• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -9

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
290
அத்தியாயம் 9


எட்டு வைத்து அறையின் நீளத்தை அளந்து கொண்டிருந்தான் கிருபா. சுந்தரவல்லி, மதுவின் பெற்றோரது வாழ்வைப் பற்றி மொழிந்து இருந்ததால், கிருஷ்ணனின் நினைவாகவே இருந்தது‌.
திருமணத்தின் பொழுது இருபத்தோரு வயது‌.‌ இப்பொழுது அவர் கிருபாவின் உயரத்திற்கு இணையாய் இருக்கிறார். அப்பொழுதும் அதே உயரம் தான் இருந்திருப்பார்.
'இவ்வளவு சிறிய அறையில் பொருட்களுடன் எப்படிக் கால் நீட்டிப் படுத்திருப்பார்?' என்று தோன்றியது. அதுவும் அவர் ஒருவர் மட்டும் அல்ல, மனைவியோடு இருவராக! இளம் வயதில் அத்தம்பதியருக்குள் இருந்த நேசமும், உறுதியும் வியப்பைக் கொடுத்தது.
அதே அளவிற்கான அன்பையும், இவர்களிற்குச் சற்றும் குறைவில்லாத திட்டமிடப்பட்டது போலான வாழ்க்கை முறையையும் தனது பெற்றோரிடமும் கண்டிருக்கிறான் கிருபா‌.
திருமணத்தின் பொழுது சித்ராவிற்கும் பத்தொன்பது வயதுதான்‌‌. சேது நல்ல வருமானத்துடன் பணியில் இருந்தாலும், அவனின் அன்னை பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்திருந்தார்.
இவனது பிறப்பிற்குப் பின்னரே‍, அவரின் கல்லூரிக் காலம் தொடங்கியது‌. சேது தொலை தூரக் கல்வியை எல்லாம் அனுமதிக்கவே இல்லை‌.
"சும்மா பேருக்குனு படிச்சு டிகிரி வாங்குற வேலை எல்லாம் இருக்கக் கூடாது. ஏட்டுக் கல்வி மட்டும்‍, வாழ்க்கைக்குப் போதாது‌. அது, கடைசி வரைக்கும் பிரயோஜனப்படணும்‌. காலேஜுக்குப் போ. வெளி உலகத்தையும் மனுசங்களையும் தெரிஞ்சிக்கோ‌. அந்த அனுபவம் தான் உனக்கான படிப்பு‌‌.‌ பிள்ளையை, ஆள் வச்சுப் பார்த்துக்கலாம்!" என மனைவியை ஐந்தாண்டுகள் கல்லூரிக்கு அனுப்பி முதுகலைப் பட்டம் பெற வைத்தார்.
அதன் பின்னரும், தான் அறிந்தவை அனைத்தையும் கற்றுத் தந்து, அவரின் சொந்த முயற்சியிலேயே அரசுப் பணியை பெறுவதற்கும் வழி காட்டினார். கிருபாவின் பத்து வயதில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் சித்ரா. அது தற்போது வரை தொடர்கிறது‌.
இருவரது பணியின் காரணமாக, விடுப்பு எடுத்துக் கொண்டு தூரமாய் எங்கும் செல்ல இயலாத சூழல். அதனாலேயே அவன் மதுரையின் பக்கம் வரவில்லை. மற்றபடி சென்னையின் தெருக்கள் அனைத்தும் தந்தையுடன் சுற்றி வந்ததால், தலைகீழ் மனப்பாடம்.
சுந்தரவல்லி அவ்வப்போது அங்கு வந்து சென்றதால், அவரை அறிந்து கொண்டான். இல்லையேல் அதற்கும் வாய்ப்பு கிட்டாமல் போயிருக்கும்.
இந்த இரு தம்பதியரின் வாழ்வு முறை ஒரு விதம் என்றால், முதியவர் கடந்து வந்தது வேறு வகை‌.
நேசித்த மாமன் மகனை அவரது தமக்கைக்குக் குடும்பத்தார் மணமுடித்து வைத்துவிட, தனக்கென்று தனியாய் ஒரு துணையைத் தேடிக் கொள்ளாது முறைப் பையனின் நினைவையே தற்போதுவரை சுமந்து கொண்டிருக்கிறார்.
"பாட்டிக்கூட தாத்தா, அவங்க பசங்கனு ஏன் யாருமே இல்லப்பா.?"‌ என விபரம் தெரியத் தொடங்கிய வயதில் அவன் வினவியதற்கு, சேது தந்த மேலோட்டமான பதில் தான் அது‌. அதற்கு மேல் ஆழமாய் கேட்டுக் கொள்ளவில்லை கிருபா.
அன்றைய தினத்தை எண்ணி, தானாய் ஒரு பெருமூச்சு வந்தது‌. இடது கையின் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்திருந்த கடிகாரத்தைக் கழட்டி, அருகே இருந்த மேஜையில் வைத்தான்.
மணி இரவு பன்னிரெண்டின் நெருக்கத்தில் இருந்தது. எனினும் துயில் இமைசேர மறுத்தது. ஜன்னலின் வழியே பார்வையை வெளியே படரவிட்டான்‌.
மதுரைக்குத் தூங்கா நகரம் எனப் பெயரிட்டது சரிதான் போலும். பிரதான சாலையில் ஓடும் பேருந்தின் ஹாரன் ஒலி, அப்பொழுதிலும் மிகத் துல்லியமாய் அதேநேரம் மெலிதாகவும் அவன் இருக்கும் பகுதி வரை கேட்டது.
உள் தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இருக்கவே செய்தது. ஆண்களிற்கு நிகராகப் பெண்களுமே வேலை நிமித்தமாய் உலா வந்தனர். சில வீடுகளின் வாயிலில் அடிகுழாயில் நல்ல தண்ணீர் வருகிறதா என அதன் கைப்பிடியை இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்றாட தேவைக்கான பொருள்களின் விற்பனை முதல் வாகனங்களைப் பழுது பார்க்கும் கடை வரை அனைத்தும் இயங்கும் அப்பகுதியில் ஒவ்வொன்றாய் மூடப்பட, அவற்றின் உரிமையாளர்கள் அதன் முன்பு கற்பூரம் ஏற்றி வணங்கிச் சென்றனர். ஆடவனின் பார்வையில் அது விழுந்தாலும், மனதில் பதியாமல் போனது.
எங்கிருந்தோ காற்றில் சுகமான கானம் ஒன்று மிதந்து வர, அதனோடு உணவகங்களில் இருந்து வாசமும் இணைந்து நாசியையும் செவியையும் ஓய்வெடுக்க விடாமல் தடை செய்தது‌.
மதுரையின் முக்கிய பேருந்து நிலையமான ஆரப்பாளையத்திற்கு அருகே இருக்கும், வடக்கு மடம் எனும் பகுதி அது. இரவு பயணத்தின் பேருந்துகள் யாவும் புத்துணர்வுடன் ஓடிக் கொண்டிருந்தன.
பயணிகள் வந்து சென்ற வண்ணமே இருக்க, பெரும்பாலான கடைகள் இயங்கின. நள்ளிரவிலும் சூடாய் உணவு என்றால், அதற்கு நேராய் மதுரை மாநகரத்தின் பேருந்து நிலையங்களைத் தான் பதிவு செய்திட வேண்டும். நேரம் காலம் எல்லாம் தேவையே இல்லை, பிடித்ததை விருப்பமான ருசியில் நினைத்த நேரத்தில் உண்ணலாம் இங்கு.
தென்றலுடன் கலந்து வந்த வாசம் எந்த உணவிற்கு உடையதாய் இருக்கும் என அவன் ஆராய்ச்சியில் மூழ்கி இருக்க, சிறிது நேரத்தில் சலசலக்கும் ஒலி.
கண்களை அத்திசையில் திருப்பிட, வண்டியூருக்கு கள்ளழகரின் ஏகாந்த சேவையை தரிசிக்கச் சென்றிருந்த பெண்கள் கூட்டமாய் தெருவிற்குள் நுழைந்தனர்.
அதில், ஓர் ஆண்கூட இல்லை. பாதுகாப்பிற்கு அவசியப் படவில்லை போலும். பத்திரமாய் வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்களிடம் இருந்து விலகி தனது வீட்டை நோக்கி திரும்பினாள் மது. அன்றலர்ந்த மலராய் சென்றவள், வியர்வை முத்துகள் துளிர்விட சற்றே வாடிய பூவாய் வந்திருந்தாள்.
அந்நொடி தான் சட்டென்று கிருபாவிற்கு உரைத்தது, மதுவின் அன்னை உடன் இல்லை என. சுந்தரவல்லியும் சொல்லி இருந்தார், 'தாயில்லா பிள்ளை!' என்று.
'என்ன ஆகி இருக்கும் அவருக்கு? அத்தனை தூரம் நேசித்த துணைவி இல்லாது, கிருஷ்ணன் எப்படி இவ்வாழ்வைத் தனியாய் எதிர் கொள்கிறார்? அச்சிறு பெண் எப்படி அன்னையின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் இன்றி வாழ கற்றுக் கொண்டாள்.?'‌ என்ற வினா எழ, சிந்தனையுடனே படுக்கையில் விழுந்தான்.
அறம் என்பது ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கை நெறியை கடைபிடிக்கும் பண்பாகும். அது சொல்லாலோ செயலாலோ இதுதான் எனச் சுட்டப்படுவது அல்ல.
ஒருவரின் எண்ணமே, அதன் மூலம். மற்றவருக்குச் சிறு தீங்கும் நினைத்திடாத குணமே அதன் இயல்பு.
அதனது பரிமாணம் தான், ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு வடிவில் சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்.
கீழே விழுந்தவன் எழ கை தருவதும், பசிக்கு உணவிடுவதும், எவரென்றே தெரியாத போதும் சினேகமாய் புன்னகைப்பதும், மன மகிழ்வுடன் வாழ்த்து தெரிவிப்பதும் கூட அறத்தில் தான் சேரும். இதை எல்லாம் செய்திட, பொருளைப் பற்றிய கவலையற்ற வாழ்வு அமைந்திடல் வேண்டும்.
கிருஷ்ணன் சங்கரி தம்பதியரும் சரி, சேது சித்ரா இணைகளும் சரி அற வழியில் செல்வதற்கு, பொருள் ஒரு தடையாய் இருக்கவில்லை. தேவைக்காக வருவாயை ஈட்டி கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே, பொருளாதார சுழலை நிலை நிறுத்திக் கொண்டனர்.
அதனால் இன்பத்திற்குப் பஞ்சம் உண்டாகவில்லை. கைப்பற்றிய நாள்தொட்டு, ஏற்றத்திலும் இறக்கத்திலும் துணை நிற்கும் இணையின் அண்மையைக் காட்டிலும் வேறு என்ன பெரும் இன்பம் கிட்டிவிடப் போகிறது‌?
கிருபாவின் தாய் தந்தையரது வாழ்வின் இன்பம், அவனிடம் இடம் மாறும் வரையிலும் இருவரது இன்பத்திலும் எக்குறையும் இருந்தது இல்லை. தனித்து நிற்கும் மகனால், தற்போது வேதனையின் சாயல் படரத் துவங்கி இருந்தது‌. அதைச் சரி செய்திடும் நோக்கில், தற்போது அவனை அனுப்பி இருந்தனர்.
கிருஷ்ணனது இன்பம் சங்கரி. மனைவி உயிரோடு இருந்த அந்நாள் வரையிலும் வலியில் கூட சுகத்தையே உணர்ந்து கொண்டிருந்தவர், அவர் உலகை விட்டுப் பிரிந்த பின்னர் துன்பத்தின் ஆழத்தில் புதைந்து போனார்‌ என்றுதான் சொல்ல வேண்டும்.
அதன் வேதனையை மெல்ல மெல்ல விலக்கி மீண்டும் அவரை நடமாட வைத்தது, மகளின்‌ உறவு.
'மதுவின் எதிர்காலம் என்ன.?' என்ற ஒற்றை வினாவிற்கான விடையைத் தேடத் தொடங்கியவரின் வாழ்க்கை ஓட்டத்தில் மீண்டும் இன்பக்காலம் ஆரம்பம் ஆனது, பெற்ற பெண்ணின் வடிவில்.
துணைவியின் இழப்பால் உண்டான காயத்திற்கு, மகளின் புன்னகையால் மருந்திட்டுக் கொண்டார் கிருஷ்ணன்.
இவ்விரு தம்பதியரும், தாங்கள் அறிந்த அறத்தின் வழித் தடத்தையே பிள்ளைகளிற்கும் காட்டி, அழைத்து வந்திருந்தனர். அப்பாதை வரும் காலத்தில், அவர்களிற்கென புதிதாய் ஓர் அடையாளத்தைத் தந்திட காத்திருந்தது.
பொழுது கடந்த மாயம் தெரியவில்லை. விடிந்து விட்டது. கீழே கேட்ட மதுவின் குரல்தான் கிருபாவை எழுப்பியது.
"அம்மாச்சி! சீக்கிரம் வந்து வாங்குங்க. கை சுடுது!" எனப் படபடப்புடன் சுந்தர வல்லியை அழைத்துக் கொண்டிருந்தாள் அவள்.
"கொதிக்கிற எண்ணெய்க்குள்ள கையை விட்ட மாதிரி எதுக்கு இப்படித் துள்ளிக்கிட்டு இருக்க.?" என்றவாறே அவர் சமயலறையில் இருந்து வெளியே வர,
"கொதிக்கிற எண்ணெய் இல்ல, பொங்கல்!"
"இதுல வை!‌" எனச் சிறு கிண்ணத்தை நீட்டிட, வெப்பத்தில் பழுப்பு நிறமேறிய வாழை இலையுடன் அதில் வைத்து விட்டு, இரு கைகளிலும் ஊதிக் கொண்டாள்.
"சூடா இருந்தா, பேசாம வர வேண்டியது தான?"
"அதெப்படி, நான் பொங்கல் வாங்கலேனா பெருமாள் கோபிச்சிக்க மாட்டாரா.?"
"நல்ல காரணம்!"
"உங்களுக்குப் பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தா, கிண்டலா இருக்கா.?"
"அதுக்காக தினமும் சாப்பிடணும்னு அவசியம் இல்ல மதுமா."
"பரவாயில்ல சாப்பிடுங்க. நானும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்துக்கிறேன்!" என அவள் வலக்கையின் சுட்டு விரலால் சிறிதளவு எடுத்து நாவில் வைத்துக் கொண்டாள்.
"என்ன பழக்கம் இது? ஸ்பூன்ல எடுத்து சாப்பிடு."
"சே! கையோட டேஸ்ட் வருமா ஸ்பூன்ல?"
"என் பேரனுக்குக் கொடுக்கலாம்னு நினைச்சேன். அவனுக்கும் பொங்கல் ரொம்ப இஷ்டம்‌."
"அச்சச்சோ! முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல அம்மாச்சி? இதை அப்படியே வைங்க. நான் போய் வேற வாங்கிட்டு வர்றேன்." என வாசலை நோக்கித் திரும்ப, "ஏய் நில்லு நில்லு. ஒன்னும் அவசியம் இல்ல, நான் வீட்டுல செஞ்சு கொடுத்துக்கிறேன்‌. இல்லனா நாளைக்கு வாங்குறதைத் தரலாம்‌. செண்டருக்குக் கிளம்பலயா நீ? கிருஷ்ணன் போயிட்டானா‌‍?" என்று மதுவை நிதானிக்க வைத்தார் முதியவர்.
"அப்பா போயிட்டாரு. இதோ டீ போட்டு எடுத்துட்டுப் போகணும். என்ன டிஃபன் செய்யட்டும் இன்னைக்கு.?"
"உனக்கு எது இஷ்டமோ, வேலையும் ஈஸியா இருக்கோ, அது செய்."
அவள் புன்னகைத்து விட்டுச் செல்ல, இவர்களது உரையாடலைக் கேட்டவாறே, படுக்கையில் இருந்து இறங்கினான் கிருபா.
பதினைந்து நிமிடங்களில், "சார்.." என அவளின் அழைப்பு அறை வாயிலில் கேட்டிட, நீராடி வந்திருந்தவன் அவசரமாய் தனது மேல் சட்டையை அணிந்தான்.
சரியாய் மின்விசிறிக்குக் கீழே இருந்தான்‌. அறையின் உயரத்தை மறந்தவனது கையின் விரல்கள் மேலே தூக்கும் பொழுது அதன் இறக்கைகளில் உரசிட, ஒரே நொடியில் அறை எங்கும் குருதித் துளிகள்.
ஒலி கேட்டு சட்டென்று உள்ளே நுழைந்த மது, கண்ட காட்சியில் உறைந்து போனாள்.
நடு மூன்று விரல்களிலும் வெட்டுப் பட்டிருக்க, வலியை விழுங்கிக் கொண்டு முகம் சுளிக்க மற்றொரு கையால் அழுத்திப் பிடித்திருந்தான் கிருபா‌.
பாவையின் கையில் இருந்த தேநீர் டம்ளர் தானாய் நழுவிட, "சார், என்ன இது.?" எனப் பதற்றத்துடன் அருகே சென்றாள். விழிகளில் நீர் நிறைந்து வழிந்தது.
"ஹாஸ்பிடல் போகலாம் வாங்க. அப்.‌. அப்பாவை வரச் சொல்லுறேன்‌. அச்சோ.. ஃபோன்? வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேனே?" என்று அறையில் கண்களைச் சுழற்றி கிருபாவின் கைப்பேசியை எடுத்தாள்.
"சார், அன்லாக் பண்ணுங்க!" என அவனிடமே கேட்டு, தந்தைக்கு அழைப்பு விடுத்து விபரத்தை உரைத்து, ஈரத்துணியை அவனின் விரல்களில் இறுக்கிச் சுற்றி இரத்தம் வெளியேறுவதை நிறுத்த முயன்றாள்.
"வாங்க சார், கீழ போயிடலாம்‌!" என்று மற்றொரு கையைப் பற்றிட, "மது சர்ட்!" என தவிப்புடன் வேறுபுறம் நோக்கினான் கிருபா‌.
"அடிபட்டிருக்கு. எப்படிப் போடுவீங்க.?"
"பிளட்டா இருக்கு. இப்படியே எப்படிப் போறது. ப்ளீஸ்..?"
தலை அசைத்தவள் அவசரமாய் மற்றொரு துணியால் அவனது உடலில் சிதறி இருந்த குருதியைத் துடைத்துவிட.. பதறி விலகியவன், "சர்ட் மாத்த மட்டும் ஹெல்ப் பண்ணுங்க. போதும்!"
"கழட்டி மாட்டுறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா.? இன்னும் பிளட் வர்றது வேற நிக்கல. கொஞ்சம் பேசாம இருங்க ப்ளீஸ். இதையே நர்ஸ் பண்ணும் போது, வேணாம்னு சொல்லுவீங்களா‌?"
அவன் பதில் பேச வழியின்றி அமைதி காக்க, முழுதாய் அணிந்திடாத சட்டைக்குள் மற்றொரு கையை நுழைக்க வைத்து பொத்தான்களைத் துளைகளில் பொருத்தினாள் மது.
இதற்கிடையில் தேநீர் டம்ளர் கீழே விழுந்த ஒலி கேட்டு, "மது என்னம்மா.‍?" எனக் குரல் கொடுத்து விட்டார் சுந்தரவல்லி‌.
"அம்மாச்சி சாருக்கு.." என்று அவள் வாய் திறக்க, "வேணாம். பாட்டி பயந்துடுவாங்க‍!" எனத் தடுத்தான் கிருபா‌.
"மறைக்க முடியுமா? கீழ போறப்ப தெரிஞ்சிடாதா.?"
"அப்பவே தெரிஞ்சிக்கட்டும்.‌ நீங்க சொல்லி அவங்க பதட்டமாகி, எதுக்கு? மாடிப்படி‌ வேற. ஏற முடியாது!" என்றிட, ஈர விழிகளைத் துடைத்துக் கொண்டு, தலை அசைத்தாள்.
"ஒன்னும் இல்ல அம்மாச்சி, கை தவறி டம்ளர் விழுந்திடுச்சு. இதோ வர்றேன்‍!" என்றவள், முதலில் ஆடவனை இறங்க வைத்து பின் தொடர்ந்தாள்.
ஒருமுறை திரும்பிப் பார்த்த கிருபா, "மது, உங்க துப்பட்டா‌.?"
அவனிற்கு உதவும் பொழுது இடையூறாய் இருக்க, அதனைத் தூக்கி வீசி இருந்தாள்‌. எங்கே போட்டாள் என்று அவளிற்கே தெரியவில்லை.
"இது ரொம்ப முக்கியமாக்கும்‌? நானே உங்க விரலுக்கு எதுவும் ஆகிடக் கூடாதேனு பயத்துல இருக்கேன். அம்மாச்சிக்கு உயிரே போயிடும். உங்க அம்மா அப்பாக்கு என்ன பதில் சொல்லுவோம்? ஏற்கனவே ஆக்ஸிடெண்ட் ஆகி, இப்பதான் அதுல இருந்து மீண்டு வந்திருக்கீங்க. அதுக்குள்ள திரும்பவும் இப்படி! இங்க வந்து ஒரு நாள் முழுசா ஆகல.‌ ஐயோ!" என உரைத்தவளின் குரல் வலியில் தோய்ந்து இருந்தது‌.
சொற்கள் முழுதாய் இல்லாது, துண்டு துண்டாய் தான் வந்தன. எனினும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது‌.
முந்தைய விபத்தின் போது சித்ராவும் இப்படித்தான் மகனின் நிலையை எண்ணி மறுகினார். அவர் புலம்பித் தவித்ததை எல்லாம், அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்த பின்னர் தந்தையின் மூலமாய் அறிந்து கொண்டான் கிருபா.
விபரம் அறிந்து அன்றே சென்னைக்கு வந்த சுந்தரவல்லி தான், மருமகளைத் தேற்றி மாற்றினார் என்பது கூடுதல் தகவல்.
வலியிலும் வேதனையிலும் ஆடவனின் உடல் துவள, பெற்றோரின் நினைவு தோன்றி மனதை மேலும் வதைத்தது.
"மது, ஒரு ரெக்குவெஸ்ட். அம்மா அப்பாக்கிட்டச் சொல்ல வேண்டாம் என்ன?"
கலங்கிய கண்களுடன் அவனை நோக்கியவள், எவ்வித மறுமொழியும் தரவில்லை.
வாயிலில் வாகனத்தின் சத்தம்.
"மது.." எனக் கிருஷ்ணன் அழைக்க, சுந்தரவல்லிக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது‌. வாயிலை வந்து அடைந்தார்.
"என்னய்யா, இந்த நேரத்துக்கு ஆட்டோவை எடுத்துக்கிட்டு வந்திருக்க? ஐயோ மேல சத்தம் கேட்டுச்சே? மதுக்கு எதுவும்? கேட்டதுக்கு ஒன்னும் இல்லனு சொன்னாளே? மீனாட்சி, என் பிள்ள!" என்று உள்ளே திரும்பிட, இருவரும் கீழே இறங்கினர்.
முதியவர் அதிர்ந்து பார்க்க, ஒரு துவாலையை எடுத்து போர்த்திக் கொண்ட இளையவள், "அம்மாச்சி, நாங்க முன்னாடி ஹாஸ்பிடல் போறோம். நீங்க அப்பாக்கூட ரெண்டாவது வாங்க!" என்றுவிட்டுக் கிருபாவுடன் கிளம்பினாள்.
"ஐயோ ரெத்தம்! என் பிள்ள கைக்கு என்ன ஆச்சு? கண்ணா!" எனப் பதறியவரின் கண்கள் கலங்கி கலவரமாய் நோக்கியது‌.
"ஒன்னும் இல்ல அம்மாச்சி. சாருக்கு சின்ன காயம் தான். நீங்க பயப்படாதீங்க. சீக்கிரம் சரியாகிடும்!" என்று மது சமாதானம் உரைத்திட, முதியவருக்காக கிருபாவும் தன் பங்கிற்கு வேதனையைக் கடந்து புன்னகைக்க முயன்றான்.
கிருஷ்ணன் வண்டியை இயக்கி அவசரப்படுத்த, இருவரும் அவரோடு புறப்பட்டனர்.
'பெயரனிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!' என்ற வேண்டுதலுடன் மருத்துவமனைக்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துத் தயார் ஆனார் சுந்தரவல்லி‌.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
இழப்பு என்பது
இந்த பிறப்பை போல
இயற்கையே.....
இழந்தவர்கள் நினைவில்
இருந்தாலும் இருப்பவர்களுடன் இணைந்து வாழ வேண்டும்....
இதுவே இயற்கை தத்துவம்
இதுவும் கடக்க தான் வேண்டும்....
 
Top Bottom