• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 5

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
உருகியோடும் 5

5. ‘பொன்’ மானே!

“அத்தை! பைனாப்பிள் கேசரி செஞ்சிருக்கேன். சாப்பிட்டுப் பாருங்க!” ஒரு சிறிய கிண்ணத்தில் கேசரி வைத்து ஸ்பூன் போட்டு நீட்டினாள் சித்ரா.

கடைக்குப் போய்விட்டுக் கை நிறைய பைகளுடன் உள்ளே வந்து சத்தியபாமா அதை வாங்கி ஒரு வாய் எடுத்து சாப்பிட, “பிள்ளையாரப்பா, பிள்ளையாரப்பா! அத்தை நல்லா இருக்குன்னு சொல்லணும்.. அத்த நல்லா இருக்குன்னு சொல்லணும்!” என்று கண்மூடி வாய்விட்டே வேண்டிக்கொண்டாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த சத்தியபாமா, “ரொம்ப நல்லா இருக்கும்மா! அட்டகாசமா பண்ணியிருக்க.. இந்த இனிப்பு போலவே நீயும் நல்லா இருக்கணும்” என்றவர், “உனக்கு ரெண்டு மூணு புடவை வாங்கிட்டு வந்துருக்கேன்.. எது பிடிச்சிருக்குன்னு பாரு.. இப்போதைக்கு இந்த அத்தையால இவ்வளவு தான் முடிஞ்சுது. பின்னாடி இதை விட காஸ்ட்லியா வாங்கித் தரேன்” என்றார்.

புடவைகளைப் பிரித்துப் பார்த்த சித்ரா, “இது நல்லா இருக்கு அத்தை!” என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். “எனக்கு இதுவே போதும் அத்தை.. காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம். அப்புறம் அத்தை.. புது சாரி கட்டினா நான் அதில் காசு வச்சு முடிஞ்சிக்குவேன்.. தெரியுமா? அதனால அந்தக் காசு நீங்க தான் தரணும்” என்றாள் குறும்புச் சிரிப்புடன்.

“அதுக்கு என்ன ராசாத்தி.. இந்தச் சிரிப்புக்குத் தங்கக்காசே தருவேன். திடீர் கல்யாணம் இல்லையா.. அதனால எதுவும் தயார் பண்ண முடியல.. நியாயப்படி உனக்கு தாலிச் செயின் எங்க வீட்ல இருந்து தான் போடணும்.. தாலி மட்டும் தானே முகுந்தன் வாங்கியிருந்தான்.. செயின் வாங்க முடியல” என்று சத்தியபாமா சொன்னார். கவனமாக முகுந்தனையோ, சித்ராவையோ ‘நீங்க தெரியாம போய் பண்ணிக்கிட்டீங்க’ என்று குற்றம் சாட்டாமல், ‘அதனால்தான் உனக்கு செயின் கிடைக்கல’ என்று பழி சொல்லாமல் பேசினார்.

“பரவாயில்லை இதுவே போதும். நீங்க என்னை ஏத்துக்கிட்டதே பெருசு” என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சித்ரா.

அப்படியே மகளுக்கென அங்கே சுப்பம்மாளும் தன்னால் இயன்றதை சேகரித்துக் கொண்டிருந்தார். தன்னிடம் இருந்த சிறிய தங்கை நகைகளை மாற்றிப் புதிதாக்கி ஒரு தோடும், மோதிரமும் வாங்கியவர், தன் இரண்டு அண்ணன்களைக் கூப்பிட்டுத் தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னார். முதலில் கோபப்பட்டவர்கள், ‘சரி அதுவும் நல்லதுக்குத் தான்.. விடு. ஆனது ஆகிப்போச்சு’ என்றார்கள். ‘நாங்க அங்க இங்க புரட்டி எங்களால முடிஞ்சதை செய்றோம்’ என்றார்கள்.

அவர்களும் கீழ் நடுத்தர வர்க்கம்தான். சுடுவது தெரியாதவர்கள். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தங்கைக்குக் கணவர் இல்லை, அவள் மகளுக்கு என்றைக்குத் திருமணம் வைத்தாலும் இத்தனை கிராம் தங்கம் போட்டுவிடலாம் என்று என்றோ பேசி வைத்திருந்தார்கள். அந்த நகையை இப்பொழுது செய்து விடலாம் என்று பணம் புரட்டத் துவங்கினர்.

அந்தா இந்தாவென்று ஐந்து பவுன் வரை சேர்ந்தது சுப்பம்மாளிடம். ரிசப்ஷனுக்கு அன்று காலையில் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு முகுந்தனின் வீட்டுக்கு வந்துவிட்டார் சுப்பம்மாள்.

சத்தியபாமா சித்ராவின் தம்பி, தங்கைக்கும் உடைகள் எடுத்திருந்தார். ‘இதெல்லாம் எதுக்கு அண்ணி?’ என்று தர்மசங்கடமாகச் சிரித்தார் சுப்பம்மாள். நகைகளை சத்யபாமாவிடம் நீட்டினார்.

“பொண்ணு வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி ஏதோ எங்களால முடிஞ்சது. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு, நகை இல்லாம இருக்க வேண்டாம்னு இப்பவே கொண்டு வந்துட்டேன்” என்று அவர் சொல்ல, சித்ராவுக்குக் கண் கலங்கியது.

அம்மாவை கஷ்டப்படுத்தி விட்டோமோ, திருமணம் என்றால் நகை, சீர் இதெல்லாம் சேர்ந்து வருவது தானே, நான் பாட்டுக்கு எதையும் யோசிக்காமல் முடிவெடுத்து விட்டேனோ என்று வருந்தினாள். சித்ராவின் முகம் வாடியதைப் பார்த்த சத்தியபாமா, “அட அழகா இருக்கே! இந்தாங்க நீங்களே அவளுக்குப் போட்டு விட்ருங்க” என்று சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினார். கண்களைத் துடைத்துக்கொண்ட சுப்பம்மாள் சிரிப்புடன் ஒரு மெல்லிய சங்கிலியையும், ஒரு பிரேஸ்லெட்டையும் சித்ராவுக்கு அணிவித்தார்.

“அம்மா நான் இங்கேயும் வேலைக்குப் போய் தங்கச்சி கல்யாணத்துக்கு இதே மாதிரி மூணு மடங்கு போடுவேன்மா.. சரிதானே அத்தை” என்று சித்ரா சத்தியபாமாவிடமும் ஒப்புதல் கேட்டாள்.

“அதுக்கென்ன ராசாத்தி! நீ எனக்கு மக மாதிரி.. உன் தங்கச்சிக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்! உங்க மகள் செஞ்ச கேசரியை சாப்பிடுங்க” என்று சுப்பம்மாளுக்கும் சித்ராவின் தம்பி தங்கைக்கும் கொடுத்தார். சுப்பம்மாளுக்கு கண்கள் மீண்டும் கலங்கின.

முந்தைய நாளும், அன்று காலையும் முகுந்தன் எங்கோ போவதும் வருவதுமாக இருந்தான். அவன் சாப்பிட அமர்ந்த நேரம் சித்ரா அவனுக்கு பரிமாறிக் கொண்டே தன் புதிய நகைகளை கவனிக்கிறானா என்று பார்த்தாள். யோசனையில் ஆழ்ந்த வண்ணம் அவன் சாப்பிட்டு கொண்டிருக்க, “ஏங்க! அம்மா இந்த நகையெல்லாம் எனக்கு வாங்கிட்டு வந்து போட்டு விட்டிருக்காங்க. எங்க மாமாக்கள் எடுத்து கொடுத்ததாம், இந்த பிரேஸ்லெட்டும் செயினும்” என்றாள்.

“அப்படியா நல்லா இருக்கே!” என்று முகுந்தனின் பார்வை வேறு மாதிரியாக கணக்குப் போட்டது. எத்தனை கிராம் தேறும் என்று அவன் நோட்டமிட்டுக் கொண்டிருக்க, சரியாக அந்தப் பார்வையைப் பார்த்து விட்டார் சத்தியபாமா.

அன்றைய முற்பகல் பொழுது விரைவாகக் கழிய, மதிய நேரத்தில் அருகில் இருந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர் சித்ராவை அலங்கரிக்க வீட்டுக்கு வந்து விட்டார். மண்டபமும் அருகில் தான். வீட்டிலேயே எளிமையாக ஒப்பனை செய்துவிட்டு மண்டபத்திற்குக் கிளம்புவதாக ஏற்பாடு. பியூட்டிஷியன் பெண் தன்னிடம் இருந்த இரண்டு மூன்று கவரிங் நகை செட்டுகளைக் கொண்டு வந்து, எது வேணும்னு சொல்லுங்கம்மா என்று கேட்க, சித்ரா ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள்.

அதை அணிவித்துக் கொண்டிருக்கையில் உள்ளே வந்த சத்தியபாமா, “இந்த செட் போட்டிருக்கிறப்ப உன்னோட செயின் பிரேஸ்லெட்டெல்லாம் வேணாம்மா. கழட்டிரலாம். அப்புறமா போட்டுக்கோ” என்று சொல்ல, சித்ராவும் மறுவார்த்தை பேசாமல் அவற்றைக் கழற்றி சத்தியபாமாவிடம் நீட்டினாள்.

“உங்க அம்மாகிட்ட கொடுத்து பத்திரமா வச்சுக்கோ” என்று சத்தியபாமா சொல்ல, அப்போதுதான் மண்டபத்தில் போய் ஏற்பாடுகள் செய்யலாம் என்று கிளம்பி இருந்தார் சுப்பம்மாள். “நீங்களே வச்சிருங்க அத்தை.. நீங்க தான் எனக்கு ஒரு அம்மா மாதிரின்னு சொல்லிட்டீங்களே” என்று சிரித்தாள் சித்ரா.‌ அந்த சிரிப்பைப் பார்த்தவுடன் சத்தியபாமாவுக்கு மனதெல்லாம் இளகியது.

சித்ராவின் கன்னத்தில் கிள்ளி முத்தம் கொடுத்தவர், “சரி கண்ணு!” என்று அந்த நகைகளைப் பத்திரப்படுத்தினார். அன்றைய வரவேற்பு நிகழ்வு சிறப்பாகவே நடைபெற்றது. சித்ராவுக்கு அவளுடைய சொந்த பந்தங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. எப்போதாவது தான் அவர்களைச் சந்தித்திருக்கிறாள், இருந்தாலும், என் உறவினர்கள் என்பதில் மனதளவில் ஒரு நெருக்கம். சித்ராவின் கம்பெனியில் பணிபுரிபவர்களும் வந்திருந்தார்கள்.‌ அவர்களை எல்லாம் மணிமேகலை தான் ஒருங்கிணைத்து அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

வந்தவர்களை வாவென்று கேட்பதும், கலகலப்பாக பேசுவதுமாக இருந்த சித்ரா முகுந்தன் இயல்பாக இல்லை என்பதை கவனிக்கவில்லை. நடுவே விருந்தினர் வருகை ஓய்ந்திருந்த நேரம் ஐந்து நிமிடம் வெளியே போய்விட்டு வந்தான். அவனுடைய நண்பன் மேடையிலேயே வந்து ரகசியம் பேசிக்கொண்டு அவன் காதை கடித்துக் கொண்டு போனான். அதை எல்லாம் சித்ரா கவனிக்கவில்லை.

விருந்தினர்கள் வருவது சுத்தமாக நின்று போய், இருவருக்கும் சாப்பிட அழைத்த போது அவ்வளவு மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது அவள் மேல் தங்க நகைகள் இல்லாததைக் கவனித்த முகுந்தன், “உங்க அம்மா கொடுத்த நகைகளை எங்கே?” என்றான்.

“அம்மா கிட்ட இருக்கு” என்று சித்ரா சொல்ல, முகுந்தன் சுப்பம்மாளை நினைத்துக் கொண்டான். “அவங்களே குடுத்துட்டு அப்புறம் ஏன் அவங்களே வாங்கிக்கிட்டாங்க?” என்று அவன் கேட்க, என்ன இப்படிக் கேட்கிறார் என்று யோசித்த சித்ரா, ‘எங்க அம்மா இல்ல, உங்க அம்மா’ என்று பதில் கூறும் முன் யாரோ அவர்களிடம் விடை பெற வந்தனர். பின் இன்னொருவர் வர, அதன் பின் வேறொருவர் வர, அப்படியே அந்த விஷயத்தை மறந்து போனாள் சித்ரா.

அவனுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டில் இருந்து தப்பிக்க அவனை மிரட்டி வரும் நபரிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவர் வாயை அடைக்க இந்த நகை தான் உதவும் என்று நினைத்திருந்த முகுந்தனுக்கு சித்ராவிடம் அது இல்லை என்பது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அதைக் கைப்பற்றுவது எப்படி என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டான்.

இடையில் ஒரு முறை நிமிர்ந்த போது எதிர் வரிசையில் அமர்ந்து சாப்பிட்ட ஒரு ஆள் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அதன் பின் அவனால் நிம்மதியாக உண்ண முடியவில்லை. எதற்கும் கலங்காத முகுந்தனையே கொஞ்சம் கலங்கடித்த தருணம் அது. எதிரில் அமர்ந்து முறைத்துக் கொண்டிருந்த ஆள் இன்னொரு பெரிய மனிதனின் கையாள். அந்தப் பெரிய மனிதருக்குச் சற்றுத் தள்ளி வேறொரு ஊர். வழக்கமாக, பெரிய பின்புலம் இல்லாதவர்கள், சாதாரணத் தொழிலாளிகள் என்று பார்த்துத் தன் கைவரிசையை காட்டும் முகுந்தனுக்கு அன்று ஏதோ கெட்ட நேரம். பேருந்தில் இந்த மனிதரைச் சந்தித்தான்.

எப்போதும் காரில் வரும் அவர், அன்று ஏதோ பழுது என்று பேருந்தில் வந்திருந்தார். அவரிடம் தன் வழக்கமான அஸ்திரங்களை ஏவியதில் அவர் இவன் வலையில் விழுந்தார். ஒரு பரிகாரத்திற்காக சில பல லட்சங்களை அவர் முகுந்தனிடம் கொடுத்து ஆறு மாதங்கள் ஆயிற்று. அவன் வாக்களித்த மாற்றங்கள் அவர் வாழ்வில் நடக்கவில்லை. அங்கே பூஜை செய்கிறேன் எங்கே பூஜை செய்கிறேன் என்று சொன்னவன் ஒன்றையும் செய்ததாகத் தெரியவில்லை.

‘என் பணத்தைத் திருப்பிக் கொடு’ என்று சில வாரங்களாகவே கேட்க ஆரம்பித்திருந்தார். சரியாக இவன் திருமணம் முடித்த தினத்தில் இருந்து மிரட்டவே ஆரம்பித்திருந்தார். அவரது வாயை அடைக்க இப்பொழுது குறைந்தது ஐந்து லட்சம் தேவை. அதற்கு சித்ராவின் நகைகள் போதுமானதாக இருக்கும் என்று நம்பினான் முகுந்தன். அவன் ஒன்றும் பிறரை ஏமாற்றுவது போல் சித்ராவை ஏமாற்ற நினைக்கவில்லை. அவளைத் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம்.

‘அப்போ உன்ன நம்பி வந்த பொண்ணுகிட்ட நீ ஏமாத்துற தொழில் பாக்குறேன்னு சொன்னியா நீ? அது நியாயமா?’ என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது.‌ ஏனென்றால் நாம் பேசுவது முகுந்தனைப் பற்றி. அவன் அகராதிப்படி இதெல்லாம் சரிதான். ரொம்பவும் விளக்கம் கேட்டால் அந்தப் பெரிய மனிதரை ஏமாற்றியது கூட தவறால்லை என்பான் அவன். நமக்கெல்லாம் சில விஷயங்கள் நியாயமாகத் தோன்றும். சில விஷயங்களில் அவனின் அளவுகோல்கள் வேறு. பொதுச் சமூகம் தவறு என்று நினைப்பது அவன் பார்வையில் சரி. நாம் ‘ஐயோ!’ என்பதை அவன், ‘அதனால் என்ன?’ என்பான். ‘சம்பாதிக்கிறதுக்கு இதுவும் ஒரு வழி’ என்பது அவனது எண்ணம்.

பெரிய பிரச்சனைகள் இல்லாமல் வரவேற்பு முடிந்ததில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியே. மகிழ்ச்சியுடன் இரண்டு வீட்டினரும் முகுந்தனின் வீட்டிற்குத் திரும்பினர். “கடவுள் புண்ணியத்தில் இதுவரைக்கும் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. பார்த்து இருந்துக்கோ டி! ஒரு ரெண்டு நாள் கழிச்சு வரேன். ஒருநாள் மாப்பிள்ளையை கூட்டிட்டு வீட்டுக்கு மறுவீடு வரணும்” என்று சொல்லிவிட்டு சத்தியபாமா விடைபெற்றுச் சென்றார். இவர்களை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற முகுந்தன் அப்போது வந்திருக்கவில்லை. அப்போது மட்டுமல்ல, அன்றைய இரவு முழுவதுமே அவன் வீட்டுக்கு வரவில்லை.

“அத்தை! அவரைக் காணோமே?” என்று பின்னிரவில் சித்ரா சத்தியபாமாவிடம் கேட்க, “நானும் அதைத்தான் பாத்துட்டு இருக்கேன். உன்கிட்ட எதுவும் சொன்னானாம்மா?” என்று கேட்டார் அவர்.

“இல்லையே அத்த? ஃபோனும் எடுக்கல..”

“உன்கிட்ட கேட்கலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டே தான் நான் படுத்திருக்கேன். எனக்கும் தூக்கமே இல்லை.. சரி.. யாராவது பிரண்ட்ஸ் பார்க்க போயிருப்பான், வந்துருவான் நீ தூங்கும்மா!” என்றார் சத்தியபாமா.

தலையாட்டிக் கொண்டே சித்ரா திரும்ப, “சித்ரா ஒரே ஒரு நிமிஷம்..” என்றவர் தயங்கித் தயங்கி, “உன்கிட்ட நகை பத்தி எதுவும் கேட்டானாம்மா அவன்?” என்றார்.

“ஆமா அத்தை! கேட்டார்.. நான் உங்ககிட்ட இருக்குன்னு சொல்லிட்டேன்” என்றாள் சித்ரா. முதன்முறையாக ஏன் அம்மாவும், மகனும் மாறி மாறி நகையைப் பற்றியே பேசுகிறார்கள் என்ற சந்தேக விதை அவள் மனதில் லேசாக விழுந்தது. அப்போதும் அவள் முகுந்தனைத் தவறாக நினைக்கவில்லை. சத்தியபாமாவிடம் தானே இப்போது நகையை இருக்கிறது. ‘என்னைப் போட விடாமல் அவங்களே வச்சிருக்காங்களே.. இத்தனைக்கும் அது பெரிய பெரிய நகை எல்லாம் இல்லையே? ஏன்? நமக்குத் தரவே மாட்டாங்களோ? அவங்களே வச்சுக்குவாங்களோ?” என்றெல்லாம் யோசித்தாள்.

‘சே சே! அப்படி எல்லாம் கிடையாது. எவ்வளவு பாசமா அத்தை துணி எடுத்து குடுத்தாங்க.. நம்மள செல்லமா கவனிக்கிறாங்க’ என்று அவளே சொல்லிக் கொண்டாள். கொஞ்ச நேரம் சிந்தனைக்கப்புறம் தூங்கியே போனாள்.

தொடரும்..
 
Last edited by a moderator:

Author: Sungudi
Article Title: உருகியோடும் 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
203
தேடிய துணை
தவறான நபர் என்பதை
தெரிந்து கொள்ள
தாயின் மனம் போல
தாரமும் நினைக்குமோ
தவிக்குமோ
தன் வாழ்வை எண்ணி
 
Top Bottom