• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நினைவெல்லாம் நீயே 2

Subha Balaji

Member
Joined
Jun 30, 2024
Messages
84
நினைவெல்லாம் நீயே-2

"வந்தவன் சினிமாகாரங்க வீட்டு பையன்னு சொன்னா அவனுக்கு அவமானமாம்..வெளில சொல்லிக்க முடியலயாம்.."

"எல்லாரும் அவனை கேவலமா பாக்கறாங்களாம்"

"சரி டி..நான் தெரியாம தான் கேக்கறேன்..இவன் சினிமாகாரனுக்கு தானே பொறந்தான். அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல தானே வளர்ந்தான்..படிச்சான்..அப்பலாம் வராத ஞானோதயம் இப்ப திடீர்னு எங்கே இருந்து அவனுக்கு வந்ததாம்"

"நீங்க கேக்கறது சரி தான் பாட்டி..அவன் இப்ப குடும்பஸ்தன் ஆகிட்டானாமே..எங்களோட கூட பேசி பழகினா அவன் மாமியார் வீட்டுல அவங்களை ஒதுக்கிடுவாங்களாம்.."

"அதனால இனி எங்களுக்கும் அவனுக்கு எந்த தொடர்பும் இல்லனு சொல்லிட்டு அம்மாவை சண்டை போட்டு கதற விட்டுட்டு போயிட்டான்.."

"ஏற்கனவே அவங்களுக்கு உடம்பு சரியில்ல.. அத பத்தி கூட துளியும் யோசிக்கல பாட்டி"

"எதுவுமே தெரியாத மாறி..கூட வந்த பொம்பள பேச்சை கேட்டுக்கிட்டு.. எங்கள கேவலமா பேசிட்டு எங்க நாங்க திரும்ப அவனுக்கு போன் பண்ணிட போறோமோனு எங்க நெம்பர் ப்ளாக் பண்ணிட்டான்..வேற நம்பரே மாத்திக்கிட்டானாம்" என சொல்லி கேவி கேவி அழுதாள்.

"ஐயோ..என்னடி சொல்ற...நான் இங்கயே தானே இருக்கேன்...
எனக்கு தெரியாத போச்சே..இது எப்ப டி நடந்தது" என அதிர்ச்சியோடு கேட்டார்..

அவரின் கேள்வியால் தலை குனிந்த ஆராதனா "ரெண்டு நாள் முன்னால பாட்டி ..நீங்க ஊருக்கே போயிருந்தீங்களே..அப்ப தான்.."

"அவன் வந்து எவ்ளோ ஆக்ரோஷமா பேசினான் தெரியுமா..நீங்க இருந்திருந்தா..அவனா உங்களை மீறி எதுவும் பேசியிருக்க முடியாதே பாட்டி.."

"அதான் நீங்க யாரும் இல்லாத நேரமா பாத்து வந்தான்.."

"வீட்டுக்குள்ள வர்றத்துக்கு கூட முகத்தை சுளிச்சுட்டு வந்து.. அம்மாவை அசிங்கமா பேசி அழ வெச்சான்"

"அப்பா இல்லாம போனா என்ன..அண்ணா தான் இருக்கானே..அவன் அப்பா மாதிரி எங்களை நல்லபடியா பாத்துப்பான்..."

"அண்ணன் காப்பாத்துவான்.. என்னை காலேஜ் படிக்க வெப்பான்னு கனவு கண்டோம் பாட்டி.. எல்லாமே..அது எல்லாமே பகல் கனவா போச்சு பாட்டி" என பெருங்கேவலோடு அவரை அணைத்து அழ ஆரம்பிக்க, எதுவும் புரியாது போனாலும் அவளை மெதுவாக முதுகில் தடவி சமாதானம் செய்தார்.

அதன் பிறகு ஆராதனாவின் போராட்டம் ஆரம்பம் ஆனது.

அண்ணன் தந்த அதிர்ச்சியில் மனம் உடைந்த அம்மா யாரிடமும் பேசாமல் ஒரே இடத்தில் நிலைத்து பார்த்தபடி இருக்க ஆரம்பித்தார். கூப்பிட்டால் கூட தெரியாத அளவுக்கு இருக்கவே பயந்து போன ஆராதனா தங்களது வீட்டு அருகில் இருக்கும் டாக்டர் ராஜாராமனிடம் போய் நடந்ததை சொல்லி அவரை வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவை பரிசோதிக்க சொன்னாள்.

அவரும் பரிசோதித்து விட்டு "பலமான அதிர்ச்சி தாக்கி இருக்கு மா.. ஏற்கனவே உங்கப்பன் போன அதிர்ச்சி.. கூடவே இப்ப உங்கண்ணன் விக்னேஷ் குடுத்த அதிர்ச்சியும் சேர்ந்திருச்சு...."

"ம்ம்ம்..கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும்.. எதுக்கும் கூடவே யாராவது ஆளுங்க இருக்கட்டும். அப்ப தான் சீக்கிரமே சரியாகும்..கவனமா பாத்துக்க மா" என சொல்லி விட்டு கிளம்பினார்.

வீட்டில் அடுத்த நாளுக்கு சமைப்பதற்கே அரிசி இல்லை.. என்ற நிலைமை வந்ததும் மீண்டும் பராங்குசம் வீட்டுக்கு போனாள் ஆராதனா

அவளை பார்த்ததும் கமலா "வாடி.. ஏன் முகம் வாடி இருக்கு.. ஏதாவது சாப்பிட்டியா இல்லையா.. "என பாசமாக கேட்டார்

கண்களில் கண்ணீரோடு ஆராதனா "இல்ல பாட்டி.. இருந்த அரிசியை வெச்சு மதியம் கஞ்சி காய்ச்சிட்டேன்.. நாளைக்கு சாப்பாடு செய்ய பிடி அரிசி கூட இல்ல...யார் கிட்ட கேக்கறதுனே தெரியல" என்றதை கேட்டதும்

"அடியேய்..என்னை கோவப்படுத்தாதே...
நாங்க இல்ல.. உனக்கு... தாத்தா பாட்டினு வாய் வார்த்தைக்கு தான் சொல்றோமா.."

"நிஜமாவே நீ எங்க பேத்தி தான் டி" என சொல்லி தரதரவென உள்ளே அழைத்து சென்று அவளுக்கு உணவை தட்டில் போட்டு ஊட்ட ஆரம்பித்தார்.

அவள் சாப்பிட்டதும் அவளிடம் அவள் அம்மாவுக்கு குடுத்து அனுப்பிவிட்டு, சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து கணவரிடம் ஆராதனா சொன்ன விஷயத்தை சொல்லி அவரையும் அழைத்து கொண்டு அவளுடைய வீட்டுக்கு போனார்.

அங்கு ஆராதனா சோகமாக உட்கார்ந்து இருக்க அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஆறுதலாக அவள் தலையை தடவி விட்ட பராங்குசம் "நாங்க இல்ல..ஏம்மா.. கண்ணு கவலையா இருக்க..அந்த பொறம்போக்கு போனா போறான்... அவன் புத்தி இப்பவாவது தெரிஞ்சதே"

"நான் எத்தனையோ தடவை உங்கப்பன் கிட்ட சொன்னேன்.. இருக்கிற காசை எல்லாம் அவன் தலையில கொண்டு கொட்டாதே.. அவன் சுயநலம் பிடிச்சவன்.. "

"உனக்கு பிற்காலத்துல ஒண்ணும் செய்ய மாட்டான்னு அனுபவப்பட்டவன் நான் சொன்னதை அவன் காதுலயே வாங்கல"

"ஐயா.. என் பிள்ளை நீங்க நெனக்கற மாதிரி இல்ல.. தங்கமானவன்..அவன் நிச்சயம் குடும்பத்தை காப்பாத்துவான்.. என் பொண்ணுக்கு நல்ல வழி காட்டுவான்னு பெருமையா பேசுவான்"

"நான் தான் இப்டி படிக்காத தற்குறியா போயிட்டேன்.. ஆனா என் புள்ள நல்லா படிக்கறான்..அவனுக்கு நான் தர்ற சொத்து படிப்பு மட்டும் தானே ஐயா.."

"அவன் முன்னேறி இந்த குடும்பத்தை என்னை விட பல மடங்கு அருமையா தாங்குவான்னு சொல்லி சொல்லி சந்தோஷப்படுவானே"

"அவன் ஆளே இல்லாம போனதும்..புள்ள வீட்டு பக்கம் வர்றத நிறுத்தினான்..இப்ப என்னாச்சு பாரு..விடு.. போனது போகட்டும்.."

"இனி அந்த நாய் இங்க வந்தா கூட வீட்டுக்குள்ள சேக்காத..செருப்பால அடிச்சு விரட்டு..நன்றி கெட்டவன்" என சொல்லி ஏதோ கெட்ட வார்த்தைகளை வாய்க்குள்ளே முணுமுணுத்து விட்டு

"இங்க பாரு மா..எனக்கு இருக்கிறது ஒரே பையன்... அவனும் இப்ப என் தொழிலை பாத்துக்கறான். நானும் நெறய காசு சேத்து வெச்சிருக்கேன் மா..தனியா சினிமாக்கு டிரஸ் வாடகைக்கு விடற கடையும் வெச்சிருக்கேன் "

"நான் யார்க்கு பதில் சொல்லணும்.. சொல்லு.. நீ என் பேத்தி மா.. உன்னை நான் படிக்க வெக்க மாட்டேனா ஏம்மா.. இப்டி ஒரு முடிவு எடுத்த"என கேட்டதும்

ஆராதனா மறுபடியும் பெருங்குரலில் அழுதபடி "தாத்தா..வேணாம் தாத்தா..அண்ணன் கிட்ட காசு வாங்கறத்துக்கு வேற தொழில் பண்ணலாம்னு அவன் கூட வந்த அவன் பொண்டாட்டி எங்களை அசிங்கமா பேசின பிறகு எனக்கு படிக்கிற ஆசையே போயிடுச்சு.."

"உங்க அன்பு மட்டும் போதும் தாத்தா.. பணம் காசு எல்லாம் வேண்டாம்.. எனக்கு எப்டியாவது கவுரவமா பொழைக்கறத்துக்கு ஒரு வழி காட்டுங்க அது போதும்.."

கமலா "சரி.. சரி.. நீ சொல்றபடியே செய்வோம்..எழுந்திரு..ம்ம்ம்..
அழுதது போதும்.. கண்ணை துடை.. போய் முகத்தை நல்லா அலம்பிட்டு வா" என அதிகாரமாக அவளை மிரட்டியதும் மெல்ல எழுந்த ஆராதனா போய் முகம் அலம்பி துடைத்து கொண்டு வந்தாள்.

ஏதோ சொல்ல வந்த பராங்குசத்தை தன் பார்வையால் அடக்கிய கமலா "உங்க அண்ணன் ஷுட்டிங் போயிருக்கான். இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவான். நான் அவன் கிட்ட சொல்லி உனக்கு சான்ஸ் வாங்கி தரேன் அது என் பொறுப்பு" என சொன்னதும் முகம் மலர அவரை பார்த்த ஆராதனாவிடம்.." நான் சொல்ற கண்டிஷன்க்கு நீ ஒத்துக்கிட்டா தான் இது நடக்கும்" என பொடி வைத்து பேச..

அதில் குழப்பமான ஆராதனா "என்ன கண்டிஷன் பாட்டி.. நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் ஒத்துக்கறேன்" என வேகமாக சொன்னதும்..

கமலா "இரு.. இரு.. அவசரப்படாதே..நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. அப்பறம் முடிவு எடு..சரியா..."

"நீ என்ன தான் எங்களை ஒதுக்கினாலும் நாங்க உன்னை எங்க பேத்தியா தான் நெனக்கறோம்..."

"மாசத்துல ஒரு வாரம் மட்டும் தான் நீ சினிமாவுல போய் நடிக்கணும்..மிச்ச நேரத்துல தாத்தாவோட கடைய நீ பாத்துக்கணும்.. அதுக்கு தனியா சம்பளம் குடுத்துடுவோம்.."

"உங்க தாத்தாவுக்கு வயசாச்சு.. அவரால முன்னை போல தொடர்ந்து உக்கார முடியல..அதனால கடை முழுக்க உன் பொறுப்பு தான் புரியுதா.."

"அது போல நீ பணத்தை பத்தி கவலைப்படாம உன் படிப்பை விடாம தபால்ல படிக்கணும்.. அது இந்த பாட்டியோட பரிசு..இதுக்கு ஒத்துக்கிட்டா..மேல பேசலாம்.. இல்லேனா நாங்க கெளம்பறோம்" என்றதும் உடனே ஓடி வந்து அவர் கால்களில் விழுந்த ஆராதனா "நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சம்மதம்" சொன்னாள்.

"சரி.. சரி.. எழுந்திருடி.. இப்டி எல்லாம் செஞ்சு என்னையும் உன்னை போல அழ வெச்சுடாத..வரலட்சுமிய பாத்துக்க.. "

"நாளைலேந்து கடைக்கு போய் தாத்தா கூட உதவியா இருந்து தொழிலை கத்துக்க..சினிமால நடிக்கறது பத்தி மணி வந்த பிறகு அவன் கிட்ட பேசிட்டு முடிவு எடுக்கலாம்.." என அவளை மெல்ல சமாதானம் செய்தார். (தொடரும்)
 

Author: Subha Balaji
Article Title: நினைவெல்லாம் நீயே 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom