- Joined
- Jun 17, 2024
- Messages
- 20
அனந்தன் காடு 2
திருவனந்தபுரத்தானை நினைத்தால் மோட்சம் உண்டு
இன்றுபோய்ப் புகுதிராகி
லெழுமையும் ஏதம்சாரா,
குன்றுநேர் மாடமாடே
குருந்துசேர் செருந்திபுன்னை,
மன்றலர் பொழிலனந்த
புரநகர் மாயன்நாமம்,
ஒன்றுமோ ராயிரமாம்
உள்ளுவார்க் கும்பரூரே
-திருவாய்மொழி
திவாகர முனி
துளு தேசத்தில் மங்களூரின் அருகே கும்பாலா என்ற இடத்தில் திவாகர முனி எனும் அந்தணர் தவம் செய்து கொண்டிருந்தார்.
சிறிய அளவிலான விஷ்ணு சாளக்கிராமத்திற்கு நித்ய ஆராதனம் செய்து வந்தார்.
ஒருநாள், மிகத் தேஜஸான ஒரு இரண்டு வயது ஆண் குழந்தை அங்கே வந்தது.
பாலகனின் முகப்பொலிவும், மழலையும் திவாகர முனியை வசீகரித்தது. அழகான குழந்தையைப் பார்த்து அள்ளிக் கொஞ்ச ஆசைப்படாதவர் எவர்?
தவமுனியே எனினும், அவரது மனதில் குழந்தையின் பால் ஈர்ப்பும் பேரன்பும் உண்டாயிற்று. பேச்சு கூட சரியாக வராத சிறுவனைப் பற்றி அறிந்து கொள்ள, அவனிடமே விசாரணை செய்தார்.
பால்மணம் மாறாத பச்சிளம் பாலகனைக் காணாது பெற்றோர் துடிப்பார்களே! அவனைப் பற்றிய விவரம் தெரிந்தால், பெற்றோரிடம் சேர்ப்பித்து விடலாம் அல்லவா?
“உன் பேரென்ன குழந்தாய்?”
“அனந்தன்”
“உன் வீடு எங்கே இருக்கிறது?”
உதட்டைப் பிதுக்கியது குழந்தை.
“சொல் அனந்தா”
“வீடு இல்லை”
“உன் பிதாவின் பெயர் என்ன?”
“எனக்குப் பிதாவே இல்லை?”
“போகட்டும், உன் அன்னை எங்கே?”
“அன்னை என்றால் யார்?”
அன்னை என்றால் என்னவென்றே தெரியாத, அன்னையின் முகமே அறியாத இரண்டு வயதுக் குழந்தையைக் காணக் காண, முனிவருக்குக் கனிவும் கருணையும் மீதூறியது.
அந்தச் சிறுவனைத் தன்னோடு வைத்துக்கொள்ளச் சொல்லி, உள்ளிருந்து ஏதோ உந்தியது.
“அனந்தா, இனிமேல் உனக்கு இதுதான் வீடு. நீ என்னோடே இருந்து விடுகிறாயா?” என்றவரின் குரலில் அத்தனை வாஞ்சையும் வாத்ஸல்யமும்.
இறையை நாடித் தனிமைத் தவம் இருந்த திவாகர முனி, இரண்டு வயதுக் குழந்தை தன் விருப்பத்தை மறுத்துவிடக் கூடாதெனத் தவித்தார்.
“உன் கூடவே இருக்கேன் தாத்தா. ஆனால்…”
“ஆனால் என்ன, சொல் அனந்தா”
“என்னிடம் கோபித்தால், எனக்கு ஏதேனும் அவமானமோ, சிறுமையோ நடந்தால் அடுத்த கணம் நான் இங்கே இருக்க மாட்டேன்”
இரண்டு வயதுக் குழந்தையின் தன்மானமும் நிபந்தனையும், மதலை மொழியில் அதைச் சொன்ன விதமும், அவனது தீவிர முகபாவமும் முனிவரைக் கவர “அப்படி எதுவும் நடந்தால் பார்க்கலாம் குழந்தாய், நீ இங்கேயே இரு”
அன்று முதல் குழந்தை அனந்தனுக்கு அந்தக் குருவின் குகையே வீடானது. திவாகரமுனி தன் அனுஷ்டானங்களை, ஆராதனாதிகளை முடித்து இளைப்பாறும் நேரங்களைத் தன் குறும்பால், மழலையால், விளையாட்டால், வாய் கொள்ளாத பேச்சால் களவாடினான் குழந்தை அனந்தன்.
சலுகையும் பழக்கமும் கூடக்கூட உரிமையும் கூடும்தானே? நாளுக்கு நாள் அனந்தனின் விளையாட்டும் விஷமங்களும் அதிகரித்துக்கொண்டே போனது.
திவாகர முனி, தன் விஷ்ணு சாளக்கிராமத்தின் பூஜைக்கென வைத்திருக்கும் பொருட்களைத் தொடுவதும், நைவேத்யங்களை உண்ண அவசரப்படுவதும், கமண்டல நீரில் விளையாடுவதுமாக இருக்க, அவரது பொறுமையின் அளவு குறைந்துகொண்டே வந்தது.
ஒருநாள் திவாகர முனி, பூஜையின் தீவிரத்தில் இருக்க, குழந்தை அனந்தனின் குறும்புத்தனம் எல்லை மீறியது.
கண்கள் முடித் தியானத்தில் இருந்தவர், ஏதோ உறுத்தவும், கண்களைத் திறந்து பார்க்க, அவர் எதிரே இருந்த விஷ்ணு சாளக்கிரமத்தைக் காணோம்!
பூஜித்த மலர்களில், நிர்மால்யத்தில் எனப் பதறியபடி தேட, சிறுவனின் வாய்க்குள் சிறைப்பட்டிருந்த சாளக்கிராமத்தைக் கண்டவருக்குக் கோபம் தலைக்கேற, ஆத்திரத்துடன் கண்டித்தார்.
தன் நிபந்தனையின் படி, உடனடியாக வெளியேறிய குழந்தை அனந்தன், திவாகர முனிவருக்கு என்றாவது அவனைப் பார்க்கும் ஆசை இருப்பின் அனந்தன்காட்டுக்கு வருமாறு அறிவித்தான்.
முதலில் அலட்சியப் படுத்தியவருக்கு, பிறகு அந்தக் குழந்தையின் சுபாவமும் சுயமரியாதையும் உரைக்க, அவன் சென்ற திசையில் பின்தொடர்ந்தார்.
செல்லும் வழியெங்கும் கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் குழந்தை அனந்தனின் தோற்றத்தை வர்ணித்து, விசாரித்தபடி செல்ல,
“இரண்டு வயது பச்சிளம் பாலகனைத் திட்டி விரட்டிய நீரெல்லாம் ஒரு முனிவரா?” என்று அவரைத்தான் குற்றம் சாட்டினர்.
நீண்ட நெடிய பயணத்தின் பின் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியை அடைந்தவர், அங்கே குழந்தை அனந்தன், ஒரு மிகப்பெரிய இலுப்பை மரத்திற்குள் சென்று மறைவதைக் கண்டார்.
இமைக்கும் நொடியில் சடசடவென முறிந்து விழுந்த அந்த இலுப்பை மரம், பகவான் நாராயணன், அனந்தனின் மேல் சயனித்தபடி,
ஸ்ரீ பத்மநாபஸ்வாமியாக உருவமெடுத்தவரின் சிரம் திருவல்லத்திலும், திருமேனி அனந்தபுரத்திலும், சரணங்கள் திருப்பாதபுரத்திலுமாகப் பரந்திருக்க, திவாகரமுனி திகைத்தார்.
கிரஹிக்க இயலாத அளவில்
ஒரு யோஜனை தூரத்துக்குப் பிரம்மாண்டமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பரம்பொருளைத் தியானித்த திவாகர முனி, தன் மனிதக் கண்களால் கண்டு, வலம் வந்து, வழிபடும் அளவுக்குத் தோற்றமளிக்கும்படி வேண்ட, ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி அவரது கோரிக்கையை நிறைவேற்றினார்.
திவாகர முனியின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள் துளு தேசத்து அந்தணர்களைத் தனக்கு ஆராதனாதிகளைச் செய்யப் பணித்தார்.
திவாகர முனியின் இந்தக் கதை பிரமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
திவாகரரைப் போன்ற தவமுனிவர்களுக்கு மட்டுமின்றி, எளிமையான புலைய இனத்தைச் சேர்ந்த பெண்ணின் மூலமும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் பெருமாள்.
புலைத்தி
ஒருநாள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த புலைய இனப் பெண் ஒருத்தி, குழந்தை ஒன்று வீறிடும் ஒலியைக் கேட்டாள்.
குரல் வந்த திசையில் தேடிச்செல்ல, தனித்து விடப்பட்டிருந்த அழகான ஆண் குழந்தை ஒன்றைக் கண்டாள். சுடரொளியாய் மின்னிய மகவைத் தொடவே பயந்தாள்.
எனினும், குழந்தை அழுவதைத் தாங்க இயலாதவளாகத் தன்னை தூய்மைப் படுத்திக்கொண்டு, வாரியணைத்து அமுதூட்டத் தொடங்கினாள்.
பசியாறிய சிசுவை அருகில் இருந்த இலுப்பை மர நிழலில் கிடத்தியதுதான் தாமதம், மின்னலைப்போல் தோன்றிய ஐந்துதலை நாகமொன்று, தனது நாகபடத்தைக் குடையென விரித்துக் குழந்தையைக் காத்த படி, மரத்தின் பொந்துக்குள் குழந்தையை இழுத்துக்கொண்டது.
இந்த அற்புத நிகழ்வை இறையின் திருவிளையாடல் எனப் புரிந்துகொண்ட அந்தப் பெண்ணும் அவள் கணவனும், அச்சம்பவத்தில் இருந்து மீண்ட பின், தினமும் அவ்விடத்திற்குச் சென்று உமி நீக்கிய அரிசியும் பாலும் வைத்து வழிபட்டு வந்தனர்.
இந்த அதிசயத்தைக் கேட்ட அரசன், அந்த இடத்தில் சிறிதாக ஒரு கோவிலை எழுப்பி, அத் தம்பதிகளுக்கு , மிகப்பெரிய விவசாய நிலத்தையும் பரிசளித்தார்.
வில்வமங்கலத்து சாமியார்
[திவாகர முனிக்கும் வில்வமங்கலத்து சாமியாருக்கும் நிகழ்வுகளில் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.
இரண்டு திவாகர முனிகளும் மூன்று வில்வமங்கலத்து சாமியார்களும், வெவ்வேறு காலகட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.
ஆவணப்படுத்தப்படாத சரித்திரத்தில், தவிர்க்க முடியாதது தற்குறிப்பேற்றம். இதில் ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி கோவில் யுகங்கள் கடந்து நின்றாலும், வரலாற்றின் விளைவுகளால் பாதிக்கப்பட்டு, திவாகர முனி போன்றவர்களால் மீட்டெடுக்கப்பட்டு, புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ]
எத்தனைமுறை , புனரமைக்கப்பட்டாலும்
ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமியின் குன்றாத ஆகர்ஷண சக்தி அளவிட முடியாதது.
பரம்பொருளுக்கு உருவம் கொடுத்து வழிபடும் சற்குண பக்தி மார்க்கத்தின் உச்சம்
ஸ்ரீ அனந்தபத்மநாபஸ்வாமி.
நம்பூதிரி இனத்தைச் சேர்ந்த வில்வமங்கலத்து சாமியார் கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள காஸர்கோட்டில் ஸ்ரீ அனந்தபுரம் (இது வேறு) கோவிலின் அருகே வசித்து வந்தார்.
விஷ்ணு பக்தியில் திளைத்த வில்வமங்கலத்து சாமியார், தன் ஸவதர்ம வழக்கப்படி நித்யானுஷ்டானங்களையும், பூஜை புனஸ்காரங்களையும் செய்து வந்தார்.
ஒருநாள் சிறு பாலகன் ஒருவன்
எங்கிருந்து வருகிறான் என்றே தெரியாது, வில்வமங்கலத்து சாமியாரின் வசிப்பிடத்திற்குத் தினமும் வரத் தொடங்கினான். சொல்லி வைத்ததுபோல் சரியாக அவர் பூஜை செய்யும் நேரத்திற்கு வந்துவிடுவான்.
ஆளை மயக்கும் சிரிப்பும், விளையாட்டும் சாமியாரைக் கவரவே, பூஜை முடிந்தபின் குழந்தைக்குப் பிரஸாதத்தை உண்ணக் கொடுப்பதும், அவனுடன் பேசிச் சிரிப்பதுமாக இருந்தார்.
நாள் செல்லச் செல்ல, குறும்பு செய்யத் தொடங்கிய சிறுவனுக்கு ஒருநாள், பூஜையில் இருந்த சாளக்கிராமம், நன்கு கனிந்த நாவல்பழம் போல் தோன்றியதோ என்னவோ,
வில்வமங்கலத்து சாமியார் கண்களை மூடி நாராயண மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கையில், கண் சிமிட்டும் நேரத்தில், சாளக்கிராமத்தை விழுங்கி இருந்தான்.
தான் புனிதமாகப் பூஜித்து வந்த விஷ்ணு சாளக்கிராமம் எச்சிலானதில் ஆத்திரமடைந்த வில்வமங்கலத்து சாமியார், தன் இடது புறங்கையால் சிறுவனைப் பிடித்துத் தள்ளினார்.
குழந்தைதான் எனினும், புறங்கையால் தள்ளப்பட்டதில் சிறுமையாக உணர்ந்த பாலகன், அடுத்த க்ஷணமே அங்கிருந்து ஓட்டமெடுத்தான். வந்தது சாதாரண மானுடக் குழந்தையல்ல என்பதை உணர்ந்தவர், தன் தவறுக்கு வருந்தித் துடித்தார்.
சிறுவனின் பின்னே ஓடிய சாமியாருக்கு அவனது இடுப்பு அரைஞாணின் மணியும், கொலுசுகளின் சலங்கையும் வழிகாட்டுவது போல் ஒலித்த திசையில் நடந்த வில்வமங்கலத்து சாமியார், திடீரென சப்தம் நின்றுவிடவும் திகைத்தார்.
காத்திருந்தும் பயனின்றிப் போக, இலக்கின்றி அலையத் தொடங்கினார். ஆனால், அதிலும் ஒரு நன்மையாக, வழியில் தென்பட்ட பல கோவில்களைப் புனரமைத்துக் கொண்டே சென்றார். அந்தப் பயணத்தில் எண்ணிலடங்கா இறையனுபவத்தைப் பெற்றார்.
கேரளத்தின் வடபகுதியிலிருந்து அனந்தன் காடு இருக்கும் தென்திசை நோக்கி தன் தேடலைத் தொடர்ந்த வில்வமங்கலத்து சாமியார், ஒரு மாலைப் பொழுதில், உடலும் மனமும் சோர, மர நிழலில் இளைப்பாறினார்.
அதன் எதிரே இருந்த ஒரு புலையனின் குடிசையில் இருந்து, புலைத்தி உயர்ந்த குரலில் “இனி கரைச்சலை நிறுத்தி இல்லையெங்கில் நின்னெ ஞான் அனந்தன் காட்டில் தள்ளும்” என்று கோபமாகத் தன் குழந்தையை மிரட்டுவதைக் கேட்டார். ஆனந்தமடைந்தார்.
மகிழ்ச்சியில் குடிசையை நோக்கி ஓடிய சாமியார், புலைத்திக்கு நன்றி தெரிவித்து, அவள் கை காட்டிய திசையில், இருளைப் போக்க ஒற்றைத் திரி போட்ட விளக்கு ஒன்றைப் பெற்றுக்கொண்டு, தெய்வீக ஒளியைத் தேடி அனந்தன்காட்டை நோக்கி விரைந்தார்.
காட்டுக்குள் நுழைந்ததுமே, பழையபடி மணிகளும் சலங்கையும் ஒலிப்பதைக் கேட்டார்.
விடிவதற்கு முன்பான, இருள் பிரியாத வேளையில் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு இலுப்பை மரம் கண்கள் கூசும்படியான பிரகாசமான ஒளியை வெளிப்படுத்தியபடி, பெரும் சத்தத்தோடு முறிந்ததைக் கண்ட வில்வமங்கலத்து சாமியார், அந்த ஒளியை நோக்கிச் செல்ல, தன் கண்ணெதிரே கண்ட காணக்கிடைக்காத அந்த அற்புதத்தை உள்வாங்க முடியாது திகைத்து நின்றுவிட்டார்.
அனந்தனின் மேல் பள்ளிகொண்ட ஸ்ரீபத்மநாப ஸ்வாமியை, அளக்க முடியா அளவிலான அனந்தனின் வடிவைத் தரிசித்தவருக்கு, திருவல்லமும் திருப்பாதமும் ஒரு சேரக் காணக் கிடைக்காது அனந்தரமாகக் கிடந்தவனை, தரிஸனத்திற்குத் தகுந்த அளவுகளில் வெளிப்படுத்திக்கொள்ள விண்ணப்பித்தார்.
ஆதவனின் கிரணங்கள் பூமியைத் தொட்ட நேரத்தில், அனந்தனின் பசியாற்ற, சாமியாருக்கு கிடைத்து ஒரு பச்சை மாங்காய். அதில் உப்பிட்டு, தேங்காய் ஓட்டில் வைத்து ஸ்ரீபத்மநாபனுக்கு நிவேதனம் செய்தார்.
னஅதே தேங்காய் ஓட்டில் பொன் வேயப்பட்டு, இன்றளவும் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமிக்கு அனுதினமும் உஷத் காலத்தில் உப்பிட்ட மாங்காய் நிவேதனம் செய்யப்படுகிறது.