• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
26

அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

இன்னமும் ஒருவருஷம் கழிந்தது. ரங்கராஜனால் அங்கே அமெரிக்காவில் இருக்கவே முடியவில்லை. முன்புபோல் வீட்டினருடன் பேசுவது துர்லபமானது. சலித்துப்போனான் ரங்கராஜன் . அதிக மாதங்கள் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

அலுவலகத்திலே தங்கிக்கொள்வதை பழக்கமாக்கிக்கொண்டான்.வீட்டுக்கு சென்றால் மட்டும் என்ன ? அங்கே அவ்வளவு பெரிய வீட்டில் அவன் தனியாகத்தானே இருந்தாகவேண்டும். தானே சமைத்து,சாப்பிட்டு யாருடனும் பேசவும் முடியாமல் சை ...என்ன வாழ்க்கை இது என்று நினைத்துக்கொள்வான். முப்பத்து ஏழு வயதில் அவனுக்கான தேவைகள் பத்து வருஷங்களுக்கு முன்னால் இருந்தது போல இல்லை.நிறையவே வேறுபாடுகளை அவன் உணர்ந்தான்.தனக்கு மட்டும் ஏன் இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கை என்று தோன்றுவதும் உண்டு.

தனக்கென்று யாருமே இல்லை என்று தோன்றும் தருணங்களில் தனது தம்பி தங்கைகளை அழைத்து வந்து பேசிக்கொண்டிருப்பான்.மாலதிக்கு பிள்ளை இங்கே அருகே இருந்தும் போய் பார்க்கமுடியாத நிலை.இன்னமும் மாலதியை ரங்கராஜன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தனது பிள்ளைகளையாவது அருகே சேர்த்துக்கொள்கிறானே என்பதுடன் அவள் சந்தோசம் கொள்கிறாள்.

தனது தொழில் பங்குதாரர்களுடன் பேசி,இந்தியாவில் அவர்களது நிறுவன கிளையை பரப்புவது பற்றி முடிவு செய்தான் ரங்கராஜன். முதலில் அவர்களுக்கு இதில் விருப்பமே இல்லை. சிங்கப்பூர், மலேசியா , சைனா என்றெல்லாம் யோசித்தவர்கள் முடிவில் ரங்கராஜனுக்கு பச்சைக்கொடி கட்டவேண்டியது ஆனது. அதற்க்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கியது அந்நிறுவனம். இப்போது அங்கே அமெரிக்காவில் ஒன்பது முக்கிய மாகாணங்களில் அவர்களது நிறுவனம் உண்டு. அங்கேயே ஐம்பதினாயிரம்பேர் வேலை செய்கிறார்கள். மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது அவனது "ஸ்லோ லேர்னர்ஸ் " நிறுவனம். ஆம்,அவனது நிறுவனத்தின் பெயர் அதுதான்.

இந்தியாவில் நிறுவுவதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மேலே கொஞ்சம்,கீழே கொஞ்சம் என்று பல லட்சங்கள் அனாயசமாக பறந்தது. எப்படியோ அவர்களது நிறுவனத்தை முதலில் பெங்களூருவில் ஆரம்பித்து ,பின்னே ஹைதராபாத்திலும் ,குருகிராமிலும் நிறுவினார்கள். ரங்கனுக்கு தங்களது கிளையை சென்னையில் நிறுவ ஆசை.ஏனோ இன்னமும் அதற்கான நேரம் வரவில்லை.

இந்தியாவில் நிறுவனத்தை ஆரம்பித்த பிறகு ரங்கராஜனுக்கு நிரந்தரமாக இந்தியா வந்துவிடும் ஆசை அதிகமானது. ஆரம்பத்தில் ஆட்சேபித்த நண்பர்கள் இந்திய நிறுவனங்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ரங்கராஜனிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தது.

"இனி ,கொஞ்சம் வருஷம் சீரங்கத்துலதான்டா ரங்கா " என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உற்சாகமாக புறப்பட்டான் ரங்கராஜன்.மீண்டும் ரங்கனுக்கு சீரங்கம் நோக்கி ஒரு பயணம்.

தான் மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிடுவதை பற்றி ரங்கன் தனது அகத்தில் யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. ஹாரியிடமும் அவரது குடும்பத்தாரிடமும் விடை பெற்றுக்கொண்டு, ருக்மிணியின் வீட்டிலும் சொல்லிவிட்டு வீட்டின் சாவியையும் அவர்களிடமே கொடுத்துவிட்டு கிளம்பினான். இனி அவன் பங்களாவில் அனிருத்தும் அவன் மனைவியும் குடியிருக்க வருகிறார்கள்.

**************************************************************************

விடிகாலையில் அவர்கள் வீடு இருக்கும் சித்திர வீதிக்குள் நுழைந்தவனுக்கு ஏனோ மனம் படபடப்பாகவே இருந்தது. சந்தோஷமா ,தூக்கமா என்று பிரித்துச்சொல்ல முடியவில்லை.ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்றது அவன் மனம். தன்னை நிதானமாகிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான் ரங்கராஜன்.

வீட்டுவாசலில் பெரிய அளவில் படிக்கோலம் போடப்பட்டிருந்தது. கவனித்தால் வாழைமரம் கட்டியிருந்தார்கள். என்னவென்று புரியாமல் உள்நுழைந்தான் ரங்கராஜன். அவனுக்கு எல்லாமே புதியதாக இருந்தது.

உள்நுழைந்தவனை வேகமாக உள்ளே அவனது அறைக்கு இழுத்துக்கொண்டு சென்ற திருவேங்கடம் தாத்தா,"நீ ஒண்ணுமே பேசப்படாது.இந்த பட்டு வேஷ்டியை சீக்கிரமா கட்டிண்டு வா.வாத்தியார் வெயிட் பண்றார்."என்றுவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார். என்னவென்று புரியாமலே,அவசரமாக சவரம் செய்துகொண்டு தலைக்கு குளித்தவன்,தாத்தா சொல்படிக்கு பட்டுவேஷ்டி அங்கவஸ்திரம் சகிதமாக வந்தான்.

அவனுக்கான மனை அங்கே போடப்பட்டிருந்தது.அருகே இன்னொரு மனையும்.சுந்தரம் தனது மகனை அழைத்துக்கொண்டு போய் மனையில் உட்காரவைத்தார்.அப்போதுதான் அவன் தன்னை சுற்றிப் பார்த்தான். அங்கே அவனால் நம்பமுடியாத நபர்கள்.

"அவனது அம்மா மாலதி தனது கணவர் ஹாரி மற்றும் குழந்தைகளுடன் வந்திருக்க, அவன் கனவிலும் காணாத ருக்மிணியும் அவளது மொத்த குடும்பமும் அங்கே சுற்றிலும் நின்று கொண்டிருந்தது. அழகிய பச்சை பட்டில் ருக்மிணி அவன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

வாத்தியார் கூரை புடவையை ஆசீர்வாதம் செய்து கொடுக்க மாலதி அதைப் பெற்றுக்கொண்டு மணப்பெண்ணிடம் கொடுத்தாள். பத்தே நிமிஷங்களில் கூரைப்புடவையில் தனது அருகே அமர்ந்திருக்கும் பதுமையை விட்டு அவன் கண்கள் அகலவே இல்லை. இவையெல்லாம் எப்படி சாத்தியமானது என்று மட்டும் அவன் மனதில் .

மந்திரங்கள் முழங்க ,அவனே திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுகளை போட்டுவிட்டான். கணம் தாங்காமல் ருக்மிணியின் கண்கள் நீரைபொழிய, அந்த உணர்வுக்கு சற்றும் குறையாத ரங்கனின் கண்ணீர் சொட்டுகள் அவள் தலையில் விழுந்தது.

முதலிரவு அறையில் இருவரும் இத்தனை வருஷங்களுக்கு சேர்த்து வைத்து பேசினார்கள். "நீங்க வளர்ந்த விதம்,உங்க கஷ்டங்கள் ,எண்ணங்கள் எல்லாத்தையும் பத்தி தாத்தா,பாட்டி சுந்தரம் அப்பா எல்லாரும் சொன்னா. இனிமே நீங்க எங்கயோ நானும் அங்கே தான். உங்களுக்கு பிரச்சனை வந்தா கூடவே நிப்பேன்.விட்டுட்டு போகமாட்டேன்.நீங்க நம்பணும் .உங்கள விட்டு போய்ட்டேன்னு நினைச்சேள் இல்லியா.. எஏழு வருஷமா உங்களை மட்டுமே சுத்தறேன்னு உங்களுக்கு தெரியுமா” என்றவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ரங்கரராஜன்.

நல்ல குடும்ப வாழ்வின் அடிப்படை பரஸபர நம்பிக்கை, காதல், விட்டுக்கொடுக்கும் தன்மை. இது ரங்கனிடம் எப்படி என்று காலம் சொல்லும். ஆனால், அவனுக்காக மட்டுமே இந்தியாவுக்கு நிறந்தரமாக வரத் துணிந்த நம் ருக்மணி தனிப்பட்டவள் என்பதில் சந்தேகம் இல்லை.​

ருக்மிணிக்கு அமெரிக்கா வேண்டாம். அதிக பணம் வேண்டாம்.பிரம்மாண்ட வாழ்க்கை வேண்டாம். ரங்கன்,அவனது காதல், அவனுடன் நீண்ட வாழ்வு இது போதும் என்று வந்துவிட்டாள். இந்த பாசமும்,பிணைப்பும் அணைப்பும் தான் இவ்வளவு வருஷங்களாக அவன் ஏங்கியது. இனி அவர்கள் வாழ்க்கையில் என்றும் சந்தோசம் அடைய திருவரங்கநாதனிடம் பிரார்த்தனைகள்.

சுபம்.

 
Last edited:

Author: Paithani
Article Title: அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom