• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காதல் காலமிது -10 ஹம் தும்ஹாரே ஹை சனம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
271
(மக்களே சாரி ஃபார் த டிலே! கொஞ்சம் வேலை அதிகம். சீக்கிரம் முடிக்கணும்னு தான் நினைக்கிறேன். முடியல. என்ன செய்ய.. அடுத்த அத்தியாயம் சீக்கிரம் தரப் பார்க்கிறேன்.. இந்த அத்தியாயம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெருசு)

காதல் காலமிது- 10

ஹம் தும்ஹாரே ஹை சனம்


திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அந்த ரிசார்ட்டைக் காலி செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இருப்பதிலேயே பெரிய அறை ஒன்றில் கடைசியாக ஒரு பஞ்சாயத்து நடந்தது. ரித்திகா தரப்பினரும், மித்ரன் தரப்பினரும் எதிரெதிர் அணியில் சூடாக அமர்ந்திருந்தனர். எல்லாம் நந்தகுமார் தாத்தாவின் வீடியோ கொளுத்திப் போட்ட வெடி.

“இங்க வச்சுப் பேசுன்னு சொல்றோம்.
அது என்னடா, இங்க வச்சு பேசாம எங்க கண்ல படாம வெளியே போய் பேசுறீங்க?” ரித்திகாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே மித்ரனிடம் கேட்டார் அவன் அப்பா.

“அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு தான்ங்க.. இவன் தான் ஏதாவது சேட்டை பண்ணி இருப்பான்” என்று ரித்திகாவுக்கு ஆதரவு தந்தார் மித்ரனின் அம்மா. அவருக்குத் தான் இப்பொழுது ரித்திகாவை பிடியோ பிடி என்று பிடிக்கிறதே.. சப்போர்ட் செய்யத்தானே செய்வார்.

“ஹலோ சார் என் பொண்ணப் பார்த்து முறைக்கிற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அவ கொஞ்சம் வீட்டுக்கு அடங்காதவ தான்.. ஆனா உங்க பையனைப் பாக்குறதுக்காக எல்லாம் வெளியே போயிருக்க மாட்டா.. ஏன்டி இந்த பைக் எடுத்துட்டு சுத்துறது, ஆம்பளப் புள்ள மாதிரி அலையிறது, இதெல்லாம் செய்யாதன்னு சொன்னா கேக்குறியா?” கைமுட்டிகளை இறுக்கிக் கொண்டு ரித்திகாவின் தோளில் அடிக்க வந்தார் அவளது அம்மா.

நடுவில் புகுந்த செவ்வந்தி சித்தி. “அக்கா, அக்கா! அடிக்காத”

“ஆமாங்க அடிக்காதீங்க!” மித்ரனின் ஒன்று விட்ட பெரியப்பா தயாளன் செவ்வந்தி கூறியதை ஆமோதித்தார்.

நடந்து முடிந்த திருமணத்தில் மணப்பெண்ணான மோனிகாவின் தந்தையும் தாயும் அங்கிருந்தனர். ‘இவங்க வீட்டுக்கல்யாணத்துல ஏதோ பிரச்சனையாமே’ என்ற பெயர் பரவி விடக்கூடாது என்ற பதட்டம் ஒருபுறம், ‘எல்லாருமே வேண்டப்பட்டவங்க, இப்படி சண்டை போட்டா நல்லா இருக்காதே என்ற நல்லெண்ணம் ஒரு பக்கம். அது மட்டுமில்லாமல் முதன்முறையாக இந்தப் பஞ்சாயத்துக் காட்சிகளை இப்போதுதான் அவர்கள் பார்க்கிறார்கள். மகளின் திருமண வேலையில் பரபரப்பாக இருந்தவர்கள் காதில் இதுவரை நடந்த அர்ஜுன் மேனகா விவகாரம் எட்டவில்லை.

அங்கு நடப்பது எதையும் பற்றிக் கண்டுகொள்ளாமல் மேனகா மடியிலிருந்த சுஜித்துக்கு அர்ஜுன் எதையோ ஊட்டிக் கொண்டிருக்க, மேனகா, “நடத்துங்க நடத்துங்க, நல்லா நடத்துங்க” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்

ரித்திகாவுக்குக் கடுப்பான கடுப்பு. கூட்டத்தில் மேனகாவைத் தேடி கண்டுபிடித்தவள், ‘நீ வா.. தனியா மாட்டுவேல்ல, அப்ப உனக்கு இருக்கு’ என்பதாக அவளை முறைத்தாள். அந்த முறைப்பை எல்லாம் மேனகா சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

மித்ரனுக்கும் கோபம் கோபமாக வந்தது. எல்லா பார்வைகளும் அவனை நோக்கியே மையம் கொண்டிருப்பதாக நினைத்தான். ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்துப் பேசி இருக்கிறார்கள், அது பற்றி குற்றம் சாட்டி பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. திரைப்படங்களில் காணும் ஆலமரத்துப் பஞ்சாயத்துகளுக்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பது போல் தெரியவில்லை. என்ன ஒரு வித்தியாசம் என்றால் அந்தக் காட்சிகளில் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு, மூக்கை உறிஞ்சி நிற்பாள், இங்கே இவள் முறைத்து விறைப்பாக நிற்கிறாள்.

ரித்திகாவின் பார்வை மித்ரனின் மேல் படிந்து, ‘நீ விளக்கம் சொல்’ என்றது. இவன் பார்வை, ‘நீதான் பெண்ணியவாதியாச்சே, நீ சொல்ல வேண்டியது தானே, என்னை ஏன் சொல்லச் சொல்ற?’ என்று எதிர் கேள்வி கேட்டது

மௌனத்தை யாராவது உடைத்துத் தானே ஆக வேண்டும், “எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்று சொல்ல மித்ரன் ஆரம்பித்த அதே நொடி, “இதோ பாருங்க” என்று ரித்திகாவும் தொடங்கினாள்.

‘ஓ நீ பதில் சொல்றியா ஆரம்பி!’ என்று மித்ரன் பேச்சை நிறுத்த, அதே சிந்தனையில் ரித்திகாவும் நிறுத்தினாள். மீண்டும் ஒரு நிமிட மௌனம். அதில் முக்கால் நிமிடம் கடந்திருக்கையில் குசுகுசுவென்று பேச்சுக் குரல்கள் கிளம்பின.

இது சரிப்படாது என்று தொண்டையைக் கனைத்தான் மித்ரன். ‘சரி இவன் பேசப் போறானா, பேசட்டும்’ என்று ரித்திகா இறுக்கமாக வாயை மூடிக்கொண்டாள்.

“எல்லாரும் தெளிவாக் கேளுங்க.. இந்த யூ டியூப் தாத்தா ஒருத்தர் இருக்காருல்ல, அவர்தான் எல்லாக் குழப்பத்துக்கும் காரணம்.. அவரை முதல்ல பேக் பண்ணி வெளியே அனுப்புங்க.. இப்ப என்கிட்டயும் ரித்திகா கிட்டயும் ஒரு ப்ரோபோசல் கொடுத்திருக்கீங்க. அதுக்கு சப்பையாக காரணம் சொல்றீங்க. எங்க அண்ணனும் அண்ணியும் டைவர்ஸ் பண்றதை தடுக்குறதுக்குன்னு சொல்லி.. ஆனா பாருங்க, அதுக்கு எல்லாம் அவசியமே இல்லாம அதுவும் அவங்க ரெண்டு பேரும் ஒற்றுமை ஆயிட்டாங்க.. நானும் ரித்திகாவும் எதேச்சையா தான் வெளியே மீட் பண்ணினோம்.. தெரிஞ்சவங்கன்ற முறையில் இரண்டு வார்த்தை பேசிக்கிட்டோம்.. அப்படி எதுவும் வில்லங்கமா வீட்டுக்குத் தெரியாம செய்யணும்னு நினைச்சிருந்தா, நாங்க ஏன் நீங்க கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்காம திருட்டுத்தனமா பேசப் போறோம்” என்று கேட்டான் மித்ரன்.

“அதானே நல்லாக் கேளு மித்ரன். அந்த தாத்தாவால தான் பிரச்சனை அவருடைய யூடியூப் சேனலை நான் ரிப்போர்ட் பண்ணிட்டேன்” என்றது மித்ரனின் மாமா.


“ஆமாங்க! மித்ரன், ரித்திகா ரெண்டு பேரும் தங்கமான புள்ளைங்க வீட்டுக்கு மீறி எதுவும் செய்ய மாட்டாங்க” என்றார் செவ்வந்தி.

“அதனாலதான் அப்படி ஒரு பொண்ணு என் வீட்டுக்கு வந்தா நல்லா இருக்கும்னு அந்தப் பொண்ண என் சின்னப் பையனுக்குக் கட்டி வைக்கலாம்னு நினைக்கிறேன்” என்று மித்ரனின் அம்மா குறுக்கே வர,

“அப்ப என் பொண்ண அடங்காப்பிடாரி அப்படின்னு சொல்றீங்களா?” என்று சண்டைக்கு வந்தார் மேனகாவின் அம்மா. இவர் ரித்திகா அம்மாவுடைய அக்கா. செவ்வந்தி தான் இளைய மற்றும் மூன்றாவது சகோதரி.

“ஐயோ அத்தை! நீங்க வேற.. இப்ப மேனகாவைப் பத்தியே பேச்சு கிடையாது” என்று அர்ஜுன் இடையில் போக,

இவ்வளவு நேரம் மௌனம் சாதித்த ரித்திகா இப்போது வாயை திறந்தாள். “எங்க கதை இருக்கட்டும், அதை நாங்க அப்புறம் பார்த்துக்கிறோம்.. முதல்ல இப்பவாவது உருப்படியா காரணம் சொல்லுங்க.. நீங்க ரெண்டு பேரும் முதல்ல ஏன் சண்டை போட்டீங்க? எதுக்கு டைவர்ஸ் அப்ளை பண்றீங்க? இப்ப எல்லாரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குறீங்க? கல்யாணம், குடும்ப பாலிடிக்ஸ் இதெல்லாம் தலையிட எனக்கு நேரமில்லை.. அதைவிட நான் முக்கியம்னு நினைக்கிற பல விஷயங்கள், கடமைகள் எனக்கு இருக்கு”

அனைவரின் பார்வைகளும் அர்ஜுன், மேனகா இருவரையும் நோக்கி திரும்பின.

“அதானே! சொல்லும்மா ஏன் என் பையனை டைவர்ஸ் பண்றேன்னு சொன்ன.. எவ்வளவு கேட்டாலும் காரணம் சொல்ல மாட்டேங்குற?” இப்போது கேள்வி கேட்டது அர்ஜுன், மித்ரன் இவர்களின் அப்பா.

“என் பொண்ணு செஞ்சா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்” பதில் சொன்னது மேனகாவின் அம்மா.

“நான் செவ்வந்தி சித்தி கிட்ட மட்டும் சொல்லி இருக்கேன்.. அவங்க தான் ரகசியமா வச்சுப்பாங்க.. நீங்க எல்லாரும் ஊர் முழுக்க சொல்லி விஷயத்தை பெருசாக்கிடுவீங்க” சாவகாசமாக எதையோ கொறித்துக் கொண்டே சொன்னாள் மேனகா.

“இந்த அளவுக்கு ஆனப்புறம் எல்லாரும் கிட்டயும் சொல்றது தான் டி நல்லது.. சொல்லிடு.. இப்ப என்கிட்ட எல்லாரும் என்ன என்னன்னு கேப்பாங்க” செவ்வந்தி பதட்டமானார். “ஆமா அர்ஜுன்.. மூணாம் மனுஷர் சொல்லி எல்லாத்துக்கும் தெரியிறதை விட, நீங்களே சொல்றது தான் நல்லது” என்றார் தயாளன். செவ்வந்தி என்ன சொன்னாலும் தயாளன் ஆமோதிப்பது ரித்திகாவுக்கு என்னவோ வித்தியாசமாகப்பட்டது.

மித்ரன் ரித்திகாவைப் பார்த்தான். ‘எவ்வளவு நேக்கா டாபிக் ஆஃப் டிஸ்கஷனை நம்ம கிட்ட இருந்து அந்தப் பக்கம் திருப்பி விட்டுட்டா? இவ சரியான ஆள் தான். சோஷியலி ஆக்டிவ்வா இருக்கா, நிறைய பொது இடங்களுக்கு போறா, நிறைய பேரை சந்திச்சுப் பேசுறா.. அந்த அனுபவம் இருக்கத்தான் செய்யும். நான் என்ன மிஞ்சிப் போனா கம்பெனி கொலீக்ஸோட மீட்டிங் போடுவேன்.. அதிலேயே ஒரு கருத்து சொல்றதுக்கு ஆயிரம் முறை யோசிப்பேன்’ மெச்சுதலாகவே அவளைப் பார்த்தான் மித்ரன்.

மித்ரனின் பக்கம் திரும்பாவிட்டாலும் ரித்திகாவுக்கு அவன் பார்வை தன் மேல் படிவது புரிந்தே இருந்தது. உதடுகளில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றியது. அதைத் தோன்றிய வேகத்திலேயே அடக்கிக் கொண்டாள். அவளின் உதடுகள் ஓரம் சுருங்குவதும், உதடுகளை மடித்து அவள் தலையை வலுக்கட்டாயமாக அர்ஜுன், மேனகா பக்கம் திரும்புவதும் மித்ரன் கண்ணில் பட்டது.

இது போல் வேறு எந்தப் பெண்ணின், அல்லது எந்த ஒரு மனிதனின் முக பாவனையையும், மாற்றத்தையும் தான் உன்னிப்பாக கவனித்திருக்கிறோமா என்ன என்று தன்னையே கேட்டான். பிறர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று இதுவரை என்றேனும் தோன்றி இருக்கிறதா என்று ஒரு முறை கண்மூடி யோசித்தான். இல்லை என தலையை ஆட்டிக் கொண்டான்.

“சொல்லுடா அண்ணா” என்றான் அவனும் அர்ஜுனைப் பார்த்து.

எப்போதும் அண்ணா என்று கூப்பிடவே மாட்டான் மித்ரன். அண்ணா என்று கூப்பிடுகிறான் என்றால் கடும் கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தம். அதுவும் டேய் அண்ணா என்றால் கேட்கவே வேண்டாம்.

மேனகா, “கேக்குறாங்கல்..‌ நான் ஏன் உங்களைப் பிரியணும்னு கேஸ் போட்டேன்னு உங்களுக்குத் தெரியும்ல.. சொல்லுங்க” என்றாள்.

“நீயே ஏதாவது பாலிஷா சொல்லு” என்றான் அர்ஜுன் குரலைத் தாழ்த்தி.

“நீங்க பண்ணின காரியத்தை வெளியே சொல்லவே உங்களுக்கு வெக்கமா இருக்குதாக்கும்? சொல்லணும்னா சொல்லுங்க.. இல்லாட்டி நான் போறேன்..” என்று சுஜித்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் மேனகா.

“பாத்தியா.. பேசிக்கிட்டு இருக்குறப்பவே எழுந்து போறா. இதுதான் இவகிட்ட எனக்கு பிடிக்காதது” என்றார் அக்மார்க் மாமியாராக அர்ஜுனனின் தாய்.

“நான் பேச ஆரம்பிச்சா உங்க குடும்பத்தோட வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிட கூடாதுன்னு தான் அத்தை டீசன்டா எந்திரிச்சு போறேன். ஒவ்வொருமுறை நம்ம வீட்ல வாக்குவாதம் வரும்போதும் இப்படித்தான்.. உண்மைகளைச் சொன்னா நீங்க தாங்க மாட்டீங்க, அப்புறம் உங்க இமேஜ் தான் போகும். என்ன அர்ஜுன்? எல்லாம் உண்மையையும் நானே சொல்லிடட்டுமா?” என்று கேட்டாள் மேனகா.

மித்ரனுக்கு ஜாலியாக இருந்தது அர்ஜுன் அவனை பாவமாக பார்க்க, அவனோ ‘அலைபாயுதே கண்ணா’ பாடலை ஹம் செய்ய ஆரம்பித்தான். அதாவது அலைபாயுதே ஸ்டைலில் மேனகாவும், அர்ஜுனும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் சுற்றிக்கொண்டு இருந்தவர்கள். அதன் பின் தான் போராடி ஊரறிய திருமணம் செய்தது. இன்று வரை அது யாருக்கும் தெரியாது. அதை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டுவது மித்திரனுக்கு எப்போதுமே பழக்கம்.

“இல்ல இல்ல! நானே சொல்றேன்..” படபடப்புடன் எழுந்த அர்ஜுன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தான்.

அந்த ஒரு நிமிட இடைவெளியில், “ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ ரித்திகா. உன்னை இந்தக் குடும்பத்தில் கட்டி வைக்கணும்னு நான் நினைச்சது உண்மைதான். ஆனால் இப்படி ஒரு மாமியார் கிட்ட உன்னை மாட்டி விடணுமா அப்படிங்கிறதே இப்ப எனக்கு யோசனையா இருக்கு. ரீ கன்சிடர் பண்ணிட்டு நாளைக்கு சொல்றேன்” என்றாள் சாதாரணமாக. அவள் சொல்வதைப் பார்த்தால், “இருங்க, ரெண்டு நிமிஷம் ஃபோன் பேசிட்டு வரேன்” என்பது போல் இருந்தது.

இப்போது மித்ரனுக்கு ஆயாசமாக வந்தது. ‘அடேய்.. இப்பதான் முக பாவனை, உதடு டுவிஸ்ட், ஐ லாங்குவேஜ் இதெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பிக்குது.. இப்ப ஏன் குடும்பப் பாலிடிக்ஸை கொண்டு வந்து மறுபடியும் கழுத்தை அறுக்குறீங்க’ என்று நினைத்தவனாக,

“அண்ணீஈஈ” என்றான்.

நீயா என்னை அழைத்தது என்பது போல் அவனை பார்த்தாள் மேனகா. இப்போது அர்ஜுன் தண்ணீரைக் குடித்து முடித்திருந்தான். “நான் சொல்றேன். தப்பு என் மேல தான். மேனகா ஒரு பையன் கூட அடிக்கடி பேசிகிட்டு இருந்தா…”

“என்ன பையன் கூட பேசினாளா? யாரது?” என்ற மேனகாவின் அம்மா, “யார் கிட்ட டீ பேசின? இப்ப ரிசப்ஷன்ல வந்து நின்னானே அவன் கூடயா?” என்றார் மேனகாவிடம் கோபமாக.

“அத்தை! இருங்க இருங்க. அவன் ஒரு சின்னப் பையன். மேனகாவுக்கும் அவனுக்கும் குறைஞ்சது பத்து வருஷமாவது வித்தியாசம் இருக்கும். அவனுக்கு ஏதோ படிப்புக்கு ஹெல்ப் பண்றதுக்குத் தான் அடிக்கடி பேசியிருக்கா.. நான் தப்பா நினைச்சு அவகிட்ட சண்டை போட்டேன். அதான் அவளுக்குக் கோபம்” என்றால்

“படத்தோட ஸ்டார்டிங்ல ஆரம்பிச்சு இன்டர்வல் வரை தான் சொல்லியிருக்கீங்க.. கிளைமாக்ஸ்க்கு வாங்க” என்று மேனகா கூற,

“அப்புறம் அப்புறம்… அவளுக்குப் போட்டியா நானும் யார் கூடவாவது ஃபோன் பேசுறேன் பாரு அப்படின்னு சொல்லி சின்ன வயசுல என் கூடப் படிச்ச ஒரு பொண்ணு கூட நான் அடிக்கடி போன்ல பேசினேன்..”

“எந்த மாதிரி பேசினீங்க.. அதைச் சொல்லுங்க..”

“அதையாவது விட்டுறேன் மேனகா..”

“விடல்லாம் முடியாது.. சொல்லுங்க. இவ்வளவு தூரம் வந்தாச்சு”

“இதெல்லாம் சபையில் வச்சுப் பேசுற விஷயமா? தனியா பேசுவோம்” என்று அர்ஜுன் மித்ரன் இவர்களின் அம்மா இடைப் புகுந்தார்.

“அதெல்லாம் முடியாது அத்தை.. இங்கே தான் பேசணும்.. ஊரே சேர்ந்து, ‘பெத்த குழந்தையை வேண்டாம்ங்கிறியே, நீ எல்லாம் பொம்பளையா? பொறுத்துப் போ’ அப்படி இப்படின்னு சொன்னீங்களே.. இப்ப உண்மையை எல்லாரும் கேளுங்க.. என்ன அர்ஜுன், சொல்லுங்களேன்.. அந்தப் பொண்ணு கூட கடலை போட்டேன், வழிஞ்சேன் னு…”

“ஆமாங்க.. அவ சொல்றது உண்மைதான். இவளைப் பழி வாங்குறதா நினைச்சுட்டு நான் அந்தப் பொண்ணு கூட கடலை தான் போட்டேன்”

“என்ன மாப்ள இப்படிச் சொல்றீங்க? நாங்க எல்லாம் இவ்வளவு நாளும் மேனகாவைத் திட்டிக்கிட்டு இருக்கோம்.. எப்படி ஆசை ஆசையா லவ் பண்ணி ரெண்டு வீட்டையும் பேசி கன்வின்ஸ் பண்ணி மேரேஜ் பண்ணீங்க. அவ்வளவு ஈஸியா உங்களால இன்னொரு பொண்ணு கிட்ட பேச முடியுதா?” என்றது மேனகாவின் தந்தை.

“தப்புதான். அது எல்லாம் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறதுக்குத் தான் இப்ப கெஞ்சிகிட்டு நிக்கிறேன்.. இப்போ உங்க முன்னாடியே கேட்கிறேன். முதல் முறை லவ் பண்ணும் போது தனியா பிரபோஸ் பண்ணினேன். இப்ப உங்க எல்லார் முன்னாடியும் வச்சு கேட்கிறேன்.. மேனகா நான் செஞ்சது தப்புதான். இந்த கண்டிஷன் கிண்டிஷன் எல்லாம் போடாம, இதோ இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முயற்சிக்காம, என்னை ஏத்துக்கோயேன் ப்ளீஸ்! இந்த முடிவுக்கு நீ எப்பவும் வருத்தப்படாத மாதிரி நான் நடந்துக்கிறேன் ப்ராமிஸ்!” என்றான் அர்ஜுன் உருக்கமாக.


(பஞ்சாயத்து செஷன் to be continued…)


(‘ஹம் தும்ஹாரே ஹே சனம்’ அப்படின்னா ‘நான் உன்னுடையவன் அன்பே’ அப்படின்னு அர்த்தம். நம்ம கார்த்திக், ரேவதி, ரகுவரன் நடிச்சு தொட்டாசிணுங்கின்னு ஒரு படம் வந்துச்சு.. அதோட ரீமேக் தான் இந்தப் படம். ஷாரூக், மாதுரி மணமான தம்பதிகள். மாதுரி தன்னுடன் வளர்ந்த சல்மான் கூட பாசமாய் இருக்கிறதைப் பார்த்துட்டு ஷாரூக் சந்தேகப்படுவார். கடைசில அவங்களுக்கு நடுவுல இருக்கிறது சகோதர பாசம் அப்படின்னு புரிஞ்சுகிட்டு மனைவிகிட்ட மன்னிப்பு கேட்பார். அட, எங்க நீங்க வேற! எனக்கு ஏற்கனவே வேற ஆள் இரு
க்குங்க அப்படிம்பாரு அந்த உடன்பிறவா சகோதரர்! அந்த ஆள் யாருன்னா ஐஸ்வர்யாராய் கடைசியா ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ்க்கு வருவாங்க)
 

Author: SudhaSri
Article Title: காதல் காலமிது -10 ஹம் தும்ஹாரே ஹை சனம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom