• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 6

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 6



மகளின் சத்தத்தில் பிசைந்துக் கொண்டிருந்த சப்பாத்தி மாவை அப்படியே வைத்து விட்டு பதறி போய் ஓடி வந்தவர் நிச்சயமாக மாறனை எதிர்பார்க்கவில்லை.

"உள்ள வரலாமா.?" என்ற மாறனின் கேள்வியில் தான் தன்னிலைக்கு வந்து இன்னும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த மகளைக் கடுமையாக முறைத்து "ஏய் புள்ள தள்ளி நில்லு.. மாப்பிள்ளை உள்ள வரட்டும்" என்று மகளிடம் கடிந்தார்.

'எதே மாப்பிள்ளையா.?' என்று மீண்டும் அதிர்ச்சியுடனே இவளும் இணைந்து விட்டாள். தலையில் அடித்துக் கொண்டு "நீங்க வாங்க.. அவ அப்படித்தான்.. வாப்பா.. வாங்கம்மா வாங்க" என்று மாறனின் பின்னே நின்றிருந்த அதிரனையும் அவனின் அன்னையையும் புன்னகையுடனே வரவேற்றார்.

பெண்ணவளின் அதிர்வான முகத்தைப் பார்த்து சிரித்தபடி மாறன் உள்ளே செல்ல, "எம்மா தங்கச்சி என்னம்மா ஆச்சு.?" என்று அதிரன் தான் அவளைத் திகைப்பில் இருந்து வெளிகொணர முயன்றான்.

அவளோ அழும்தோணியில் "அண்ணா நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்.? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? நான் அவ்ளோ தடவை சொல்லிட்டு வந்தும் நீங்க இப்படி வீட்டு முன்னாடி நிற்கறது நல்லாவா இருக்கு இருக்கு.? நான் பாவம்ண்ணா.. பாவம்.. எல்லாரும் என்னைய வெச்சே விளையாடறீங்க.." என்றவளுக்கு உண்மையில் அழுகையே வந்து விட்டது.

அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அதில் இவனும் முகத்தைப் பாவமாக வைத்து "எனக்கே எதுவும் தெரியாதும்மா.. திடீர்னு போன் பண்ணி காலைல வர சொன்னான்.. சரின்னு வந்தா இங்க கூட்டிட்டு வந்துருக்கான்.. நீ வந்து கதவைத் திறக்கற வரைக்கும் இது யாரு வீடுனே எனக்குச் சத்தியமா தெரியாதும்மா.. என்னைய நம்பு.. நானும் உன்னைய மாதிரி தான் ஏமாந்துப் போயிருக்கேன்" என்றான்.

"இன்னும் அங்க என்னடா பண்ணிட்டு இருக்க.? உள்ள வாடா" என்று அவனின் அன்னையான பங்கஜம் சத்தமிட, "பேசிட்டு இருக்கேன்ல.? இரும்மா வர்றேன்" என்றவன் வாம்மா உள்ள போகலாம்.. இல்லனா உன்னையும் உங்க அப்பா கூப்பிட்டுவாரு என்றழைத்தான்.

இவனின் வார்த்தையைப் பொய்யாக்காமல் குமரேசனும் "ஏய் புள்ள வாசல்ல நின்னு என்ன பண்ணிட்டு இருக்க.? வீட்டுக்கு வந்தவங்களுக்குக் குடிக்க ஏதாவது குடுக்க மாட்டியா.? எல்லாம் நான் சொல்லித்தான் பண்ணனுமா.?" என்று சத்தமிட்டார்.

தன் மகளுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விடுவாரோ.? என்று பயந்து "அது ஒன்னுமில்லங்க நீங்க திடீர்னு வந்ததுல புள்ள கொஞ்சம் பயந்துருச்சு.. அதோட முகத்துலயே அது நல்லாவே தெரியுது.. மத்தபடி வீட்டு வேலை எல்லாம் என் புள்ளதான் செய்யும்ங்க.. எல்லாத்தையும் கத்துக் குடுத்துருக்கேன்.. எங்க எப்படி நடக்கணும்னு அதுக்கும் நல்லாவே புரியும்ங்க.. இப்ப கொஞ்சம் பயந்துருச்சு" என்று பவ்யமாக அதிரனின் அன்னையிடம் கூறினார்.

தாயில்லாத பெண் அதனால் தான் இப்படி.. என்று ஒரு வார்த்தை வருவதை இவர் விரும்பவில்லை. அவர் பேசும் முன்பே இவரே மடைதிறந்த வெள்ளமாக கூறி விட்டார். என்ன தான் அவர் ஆண்மகனாக இருந்தாலும் பெண்ணைப் பெற்றவராயிற்றே. பணிந்துத் தான் செல்ல வேண்டுமே.. வேறு வழியும் இல்லை.

அவர் மாறனின் அன்னை இல்லை என்பதை இன்னும் இவர் அறிந்திருக்கவில்லை. அதனால் அவரிடம் பணிந்து நிற்க வேண்டிய நிலைமை.

பங்கஜம் எதுவும் பேசவில்லை. அவரைப் பேச கூடாது என்று வரும்போதே மாறன் கூறி இருக்க, அவரும் அமைதியைக் கடைபிடித்தே அமர்ந்திருந்தார். அவனுக்கு அடங்கிப் போக வேண்டிய நிலைமை. அவனைப் பகைத்துக் கொண்டால் அவனின் தங்கையை தன் மகனுக்கு மணமுடித்து தர மாட்டேன் என்று விட்டால்..?

இக்காலத்தில் பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. இதில் லட்டு மாதிரி ஒரு பெண்.. அதுவும் அவர்களின் வசதிகேற்ப கிடைக்கும் போது அவரால் எங்ஙனம் விட்டு விட முடியும்.? இதில் இவரின் சுயநலமும் அடங்கியுள்ளது தான்.

அதனால் தான் அவன் அழைத்தபோது மறுக்காமல் வந்து விட்டார். மகனுக்கு இவனின் தங்கையைத் திருமணம் செய்தால் அனைத்திலும் நான் தான் முன்னிலையில் நிற்க வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதில் இவருக்கு ஒரு சங்கடமும் இல்லை. அதில் நான் தான் பெரியவள் என்ற கர்வமும் கூட.

அனைத்திற்கும் என்னிடம் தான் வர வேண்டும்.. அனைவரும் என்னிடம் பணிந்துத் தணிந்தும் செல்வார்கள் என்ற பெருமை.

குமரேசனிடம் "அங்கிள் நீங்க ஏன் நின்னுட்டு இருக்கீங்க.? முதல்ல உட்காருங்க" என்று அவரை அமர கூறிய மாறன் பின்பு "என்னைய பத்தி என்ன தெரியும்னு இப்படி வீட்டு அட்ரஸ் எல்லாம் குடுத்துட்டு போய்ருக்கீங்க.? எனக்கு முன்னாடியே கல்யாணமாகி இருந்தா...?" என்று அவன் இழுத்த விதத்தில் பாவம் குமரேசன் முழியோ முழியென முழித்தார்.

'அடிப்பாவி மவளே கல்யாணமான பையனையா காதலிக்கறேனு சொன்ன.? உன்னைய நம்பி நானும் இந்த தம்பிகிட்ட பேசி தொலைஞ்சுருக்கேனே.? இவங்க போகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு' என்று மகளைக் கடுமையாக முறைத்து மனதினுள் புலம்பினார்.

மாறனின் வார்த்தையில் காவ்யாவின் மனது தான் குத்தாட்டமிட்டது.

'அடேய் தென்னைமரம் உனக்கு கல்யாணமாகிருச்சா.? சூப்பரு சூப்பரு.. நான் கும்பிட்ட மாரியாத்தா என்னைய கை விடல.. அப்பறம் எனத்துக்குடா இங்க வந்து தொலைஞ்சுருக்க.?' என்று நினைத்து ஆடவனை ஏறிட்டாள்.

இவளின் சந்தோஷம் மீண்டும் பாதாளக்குழியில் விழுக போகிறது என்பதை அறியாமல் நிம்மதி பெருமூச்சுடன் இவள் நிற்க, "தம்பி" என்று குமரேசன் தான் தயக்கமாக ஏறிட்டார்.

"எனக்கு கல்யாணமாகிருச்சு தான்.. ஆனா இப்ப என் மனைவி என்கூட இல்ல" என்று அவர்களின் தலையில் குண்டை இறக்கினார்.

குமரேசன் தான் பதறி "என்ன தம்பி சொல்றீங்க.? உங்களுக்கு கல்யாணமாகிருச்சா.?" என்று கேட்க, "ம்ம்ம்ம்ம் ஆமாங்க அங்கிள்.. நான் பொய் சொல்லல.. பொய் சொல்லி என்னவாக போகுது.? எனக்கு கல்யாணமானது உண்மை.. ஆனா என் மனைவி என்கூட இல்லை" என்று நிறுத்தினான்.

மனைவி இல்லையென்றாலும் இரண்டாந்தாரமாக மகளை அனுப்ப இவரின் மனது ஒத்துக் கொள்ளவில்லை. அவரின் விருப்பமின்மையை அவரின் முகமே காட்டிக் குடுத்தது.

அதிரனின் அன்னையும் "இப்ப எதுக்கு மாறன் இதைய பத்தி பேசிட்டு இருக்க.? அந்த ஓடுகாலி ஓடி போனதுக்கு நீ என்ன பண்ணுவ.? உன் படிப்புக்கும் குணத்துக்கும் எத்தனையோ சம்பந்தம் வந்துச்சு.. அப்ப எல்லாம் நீ வேணாம்னு சொல்லிட்டு இந்த பொண்ணைப் பார்க்க தான் நீ கூட்டிட்டு வந்துருக்க.. இந்த நேரத்துல இந்த பேச்சுத் தேவையா.?" என்று கேட்டார்.

"இவங்களுக்கும் எல்லாமும் தெரியணும்ல.? எதுவும் தெரியாம தான் என்கிட்ட வந்து பேசிட்டு போனாங்க.. எல்லா விசயமும் தெரிஞ்சதும் அவங்களுக்கு சம்மதம்னா நானும் சம்மதிக்க தயாரா இருக்கேன்.. இல்லனா இதோட விட்டரலாம்" என்று அவனின் முடிவு என்னவென்று உரைத்தான்.

குமரேசனுக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை.. அவன் கூறுவதைக் கேட்டு தன் மனது மாறி விட்டால்..? என்றே பயந்து தம்பி என்ன இருந்தாலும்..." என்று தயக்கமாக இழுத்து ,"இந்த கூறுகெட்டவ பேச்சைக் கேட்டு நானும் புத்திக்கெட்டுப் போய் பேசிட்டேன்.. என்னைய மன்னிச்சுருங்க தம்பி" என்றவரின் வார்த்தையே சொல்லியது எனக்கு விருப்பமில்லை என்று.!

இது எப்போதும் நடக்கும் ஒன்று தான் என்பதைப் போல் மாறனின் முகம் சாதாரணமாக தான் காணப்பட்டது. பாவம் குமரேசனால் தான் அவனை ஏறிட்டுப் பார்க்கவே முடியவில்லை. அவரை மொத்தமாக தயக்கமும் சூழ்ந்துக் கொண்டது.

காவ்யாவுக்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் மறுபக்கம் மனது ஏதோ செய்தது. மாறனைக் காண காண அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றமும் நடைப்பெற தொடங்கியது.

"கூப்பிட்டு வெச்சு அவமானப்படுத்தறீங்களா.? நாங்களா வீடு தேடி வந்து பொண்ணைக் கேட்டோம்.? நீங்களாக தான் வந்து பேசுனீங்க.. இப்ப என்ன இப்படி பேசறீங்க.? மாறி மாறி நீங்க பேசி விளையாட நாங்க தான் உங்களுக்குக் கிடைச்சோமா.?" என்று அதிரனின் அன்னைச் சண்டைக்குச் சென்றார்.

காவ்யாவின் தந்தையால் பதிலுரைக்க முடியவில்லை. தவறு தங்களின் மேல் தான் உள்ளது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்ததால் அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை.

"விடுங்க அப்ப நம்ம கிளம்பலாம்.. இங்க என்ன வேலை.?" என்ற மாறன் விறுவிறுவென வெளியேறினான். "என்னமோ உலக அழகியைப் பெத்து வெச்சுருக்கற மாதிரி பேச்சு" என்று குமரேசனைச் சாடி விட்டு அதிரனின் அன்னையும் சென்றார்.

அதிரனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. இப்போது காவ்யாவையும் அவன் பார்க்க விரும்பவில்லை போலும் இருவரின் முகத்தையும் ஏறிடாமல் அவனும் கிளம்பினான்.

அவர்கள் சென்றதும் "ஏய் என்னடி இது.? செல்லம் குடுத்து குடுத்து நீ குட்டிச்சுவராகி கிடக்கறதுக்குக் காரணமே நான் தான்.. கல்யாணமான பையனையா பிடிச்சுருக்குனு அனத்திட்டு கிடக்கற.? இப்ப பாரு அந்த தம்பிக்கும் சங்கடம்.. நமக்கும் சங்கடம்.. இனி அந்த தம்பியைப் பத்தி பேசுன பல்லைத் தட்டிருவேன்" என்று காவ்யாவிடம் எகிறினார்.

அவளிடம் மறுமொழி இல்லை. செல்லும்போது மாறன் பார்த்த ஒற்றைப் பார்வை தான் அவளை இம்சித்தது. 'ஏன் அப்படிப் பார்த்துட்டு போனாங்க.? அப்படி என்ன நடந்துருக்கும்.? கல்யாணமானது சரி அவங்க மனைவி ஏன் இவங்கள விட்டுட்டு போகணும்.?' என்ற பலவாறான யோசனைகள் தான் அவளிடம்.

மாறனின் முகமே இறுகி கிடந்தது. அதிரனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. மூவரும் அமைதியாகவே பயணத்தைத் தொடர்ந்திட, மாறனின் அலைப்
பேசியும் அச்செய்தியைக் கொண்டு வந்து இவனிடம் சேர்பித்தது.



மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
192
காவலனுக்கு முன்னே
கல்யாணம் ஆகிவிட்டதா??
காவல் உண்மை சொல்ல
கலங்கி நிற்கும் தந்தை
காவ்யா பரிதாபத்தில்
கலங்கி நிற்கிறாள் ....
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
காவலனுக்கு முன்னே
கல்யாணம் ஆகிவிட்டதா??
காவல் உண்மை சொல்ல
கலங்கி நிற்கும் தந்தை
காவ்யா பரிதாபத்தில்
கலங்கி நிற்கிறாள் ....
நன்றிகள் பல
 
Top Bottom