• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 7

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 7




அதிரனின் அன்னையை இறக்கிவிட்டு வேகமாக மாறன் சென்றது மீனவக்குப்பத்திற்குத் தான். அவனுடன் அதிரனும் வந்திருந்தான். அவனிடம் என்னவென்று வினவியும் மாறன் வாயைத் திறக்கவே இல்லை.

நேராக அவன் சென்றது வேலனைத் தேடி தான். அவனின் குடிசையில் அவனைக் காணவில்லை. பின்பு அருகில் இருப்பவர்களிடம் அவனைப் பற்றி கேட்டான்.

அவர்களோ "அவன் எப்ப இங்க வருவான்.. போவானு யாருக்குமே தெரியாம இருக்குப்பா.. அவன் பாட்டுக்கு எங்கையோ போறான்.. வர்றான்.. ஆனா எங்க போறேனு கேட்டா மட்டும் பதில் சொல்ல மாட்டிங்கறான்.." என்று வேலனின் விசித்திரச் செயலைக் கூறினார்கள்.

"அவன் வந்தா நான் வந்துட்டு போனேனு சொல்லுங்க" என்று விட்டு வந்த மாறன் அடுத்து காசியைத் தேடி அவன் வீட்டிற்குச் சென்றான். அப்போது தான் அவன் சோறு வடித்து முடித்த கையோடு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான்.

இவர்களை எதிர்பாராமல் "வாங்க சார் வாங்க.. என்ன இந்த பக்கம்.? அப்படி வந்தாலும் என்னைய பார்க்க வர மாட்டிங்களே.? இப்ப என்ன அதிசயமா என்னைய பார்க்க வந்துருக்கீங்க.? விசயம் ரொம்ப பெருசோ.?" என்று எகத்தாளமாகவே வினவினான்.

அவனின் எகத்தாளத்தை உணர்ந்த அதிரன் கை முஷ்டியை மடக்கிட, அவனைக் கண்ணசைவில் அடங்க கூறி "அதான் நீங்களே சொல்லிட்டீங்களே காசி விசயம் பெருசுனு.. வாங்க அப்படியே உட்காருங்க.. நம்ம பேசலாம்" என்றான் மாறன்.

அவன் தங்களைக் கோவப்படுத்தி இங்கிருந்து அனுப்பி விட நினைக்கிறான் என்பதை அவனின் பேச்சின் மூலமே உணர்ந்துக் கொண்டு தான் இப்போது ஆத்திரத்தை விட நிதானம் ரொம்பவே முக்கியம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அமைதிக் காத்தான்.

இவனின் எண்ணமும் பொய்யாகவில்லை. இவன் அமர கூறியதும் காசியின் முகம் ஒரு மாதிரியாக மாறியும் போனது.

"என்ன சார் இந்த நேரத்துல என்ன பேசணும்.? எனக்கு வேலை இருக்கு.. நீங்க முதல்லயே வர்றதைச் சொல்லிருக்கணும்ல.? இப்படி திடீர்னு வந்துட்டு உட்காருனு சொன்னா எனக்காக காத்துக்கிட்டு இருக்கற வேலையை யாரு செய்வா.?" என்று படபடவென்று பொரிந்தான்.

"என்ன வேலைனு சொல்லுங்க காசி.. இதோ இவனை அனுப்பி விடறேன்.. வேலை வெட்டி இல்லாம சும்மா தான் சுத்திட்டு இருக்கான்.. காசைக் கூட நீங்களே வாங்கிக்கங்க.." என்று அதிரனைச் சுட்டிக்காட்டி கூறிட, 'ம்ம்ம்ம்க்கும் நான் பார்க்கற வேலையைக் கெத்தா வெளில சொல்லவும் முடியல.. அதே சமயம் இப்படி பேசறவன் வாயை உடைக்கலாம்ங்கற அளவுக்கு வெறியும் வருது..

டேய் தமிழ்நாட்டு வேலையில்லா இளைஞர்களே உங்களோட கஷ்டம் என்னனு எனக்கு இப்பத்தான் புரியுது.. நம்ம நாடும் சரியில்லை.. நம்ம நாட்டை ஆள்றவனும் சரியில்லை.. எல்லாம் சரியா இருந்தா நமக்கு இப்படியொரு நிலைமை வந்துருக்குமா.?' என்று நினைத்து பெருமூச்செறிந்தான்.

மறுத்த காசி "இல்ல வேணாம் சார்.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே என்னனு சொல்லுங்க" என்று அவர்களின் வழிக்கே வந்து விட்டான்.

நேரடியாகவே "உனக்கு இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்களுக்குத் தண்டனை வாங்கித் தரணும்னு தோணலயா.? இறந்தது உன் தங்கச்சியும் தானே.? நியாயமா பார்த்தா நீதானே முன்னால நிற்கணும்.. ஏதோ அடுத்தவங்க பிரச்சனை மாதிரி நீ பாட்டுக்கு தள்ளி தள்ளியே போற.?" என்று மனதில் தோன்றியதைக் கேட்டான் மாறன்.

விரக்தியாக புன்னகைப் பூத்த காசிக்கு மாறனின் பேச்சு சிரிப்பையே வரவழைத்தது. "முன்னாடி நின்னு என்ன பண்ண சொல்றீங்க.? அப்படி நான் முன்னாடி நின்னா மட்டும் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைச்சுருமா.? முதல்ல குற்றவாளி யாருனு நீங்க கண்டுபிடிங்க சார்.. அப்பறம் நான் முன்னாடி நிற்கறதா.? இல்ல எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்கற மாதிரி பின்னாடி நிற்கறதானு முடிவு பண்ணிக்கறேன்..

கூட பொறந்தவ போய்ட்டானு நான் என் வேலையைப் பார்க்காம இருக்க முடியுமா.? இல்ல நீதி கிடைக்கற வரைக்கும் பட்டினியா தான் இருக்க முடியுமா.? முதல்ல இந்த உலகத்துல அடையாளமே இல்லாம தனியா தான் பிறக்கறோம்.. பிறந்ததுக்கு அப்பறம் தான் மகன், உடன்பிறந்தவன்.. காதலன்.. கணவன்.. தந்தைனு அடுத்தடுத்து பதவியும் கிடைக்குது.. போறப்பவும் தனியா தான் போக போறோம்..

பத்து மாசம் சுமந்துப் பெத்த அம்மா செத்ததும் என்ன நம்மளும் நம்ம உயிரை மாய்ச்சுக்கறோமா என்ன.? அதே மாதிரி தான் சார் இதுவும்.. அவ விதி அவ்ளோதான்.. அவளுக்காக வருத்தம் தான் பட முடியும்.. வேற என்ன செய்ய முடியும்.? நானும் வாழணும்ல.?" என்றவனின் வார்த்தைகளில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

நியாயமாக தான் பேசுகிறான். இவனைப் பாம்பு என்று நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று தான் இப்போது அவனுக்குத் தோன்றுகிறது.

பின்பு ஏன் நான் வேலனிடம் பேசும்போது ஒட்டுக் கேட்டு நின்றான் என்பது தான் புரியாத புதிராக மாறியது. அதை அவனிடம் கேட்டாலும் சரியான பதில் வருமா.? என்று தெரியவில்லை. பொறுத்திருந்துப் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டான்.

இதற்கு மேலும் காசியிடம் பேச்சை வளர்க்காமல் அவன் குடுத்த கடுங்காப்பியையும் மறுக்காமல் வாங்கிக் குடித்த இருவரும் கிளம்பினார்கள்.

யோசனையுடனே மாறன் வண்டியைச் செலுத்திட, "எதுக்கு போன் வந்ததும் அவ்ளோ அவசரமா அங்க கிளம்புன.? போன்ல என்ன சொன்னாங்க.?" என்று அதிரன் வினவினான்.

"காசி வீட்டுல இல்லை.. அவன் ஏதோ பெரிய தப்பு பண்றான்.. நீங்க நான் சொல்றதை நம்பலனாலும் காசி வீட்டுக்குப் போய் பாருங்க.. அவன் வீட்டுல இருக்க சான்ஸே இல்லைனு சொன்னான்.. அது யாருனு தான் தெரியல..

"சரி நேரா காசி வீட்டுக்குப் போகாம ஏன் வேலன் வீட்டுக்குப் போன.?"

"ஏன்னா போன்ல பேசுனவனோட குரல் அவனை மாதிரி தான் இருந்துச்சு.."

"என்னடா சொல்ற.?"

"ஆமாடா.. அந்த சந்தேகத்துல தான் நான் வேலன் வீட்டுக்குப் போனேன்.. ஆனா வீட்டுல அவன் தான் இல்லை.."

"எனக்கு ஒன்னுமே புரியலடா.. முதல்ல இறந்த பொண்ணுக யாரு என்னனு பார்ப்போம்.. அவங்க போட்டோ இருக்குதானே.?" என்றதும் "ம்ம்ம்ம் இருக்கு.." என்றவன் நேராக தன் அலுவலகத்திற்குச் சென்றான்.

மீனவக்குப்பம் என்றடங்கிய பைலைக் கையில் எடுத்ததுமே ஃபோட்டோக்கள் கீழே சிதறிட, அதை எடுத்தான் அதிரன்.

பார்த்ததுமே காசியின் தங்கை யாரென்று விளங்கி விட்டது. காசியின் ஜாடையில் தான் இருந்தாள் அவள். அவள் புன்னகையைக் கண்டதும் தானாக அதிரனுக்கும் புன்னகையே மலர்ந்தது.

இந்த சிறுபெண்ணிற்கா இந்த நிலைமை.? என்று வருந்தவும் செய்தான். புகைப்படத்தின் கீழே வள்ளி என்ற பெயரும் மின்னியது. பின்பு அவளின் பின்னணியும் சிறு குறிப்பாக எழுதப்பட்டிருந்தது.

அடுத்தது பரமு என்ற பெயரும் அந்த பெண்ணின் வரலாறும் காணப்பட, இறுதியில் ஈஸ்வரி என்ற பெயருடன் அவளைப் பற்றியும் இருந்தது. அனைத்தையும் கவனமாக வாசித்து முடித்தார்கள் இருவரும்.

"எல்லாம் சின்ன பொண்ணா இருக்குலடா.? ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாங்கனு தான் தெரியல.. ப்ச் ரொம்ப பாவம்" என்ற அதிரனின் குரலில் உண்மையான வருத்தமே மேலோங்கி நின்றது.

மாறன் எப்போதும் எதற்கும் வருத்தப்பட மாட்டான்.. நடப்பது தான் நடக்கும் என்று கொள்கை உடையவன். அது மில்லாமல் காவல்துறையைத் தேர்ந்தெடுத்திருப்பவன் இப்படி ஒவ்வொன்றிற்கும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா என்ன.? அவனுக்கு இப்பிரச்சினையும் பத்தோடு பதினொன்று தான். அதனால் அதிரனின் வருத்தத்தை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.

இதை விட பல மோசமான வழக்குகளைப் பார்த்தவன் இவன். அதனால் அந்த பெண்களின் சாவு எதனால் நடந்தது என்று மட்டும் யோசிக்கிறான். உடல் கூராய்வுகளிலும் அந்த பெண்கள் கற்பழிக்கப்படவில்லை.. கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறார்கள் என்ற முடிவே கிடைத்திருக்க, பின்பு இவர்களின் இந்த முடிவு எதற்காக என்று மட்டுமே யோசனைப் புரிந்தான்.

"அதி இவங்களுக்கு உடலளவுல எந்த பாதிப்பும் இல்லை.. அப்படியிருந்தும் ஏன் பொது இடத்துல தற்கொலை பண்ணிக்கிட்டாங்கனு தான் புரியல.. முதல்ல நான் கூட பெரிய இடத்து ஆளுக யாரோ இவங்கள ஏமாத்திட்டாங்க.. அதனால தான் இப்படி பண்ணிருக்காங்கனு நினைச்சேன்..

ஆனா அப்படி எதுவும் நடக்கல.. வேற எதற்காக இப்படி பண்ணிருக்கணும்.?" என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக இருந்தது. ஏதோ மர்மம் இதில் ஒளிந்திருக்கிறது என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது இருவருக்கும்.

"நான் தனியா விசாரிக்கறேன்.. நீ தனியா விசாரி.. ரெண்டு பேரும் ஒரே நேர்கோட்டுல போனா சரி வராதுனு தோணுது மாறன்.. நீ விசாரிக்கறப்ப உனக்குத் தனியா ஏதாவது தெரிய வரலாம்.. அதே மாதிரி தான் எனக்கும்.. இந்த காசி, வேலனை மறந்துட்டு முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்னு தோணுது.." என்றவனின் கூற்றும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தது.

அவர்கள் இருவரையும் ஆட்கள் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிட்டான். மீனவக்குப்பத்தில் உள்ள அனைவரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என்ற முடிவும் கொண்டான். மாறன் விசாரிப்பதைப் போல் அதிரனால் நேரடியாக விசாரிக்க முடியாது. அவன் காவல்துறையைச் சேர்ந்தவன் என்பது வெளியில் யாருக்கும் தெரியவும் கூடாது. அதனால் அதின் வேறொரு முறையில் அவ்விடத்திற்கு வரவும் திட்டமிட்டான்.

முதலில் சறுக்கியது போல் இப்போதும் சறுக்கி விட கூடாது என்று முடிவெடுத்த மாறன் இவ்வழக்கில் தீவிரமாக இருக்க, ஏதேச்சையாக காவ்யாவையும் பார்க்க நேர்ந்தது.

அவளைக் கண்டதும் யாரோ என்பதைப் போல் மாறன் கடந்து விட, பெண்ணவளுக்குத் தான் குற்றவுணர்வு மேலிட்டது. சும்மா இருந்தவனைத் தன் காதலன் என்று தந்தையிடம் கூறினாள்.. அவரும் அடங்காமல் அவனிடம் சென்று பேசி வீட்டிற்கும் வர வைத்து இறுதியில் தந்தையால் அவமானப்பட்டு வெளியேறியது தான் மிச்சம். அதை அவன் மறந்தாலும் இவளால் மறக்க முடியவில்லை.

அவனிடம் வழிய சென்று பேசவும் அச்சமாக இருந்தது. அவனை விட்டு பெண்ணவளின் விழிகள் அகலவும் மறுத்தது. இவன் நினைத்திருந்தால் திருமணமானதை மறைத்துக் கூட தன்னைத் திருமணம் செய்திருக்கலாம்.. அப்படி எதுவும் செய்யாமல் உண்மையைக் கூறியதன் பலன் தான் இதுவோ என்ற எண்ணமும் தோன்றியது.

மாறனின் மேல் இரக்கமும் சுரந்தது. அவனைப் பற்றி முழுவதும் தெரிந்துக் கொள்ள ஆவலும் எழுந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தான் குழம்பினாள். தன்னை மறந்து அவனையே பார்த்து நின்றிருக்க, அவளின் முன்பு சொடுக்கிட்டு அழைத்த மாறன் 'என்ன.?' என்பதைப் போல் சைகையில் வினவினான்.

அதில் தான் இவள் சுயத்திற்கு வந்து "அது... அது..." என்று தடுமாறி பின்பு தலையைக் குனிந்து "சாரி" என்று தன் தவறுக்கான மன்னிப்பை வேண்ட, அவனிடம் பதிலில்லை.

அவனின் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் குனிந்த தலை நிமிராமல் "என் அப்பா கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணுனாங்க.. அதனால தான் உங்களைய கைகாமிச்சு லவ் பண்றதா சொன்னேன்.. உண்மையா இது ஏதேச்சையா நடந்தது தான்.. என் அப்பா அப்பவே உங்ககிட்ட பேசுவாங்கனு நான் நினைக்கல.. வெரி சாரி.. என்னால தான் உங்களுக்கு கஷ்டம்.." என்று வருந்தினாள்.

"ஓஓஓஓ கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு என்ன.?"

"இஷ்டமில்லை.."

"ஏன்.?"

"தெரியல.. என் அப்பாவைத் தனியா விட்டுட்டு போகணும்னு நினைக்கற நினைப்பு கூட காரணமா இருக்கலாம்"

"அப்ப உன் அப்பாவையும் சேர்த்து கூட்டிட்டு போயேன்.."

"வர்றவன் சம்மதிக்கணும்ல.?"

"இதுதான் பிரச்சனைனு உன் அப்பாகிட்ட சொன்னா அதுக்கேற்ற மாதிரி உனக்கு மாப்பிள்ளை பார்க்க போறாங்க.. இதுக்கு எதுக்கு இத்தனை அலப்பறை.?"

"நிச்சயம் மாட்டாங்க.. என்னைய தான் சமாதானப்படுத்த நினைப்பாங்க.." என்றவளின் குரலில் வருத்தம் மேலோங்கி நின்றது.

"சரி விடு.. உனக்கேத்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்கும்.. எனக்கும் உன்னைய கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் எல்லாம் இல்லை.. நீ அன்னைக்கு அதிரன்கிட்ட பேசிட்டு நின்னீயே.. அதான் நான் உன் வீட்டுக்கு வந்தா உன் பாவனை என்னவா இருக்கும் நினைச்சுத் தான் வந்தேன்..

உனக்கு பிடிக்கல.. உன் அப்பாவுக்கும் பிடிக்கல.. அதுக்கு என்ன பண்ண முடியும்.? விட்டுத் தள்ளு.. நீ எதையும் மனசுல வெச்சுக்காத.. வீட்டுக்கு வந்ததுல என் மேலயும் தப்பு இருக்கு.." என்றதில் திகைத்தாள் இவள்.

"அன்னைக்கு நீங்களும் கேட்டீங்களா.?" என்றே படபடவென்ற மனதுடன் அவள் வினவிட, ம்ம்ம்ம்ம் என்றவனுக்கு அன்றலய நினைவில் லேசாக புன்னகையும் மலர்ந்தது.

அய்யோ என்றிருந்தது பெண்ணவளுக்கு.. சுற்றியும் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் பேசி நின்ற தன் மடத்தனத்தை நினைத்து இப்போது நொந்தாள். அவனின் முகம் காணவே இவளுக்கு பெரிய பாடாக இருக்க, அவளை இன்னும் இம்சிக்க விரும்பாமல் "நான் கிளம்பறேன்" என்று அவன் விடைப்பெற எத்தனிக்க, இவளோ "ஏங்க எனக்கு ஒரு சந்தேகம்.. உங்க மனைவி இப்ப எங்க இருக்காங்க.?" என்று கேட்டே விட்டாள்.

அதில் படக்கென்று திரும்பிய காக்கி உடைக்காரன் அவளை முடிந்த வரைக்கும் முறைத்து உன் வேலையைப் பாரு என்று முகத்தில் அறைந்ததைப் போல் கூறி சென்றான்.

அவனின் இப்பேச்சில் இவளின் விழிகள் கண்ணீரை உகுக்கத் தொடங்கியது. இப்படியொரு பேச்சை அவனிடம் இருந்து இவள் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் தன்மையாக நடந்தால் தான் என்ன.? என்று தேம்பியபடி நினைத்தவளின் விழிநீரும் கன்னத்தை முத்தமிட்டது.

இந்தளவிற்கு அவன் பொறுமையாக பேசி சென்றதே பெரியது என்பதை இவள் அறியவில்லை. அவனின் தங்கையை இதை விட பேசுவான் என்பதை இவள் அறியும் நேரம் பெண்ணவளின் பாவனைகள் தான் என்ன.? பொறுமையாக காத்திருந்து அதையும் காணலாம்.







வீட்டில் அமைதியாக இருந்த தன் மகளைக் குழப்பமாகவே குமரேசன் ஏறிட, அதைக் கண்டு காரணமே இன்றி எரிச்சலுற்று "எதுக்கு என் மூஞ்சியை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க.? புதுசா ஏதாவது எழுதி ஒட்டிருக்கா.?" என்று காய்ந்தாள்.

அவளை முறைத்து விட்டு அவர் நகர்ந்து விட, ப்ச் என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டாள். தனக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்.? என்று யோசித்ததில் தலைவலியும் இலவச இணைப்பாக அவளிடம் ஒட்டிக் கொண்டது.

அவள் கேட்காமலே இந்தா பிடி என்று காஃபி டம்ளரை அவளின் முன்பு டங்கென்று குமரேசன் வைத்திட, தேங்க்ஸ்ப்பா என்று எடுத்துக் கொண்டவளுக்கு அதன்பின்பு மனநிலையே நன்றாக இருந்தது.

இன்னும் முழுதாக அகலாத குற்றவுணர்வில் தத்தளித்தவளுக்கு பேசாமல் தந்தையிடம் பொய் கூறியதை உரைத்து விட்டால் என்ன.? என்று தான் தோன்றியது. யோசிக்க யோசிக்க குழப்பமே அதிகமாகும் என்பதால் உடனே "அப்பா" என்று தந்தையையும் அழைத்து விட்டாள்.

அவர் வந்ததும் "சாரிப்பா நான் சொன்னது எல்லாமே பொய்.. நான் அவரை லவ் பண்ணவே இல்லை.. சொல்லபோனா அவரு யாருனே எனக்குத் தெரியாது.. கல்யாணத்துல இருந்து தப்பிக்க தான் இப்படியொரு பொய்யை நான் சொன்னேன்.. உண்மையா அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைப்பா..

நான் ஒன்னு நினைச்சு பண்ணுனா வேற ஒன்னுல முடிஞ்சுருக்கு.. என்னால அவருக்குத் தான் தேவையில்லாத அவமானம்.. என்னால இதைய ஈசியா கடந்து விட முடியல.. மனசு எல்லாம் ஏதோ பண்ணுதுப்பா.. அதைய மறக்கவும் முடியல.. இன்னைக்கு அவரைப் பார்த்து சாரியும் கேட்டுட்டேன்.. அப்பவும் என் மனசுல ஏறுன பாரம் இறங்குன மாதிரியே தெரியல..

ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட போல மனசெல்லாம் படபடனே இருக்குப்பா.. இதுக்கு என்ன பண்றது.?" என்று பாவமாக அதே சமயம் அழுகையுடனும் வினவினாள்.

பாவம் இந்த அப்பாவி தகப்பன் தான் அதிர்ந்து விட்டார். "என்ன காரியம் பண்ணி வெச்சுருக்க.?" என்று கோவமாக கேட்டவருக்கு மகளின் மேல் கொலைவெறியே எழுந்தாலும் அடிக்க மட்டும் கை ஓங்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் மகளை அடித்துப் பழக்கப்படாதவர் அவர்.

"சாரிப்பா வெரி சாரி.. நான் சும்மா தான் அப்படி சொன்னேன்.. உடனே நீங்க அவங்ககிட்ட போய் பேசுவீங்கனு நான் எதிர்பார்க்கல.. எல்லாம் என் தப்புத்தான்" என்றவள் குற்றவுணர்வில் மிதந்தாள்.

செய்த தவறை உணர்ந்து அழுது நிற்பவளை இவரால் என்ன கூறிட முடியும்.? நடந்தது நடந்து விட்டது.. அந்த பையனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு முன்பு மகளின் அழுகையை நிறுத்த வேண்டுமே.?

"சரி விடு ஏதோ நடந்துருச்சு.. இப்படி நடக்கணும்னு இருக்கு.. அதுக்கு என்ன பண்ண முடியும்.? அந்த தம்பியைப் பார்த்தா நானும் மன்னிப்புக் கேட்டறேன்.. நான் பேச போறப்பவாவது உண்மையைச் சொல்லிருக்கலாம்..

நீ சொன்னதை உண்மைனு நம்பி நானும் வேற என்ன என்னமோ பண்ணி வெச்சு.. கடைசில வீடு தேடி வந்தவங்க மனசு கஷ்டப்பட்டு போற மாதிரி ஆகிருச்சு.. எனக்கும் வருத்தமா தான் இருக்கு.." என்று வருந்தினார்.

"அதான்பா எனக்கும் ஒரு மாதிரி இருக்கு.. அதைய மறக்கவும் முடியல.. ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரியே இருக்கு.. நான் என்ன பண்றதுப்பா.?" என்று தவறு செய்து விட்ட குழந்தையைப் போல் அதற்கு தீர்வு வேண்டி தந்தையிடம் நின்றாள்.

முதலில் என்றால் திருமணமானவன் அது தவறு.. அவனைப் பற்றி நினைக்க கூடாது என்று கடுமையாக சாடி இருப்பார். ஆனால் நடந்த நிகழ்வு வேறாக இருக்கும்போது இவரும் என்ன செய்வார்.?

"மறக்க பாரும்மா.. வேற வழி இல்ல.. தப்பு செஞ்சுட்டு அதைய தப்புனு புரிஞ்சுக்கிட்டியே அது வரைக்கும் போதும்.. இனி இப்படி எதாவது பண்ணி வெக்காத.." என்றவரிடம் காவ்யா ஏதோ ஒன்று கூற, அவரோ அதிர்ந்து நின்றார்.



மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
தேடும் ஆதாரமும்
திரட்டும் உண்மைகளும்
தேடி வந்த சம்மந்தம்
தவிர்க்க முடியாத நிலை
தவறு செய்த பெண்
தவித்து நிற்கும் தந்தை
தீரும் காலம் எப்போது???
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
தேடும் ஆதாரமும்
திரட்டும் உண்மைகளும்
தேடி வந்த சம்மந்தம்
தவிர்க்க முடியாத நிலை
தவறு செய்த பெண்
தவித்து நிற்கும் தந்தை
தீரும் காலம் எப்போது???
😍🤩🤩🤩😍😍🤩😍
 
Top Bottom