- Joined
- Jun 17, 2024
- Messages
- 19
1
தொண்டு செய்யத் திருவனந்தபுரம் புகுவோம்
‘கெடுமிட ராயவெல்லாம்
கேசவா வென்ன,நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின்
தமர்களும் குறுககில்லார்,
விடமுடை யரவில்பள்ளி
விரும்பினான் சுரும்பலற்றும்,
தடமுடை வயலனந்த
புரநகர்ப் புகுதுமின்றே’
திருவாய்மொழி
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது பின்னிரவு இரண்டு மணி.
விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்ததுமே சுட்டெரிக்கும் சென்னை வெயிலுக்கு மாறாக, ஒரு வாரம் முன்பே தொடங்கி இருந்த தென் மேற்குப் பருவமழை சீரான வேகத்தில் பெய்து கொண்டிருந்தது.
தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்ல வந்த மகிழ்வுந்தில் ஏறி சற்றுத் தொலைவு வந்ததுமே, அலையோசை கேட்க, அடுத்து சில நொடிகளிலேயே, மழையில் நனைந்த மங்கலான விளக்கின் ஒளியில், காற்றும் மழையுமாக சுழன்றடித்ததில் இடப்புறம் தெரிந்த கடலும், வழக்கத்தை விட உயரமாக எழுந்த அலைகளும் சற்றே அச்சமூட்டியதில், தலையை உலுக்கிக் கொண்டேன்.
“சங்குமுகம் பீச்” என்றார் ஓட்டுனர்.
“ஓ”
திருவனந்தபுரத்தைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சி செய்ததில், ஒவ்வொரு பெயரும் / இடமும் பரிச்சயமாகவே இருந்தது.
விடுதிக்கு சென்று, தண்ணீரும் தேநீரும் வரவழைத்து அருந்தினேன். ஏனோ மெலிதான பரபரப்பு மிகுந்ததில் உறங்க முடியவில்லை.
ஏறக்குறைய பன்னிரண்டு வருடக் கனவு இந்தப் பயணம். எத்தனை செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள், புத்தகங்களைப் பார்த்து, படித்து, கனவிலும் கற்பனையிலும் லயித்திருக்கிறேன்.
சிறுவயது முதலே சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள், பழமையான கோவில்கள், மர்மம் நிறைந்த அரண்மனைகள் போன்றவற்றின் மீதும் பயணங்களிலும் தீராக் காதல் கொண்ட நான் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளன்.
2011, ஜூன் மாதம். முதன் முதலில் தொலைக்காட்சி செய்திகளில் திருவனந்தபுரம் கோவிலின் நிலவறைகள் திறக்கப்பட்டதும், அள்ள, அள்ளக் குறையாத தங்கமும், நவரத்தினங்களும் கொடுத்த பரவசமும் எதிர்பார்ப்பும் பெருமிதமும் ஆச்சர்யமும் ஒரு வாழ்நாளுக்கானது.
ஏறக்குறைய ஒரு மாதம் போல் ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலின் மர்மங்களைப் பற்றி தொடர்ந்த செய்திகள் அனைத்தும் என்னை நாற்காலி நுனியில் அமர வைத்திருக்க, பொக்கிஷ அறையைத் திறந்து சரியாக ஒரே மாதத்தில், அதைத் திறக்கக் கோரி மனு கொடுத்த
T P சுந்தரராஜன் IPS என்னும் முன்னாள் காவல்துறை அதிகாரி காலமான செய்தி கேட்டு, திகில் நாவலைப் படிக்கும் உணர்வு எழுந்தது.
இத்தனை வருடங்களில் எகிப்தின் பிரமிடுகளில் தொடங்கி, அங்கோர்வாட் வரை கூட பயணித்து, கட்டுரைகள், புத்தகங்கள் என எழுதி இருந்தாலும், எனது இந்தக் கனவுப் பயணம் சாத்தியமாக ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது.
அவனருளாலே அல்லவா அவன் தாளை வணங்க முடியும்?
ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி கோவில்
காலை ஆறரை மணிக்கு ஒரு தானியங்கியில் கோவிலின் கிழக்கு நடை வாயிலுக்குச் சென்று இறங்கி, சப்தமில்லாத மழைத் தூறல்களில் நனைந்த படி நிமிர்ந்து பார்த்த எனக்கு ஒரு கணம் உடல் சிலிர்த்தது.
பார்த்தது, கேட்டது, படித்ததைத் தாண்டி, மழையின் பின்னணியில் தெரிந்த ஸ்ரீபத்மநாபஸ்வாமி கோவிலின் கோபுரமும், பத்ம தீர்த்தமும், குதிரைமாளிகையும் காலச்சக்கரம் தன் சுழற்சியை நிறுத்திவிட்ட பிரமையைக் கொடுத்தது.
கேரளக் கோவில்களின் விதிமுறைகள் தெரியுமாதலால், வேட்டி சட்டையில்தான் வந்திருந்தேன். மொபைல், காமிரா, சட்டை, செருப்பு எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு, அங்கவஸ்திரத்துடன் தூறலில் நனைந்தபடி, கோவிலை நோக்கி நடக்கையில், எனக்காக மகத்தான ஒரு அனுபவம் காத்திருப்பதான ஆர்வமும் உள்ளுணர்வும் எழுந்தது.
அடாத மழையிலும் அனந்தனைத் தேடி வந்த வண்ணமிருந்தனர் பக்தர்கள். நீண்டு வளைந்து சென்ற வரிசைகளில் நுழையாது, அங்குலம் அங்குலமாகப் பார்த்தபடி கோவிலின் ஸ்ரீவேலி நடையில் நடக்கத் தொடங்கினேன்.
ஆங்காங்கே காணப்பட்ட ஸ்ரீஅனந்த பத்மநாபஸ்வாமியின் உருவப் படங்களும், ஒலித்த அனந்தனின் நாமமும், மழையும் காலில் நறநறத்த கடற்கரை மணலும் அருகிலேயே கடல் இருப்பதைக் காட்ட, உண்மையாகவே பாற்கடலுக்கே வந்துவிட்டதான உணர்வு எழ, புன்னகைத்துக் கொண்டேன்.
சிறப்பு தரிஸன வரிசையில் இணைந்து கொண்டு நகர்கையில் கங்காளம் என்று அழைக்கப்படும் வெள்ளியினால் ஆன ஒரு பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டிருந்தார்.
குறைந்தபட்சமாக அறுபது கிலோ இருக்கும்.
‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’
குறுகலான பாதையில் சென்று, படிகளில் உயர்ந்து, சுற்றும் முற்றும் பார்த்தபடி, வேறு விளக்குகளோ, சூரிய வெளிச்சமோ அதிகம் இல்லாது, மழையிருளும் சேர, கருவறையில் இருந்த தீபம் மட்டுமே ஒளிர, கண்ணெதிரே கண்ட காட்சி…!
நம்பினால், நம்புங்கள் மயிர்க்கூச்செறிந்தது எனக்கு.
எதிரே இருந்த மூன்று கதவுகளில் எதன் வழியே முதலில் பார்ப்பது, பார்த்து முடித்துவிட்டோமா, அடுத்த கதவை நோக்கி நகரலாமா என நினைக்கும் முன்பே கூட்டம் என்னை நகர்த்தியது.
ஏதாவது ஒரு கோணத்தில் அவரை முழுதாகப் பார்த்துவிட ஆவல் எழுந்தது. அங்கே பூஜை செய்யும் நம்பூதிரிகளின் மேல் உடனடி பொறாமை கொண்டேன்.
அனந்தனின் மீது அனந்தமாக அனந்த சயனத்தில் இருந்த அனந்தனை, கண்ணில் நிரப்பிக் கொள்ள முயன்று, மனம் நிறையாது வெளியில் வந்தேன்.
நரசிம்மரைத் தரிஸனம் செய்துவிட்டு, மற்ற சன்னதிகளை பிறகு பார்க்கலாம் என வெளியில் வந்து, பிரகாரத்தில் அமர்ந்து கொண்டேன்.
நான் ஒன்றும் பெரிய ஆன்மீகவாதியல்ல. அதற்கென நாத்திகனும் அல்ல. ராமன் வாலியைக் கொன்றது தவறெனக் கூறிக்கொண்டே, ராமநவமிக்கு நீர்மோர் நைவேத்தியம் செய்யும் சாதாரணன்.
அனந்தனை தரிசிக்க நான் வரவில்லை, அவர்தான் என்னை அழைத்திருப்பதாகத் தோன்றியது. என்ன ஒரு ஆகர்ஷணம்!
அந்த இருளில் அவரது வலக்கையின் ஆள்காட்டி விரலை சற்றே அசைத்தால்?
சிறிதே புரண்டு படுத்தால்?
அனந்த சயனனின் தத்ரூபத்தில், மூச்சு விட அவரது நெஞ்சாங்கூடு ஏறி இறங்குகிறதோ பார்க்கத் தோன்றியது.
வயது வித்தியாசமின்றி, தரிஸனம் முடித்து வெளியில் வந்த அத்தனை பேருடைய முகத்திலும் பிரமிப்பைக் காண முடிந்தது.
சயன பெருமாள் ஒன்றும் புதிதில்லை. திருவரங்கம் தொடங்கி எண்ணற்ற கோவில்கள் உள்ளன. ஆனாலும் இந்தப் பெருமாளிடம் இருக்கும் ஏதோ ஒன்று காந்தமாய் நம்மைக் கட்டி நம்மை இழுக்கிறது!
எழுந்து கோவில் பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.
சரித்திரத்தில் இடம்பெற்ற கோவில்கள் ஏராளம். ஆனால், இங்கு கோவிலே அல்லவா சரித்திரமாக நிற்கிறது?
மதியம், மாலை, இரவு என வெவ்வேறு தரிஸன நேரங்களில் கோவிலுக்கு வர வேண்டும் என்ற தீர்மானத்துடன் அங்கிருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையையும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளையும் பார்க்கச் சென்றேன். ஆதிகேசவர் அனந்தனின் அண்ணனாம்!
நான்காம் நாள் அதிகாலை நேரம் அதிகாலை (?!) மூன்று மணிக்கே கோவில் வாசலில் இருந்தேன். கேரளமே மழையில் ஊறி இருந்தது.
இரண்டாம் நாள் மதியமே செல்லவிருந்த விமானப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, இப்போது இங்கே நிற்கிறேன்.
முந்தைய நாட்களில் மற்ற நேரங்களில் சென்று ஸ்ரீ பத்மநாப ஸ்வாமியையும் கணபதி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மஸ்வாமி என நிதானமாக தரிஸனம் செய்தாயிற்று.
ஏனோ இருள் பிரியாத இந்த அதிகாலை நேரத்தில் அனந்தனைக் காணும் ஆவல் என்பதை விட, தாபம் என்றே சொல்லலாம், அதிகம் இருந்தது.
அவரது பிரம்மாண்டத்தில் மெலிதான பயமும், யார் இவர், நான்கு நாட்களாக என்னை இங்கு ஈர்ப்பது எது என்ற வியப்புமாக வரிசையில் போய் நின்றேன்.
பிரகாரத்தில் ஒளிர்ந்த மின்சார விளக்குகளை மீறிய இருளையும், உள்ளே இருந்த இலுப்பை மரத்தில் தோன்றிய இறையையும் எண்ணியபடி
அதே பாதை, அதே படிகளில் உயர்ந்து ஒத்தக்கல் மண்டபத்துக்கும் கருவறைக்கும் நடுவே இருந்த இடத்தில் ஊர்ந்தேன்.
மின் விளக்குகள் ஏதுமில்லை. மையிருட்டின் நடுவே ஒளிர்ந்த ஓரிரு தீபங்களுக்கிடையே கிடந்தார் கரியபெருமாள். கடந்த நான்கு நாட்களில் நான் தரிஸனம் செய்வது இது ஒன்பதாவது முறை.
ஒவ்வொரு முறையும் அந்த முதல் கதவின் வழியே காணக்கிடைக்கும் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி, தவறாமல் எனக்கு ரோமாஞ்சனத்தைத் தருகிறார்.
எங்கிருத்தோ வந்த நானே அனந்தனின் போதையில் அமிழ்ந்தால், அவரைக் குலதெய்வமாக, இஷ்ட தெய்வமாகக் கொண்டு, இந்தக் கோவிலின் நித்ய பூஜை, வரவுசெலவு, உற்சவங்கள் என எல்லாவற்றையும் நிர்வகித்து, பெருமாளின் அருகிலேயே இருந்து சேவை செய்யும் பேறு பெற்ற திருவாங்கூர் சமஸ்தான அரசர்கள் அவருக்கு தாஸர்களாக இருப்பதில் வியப்பென்ன?
வெளியில் வர, பேய் மழை பெய்தது. இருளில் மழையைக் காண, கருவறைக்குள் இருந்த கார்வண்ணன் வெளியெங்கும் வியாபித்து நிற்பதான உணர்வு எழ, மேல்சட்டை இல்லாத என் வெற்றுடல் தூக்கிவாரிப் போட்டது.
அனைத்து உயிர்களிலும் நிறைந்திருப்பது அவனேயெனில், அதுதானே நிஜம்?
இரண்டு நாட்களாக ஸயனந்தூரானின் சரித்திரத்தை உருப்போட்டதில், முன்னோக்கி நீந்தினாலும், பின்னோக்கிச் செல்லும் புராண, இதிகாச, இலக்கிய, அரசியல் மற்றும் வரலாற்று நதியில் நீந்தியது என் நினைவு.
ஸயனந்தபுரம், அனந்தபுரம், திருவனந்தபுரம் எனப் பலவாறு மருவி நின்ற இடம் அனந்தன் மனதில் காடாக விரிந்தது.
மஹா க்ஷேத்திரம்
ஸ்ரீ அனந்த பத்மநாபஸ்வாமியை பிதிஷ்டை செய்ததும், கோவிலின் கும்பாபிஷேகமும் நடந்தது இந்த வருடம், இந்த மாதம், இந்த நாள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவு பழமையானது அனந்தனின் கோவில்.
பாரத தேசத்தின் பண்டைய அநேக வரலாற்று நிகழ்வுகளும் புராணங்களோடு பின்னிப் பிணையப்பட்டவை. எல்லையில்லா காலத்தை அறுதியிட வேண்டியது அவசியமென முன்னோர் கருதவில்லை.
ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமியின் பழமையும் பெருமையும் காலப்போக்கில் உருவானதல்ல, தோன்றிய பொழுதிலிருந்தே இருப்பது. புராணங்கள் மட்டுமின்றி, சேரமன்னர்களும், அவர்களது சந்ததிகளுமான திருவாங்கூர் அரசர்களும் கொண்டாடிய கோவில் இது.
வராஹ புராணம், பிரம்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், ஸ்ரீமத் பாகவத புராணம், மத்ஸ்ய புராணம் என அறிதுயில் கொண்ட அனந்தனையும் அனந்த புரத்தையும் பாடாத புராணங்களே இல்லை எனலாம்.
ஸ்கந்த புராணம் கோகர்ணம், நைமிசாரண்யம், காசி, துவாரகா, மதுரா என ஸ்தலங்களுடன் பத்மநாபஸ்ய: என ஸ்ரீஅனந்தபத்மநாபப் பெருமாளை நேரடியாகக் குறிப்பிடுகிறது.
அளவிட முடியாத, எல்லையில்லாத, அனந்தமான, ஆனந்தனல்லவா அனந்தன்?
‘சம்பவாமி யுகே யுகே’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் கூற்று முக்காலத்துக்குமானது. காலதேச வர்த்தமானங்களைக் கடந்தது. தொடக்கமும் முடிவுமில்லா அநாதியானது. காலத்தால் அளக்க முடியாதது.
இயற்கையில் உறைந்து நிற்கும், இந்தப் பிரபஞ்சம் உயிர்க்கவும் இயங்கவும் உய்யவும் செய்யும் பரமபுருஷன், இப்புவியில் தர்மம் தழைத்தோங்க, ஜீவராசிகள் தங்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க, காலங்கள் தோறும் தன்னை அடையாளப் படுத்துகிறான்.
ரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்களிடம் ‘நான் இங்கே இருக்கிறேன், என்னைக் கண்டுபிடி என்று அவர்களிடம் சிறுசிறு’ கண்கட்டு வித்தை நடத்தி, அவர்களின் மூலம் வெளிப்படுகிறான்.
அடுத்து வரவிருக்கும் கடினங்களும் மலினங்களும் நிறைந்த கலியுகத்தில் உலக மக்களின் நன்மை கருதி, பாற்கடலிலும் தூணிலும் துரும்பிலும், சர்வாந்தர்யாமியாக அனைத்து ஜீவராசியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த மறைநாயகன், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் நெருங்கியது.
துவாபர யுகம்
நித்ய சிரஞ்சீவியான பரசுராமரிடம் இந்த அகிலத்தைத் தாங்கும் அனந்தனை, ஆதிசேஷனை ஆராதிக்கப் பணித்தார் பரமேஸ்வரன்.
வாசுகி நாகராஜனாக பரமேஸ்வரனின் கழுத்தில் இருக்க, அனந்தனைத் தாங்கும் ஆதிசேஷன் இருக்கும் திசை நோக்கிச் சென்றார் பரசுராமர்.
கர்ம பூமியான பாரதத்தில் தர்மத்தை நிலை நாட்டவும், உலகைக் காக்கவும், அசுரர்களை அழிக்கவும், பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கும், அவர்களை சோதித்து, அவர்தம் துயரிலிருந்து அவர்களைத் தடுத்தாட்கொள்ளவும் இறைவன் பல இடங்களில் பல தோற்றங்களில் அவதரித்திருக்கிறான்.
பரந்தாமன் தன் இருப்பிடமாக நிலைகொண்டிருக்கும் புனிதத் தலங்கள் எண்ணற்று இருப்பினும், புண்ணிய பூமியான மலைநாடு கடவுளின் தேசமாகவே அறியப்படும் (देवानां स्वदेशः) கேரளத்தில் இறையும் இயற்கையும் நீக்கமற நிறைந்திருந்தனர்.
பலவித இயற்கை மர்மங்களை, மந்திர, தந்திரங்களைத் தன்னுள் பொதித்து அந்தப் பரம்பொருளே மிளகும் ஏலமுமாக மணக்கும் இடத்தில், ஒன்றுமில்லா பேரண்டத்தில் பிரபஞ்சம் தோன்றும் முன் அருவாய் கிடந்த விராடபுருஷனின் உருவாய், படைத்து, காத்து, அழிக்கும் மும்மூர்த்திகளின் ஓருருவாய் யோக சயனத்தில் கிடக்கும் பெருமாளைத் தாங்கும் அனந்தனின் ஆலயத்தைத் தேடி வந்தார் பரசுராமர்.
மலையும் நதியும் கடலும் பரிசுத்தமான காற்றும் சூழ்ந்த அடர்ந்த வனப் பிரதேசத்தை வந்தடைந்த விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான ராம பார்கவரின் பெயரால் அந்தப் பிரதேசமே பின்னாளில் பரசுராம க்ஷேத்திரமானது .
கேரள தேசம் முழுவதிலுமே சர்ப்பங்களை வழிபடவென காவுகளை அமைத்திருக்க, அவதார புருஷனுக்கே, அனந்தனைக் காண்பது அத்தனை எளிதாக இல்லை.
அனந்தன்காட்டை அடைந்த பரசுராமர், பிரம்மனும் விஷ்ணுவும் ஈஸ்வரனின் அடிமுடி அறியமுடியாமல் திணறியதை விட அதிகம் திகைத்தார்.
திருவல்லத்தில் சிரமும் அனந்தபுரத்தில் திருமேனியும், திருப்பாதபுரத்தில் சரணங்களுமாக ஒரு யோஜனை நீளத்திற்கு (~15.5 கி.மீ) ஆதிசேஷனின் மேல் சயனித்து யோக நித்திரையில் இருந்த பரமபுருஷனைக் கண்டு பிரமித்தார். பரவசித்தார். புளகாங்கிதமடைந்தார்.
பேரண்டத்தின் பிரம்மாண்டத்தில் யோக நித்திரையில் இருந்த பெருமாளின் மகத்துவத்தை அறிந்து, அனந்தனுக்கான வழிபாட்டுமுறைகளைச் சீரமைத்தார்.
பொட்டி குடும்பங்களை அழைத்து, அனந்தனின் ஆலயத்திற்கான நித்ய ஆராதனை முறைகளை விதிகளின் படி செய்யப் பணித்தார்.
தன் தந்தை ஜமதக்னி முனிவரின் கட்டளைக்கிணங்க தாய் ரேணுகாவைக் கொன்ற பரசுராமர், தாயின் உயிரை வரமாகப் பெற்று மீட்டாலும், அன்னையைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக்கொள்ள, ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமியின் சிரம் இருந்த த்ரிவேணி சங்கமமான ‘திருவல்லம்’ எனும் (வல்லம் - தலை) இடத்தில்
கர்ம காரியங்களைச் செய்தார்.
கேரளத்தையே தனது வசிப்பிடமாகக் கொண்ட பரசுராமர், கோவில் கொண்ட அதே திருவல்லத்தில் கலியுகத்தில், தன் தாய்க்கான பித்ரு கர்மாக்களைச் செய்தார் ஆதி சங்கரர்.
காலப் பெருவெள்ளத்தில், தன்னை மறைத்து, மறைந்து வெவ்வேறு வடிவங்களில், அம்சங்களில், சூழல்களில் அவதரிக்கும் பரந்தாமன், மீண்டும் மீண்டும் அதே இடத்தில், அதே அனந்த சயனத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அற்புத ஸ்தலம் ஸயனந்தபுரம்.
அந்த வனப்பிரதேசத்துக்கு அனந்தன்காடு என்ற பெயர் வரக் காரணம் ஆதியும் அந்தமும் இல்லாத அனந்தனை விட அவனைத் தாங்கும் அனந்தன்தான்.
க்ருத யுகத்தில் புஷ்கரமும், திரேதா யுகத்தில் நைமிசாரண்யமும், த்வாபர யுகத்தில் குருக்ஷேத்ரமும், கலியுகத்தில் ஸயனந்தபுரமும் மஹாக்ஷேத்ரமாக அறியப்படுகிறது.
பரசுராமர்
நம்மாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றும், ஆறு நாராயண ஸ்தலங்களில் ஒன்றும், ஏழு மோக்ஷ ஸ்தலங்களில் ஒன்றுமான
ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவில் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு, புராணங்களிலும் இலக்கியத்திலும் விரவிக் கிடக்கிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சகோதரரும் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமுமான பலராமர், தங்கள் ரத்த உறவுகளுக்குள்ளேயே கடுமையான போரில் ஈடுபட்ட பாண்டவ, கௌரவர்களில் யாரையுமே ஆதரிக்காது நடுநிலையாக நிற்க விரும்பி, மஹாபாரதப்போர் நட்ந்த சமயத்தில், தேசத்தின் தென்திசை நோக்கித் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.
ஸயனந்தூரபுரியை அடைந்த பலராமர், பத்ம தீர்த்தத்தில் நீராடியதாகச் சொல்கிறது பாகவத புராணம்.
நவீன சரித்திரத்தில் பதிவுகள் இல்லாத, கால அட்டவணையற்ற, மிகத் தொன்மையான ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தின் உருவாக்கமும், பெருமையும் கர்ணபரம்பரைக் கதைகளிலும், புராண, சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றிருந்தாலுமே, அதன் நாள் ஆகமங்கள் (Chronicles) கிடைக்கப் பெறாததில், முரணான கால அட்டவணை கட்டாயமாகிறது.
அது மட்டுமின்றி ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் தற்குறிப்பேற்றங்களும் இயல்பாகிறது. அங்கே ஒரு கதைக்கே பல மூலக் கதைகளும் கிளைக்கதைகளும் உருவாகின்றன.
சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருநகரங்கள் தன் பொலிவை இழக்கத் தொடங்கிய சமயத்தில், அதன் மக்கள் பல்வேறு இடங்களுக்குப் புலம்பெயரத் தொடங்கினர்.
அவர்களுள் , தன்னை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சந்ததியாகப் பிரகடனம் செய்து கொண்ட, விருஷ்ணி சத்திரியர்களில் ஒருவனான கிருஷ்ண வர்மன், ‘அனந்தசயன நகரி’யை நோக்கிச் செல்லுமாறும், அங்கு அவரே அவர்களைப் பாதுகாப்பார் என்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரே சொன்னது போல் கனவு கண்டார்.
எழுபத்தி இரண்டு குடும்பங்களுடன், லோதல் நகரத்திலிருந்து திருவாங்கூரின் அன்றைய தலைநகரான பத்மநாபபுரத்தை அடைந்தார். பலராமர், மற்றும் சாளக்கிராமத்துடன் பார்த்தசாரதியின் வடிவில் இருக்கும் கிருஷ்ண விக்கிரகத்தை பரிசாகத் தந்தார். சௌராஷ்ட்டிரத்தில் (குஜராத்) திரு அம்பாட்டி என்ற பெயரால் அறியப்பட்டதால், இங்கும் திரு அம்பாட்டி என்ற பெயரிலேயே ஸ்ரீகிருஷ்ணரை வெள்ளிக்கிழமை திருவோணத்தன்று பிரதிஷ்டை செய்து, ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியின் கைங்கர்யத்துக்கு தங்களை அர்ப்பணித்தனர்.