• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
290
அத்தியாயம் 11

மருத்துவமனையில் இருந்து இல்லம் வந்து சேர்ந்தான் கிருபா. மாடியில் அவன் தங்கி இருந்த அறை, பழைய நிலைக்கு மாற்றம் பெற்று இருந்தது. சுவற்றில் அங்கங்கே மட்டும் மெல்லிய சிவப்பாய், குருதியின் தடம் காட்சி அளித்தது.
படுக்கை விரிப்பு முதல், ஜன்னல் திரை வரை மாற்றப்பட்டு இருந்தது. அனைத்தும் மதுவின் வேலை எனப் புரிந்து கொண்டான்.
வந்த நாளில் இருந்து ஓய்வு என்பதே இல்லாது அவள் ஓடிக் கொண்டிருப்பது, மனதில் ஒருவித பாரத்தை ஏற்றி விட்டது.
'அவள் எப்பொழுதுமே அப்படித்தான்!' என சுந்தரவல்லியின் மூலம் அறிந்து கொண்டான். ஆனால் அவனின் வருகை, பாவைக்குப் பணிச்சுமையை அதிகப்படியாய் கொடுத்து இருந்தது.
எண்ணிய மாத்திரையில் வந்து நின்றாள் பேதை.
கதவைத் தட்டி, "மிஸ்டர் கிருபா, உள்ள வரட்டுமா?" என்றாள் மது.
"எஸ்‌." என தானே வாயிலை நோக்கி விரைந்தான்.
"ஜூஸ்.." என்று மாதுளை சாறை நீட்டிட, "மிஸ் மது ஒரு ரெக்வெஸ்ட்!" என வாங்கிக் கொண்டான்.
"சொல்லுங்க."
"இனி மேல ஏறி வராதீங்க!"
அவள் குழப்பமாய் பார்த்திட, "நானே கீழ வர்றேன். எனக்காக கஷ்டப்படாதீங்க ப்ளீஸ்."
வாய் வழியாய் மூச்சை வெளியிட்டு சிரித்தவள், "அப்பாடி! தேங்க்ஸ் மிஸ்டர் கிருபா. ஒவ்வொரு தடவையும் படியேறி வர்றது எனக்கும் கொஞ்சம் டயர்டா தான் இருக்கு. நான் கால் பண்ணுறேன், என்ன? நீங்க கீழ‌ வாங்க."
"முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல.?"
"அதெப்படி? கெஸ்டுக்கிட்ட அப்படி எல்லாம் சொல்லலாமா?"
"கெஸ்டுனா விருந்து சாப்பிட்டு கிளம்பிடணும். நான் வந்து நாலு நாள் ஆச்சு. இங்கதான் கொஞ்ச நாளைக்கு இருக்கப் போறேன். அந்த டோன்ல இருந்து வெளிய வாங்க, என்ன.?"
"ஸுயர்!" எனப் புன்னகைத்தவள் தலை அசைத்துச் சென்றிட, தனது பணி சம்மந்தமான பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் கீழே இறக்கினான் கிருபா. படுப்பதற்காக மட்டும் மாடிக்குச் செல்வது போல் ஏற்பாடு செய்து கொண்டான்.
மூன்று வேளை உணவு தயாரிப்பு, அவனிற்கான மருத்து மாத்திரைகள், வழக்கமான வீட்டுப் பணிகள், இதற்கிடையே தட்டச்சு பயிற்சி நிலையம் என மதுவின் நேரம் இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருந்தது.
கிருபாவும் அவ்விடம் மற்றும் உணவு வகைகளிற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டான். காலை விழிப்பதும், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு செவியில் விழுவதும் மதுவின் குரல்தான் என்றானது.
ஒருமாத காலம் கடந்து சென்றது. இடையில் சேதுவும் சித்ராவும் மகனிடம் நான்கு முறை பேசி இருந்தனர்.
"எனக்குக் காயமானதைச் சொல்ல வேணாம் பாட்டி! நானே மெதுவா சொல்லிக்கிறேன்." என அவன் கேட்டுக் கொண்டதால், சுந்தரவல்லியும் அதைத் தெரியப்படுத்தாமல் இருந்து கொண்டார்.
அன்றைய தினம் மணி எட்டான பின்பும் பயிற்சி நிலையத்திற்குக் கிளம்பாது இருந்த தந்தையைக் கேள்வியாய் பார்த்தபடி அருகே வந்தாள் மது.
"அப்பா.." என அவரின் தோளைத் தொட, நிமிர்ந்து நோக்கினார்.
"என்னப்பா? உடம்பு எதுவும் சரியில்லையா?"
"இல்லடா, நல்லாதான் இருக்கேன்."
"அப்புறம் ஏன் இன்ஸ்டிடியூட்டுக்குக் கிளம்பல. டைமாச்சே? முகமும் ஒருமாதிரி இருக்கு."
"நம்ம இன்ஸ்டிடியூட்டோட பில்டிங் ஓனர், அதை விற்கப் போறாராம்."
"ஹோ.. என்ன திடீர்னு.?"
"அவரோட பையனுக்கு மெடிக்கல் சீட் வாங்க பணம் வேணுமாம்."
வலிந்து சிரித்தவள், "காசு கொடுத்து சீட்டு வாங்கி படிச்சு, ஜனங்களுக்கு வைத்தியம் பார்க்கவா? அவன் எப்படிப்பா நல்ல டாக்டரா இருப்பான்.‍?"
"அதை எல்லாம் நாம சொல்ல முடியுமா.?"
"ம்ம். இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க.?"
"என்ன செய்ய, வேற இடம் பார்க்க வேண்டியது தான்."
"அது செட்டாகுமா.? பதினெட்டு வருசமா இங்க இருந்துட்டு, இப்ப வேற இடம்னா.? முதல்ல ஸ்டூடண்ஸ் வரணுமே.?"
கிருஷ்ணன் பதில் இல்லாமல் அமைதி காக்க, "அப்பா, பேசாம நாமளே அதை விலைக்குக் கேட்டுப் பார்த்தா என்ன?"
"அவரும் அதைப் பத்திச் சொன்னாரு."
"அப்புறம் என்ன?"
"அம்பத்தஞ்சு இலட்சம். நடக்குற காரியமா மது.? உன்னோட கல்யாணத்துக்காகனு சேர்த்து வச்ச பணத்தையும் ஆட்டோவையும் தவிர வேற எதுவும் இல்ல."
"அதான் ஜுவல்ஸ் இருக்கே.?"
"அதை அடகு வச்சா, எப்ப மீட்கிறது?"
"உங்களை யாரு அடகு வைக்கச் சொன்னது. வித்திடலாம் அப்பா."
"மது.?" எனக் கிருஷ்ணன் கண்டிக்க, "இப்ப தங்கம் விலை கூடி இருக்குப்பா. சேல் பண்ணா ஓரளவுக்கு அமௌண்ட் ரெடி ஆகிடும்."
"இருக்கிறதை வித்துட்டு, உன்னோட கல்யாணத்துக்கு நான் என்ன செய்வேன்?"
"அதை, அப்பப் பார்த்துக்கலாம்."
"வேணாம்.‌ இந்த பேச்சை இதோட விட்டுடலாம்!" என்றவர் எழுந்து செல்ல, இயலாமையுடன் தந்தையைப் பார்த்திருந்தாள் மது.
வழக்கமான கலகலப்பு இல்லாது கிருபாவிற்கான காலை உணவைக் கொண்டு வந்த இளையவளைக் கவனித்த மூத்தவர், என்னவென்று விசாரிக்க, நடந்ததை உரைத்தாள்.
"கிருஷ்ணன் சொல்லுறது சரிதான? உன்னோட கல்யாணத்துக்குனு சேர்த்து வச்சது? அதுல கை வைக்க எப்படி பெத்தவனுக்கு மனசு வரும்.?"
"அது, அம்மாக்காகனு ரெடி பண்ண இன்ஸ்டிடியூட் அம்மாச்சி. அப்படியே விடச் சொல்லுறீங்களா‌?"
"அதான் வேற இடம் பார்க்கலாம்னு சொல்லுறானே?"
"புது இடத்துல என்னோட அம்மாவை நான் எங்கனு தேடுவேன்? இங்க, அவங்க கொஞ்ச காலம் வாழ்ந்திருக்காங்க‌. உங்களுக்கே தெரியும், அம்மா வீட்டுல இருந்த நேரத்தை விட, இன்ஸ்டிடியூட்ல இருந்த நேரம் தான் அதிகம்."
"நீ சொல்லுறது சரிதான். ஆனா உன்னோட எதிர்காலத்தையும் பார்க்கணும் இல்ல?"
"என்ன பெரிய எதிர்காலம்? இதுவே நான் பையனா இருந்தா, இப்படிச் சொல்லுவீங்களா?"
"அதான் உனக்கே தெரியிது இல்ல? பையனா இருந்தா அதை வாங்கி அவன் கையில கொடுத்துடலாம், பார்த்துக்கடானு. ஆனா, நீ கல்யாணம் ஆகிப் போயிடுவியே? கடன்பட்டு வாங்கி, என்ன பிரயோஜனம்?"
"ஏன், நான் பார்க்க மாட்டேனா?"
"அதுக்கு, உனக்கு நாளைக்கு வரப்போற புருஷன் ஒத்துக்கணுமே?"
"ஒத்துக்கிறவனா பார்த்துக் கட்டிக்க வேண்டியது தான்."
"இதெல்லாம் நடக்கிற காரியமா?விதண்டாவாதம் பேசாத மது."
"அம்மாச்சி, உண்மையாத்தான் சொல்லுறேன். இன்ஸ்டிடியூடை நான் நடத்தணும்னு ஆசைப்படுறேன்."
"எப்படி முடியும் மது? நீ ஒன்னும் இங்கேயே இருந்துட முடியாது. கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போகணும். வெளியூரா இருந்தா, என்ன செய்யிவ.? உன்னோட ஆசைக்காக, கிருஷ்ணன் கடன்காரன் ஆகணுமா? கடைசி காலத்துல அவனுக்கு இதெல்லாம் தேவையா? பேரப் பிள்ளைகளப் பார்த்துக்கிட்டு நிம்மதியா இருக்கட்டுமே?"
"அம்மாச்சி! என்னோட கல்யாணம், அப்பாவோட அடையாளத்தை மொத்தமா முழுங்க நான் சம்மதிப்பேனு நினைக்கிறீங்களா‌‍? இது அம்மாவோட கோவில். அப்பாவோட பதினெட்டு வருச உழைப்பு. அது எப்பவும் ராதாகிருஷ்ணன் சங்கரியோட பேரைச் சொல்லணும்."
"வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு கண்ணு. உலகம் தெரிஞ்ச நீயே இப்படிப் பேசுனா எப்படி.?"
மெலிதாய்ச் சிரித்தவள் எதுவும் பேசாமல் சென்றிட, முகத்தில் கவலை ரேகைகள் படிய அமர்ந்திருந்தார் சுந்தரவல்லி.
மாடியில் படுத்திருந்த கிருபாவிற்கு இவர்கள் உரையாடல் தெளிவாய்க் கேட்டிட, நிலாவிற்காக அவள் வாழ்ந்த வீட்டை வாங்க முயன்றது நினைவில் வந்து போனது‌.
மதுவின் எண்ணத்திற்கும் அவனது சிந்தனைக்கும் பெரிதாய் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆனால் அதன் ஆழம் மாறுபட்டதாய்த் தோன்றியது‌.
அவனிற்கு நிலாவின் நினைவாய், அந்த வீடு வேண்டும். அங்கு சென்று குடியேறலாம், அவளின் அண்மையை கற்பனை செய்து வாழ்ந்திட!
பாவைக்கோ, அவளது தாய்த் தந்தையரின் வாழ்க்கையினது அடையாளமாய் அப்பயிற்சி நிலையம் வேண்டும். அங்கு இருப்பது இயந்திரங்களோ, காகிதங்களோ, மேஜை நாற்காலிகளோ இல்லை. பயிற்சிக்காக வரும் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கான முக்கிய படி.
"முடிஞ்ச மட்டும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தணும்!" என்ற அவளின் அறம் சார்ந்த எண்ணத்திற்கான ஒரு வழி. ஆனால் அதற்கு இப்பொழுது பொருள் தடையாய் வந்து நின்றது.
மது எவ்வளவோ பேசிப் பார்த்தாள். ஆனால் கிருஷ்ணன் மனம் மாறுவதாய் இல்லை. மகளின் வருங்கால வாழ்க்கையை பணயம் வைக்க விரும்பவில்லை, தகப்பன் ஆனவர்.
"என்னோட கல்யாணத்துக்கு சீதனமா நம்ம இன்ஸ்டிடியூட் வேணும். அப்படித் தர்றதா இருந்தா, நான் மேரேஜ் பண்ணிக்கிறேன். இல்லனா நான் இப்படியே இருந்துக்கிறேன். உங்களுக்கு மகளா!" என இறுதியாய் பிரம்மாஸ்திரத்தால் தாக்கினாள் மது.
அவளிற்குச் சமாதானம் சொல்ல வழித் தெரியாது தவித்துப் போனார் கிருஷ்ணன்.
"வல்லியம்மா, நீங்களாவது அவளுக்கு எடுத்துச் சொல்லலாம்ல.?" என முதியவரின் உதவியை நாடிட, "நான் இப்ப வரைக்குமா பேசாம இருப்பேன்னு நினைக்கிற? என்னவோ, இந்த விஷயத்துல ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறா உன்னோட மக."
"இப்ப, என்ன தான்மா செய்யிறது.?"
"பேசாம அவளுக்குச் சீக்கிரம் மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணத்தை முடிக்கிற வழியைப் பாரு!"
"அதுக்கு மது சம்மதிக்கணும்ல.?"
"முதல்ல மாப்பிள்ளையைப் பாரு கிருஷ்ணா. பையன் நல்லவனா இருந்தா, அவ தானா மனசு மாறிடுவா?"
"எனக்கு நம்பிக்கை இல்லம்மா‌."
"ஏன்யா அப்படிச் சொல்லுற.?"
"மது, எனக்கும் சங்கரிக்கும் பிறந்தவ. எங்க ரெண்டு பேருக்கும் இருந்த வைராக்கியமும் துணிவும் அவளுக்கும் இருக்கும் தான? அதுக்கு மேல வளர்த்தது நீங்க‌. உங்க பிடிவாதம் இல்லாம போகுமா.?"
"என்னை எதுக்கு இதுல இழுக்கிற? நான்‌ என்ன பிடிவாதக்காரியா.?"
"ஆசைப்பட்டவங்களை கட்டிக்க முடியலேனா, கல்யாணமே செஞ்சுக்காமலா இருக்காங்க எல்லாரும்? உங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளைய கல்யாணம் செய்ய சம்மதிச்சீங்களா நீங்க? இத்தனை வருசமும் பிடிவாதமா தனியாவே இருக்கல?"
"அவங்கக்கூட மனசுக்கு உள்ளயே வாழ்ந்துட்டேன். வேற ஆம்பளைய ஏத்துக்க முடியல கிருஷ்ணா. வேற என்ன செய்யச் சொல்லுற.?"
"அதே தான் இங்கேயும். மது மனசு மாறுவானு தோணல‌. அதுக்காக என்னால அந்த இடத்தை வாங்கவும் முடியாது‌. என்ன செய்யிறதுனு ஒன்னும் புரியல."
"ஒன்னு செய்யி! இடத்தை யாரு வாங்குறான்னு விசாரி‌‌. செண்டரை தொடர்ந்து அங்கேயே நடந்துறதைப் பத்திப் பேசிப் பாரு‌. மதுக்கு கல்யாணத்தை முடிக்கிற வரைக்கும் மட்டும் எப்படியாவது இழுத்துப் பிடி. அப்புறம் பார்த்துக்கலாம்!" என முதியவர் யோசனை சொல்ல, "சரிம்மா. பார்க்கிறேன்!" என்று பெருமூச்சு விட்டார் கிருஷ்ணன்.
மறுநாளே மகளிற்கு மாப்பிள்ளையைப் பார்க்கத் தொடங்கி விட்டார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் திருமண தகவல் மையங்கள் அனைத்திலும் பதிவு செய்து, தெரிந்த தரகர்களிடமும் சொல்லி வைத்தார்.
தந்தையின் நடவடிக்கைகளைக் கவனித்திருந்த மது, "அப்பா, நீங்க நடந்துக்கிறது சரியில்ல‌. என்னை என்னனு நினைச்சீங்க? மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்துனா, தலையை ஆட்டிட்டு கழுத்தை நீட்டிடுவேன்னா? உங்களுக்கு யாரு இந்த ஐடியாவைக் கொடுத்தது? அம்மாச்சி தான?"
"உனக்கு வயசு இருபத்து நாலு ஆகிடுச்சு. எப்பனாலும் கல்யாணம் செஞ்சு தான ஆகணும் மதும்மா?‌ இது சரியான நேரம், அதான் மாப்பிள்ள பார்க்கிறேன். வல்லி அம்மாவோட ஐடியால என்ன தப்பு.?"
"அதுல எந்தத் தப்பும் இல்ல. ஆனா என்கிட்ட அதை அப்ளை பண்ண நினைக்கிறது தான்!"
"முதல்ல மாப்பிள்ளையைப் பார்க்கலாம் . நமக்குப் பிடிச்சிருந்து, அவரும் உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏத்தபடி இருந்தா நல்லது தான.?"
"நல்ல கற்பனை அப்பா‍, உங்களுக்கு!"
"உன்னோட கண்டிஷனுக்கு ஏத்தமாதிரி மாப்பிள்ளையைத் தேடுவோம்னு நீ சொன்னது கூட நல்ல கற்பனை தான்மா."
"அப்பா.?" என அவள் ஏமாற்றமும் எதிர்பார்ப்புமாய் அழைத்திட, "மது, எனக்கு நீ மட்டும் தான் இருக்க. உன்னோட வாழ்க்கை தான், எனக்கு வரம். புரிஞ்சிக்கடா!" என்று கரகரக்கும் குரலில் மொழிந்தார்.
தந்தையின் அச்சொற்களிற்கு மாறாய் மகளால் எதுவும் பேச இயலவில்லை. வேறு வழியின்றி தனது உணர்வுகளை மென்று விழுங்கிக் கொண்டாள்
.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
நினைவுகள் தான்
நித்தம் பாடாய்ப்படுத்த நம்மை மீட்கும் வழி என்ன....
அம்மாவின் நினைவாக இடத்தை நினைக்க
அவன் நிலாவின் நினைவாக இல்லத்தை நினைக்க....

இருவரின் இழப்பும் பெரியது....
இருவரின் எண்ணமும்
உயர்ந்தது....
இருவரும் இணையும் நாளும் எந்த நாளோ....
 
Top Bottom