• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 3

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
நினைவெல்லாம் நீயே-3

அவளுடைய அழுகை கொஞ்சம் ஓய்ந்ததும் "இங்க பாரு டி..முதல் முதல்ல வேலைக்கு போக போற..காலைல குளிச்சு சாமி கும்பிட்டு நம்ம வீட்டுக்கு சாப்பிட வந்துடு.."

"நாளைக்கு நீ எதுவும் சமைக்க வேணாம்.. நானே சமைச்சு தரேன்..உங்கம்மாக்கும் நானே ஊட்டிவிடறேன்..."

"மீதி எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.. நாங்க கெளம்பறோம்.. இங்க எந்த பயமும் இல்ல.. எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்க தான்.. அதனால கதவை தாள் போட்டுகிட்டு நிம்மதியா தூங்கு.. காலைல பாக்கலாம்" என சொல்லி அவளை அணைத்து கண்களில் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்த கண்ணீரை தன் புடவை தலைப்பால் துடைத்து விட்டு "வாங்க போகலாம்" என சொல்லி தன் கணவரோடு கமலா கிளம்பினார்.

தன் வீட்டுக்கு போனதும் பராங்குசம் கமலாவிடம் "ஏன் கமலா இவ்ளோ அதிரடியா அவ வாழ்க்கையை நீ கைல எடுத்துக்கற.. அவ குழந்தை.. யோசிக்க கூட அவகாசம் தர மாட்டீயா" என அங்கலாய்ப்போடு சொல்ல..

கமலா.."என்ன சொன்னீங்க.. குழந்தையா.. ஆமா.. அவ குழந்தை தான்.. நல்லது கெட்டது தெரியுமா.. நாம தானே பெரியவங்களா அவளுக்கு வழி காட்டணும்..அவளை யோசிக்க விட்டா.. அடுத்த வரலட்சுமி உருவாகிடுவா.. அதுக்கு நான் விடமாட்டேன்" என ஆவேசத்தோடு சொன்னவர்

"இங்க பாருங்க...நீங்க என்ன பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ தெரியாது..அவள் கொஞ்ச நாளைக்கு நம்ம கடையிலேயே பாதுகாப்பா இருக்கட்டும்.. அதுக்கு பிறகு சினிமாவுல நடிக்கறதை பத்தி யோசிக்கலாம்.."

"மணி வந்தாலும் அவன் கிட்ட அவளுக்கு சான்ஸ் எதுவும் வாங்கி தர வேண்டாம்னு கண்டிஷனா சொல்லிடுங்க..
நமக்கு தாங்க அவ குழந்தை.. ஆனா பாக்கறவன் கண்ணுக்கு எல்லாம் இல்ல.."

"இவ வேற சோத்துக்கு இல்லேனாலும் நல்லா ஊட்டமா தள தளனு இருக்கா.. சினிமாக்கு போனா.. அங்க இருக்கிறவங்க கிட்டேயிருந்து இவளை காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்"

"அவ ஆசைக்கு ஒரு ரெண்டு மூணு படத்துல நடிக்க வெச்சிட சொல்லுங்க.. போதும்.." என சொல்லி விட்டு

"இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு பிறகு..அவளை சுசீலா பிள்ளைக்கு கட்டி வெச்சிடணும்..நாம பாக்க வளர்ந்தவன்.. மாட்டேன்னு சொல்ல மாட்டான்"

"அதுவும் இவளோட ஆளை அடிக்கிற அழகுக்கு எவன் இவளை வேணாம்னு சொல்வான் சொல்லுங்க" என பெருமையாக தன் பேச்சை முடித்தார்.

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த பராங்குசம் "எதையும் அவசரப்பட்டு திட்டம் போடாத..அப்பறம் அதே மாதிரி நடக்கலேனா..மன வேதனை தான் மிஞ்சும்.."

"குறிப்பா உன் மனசுல இப்டி ஒரு எண்ணம் இருக்கிறது அந்த பசங்களுக்கு தெரியாம பாத்துக்க..அப்பறம் அதுங்க வெகுளித்தனமா பழகறதும் போயிடும்..காலம் வர்றப்ப எல்லாம் தன்னால நடக்கும்"

"அவளை பத்தி நெனச்சு கவலைப்படாம.. போய் நேரத்தோட தூங்கு" என சொல்லி அவர் தூங்குவதற்கு ஆயத்தமானார்.

மறுநாள் காலையில் நேரத்தோடு எழுந்து குளித்து தன்னிடம் இருந்த சல்வாரில் பளிச்சென்று இருந்த ஒன்றை அணிந்து கொண்டு ஆராதனா பராங்குசம் வீட்டுக்கு வர.. அவளை வரவேற்று பராங்குசத்தோடு உட்கார வைத்து கமலா அவளுக்கு பிடித்த இட்லியும், கொத்தமல்லி சட்னியும் தட்டில் பரிமாற "போதும் பாட்டி ரெண்டு இட்லிக்கு மேல நான் சாப்பிடவே மாட்டேன்" என்றவளை வற்புறுத்தி மேலும் இரண்டு இட்லிகளை தட்டில் போட்டு சாப்பிட வைத்து தன் கணவர் பராங்குசத்தோடு கடைக்கு அனுப்பி வைத்தார்.

அவர்களின் கடை அவர்கள் வீட்டுக்கு பக்கத்து தெருவில் இருந்தது. அங்கு சென்று கதவை திறந்ததும், அங்கு நின்று கொண்டு இருந்த கடை ஊழியர்களின் ஒருவர் முதலில் கடையை பெருக்க..ஒருவர் விளக்கை துடைத்து எண்ணெய் ஊற்றி படங்களுக்கு பூ மாற்ற.. என அவர்களுக்கு சிறிது நேரம் பிசியாக இருந்தது.

பின்னர் விளக்கை ஆராதனாவின் கையால் ஏற்ற சொன்ன பராங்குசம் "இவ என் பேத்தி.. இனிமே கடையை இவ தான் பாத்துக்க போறா.."என கடை ஆட்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த 20×40 கடை இருக்கும் இடம் பராங்குசத்துக்கு சொந்தமானது. அதில் ஒரு பாதியை பிரித்து வருவோரை உட்கார வைக்கும் ரிசப்ஷனாகவும், மற்றொரு பாதியில் சினிமாவுக்கு சப்ளை செய்யும் ஆடைகள் வைக்கும் இடமாகவும் இருந்தது. அங்கிருந்த ஆடைகள் எல்லாம் ஒழுங்கில்லாமல் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

அதை பார்த்து மலைத்து போனவளை பார்த்த பராங்குசம் "கடையை நல்லா பாத்துக்க மா..வா..வர்றவங்க அவங்க என்ன தேவையோ அதை ரெண்டு நாளைக்கு முன்னாலயே நமக்கு சொல்லிடுவாங்க.. அதுக்கு ஏத்த மாதிரி நாம துணிகளை ரெடி பண்ணி அவங்களுக்கு சப்ளை பண்ணணும்."

"குடுக்கும் போது சரி, வாங்கும் போது சரி, அழுக்கு, கறை, கிழிசல் ஏதாவது இருக்கானு நல்லா செக் பண்ணி தான் குடுக்கணும் ..வாங்கணும்.."

"ஒரு வேளை ஏதாவது டேமேஜ் இருந்தா அந்த துணிக்கு அவங்க பணத்தை குடுத்துடணும்னு நாம சப்ளை பண்ணும் போதே நம்ம பில்லுல கண்டிஷன் இருக்கும். அவங்க யாரு என்னனு நம்ம புக்ல எழுதி அவங்க கிட்ட சைன் வாங்கணும்.."

"பெரும்பாலும் பிரச்சினை வராது.. எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்ச ஆளுங்க தான் வருவாங்க..யாராவது ஒருத்தன் தகராறு பண்ணுவான்.. அப்டி எதாவது நடந்தா.. நீ காளிய கூப்பிடு.. அவன் பாத்துப்பான்" என கடையை பற்றி விளக்கம் அளித்து விட்டு

"உனக்கு தொழில் பரிச்சயம் ஆகறவரைக்கும் ஒரு வாரம் நான் வர்றேன்..அப்பறம் நீயே பாத்துக்க கண்ணு" என சொல்லி விட்டு அங்கிருந்த டேபிளில் அவர் அமர.."சரி...தாத்தா...அப்டியே ஆகட்டும்" என சொல்லி அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் ஆராதனாவும் அமர்ந்து கடையின் நடவடிக்கைகளை உன்னிப்பாக பார்க்க ஆரம்பித்தாள்.

இப்படியே ஒரு மாதம் போனது.
சில நாட்களில் கடையின் நடப்பை புரிந்து கொண்ட ஆராதனா பராங்குசத்திடம் "ஏன் தாத்தா இப்டி குவியலா துணி வெச்சிருந்தா எப்டி ஆளுங்க வந்தா நம்ம ஆட்கள் எடுத்து தருவாங்க.. இதை சரி பண்ண நான் ஒரு ஐடியா சொல்லவா" என ஆர்வமாக கேட்ட ஆராதனாவை பார்த்தவர் கண்களில் ஒளியோடு ...

"என் ராசாத்தி.. இப்டி யாராவது சொல்ல மாட்டாங்களானு நான் ஏக்கமா இத்தனை நாளா காத்துட்டு இருந்தேன்..நீ சொல்லு டா.." என ஊக்குவித்தார்.

"தாத்தா..நம்ம கடையில தேவையான ஷெல்ப் இருக்கு..காஸ்ட்லியான துணிகளை தொங்க விட ஹாங்கர் இருக்கு.."

"நாம இது எல்லாத்தையும் அழகா பாக்க தெளிவா தெரியற மாதிரி அடுக்கி வெக்கலாமே..தேடற வேலையும் இல்ல.. இதனால நமக்கும் வேலை குறையுமே" என ஆராதனா சொன்னதுமே

பராங்குசம் "என் கண்ணு.. உனக்கு நம்ம கடையில என்ன சரி செய்யணும், எதை எப்டி செஞ்சா அழகா இருக்கும்னு தோணுதோ அதை செய்.. இது உன் கடை டா" என்றதுமே

அங்கிருந்தவர்களை கூப்பிட்டு முதலில் கடையில் என்னென்ன ரக துணிகள் உள்ளன, அவற்றின் ரகம், விலை பட்டியலை வைத்து தனி தனியாக அடுக்க சொன்னாள்.

அதன் பின் அதை அழகாக நீட்டாக அயர்ன் செய்து அங்கிருந்த தட்டுக்களில், விலை வாரியாக சீராக அடுக்க சொல்லி..யார் கடையில் இருந்தாலும் எடுத்து தரும் வகையில் அந்தந்த இடங்களில் விலை பட்டியலை ஒட்ட சொன்னாள்.

விலை அதிகமான துணிகளை ட்ரைக்ளீன் செய்ய சொல்லி பின்பு அதை நீட்டாக அயர்ன் செய்து ஹாங்கரில் போட்டு வைக்க, கடையை பார்க்கவே ஒரு புது ஷோரூம் போல ஆனது. எல்லாம் பார்வைக்கு கிடைக்க அவர்களின் வேலை மிகவும் குறைந்து போனது.

இதனிடையே எப்போது மணியை பார்த்தாலும், தன் நிலையை சொல்லி சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டபடி இருந்த ஆராதனாவையும் சமாளிக்க முடியாது, வீட்டில் அம்மா சொல்லி எச்சரித்த வார்த்தைகளையும் மீற முடியாது பெரிதும் திணற ஆரம்பித்தான்(தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom