• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 3

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 3


அருணின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவன் அன்னை உணவறையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, தந்தையோ முகத்தைக் கோபத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்.

அவர்களின் முகங்களைப் பார்த்ததும் ஏதோ சரியில்லை என்று ஆதிநந்தனுக்குப் புரிந்து போனது. எலும்பு முறிவு காரணமாக அருண் கீழிருந்த படுக்கையறையில் தான் இருந்தான். அதனால் நேராக அவனிருந்த அறைக்குள் செல்ல, அவனோ இலக்கேயில்லாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அருண் மற்றும் ஆதிநந்தன் இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள். கல்லூரியும் ஒரே கல்லூரி என்றாலும் வேறு வேறு பிரிவில் பட்டம் பெற்றனர். ஆதிநந்தன் இந்திய குடிமைப் பணிக்குப் பரீட்சை எழுதி இந்திய வருவாய் துறையில் பணியில் இருக்கிறான்.

அருண், தன் தந்தையைப் பின்பற்றி நிதி நிறுவன தொழிலில் இறங்கிவிட்டிருந்தான். ஆதிநந்தனின் அண்ணன், விஷ்ணுநந்தன் கூட அவன் தொழிலுக்கு என்று அருணிடம் உதவி கோரியிருக்கிறான். அதைப் பற்றிய முழு விவரமும் ஆதிநந்தனுக்குத் தெரியாது.

தொழில்முறையில் எதிர் எதிர் துருவங்களான இருவரின் நட்பைப் பார்த்துப் பலரும் வியந்து போவார்கள். ஆனால் இன்று வரையிலும் இருவரும் தொழிலைப் பற்றிப் பேசிக் கொண்டதில்லை. அவர்களுக்குள் இருந்தது நட்பு மட்டுமே.

கூடிய விரைவில் அதற்கும் வேட்டு வைப்பது போல் ஒரு சம்பவம் நடக்கப் போவது குறித்து இருவரும் அறிய வாய்ப்பில்லை.

“அருண்” என அவன் தோள் தொட்டு உலுக்கிய பின்னரே சுயவுணர்வுக்கு வந்திருந்தான் அருண்.

“என்னடா பிரச்சனை? ஏன் அம்மா-அப்பா இப்படி இருக்காங்க?” என அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே ஆதிநந்தன் நண்பனிடம் கேட்க, “எல்லாம் அதே பிரச்சனை தான்டா. ப்ச்ச்... இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லறேன்...” என அவன் முடிக்கவில்லை,

“உனக்கு என்ன தான் பிரச்சனை? நீ நினைச்ச மாதிரி உன் காதல் கை கூடலை. அப்போ வீட்ல சொல்லற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாமே” என ஆதிநந்தன் சத்தம் போட,

இவன் என்ன புரியாமல் பேசுகிறான் என்பதைப் போல் நண்பனை உறுத்து விழித்த அருண், “ப்ச்.. அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா நீயுமா?” எனச் சலித்துக் கொண்டான்.

“அருண், பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. நீ காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உத்திரவாதம் இருந்தா நீ இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லறதுல ஒரு அர்த்தமிருக்கு. வழியே இல்லாத இடத்துக்கு எப்படி உன்னால போக முடியும்? இல்லை, எனக்கு என் காதல் தான் பெருசுன்னு அந்தப் பொண்ணுகிட்டே மனசைத் திறந்து சொல்லி, அவள் வாழ்க்கையில் முன்னாடி நடந்தது எதுவா இருந்தாலும் மறந்திடு” என்றான் ஆதிநந்தன்.

“அது எப்படி முடியும்? என்னால... அதை எப்படிச் சொல்ல முடியும்?” என அவன் வார்த்தைகள் தட்டுத் தடுமாறி விழுந்தன. அருணுக்கு அதில் விருப்பமில்லை என்று புரிந்தது. அந்தளவுக்கு இவனுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது என்றும் ஊர்ஜிதமானது.

கூர்மையாக நண்பனைப் பார்வையால் அளந்த ஆதிநந்தன், “அப்போ வீட்ல சொல்லற பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வேற வழில போ.. முதல்ல உன் கால் சரியாகட்டும்... அப்புறம் சிந்துகிட்ட போய்க் கொஞ்ச நாள் இருந்துட்டு வா...” என அறிவுரை வழங்கினான்.

சிந்து, அருணின் தங்கை. திருமணம் முடிந்து அமெரிக்காவில் வசிக்கிறாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கரோனா தொற்று நோய்க் காரணமாக அவளால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. இப்போது நிலைமை சற்று சீராகவும் கிளம்பி வருவதாகச் சொன்னாள். அவள் பெற்றோர்கள் அருணின் திருமணத்துக்கு வருமாறு சொல்லி அவளைத் தடுத்தி நிறுத்திவிட்டனர்.

ஆகவே அருணை மட்டுமாவது வரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் சிந்து. எல்லாம் அவன் மருத்துவமனையில் இருந்த பொழுது தெரிந்து கொண்ட விஷயங்கள். அதனால் தான் அமெரிக்காவுக்குச் சென்று வருமாறு சொல்லிக் கொண்டிருந்தான் ஆதிநந்தன்.

“பார்க்கலாம்டா..” என அருண் அப்போதும் பட்டும் படாமல் சொல்லிக் கொண்டிருக்க, சரியாக அதே சமயத்தில் சிந்து அருணை அழைத்தாள்.

அழைப்பை எடுத்துப் பேசிய அருணிடம் மீண்டும் அவள் தொணதொணக்க, “கால் சரியாகட்டும்... பார்க்கிறேன்மா” என ஒருவழியாக இறங்கி வந்தான் அருண். நண்பனின் இந்த மாற்றம் ஆதிநந்தனுக்கு நிம்மதியைத் தர, அவன் பெற்றோர்களுக்குத் தைரியம் தந்துவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

****

மறுநாள் காலை. ஆதிநந்தனின் வீட்டில் நேற்றைய கோபத்தின் உக்கிரம் சற்று மட்டுபட்டிருந்தது. அவன் அன்னை எப்போதையும் விடச் சற்று அதிகமாகவே புலம்பிவிட்டார். எப்படியோ அவன் பெற்றோர்களை ஓரளவுக்குச் சமாதானமும் செய்துவிட்டிருந்தான் ஆதிநந்தன்.

“நல்ல இடம். சீக்கிரம் உனக்குக் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருந்தோம்” என ஆதங்கப்பட்ட அவன் அன்னை, இறுதியாக, “சரி.. எது எது எப்போ நடக்கணுமோ அப்போ நடக்கும்” என முடித்துவிட்டார்.

அன்று காலையில் ஆதிநந்தன் புத்துணர்ச்சியுடன் எழுந்து வர, “ஏம்ப்பா ஆதி, நீயாவது உன் அண்ணன்கிட்டே சொல்லக் கூடாதா? பிசினஸ் சரியா போகலைன்னா அதை விட்டுட்டு வேற பார்க்க வேண்டியது தானே?” என அவன் அன்னை இப்போது வேறு விஷயத்துக்குத் தாவி அதைப் பற்றிப் புலம்ப ஆரம்பித்திருந்தார்.

“ஏம்மா, எல்லாத்துக்கும் லீவு விடற மாதிரி, உங்க புலம்பலுக்கு ஒரு நாள் லீவு விடக் கூடாதா? டயர்ட்டா இருக்குமில்ல” என அவரைப் பரிகாசம் செய்தவாறே அவர் தந்த காபியை வாங்கியவன்,

“அம்மா, அண்ணனுக்குத் தெரியாதா? அவர்கிட்ட போய் நான் என்னன்னு அட்வைஸ் பண்ணறது? நீங்க சொல்லியே கேட்காதவர் நான் சொல்லியா கேட்கப் போறார்?” என அன்னையை முறைத்தான்.

“அதில்ல ஆதி... அவனுக்குக் கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகப்போகுது.. இன்னும் குழந்தையில்லைன்னு எல்லோரும் கேட்கிறாங்க. இவனும் பிஸினஸ்னு டென்ஷனா அலையறான்” என அவன் அன்னை முடிக்கவில்லை,

“அம்மா.. ஊர்ல இருக்கிறவங்க ஆயிரம் கேட்பாங்க. அவங்கவங்க வாழ்க்கையை வாழறவங்களுக்குத் தெரியாதா? நீங்க எதுவும் பேசி அண்ணனை டென்ஷன் பண்ணாதீங்க. நீங்க சொன்ன மாதிரி எது எது எப்போ நடக்கணுமோ அப்போ நடக்கும்” என அவன் அன்னை சொன்னதை வைத்தே அவரை மடக்கினான் ஆதிநந்தன்.

“உன்னை...” என அவன் அன்னை முறைக்க, இளஞ்சிரிப்புடன் வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு என்னவோ அவன் அண்ணனை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் சுருக்கென்று கோபம் வந்துவிடும். ஆரம்பத்தில் இருந்தே ஆதிநந்தனின் குணம் அதுவாக இருந்தது. என்னவோ தன் அண்ணனைப் பாதுகாக்கும் பாதுகாவலன் இவன் என்பதைப் போல் நடந்து கொள்வான். அதற்கு ஏற்றாற்போல் விஷ்ணுநந்தன் பரம சாது. இதுவரையில் யாரையும் கோபத்துடன் பேசிப் பார்த்ததில்லை.

எப்பொழுதும் போல் தினசரி செய்தித்தாளில் முகத்தைப் பதுக்கிக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, “என்னப்பா... நியூஸ் எல்லாம் கரைச்சுக் குடிச்சுட்டீங்களா? அம்மாவோட காபியை விட டேஸ்டா இருந்ததா?” எனத் தந்தை கையில் பிடித்திருந்த செய்தித்தாளில் இருந்த செய்தியில் அவன் கவனம் சென்றது.

முகத்தை மட்டும் வெளியே நீட்டி, இளைய மகனைப் பார்த்துப் புன்னகைத்தார் தாமோதரன்.

அவரைப் பார்க்காமல், ‘இளம் பெண் மாரடைப்பால் காலமானார்’ என்ற செய்தியை சுவாரசியமின்றி வாசிக்க ஆரம்பித்தவன், ஏதோ ஓர் உந்துதலில் தந்தையின் கையிலிருந்து வெடுக்கென்று செய்தித்தாளைப் பறித்தான்.

“என்னப்பா, என்கிட்டே கொடுங்கன்னு மரியாதைக்காகவாவது கேட்கலாமே” எனத் தாமோதரன் அவனைச் சீண்ட, அதெல்லாம் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. மும்முரமாகச் செய்தியை வாசித்தவனின் முகம் செக்கச் செவேலெனக் கோபத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தது.

‘என்ன அநியாயம்? செய்வதையும் செய்துவிட்டு இப்படிப் பொய் பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாளா? விடமாட்டேன்டி உன்னை. நீ யார்னு உலகத்துக்குக் காட்டறேன்’ என மனதில் சூளுரைத்துக் கொண்டவன், செய்தித்தாளை அப்படியே போட்டுவிட்டு,

“அப்பா அவசரம்.., இதோ வரேன்” என அவரின் பதிலுக்குக் காத்திராமல் கார்ச் சாவியை எடுத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறினான்.

“பேப்பரைக் கொடுத்ததற்குத் தேங்க்ஸ்பா” எனத் தாமோதரன் கேலி செய்வதைக் கூட உணராதவன் போல் அவன் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தான் ஆதிநந்தன்.

காரைக் கிளப்பியவன், நேற்று சந்தித்த அந்தக் காவலர்களின் எண்களை அழைத்துப் பார்க்க, அவர்கள் இருவரும் அழைப்பை எடுக்கவில்லை. அவர்கள் எந்தப் பகுதி காவலர்கள் என்று சரிவரத் தெரியவில்லை அவனுக்கு. அதனால் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குப் போய் நின்றான்.

“என்ன சார் பிரச்சனை?” என அவனை எதிர்கொண்ட காவலர் ஒருவர் வினவ, செய்தித்தாளில் வந்த செய்தியைப் பற்றிச் சொல்லி, “அது இயற்கை மரணமில்லை. கொலை. நான் பார்த்தேன்” என்றான்.

காலையில் வந்து என்ன புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறான் என அவர் அவனைச் சந்தேகத்துடன் பார்க்க, “சார் நிஜமா சார்... எங்கே நடந்தது என எனக்குத் தெரியும். யார் செஞ்சாங்க என எனக்குத் தெரியும்” என ஃபேஸ்புக் சென்று அருணின் கணக்கு வழியே நேத்ராவின் புகைப்படத்தை எடுத்து அவர் முன்னால் நீட்டினான்.

“என்ன சார் நீங்க? ஒரு பொண்ணைப் போய்க் காட்டறீங்க?” என அவர் புருவம் உயர்த்த, “ஏன் சார் பொண்ணுங்க கொலை செய்ய மாட்டாங்களா?” எனக் கடுப்புடன் வினவினான்.

“சரி.. புகார் எழுதித் தந்துட்டுப் போங்க.. நாங்க விசாரிக்கிறோம்” என அந்தக் காவலர் சொல்ல, “அதற்குள்ள அவங்க தடயங்களையெல்லாம் அழிச்சுட்டுப் போயிடுவாங்க.. என்னோட வாங்க... இதைப் பத்தி நேத்தே நான் புகார் தந்துட்டேன்” என அவசரப்படுத்தினான் ஆதிநந்தன்.

அப்போது அவன் அலைபேசியில் அழைப்பு வர அவசரமாக அதை ஏற்றான். நேற்று அவன் பேசிய காவலர்களில் ஒருவர் தான் அழைத்திருந்தார். அவர் பேசுவதற்கு முன்னரே, அவன் செய்தித்தாளில் பார்த்த விஷயத்தை அப்படியே ஒப்பித்தான்.

“என்ன சார் நீங்க? நீங்க புகார் கொடுத்த கார் நம்பர் பெரிய ஆளுங்களோடது. ஒண்ணு ஆளுங்கட்சி எம். எல். ஏ. வீட்டுக் கார். இப்படி எல்லாம் பொய்ப் புகார் தரக்கூடாது” எனச் சற்று கடினமாகவே பேசினார்.

தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்துத் தன் பணிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள அந்தக் காவலர் விரும்பவில்லை.

“அப்போ அந்தப் பொண்ணு...” என அவன் இழுக்க, “அந்தப் பொண்ணு மேலே எந்தத் தப்புமில்லை. ரோட்ல மயங்கி விழுந்த பொண்ணுக்கு உதவியிருக்காங்க. அப்போ அங்கே வந்த எம். எல். ஏ.வோட ஆட்கள் மயங்கி விழுந்த பெண்ணைக் கூட்டிட்டு மருத்துவமனைக்குப் போயிருக்காங்க. தீவிரமா விசாரிச்சுட்டோம். இது தான் நடந்தது” என்றார்.

இதென்ன இவ்வளவு மெத்தனமாகப் பதில் சொல்கிறார். அவனுக்கு நேத்ரா மேல் ஆத்திரம் வந்தது.

அவளை விடவே கூடாது என எண்ணிக் கொண்டவன், “சார் எங்க இருக்கீங்க? நான் வரேன்” என விவரங்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்த காவலர்களிடம் விஷயத்தைப் பகிர்ந்துவிட்டு அரசு மருத்துவமனை நோக்கிச் சென்றான்.

நெஞ்சம் முழுவதும் நேத்ராவின் மேல் வன்மம் சூழ்ந்து கொண்டது. அவளைச் சிறையில் தள்ளிக் களி சாப்பிட வைக்காமல் விடக் கூடாது எனச் சூளுரைத்துக் கொண்டான்.

குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் சென்று அலைபேசியில் பேசிய அந்தக் காவலரிடம் மீண்டும் நேத்ராவைப் பற்றிப் புகாரளித்தான்.

“என்ன சார் நீங்க? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருச்சு. நீங்களே பாருங்க” என அவர் அதை அவன் கையில் தந்தார். அதில் அப்பெண் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

“இல்லை.. சார்.. நான் பார்த்தேன். அந்தப் பெண்ணோட துப்பட்டாவை வச்சு அவங்க கழுத்தை இறுக்கிட்டு இருந்தாங்க” என அவன் அப்போதும் விடாமல் விவாதம் செய்து கொண்டிருந்தான் ஆதிநந்தன் .

ஆதாரமில்லாமல் எதுவும் செய்ய முடியாது எனக் காவலர் தயங்க, “என்கிட்டேயே நீங்க இப்படி நடந்துகிட்டா, சாதாரணப் பொதுமக்கள்கிட்ட எப்படி நடந்துக்குவீங்க? அவங்களுக்கு உங்க மேலே எப்படி நம்பிக்கை வரும்?” என அவன் சற்று கோபத்துடன் வினவினான்.

“சார்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல கழுத்தை நெரிச்ச மாதிரி எல்லாம் எதுவும் குறிப்பிடலை” எனத் தயங்கினார். தெளிவாக இருக்கும் மருத்துவ அறிக்கையை மீறி அவரால் என்ன செய்ய முடியும்?

“இவ்வளவு பண்ணத் தெரிஞ்சவங்களுக்கு ரிப்போர்ட்டை மாத்தறது பெரிய விஷயமா என்ன?” என வாதிட்டான் ஆதிநந்தன்.

“சரி சொல்லுங்க. என்ன பண்ணலாம்?” என அவனிடமே அந்தக் காவலர் கேட்க, சற்றுநேரம் யோசித்தவன், “நேத்து போன ஹோட்டல்ல இருக்கிற ‘சிசிடிவி’யைப் பார்க்கலாம். நீங்க வந்தா அவங்க உடனே காட்டுவாங்க” என அவரைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து அழைத்துக் கொண்டு அந்த உணவகத்துக்குச் சென்றான்.

‘இவன் சும்மா இருக்க மாட்டான் போல’ என அவன் பதவியும் அந்தக் காவலரை மிரட்ட, எதற்கும் போய்ப் பார்த்துவிடுவோம் என அவனுடன் அரைமனதாகச் சென்றார் .

காவலர் உள்ளே சென்று விசாரிக்க, கடந்த இரண்டு நாட்களாகக் கேமரா பழுதாகிய காரணத்தால் எதையும் பதிவு செய்யவில்லை என்று சொன்னார்கள்.

‘இங்கேயும் அவள் தன் புத்தியைக் காட்டிவிட்டாளா? பெரிய ஆட்கள் பலரையும் தெரிந்து வைத்திருக்கிறாள் போல’ என எண்ணிய ஆதிநந்தனுக்கு ஆத்திரம் பொங்கியது.

“சார்... விசாரிச்ச வரையில அது தற்செயலா நடந்த மாதிரி தான் இருக்கு. நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க” என மருத்துவமனை செல்லும் வழியில் காவலர் மீண்டும் அவனிடம் வலியுறுத்தினார்.

மருத்துவமனை வளாகத்தில் வண்டியை நிறுத்தி காவலர் இறங்கும் வரையில் காத்திருந்தவனின் கண்களில் அவள் பட்டாள். ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்திருந்த நேத்ராவைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்.

அந்த உடையில் இன்னுமே சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். அவள் முகத்தைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைத்தனம் மிக்க முகத்தைக் கண்டால் குற்றம் புரிபவள் போலவா இருக்கிறது உனக்கு?’ எனக் கேட்பார்கள்.

இந்த முகத்தைக் கவசமாக வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறாள் என யாரிடமாவது சொன்னால் நம்பவே மாட்டார்கள் என்று ஆதிநந்தனுக்குத் தோன்றியது. ‘சரியான டிராமா குவீன்’ என முணுமுணுத்தவன்,

“சார்... சார்” என அருகிலிருந்த காவலரை அழைத்து, “நான் சொன்னனில்ல... இறந்து போன பெண்ணோட கழுத்தை நேத்து நெரிச்சுக் கொல்லப் பார்த்தது ஒரு பொண்ணுன்னு. அது அவங்க தான்” என நேத்ராவைச் சுட்டிக் காட்டி உரக்கச் சொன்ன ஆதிநந்தன், காரிலிருந்து அவசரமாக இறங்கினான்.

அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் இறந்து போன பெண்ணின் பெற்றோர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று அந்தக் காவலர் அவனிடம் சொல்ல, ‘என்னது?’ என்பதைப் போல் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

பேசியவாறே அவர்களை நோக்கி இருவரும் செல்ல, காலடி அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் நேத்ரா. ஆதிநந்தனின் மேல் அவள் பார்வை சில கணங்கள் படிந்து மீள, “நேரமாச்சு... பார்த்துக்கோங்க ” என இறந்தவளின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு ஆதிநந்தன் அங்கே செல்வதற்குள் அங்கிருந்து விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

செல்லும் அவளையே முறைத்துப் பார்த்த ஆதிநந்தன், இறந்தவளின் பெற்றோர்களிடம் ஆறுதல் மொழி சொன்னான். பார்வை மட்டும் இன்னும் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் நேத்ராவை விட்டு எங்கும் அகலவில்லை.

“என்னங்க சார் செய்யறது? நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி. திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு” என அழுகையில் அப்பெண்ணின் பெற்றோர்கள் குலுங்கினார்கள்.

“அம்மா, நீங்க பயப்படாம சொல்லுங்க.. என்ன நடந்து இருந்தாலும் உங்களுக்கு நான் நியாயம் வாங்கித் தரேன்” என்றான் ஆதிநந்தன். அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக் கூட அவர்கள் உணரவில்லை.

“நடந்தது நடந்துடுச்சு... என்ன செஞ்சு என்ன பண்ணறது? அவ திரும்பியா வரப் போறா” என அவர்கள் அழுகையில் குலுங்க, அப்போது தான் அவர்கள் கையில் இருந்ததைப் பார்த்தான். நேத்ரா தந்த பணத்தை வாங்கிக் கொண்டு தங்கள் மகளின் மரணத்தை மூடி மறைக்கத் துணிந்துவிட்டார்களே என வெகுண்டான்.

“சார்... சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்குத் தெரியாததில்லை. சும்மா யாரையும் குழப்ப வேண்டாம் சார். உங்க சொந்த பகையை இப்படி எல்லாம் காட்டாதீங்க” என அவனுடன் வந்த காவலர் அவனைத் தனியே அழைத்துத் தயங்கி தயங்கிச் சொல்ல, முகத்தைத் திருப்பிக் கொண்டான். கை முஷ்டியை இறுக்கித் தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.

அம்புகளை எய்துவிட்டு சென்றுவிட்டாள். அவளை விட்டுவிட்டு அம்புகளை நொந்து என்ன பயன்? மருத்துவனை வாசலில் அவள் ஏறிச் செல்லும் கார் கண்களில் பட, அவளையே முறைத்துப் பார்த்தான்.

‘என் கண்ணுல மட்டும் நீ பட்டுடாத. அப்படி மட்டும் பட்டேன்னா... உன் முடிவு என் கையில தான். நீ என்கிட்டே மாட்டுவ அப்போ உனக்கு இருக்குடி. உன்னை விட மாட்டேன். உன்னையும் உன்னைச் சேர்ந்தவங்களையும் உள்ளே தள்ளறேன்” எனச் சூளுரைத்தவனுக்குப் பழியுணர்ச்சி விண்கலம் ஏறி விண்ணுக்குச் சென்றது.

தொடரும்...
 

Author: Pochampalli
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom