• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
290
அத்தியாயம் 10

கண்மூடி படுக்கையில் சாய்ந்திருந்தான் கிருபா. கையில் பட்ட காயத்திற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. அதிகப்படியான குருதி வெளியேற்றத்தால் சோர்ந்து போயிருந்தான்.‌
மருத்துவரின் மேற்பார்வையில் இரண்டு தினங்கள் இருக்கட்டும் என்றிருக்க, சுந்தரவல்லியை மருத்துவமனையில் இருத்திவிட்டு, மற்ற பணிகளைக் கவனிக்கச் சென்று இருந்தாள் மது.
கதவு தட்டப்பட்ட ஒலியில், வாயிலிற்குப் பார்வையைத் திருப்பினான் ஆடவன்.
இரத்தம் படிந்த ஆடையை மாற்றி, தயாராகி வந்திருந்தாள் அவள்.
அவன் புன்னகைக்க, "பெயின் எப்படி இருக்கு சார்?"
"ம்ம். பெட்டர்."
"டாக்டர் வந்து பார்த்தாரா?"
பதிலிற்குத் தலை அசைத்திட, "எங்க அம்மாச்சி.?" என்று ஓய்வறையின் பக்கம் பார்த்தாள்.
"பக்கத்துல இருக்கிற கோவிலுக்குப் போயிருக்காங்க."
"உங்களை விட்டுட்டு எப்படி போனாங்க.?"
"என்னைக் கடவுள் காப்பாத்திட்டாராம், அதுக்குத் தேங்க்ஸ் சொல்லணுமாம்."
அவள் சிரித்து, "சாப்பிடுறீங்களா.?"
"இப்ப‌தான் ஜூஸ் குடிச்சேன், கொஞ்ச நேரம் போகட்டும்.?"
"ஓகே சார்."
"மிஸ் மது, இந்த சார் வேண்டாமே?"
"அடடா! அப்புறம் வேற எப்படி கூப்பிடுறது.?"
"அதான் பேர் இருக்கே.?"
புன்னகைத்தவள், "இந்தாங்க‍, உங்க லேப்டாப்!" என்று எடுத்துத் தந்தாள்.
அவன் இடக்கையால் வாங்க சிரமப்பட, வசதியாய்‌ இரு தலையணைகளை அடுக்கி அதில் வைத்து இயக்கியவள், “இன்னைக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுக்கலாம்ல.? ஹாஸ்பிடல்ல வச்சும் ஒர்க் பண்ணணுமா மிஸ்டர் கிருபா‌?"
"முக்கியமான மீட்டிங். கண்டிப்பா அட்டன் பண்ணணும்‌. ஏற்கனவே ஒர்க் ஃப்ரம் ஹோம்னு கேட்டு ஊருக்கு வந்துட்டேன். மீட்டிங்கும் அட்டன் பண்ணலேனா, வேலை அவ்வளவு தான்! சம்பாதிக்கலனா‍, ஈ காக்கா கூட மதிக்காது."
"ஆனா, உங்க பேரண்ட்ஸ் அப்படிப்பட்டவங்க இல்லயே?"
"ம்ம். பட், எனக்கான அடையாளம்‌ என்ன? சேதுவோட பையனா தான் எல்லாருக்கும் தெரிவேன். கிருபா யாருனு, எவருக்குமே தெரியாதே.? வேலையால கிடைக்கிறது பணம் மட்டும் இல்ல. அடையாளம், சுய கௌரவம், தன்னம்பிக்கை இதுவும் தான். ஏன், மிஸ் மதுக்குத் தெரியாதா?"
"இது எல்லாத்தையும் விட உயிரும் அதைச் சுமக்குற உடம்பும் முக்கியம்னு தெரியும்!"
"உண்மைதான்!" என்று சிரித்து, இடது கையால் தனது உடையையும் தலையையும் சரி செய்து கொண்டவன், "மிஸ் மது, கொஞ்சம் மொபைல்ல இருக்கிற கேமராவை ஆன் பண்ணி காட்டுறீங்களா.?"
அவள் கேள்வியாய்ப் பார்த்திட, "எப்படி இருக்கேன்னு பார்க்கணும். ப்ராடட் எப்படி இருந்தாலும் சரி, பேக்கிங் பக்காவா இருக்கணும். அப்பதான் செல் பண்ண முடியும்."
மது சிரித்தபடி, "மார்க்கெட்டிங்ல ஒர்க் பண்ணுறீங்களா.?" என வினவிட, அவனும் சிரித்தான்.
"நாட் பேட்!" என்றவள் வலதுபுற காலர் பக்கத்தில் இருந்த கசங்கலைச் சரி செய்து, காற்றிற்கு அலைபாய்ந்த அவனின் குழலை கையால் அழுத்தி வைத்து, மின்விசிறியின் வேகத்தையும் குறைத்து விட்டாள்.
"வியர்க்கலேல மிஸ்டர் கிருபா.?"
"இல்ல."
"ஓகே, ஃபேனோட ஸ்பீடுக்கு முடி எல்லாம் பறக்குது‌."
"எப்பவும் ஈரத்தோட தலை வாரிடுவேன். அப்படியே செட் ஆகிடும்‌. இன்னைக்குத்தான் கையைக் கட் பண்ணிக்கிட்டு ஹாஸ்பிடல் வந்துட்டேனே.?"
"ஊருக்கு வந்ததுல இருந்து கவனமா தான இருந்தீங்க? அப்புறம் எப்படிக் கையை இப்படி ஆக்கிக்கிட்டீங்க.?"
அவன் ‌நடந்த நிகழ்வை உரைக்க, "அப்ப, என்னால தானா.?" என்றவளின் குரல் கரகரத்தது.
"உங்களால இல்ல. என்னோட கேர்லஸ்ஸால நடந்த இன்ஸிடெண்ட் இது‌. சோ, உங்களைக் குறை சொல்லிக்காதீங்க‌."
அவள் அமைதியாய் தலை அசைக்க, "மிஸ் மது."
"ம்ம்."
"உண்மையா தான் சொல்லுறேன். டோண்ட் ஒர்ரி. ஒன் வீக்ல சரியாகிடும்."
தலை அசைப்பு மட்டுமே பதிலாய் வந்தது.
"கேமரா.?"
அவசரமாய் எழுந்தவள் கைப்பேசியில் ஒளிபடக் கருவியை இயக்கிக் காட்டினாள்.
"மெதுவாவே செய்யிங்க, இன்னும் டென் மினிட்ஸ் டைம் இருக்கு!" என்று அவளை இயல்பாக்கிட முனைய, வலிந்து புன்னகை சிந்தினாள்.
ஒன்றரை மணி நேரம் நடந்தது, கிருபாவின் அலுவலகம் சம்பந்தமான கலந்துரையாடல்.
இடையில் வந்த சுந்தரவல்லியும், பெயரனின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு ஓரமாய் அமர்ந்து கொண்டார்.‌
அறைக் கதவை அடைத்து வேறு எவ்வித தொந்தரவும் அவனின் வேலைக்கு ஏற்படாதவாறு கவனித்துக் கொண்ட மது, முதியவர் வந்ததும் அயர்வினால் அப்படியே நாற்காலியிலேயே உறங்கிப் போனாள்.
கழுத்தையும் உடலையும் இட வலமாய் அசைத்து இயல்பிற்கு மீண்ட கிருபாவைப் பார்த்த வல்லி, "என்ன கண்ணா, பேசி முடிச்சிட்டியா?"
"ம்ம். மீட்டிங் முடிஞ்சிடுச்சு பாட்டி. ஒரு அரை மணிநேர வேலை மட்டும் இருக்கு."
"அதைச் சாப்பிட்டுப் பார்க்கலாம்ல.?"
தலை அசைத்தவன், "லேப்டாப்போட சார்ஜர் எடுங்க பாட்டி."
மது கொண்டு வந்த பையில் தேடிப் பார்த்தவர், "இல்லையே கண்ணா, எடுத்துட்டு வர மறந்துட்டா போல?"
"அச்சோ, சார்ஜ் போடாட்டினா ஒர்க் பண்ண முடியாதே.?"
"சரி, நான் வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வர்றேன். நீ சாப்பிடு!"
"மாடியில இருக்கு, என்னோட திங்க்ஸ். உங்களால மேல ஏற முடியாதே?"
"ஒருதடவை தான, ஏறிக்கலாம்!" என முதியவர் சமாதானம் உரைக்க, "இல்ல பாட்டி, நான் மொபைல்லயே பண்ண முடியுமானு பார்க்கிறேன்!" என்று தனது கைப்பேசியை எடுத்தான்.
உணவு பாத்திரங்களை எடுத்து வைத்த வல்லி, "கண்ணா, அப்புறம் பார்க்கலாம்."
"ஒரு நிமிஷம்!" என்றவன் வேலையிலேயே கருத்தாய் இருக்க, இரண்டு நிமிடங்களில் அவனின் கைப்பேசி பறி போனது.
கேள்வியாய் நிமிர்ந்து பார்த்திட, "சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். உடம்பு முக்கியம்!" என உணவைக் கண்களால் சுட்டிக் காட்டினாள் மது.
"தூங்கலயா நீங்க.?"
"உலகத்தையே மறக்கிற அளவுக்குத் தூங்குற ஆள் இல்ல நான்!" என்றவள், "ஏன் அம்மாச்சி! சத்தம் போட்டு சாப்பிட சொல்லாம, கண்ணா கண்ணம்மானு கொஞ்சீட்டு இருக்கீங்க.?" என முதியவரையும் அதட்டினாள்.
"வளர்ந்த பிள்ளைய எப்படிச் சத்தம் போட முடியும்.?"
"பிள்ள பிள்ளைதான?‌ அதென்ன வளர்ந்த பிள்ள, வளராத பிள்ளைனு!" என்று பதில் தந்தவள், உணவைப் பிசைந்து அதில் சிறிய கரண்டி ஒன்றைப் போட்டு அவனிடம் தந்தாள்.
"தேங்க்ஸ்!" என உரைத்து கிருபா உண்ணத் தொடங்க, "இதெல்லாம் நல்லா செய்! பேச்சுக்கும் குறைச்சல் இல்ல. லேப்டாப்போட சார்ஜர் எங்க.?" என்றார் வல்லி.
"அட அம்மாச்சி! வெளிய தேடிப் பார்த்தேன் காணோம். உங்க பேரன் பேக்ல வச்சிருப்பாரு போல. சொல்லாம அவரோட பொருளைத் தொடுறது சரியில்லனு வந்துட்டேன்."
"அது சரி! பாதியிலயே லேப்டாப் நின்னு போயிருந்தா‌ என்ன செஞ்சிருப்ப.?"
"அதுக்குத்தான் என்னோடதை எடுத்துட்டு வந்தேன். தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்கட்டும்னு. அது ஃபுல் சார்ஜ்ல இருக்கு."
"விபரம் தான். ஆமா, உனக்கு வேலை இல்லையா லேப்டாப்ல?"
"ஆர்டர் போட மேல் அதிகாரினு எவனும் இல்ல. எனக்கு நான்தான எம்.டி. சோ, இன்னைக்கு லீவ் விட்டுட்டேன்."
வல்லி சிரிக்க, "என்ன வொர்க் பண்ணுறீங்க மிஸ் மது‌.?" என வினவினான் கிருபா.
"அப்பாக்கூட சேர்ந்து டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூடைப் பார்க்கிறேன். இங்க உங்களுக்கு ஹெல்புக்கு ஆள் வேணும்ல.? அதான் இன்னைக்கு டே ஆஃப்."
"நல்லா பேசுறீங்க! நீங்க சாப்பிடலயா‌?"
"இதோ!” என்றவள் முதியவரிற்கும் உணவைப் பரிமாறிவிட்டு, தன் வயிற்றையும் நிறைத்தாள்.
"கிருஷ்ணாக்கு.?" என வல்லி வினவிட, "வரும்போதே செண்டருக்குப் போயி அப்பாக்குக் கொடுத்துட்டேன் அம்மாச்சி. நீங்க வீட்டுக்குப் போறதுனா, போயிட்டு வாங்க. அதுவரை நான் இங்க இருந்து பார்த்துக்கிறேன்."
"சரி மது!" என்றவர் பெயரனிடமும் ஆயிரம் கவனம் சொல்லிச் சென்றார்.
மது தந்த அவளது மடிக்கணினியை இயக்கிட, அதன் திரை கடவுச் சொல்லைக் கேட்டு வழி மறித்தது.
"மிஸ் மது பாஸ்வேர்ட்?"
"பாரதி!"‌ என ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தாய் உரைத்தாள்.
அவன் கேள்வியாய், "பாரதி யாரு.?"
"எனக்குத் தம்பியோ தங்கச்சியோ பிறந்திருந்தா, அவங்களுக்காக அம்மாவும் அப்பாவும் செலக்ட் பண்ணி வச்சிருந்த பேரு. இப்ப இது என்னோடது, மதுபாரதி."
"வாவ். என்னாச்சு, சிபிலிங் இல்லையா உங்களுக்கு.?"
"இருந்தாங்க. அம்மா இறந்து போறப்ப அவங்க வயித்துல."
சூழலில் சட்டென்று ஒருவித இறுக்கம் பரவிட, "ஸாரி, மிஸ் மது."
"பரவாயில்ல. இது எனக்கு ஒன்னும் புதுசு இல்ல.‌ கேட்கிறவங்களுக்குப் பதில் சொல்லணும் தான.?"
"அம்மாக்கு எப்படி.?"
"எனக்குப் பதினோரு வயசு இருந்தப்ப குடும்பத்தோட இராமேஸ்வரம் போயிருந்தோம்.‌ வர்ற வழியில ஆக்ஸிடெண்ட். எனக்கு அப்புறம் ரெண்டாவது குழந்தையை ரொம்ப எதிர்பார்த்தாங்க‌. நான், அவங்களோட காதலுக்கு அடையாளமா கஷ்ட காலத்துல பிறந்தவ. சந்தோஷத்தோட சாயல்ல ஒரு குழந்தை வேணும்னு அப்பாவுக்கு ஆசை‌. பட் அது நடக்கல‌‌.
ஸ்கூல் லீவுக்கு நான்தான் எங்கேயாவது கூட்டிட்டுப் போங்க அப்பானு அடம் பிடிச்சேன். மூனு பேரா போனோம். ப்ச்ச்.." என அவள் வலிந்து புன்னகைத்திட,
"ப்ரெக்னென்ஸி டைம்ல டிராவல் பண்ணக் கூடாதுல?"
"அம்மாவுக்கே தெரியாது. போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட்ல இருந்ததைப் பார்த்துட்டுப் போலீஸ் காரங்க சொன்னாங்க. தர்ட்டி ஒன் டேஸ். என்னால தான். நான் கேட்கலேனா, அப்பா எங்களைக் கூட்டிட்டுப் போயிருக்க மாட்டாரு‌. ஆக்ஸிடெண்டும் நடந்து இருக்காது. நானும் அப்பாவும் பிழைச்சுக்கிட்டோம், அம்மா..?"
"நீங்க காரணம் இல்ல மிஸ் மது. தெரிஞ்சு செய்யலயே, அப்ப குட்டிப் பொண்ணு வேற. அது, உங்களை மீறி நடந்த விஷயம். டோண்ட் கில்ட்டி, ஓகே.?"
மெலிதாய் புன்னகைத்தவள், "பதிமூனு வருசம் ஆச்சு. அம்மாச்சியும் அப்பாவும், இலட்சம் தடவைக்கு மேல இதைச் சொல்லிட்டாங்க. எனக்கு கில்ட்டி எல்லாம் இல்ல. வருத்தம் தான். அம்மா, தம்பி தங்கச்சி கூட இருக்க முடியலயேனு."
"தேங்க் காட்! நல்லவேளை தெளிவா இருக்கீங்களே‌? இந்த கில்ட் ஃபீலோட லைஃபை லீட் பண்ணுறது ரொம்ப கஷ்டம் மிஸ் மது‌‌.‌ ஒவ்வொரு நாள் விடியும் போதும், ஏன்டா விடியிதுனு இருக்கும். வாழுறதே வேஸ்ட்டுங்கிற மாதிரி தோணும்."
ஒரு பெருமூச்சை வெளிவிட்டவள், "அம்மாச்சி சொன்னாங்க, சாவுல இருந்து மீண்டு வந்த உயிரை பத்திரமா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை. அதுக்காகத்தான சாமி பிழைக்க வச்சிருக்கு'னு? அதுல இருந்து, நான்தான் காரணம்ங்கிற எண்ணத்தை விட்டுட்டேன்.
'நீ நல்லபடியா சந்தோஷமா இருந்தா தான், அம்மாவும் சந்தோஷமா இருப்பாங்க'னு அப்பா சொன்னாரு. அம்மாக்கவே, எனக்குப் பிடிச்ச மாதிரி வாழ ஆரம்பிச்சிட்டேன். மறுவாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கிறது இல்ல. எனக்குக் கிடைச்சது. இப்போதைக்கு என்னோட குறிக்கோள் எல்லாம், முடிஞ்ச மட்டும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தணும். அதைப் பார்த்து அம்மாவும் சந்தோஷப்படணும். அவ்வளவு தான்!"
"அப்ப, உங்க சந்தோஷம்?"
"அம்மா ஹேப்பினா‍, நானும் ஹேப்பி!"
அவளின் பதிலில் அனிச்சையாய் ஆடவனின் முகம் மலர்ந்திட, கதவு தட்டும் ஒலி கேட்டது.
இருவரும் அறையின் வாயில் பக்கம் திரும்பிட, உள்ளே வந்தார் கிருஷ்ணன்‌.
நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசிச் செல்ல, "அம்மா அப்பாவுக்குச் சொல்லலேல மிஸ் மது.?" என வினவினான் கிருபா.
"சொல்லல. குணமானதும் சொல்லிக்கலாம்னு அம்மாச்சி சொல்லிட்டாங்க."
"குணமானதுக்கு அப்புறம் எதுக்குச் சொல்லணும்?"
"தன்னோட பிள்ளையைப் பத்தித் தெரிஞ்சிக்க வேண்டியது பெத்தவங்களோட உரிமை. ‌அதைப் பறிக்க நினைக்காதீங்க மிஸ்டர் கிருபா."
"அதுசரி! வருத்தப்படுவாங்களே.? பேரண்ட்ஸுக்கு எந்த வித கவலையும் கொடுக்காம, அவங்களை நல்லா பார்த்துக்க வேண்டியது பிள்ளைகளோட கடமை இல்லையா.? நான் அதை செய்ய நினைக்கிறது, தப்பா?"
"உங்களுங்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த உரிமைக்கும் கடமைக்கும் எப்பவும் ஆகாது. ஒன்னுக்கொன்னு எதிர்த்துக்கிட்டு தான் நிக்கும். இதோ, இப்ப நாம பேசின மாதிரி!"
அவன் சட்டென்று சிரித்துவிட, "ரெண்டையுமே ஹேண்டில் பண்ண கத்துக்கோங்க. குணமானதை முதல்ல சொல்லிட்டு, அப்புறம் என்ன நடந்துச்சுனு விளக்கம் கொடுங்க."
அவன் தலை அசைக்க, "ரொம்ப நேரம் பேசிட்டோம். ரெஸ்ட் எடுங்க மிஸ்டர் கிருபா."
"தேங்க்ஸ் மிஸ் மது. எனக்காக ரொம்ப செய்யிறீங்க!"
"அம்மாச்சி‌ எனக்குச் செஞ்சதை விடவா?"
"அப்ப, இது ரீபேயா?"
"அப்படி சொல்ல முடியாது. நீங்கனு இல்ல, எனக்குத் தெரிஞ்ச யாரா இருந்தாலும் இப்படித்தான் நடந்துப்பேன்."
"யூ ஆர் எ குட் சோல், மிஸ் மது!"
"எனக்குச் சுத்தி இருக்கிறவங்கக் கிட்ட இருந்து என்ன கிடைச்சதோ, அதை மத்தவங்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவு தான்!"
அவன் புன்னகைத்து மடிக்கணினியில் கவனத்தைத் திருப்ப, "நான் போய் காஃபி வாங்கிட்டு வர்றேன்!" என்று வெளியேறினாள் மதுபாரதி.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
நடப்பது எதுவும்
நம் கையில் இல்லை
நம்மை படைத்தவன் கணக்கு....
நல்ல புரிதல் மது....
நம்ம சார்க்கும்
நல்லா சொல்லுங்க..... ❤️
 
Top Bottom