• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -12

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
290
அத்தியாயம் 12


இறுக்கிப் பிடித்த சட்டையை அணிந்து மூச்சுவிடக் கூட சிரமப் பட்டபடி நின்றிருந்தாள் மது. எதிரே அவளைப் வ வந்த மாப்பிள்ளை. கிருபா தங்கி இருக்கும் மாடி அறையில் இருந்தனர் இருவரும்.
பத்து தினங்களிலேயே தரகரின் மூலமாய் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து, பெண் பார்க்க அழைத்து வந்து விட்டார் கிருஷ்ணன்.
மூன்று நாட்களிற்கு முன்னரே மகளிடம் சொல்லி இருந்தார், "சட்டை எல்லாம் தச்சு ரெடியா வச்சுக்கோ மதும்மா‌." என்று.
பிடிவாதக்காரி, 'பார்த்துக்கலாம்!' எனத் தந்தையின் சொல்லை செவியில் ஏற்காது, இருந்து விட்டாள்.
ஜீன்ஸும் டாப்பும் அணிந்தவளை, "இப்ப நீ சேலையை மாத்துறியா இல்லையா?" என்று அதட்டி உடை மாற்ற வைத்திருந்தார் சுந்தரவல்லி.
அவசரத்திற்கு.. புடவைகளுக்குச் சட்டை எதுவும் தைக்காத நிலையில், மூன்று ஆண்டுகளிற்கு முன்பு கல்லூரியின் இறுதி ஆண்டில் விடைபெறும் தினத்தன்று அணிந்த அதே புடவையை இன்றும் உடுத்திக் கொண்டாள்.
கழுத்து எலும்புகள் தனித்து தெரிந்த அன்று, சட்டைச் சரியாய் இருந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் இரண்டு சுற்று அளவிற்குச் சதை பற்று உண்டாகி, மெருகேறிய தேகத்திற்கு அதிகப்படியாய் இருந்த தையல்களைப் பிரித்தும் போதவில்லை.
இன்னும் இறுக்கமாகவே இருக்க, வேறு வழியின்றி மூச்சை உள்ளடக்கி உடலை குறுக்கியே வைத்திருந்தாள் மது‌.
"வந்ததுல இருந்து அமைதியாவே இருக்கீங்க‍?" என மாப்பிள்ளையானவன் பேச்சைத் தொடங்கிட, "நீங்களும் தான், எதுவும் பேசலையே?" என்று அவளும் வினா எழுப்பினாள்.
"உட்காரலாமா.?" எனப் படுக்கையை நோக்கி நகர, "அங்க வேண்டாம், சேர்ல உட்காருங்க!” என்று ஓர் ஓரமாய் இருந்த நாற்காலியைக் கைக் காட்டினாள்.
"ஏன்?"
"இது, இன்னொருத்தர் யூஸ் பண்ணுற பெட். நீங்களோ நானோ உட்காருறது அவ்வளவு நல்லா இருக்காது."
"யாரோடது.?"
"இந்த வீட்டு ஓனரோடது."
"அப்ப, இது உங்க சொந்த வீடு இல்லையா?" எனக் கேட்டவனின் குரலில் ஏதோ ஒருவித ஒட்டாத்தன்மை. அதைக் கண்டும் காணாதது போல் இருந்து இருந்தாள் மது.
நாற்காலியை இழுத்து அறையின் நடுவில் போட்டவன், "என்ன படிச்சிருக்கீங்க?" என நேர்காணலைப் போல் வினா எழுப்பினான்.
"உங்கக்கிட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்லலையா.?"
"சொன்னாங்க தான்."
"அப்புறம் என்ன?"
"உங்கக்கிட்டயும் பேசித் தெரிஞ்சிக்கலாம்னு தோணுச்சு."
"எம்.எஸ்.ஸி. மேக்ஸ்‌."
"வேலைக்கு எதுவும் போகலையா நீங்க‌?"
"என்னைப் பார்த்தா, வீட்டுல சும்மா உட்கார்ந்து சாப்பிடுற மாதிரி தெரியிதா.?"
"நான் நார்மலா தான் கேட்டேன். நீங்க எதுக்கு அந்த மீனிங்ல எடுத்துக்குறீங்க?"
"சரி, உங்களைப் பத்திச் சொல்லுங்க."
அவன் ஆழமாய்ப் பாரக்க, "அப்பா சொன்னாரு எல்லாத்தையும். பட், நான்தான் சரியா கவனிக்கல. இப்ப தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். சொல்ல முடியுமா.? எங்க ஒர்க் பண்ணுறீங்க.?"
"உங்களுக்கு மேரேஜ்ல இண்ட்ரெஸ்ட் இல்லையா.?"
"அப்படி எதுவும் இல்லையே!"
"அப்ப என்மேல இண்ட்ரெஸ்ட் இல்ல.‌ எதுக்கு வலுக்கட்டாயமா இந்த மீட்டிங் எல்லாம்?"
"ஸ்மார்ட் சார் நீங்க. பட், உங்க கெஸ்ஸிங் கரெக்ட் இல்ல‌."
"வாட் யூ மீன்?"
"ஐ மீன், எனக்குக் கல்யாணமோ நீங்களோ பிரச்சனை இல்ல. இது, வேற ஒரு விஷயம்?"
"என்னனு தெரிஞ்சிக்கலாமா.?"
"அதுக்குத்தான் எங்க ஒர்க் பண்றீங்கன்னு கேட்டேன்."
"பெங்களூர்ல.‌"
"ஹோ.."
"என்னாச்சு? நீங்க ஆஃப்டர் மேரேஜ் பத்தி ரொம்ப எல்லாம் யோசிக்க வேணாம். அம்மா அப்பா இங்கதான் இருப்பாங்க. பெங்களூருக்கு நாம மட்டும் தான் போவோம்."
அவனைக் கண்கள் சுருக்கிப் பார்த்தவள், "உங்களுக்குச் சொந்த ஊரு மதுரை தானா?"
"எஸ். தல்லாகுளம்."
"மேரேஜுக்கு அப்புறம் நான் இங்கேயே உங்க பேரண்ட்ஸ் கூட இருந்தா, ஓகேவா?"
"என்ன கேட்கிறீங்கனு புரியல."
"அப்பாக்கூட சேர்ந்து அவரோட இன்ஸ்டிடியூட்டைப் பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு நான் மதுரையில இருந்தாகணும்."
"நீங்க இங்கேயும் நான் அங்கேயும் இருக்கிறதுக்கு எதுக்கு மேரேஜ்?"
"மிஸ்டர், பெங்களூருக்கு எவ்வளவு டிரைன் இருக்கு. நீங்களோ நானோ வந்து போறதுல அப்படி ஒன்னும் கஷ்டம் இல்லையே?"
"நான்சென்ஸ். நடக்குறதைப் பேசுங்க!"
"ஸாரி மிஸ்டர். இந்த அறிவு இல்லாதவ உங்களுக்கு வேண்டாம். கிளம்புங்க!" என அவள் வாயிலை நோக்கிக் கை நீட்டிட, பட்டென்று எழுந்து வெளியேறினான் அவன்‌.
இரண்டு நிமிடங்கள் கழித்து நிதானமாய் கீழ் இறங்கி வந்தாள் மது. ‌
கிருபா கூடத்தில் ஒரு பக்கமாய் அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, சுந்தரவல்லி எதிர்பார்ப்புடன் அவளை நோக்கினார்.
"கண்ணு என்ன, மாப்பிள்ள ஓகேவா.?"
"நான் நான்சென்ஸாம். அப்படி சொன்னவனை போய் கட்டிக்கணுமா அம்மாச்சி?"
"நான்சென்ஸா, அப்படினா?"
மதுவின் பேச்சில் ஆடவனின் கவனம் அவளிடம் திரும்பிட, "அறிவு இல்லாதவனு அர்த்தம்." என்றாள்.
"எது, அறிவு இல்லாதவளா? என் பிள்ளையை அப்படியா சொன்னான்? அவன்தான் அறிவு கெட்டவன்‌. இப்பவே இப்படி பேசுறவன், கல்யாணத்துக்குப் பின்னாடி என்ன எல்லாம் பேசுவான்? இவன் உனக்கு வேண்டாம் கண்ணு. நான் கிருஷ்ணன்கிட்ட சொல்லுறேன்!" என்றுவிட்டு சுந்தரவல்லி செல்ல, நிம்மதி மூச்சுவிட்டு மாடியின் கீழுள்ள இறுதிப் படியில் அமர்ந்தாள் மது.
குழலை நிறைத்திருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து படியினில் வைத்துவிட்டு, பின்னலைத் தூக்கிக் கொண்டையிட்டு இரு கால்களையும் நீட்டி ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள்ள, அவளின் உடல் மொழியில் தானாய் புன்னகை அரும்பியது அவனிற்கு.
"மிஸ் மது."
அவள் கேள்வியாய்ப் பார்த்திட, "வந்த மாப்பிள்ளை நான்சென்ஸ்னு சொல்லுற அளவுக்கு நீங்க என்ன பேசுனீங்க.?"
திருதிருவென விழித்தவள், "நான் அவன்கிட்ட எதுவும் பேசலயே?"
"உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? எந்த ஒரு ஆம்பளையும், அவனுக்கு மேரேஜ்ல ஆர்வம் இருக்கிற பட்சத்துல பொண்ணும் பார்க்க ஓரளவுக்கு ஓகேனா, அவளை இம்பிரஸ் பண்ணத்தான் முயற்சி செய்வான்."
"என்ன சொல்ல வர்றீங்க?"
"வந்தவருக்கு உங்க மேல இண்ட்ரெஸ்ட் இருந்துச்சு. நான் அவர் கண்ணுல பார்த்தேன். இப்ப இப்படிச் சொல்லி இருக்காருனா, நீங்க ஏதாவது பேசி இருந்தாதான் ஆச்சு!"
அவள் நாக்கால் மேல்வரிசைப் பற்களைத் தொட்டு விளையாடியபடி வேறுபுறம் பார்க்க, சிரித்தான் கிருபா.
"மாப்பிள்ளையை உங்களுக்குப் பிடிக்கலயா? நல்லாதான இருக்காரு‌? அவர் நடந்துக்கிட்டதை வச்சு பார்க்கும் போது, கேரக்டரும் அப்படி ஒன்னும் மோசமா தெரியல."
"நல்லது எல்லாம் பிடிக்கணும்னு அவசியம் இல்ல. அதேபோல நமக்கு பிடிச்சது எல்லாம் நல்லதா தான் இருக்கணும்னு கட்டாயம் இல்ல மிஸ்டர் கிருபா."
அவன் தலை அசைக்க, "எப்படி இருந்தாலும் சரி, என்னோட கண்டிஷனுக்கு ஒத்து வந்தா ஓகே தான்!"
"அப்படி என்ன கண்டிஷன்.?" என்றிட, பாரதி தட்டச்சு நிலையத்திற்கும் தனக்குமான உறவை உரைத்தாள் மது.
சுந்தரவல்லியின்‌ மூலம் முன்னரே அறிந்திருந்தான்‌ தான். எனினும் தற்போது அவள் சொன்ன போது, பாவையின் ஏக்கத்தை ஆழமாய் உணர முடிந்தது.
"சரி மிஸ்டர் கிருபா, நைட்டுக்கு என்ன சாப்பிடுறீங்க?" என அவள் இயல்பு நிலைக்குத் திரும்பி கேட்டிட, "யுவர் விஷ்!" என்று புன்னகைத்தான்.
"இன்னைக்குப் பணியாரமும் மிளகா சட்னியும்‌. என்ன ஓகேவா.?" என அவள் எழுந்து செல்ல, நிர்மலமான மனதுடன் மதுவைப் பார்த்திருந்தான்.
மதுரைக்கு வந்துவிட்ட இந்த ஒரு மாதத்தில் இருவருக்கும் இடையே, நல்விதமான உறவு உருவாகி இருந்தது. நட்பிற்குள் அடங்காது, குடும்ப உறவிற்குள்ளும் பொருந்தாத தனித்துத் தெரியும் அழகியல் அது.
திணிக்கப்படாத மரியாதை அழைப்பு, இயல்பாகவே பேச்சுடன் ஒட்டிக் கொண்டது. எல்லை மீறிடாத கேலி வாதங்கள்.‌ விளக்கம் கொடுக்க அவசியம் இல்லாத புரிதல். ஒருவரது எண்ணத்தை மற்றவர் அறிந்து கொள்ள, சில வார்த்தைப் பரிமாற்றங்களே போதுமானதாய் இருந்தது.
பாவையின் சிந்தனையும் நடவடிக்கையும், அவனிற்காக அவள் செய்திடும் ஒவ்வொரு செயலும், கிருபாவை மெல்ல மெல்ல மதுவுடனான பெயர் இல்லாத பந்தத்திற்குள் பிணைத்து நிற்க வைத்தது.
'பாட்டிக்காக தான்னாலும், உனக்குனு எவ்வளவு செஞ்சிருக்காங்க அவங்க‌‌. கிருஷ்ணன் அங்கிளும் தான்.‌ பதிலுக்கு நீ எதுவும் செய்யலயே? என்னதான் செய்யலாம்னு இருக்க.?' என மனம் வினா எழுப்பிட, மூளை சிந்தனையில் மூழ்கிப் போனது.
"வேணும்னே தான அந்தப் பையன் கிட்ட பேசி, வேணாம்னு சொல்ல வச்ச?" எனத் தந்தையானவர் கேட்டிட, பதில் சொல்லாது தவறு செய்து அகப்பட்ட குழந்தை போல் நின்றிருந்தாள் மது.
"அப்படியா.? நான்கூட, இவ சொன்னதை வச்சு அந்த பையன் தான் ஆள் சரியில்லனு நினைச்சிட்டேனே.?" என்று சுந்தரவல்லி வருத்தத்துடன் உரைத்திட, அவளோ நடந்த நிகழ்விற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல் எங்கோ பார்த்தபடி நின்று இருந்தாள்.
இவர்களது பேச்சைக் கேட்டவாறு வாயிலிற்கு வந்த கிருபாவின் கண்களில் மது பட, ஏனோ சட்டென்று சிரித்துவிட்டான்.
அவ்வொலியில் மூவரும் அவன்புறம் திரும்பிட சிரிப்பு மறைந்து, முகத்தில் வருத்தத்தின் நிழல் படர்ந்தது.
அவனின் எதிரே வந்தவள், "என்னாச்சு?" என்றிட, "ஸாரி."
"ஸாரியா, எதுக்கு?"
"நான், நீங்க நடந்துக்கிட்ட முறையைப் பார்த்து சிரிச்சிட்டேனே தவிர, மனசுக்குள்ள எந்த மாதிரியான எண்ணம் ஓடியிருக்கும்னு யோசிக்கல. உங்க அப்பாவோட நிலையில இருந்தும் சிந்திக்கல. அப்படிச் சிரிச்சது, உங்களைக் காயப்படுத்தி இருக்கும்ல.?"
"அட, நீங்க வேற தம்பி! இவ செய்யிற கிறுக்குத் தனத்துக்கும் நடந்துக்கிற முறைக்கும், யாரா இருந்தாலும் சிரிக்கத்தான் செய்வாங்க. அவங்க கிளம்பி நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள கொண்டையைப் போட்டுட்டு எப்படி வந்து நிக்கிறான்னு பாருங்க.
அதைவிடக் கொடுமை, முதல்ல என்ன டிரஸ் போட்டிருந்தானு தெரியுமா.? ஒரு கிழிஞ்ச ஜீன்ஸும், வெளுத்துப் போன டாப்பும். அதுக்கு மத்த நாள்ல கூட நல்லவிதமா சுடிதார் போடுவா. வர்றவங்களை ஓட விடணும்னே பிளான் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா.
இப்படி ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு என்ன செய்யிறதுனு எனக்கும் தெரியல. நாம வேற பிள்ளைய அவ விருப்பப்படி வளர்த்துட்டோமா? இப்ப கண்டிக்கவும் முடியல. சொல்லுறதைக் கேளுனு கட்டாயப் படுத்தவும் மனசு வரல. இதுல நீங்க சிரிச்சது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல!" என்று கிருஷ்ணனும் அங்கு வந்து தன் பங்கிற்கு சமாதானம் சொல்ல, சற்றே இயல்பானான் கிருபா.
"ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல. எல்லாம் உங்க தப்புப்பா‌. நீங்க இவ்வளவு ஃபிரீடம் கொடுத்து என்னை வளர்த்திருக்க வேண்டாம்! என்ன செய்ய, நடந்தது நடந்து போச்சு. இனி ஆகுறதைப் பார்ப்போம்‌. ஆமா, அடுத்து எப்பப் பொண்ணு பார்க்க வராங்க? நான் கொஞ்சம் பிரிபேர் பண்ணிக்கிறேன்." என மது கேட்டிட,
"எதுக்கு? இந்த தடவை, தவறிப்போய் வீடு வரைக்கும் வர விட்டுட்ட. அடுத்து வர்றவங்களை தெருவுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடியே துரத்தி விடவா.?" என்று தந்தையானவர் சொன்ன மறுமொழியில், அனைவரது இதழ்களிலுமே புன்னகை.
 

Author: SudhaSri
Article Title: அறம் பொருள் இன்பம் -12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
மாப்பிள்ளையை
மது ஓட விட்டாச்சு....
மறுபடியும் அடுத்ததா 🤩🤩🤩
 
Top Bottom