• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நான் போடுற கோட்டுக்குள்ளே -4

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
303
நான் போடுற கோட்டுக்குள்ளே - 4

நண்பர்கள் தனது வேலை மட்டும் சம்பளத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று ஏற்கனவே யோசித்து வைத்திருந்த சுபிக்ஷா அந்தக் கேள்வியைப் பல கோணங்களில் எதிர்கொண்ட போது பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

"ஹேய் கைஸ்! என்னப்பா நான் நேர்ல தான் சொல்லணும்னு சர்ப்ரைஸா வச்சிருந்தேன். இதுக்குப் போய் இவ்வளவு கோபப்படறீங்களே. இது ஃபோன்ல சொல்ற விஷயமா? அப்படியே சொன்னாலும் நீங்க உடனே நேர்ல பாக்கணும், ட்ரீட் வேணும்னு சொல்லுவீங்க. அது போக நான் எல்லாருக்கும் தனித்தனியா சொல்லி யாருக்கு முதல்ல சொன்னேன்னு ஆரம்பிச்சு நமக்குள்ள ஏதாவது மிஸ்அண்டர்ஸ்டான்டிங் ஆகிப் போச்சுன்னா என்ன பண்றது.

என்னைப் பொறுத்தவரை நாம எல்லாரும் ஒன்னு தான். எல்லாருக்கும் ஒரே நேரத்தில சொல்லலாம்னு தான் இந்த அவுட்டிங்கையே பிளான் பண்ணினேன். அங்கே போய் ஒரு ட்ரீட்டோட சொல்ல நினைச்சேன். இவன் போட்டு உடைச்சிட்டான்" என்று நிதானமாகக் கூறியவள் ஏன் இப்படி என்பது போல அந்த நண்பனை முறைத்தாள்.

ஆளாளுக்கு விதம் விதமான பாவனைகளைக் காட்டினாலும் நண்பர்கள் அனைவரும் ஓரளவு சமாதானம் ஆனது போலத் தான் தெரிந்தது. அதற்கு ஆதாரமாக சிலர் கோரஸ் பாடினார்கள்.

"அப்போ ஓகே. இன்னைக்கு மொத்தமும் உன்னோட ட்ரீட் தான். நாங்க எல்லாரும் இன்னொரு நாள் தரோம்."

அதற்குத் தயாராகவே வந்திருந்த சுபிக்ஷா, "டன்.. இப்போவாச்சும் கிளம்பலாமா? இல்ல இங்கேயே நின்னு பேசிட்டே இருக்கலாமா? அப்படியே சாப்பாட்டு நேரம் வந்துடும். எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நேரா எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய் எல்லாருக்கும் தயிர் சாதம் கொடுத்து ட்ரீட்ட முடிச்சிடுவேன். எனக்கும் செலவு மிச்சம்" என்று கூலாகச் சொல்ல மற்றவர்கள்,

"தயிர் சாதமா??? ஆத்தா! பரதேவதை!! நீயே இப்படிச் சொல்லலாமா? நீ வாங்கப் போற ஒரு மணி நேர சம்பளம் கூட இன்னைக்கு செலவாகாது. நீ சாப்பிடாமல் வேணாலும் இரு. ஆனால் எங்களுக்கு ஊர்வன, பறப்பன, நடப்பனன்னு விதம் விதமா வேணும். உன்னை நம்பி தான் இரண்டு நாளா பட்டினி போட்டு வயித்த ஃபுல் கேபாசிட்டில வச்சிருக்கோம். அதுல மண்ணள்ளிப் போட்டுடாத. உனக்கு புண்ணியமா போகும்" என்று அலறினார்கள்.

'அப்போ வாயை மூடிட்டு வண்டில ஏறுங்க' என்பது போல சைகை காட்டியவளை எதுவும் செய்ய முடியாமல் அனைவரும் அடுத்த நிமிடமே வண்டியில் செட்டிலானார்கள். ஏற்கனவே பிளான் செய்தபடி ஈசிஆர் ரோட்டில் இருந்த ஒரு ரிசார்ட் நோக்கிப் பயணப்பட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஈசிஆர் ரோட்டில் இருக்கும் ரிசார்ட்டுகள் அனைத்தும் சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. குடும்பத்தில் நடக்கும் பிறந்த நாள் விழாவோ, கம்பெனி டீம் அவுட்டிங்கோ இல்லை பால்ய நண்பர்களின் சந்திப்போ நாள் பூராவும் ஏதோ ஒரு ரிசார்ட்டில் "என்ஜாய்" செய்வது வழக்கமாகிப் போனது. சில ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை எல்லா பட்ஜெட்டிலும் ரிசார்ட் கிடைக்கும்.

இப்படியாக சுபிக்ஷா நண்பர்களுடன் தனது நாளைச் சந்தோஷமாகக் கழிக்க அவளது பெற்றோரோ ரங்கராஜனின் குடும்பத்தினரிடம் சிக்கி பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்றனர். எதிர்பார்த்தபடியே சுபிக்ஷா கிளம்பி ஒரு மணி நேரத்தில் அண்ணாநகரில் மையம் கொண்ட நங்கநல்லூர் புயலை எப்படி வரவேற்பது என்று கூடத் தெரியாமல் அனுராதாவும் ரங்கராஜனும் அமைதியாக நின்றனர்.

பத்மாசனி வேறு விஷயம் தெரிந்ததில் இருந்து வாய் திறந்து எதையும் பேசவே இல்லை. மிகவும் அமைதியாக இருந்தார். அவர் எப்படி உணர்கிறார் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.

உண்மையில் அவரது மனம் மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தது. ஒரே வீட்டில் இருந்து கொண்டு எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள்.பேத்தியோ மருமகளோ சொல்லாவிட்டால் கூட பரவாயில்லை. பெற்ற பிள்ளை கூட என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்று மிகுந்த வருத்தம் அவருக்கு. மிஞ்சிப் போனால் என்ன செய்திருப்பார், விஷயம் தெரிந்த உடன் நிச்சயம் சந்தோஷப் பட்டு ஊரெல்லாம் என் பேத்தியைப் போல் உண்டா என்று தம்பட்டம் அடித்திருப்பார்.

அந்த சந்தோஷத்தை அனுபவிக்கக் கூட அவருக்கு உரிமை இல்லையா என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. தனக்குள் உழண்டு கொண்டு இருந்தவரும் அவரது பெண்ணை வரவேற்கவில்லை.

"ரொம்ப நன்னா இருக்கு, கூடப் பிறந்தவள வான்னு கூப்பிடக் கூட மனசு வரலையா. ஏண்ணா! இப்போவே இப்படி இருந்தால் போகப் போக நாங்க யாருன்னு கேட்பேள் போல இருக்கே. அழையாத ஆத்துல காலெடுத்து வைக்கக் கூடாது தான். ஆனால் என்ன பண்றது, இது என் பொறந்தாம் ஆச்சே" என்று படபடத்தபடி உள்ளே நுழைந்தாள் கீதா, ரங்கராஜனின் முதல் தங்கை. யாரும் அழைக்காவிட்டாலும் எனக்கு உள்ளே வர உரிமை இருக்கிறது என்றது அவளது செயல்.

அவளது சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த பத்மாசனி 'வா' என்பது போலத் தலையசைத்து விட்டுத் தனது மௌனத்தைத் தொடர்ந்தாள். அவளும் புலம்பிய படி சென்று தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள். கூடவே, "வந்தவளை வான்னு தான் கூப்பிடலை. ஒரு வாய் தீர்த்தம் தரக் கூட முடியாதா? இல்லை அதையும் நானே போய் எடுத்துக்கணுமா?" என்று அண்ணன் மனைவியை முறைத்தாள்.

சட்டென்று நிகழ்வுக்கு வந்த அனுராதா, "வாங்கோ அக்கா!" என்று சம்பிரதாயமாக அழைத்து விட்டு உள்ளே சென்று மறைந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த ரங்கராஜனை தங்கையின் கேள்வி நிகழ்காலத்தில் இழுத்து வந்தது.

"என்ன அண்ணா? நீ இன்னும் எந்த உலகத்தில் சஞ்சாரம் பண்ணிண்டு இருக்க? ஏதோ புதுசா கல்யாணம் ஆனவன் மாதிரி ஆத்துக்காரி பின்னாடியே பார்வை போறது." கீதாவின் குரலில் ஏகத்துக்கும் நக்கல் கலந்திருந்தது. அவளது அண்ணனோ அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.

"ம்.. வா கீதா. என்ன திடீர்னு எங்க ஞாபகம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, என்ன விசேஷம்" என்று நிதானமாக தங்கையை விசாரிக்க ஆரம்பித்தார்.

அதற்குள் அனுராதா தீர்த்தம் மற்றும் காபியுடன் வந்திருக்க, அதைக் குடித்து விட்டுத் தெம்பாக பேச்சை ஆரம்பித்தாள் கீதா.

"பாத்தியாம்மா, என்ன ஒரு சாமர்த்தியம்? என்ன விசேஷம்னு கேட்கிறான்?" என்று தாயைத் துணைக்கு அழைத்தாள். ஆனால் அவரோ, நீ என்ன சொன்னாலும் நான் வாயைத் திறப்பதாக இல்லை என்று இறுக்கமாக அமர்ந்து கொண்டார்.

அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அவரது மகளோ தாயின் மனதில் இருப்பதை அறியாது தூபம் போட்டுக் கொண்டு இருந்தாள். மகளுக்கு வேலை கிடைத்த விஷயத்தை உடன் பிறந்த தங்கைக்கு எப்படிச் சொல்லாமல் போகலாம் என்று நியாயம் கேட்டாள். 'பெத்த தாய், ஒரே ஆத்துக்குள்ள இருக்கேன். அதுவும் இருபத்து நாலு மணி நேரமும் இங்கேயே தான் இருக்கேன். எனக்கே சொல்லலயாம்' மனதுக்குள் நொந்து கொண்டு அமைதியாக இருந்தார் பத்மாசனி.

அவரது மனம் போராட்டத்தை அறியாத மகளோ தனது புலம்பலைத் தொடர்ந்தாள். அவளுக்கு சுபிக்ஷாவைத் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறாள். ஆனால் அந்த மகனுக்கும் சுபிக்ஷாவிற்கும் இடையே அப்படி ஒரு பந்தம், அதாவது திருமணத்தில் இணையலாம் என்ற அளவிற்கு ஒரு ஈர்ப்பு ஏற்படவே இல்லை என்பது தான் உண்மை.

அனுராதா அதை அறிந்த நாள் முதல் நாத்தனாரிடம் இருந்து தள்ளியே இருக்கிறாள். இத்தனைக்கும் ஹரி நிறம், மணம், குணம் நிறைந்த எல்லாவிதத்திலும் பெர்ஃபக்ட்டான பையன். அவனைப் போல ஒரு வரன் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் தான். ஆனால் திருமணம் என்பது ஒரு பெண்ணையும் ஆணையும் மட்டுமே சார்ந்து இருப்பதில்லையே. இரு குடும்பங்களின் இணைப்பு அல்லவா.

நல்ல வேளையாக ஹரியின் சகோதரிக்குக் கூட தாயின் குணம் வந்துவிடவில்லை. அந்த வகையில் மகனின் திருமணத்திற்குத் தடையாக இருப்பது அவனது தாயின் சில சிறப்பான குணநலன்கள் மட்டுமே. இதை அவள் அறிந்திருக்கிறாளோ என்னவோ அனுராதா நன்றாகவே அறிந்திருந்தாள். விளைவு நாத்தனார் வந்தாலே பொதுவான விஷயங்களை மட்டுமே பேச ஆரம்பித்தாள், மகளைப் பற்றிய எந்தப் பேச்சும் இருக்காது.

அண்ணன் மனைவியின் உதாசீனம் தெரியாதது போலவே நாத்தி பையனின் பிரதாபங்களைச் சொல்வதையும் அவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்றும் விதம் விதமாக விம் போட்டு விளக்குவதை நிறுத்தியதே இல்லை.

ஆனால் இன்றோ அப்படி எதையும் பேசவே தயக்கமாக இருந்தது. கூடுதலாக ஒரு பயம் வேறு. முதல் வேலையே இத்தனை பெரிய கம்பெனியில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கப் போகிறவளின் முன்னேற்றம் எந்த மாதிரி இருக்கும், அதற்கேற்ற வரனைத் தானே தேடுவார்கள் என்று தோன்றியது.

இத்துணைக்கும் ஹரி ஒன்றும் சாதாரணமானவன் அல்ல. அவனும் ஐஐடியில் படித்தவன் தான். அவர்களது குடும்பத்தில் இருந்து முதலில் ஐஐடி போனவன் அவன் தான். சொல்லப் போனால் இத்தனை நாட்களாக அதில் அதிக பெருமை அடைந்திருந்த அவனது தாய், சுபிக்ஷா ஐஐடியில் நுழைந்த போது போட்டிக்காகவே பெண்ணை ஐஐடியில் சேர்க்கிறார்கள் என்றாள்.

அப்போது கூட, என்ன இருந்தாலும் என் பிள்ளை தான் முதலில் போனான் என்று அலட்டிக் கொண்ட கீதா இப்போது சுபிக்ஷாவின் சம்பளம் தெரிந்து ஆடிப் போனாள்.

ஆக, சுபிக்ஷா ஐஐடியில் படித்தது பிரச்சினை இல்லை. கிட்டத்தட்ட ஐந்தாறு வருட அனுபவத்திற்குப் பின்னர் அவள் பிள்ளை வாங்கும் சம்பளத்தை சுபிக்ஷா ஆரம்பத்திலேயே வாங்கப் போவது தான் பிரச்சினை.

வெகு நேரமாகத் தானே புலம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்த பத்மாசனியின் புதல்வி தாயைத் துணைக்கு அழைத்தாள்.

"அம்மா! நீ வாயைத் திறந்து ஏதாவது பேசேன். ஏம்மா இப்படி வாய்க்கு ஜிப் போட்ட மாதிரி இருக்க? அதனால தான் உனக்கு இங்கே மரியாதையே இல்லை. நீ என்ன நினைக்கிறேன்னு யாரும் கண்டுக்கறதே இல்லை. இப்படியே போனால் நீ யாருன்னு இவா கேட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை"

இப்படியாக கீதா, காலை பத்து மணிக்கு ஆரம்பித்த கச்சேரியை அனுராதா செய்த மதிய உணவையும் சாயங்கால டிபனையும் சாப்பிட்டு தெம்பாகத் தொடர பத்மாசனியோ சாப்பிடுவதைத் தவிர வேறு எதற்கும் வாயைத் திறப்பேனா என்று இருந்தார். ரங்கராஜனும் அனுராதாவும் எதையும் பேசாமலே பகல் முடிந்து இரவு வந்து சேர்ந்தது.

இரவு எட்டு மணி வாக்கில் சுபிக்ஷா வீட்டில் காலடி எடுத்து வைத்த போது, "எட்டு மணி ஆறது. ஊர் சுத்தப் போன பொண்ணு இன்னும் வந்தபாடில்லை. நன்னாத் தான் வளத்திருக்கா" என்று அவளது அத்தை கீதாவின் குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லாம் அவளைப் பார்க்கும் வரை தான்.

உள்ளே நுழைந்த சுபிக்ஷா செய்த காரியத்தில் அவளது பாட்டியின் வாய்ப்பூட்டு திறக்க அத்தையோ ஒரு படி மேலே போய், "அதானே பாத்தேன், எங்க ஆத்து வளர்ப்பு அப்படி" என்று ஒரேயடியாக பல்டி அடித்தாள்.

"எப்பூடி?" என்று கண்ணடித்த மகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர் அவளைப் பெற்றவர்கள்.

—-----

"ஷால் வி கோ ஃபார் எ டின்னர் டேட் டுமாரோ?" என்ற ஐஸ்வர்யாவின் கேள்வி ஏனோ சம்பத்திற்கு அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை. லண்டனில் பிறந்து அதன் நாகரீகத்தை மட்டுமே ஊட்டி வளர்க்கப்பட்ட அவள் இப்படிக் கேட்காவிட்டால் தான் ஆச்சர்யப் பட்டிருப்பான். ஆனாலும் திடீரென வீட்டுப் பெரியவர்கள் அத்துணை பேரின் முன்னிலையில் காதில் விழுந்த கேள்வியில் அவன் ஆடிப் போனது நிஜம்.

அதை நினைத்த போதே குடித்துக் கொண்டிருந்த காஃபி புரையேறி விடாமல் இரும ஆரம்பித்தான். "பக்கத்துல தானே தீர்த்தம் இருக்கு. எடுத்துக் குடியேன்டா" என்ற தேவிகாவின் கட்டளைக்கு இணங்க அரைலிட்டர் தண்ணீரைக் கடகடவென்று குடித்தாலும் இருமல் அதிகமானதே தவிர அடங்கவே இல்லை. அதைக் கண்ட ராஜலக்ஷ்மி வேகமாகப் பேரனிடம் வந்தார். கண்களில் தண்ணீர் வர இருமியவனின் முதுகைத் தடவிக் கொண்டே அருகில் நின்றார்.

"இந்தா, இன்னும் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிடு. நிதானமா தொண்டைல விட்டுக்கோ" என்று தண்ணீரை எடுத்துக் கொடுத்தார். அதற்குள் சேஷாத்ரியும் பேரனின் அருகில் வந்திருக்க, "அப்படி யாருடா காலங்காத்தால உன்னை நினைச்சிக்கறா? இப்படி விடாமல் இருமிண்டு இருக்க?" என்று தனது அதிமுக்கியமான சந்தேகத்தை எழுப்பினார் பாட்டி.

"அதானே! அப்படி யாருடா எனக்குத் தெரியாமல் உன்னை நினைக்கிறது?" என்று தாத்தா பேரனை வாரினார். பேத்தி கேட்ட கேள்வியின் தாக்கத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தார் அவர். ஆனால் அவரது பேத்தியோ விடாக்கண்டியாக இருந்தாள். அவரது முயற்சிகளைத் தன் பேச்சால் முறியடித்தாள்

"ஹேய் சம்பத்! வாட் இஸ் திஸ் டிராமா மேன்? நான் ஒரு கேள்வி கேட்டேன். அதுக்கு பதில் சொல்ல வேண்டியவன் நீ. ஆனால், நீ ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி ஆக்ஷன் கொடுக்கறே. மத்தவா எல்லாரும் ஒரு ஷாக் ரியாக்ஷன் கொடுக்கறா? I don't understand why you people are over reacting?" என்று தோளைக் குலுக்கினாள்.

சற்று நேரம் எல்லாரும் மறந்திருந்த அவளது கேள்வியை அவளே ஞாபகப் படுத்தி விட அனைவரது முகங்களும் மாறின. அவளைப் பெற்ற தாயோ, சம்பத்தின் வாயில் இருந்து வரும் பதிலுக்காகக் காத்திருந்தாள். மற்றவர் எல்லாம் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருந்தனர்.

அவளது கேள்வியை ஞாபகத்தில் கொண்டு வந்த ராஜலட்சுமி பாட்டிக்கோ டுமாரோ டின்னர் இந்த வார்த்தைகள் மட்டுமே புரிந்தது.

"ஏன் டா ராஜா? டின்னர் சாப்பிட தானே கூப்பிட்டா, அதுவும் நாளைக்குத் தானே கேட்கறா. எல்லாரும் நாலு நாள் கழிச்சு தானே ஊருக்குப் போகப் போறா. சின்னவா எல்லாரும் போயிட்டு வாங்களேன். ஏதோ பிஸ்ஸா, பர்கர் எல்லாம் சொல்லுவேளே அதையெல்லாம் விட்டு நல்ல ஓட்டலா பார்த்து சத்தான ஆதாரமா சாப்பிட்டு வாங்கோ" என்று தீர்ப்பெழுதிய ராஜி பாட்டியை விஷயம் தெரிந்த அனைவரும் பாவமாகப் பார்த்தனர்.

"இவ ஒருத்தி, இவளோட அரைகுறை இங்க்லீஷை வச்சிண்டு என் உயிர வாங்கறா" என்று புலம்பிய சேஷா தாத்தா மனைவிக்கு பேத்தியின் கேள்வியை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் முழித்தார்.

அதற்குள் தாயின் அருகில் வந்திருந்த அவரது இளைய மகள் கனகவல்லி அவருக்குப் புளி போட்டுப் புரிய வைக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள். தாயின் அருகில் வந்து அமர்ந்து காதுகளில் ரகசியமாக உரைத்தாள்.

"ஐயோ அம்மா! அவ ஒன்னும் அவனை ஹோட்டலுக்கு சாப்பிடக் கூப்பிடல.. பழகிப் பார்க்கலாம் வரியான்னு நம்ம சம்பூவ கூப்பிடறா. அதான், அந்த சிவாஜி படத்தில ரஜினிகாந்த் ஸ்ரேயாவ கூப்பிடுவாறே அந்த மாதிரி."

"..." மகளின் விளக்கத்தைக் கேட்டு நெஞ்சில் கை வைத்துக் கொண்டார்ராஜி. மகள் மேலும் தொடர்ந்தாள்.

"அவ இருக்கிற ஊர்ல இதெல்லாம் சகஜம் மா. நாலு பேர் கிட்ட பழகிப் பார்த்து ஒத்து வருவானான்னு தெரிஞ்சாத் தான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிப்பா."

"அப்பவும் யோசிக்கத் தான் செய்வாளா? எப்போ தான் கல்யாணம் பண்ணிப்பா?" என்று ராஜி மேற்கத்திய நாகரீகத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தார்.

பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டி, அவருடைய நல்லது கெட்டது எல்லாவற்றிலும் முகம் சுளிக்காமல் கூட நடந்து அறுபதாவது திருமண நாளைக் கொண்டாடும் பெண்மணிக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதே ஆச்சரியம் தானே. தாயின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்ட இளைய மகள் தனது விளக்கத்தைத் தொடர்ந்தாள். அதாவது, அக்கா மகளின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றும் சேவையைச் சிறப்பாகச் செய்தாள்.

"இதுக்கே ஷாக் ஆனா எப்படி மா? எங்க வாழ்க்கையை நாங்க தீர்மானிக்க உரிமை இல்லையான்னு கேள்வி கேட்பா. இப்படித்தான் வாழ்க்கையை ரசிச்சு வாழறதா அவா சொல்றா."

"அது சரி.. இப்படி ஏற்கனவே அவ பழகிப் பார்த்துப் பண்ணின்ட கல்யாணம் என்ன ஆச்சு?" என்று தனது அதிமுக்கியமான சந்தேகத்தை எழுப்பினார் ராஜலக்ஷ்மி. அவரது பார்வை பேத்தியை எரித்து விடும் போல இருந்தது.

"ஏம்மா உன் சந்தேகம் எல்லாம் இன்னும் தீரலையா?" என்று அலுத்துக் கொண்டாலும் கனகவல்லிக்கு ஐஸ்வர்யாவின் வாழ்க்கையை விமர்சிப்பதில் ஏக குஷியாக இருந்தது.

"அவா எல்லாம் அப்படியே கல்யாணம் பண்ணிண்டாலும் பிடிக்கலேன்னா உடனே டாட்டா தான். அப்புறம் அடுத்து வேற ஆளைப் பார்த்துப் பழக வேண்டியது தான்."

"அந்த நாட்டு மனுஷாளுக்கு அது சரியா இருக்கலாம். ஆனா நாம அங்க பொழைக்கத் தானே போயிருக்கோம். நம்ம கலாச்சாரத்தை விட்டு வேண்டாத விஷயத்தை எல்லாம் ஏன் பிடிச்சுக்கணும்?" என்று அங்கலாய்த்தார் ராஜி.

"அதைப் பத்தி பெத்தவாளே அக்கறைப் படாத போது.. நீ எதுக்கும்மா ஃபீல் பண்ற? நீ சொன்னா அவ கேட்டுக்கப் போறாளா என்ன?" இளையவள் தாயை மேலும் தூண்டிவிட்டாள். ஒரு வேளை இவளுக்கும் சம்பத்தை மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ளும் எண்ணம் இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது அவளது தாய்க்கு.

"அவ விஷயத்தில நான் தலையிடல.. ஆனால் என் பேரன் விஷயத்தில நான் தான் முடிவெடுப்பேன். அவனைப் பெத்தவாளே என்னைத் தாண்டித் தான் அவன் கிட்ட போகணும்" என்று இளைய மகளுக்கும் ஒரு குட்டு வைத்தார்.

'அச்சோ! அம்மா நம்மளைக் கண்டு பிடிச்சிட்டா போல இருக்கே' என்று மனதுக்குள் புலம்பியவள் வெளியே அசடு வழிந்தாள்.

"அதைத் தான் நானும் சொல்றேன் மா.. மத்தவாள விட சம்பூ விஷயத்தில உனக்கில்லாத ரைட்ஸ் யாருக்கு இருக்கு. அண்ணாவோ மன்னியோ நீ சொன்னா சரின்னு கேட்டுக்கப் போறா. ஆனால் இப்போ நீ எதுவும் பேசாத. கோமளா சும்மாவே கோவப்படுவா. இப்போ நீ பேசினா இன்னும் பிரச்சினை ஆகிடப் போறது. நல்ல நாளும் அதுவுமா உனக்கு மனசு சங்கடம் எதுக்கு? அதனால நீ பேசாம இரு. சம்பூவே ஐஸ்வர்யாக்கு பதில் சொல்லட்டும்"

கனகவல்லியின் பேச்சை உள்வாங்கிய ராஜலக்ஷ்மி பேத்தியையும் மூத்த மகளையும் ஒரு தீப்பார்வை பார்த்தார். குழம்பிய முகத்துடன் அமர்ந்திருந்த முரளிதரனையும் தேவிகாவையும் பார்த்தவர் கண்களால் அவர்களுக்கு ஏதோ சேதி சொன்னார். பிறகு நிதானமாகப் பேரனிடம் ரகசியம் பேசினார். ஐஸ்வர்யாவைப் பற்றிய அவனது அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டார்.

பேச்சின் முடிவில், "இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியலை. நீயே ஒரு நல்ல பதிலா சொல்லிடு டா ராஜா" என்று பந்தைப் பேரனிடமே உருட்டி விட்டு அமைதியாக மருமகளின் அருகே சென்று அமர்ந்து கொண்டார்.

சற்று நேரம் அங்கே ஒரு அசாதாரண அமைதி நிலவியது.‌ சம்பத் அங்கே இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஐஸ்வர்யாவைப் பார்த்தான். அவன் வாயைத் திறக்கும் நேரம் வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதனைத் தொடர்ந்து ஒரு மழலைக் குரல் சத்தமாக ஒலித்தது.

"ராஜி பாட்டி!! சேஷூ தாத்தா! ஸ்ரேயூ வந்துட்டேன். நீ எங்கே இருக்கே?" கத்திக் கொண்டே ஓடி வந்த அந்த நாலு வயதுச் சிறுவன் ஹாலில் நிலவிய நிசப்தத்தைக் கண்டு திகைத்து நின்று விட்டான். அந்த வீட்டில் இத்தகைய அமைதியைப் பார்த்திராதவன் என்பதால் முகவாயில் ஒற்றை விரலை வைத்து அனைவருக்கும் என்ன ஆயிற்று என்று ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அனைவரின் பார்வையும் அவனது மாமா மேல் இருந்ததில் அவனது பார்வையும் திரும்பியது. "ஹை… மாமாஆஆஆ நீ ஊர்ல இருந்து வந்தாச்சா?" என்று குதித்துக் கொண்டு வந்து சம்பத்தின் மேல் வேகமாக ஏறி அமர்ந்தான். "நான் கேட்ட ட்ரோன் வாங்கிண்டு வந்தியா?" என்று ரகசியமாக மாமனின் காதில் அவன் கேட்ட கேள்வி ஹாலில் நிலவிய அமைதியால் எல்லார் காதிலும் விழுந்து புன்னகையை வரவழைத்தது.

"வாங்கிண்டு வந்துட்டேனே. ஆனால் மாமாவோட கண்டிஷன் ஞாபகம் இருக்கா?" என்றதும் குழந்தையின் முகம் ஒரு நொடி சுணங்கிப் பின் தெளிந்தது.

"ம்ம். நன்னா ஞாபகம் இருக்கே. ஸ்ரேயூ குட் பாயா இருக்கான்னு அம்மா சொன்னா தான் தருவே. சரியா" என்றவன் வாசலை நோக்கிக் கத்தினான்.

"அம்மாஆஆ சீக்கிரம் இங்கே வா. ஸ்ரேயூ குட் பாய் தானே.. மாமா கிட்ட சொல்லு.. சீக்கிரம் வா"

"ஷ்ஷ்.. ஸ்ரேயூ! இப்படி சத்தம் போட்டா குட் பாய் கிடையாது" என்று சம்பத் மருமகனுக்குப் பாடம் எடுத்துக் கொண்டு இருக்க, "எதுக்கு டா இவ்வளவு சத்தம் போடற. அம்மா வந்துண்டு தானே இருக்கேன்" என்றபடியே அவனது தாய் வேகமாக உள்ளே வந்தாள்.

"வா வா ஸ்ரீ.. பார்த்து வா, எதுக்கு இவ்வளவு வேகமா நடக்கற?" என்று அனைவரும் பதற சேஷா எழுந்து பேத்தியை நோக்கிப் போனார். அவளது மேடிட்டிருந்த வயிறு அனைவரையும் பதற வைத்தது. ராஜஸ்ரீ, முரளிதரன் தேவிகா தம்பதியரின் சீமந்த புத்திரி. பாட்டியின் பெயரைக் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி வைத்திருந்ததால் அனைவருக்கும் ஸ்ரீயாகிப் போனவள்.

எல்லாரும் அவளை விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் வாசற்படி ஏறிய ஆளைப் பார்த்து சம்பத் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தான்.

அதோடு நிற்காமல் "அட என்ன ஒரு அதிசயம்!" என்றபடி மடியில் இருந்த ஸ்ரேயாஸையும் தூக்கிக் கொண்டு அவசரமாக வாசலுக்குச் சென்று மேலே அண்ணாந்து பார்த்தான்.

என்ன காரணம் என்று தெரியாமல் வாசலைப் பார்த்த அனைவரும் விஷயம் புரிந்தவராக
ப் புன்னகைத்தார்கள்.

தன்னைக் கண்களால் கேலி செய்யும் மைத்துனனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தபடி உள்ளே வந்தான் அரவிந்த், ராஜஸ்ரீயின் கணவன்.
 

Author: SudhaSri
Article Title: நான் போடுற கோட்டுக்குள்ளே -4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom