• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 8

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
14
Mr. மாமியார் 8


“இருபத்தோரு நாள் ஒரு வேலையை தொடர்ந்து செஞ்சா அதுவே பழகிடும்னு சொல்லுவாங்க. உனக்கெல்லாம் இருபத்தோரு வருஷமானாலும்… ம்ஹூம்”

“...”

“ சொன்ன வேலைல கவனம் இல்லாம அப்படி என்ன கேக்கறேன்?”

“...”

“ஹலோ, லலிதா மேடம், உங்களைத்தான், காது திறந்திருக்கா?”

கையில் ஒரு பெரிய எவர்சில்வர் அடுக்குடன் நின்றபடி கேள்வி கேள்வியாகக் கேட்டவனின் எதிரே அடக்கமா, அலட்சியமா என பதில் சொல்வதற்கான த்வனியை யோசித்தபடி நின்றவளின் முகத்தில் அவளை மீறி வெளிப்பட்டது குற்றவுணர்வு.

“வீட்ல பார்ட்டி, இருபது பேர் போல சாப்பிட வராங்க. அங்க ஃப்ரிட்ஜ்ல இடமில்லை. ரய்த்தா, ஸ்ரீகண்ட், தயிர் சாதம் செய்யணும். உறைஞ்ச பிறகு தயிரை ஃப்ரிட்ஜுல வைன்னு, எங்கம்மா ஒத்த வேலையை, நேரடியா உங்கிட்டதானே சொன்னாங்க? அதுகூட சாயந்திரம் அவங்களே இங்க வந்து உறை ஊத்திட்டு, நைட் ஒம்போது மணிக்கு உள்ள வைன்னு டயம் கூட சொல்லிட்டு போய் இருக்காங்க”

“ஸாரி…”

“நான் ஸாரி கட்டறதில்லை, உன் ஸாரியை இப்ப எங்கம்மா வருவாங்க, அவங்கள்ட்ட குடு”

ஆறடி மூன்றங்குல வாமனமூர்த்தியை புடவையில் கற்பனை செய்த லலிதாவின் புன்னகை விரிந்ததில்,

“நல்ல கோர்வை புடவையா பாத்து கட்டிவிடு, என்ன?”

‘ஹான்…’

“என்ன முழிக்கற, அதான் நீ நினைக்கறதெல்லாம் உன் முகத்துல ரீல்ஸா ஓடுதே”

அநிச்சையாக கையால் முகத்தை துடைத்துக் கொண்டவளைக் கண்டு சிரிப்பு வந்தாலும், வாமனன் தன் முகத்தில் அதன் சாயலைக் கூட காட்டாது நிற்க, அழைப்பு மணி ஒலித்தது.

“கதவைத் திற” என்றவன் பாத்திரத்துடன் சமையலறைக்குள் சென்றான்.

உள்ளே வந்த சீதளா “எங்க அவன், வாமனா..”

“சொல்லும்மா…”

மகன் சமையலறையில் இருந்து வருவதைக் கண்ட சீதளாவின் பார்வை காலை வேளையில் நைட் கவுனில் நின்றிருந்த மருமகளின் மேல் அதிருப்தியோடு படிந்தது.

“வாமனா, உன்கிட்ட தயிரை எடுத்துட்டு வரச் சொல்லி எத்தனை நேரமாச்சு?”

“...ம்மா… பனில தயிர் இன்னும் சரியா செட் ஆகலைம்மா. இன்னும் கொஞ்ச நேரம் ஃஃப்ரிட்ஜ்லயே இருந்தா…”

“நான் எப்படா சமையல் செய்யறது, இந்த எக்ஸ்ட்ராவெல்லாம் காலைலயே செஞ்சு வெச்சாதான் ஈஸியா இருக்கும்”

“அம்மா,ன, நான் கொஞாசம் ஹெல்ப் பண்றேன், வா”

“இப்ப வேண்டாம். பவி வந்து காய் நறுக்கத் தொடங்கிட்டா. பத்மா கிச்சன் ஹெல்ப்புக்கு வந்தாச்சு. நீயும் அப்பாவும் மேலாக க்ளீன் செஞ்சு, ஹால், டைனிங்கை செட் செஞ்சா போதும்”

“டன், அடுத்த வாரம் வளைகாப்பை வெச்சுக்கிட்டு பவியை ஏம்மா…, ”

“செய்யறவங்களைதானே சொல்ல முடியும்?”

“...”

சீதளா “எதுக்கும் நான் ஒருதரம் தயிரை பாக்கறேன்” என்றபடி கிச்சனை நோக்கி நகர, தடுப்பது தெரியாத வண்ணம் தோளோடு தாயை அணைத்துக்கொண்ட வாமனன்,

“மா, எத்தனை வேலைதான் நீயே செய்வ. அட்லீஸ்ட், ரெய்த்தா, ஸ்ரீகண்ட் என் பொறுப்பு, டீல்?”

தாங்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்த லலிதாவின் முகத்தில் கதவைத் திறந்தபோது இருந்த கலவரம் போய், இப்போது நிம்மதி பரவியதைப் பார்த்த சீதளா,

“வாட் ஈஸ் தி கேட்ச் வாமனா, ஏதாவது பிரச்சனையா?”

“ப்ச்ப்ச்.. இப்ப என்னம்மா பிரச்சனை… நத்திங்” - வாமனன்.

“ஐயோ, அதெல்லாம் ஒன்னுமில்லத்த…” என்ற லலிதா, சிறிது தயக்கத்தோடு “நான் ஏதாவது ஹெல்ப்….”

அகன்ற பார்வையில் (Panoramic view) வீட்டை ஒரு முறை அலசி, மகனைக் கூர்ந்த சீதளா, படு நக்கலாக “self help is the best help லலிதா. அதை முதல்ல செய்” என்று கிளம்பிச் சென்றாள்.

வழமையான மாமியார் தோரணையில் ‘இதைச் செய்’ என்ற அதிகாரமோ ‘அதை ஏன் செய்யவில்லை?’ என்ற குற்றச்சாட்டோ இல்லைதான்.
ஆனாலும், சீதளாவின் கேலி நிறைந்த அந்தக் குரல்!

எல்லாம் சீதளாவின் அந்த நண்பிகள் கூட்டம் வந்த பிறகுதான் தொடங்கியது!

இரண்டு மாதங்களுக்கு முன், வாமனமூர்த்தி அலுவல் நிமித்தம் டெல்லி சென்றிருந்த நேரத்தில் ஏதோ பழைய பொருட்களை ஏலம் விட்டு, புயலால் பாதிக்கப்பட்டவர்களூக்கு கொடுக்கப்பதற்கென சீதளாவை அழைத்துச் செல்ல நண்பிகள் என ஆறு பேர் வந்தனர்.

நல்ல வசதியான, படித்த, உயர் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த லலிதாவிற்கு நாகரிகமான பெண்மணிகள் ஒன்றும் புதிதல்ல.

நேர்த்தியான உடையும் சீரான அலங்காரமும் இல்லாத வட இந்தியப் பெண்களை வெளியில் காண்பதே அரிதல்லவா?

மேலும், லலிதாவின் குடும்பம் மும்பையில் இருந்த இரண்டு காம்ப்ளெக்ஸ்களிலுமே கூட மேல் தட்டு மக்களும், படு ஸ்டைலான பெண்களும் இருக்கத்தான் செய்தனர். சிலரிடம் மெலிதான அலட்டல் இருப்பினும், பெரும்பாலும் இயல்பாகவே இருப்பர்.

இவ்வளவு ஏன், ஐடி துறையில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும், ஆன் சைட்டிற்கு கனடா வரை சென்ற லலிதா பார்க்காத பார்ட்டிகளா, பெண்களா?

ஹெச் ஆர், டீம் லீட், மேனேஜர் என VP வரை பல பெண் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறாள். அவர்களின் கடிதலில் கூட, வேலையை முடித்து வாங்குவதற்கான முனைப்பும் பொறுப்பும்தான் இருக்குமே தவிர, அலட்சியம் குறைவுதான்.

ஆனால், அன்று வந்த சீதளாவின் நட்புகள் அனைவரிலும் தெரித்த நேர்த்தியான நடை, உடை, பாவனையும், அலட்டலில்லாத நிமிர்வும், தன்னம்பிக்கையும் தீர்மானமும் கூடிய அலட்சியமும் லலிதா அதுவரை காணாதது.

தனிக்குடித்தனமாக எங்கோ தொலைவில் இருந்திருந்தால் கணவன் ஊரில் இல்லை என்றதும் பிறந்தகம் சென்றிருக்கலாம். இங்கு அதற்கும் வழியின்றி எதிரிலேயே இருந்த மாமியார் “மூணே நாள், இதுக்கு ஏன் அங்க போகணும்?” என்றதில் லலிதாவின் பிளான் எல்லாம் ஃபணால் ஆனது.

காலை மணி பதினொன்றரை இருக்கும். முன்னறையில் குஷன்களின் நடுவே தரையில் அமர்ந்து வேலையில் ஆழ்ந்திருந்த லலிதா, வெளியில் பேச்சும் சிரிப்பும் சளசளத்ததில், கவனம் சிதறி யாரென யோசிப்பதற்குள் அழைப்பு மணியடித்தது.

எழுந்து கதவைத் திறந்தவளைத் தாண்டி முதலில் வெவ்வேறு சென்ட்டுகளின் மணம் நுழைய, அதன் பின் தன்னுடன் வந்தவர்களை வரவேற்றபடி சீதளா உள்ளே பிரவேசித்தாள்.

இந்திய நாட்டின் பிரதம மந்திரி முதல், பிரிட்டிஷ் அரசி வரை யாரையும் விடாத மாமியார், மருமகளின் உறவையும் உராய்தலையும் வேடிக்கை பார்க்க விரும்பாதவர் யார்?

நெருங்கிய உறவோ, நட்போ, உள்ளே புகுந்து பார்க்கும் சில ஆர்வங்கள் அளப்பரியது, ஆனந்தமானது, சுவாரஸ்யமானதும் கூட. அதிலும் அவர்கள் குழுவின் மிக முக்கியமான, தலைவி போன்ற, தொழில், சமுக சேவை என பன்முகத் திறமை கொண்ட சீதளாவின் மருமகளை, குறிப்பாக சீதளாவுக்கும் அவளது மருமகளுக்குமான கெமிஸ்ட்ரியை(!) நேரில் காண விழைந்த இந்துமதி, காபி, வடை, ஃப்ரூட் சாலடுக்குப் பின்,

“சீதளா, எங்க நம்ம(!) மருமக, ஒர்க் ஃப்ரம் ஹோம்னு சொன்ன… ரிஸப்ஷன்ல பார்த்தது, எப்டி இருக்கா?”

தன் சக வயது தோழிகளிடம்
மகனையும் மருமகளையும் தன்னுடன் பிடித்து இறுக்காமல்(!) வீட்டையும் சுதந்திரத்தையும் கொடுத்த பெருமையை

“ஒர்க் ஃப்ரம் ஹோம்தான். ஆனா… நீங்களே வந்து பாருங்களேன்” என வெகு நாசூக்காக பறைசாற்றிய சீதளா, நேரே இங்கேயே அழைத்து வந்துவிட்டாள்.

வாமனமூர்த்தியும் ஊரில் இல்லாது போக, வழக்கத்தை விடவே தாமதமாக எழுந்த லலிதா கணினியில் கண்ணும், க்ளையன்ட் காலில் காதும் விழித்தாள். கல்கண்டாய் இனித்த தூக்கத்தில் வேலைக்காரியை வேறு தவற விட்டிருந்தாள்.

கால் பேசிக்கொண்டே இடையில் காலை உணவாக மேகியும் காஃபியும் செய்து உண்டவள், தொளதொளவென ஒரு பழைய டீ ஷர்ட்டும், பர்மூடாஸும் அணிந்து கொண்டு தன் கோடிங்கை தொடங்கியவள், சீதளாவுடைய நட்புக்குழுவின் வருகை பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை வாமனன் இருந்தால் தெரிய வந்திருக்கலாம்.

உள்ளே நுழைந்தவர்கள் லலிதாவின் உடையை, தோற்றத்தை, மூவர் அமரும் நீள்விருக்கையில் வீற்றிருந்த நான்கு இஸ்திரி செய்யப்பட்ட துணி மூட்டைகளை, காய்ந்து போன மேகி பாத்திரத்தை, காஃபி கோப்பையை, தரையில் சிதறிக் கிடந்த குஷன்களை, டைனிங் டேபிளில் கறுத்து தொங்கிய வாழைப்பழங்களை ஸ்கேன் செய்தவர்களின் முகங்கள் பிரதிபலித்த திருப்தியில் விர்ர்ர்ரென மலையேறினாலும், சற்றும் முகம் மாறாது காத்த சீதளா, சமன் படுத்தப்பட்ட குரலில்

“லலிதா, இவங்களையெல்லாம் ஞாபகம் இருக்கா?” என மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தினாள்.

இந்துமதி “ஹாய் லலிதா, ஆஃபீஸ் வேலைல ரொம்ப பிஸி போல?”

“ஐ டெல் யூ, பேர்தான் ஒர்க் ஃப்ரம் ஹோம். ஆஃபீஸ் போறதே தேவலாம் போல… க்ளையன்ட் கால்ங்கற பேர்ல கண்ட கண்ட நேரத்துல ஃபோன். என்னத்தை சொல்ல?” என லலிதாவிற்கு வக்காலத்து வாங்கியது, சாக்ஷாத் சீதளாவேதான். பின்னே, மற்றவரிடம் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?

“ஓகே, நாம கிளம்புவோமா, பாண்டிச்சேரி வரை போகணுமே” என ஒரு ஜெர்க் கொடுத்து எல்லோரையும் கிளப்பியவள், லலிதாவிடம்,

“ரொம்ப பிஸியா இருக்கியா லலிதா, விஜி (பணிப்பெண்) வரலை? நான் வேணா இன்னைக்கு பத்மாவை அனுப்பவா?” என கேட்ட இயல்பான அக்கறையில், ஆனானப்பட்ட இந்துவே அசந்து போனாள் என்றால், லலிதா அடைந்த புளகாங்கிதம்!

மீண்டும் வேலையில் மூழ்கிய லலிதாவிற்கு நடந்த சம்பவம் குறித்த தெளிவை அருளியது,
அருள்மிகு ரங்கராஜன் சமேத லக்ஷ்மி தேவி தாயார்தான்.

“பார்த்ததுமே பத்மாவை அனுப்பறேன்னு சொல்ற அளவுக்கா வீடு இருந்தது?”

தன்னைச் சுற்றிவர ஒருமுறை பார்த்த லலிதா “அப்படி ஒன்னும் கோளாறா இல்லை மா. எல்லாம் சரியாதான் இருக்கு”

“நீ வீடியோ கால்ல வா”

லக்ஷ்மியின் கேமிரா கண்களுக்கு நடந்தது என்ன என்பது புரிந்தாலும், குற்றமும் பின்னணியும் மகளைச் சேர்ந்தது என்பதால்,

“ஆஃபீஸ் வேலை செய்யற நேரத்துல சொல்லாம கொள்ளாம திடுதிப்புனு இப்டி யாராவது ஒரு கூட்டத்தையே கூட்டிட்டு வருவாங்களா?”

“ஆமாம்மா கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நான் குளிக்கக் கூட இல்ல. நைட் ஷார்ட்ஸ்லதான் வேற இருந்தேன்”

இந்த ஆறேழு மாதங்களில் சம்பந்தி சீதளாவை சரியாகப் புரிந்து வைத்திருந்த லக்ஷ்மி,

“லலிதா, எதை செய்யறியோ இல்லையோ, இனிமே காலைல எழுந்ததும் குளிச்சு, நல்ல ட்ரெஸ்ஸா போட்டு உங்க மாமியாரை மாதிரி
ரெடியாகிடு”

“ஏம்மா?”

“சொல்றதை கேளு. துவைச்சது, துவைக்காதது, அயர்ன் செஞ்சது, செய்யாதது, மடிச்சது, மடிக்காததுனு எல்லா துணியையும் கண்ல படாம ஒரு ரூமுக்குள்ள கொண்டு போய் வை”

“அப்புறம் எடுத்து வைக்கவே மறந்துடும்மா”

“இப்ப மட்டும்?”

“மா…”

“போடீ, போய் இப்பயாவது கொஞ்சம் வேலை செய்” என்ற லக்ஷ்மி மனதிற்குள் தனக்கு லலிதா மருமகளாக இல்லாததற்கு கடவுளுக்கு ஆயிரம் நன்றி கூறினாள்.

கதை அங்கே நிற்கவில்லை. அடுத்த இரண்டு நாளும் மாலையில் வந்த சீதளா, மருமகளை வைத்து தனது எதிர்பார்ப்பிற்கேற்ப வீட்டை சீரமைத்த பின்பே ஓய்ந்தாள்.

பின்னிரவில் ஊர் திரும்பி, தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த வாமனமூர்த்திக்கு யாரோ அல்லது எதுவோ அடிபட்டு அனத்தும் ஓசை கேட்க, மனைவியைத் தேடி படுக்கையறைக்கு செல்ல, ஜடாயுவைப் போல் முனகிக் கொண்டிருந்த லலிதாவைக் கண்டான்.

ஆம், தொடர்ந்து வீட்டு வேலை செய்து பழக்கமில்லாத லலிதாவிற்கு உடல் கனத்து காய்ச்சல் கண்டிருந்தது.

மறுநாள் தன்னிடம் வந்த வழக்கை வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் ஆராய்ந்த வாமனன்,

“லலிதா, நீ இந்த களைச்சு போறதுக்கு முன்னாலயே ரெஸ்ட் எடுக்கற பழக்கத்தை விடறதுதான் உனக்கு, நமக்கு நல்லது”

என்று கூறி, தான் நூறு சதவீதம் சீதளாவின் வார்ப்பு மற்றும் வளர்ப்பு என்பதை
நிரூபித்தான்.

புரியாத லலிதா “மத்லப்? (அர்த்தம்).

“சோம்பேறி”

சண்டை போடத் தெம்பில்லாத லலிதாவால் ‘குயிலப் புடிச்சு கூட்டில் அடைச்சு…’ பார்வை மட்டுமே பார்க்க முடிந்தது.

பிறகு…?

அடப் போங்க பாஸ், கூடவே வளர்ந்த சோம்பேறித்தனம் எங்கேயும் போக!

****************

“யுவர் எக்ஸலென்ஸி, ஸ்ரீமதி லலிதா பரமேஸ்வரி அவர்களே, இப்பயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”

என்ற வாமனன் சங்கர் மகாதேவனின் “மூவ் யுவர் பாடி பேபி” யை ஹம் செய்யவும் லலிதா, டைனிங் டேபிளின் அருகே நின்றிருந்த கணவனிடம் சென்றாள்.

தரமான நான்கு பெரிய பக்கெட் தயிரை வாங்கி வந்து, வெள்ளரிக்காய், கேரட், மாதுளம்பழம், இஞ்சி, பச்சை மிளகாய் , கொத்தமல்லி, கருவேப்பிலை என தயாராக எடுத்து வைத்திருந்தான்.

“இதையெல்லாம் ரய்த்தாக்கு கட் செய்” என்ற வாமனமூர்த்தி ஸ்ரீகண்ட் செய்யவென இரண்டு பக்கெட் தயிரை நல்ல மஸ்லின் துணியில் வடிய வைத்திருந்தான்.

பார்த்த லலிதா “ஸ்ரீகண்டாவே வாங்கி இருக்கலாமே”

“உன்னை மாட்டிவிடாம காப்பாத்தினதுக்கு என்னை மாட்டி விட ப்ளான் போடற நீ, ம்?”

“இல்ல, சரியா வரலைன்னா…”

“ரொம்ப நல்லது. அப்பதான் நான் செஞ்ச மாதிரி இருக்கும். கடைல வாங்கினா ஈஸியா மாட்டிப்போம். எங்கம்மாவைப் பத்தி புரியாம பேசற நீ”

தண்ணீர் வடிந்து கெட்டியான தயிரை வெண்ணையைப் போல் குழைத்து சர்க்கரை கலந்து, அது தானாகக் கரைந்த பின், ஏலக்காய் பொடி, குங்குமப் பூ போட்டு மீண்டும் குழைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வாமனமூர்த்தி விரலில் சிறிது ஸ்ரீகண்டை வழித்து லலிதாவிற்குத் தந்தான்.

“ம்…. யம்மி, யூ குக் கிரேட்” என்றதோடு “தேங்க் யூ ஸோ… மச்” என்றவளைப் பார்த்த வாமனன் வாய்விட்டுச் சிரித்தான்.

“உனக்கு வெக்கமே கிடையாதாடீ?”

“எங்கிட்ட என்ன வெக்கம்னு நீங்க கேட்டு கேட்டு… இப்ப போயே போச்”

“எதுக்கும் ஸ்டாக் செக் பண்ணிடுவோமா?”

******************

மறுநாள் பவித்ராவிற்கு வளைகாப்பு. ஸ்ரீராமின் பக்கம் அதிக உறவுகள் இல்லாததோடு, அவனது பெற்றோரே அவனது தம்பியோடு இந்தோனேஷியாவில் இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் வந்திருந்தாலும், எல்லா ஏற்பாடும் இவர்களே என்பதால், விழா இவர்கள் வீட்டு பென்ட் ஹவுஸில்தான் நடக்க இருக்கிறது.

பவித்ரா இரண்டு பக்க உறவுகளுக்கும் ஒரே பெண் என்பதோடு, கிறிஸ்துமஸ் விடுமுறையும் சேரவே சீதளாவின் தங்கை குடும்பம், அண்ணன், அண்ணி, மற்றும் பாட்டி ஜானகியின் கடைசி தம்பி, அவரது மனைவி என உறவெல்லாம் திரண்டு வந்திருக்க, மூன்று நாட்களாகவே பந்தி போட்டு சாப்பாடு நடக்கிறது.

விருந்தினர் அனைவரும் வீட்டுப் பெரியவர்களுடன் நேரத்தை செலவிட, பவித்ராவும் ஸ்ரீராமும் வாமனமூர்த்தியின் வீட்டில் இருந்தனர்.

காலை உணவு முடிந்ததும் பவித்ரா இங்கு வந்துவிட, முதலில் மெஹந்தி இட்டுக்கொள்ள ஆசைப்பட, ஸ்ரீராம் ஆளைக் கூட ஏற்பாடு செய்து விட்டான்.

ஆனால் “விளையாடறியா பவி, ஒன்பதாம் மாசம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. பதினஞ்சு நாள்ல டெலிவரிக்கு ட்யூ டேட். ஸ்ரீராமோட அம்மா,அப்பா வரணும்னு நாமே லேட்டா ஃபங்ஷன் வெச்சிருக்கோம். இதுல மெஹந்தியாம்ல மெஹந்தி. ஏன்டா ஸ்ரீ, அவதான் கேக்கறான்னா உனக்கெங்கடா போச்சு அறிவு?” என வாமனமூர்த்தி போட்ட சத்தத்தில், பவித்ரா மறுபேச்சின்றி மருதாணிக்கு செட்டில் ஆனாள்.

பத்மா ஒரு கிண்ணம் நிறைய மருதாணியை அரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். சீதளா பிஸியாக இருக்க, லலிதா சாப்பிட்டு தன் வீட்டிற்கு வரும் முன்னர் ஸ்ரீராமே மனைவிக்கு மருதாணி வைக்கத் தொடங்கி இருக்க, நண்பர்கள் மூவரும் கலகலத்துக் கொண்டிருந்தனர்.

பவித்ரா “நீயும் வெச்சுக்கோ லலிதா”

தானே வைத்துக் கொண்டால், வலது கையில் வைப்பதும் சிரமம், விரல்களும் சீரின்றி சிவக்கும் என்பதால் முதலில் தயங்கியவள், பிறகு இடது கையில் இட்டுக் கொண்டாள்.

தலையை ஒரு கையில் தாங்கி, பள்ளிகொண்ட பெருமாள் போஸில் வாமனமூர்த்தி வேடிக்கையும் வாய் பேச்சுமாக இருந்தானே தவிர, மனைவிக்கு உதவ முன்வரவில்லை.

பவித்ரா “டேய் வாமனா, லலிதாவோட வலது கைல மருதாணி வையேண்டா” என்றதை ஸ்ரீராமும் ஆதரிக்க, கூச்சமும் வெட்கமும் முகிழ்த்ததில் சட்டென முகம் சிவந்துவிட்ட மனைவியைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவளை சீண்டும் ஆசை எழ,

“அதுக்கென்ன, அவளோட வளைகாப்புக்கு வெச்சு விட்டா போச்சு”

லலிதாவின் முகம் மாறி விட, ஸ்ரீராம் “இப்ப வைடான்னா… இவன் ஒருத்தன்”

பவித்ரா “ஏன் வாமனா அநாவசியமா பேசற?”

வாமனமூர்த்தி “நான் என்னோட ஆசையைதான் சொன்னேன் பவி, ஏன், உன் குழந்தைக்காக நான் எத்தனை வெய்ட் பண்றேன்னு உனக்கு தெரியாதா?”

வாமனமூர்த்தியின் வார்த்தைகளில் நெகிழ்ந்த பவித்ரா “ உங்களுக்கும் சீக்கிரமே வரத்தான் போகுது”

தன் சிந்தனையில் இருந்த லலிதா “அதெப்படி அண்ணி, அண்ணாவும் நீங்களும் சின்ன வயசுல இருந்தே லவ்வர்ஸ். நாங்க இன்னும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு, நம்பிக்…’

விருட்டென எழுந்த வேகம் தெரியாது எதிரே இருந்த டீ டேபிளை எட்டி உதைத்த வாமனமூர்த்தி வெளியேறச் செல்ல…

ஸ்ரீராம் “டேய் வாம்ஸ், என்னடா இதெல்லாம்?” என்று அதிர்ச்சியில் மிரண்டிருந்த பவித்ராவைக் கண் காட்ட, அவள் அருகில் வந்து அமர்ந்து “ஸாரிடா பவி” என அணைத்துக் கொண்டவன், அன்றும், அதற்கு அடுத்து வந்த நாள்களிலும் மனைவியின் பக்கமே திரும்பவில்லை.
 

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
19
வாமன்ஸ் ஏம்பா உனக்கு இவ்வளவு கோபம் வருது?? அன்பையும் சரி, கோபத்தையும் சரி அதிகமா காட்டுரியே??🤔💖💞💖

சீதளா super character 😍😍

லலிதா அவளே ஒரு குழந்தை மாதிரி தான் இருக்கா, இன்னும் கல்யாண வாழ்க்கையில செட் ஆகல, அதான் அவளுக்கு ஒரு குழந்தை இப்போ வேணுமான்னு யோசிக்கிறா போல?
 
Joined
Jun 30, 2024
Messages
37
எனக்கென்னவோ லலிதாவை பார்த்தா தான் பாவமா இருக்கு
 
Top Bottom