• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ARANGAM 9

Paithani

Member
Joined
Jun 19, 2024
Messages
30
அரங்கம் 9

ரங்கராஜனுக்கு ஏழு வயது ஆகும் பொழுதே அவனுக்கு உபநயனம் செய்து வைத்து விடலாம் என்று மாலதியிடம் ஆனமட்டும் கேட்டுப்பார்த்தான் சுந்தரம் ."இப்போ முடியாது சுந்தர். அவன் இன்னும் சின்ன குழந்தை.அவனுக்குப்போய் பூணலை போட்டு தினமும் சந்தி செய்யு,காயத்ரியை கூப்பிடுன்னு படுத்துவேள். இங்கே வந்து இவ்ளோ வருஷம் ஆகியும் நீங்களே இன்னமும் மாறலியேன்னு நானே கடுப்புல இருக்கேன். என்னோட புள்ளையையும் டார்ச்சர் பண்ணாதீங்கோ. இப்போ ஒன்னும் அவசரமே இல்ல "என்று புள்ளி வைத்துவிட்டாள்.

இதோ இப்போது மாலதி சுந்தரத்திடமிருந்து விவாகரத்தும் பெற்றுக்கொண்டு அமேரிக்கா சென்றாயிற்று. அவளை குற்றம் சொல்ல சுந்தரம் விரும்பவில்லை. அவனுக்கு அதில் உடன்பாடும் இல்லை.முன்பு மாலதி அவன் மனைவி.அவளை குற்றம் சொன்னால் அவனையும் சேரும். இப்போது அவள் யாரோ ஒரு அந்நிய பெண்.அவளை குற்றம் சொல்வது மகா தவறு.

வெகுகாலமாகவே சுந்தரத்தை அலைக்கழிக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. நிரம்ப யோசித்தபிறகு அவன் தனது அப்பா திருவேங்கடத்திடம் பேசினான்." அப்பா ,நம்ம ரங்கனுக்கு பூணல் போடணுமே! இப்பவே ரொம்ப வயசு ஆகிடுத்து.இன்னமும் டிலே பண்ணுவானேன்?"

திருவேங்கடம் தனது மகனை ஒரு பார்வை பார்த்தார்.இவ்வளவு காலமாக அவரும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவரது மகனுக்கு அவர் ஏழு வயதுக்கெல்லாம் உபநயனம் செய்து வைத்து அகத்திலே அவரே வேதம்,உபநிஷத்துக்கள், பிரபந்தம் என்று சொல்லிக்கொடுத்துவிட்டார்.இன்னமும் சரியாக சொல்லவேண்டும் என்றால் சுந்தரம் கோவிலில் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

சுந்தரம் தான் பிடிவாதமாக தான் பொறியியல் படிக்கவும்,மேலே படிக்க வெளிநாட்டுக்கு என்று முடிவெடுத்ததும்.இதிலெல்லாம் திருவேங்கடத்திற்கு சற்றும் இஷ்டம் இல்லை.ஆனால் மகனை தடுக்கவும் அவர் முனையவில்லை.

ரங்கனுக்கு பூணலை பற்றி தனது மகனிடம் பேச நினைத்தார்தான்.ஆனால், பெற்றவன் சுந்தரமும் அவன் மனைவியும் தான் முடிவு செய்தாகவேண்டும் என்று அமைதியாகிவிட்டார்.

இப்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு மனைவியும் உடன் இல்லாத நிலைமையில் சுந்தரம் கேட்கிறான்.மெல்ல யோசனை செய்தவாறே,சுந்தரத்திடம் திருவேங்கடம் தொடர்ந்தார்,

"பேஷா பண்ணிடலாம். வாத்யார்,ஆகாரம், இன்னும் லௌகீக விஷயங்கள் எல்லாத்தையும் தயார் செஞ்சுடலாம். மனுஷாள கூப்பிடறதும் கஷ்டம் இல்ல. மண்டபம் எல்லாம் அவசியம் இல்ல.நம்ம அகமே இவ்ளோ பெரிசா இருக்கு.இங்கேயே நடத்திடலாம். ஆனா,மனைல உன்னோட உன் ஆம்படையா நிக்கணுமே!அதுக்கு என்ன பண்ணப் போறே?"

அப்பாவின் வார்த்தைகள் சுந்தரத்துக்கு உறைக்காமல் இல்லை.ஆனாலும்,முகத்தில் எந்த உணர்ச்சியும் காண்பிக்கவும் இல்லை.அவன் ஏற்கனவே நிறைய யோசித்ததுதான்.

"ம்ம்...ஆமாம்ப்பா. நீங்களும் அம்மாவும் நின்னு பண்ணிடுங்கோ. நா தள்ளி நின்னுகிறேன்.என்னோட பிள்ளைக்கு என்னோட ஆசீர்வாதம் என்னிக்கும் உண்டு."என்று சொல்லி முடிக்கும் முன் சுந்தரத்தின் கண்கள் கலங்கிவிட்டது.

ஆண் குழந்தை என்றதும் இதைப்பற்றியெல்லாம் சுந்தரம் எவ்வளவு கனவுகள் கண்டிருக்கிறான்! இப்போது அதெல்லாம் மணல் திட்டில் சீட்டுக்கட்டு வீடு போல ஆகிவிட்டது .

பெரியவர் தனது மகனது உணர்வுகளை அவதானித்தார். இதில் அவர் சொல்ல என்ன இருக்கிறது? சொன்னபடிக்கு அடுத்த இரண்டாம் மாதத்தில் ரங்கராஜனுக்கு உபநயனம் ஏற்படாகிவிட்டது. கோதையை உடன் வைத்துக்கொண்டு மனையில் திருவேங்கடம் குழந்தைக்கான அனைத்து விஷயங்களையும் செய்தார். பணத்திற்கான பிரச்சனைகள் இல்லை. வாடகை பணமும்,மாலதி அனுப்பின் பணமும் சேர்ந்திருக்கிறது. வேலைக்கு சென்றதில் சுந்தரமும் நிறையவே சேர்த்து வைத்திருக்கிறான்.

மாலதிக்கு பத்திரிக்கையை மெயிலில் அனுப்பி வைத்தான் சுந்தரம். மாலதியின் பெற்றவர்கள் மட்டும் சம்பிரதாயத்திற்கு வந்துவிட்டு போனார்கள். அவர்கள் தரப்பிலிருந்து குழந்தைக்கு செய்யவேண்டிய சீர் வரிசை வந்து விட்டிருருந்தது. சுந்தரத்திற்கும் அவனை பெற்றவர்களுக்கும் சிரிப்புதான் வந்தது.

யாருக்கு வேண்டும் இந்த சீர் வரிசை.பெற்றவள் உடனிருந்து செய்ய வேண்டியது. பாட்டி தாத்தா செய்து வைக்கிறார்கள். சுந்தரம் வழக்கம்போல் எதுவும் பேசவே இல்லை. மாலதி தனது பெரிசாக குழந்தைக்கு பணம் அதிகம் அனுப்பி வைத்தாள். அவளது ஆசிகள் பணத்தில் இருப்பதாக நினைத்தாளோ என்னவோ?

இது பற்றியெல்லாம் ரங்கராஜன் பெரியதாக அலட்டிக்கொள்ளவே இல்லை. மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுப்பு எடுத்துகொண்டு தனக்கான தினங்களை சந்தோஷமாகவே அனுபவித்தான். இப்போது அவனது குழந்தைத்தனம் பாட்டி தாத்தாவின் நிழலில் மீண்டிருந்தது. லேசாக மீசையின் தடம் முகத்தில் அரும்பியிருந்தது. ஆறடிக்கும் கூடுதலாகவே வளர்ந்திருந்தான். அதற்க்கு ஏற்ற உடல்வாகு. கூரிய மூக்கு, சிவந்த உதடுகள். மென்மையான முக அமைப்பு. குழந்தைத்தனத்தை காட்டும் கண்களும், கல்மிஷமில்லாத அவனது பேச்சும் தான் அவன் இப்போதும் குழந்தைதான் என்று காட்டும்.

பெங்களூரு நாட்கள் பற்றி அவனுக்கு இப்போது சுத்தமாக நினைவுகளில் இல்லை.சுந்தரமும் சரியாக மருந்துகளை எடுத்துக்கொண்டு கோவில் ஆராதனை செய்வதுடன் ஸ்ரீ ரங்கத்திலிருந்தே ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்கிறான். பெரிய அளவில் பணம் ஈட்டும் ஆசைகள் இப்போது அவனிடம் இல்லை. கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதுதான். புரிந்து கொள்ள முடியாத ஒன்று உண்டு என்றால் இன்னமும் அவனது ஆழ்மன அழுத்தம் உறங்கி கொண்டு இருக்கிறது என்பதைத்தான்.




'ரங்கராஜன் சுந்தரம்' சி பி எஸ் சி தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று சாதனை செய்திருந்தான். அவனது தீட்சண்யமான கண்களும், அகன்ற நெற்றியும் இப்போது அவனது அறிவை சொல்வதாக இருக்கிறது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதாலும், உணவு கட்டுப்பாடுகளாலும் பேரழகனாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நமது ஹீரோவிடம் மயங்காத பெண்கள் வெகு சொற்பம்.

பிலானியில் படிக்க தேர்வுகள் எழுதியவன் அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று சேர்த்தும்விட்டான்.சுந்தரத்திற்கு கண்கள் பொங்கியது. 'தான் ' தோல்விகளில் துவண்டாலும் தனது மகன் வெற்றி பெறவே பிறந்துள்ளான் என்பதில் ஒரு கர்வமே அவனுக்குள் வந்துவிட்டிருந்தது.

ரங்கன் கிளம்புவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தான்.அவனுக்குள் ஒரு வைராக்கியம் உண்டு.அந்த வைராக்கியம் தனது அப்பாவையும்,தன்னையும் தரம் குறைத்து உறவினர்களும், பெங்களூருவின் பள்ளியும் உருவாக்கி,அம்மா மாலதியின், உறவினரின் புறக்கணிப்பில் வளர்ந்தது .வெளியே யாரிடமும் சொல்லாவிட்டாலும் அவனது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அவன் அதைத்தான் வைத்திருந்தான்.

கிளம்பும் முன் அப்பாவின் அறைக்குள் சென்று ,அப்பாவை இறுக கட்டிக்கொண்டான். அப்பாவின் தோளில் புதைந்தவனுக்கு கண்ணீர் பெருகியது. "அப்பா.. நாம எல்லா அவமானதுலேந்தும் மீண்டு வந்துடலாம். கொஞ்சம் பொறுமையா இரு. மறக்காம டாக்டர் கிட்டே ரெவியூ போயிட்டு வரணும். மறக்காம மெடிசின் எடுத்துக்கணும்.தாத்தா பாட்டிக்கும் வயசாறது. நா லீவு கிடைக்கும் பொழுதெல்லாம் உன்கிட்ட வந்துடுவேணாம். சமத்தா இருப்பியாம் "என்று சிறு பாலகனுக்கு சொல்வது போல சொல்லிக்கொண்டிருந்தான்

சுந்தரத்திற்கு ஒரு பக்கம் மகனை பிரியும் வருத்தமும், இன்னொரு பக்கம் தன் மகன் தனக்கு குழந்தைக்கு சொல்வது போல நல்ல புத்தி சொல்வதில் சிரிப்பும் வந்தது. மகன் வளந்துவிட்டான் என்பதில் ஒரு புத்துணர்ச்சி. தோள்களில் தட்டிக்கொடுத்து மகனுக்கு பிரியாவிடை கொடுத்தான்.

பாட்டி தாத்தாவிடம் சென்று காலில் விழுந்து ஆசி பெற்றவன் கிளம்பியும் விட்டான். அங்கே கணினி அறிவியல் அவனை முழுவீச்சில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டது.
புது விதமான அந்த சூழ்நிலை,’ அமெரிக்க வாசம், பெங்களூரு,சென்னை ஸ்ரீரங்கம் ‘என்ற வரிசையில் இன்னமும் சில அனுபவங்களை அவனுக்கு கொடுத்தது. நிறைய படித்தான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராஜஸ்தானை சுற்றிப்பார்த்தான். மாலதி தனது மகனது படிப்புக்காக எவ்வளவும் செலவழிக்க தயாராக இருந்தாள். அதனால் பணம் ஒன்றும் இப்போது பெரிய பிரச்சனையாக இல்லை.

நான்கு வருஷ படிப்பு ரங்கராஜனுக்கு கல்வியுடன் நல்ல தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருந்தது. மாலதி ரங்கனுக்கு விடாமல் அழைத்துக்கொண்டிருந்தாள். "அமேரிக்கா வந்து மேலே எம் எஸ் படி ரங்கா. நீ பை பர்த் அமெரிக்கன். வேஸ்ட் பண்ணிக்காத " ஓயாத நச்சரிப்புகள். மாலதிக்கு மனதில் தனது மகன்இங்கே வந்துவிட வேண்டும் என்பது. முன்னாள் கணவனிடம் நிறைவேறாமல் ஏமாந்தது.பிள்ளையை வைத்து எதிலோ வெற்றிபெறும் எண்ணம்.அதோடு ரங்கன் நல்லபடியாக வரவேணும் என்றும் ஒரு அம்மாவாக அவளுக்குள் ஆசை உண்டு.


முதலில் பலமாக மறுத்தான் ரங்கராஜன். சுந்தரத்திடம் "அப்பா, என்னதான் இல்ல நம்ம நாட்ல. நா எங்கேயும் போக மாட்டேன்.இங்கே தான் வேலை பார்க்க போறேன்.வேலை பண்ற கம்பனில அனுப்பி வச்சா அந்தந்த நாட்டுக்கு போவேன்.இல்லாட்னா இங்கேயே இருந்துப்பேன். அமெரிக்கா..அண்டார்டிகாவெல்லாம் எனக்கு வேண்டாம்ப்பா. உன்னையும் பாட்டி தாத்தாவையும் விட்டுட்டு கண்காணாம அவ்ளோ தூரமெல்லாம் முடியாதுப்பா.உனக்கு என்னோட சப்போர்ட் கண்டிப்பா வேணும். நாம எல்லாருமே எனக்கு எங்க வேல கிடைக்கிறதோ அங்கே போய்டலாம்.இல்லாட்டி நீங்க இங்க இருங்கோ.நா அப்பப்ப வந்து பார்த்துக்கறேன் "என்று பேசிக்கொண்டிருந்த ரங்கனை வாத்ஸால்யத்துடன் பார்த்தான் சுந்தரம். அவனுக்கு மகனிடம் பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை.

ஆனால், எல்லாவற்றிற்கும் சேர்த்து ரங்கராஜனின் பாட்டி கோதை பேசினார்.இவ்வளவு வருஷங்களில் பாட்டி யாருக்கும் அட்வைஸ் எல்லாம் செய்து ரங்கன் கண்டதில்லை. பாட்டி சொல்வதை ஆமோதிப்பது போல தாத்தா திருவேங்கடம் அமைதியாக பாட்டி சொவ்லதை முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். ரங்கனுக்கு பாட்டியின் வார்த்தைகள் பிரிமிப்பை கொடுத்தது. அவன் என்று வியக்கும் இன்னொரு விஷயம் ஒன்று உலகில் உண்டு என்றால் அது பாட்டி தாத்தாவிடம் இருக்கும் அன்பும் அன்யோன்யமும். பாட்டி தாத்தாவுக்கு திருமணம் நடக்கும் பொழுது தாத்தாவுக்கு பதினோரு வயதாம்.பாட்டிக்கு ஆறு வயதாம்.

"நா பாட்டுக்கு தேமேன்னு சொப்பு சாமானை வச்சுண்டு திண்ணைல விளையாடிண்டு இருந்தேனாம். என்னோட அம்மா வந்து என்னை உள்ள கூட்டிண்டு போனா. நா எங்கேயும் ஓடாம இருக்க அம்மா என்னோட கைல பொம்மைய குடுத்தா. என்னோட தோப்பனார் அவரோட மடில என்னை ஒக்காத்தி வச்சாரா.. உங்க தாத்தா என்னை கல்யாணம் செய்ஞ்சுண்ட்டார்." என்று தனது கல்யாண கதையை பாட்டி சொல்லும்பொழுதுகளில் பாட்டியின் முகத்தில் நாணத்தை காண்கிறான் ரங்கன்.

விவரம் தெரியும் இந்த வயதில்,தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏன் இப்படிப்பட்ட நெருக்கம் இல்லை என்று நெக்குருகி போவதும் உண்டு.

பாட்டி அவன் அமெரிக்கா செல்ல வேண்டிய காரணத்தை சொல்வதை கேட்டவனுக்கு ,அங்கே செல்ல பிடிக்கவே இல்லை. ஆனாலும் ஒத்துக்கொண்டான். "சரி பாட்டி. நா கண்டிப்பா அங்கே போறேன்.ஒரு கண்டிஷன்.நா எப்போ கூப்பிட்டாலும் நீங்க ரெண்டுபேரும் அப்பாவை கூட்டிண்டு அங்கே வந்திடணும். நோ சொல்லவே கூடாது என்று தாத்தா பாட்டியிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான். கண்களில் வழிந்த ஜலத்தை துடைத்துக்கொண்டான் ரங்கராஜன்.

அவன் ஒன்று நினைக்க ,தெய்வம் வேறொன்று நினைக்கிறது. இதைத்தான் தலையில் எழுதப்பட்டது என்று சொல்கிறோமோ என்னவோ! அப்படி என்னதான் பாட்டி சொன்னாளோ... ரங்கன் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு!

ஏற்கனவே காம்பஸில் அவனுக்கு பிரபலமான நிறுவனத்திலிருந்து வேலை கிடைத்திருக்க இப்போது அதில் சேர்வதா அல்லது இங்கே இவர்களுடன் இருந்துகொண்டு தகுதி தேர்வுகளை எழுதுவதா என்று குழம்பினான். குறுகிராமில் வேலைக்கு சேர்ச் சொல்லி மெயில் வந்திருக்க ரங்கராஜனுக்கு அங்கே செல்லவே மனது இல்லை.

திருவேங்கடமும் , சுந்தரமும்தான் சொல்லி அனுப்பி வைத்தார்கள். "பாரு கண்ணா..இப்போ வேலைல சேர்ந்தின்னா ஆபிஸ் அட்மோஸ்ப்பியர் என்னனு ஒனக்கு புரியும். ஒர்கிங் எக்ஸ்பீரியன்ஸ் அதோட கைச்செலவுக்கு கொஞ்சம் பணமும் சேக்கலாம். படிக்கவும் ஈஸியா இருக்கும். போயிட்டு வா " என்று அவர்கள் சொல்வதை மறுக்க முடியாது.

' சரி ' என்றுவிட்டான் ரங்கராஜன்.ஏற்கனவே ராஜஸ்தானத்தில் தனியாக இருந்தவன் தானே! கோதைக்கு தான் பேரனை மீண்டும் பிரிந்திருக்க வேண்டும் என்பது கஷ்டமாக இருந்தது. ரங்கன் கிளம்பி அங்கே சென்று தனக்கென ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டை வாடகைக்கு எடுக்க கோதை பாட்டி அவனுடன் வந்து பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்றார். சுந்தரத்தை தனியாக விட்டு வர முடியாது என்று தீர்மானமாக இருந்துவிட்டார் திருவேங்கடம்.

ரங்கராஜனுக்கு எந்த வருத்தங்களையும் தரக்கூடாது என்பதற்காகவே சுந்தரம் ஒழுங்காக மருந்துகள் எடுத்துக்கொள்வதுடன் உடற்பயிற்சிகள் செய்வதையும் கடமையாக கொண்டார்.

அதெல்லாம் சரி, அங்கே அமெரிக்க மண்ணில் ரங்கனுக்காக காத்திருப்பவை என்னவோ ?
 

Author: Paithani
Article Title: ARANGAM 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
சுந்தரத்தின் தவறை
சிறிதும் ரங்கனை
செய்யாமல் பார்த்து
சீராக்கி வளர்த்த
தாத்தா பாட்டி
சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.....
அன்பு பாசம் நம்பிக்கை அரவணைப்பு புரிதல்
அதானே வேணும் அர்த்தமுள்ள வாழ்க்கையில்....
அது தெரியாம தான்
அநேக வாழ்க்கை நரகமாக அமைத்து கொள்கிறார்கள்....
 

Paithani

Member
Joined
Jun 19, 2024
Messages
30
சுந்தரத்தின் தவறை
சிறிதும் ரங்கனை
செய்யாமல் பார்த்து
சீராக்கி வளர்த்த
தாத்தா பாட்டி
சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.....
அன்பு பாசம் நம்பிக்கை அரவணைப்பு புரிதல்
அதானே வேணும் அர்த்தமுள்ள வாழ்க்கையில்....
அது தெரியாம தான்
அநேக வாழ்க்கை நரகமாக அமைத்து கொள்கிறார்கள்....
thanks for your valuable comments, it is my booster
 
Top Bottom