Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 16
மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த பவித்ராவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவள் மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும் மதுமிதா பவித்ராவுடனேயே இரவில் அருகிலிருந்து பார்த்துக் கொண்டாள்.
எனினும் நிரஞ்சனிடம் மதுமிதா பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவனே அவளிடம் சென்று நந்தகுமார் அழைத்ததைப் பற்றிக் கூறினான்.
“ஓ சூப்பர். அப்படின்னா நம்ம பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சு. நீங்க வர்றேன்னு சொல்றதைத் தடுத்துட்டு அவரே நேர்ல வர்றதைப் பார்த்தா உங்க ஃப்ரெண்டுக்கும் பவித்ராவைப் பிடிச்சிருக்குன்னு அர்த்தமாகுதே” என அவள் படபடப்பாகப் பேசிக் கொண்டே சென்றாள்.
மின்னும் விழிகளுடன் பேசும் அவளையே சற்றுநேரம் பார்த்திருந்தவன், அன்று நேரடியாக நந்தகுமாரிடம் கேட்டதையும், அதற்கு அவன் உடனே மறுப்புத் தெரிவிக்காமல் இருந்ததைப் பற்றியும் பகிர்ந்து கொண்டான்.
“இப்படி மனசு நிறைய அன்பு வச்சுட்டு இருக்குறவங்களைப் பிரிக்கப் பார்த்தீங்களே. சரியான கல்நெஞ்சுக்காரர் நிரஞ்சன் நீங்க” என மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னாள் மதுமிதா.
“ஆமாம், முன்னாடி அப்படி இருந்தேன். ஒத்துக்கிறேன். ஆனா இப்போ அப்படி இல்லை” என அவள் சொன்னதற்கு மறுக்காமல் ஆமோதித்தான். தொடர்ந்து, “பவிக்குப் பிடிச்ச நந்தகுமாரை அவன் கால்ல விழுந்தாவது மன்னிப்புக் கேட்டு அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்” எனச் சபதம் போலச் சொன்னான்.
பவித்ராவிடம் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான். நந்தகுமார் நேரில் வருகையில் அவளுக்கு இனிய அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று தெரிவித்தான்.
அதுவே மதுமிதா அவனிடம் கடைசியாகப் பேசியது. அதன்பிறகு அலுவலகத்திலும் சரி, வெளியில், மருத்துவமனை என எங்குப் பார்த்தாலும் அவளாக அவனிடம் சென்று எதுவும் பேசவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என நிரஞ்சனே அடிக்கடி அவளிருக்கும் இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
அந்த வாரக் கடைசியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மதுமிதா பவித்ராவைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்திலேயே நிரஞ்சன் வேறு ஓர் இளைஞனுடன் வீட்டினுள் நுழைந்தான். சொல்லாமலேயே அவன் நந்தகுமார் என ஊகம் செய்து கொண்டாள் மதுமிதா.
வீட்டினுள் நுழைந்தவர்களைப் பார்த்ததும் கௌரி ஒரு கணம் திகைத்துப் போனார். இப்பொழுதெல்லாம் மகனுடன் அதிகமாக இல்லையென்றாலும் ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கிறார் கௌரி.
பின்னே எவ்வளவு கல்நெஞ்சம் படைத்தவராக இருந்தாலும் நாய்க்குட்டியாய்க் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் மகனிடம் தூரப் போ என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை.
எனினும் வீட்டிற்கு இப்படி உரிமையோடு இதுவரையில் வந்ததில்லை. அதனால் நிரஞ்சனைப் பார்த்ததும் சற்றுத் தடுமாறியவர் அருகில் நின்று கொண்டிருந்த நந்தக்குமாரைப் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ந்தவாறு, “நந்தா வாப்பா... உடம்புக்கு இப்போ எப்படியிருக்கு?” என விடுவிடுவென்று அவனிடம் ஓடினார்.
“ரொம்ப நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்களே பாருங்க” என ஒரு சுற்றுச் சுற்றி நின்று அவரிடம் காட்டினான்.
“இன்னும் அந்த விளையாட்டுத்தனம் உனக்குப் போகவே இல்ல” எனச் சிரித்தார். உண்மையில் நந்தகுமார் இருக்குமிடத்தில் எப்போதும் கலகலப்பாக இருக்கும். முன்பெல்லாம் நிரஞ்சன் அது சுத்த நேரவிரயம் என்று நினைத்திருந்தான்.
ஆகவே இயல்பாகவும் கலகலப்பாகவும் பேசும் நந்தகுமாரை அவருக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே மகள் இவனை விரும்பியிருப்பாளோ என நிறையத் தடவை யோசித்திருக்கிறார் கௌரி.
“வா உட்காருப்பா, என்ன சாப்பிடுற? ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கிற. உன்னைப் பார்த்ததுல கையும் ஓடலை காலும் ஓடலை. ரொம்பச் சந்தோஷமா இருக்கு...” படபடவென்று கௌரி பேச ஆரம்பித்தார்.
மகன் பவித்ரா வேலை செய்யும் அதே அலுவலகத்துக்கு வேலைக்கு வந்திருக்கிறான் என்று அறிந்த பொழுதும் சரி, பவித்ராவின் பிறந்தநாளன்று தங்கள் வீட்டில் மகனைக் கண்ட பொழுதும் சரி, அவர் இப்படியெல்லாம் எதிர்வினை ஆற்றவில்லை.
ஆனால் நந்தகுமாரைக் கண்டதும் அவரின் முகமெல்லாம் மலர்ந்து போனது. அவர் பேச்சிலும் நடையிலும் ஒரு துள்ளல் சேர்ந்து கொண்டது.
இருக்காதா பின்னே? தன் மகன் பொருட்டு நந்தகுமார் பலவித இன்னல்களை அனுபவித்து இருக்கிறான் என்று தெரிந்ததுமே அவருக்கு வேதனையாக இருந்தது. அவரும் ஒரு தாயல்லவா? நந்தகுமாரின் அன்னையும் தந்தையும் எவ்வாறெல்லாம் துடித்திருப்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா?
யார் செய்த புண்ணியமோ... நல்லவேளையாக நந்தகுமாருக்கு எதுவும் ஆகவில்லை. நல்லபடியாக உடல் தேறி வந்து விட்டான். நந்தகுமாரைப் பார்த்ததில் கௌரிக்கு மிகவுமே மகிழ்ச்சியாக இருந்தது. அதையும் விட நிம்மதியாக இருந்தது.
நந்தகுமாரை அமரச் செய்து அவனுக்கு உபசாரத்தை ஆரம்பித்தவர், அருகில் நின்று கொண்டிருந்த மதுமிதாவை பார்த்து, “பவி எங்கேம்மா?” எனக் கேட்டார்.
“பாத்ரூம்ல இருக்கா ஆன்ட்டி. இப்போ வந்துடுவா” என அவரிடம் பதில் தந்தாள்.
நந்தகுமாரைப் பார்த்த கௌரி, “நம்ம பவியோட ஃப்ரெண்ட மது” என அவனுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, “இரு, உனக்கு முதல்ல குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். சமையல் முடிஞ்சது. சீக்கிரம் சாப்பிடலாம்” எனச் சமையல் அறைக்குள் ஓடாத குறையாக ஓடினார்.
தன் அன்னையின் நடையில் துள்ளல் திரும்பியிருப்பதை உணர்ந்தான் நிரஞ்சன். மதுமிதா எவ்வளவு சரியாகச் சொன்னாள். அவன் மொத்தக் குடும்பமும் நந்தகுமாரை நேரில் பார்த்தாலே போதும். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிட்டிவிடும்.
அது புரியாமல் அவன் மட்டும் அவர்களுடன் ஒன்று சேர வேண்டுமென இத்தனை நாளாக மெனக்கெட்டுக் கொண்டிருந்தான். மதுமிதா சொல்லியிருக்கவில்லை என்றால் இந்த மரமண்டைக்குப் புரிந்திருக்காது.
அவன் இன்னுமே மௌனம் எனும் ஆயுதத்தை ஏந்திக் கொண்டு பவித்ராவையும் கெளரியையும் குட்டிப் போட்ட பூனையாகச் சுற்றிக் கொண்டிருந்திருப்பான்.
நல்லவேளையாக மதுமிதாவின் அறிமுகம் தனக்குக் கிட்டியது. வாழ்வே பிரகாசமாகி விட்டதைப் போலுணர்ந்தான் நிரஞ்சன். தானும் நந்தகுமாரின் அருகில் அமர்ந்தவாறு மதுமிதாவை ஏறிட்டுப் பார்த்தான்.
நந்தகுமாரைப் பார்த்துப் புன்னகைத்த மதுமிதா நிரஞ்சன் என்றொருவன் அங்கே இருப்பதாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. “நான் போய்ப் பவியைக் கூட்டிட்டு வர்றேன்” என நந்தகுமாரிடம் மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்ற மதுமிதா, சில நொடிகளிலேயே பவித்ராவுடன் முன்னறைக்கு வந்தாள். ‘யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்’ என்று மட்டும் சொல்லி அவளை அழைத்து வந்தாள் மதுமிதா.
ஆனால் முன்னறையில் அமர்ந்திருந்த நந்தகுமாரை சற்றும் பவித்ரா எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்ததும் கால்கள் ஒத்துழைக்காமல் உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டாள். அவளையும் அறியாமல் கண்கள் தாமாகக் குளம் கட்ட ஆரம்பித்தன.
சிலையென நின்றிருந்தவளின் தோளைத் தட்டி நடப்புக்குக் கொண்டு வந்த மதுமிதா, “ஏன் நின்னுட்டே இருக்கப் பவி? வந்து உக்காரு” எனக் கையைப் பிடித்து மெதுவாக அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள்.
பவித்ராவிற்கு ஏனோ அழுகையாய் வந்தது. அவளால் இவன் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டான் என நினைத்து மருகினாள். கடந்த ஒரு வருடமாக இதைப் பற்றி நினைத்து வேதனைப் படாத நாளில்லை.
அங்கேயே இருந்து அனைவருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என எண்ணினாள் மதுமிதா. தனக்கு அவளின் கடந்த காலம் பற்றித் தெரியும் எனப் பவித்ரா அறிவாளா என்று தெரியாது.
அது மட்டுமல்லாது அவள் அங்கேயே இருந்தால் பவித்ரா எதுவும் பேசமாட்டாள் என உணர்ந்து, “நான் போய் ஆன்ட்டிக்கு ஹெல்ப் பண்ணறேன். நீங்க பேசிட்டு இருங்க” என மதுமிதா மெதுவாக நகர்ந்து சமையலறை நோக்கிச் சென்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனின் மனம் துணுக்குற்றது. அவர்கள் வந்து கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னமும் மதுமிதா அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரு புன்னகைக்குக் கூட அத்தனை பஞ்சமாகிவிட்டதா?
அதற்குள் நந்தகுமாருக்குக் குடிக்கவென்று கௌரி பழச்சாறு எடுத்து வர, அவருக்கு உதவிடும் நோக்கத்தில். “கொடுங்க ஆன்ட்டி, நான் எடுத்துட்டு வரேன்” என அதை வாங்கிக் கொண்டு மீண்டும் முன்னறைக்கு வந்தாள் மதுமிதா.
முதலில் நந்தகுமாரின் முன்னால் நீட்டி, “எடுத்துக்கோங்க” எனப் புன்னகையுடன் அவன் முகம் நோக்கிச் சொன்னாள். அடுத்து நிரஞ்சனிடம் கொண்டு வந்தவள் வெறுமென நீட்டினாள்.
நந்தகுமாரிடம் நீட்டுகையில் அவன் முகம் பார்த்துப் புன்னகைத்து உபசரித்தவள், தன்னிடம் மட்டும் ஏதோ மூன்றாம் மனிதரிடம் நடந்து கொள்வது போல் நடந்து கொள்கிறாளே என எரிச்சல் கொண்டான் நிரஞ்சன்.
‘டேய் மடையா? பார்க்கப் போனால் நீ தான் அவளை உபசரிக்க வேண்டும். நீ இங்கே இல்லையென்றாலும் இந்த வீட்டில் இருப்பவர்கள் உன் குடும்பம். உன் வீட்டுக்கே வந்து உன்னையே உபசரிப்பாளா?’ என அவன் மனசாட்சி அவனைத் திட்டியது.
பவித்ரா அங்கே அமர்ந்து கொண்டிருந்தாளே தவிர வாய் திறந்து எதுவும் பேசவில்லை. நந்தகுமாரே வாய்திறந்து, “இப்போ கால் எப்படியிருக்கு பவி?” எனக் கேட்க, “இத்தனை நாளா ஊமையா இருந்தீங்களா?” என அவன் மேல் உள்ள கோபத்தை அப்படியே வெளிக்காட்டினாள்.
“பவி..” என நிரஞ்சன் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, “இல்ல.. கோமால இருந்தேன்” எனச் சிரித்தான் நந்தகுமார்.
“ஒழுங்காப் பேசு பவி” என மதுமிதா அவள் தோளை ஒரு தட்டு தட்ட, “நான் ஏன் பேசணும்? யார் இவரு எனக்கு?” என எரிந்து விழுந்தாள்.
“அதை நீயே உன் மனசுகிட்டே கேளு” என நந்தகுமார் பதில் தந்தான். நந்தகுமார் பேசி அவளைச் சரி செய்துவிடுவான் என்ற நம்பிக்கை மதுமிதாவுக்குப் பிறந்தது. இப்போது பவித்ராவின் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு அங்கிருந்து மீண்டும் சமையலறைக்குள் சென்றாள் மதுமிதா.
“மனசுல இருக்கிறதைக் கேட்டு வெளில சொன்னா, அப்படியே அதெல்லாம் நடக்கிற மாதிரி” என அப்போதும் எரிந்து விழுந்தாள் பவித்ரா.
“டேய் பவி... சாரிடா. உனக்குப் பிடிச்ச நந்தாவை உன் கண் முன்னாடி நிறுத்திட்டேன். உன் விருப்பப்படியே...” என நிரஞ்சன் மேற்கொண்டு பேசும் முன்னால், “எனக்குப் பிடிச்சிருக்குன்னு நினைச்சேன். ஆனா, இப்போ யோசிச்சுப் பார்த்தா பிடிக்கலைன்னு தோணுது” என்றாள் பவித்ரா.
எப்படிச் சென்றாலும் குறுக்கே அணையைக் கட்டுகிறாளே என நந்தகுமாரைப் பரிதாபமாகப் பார்த்தான் நிரஞ்சன்.
“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்குப் பவி. பெரிய மனசு பண்ணி என்னை ஏத்துக்குவியா?” என்றான் நந்தகுமார்.
பவித்ராவின் கண்களில் கடகடவென்று கண்ணீர் வழிந்தது. “அப்போ பிடிக்கலைன்னு சொன்னீங்க. இது சரிவராதுன்னு அட்வைஸ் பண்ணினீங்க” என மூக்கை உறிஞ்சியவாறே கேட்க, “அப்போ சொன்னதையெல்லாம் நம்பின இல்லை. இப்போ சொல்லறதையும் நம்பும்மா” என்றான் நந்தகுமார்.
பவித்ரா அவள் அண்ணனைக் கண்ணால் சுட்டிக் காட்டி, “இப்போ மட்டும் உங்க சாருக்கு ஒன்னும் பிரச்சனையில்லையா? பணம் அந்தஸ்து, தகுதின்னு எதுவும் சொல்ல மாட்டாரா? அவருக்கு எந்தப் போதி மரத்தடில ஞானோதயம் வந்தது?” எனப் பரிகாசமாகக் கேட்டாள்.
கலகலவென்று சிரித்த நந்தகுமார், “பவி, யாரவது வந்து மன்னிப்பு கேட்டா. அவங்களை மன்னிக்கணும். நடந்தததையே நினைச்சுட்டு இருந்தா வாழ்க்கையில சந்தோஷமே கிடைக்காது” என அவளைக் கூர்ந்து பார்த்தான்.
“நீங்க என்கிட்டே மன்னிப்பு கேட்கலையே” என அவள் சிறு குழந்தையாய் முகத்தைத் திருப்ப, நந்தகுமார் தன் இருக்கையில் இருந்து எழுந்து அவளருகில் வந்தான்.
“நான் வேணா கால்ல விழறேன். என்னை மன்னிச்சிடு” என அவன் குனியப் போக, “ஐயோ நந்தா என்ன பண்ணறீங்க” என அவள் பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்துவிட்டாள். அவசரமாக எழுந்ததில் காலில் பலமில்லாமல் சற்றுத் தடுமாறிப் போனாள்.
நந்தகுமார் கையை நீட்டி அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். நடக்கவே நடக்காது என நினைத்திருந்தது ஈடேறுகையில் தோன்றும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
உள்ளம் பிரவாகமாகப் பொங்க,“உங்ககிட்ட மன்னிப்புக் கேட்க வேண்டியது நான். இத்தனை பிரச்சனையும் என்னால உங்களுக்கு வந்தது” எனக் கேவி கேவி அவன் மேலேயே சாய்ந்து அழுதாள் பவித்ரா.
சற்றுநேரம் அவளை அழவிட்டவன், “பிரச்சனை வரலைன்னா எனக்குக் கல்யாணமே ஆகியிருக்காதுன்னு யோசி பவி. அந்தப் பிரச்சனையால நம்ம ஒன்னு சேர்ந்தோம்னு நேர்மறையா நினை. பார்க்கப் போனா அந்தப் பிரச்சனை எனக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கு” என்றான் நந்தகுமார்.
அந்த வாக்கியத்தில், ‘உனக்காக எதையும் தாங்கிக் கொள்வேன்’ எனப் பவித்ராவின் மேல் வைத்திருந்த மொத்தக் காதலையும் வெளிப்படுத்திவிட்டான் நந்தகுமார். அவன் மனம் நிரஞ்சனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவன் அதற்குமேல் அங்கே இருப்பது உசிதமில்லை என இருக்கையில் இருந்து எழுந்தான்.
அதே சமயத்தில், “சாப்பாடு ரெடி...” என மதுமிதா அங்கு வந்து குரல் கொடுக்க, பவித்ரா மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.
நந்தகுமாரும், பவித்ராவும் அருகருகில் நிற்பதைப் பார்த்து மதுமிதாவுக்குப் புன்னகை வந்தது. அவர்கள் இரண்டு பேருக்கும் வாழ்க்கையில் இனி பிரிவே வரக் கூடாது என மனதார வாழ்த்தினாள் .
இப்போதாவது தன்னைப் பார்ப்பாளா என நிரஞ்சன் மதுமிதாவையே பார்க்க, அவள் பவித்ராவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு திரும்பினாள்.
அவள் முதுகையே நிரஞ்சன் வெறித்துக் கொண்டிருக்க, “என்னடா ஆச்சு... வா சாப்பிடலாம். பசிக்குது” என நந்தகுமார் அவனை நடப்புக்கு இழுத்து வந்தான்.
சாப்பிடும் பொழுது, முகமெல்லாம் புன்னகையுடன் இருந்த பவித்ராவைப் பார்த்தாள் மதுமிதா. இதுவரையில் காணாத மலர்ச்சியை அவளிடம் கண்டாள் மதுமிதா.
காதல் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் மாற்றி விடுகிறது? தனக்கு அந்தக் கொடுப்பினை இல்லையே எனப் பெருமூச்சு விட்டவள், ‘பவித்ராவுக்காக அவள் சந்தோஷப்படும் தருணம். தன்னைப் பற்றி யோசித்து அதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது’ என உடனே மனதை சரி செய்து கொண்டாள்.
நீண்ட நாட்கள் கழித்து மகளின் முகத்தில் அரும்பிய மலர்ச்சியைக் கண்ட கௌரிக்குக் கும்மிருட்டில் சிறிது வெளிச்சம் பரவுவதைப் போலிருந்தது. ஆனாலும் அவர் மனதை ஒன்று உறுத்திக் கொண்டிருக்க, “நந்தா, உன் அம்மா-அப்பா இதுக்கு ஒத்துக்குவாங்களா?” எனக் கேட்டார்.
அவர் ஏன் கேட்கிறார் என அனைவருக்கும் புரிந்தது. சற்றுநேரம் அமைதியாக இருந்த நந்தகுமார், “கொஞ்ச நாளா கல்யாணத்துக்குக் கேட்டுட்டு இருக்காங்க ஆன்ட்டி . நான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்போவே அவங்களுக்கு என் மனசு புரிஞ்சிருக்கும். என்னால பவியைத் தவிர யாரையும் என் மனைவியா நினைச்சுப் பார்க்க முடியாது” என்றான் நந்தகுமார்.
“ஹே பவி” என அவள் தோளைத் தன் தோளால் செல்லமாக இடித்த மதுமிதா, “சீக்கிரமாக் கல்யாணச் சாப்பாடு போட போற...எனக்கு ஸ்பெசல் ட்ரீட் கொடு... இப்போவே சொல்லிட்டேன். இந்த ஐடியாவை உன் அண்ணன்கிட்டே கொடுத்து எப்படி உன் நந்தாவை இங்கே வர வச்சேன் பாரு” எனச் சிரித்தாள்.
“போ மது...” என அவள் அழகாக வெட்கப்பட்டுச் சிரிக்க, “உனக்கு எப்போ கல்யாணம் மது?” எனக் கௌரி கேட்டார். திடீரென்று அறை அமைதியானது.
“வீட்ல டெய்லியும் கேட்டுட்டே இருக்காங்க ஆன்ட்டி. கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லியிருந்தேன். ஆனாலும் அவங்களைச் சொல்லியும் தப்பில்லை. ஒரு மாப்பிள்ளையைப் பத்திச் சொல்லியிருக்கார் அப்பா. சீக்கிரம் நல்ல விஷயம் சொல்லறேன்” என மதுமிதா பிசிறில்லாமல் பேச, நிரஞ்சன் அவளையே வெறித்துப் பார்த்தான்.
அவர் அப்படிச் சொன்னதும் பவித்ரா நிரஞ்சனைப் பார்க்க, அவன் முகம் இறுகிப் போய் மதுமிதாவை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நந்தகுமாரும் இதைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அதன்பிறகு வேறு ஏதேதோ சலசலத்துக் கொண்டிருந்தனர். நிரஞ்சனுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை. மதுமிதா திருமணம் செய்து கொண்டு போய்விடுவாளா என்ற எண்ணமே அவனைப் பாடாய்ப் படுத்தியது.
மூச்சு திணறுவதைப் போலிருக்க, சாப்பிட்டு முடித்ததும் உடனே அங்கிருந்து முன்னறைக்குச் சென்றான்.
அவனைத் தொடர்ந்து வந்த நந்தகுமார், “யாருடா அந்தப் பொண்ணு? ரொம்பக் கலகலன்னு இருக்காங்க” எனக் கேட்டான்.
“மதுமிதா. ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்” என அவன் சொல்ல, “உனக்குப் பிடிச்சிருக்கு போல” என்றான் நந்தகுமார்.
அதைக் கேட்ட நிரஞ்சன் உறைந்து போனான். ஆம்! அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு வாரத்துக்கு முன்னால் அவள் தன் மனதைத் திறக்கையில் அவன் இப்படி உணரவில்லையே.
அதற்குள் அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்துவிட்டதா என்ன? அப்போது அவன் மனதில் நிறைய ரணம் மண்டியிருந்தது. அந்த ரணத்தை எல்லாம் மரணிக்கச் செய்துவிட்டு ராணியைப் போல் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாளே. அதனாலேயே அவனால் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடிகிறது போலும்.
“என்னடா, உண்மையா? அவங்க இல்லாம உன்னால இருக்க முடியாது அப்படிங்கிற உணர்வு தோணுதா? இப்போ புரியுதா காதல்னா என்னன்னு” எனச் சொன்ன நந்தகுமார், அவன் பதிலை எதிர்பார்க்காமல், “உனக்கு ஏத்தவங்களா இருக்காங்க” என்றான்.
நிரஞ்சன் திடுக்கிட்டுத் திரும்பி நண்பனைப் பார்க்க, “என்னடா மனசைத் திறந்து சொல்ல வேண்டியது தானே? ஏன் தயங்கற?” என நந்தகுமார் கேட்க, அவன் நடந்ததைச் சொன்னான்.
கலகலவென்று சிரித்த நந்தகுமார், “நம்ம ஒரு முறை உதாசீனப்படுத்தினா அவங்க ஒவ்வொரு முறையும் நம்மளை உதாசீனப்படுத்துவாங்கடா” என நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.
நிரஞ்சனுக்கும் அது உண்மை என்று புரிந்தது. சரி, எங்கே போய்விடப் போகிறாள். இன்னும் இரண்டு நாட்களில் அவன் அலுவலகம் செல்வானே. அப்போது அவளிடம் தனியாகப் பேசிக் கொள்ளலாம் என எண்ணினான். ஆனால் அலுவலகத்தில் அவனுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.
தொடரும்...
Last edited:
Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 16
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.