• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
274
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 10


துன்பங்கள் துரத்துகையில்
துயரங்கள் அணைக்கையில்
நல்ல நட்பு ஒன்று மட்டும்
கிடைத்துவிட்டால்
மங்கிய ஓவியத்தையும்
பளிச்சென்று காட்டி விடும்
அந்த நட்பெனும் கண்ணாடி


திருநாவுக்கரசுக்கு சொந்தத்தில் திருமணம் முடித்து விட்டார்கள். வெளியில் வரன் பார்த்திருந்தாலும், அவனுடைய அரசு வேலை, தகுதிகள் வைத்துப் பார்க்கும்போது நல்ல பசையுள்ள இடமாகவே பெண் எடுத்திருப்பார்கள். பார்க்கவும் நன்றாக இருந்தான் என்பது அவனுடைய கூடுதல் தகுதி. அதற்கேற்ப மணிமேகலை நிறைய சொத்து, வீடு, நகைகள் என்று நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து அமைந்துவிட்டாள். அதிகம் தேடாமல் தானாக அமைந்த சம்பந்தம் அது.

இப்போது அவனுடைய அடுத்த தம்பி மணிமாறனை, திருநாவுக்கரசோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது திருமணச் சந்தையில் தராசுத்தட்டு அவனைக் குறைவாகவே மதிப்பிட்டது. ஒருவரை ஒருவர் ஒப்பிடுவது தவறு என்றாலும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பெண் வீட்டினர், தங்களுடைய மகள் மணந்துகொள்ளப் போகும் மணமகனின் தகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே? இருவருக்கும் நடுவே இருந்த வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.

இந்தக் காரணங்களால் சற்றே வசதிக் குறைவான குடும்பத்துப் பெண்ணான மாதவி மணமகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டாள். அம்மா, அப்பாவைக் குழந்தையிலேயே இழந்திருந்தவள். மாமாவால் வளர்க்கப் பட்டிருந்தாள். நல்ல அழகு. நல்ல படிப்பு.
வேதியியலில் முதுகலைப் பட்டத்துடன் ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருந்தாள். மாமா பாவம் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து நன்றாகப் படிக்க வைத்திருந்தார். மாதவியும் குழந்தையில் இருந்து படிப்பில் சுட்டியாக இருந்ததால் ஸ்காலர்ஷிப் தொடர்ந்து கிடைத்து வந்தது.

ஆனால், வேலைக்குப் போவதற்கு முன்னால் நல்ல பணக்கார வீட்டுச் சம்பந்தம் வந்ததால் மாமாவும், திருமணம் செய்து கொடுத்துவிட்டார். நிறையக் கனவுகளுடன் வந்த மாதவிக்கு மணிமேகலையை உடனே பிடித்துவிட்டது. அக்கா, அக்கா என்று உடனே அவளிடம் ஒட்டிக் கொண்டாள். மணிமாறனும் திருநாவுக்கரசுவைப் போல அடாவடியான ஆள் இல்லை. ஈகோவும் கிடையாது. மனைவியை நேசித்து, மதிப்பும் அளிக்கும் ஒரு சில அபூர்வசிகாமணிகளான ஆண்களில் ஒருத்தன்.

ஒருவருக்கொருவர் காதலைப் பரிமாறிக்கொண்டு நேசத்துடன் பழகிய அந்த ஜோடியைப் பார்த்துப் பூரித்துப் போனாள் மணிமேகலை. பாவை என்னவோ, இரண்டாவது மருமகள் வந்ததும் கொஞ்சம் தடுமாறினாள்.

‘ ரெண்டு மருமகள்களும் நல்லாப் பிரியத்தோட பழகினா வீடு ஒத்துமையா இருக்கும். நாளைக்கு நம்ம காலத்துக்கு அப்புறமும் கூட்டுக் குடும்பமாகவே இருக்கும். அதுவும் நல்லதுதான். ஆனால் இவங்க ரெண்டு பேரும் கட்சி சேந்து என்னை மட்டம் தட்டிடுவாங்களோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. என்னதான் இருந்தாலும் என்னோட கெத்தை நான் அவங்களோட கூட்டணி முன்னால விட்டுக் கொடுத்துரக் கூடாது. இப்பவே இது ரெண்டும் ரொம்பக் குழையுதுங்க. மூணாவதும் வந்தா என் கட்சி பலவீனமாயிடும். என்னை அடிச்சுத் தூக்கி ஓரமா ஒக்காத்தி வச்சுருவாங்களோ? ’ என்று தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக்கொண்டு புழுங்கினாள்.

இந்த மனப்புழுக்கம் அவளுடைய மனதைப் பாழ்படுத்தி, அவளை மோசமான மாமியாராக மாற்றிவிட்டது. ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கினாள். எப்போதாவது மணிமேகலையும், மாதவியும் ஒன்றாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றால் அவ்வளவுதான். அவளுடைய உள்ளம் திகுதிகுவென்று எரிய ஆரம்பித்துவிடும்.

“ தலைக்கு மேல வேலை கெடக்கு. என்ன எப்பப் பார்த்தாலும் அரட்டை? கெக்கே, பிக்கேன்னு வீட்டுப் பொம்பளைங்க
சிரிச்சுக்கிட்டே நின்னா வீடு உருப்பட்ட மாதிரிதான்? பொம்பளைங்க சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிஞ்சாப் போச்சுன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்தக் காலத்தில் நான் கல்யாணமாகி இந்த வந்தபோது அவ்வளவு வேலை இருக்கும். மூச்சு விட நேரமிருக்காது. இவ்வளவு வசதி உண்டா? விறகடுப்பு வேற. கையால துணி தோய்ச்சுப் போடணும். கெணத்துல இருந்து தண்ணி சேந்தணும். அம்மி, ஆட்டுக்கல் தான் அரைக்கறதுக்கு. பேட்ச், பேட்ச்சாச் சாப்பிட உக்காருவாங்க. தினம் வீட்டுல நெறைய விருந்தாளிங்க வேற குவிஞ்சுடுவாங்க. தட்டு வச்சு, டம்ளரில் தண்ணி வச்சு, ஒவ்வொண்ணாப் பரிமாறி, சாப்பிட்ட இடத்தைத் தொடைச்சு அப்பப்பா எத்தனை வேலை தெரியுமா? இப்ப மாதிரியா? குழாயைச் தெறந்தாத் தண்ணி கொட்டுது. ஸ்விட்ச் போட்டா சட்னி அரைபடுது. கிரைண்டர் இட்லிக்கு மாவு ஆட்டுது. பாத்ரூமில கீசர் போட்டா வெந்நீர் வருது. நாங்கள்ளளாம் பின்கட்டுல தனியா அடுப்பை மூட்டி, வெந்நீர்ப் பானையில வெந்நீர் போட்டு எல்லாருக்கும் வாளி வாளியாக் கொண்டு போய்க் கொடுப்போம்” என்று பாவை புலம்ப ஆரம்பித்தால், இரண்டு இளம்பெண்களும் அமைதியாக நகர்ந்து விடுவார்கள்.

மாமியாருக்குத் தாங்கள் இருவரும் சிரித்துப் பேசிப் பழகுவது பிடிக்கவில்லை என்று தெரிந்துவிட்டது இருவருக்கும். இனிமேல் அவரெதிரே அதிகம் கூடிக் குலாவ வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள்.

பாவை, அவர்களைக் கோபித்துக் கொண்ட அதே நாள் சாயந்திரநேரம் அருகிலிருந்த கோயிலுக்குப் போயிருந்தாள் பாவை. கூடவே பெரிய பேத்தியையும் கூட்டிக் கொண்டு போனாள். சின்னவள் நேரங் கெட்ட நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாள். இரண்டு பேருக்கும் சாவகாசமாக உட்கார்ந்து பேச முடிந்தது.

“ அக்கா, அத்தை எப்பவும் இப்படித்தான் பேசுவாங்களா? நான் இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இதுதான் முதல் தடவைன்னு நெனைக்கறேன். ரொம்பக் கோபமாப் பேசிட்டாங்க. பாவம் நீங்க இவ்வளவு நாளா அத்தையோட பேச்சை எப்படித்தான் சகிச்சுக்கிட்டீங்களோ? கோபக்காரங்கதான் போல. இன்னைக்குச் சிடுசிடுப்பு அதிகமாவே இருந்துச்சு ” என்று ஆரம்பித்தாள் மாதவி.

“ சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. என் கிட்ட நல்லாத்தான் நடந்துகிட்டாங்க. அதுவும் எனக்குப் பொறந்த வீடுன்னு யாருமே கிடையாது. பிரசவம் கூட அத்தைதானே பொண்ணு மாதிரிப் பாத்துகிட்டாங்க? ”

“ அதில ஒண்ணும் அதிசயமில்லையே? வடநாட்டில் பிரசவம் மட்டும் புகுந்த வீட்டில் மாமியார் கவனிப்பில் தான் நடக்குமாம். ஏன்னா பொறக்கப் போறது அவங்க வம்சக் கொழந்தையாச்சே? கொழந்தை பொறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள்
கழிச்சு, பொறந்த வீட்டுக்கு அனுப்புவாங்களாம்”

“ அங்கே அது வழக்கங்கறதுனால செய்யறாங்க. ஆனால், இங்கே வழக்கம் இல்லையே? அப்படியும் சந்தோஷமாய்த் தான் செஞ்சாங்க. அதிலெல்லாம் குத்தம் சொல்லமுடியாது. இப்போ நீயும் வந்ததும் அவங்க மனசுல ஏதோ பயம் வந்துருச்சுன்னு நெனைக்கறேன். நாம ரெண்டு பேரும் சேந்து அவங்க ஆட்சியைக் கவுத்துருவோமோன்னு ஒரு இன்செக்யூரிட்டி. நாம அந்த மாதிரி ஆட்கள் இல்லைன்னு புரிஞ்சுகிட்டாங்கன்னா சரியாயிடுவாங்க. நிச்சயமாப் பழையபடி பாசத்தைப் பொழிவாங்க. பாத்துட்டே இரு”

“ பரவாயில்லை அக்கா. உங்களுக்கு மனுஷங்களோட ஸைகாலஜி நல்லாப் புரியுது. பிரச்சினை எதுவா இருந்தாலும் அலசி ஆராய்ஞ்சு இது இப்படித்தான்னு தெளிவாச் சொல்லிடறீங்க அக்கா. உங்களுக்கு நல்ல உலக ஞானம் இருக்கு. எப்படிக்கா? நீங்களும் தனியா ஒரே குழந்தையா வளந்துருக்கீங்க. அதுவும் அம்மா இல்லாமல் வளந்திருக்கீங்க. ஆச்சரியமா இருக்கு”

“ அதுக்குக் காரணம் எங்க பாட்டி தான். எல்லாத்தையும் காரணத்தை விளக்கிப் பொறுமையாச் சொல்லித் தந்துருக்காங்க. ஆனால், நான் ஒண்ணும் நீ நெனைக்கற மாதிரி ரொம்பப் பக்குவமான ஆள் எல்லாம் இல்லை. எனக்கும் சில சமயங்களில் நெறையக் கோபம் வருது. எரிச்சல் வருது. இங்கே யாருமே நம்ம பேச்சை மதிக்க மாட்டேங்கறாங்களேங்கற ஆதங்கம் இருக்கு. நீ வெளியே காமிச்சுக்கறே. நான் மனசுக்குள்ள வச்சுட்டுப் புழுங்கறேன். அவ்வளவுதான். குழந்தைகளுக்காக நிறைய விஷயங்களைப் பொறுத்துட்டுப் போறேன். அந்தப் பொறுமை என்னைக்கு எல்லை மீறுதோ, அன்னைக்கு எரிமலை வெடிக்கப் போகுது”

“ பொம்பளைங்க மட்டும் ஏன் சிரிக்கக் கூடாதா? இது என்ன புதுசா இருக்குன்னு எனக்குக் கோபம் வந்தது”

“ அது ஒரு மாதிரி ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவைதான் பெண்களுக்கான பண்புகள்னு வரையறுத்து வச்சிருக்காங்களே? கல்வி, துணிச்சல், ஆளுமை இதெல்லாம் பெண்களுக்கு வேணும்னே நெனைக்கலையே? காலம் எவ்வளவோ முன்னேறினாலும் நம்ம அத்தை மாதிரி பத்தாம்பசலித்தனமான மனுஷங்க இன்னமும் மாறலைங்கறதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். இதுல புகையிலை எப்படி வந்தது? புகையிலையை விரிச்சு வச்சா அதோட காரம் கொறைஞ்சிடுமாம். அதே மாதிரி பெண்கள் சத்தமாச் சிரிச்சா அவங்களோட பெண்மைத்தனம் கொறைஞ்சிடும்னு நெனைக்கறாங்க. இந்த தியரியை ஸப்போர்ட் பண்ண மகாபாரதக் கதையையும் சொல்லுவாங்க. தெரியுமா உனக்கு? ”

“ தெரியாதுக்கா சொல்லுங்க, சொல்லுங்க”

“ அது வேற ஒண்ணும் இல்லை. சின்னக் கதைதான். பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்த அரண்மனையைப் பிரமாதமாக் கட்டினாங்க இல்லையா? துரியோதனன் கிட்ட அதைக் காட்டிப் பெருமையடிச்சுக்க நெனைச்சு அவனுக்கு அழைப்பு விட்டாங்க. அவனும் தனக்கு நெருங்கினவங்களைக் கூட்டிககிட்டு அங்கே வந்தான். மாளிகையைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டானாம். ஓரிடத்தில் மாயை, ஓரிடத்தில் உண்மையான தண்ணீர் என்று மாறி மாறி இருந்ததில் தண்ணீரைக் கவனிக்காமல் வழுக்கி விழுந்துட்டான். அதைப் பாத்த திரௌபதி், அவனைக் கேலி செய்யற மாதிரி சிரிச்சதுனால அவனுக்கு ரொம்ப அவமானமாப் போயிருச்சாம். அந்த நிகழ்ச்சி தான் மகாபாரதப் போருக்கே வழிவகுத்ததுன்னு காரணம் காட்டறாங்க. அதுனாலதான் பொம்பளைங்க சத்தமாச் சிரிக்கக் கூடாதாம். அப்படி சிரிச்சா மிகப் பெரிய அழிவு ஏற்படுமாம். எப்படி இருக்கு நியாயம்? ”

“ அதுதானே? துரியோதனன் எவ்வளவோ அக்கிரமம் செஞ்சான். பாண்டவர்களுக்கு நிறைய அநீதிகள் நடக்கக் காரணமானவன் அவன் . நிச்சயமாக அழிக்கப் பட வேண்டியவன். கெட்டதை அழிச்சு தர்மத்தை நிலைநாட்டறதுக்காகத் தானே மகாபாரதப் போர் நடந்தது? அதையெல்லாம் விட்டுட்டு, திரௌபதி சிரிச்சதுனால யுத்தம் வந்ததுன்னு சொல்லறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. திரௌபதி அந்த சந்தர்ப்பத்தில் சிரிச்சது தப்பா இருக்கலாம். ஆனா நமக்கே சில சமயம் யாராவது இப்படி திடீர்னு வழுக்கி விழும்போது முதலில் சிரிப்புதான் வரும். அது மனித இயல்பு. கொஞ்ச நேரம் கழிச்சு உதவி செய்யப் போவோம். ஆனால் உடனுக்குடன் சிரிப்பு தான் வெடிச்சுக் கெளம்பும்” என்று மாதவி சொல்லிக் கொண்டிருந்தபோது பாவை, கோயிலில் இருந்து வந்துவிட்டதால் அவர்களுடைய உரையாடல் அப்படியே நின்றுபோனது.

பாவை ஒன்றும் அவ்வளவு முட்டாள் இல்லை. அவர்கள் இருவரும் எதையோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு தன்னைக் கண்டதும் விலகிச் செல்வதைக் கவனித்து விட்டாள். மனதிலும் போட்டு வைத்துக் கொண்டாள்.

அன்று அர்ச்சனை வாங்கியதில் இருந்து இரண்டு மருமகள்களும் விலகியே இருந்தார்கள். இந்த பயம் இருக்கட்டும் என்று எண்ணிப் பெருமிதம் கொண்டாள் பாவை. அதற்காக அவள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. அவ்வப்போது அதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏவுகணைகளை இருவர் மீதும் செலுத்தத் தவறுவதில்லை.

“ சொந்தத்துல பொண்ணு, ஆதரவில்லாம நிக்கறாளேன்னு இரக்கப்பட்டு மகனுக்குக் கட்டி வச்சேன்? என்ன பிரயோசனம்? வீட்டுக்குத் தேவையான ஆண் வாரிசைப் பெத்துத் தரமுடியலை இன்னும்” என்பாள். அதுவும், மணிமேகலை அவளுக்கு அருகில் நிற்கும்போது அவளுடைய காதுகளில் விழுவதற்காகவே வேண்டுமென்றே பேசுவது பாவையின் வழக்கமாகப் போனது. மணிமேகலை ஒன்றும் பதில் சொல்ல மாட்டாள் என்றாலும் மனம் வருந்தி நகர்ந்து செல்வதுண்டு. மாதவி, “ கவலைப்படாதீங்க அக்கா” என்று தள்ளியிருந்து சைகை காட்டுவாள்.

மாதவியையும் விட மாட்டாள். மாதவியின் மீது தாக்குதல் இன்னமும் மோசமாக இருக்கும். அவளுடைய பிறந்த வீட்டின் அந்தஸ்து இவர்களுக்கு சரிசமமில்லை என்கிற ரீதியில் தாக்குதல் நடக்கும்.

“ எங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்கப் போட்டி போட்டுக்கிட்டு வந்தாங்க. அத்தனையையும் ஒதுக்கித் தள்ளிட்டு, ஏழை வீட்டில் பொண்ணெடுத்து என்ன பிரயோசனம்? பாக்க நல்லாயிருந்தாப் போதுமா? நாளைக்கே என் புள்ளைக்கு ஆத்திரம், அவசரம்னா உதவி செய்ய ஒரு சல்லிப் பைசா கூடப் பெயராத எடத்துல சம்பந்தம் செஞ்சாச்சு. அவங்களும் ஏதோ கல்யாணம் செஞ்சு கொடுத்ததும் எங்க கடமை முடிஞ்சதுன்னு ஒதுங்கிட்டாங்களே? மறுவீடுன்னு கூப்பிடலை. ஆடிச் சீர், தலை தீபாவளி, தலைப் பொங்கல்னு ஒண்ணுமே நடக்கலையே என் புள்ளைக்கு? எனக்குத் தான் இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லை போலிருக்கு. கல்யாணத்துல போட்ட நகையெல்லாமே ரொம்ப மெல்லிசா இல்லை போட்டிருக்காங்க. காத்தடிச்சாப் பறந்துரும் போல இருக்கு. இதைப் போட்டுக்கிட்டு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு மாதவி வந்தா என்ன ஆகும்? என் முதுகுக்குப் பின்னாடி கேலி இல்லை பேசுவாங்க? என் மானத்தைக் காக்க வேற நகையைக் கொடுத்துப் போட்டுக்கச் சொல்லவேண்டிய கட்டாயம் எங்களுக்கு” என்று பாவை பேசும்போது மாதவியின் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கும்.

“ பாவம், மாமாவுக்கு இருந்த வசதிக்கு என்னை வீட்டோடு வச்சுக்கிட்டதே பெரிய விஷயம். என்னை நல்லாப் படிக்க வச்சுருக்காரு. நல்ல பெரிய இடத்துல கட்டிக் கொடுத்துருக்காரு. ஏதோ அவரால் முடிஞ்ச நகை, நட்டும் போட்டுருக்காரு. இதுக்கு மேல அவர் கிட்டயிருந்து எதிர்பாக்கறது அநியாயம்கா. இந்தச் செலவுகளுக்கே எவ்வளவு கடன் வாங்கிருக்காரோ? என்னால அவருக்கு எவ்வளவு கஷ்டம்! ” என்று சொல்லி மணிமேகலையின் மடியில் விழுந்து அழுது தீர்த்தாள் மாதவி. மனத் துயரத்தைக் குறைத்துக் கொள்ள அந்த ஒரு வழி மட்டுமே தெரிந்திருந்தது அவளுக்கு.

“ கவலைப்படாதே மாதவி. இவங்க பேசினால் பேசிட்டுப் போகட்டும். பேசிப் பேசி ஒருநாள் அவங்களே ஓய்ஞ்சு போயிடுவாங்க. இதெல்லாம் பொருட்படுத்தாதே. மணிமாறன் உன் மேல எவ்வளவு பிரியமா இருக்காரு பாரு. அதை நெனைச்சு சந்தோஷப்படு. நாளைக்கு அவரே நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டார்னா அவரே உன்னை நல்லா வச்சுப் பாத்துக்குவாரு. கை மேல வச்சுப் தாங்கப் போறாரு. பாத்துட்டே இரு” என்று விதவிதமாக ஆறுதல் மொழிகள் பேசித் தன்னால் முயன்றவரை மாதவியின் மனத்துயரைக் குறைத்தாள் மணிமேகலையும்.

இவையெல்லாம் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள். திடீரென்று பாவையின் கவனம், மாதவி இன்னமும் கருத்தரிக்கவில்லை என்கிற திசையில் திரும்பியது.

“ பணம், காசு தான் இல்லை. சரி, பரவாயில்லை. சீக்கிரமா நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசைப் பெத்துத் தருவான்னு நானும் எதிர்பாத்துட்டு உக்காந்திருக்கேன். ஏற்கனவே ரெண்டும் பொட்டைப் புள்ளைங்களாப் போச்சு. இவளாவது பேரனைப் பெத்துத் தருவான்னு நானும் காத்துட்டு இருக்கேன். அதுக்குப் வழி இல்லையே? இவ உடம்புல ஒருவேளை குறை இருக்கோ என்னவோ? ஆண்டவனே, எங்களை ஏன் இன்னும் சோதிக்கறே! ” என்று தாக்குதலுக்கான அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தாள் பாவை.

மாதவிக்கே இந்த விஷயம் ஏற்கனவே மனதை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. அதுவும் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை அவளுக்கு. சுரபி மற்றும் சுடரியுடன் விளையாடும் போதெல்லாம் தனக்கும் இதே போலக் காலாகாலத்தில் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். இப்போது மாமியார் வேறு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார். திருமணமாகி ஒரு வருடம் முழுதாக முடிந்து விட்டதால், மாமியாரின் எதிர்பார்ப்பு நியாயமானது என்றும் நினைத்தாள்.

சரியாக அந்தச் சமயத்தில் வீட்டில் நிறைய மாற்றங்கள் படையெடுத்துவந்தன. அந்த மாற்றங்கள் சோதனைகளா இல்லை நாளையே சாதனைகளாக மாறப் போகின்றனவா என்று யாருக்கும் அப்போது தெரியவில்லை.

இந்த மாற்றங்கள் மணிமேகலை, மாதவி இரண்டு பேருடைய வாழ்க்கைப் பாதைகளையும் ஒரே சமயத்தில் சுனாமியாகத் தாக்கி
யதென்னவோ உண்மைதான்.


தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
160
பொம்பளை சிரிச்சா போச்சு கதை அருமை....
இதுவும் எங்க Mummy சொல்ல கேட்டது.... சில விடயங்கள் மூடநம்பிக்கை என்று நினைத்து நாம் வெளி வந்திருப்போம் ஆனால் அதை இந்த தலைமுறைக்கு நாம் சொல்வது இல்லை....
அதுபோல தான் பழங் கதைகளும்....
மோட்டிவேஷன் stories என்று bedtime stories எல்லாம் மாறி விட்டது....


இப்போ யாரு இதிகாச கதைகளை சொல்றாங்க..கேக்குறாங்க....

அவர்களின் பழைய நினைவுகளுடன் என்னுடைய பழைய நினைவுகளும் ஓடுகிறது... 🤩🤩🤩🤩
 
Top Bottom