• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
273
பகலிரவு பல கனவு - 11

சம்யுக்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முழுவதாய் இரண்டு வருடங்கள் கடந்து இருந்தன அவளுக்கும் பிரபாகரனுக்குமான உறவில் பெரிதான முன்னேற்றம் இருந்தது என்று எதுவும் சொல்லி விட முடியாது. அதே நேரத்தில் இந்த உறவு வேண்டாம் என்று இருவருமே நினைக்கவில்லை. இருவருக்குமே அவரவருக்கான காரணங்கள் இருந்தன.

பிரபாகரன் தனக்கு படிப்பு இல்லை என்றாலும் அந்தஸ்தில் சம்யுக்தாவின் வீட்டில் மறுப்பு என்று எதுவும் இல்லாத வகையில் முன்னேற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தான். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு ஒவ்வொரு அடியாகப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

இந்த இரண்டு வருடங்களில் தேனியில் நான்கு ஜூஸ் கடைகளுக்கும் இரண்டு உயர்தர பழக்கடைகளுக்கும் முதலாளியாக மாறி இருந்தான். அவற்றுக்குத் தேவையான, அந்த மண்ணில் விளையக்கூடிய பழங்களை அவனே விளைவித்தான். அதனால் விரைவிலேயே அவனது பொருளாதார நிலை அவனது தாத்தா காலத்தில் இருந்ததையும் விட பலமடங்கு பெருகி விட்டது.

சம்யுக்தாவோ சரண்யாவும் அவளும் இரு வருடங்களுக்கு முன்னால் பேசிய பேச்சை அலசி, ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அதனால் பிரபாகரனை மிகவும் தொல்லை செய்யவில்லை. அதே நேரத்தில் கடைக்கு வருவதையும் நிறுத்தவில்லை. பிரபாகரனும் அவளைப் பார்வையால் பருகுவதை நிறுத்தவில்லை.

மருத்துவக் கல்லூரிக்குள் இருக்கும் கடைக்கு சம்யுக்தா வரவே மாட்டாள் என்பது போன்ற நேரங்களில் சென்று சற்று நேரம் மேற்பார்வையிட்டு வருவதைப் பழக்கமாக்கி இருந்தான் பிரபாகரன்.

“ஏன்? நாங்க இருக்கும் போது வந்தா கொஞ்சம் சந்தோஷப் பட்டுடுவோமோ? இனிமேல் என்னோட ப்ரேக் டயத்துல தான் வரணும்” என்று அதற்கும் எகிறினாள் அவள்.

“எனக்கொன்னும் இல்ல. என்னால் எப்போ வேணும்னாலும் வரமுடியும். என்னைப் பார்த்தா நீ சும்மா இருந்துடுவியா? கண்ணாலேயே பேசி ரொம்ப சீக்கிரத்திலயே நம்ம இரண்டு பேரையும் காட்டிக் கொடுத்துடுவ. பரவாயில்லையா?” என்று அவன் கேசுவலாகக் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள். அப்படியும் விட்டுக் கொடுக்க மனதில்லை.

“ஹும்.. ஏதோ.. சொல்றீங்க.. நம்பிட்டேன்.. “ என்று கிளம்பியவள், “ஆமா.. ஏதோ நான் மட்டும் தான் உங்களைப் பாக்கற மாதிரி சொல்றீங்க. உங்க கடையில இருக்கிறவங்களைக் கேட்டா கதை கதையா சொல்வாங்க. சார் பார்வை எப்படிப்பட்டதுன்னு. இந்த காலேஜ் மேட்டர்ல நம்ம விஷயம் எப்படி வெளியே வந்தாலும் வம்பு தான். அதனால போனா போகுதுன்னு விடறேன் பொழச்சுப் போங்க” என்று அசால்ட்டாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

இப்படி, இருவரும் பார்வை ஒன்றே போதுமே என்று காதலை வளர்த்தனர். இவர்கள் முடிவெடுத்தால் போதுமா? காதல் தேவதையும், பெற்றோரும், மற்றோரும் கூடவே அவர்களின் தலையில் எழுதிய எழுத்தும் என்ன செய்ய காத்திருக்கிறதோ, தெரியவில்லையே.

அன்று தனது அறையில் படுத்துக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்குப் பழைய ஞாபகங்கள் படையெடுத்து வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் அன்றொரு நாள் பிரபாகரனின் அறைக்குள் சரண்யா பேசிக்கொண்டிருந்த போது இவள் பத்ரகாளியாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க உள்ளே சென்று நின்றாள்.

பிரபாகரன் செய்து வைத்த சமாதானத்தை ஏற்றுக் கொண்டு தோழியுடன் வெளியே வந்தாள்.

“ஏன் சரண், இந்தக் காலத்துலயும் நம்ம ஊர்ல மட்டும் எந்த வயசானாலும் பேரன்ட்ஸுக்கு அடங்கியே போற மாதிரி தான் இருக்குல்ல. வெஸ்டர்ன் கன்ட்ரீஸ் எல்லாம் பதினைஞ்சு வயசுலயே சம்பாதிக்க ஆரம்பிச்சு தனியா போயிடறாங்க. சைனா, ஜப்பான் மாதிரி கன்ட்ரீஸ்ல கூட கல்யாணம் பண்ணி குழந்தை எல்லாம் பெத்துட்டு தான் அம்மா அப்பா கிட்ட சொல்றாங்க. நமக்கு மட்டும் ஏன் தான் இந்த கண்டிஷன்ஸோ?” என்று புலம்பினாள் சம்யுக்தா.

‘இவ என்ன சைனா, ஜப்பான்னு டேட்டா எல்லாம் சொல்றா?’ என்று வியந்த சரண்யா, எல்லாம் கொரியன் சீரியல்களின் உபயம் என்று புரிந்து சிரித்தாள்.

“அடியேய்! ஒரு கே-டிராமாவ விடறதில்ல போல இருக்கு. நீயும் உன் ஆராய்ச்சியும். அவங்க எல்லாம் பதினைஞ்சு வயசுல தன் வேலையெல்லாம் தானே பார்த்து தனக்கு தேவையானத் தானே சம்பாதிச்சு அப்புறம் கல்யாணம் குழந்தைன்னு போறாங்க.

நமக்கு இங்கே ஒரு டம்ளர் தண்ணியை எடுத்துக் குடிக்கக் கூட நம்மால முடியாது. பத்தடி தூரத்தில இருக்கிற கிச்சனுக்கு போறதுக்கு ஏதோ ஏழு கடல் ஏழு மலை தாண்டி போறது மாதிரி உடம்பு வலிக்கும். அம்மா கொண்டு வந்து கையில திணிக்கணும்.

ஆமா.. முதல்ல உங்க வீட்டுல கிச்சன் எங்க இருக்கு, அது என்ன செய்வாங்கன்னாவது தெரியுமா?”

“ஏன் தெரியாம, அதெல்லாம் நல்லாவே தெரியும்“ பட்டென்று வந்தது பதில்.

“அதானே பாத்தேன்.. நமக்கு சோறு தானே வாழ்க்கை.. அது தெரியாமல் எப்படி.. ஆனா, அங்கே இருக்கிற சாமான் எல்லாம் என்னென்னு தெரியுமா? ஒரு நாள் தனியா விட்டு சமையல் செய்ய சொன்னா செஞ்சுடுவியா? இப்போ தான் தெளிவா சொல்லித்தர யூட்யூப் இருக்கே”

“தெளிவா.. ஹும்.. எங்க… சொல்லி வச்சா மாதிரி ஒரு சானல் விடாமல் தேவையான அளவு உப்புன்னு எல்லாரும் சொல்றாங்க. அது தெரிஞ்சா நாம ஏன் அவங்க ஹெல்ப் கேட்கிறோம்?”

“ஓ.. அப்போ நீ அதையும் ட்ரை பண்ணி இருக்க போல. அந்த உப்பு விஷயத்தை அம்மா கிட்ட கேட்டு கத்துக்க வேண்டியது தானே.”

“அது எதுக்கு அனாவசியமா? நம்மை நம்பித் தானே ஸ்விகி எல்லாம் இருக்காங்க. அவங்க பாவம் இல்லையா, அவங்க பொழப்புல மண் அள்ளிப் போடலாமா?”

“ஓ.. அப்போ உனக்கு சமையல் தெரியாது..”

“ஹி…ஹி… டெஃபெனட்லி.. தெரியாது”

“அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் செஞ்சு போடுவாங்கன்னு இருக்கீங்களா மேடம். இதுல சைனா, ஜப்பான்னு பேச்சு வேற..”

“ஏன்.. மாமியார் செஞ்சா என்ன? நானும் வேலைக்குப் போவேனே, டாக்டர்னா நேரம் காலம் பார்க்காமல் வேலை இருக்கும். அப்போ வீட்டுல வேற யாராவது தானே செய்யணும்? இப்போ எங்க வீட்டுல இருக்கிற மாதிரி”

‘சரியா போச்சு போ’ , “உங்க வீட்டுல உங்க அம்மாவோட மாமியார் இல்லை. இருந்தால் எப்படி இருக்கும்னு உனக்கும் எனக்கும் தெரியாது. சரி, அதை விடு.. உங்க மாமியார் சின்னப் புள்ளைதானேன்னு அவங்களே சமையல் செய்யறாங்கன்னு வச்சுக்குவோம். அடுத்த விஷயத்துக்கு வருவோம்”

“பாத்தியா.. நான் சொன்னத நீயே அக்சப்ட் பண்ணிட்ட. இதே மாதிரி எல்லாத்துக்கும் ஓகே தான் சொல்லப் போற..” என்று குதூகலித்தாள் சம்யுக்தா.

“ரொம்ப சந்தோஷப்பட்டுக்க வேணாம். இந்த தடவை உனக்கு நிச்சயம் சப்போர்ட் கிடைக்காது. கொஞ்சம் யோசிங்க சம்யுக்தா மேடம். அப்படியே உங்க ரூமைச் சுத்திப் பாருங்க. நமக்கு விதம் விதமா துணி வாங்கிக் குவிக்கத் தெரியும். ஆனா, அந்த துணியெல்லாம் என்னைக்காவது ஷெல்ஃபுக்குள்ள இருந்திருக்கா, அதுக்காகவே ஏதோ ஒரு சேரையோ சோஃபாவையோ டெடிகேட் பண்ணி அள்ளி போட்டுட வேண்டியது. தேவையான நேரத்தில அப்படியே உருவி எடுத்துக்கலாம் பாரு. ரொம்ப ஈஸி. இதுல இவ தனியா வேலையெல்லாம் பார்த்துக் கிழிச்சிட்டாலும்….” இப்படிப் பல விஷயங்களில் அம்மாக்களின் பிரதிநிதியாக மாறிப் பொங்கி விட்டாள் சரண்யா.

‘இவளே இப்படி என்றால், நல்ல வேளை அம்மா கிட்ட இப்படி பேசி வைக்கலை’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் சம்யுக்தா. சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.

“இங்கே பாரு சம்யு! வேடிக்கைப் பேச்செல்லாம் விடு. நாம கொஞ்சம் சீரியஸா பேசலாம்” என்று சரண்யா தோழியை சீரியஸ் மோடுக்கு இழுத்துச் சென்றாள். அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று வெறியே வந்து விட்டது.

“சொல்லு சரண்” என்று அமைதியாக அமர்ந்து கொண்டாள் சம்யுக்தா.

“நான் பேசி முடிக்கிற வரை குறுக்க பேசக் கூடாது” என்று கண்டிஷனோடு பேச்சை ஆரம்பித்தாள்.

“நான் ஏற்கனவே சொன்னது தான் சம்யு. நான் லவ்வுக்கு எதிரி இல்லை. எனக்குத் தெரிஞ்சு உங்க அம்மா அப்பா கூட எதிரி கிடையாது. அதே நேரத்தில அந்த லவ் நிஜமானது தானா, இல்லை வயசுல வர்ற ஆர்வக் கோளாறா? நிஜமான லவ்வா இருந்தா வாழ்க்கை முழுசும் வருமா? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சு வச்சிருக்கணும்.

லவ் பண்றது இரண்டு பேரோட தனிப்பட்ட விஷயமா இருக்கலாம், ஆனால், கல்யாணம்ற விஷயம் உங்க இரண்டு பேரோட முடியப் போறதில்லையே. பொதுவாவே எந்த காலத்துலயும் பொண்ணைப் பெத்தவங்களும் பையனைப் பெத்தவங்களும் மொறச்சிக்கிட்டே தான் இருப்பாங்க”

“அட! சரண், அறிவாளிடி நீ. இவ்வளவு சின்ன வயசுல பாட்டி மாதிரி எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க?” போலியாக வியந்தாள் சம்யுக்தா.

“ம்ச். சும்மா இருடி. குறுக்க பேசினா எனக்கு மறந்து போயிடும். நான் தான் எங்க வீட்டில டெய்லி பாக்கறேனே, இத்தனை வருஷம் கழிச்சும் கூட எங்க அம்மம்மாவும் அப்பத்தாவும் சிஎஸ்கேவும் ஆர்சிபியும் மாதிரி முறைச்சிக்கிட்டே திரிவாங்க. நமக்கு நல்ல என்டர்டெயின்மென்ட். பாப்கார்னோட உட்கார்ந்தா ஒரு மேட்ச் பார்த்த எஃபெக்ட் கிடைக்கும்” என்று கண் சிமிட்டினாள் சரண்யா.

“அப்படியாவது அவங்க இரண்டு பேரும் பேசிக்கிறாங்களே, எங்க வீட்டுல ஒருத்தர் இருக்கும் போது இன்னொருத்தர் வரவே மாட்டாங்க. அவ்வளவு பிரியம். எனக்குத் தெரிஞ்சு நம்ம அம்மா காலத்திலயும் இது மாறாது” என்ற சம்யுக்தா வின் குரலில் முதன் முதலாக ஒரு நடுக்கம்.

“நம்ம காலத்திலயாவது மாறுதா பார்ப்போம்.. இப்போ ட்ராக் மாறாம நாம பேசிக்கிட்டு இருந்த விஷயத்துக்கு வா. அந்த பிரபாகரன் வேற அவரோட தொழில ரொம்ப ஸ்ட்ராங்கா இங்கே செட் பண்ணி வச்சிட்டாரு. அதுவே, நான் எங்கேயும் வரமாட்டேன்னு மறைமுகமா சொல்ற மாதிரி தான் இருக்கு.”

“வாட்!!!!” என்று ஷாக் ஆனாள் சம்யுக்தா. இப்படி ஒரு கோணத்தில் இது வரை அவள் யோசிக்கவே இல்லை.

‘அப்படியும் இருக்குமோ?’ என்று அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.



 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom