாள் அவள். மாமனாரோ சுரபியை அழைத்துக்கொண்டு கடைவீதிக்குக் கிளம்பினார். சுடரிக்கு லேசாகக் காய்ச்சல் இருந்ததால் நைநையென்று அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு மருந்து கொடுத்துத் தூங்கப் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தாள் மணிமேகலை. தூங்க வைப்பதில் அதிக நேரமாகிவிட்டது.

வெளியே போனவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். திருநாவுக்கரசு மட்டும் வேலைகளை முடித்துக்கொண்டு சாயந்திரம்தான் வருவான் என்று அவர்களுக்குத் தெரியும். மணிமாறன் காலையில் எழுந்துவராததால் அவனுடைய காலை உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்தாள் மாதவி. இரவும் நீண்ட நேரம் அவன் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்ததால் காலையில் அவனை எழுப்ப மனமில்லை மாதவிக்கு. நிச்சிந்தையாகத் தூங்கட்டும் என்று விட்டுவிட்டாள். பாவையும் மருமகளுடன் அன்று மனம் விட்டுப் பேசினாள்.

“ மணிமாறன் பாவம்மா. ரொம்ப நல்ல மனசு அவனுக்கு. யாருக்கும் தீங்கு நினைக்காத அப்பாவி ஜென்மம். அவனோட கொணத்துக்கு நிச்சயமா ஒருநாள் நல்லா வருவான். அதுவரைக்கும் பொறுமையா இரு நீ. நாங்க இருக்கோம் உங்களுக்கு. அவன் மனசு தளர்ந்து போயிடாம நீதான் பாத்துக்கணும். ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டே இரு. ஒரு கொழந்தையைப் பாத்துக்கற மாதிரி நீ, அவனைப் பாத்துக்கோ. திருநாவுக்கரசு பேசினதை மனசுல வச்சுக்காதே. அவன் கெடக்கான். குணம் கெட்டவன். மருமகளுங்க விஷயத்துல நான் கொடுத்து வச்சிருக்கேன். நீங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பொண்ணுங்களா அமைஞ்சுட்டீங்க. மணிமேகலை ரொம்பப் பொறுப்பானவ. அரசு எப்படி இருந்தாலும் மணிமேகலை, உன்னையும் மணிமாறனையும் கடைசி வரை நல்லாப் பாத்துக்குவா. எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு” என்றெல்லாம் பேசியதால், மாதவியின் மனமும் ஓரளவு அமைதியடைந்தது.

டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த சாப்பாடு தொடப்படாமல் இருந்ததால், மாதவி தங்களுடைய அறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி, மூர்க்கத்தனமாக அவளைத் தாக்கியது.

வீலென்று மாதவி அலறிய சத்தம் கேட்டு, எல்லோரும் அங்கே விரைந்தார்கள். முதல் நாள் அவமானப்பட்டுக் குறுகி நின்ற மணிமாறன், அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டான். அந்தக் கணத்தில் மாதவியின் வாழ்க்கைக் கண்ணாடி, சுக்கு நூறா
க உடைந்து சிதறியது.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
160
கண்ணாடி போன்ற மனம்
கல் அடியாக வார்த்தை
குழந்தையின்மை
குறையாக அனைவர் முன்
குற்றம் நக்கல் செய்திட
கலங்கிய நெஞ்சம்
கயிற்றில் தொங்குதோ..... 😭
 
Top Bottom