• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Mr. மாமியார் 7

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
15
Mr. மாமியார் 7


ங்காள விரிகுடா தன் வருடாந்தரப் புயல் பண்டிகையை இண்டாவது முறையாக கொண்டாடத் தொடங்கி இருக்க, வடமேற்குப் பருவ மழையும் தீவிரமடைந்ததில் யாரோ ஃப்ரிட்ஜில் தூக்கி வைத்தது போல் ஜில்லென்றிருந்தது சென்னை.

ஐப்பசியின் அடாத அடை மழையில் ஆதவன் விடுப்பில் சென்றிருக்க, அதிகாலை ஆறு(!) மணிக்கே தலைக்குக் குளித்து, ஸ்வாமி பிறையில் விளக்கேற்றி, வீடெங்கும் ஊதுபத்தி மணக்க, கிச்சனில் காபி டிகாக்ஷனை இறக்கிக் கொண்டிருந்தான் வாமனமூர்த்தி.

பக்கத்து ஸ்டவ்வில் பிரஷர் குக்கரில் பருப்பு வெந்தது. சிறிய கிண்ணத்தில் புளி ஊறியது. தேங்காயை உடைத்து கீறி, பத்தை போட்டு கண்ணாடி பாட்டிலில் இட்டு ஃப்ரிட்ஜில் வைத்த வாமனன்,
அடுப்பை அணைத்து, தனக்கான காஃபியை கலந்து கொண்டு, பெட்ரூமுக்குள் சென்று மேஜையில் இருந்த கணினியைத் திறந்து கொண்டான்.

இருளும் மழையும் ஊதக்காற்றும் கூடவே பேயாகச் சுற்றிய மின்விசிறியும் உடலை சிலிர்க்கச் செய்ய, எதிரே இருந்த படுக்கையும், அதில் கோதடிக்குள் அமிழ்ந்து சுகமான உறக்கத்தில் இருந்த மனைவி லலிதாவும் வா, வா என்று அழைக்க, அந்தக் கதகதப்பில் தொலையும் ஆசைக்கு குறுக்கே வந்தது அலைபேசி அழைப்பு.

“குட் மார்னிங், சொல்லும்மா”

“எழுந்தாச்சா?”

“ம்”

“நேத்து லேட் நைட்ல பவியும் ஸ்ரீராமும் வந்தாங்க. அங்க பவர் கட்டாம். மோட்டர் ரூமுக்குள்ள தண்ணி போனதால தண்ணியும் வரலையாம்”

“பவி எழுந்தாச்சா, ஒன்னும் பிரச்சனை இல்லையே, நான் வரவா?”

“ரெண்டு பேரும் தூங்கறாங்க. இன்னைக்கு ஃபேக்டரியும் திறக்க முடியாது. பிரேக் ஃபாஸ்ட்டுக்கு இங்கேயே வாங்க”


“ஓகே, சாம்பாரோட வரோம்”

“...”

“...ம்மா.”

“சரி, வாங்க”

“எய்ட் தர்ட்டி, ஷார்ப்” என்று தன் வேலையில் ஆழ்ந்தவனைக் கலைத்தது, ஐந்து நிமிடத்திற்கொரு முறை ‘டோன்ட் மிஸ் த சான்ஸ்’ என்ற லலிதாவின் மொபைல்.

அலாரம் அடிப்பதும், அவள் அணைப்பதுமாக தூக்கத்தை தொடர்ந்தவள், அடுத்த முறை அமர்த்த கை நீட்ட, செல்லைக் காணோம். மீண்டும் இடைவிடாது ஒலித்த லுங்கி டான்ஸ் ஜபத்தில் ஒருவழியாக எழுந்தாள்.

கணவனின் கையில் இருந்த காஃபி கோப்பையை முறைத்தவாறு கிச்சனுக்குள் சென்று அங்கிருந்த தயாரிப்புகளை பார்த்த லலிதாவின் மனம், மூளை, முகம், வாய் என எல்லாம் ஒருமித்து ‘திரும்பவுமா! இவன…. கடவுளே, எனக்கு பையன் வேணும். ஆனா, சத்தியமா இவனை மாதிரி வேண்டாம்!’ என்றதை சற்று உரக்கவே சொல்லிவிட்டாள் போல.

“எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்”

காதருகில் கேட்ட வாமனமூர்த்தியின் குரலில் பதறித் திரும்ப, தன்னிடமே முட்டிக்கொண்டு திருதிருத்தவளை வளைத்துப் பிடித்தான்.

“???”

“நான் வேணாம், என் பையன் மட்டும் வேணுமோ?”

“...”

“சொல்லுங்க அங்காள பரமேஸ்வரி மேடம்” - உலுக்கினான்.

“ஆ… நீங்க வேணாம்னு நான் எப்ப சொன்னேன்?”

“இப்ப வேணுமா?”

“இப்ப எனக்கு காஃபி வேணும்”

“நான் வேணும்னு சொல்லு, தரேன்”

“ஏன் இப்டி?” என்றவள், வாமனனின் துளைக்கும் பார்வையில், தாழ்ந்த ஸ்ருதியில் “நீங்க வேணும்” என்றவளின் முகம் சிவந்து விட, அவள் இதழில் அழுத்தமாக உரசி,

“குட் கேர்ல்” என்று விலகி, பாலை சூடு செய்து காஃபியை கலந்தான்.


“பிரேக்ஃபாஸ்ட் அங்க. உன் நாத்தனார் குடும்பத்தோட வந்திருக்காளாம். சாம்பார் செஞ்சு எடுத்துட்டு போகணும்”

‘ஏழு பேருக்கு சாம்பார்னா, எத்தனை பருப்பு, புளி, காய்
…, சரியா வருமா. தீனாவா, ஹெப்பாரா… என்னைக் கேட்காம இவனை யாரு முடிவு செய்யச் சொன்னது?’

‘வேற யாரு, நீதான்’ - என டார்ட்டாய்ஸுடன் காத்திருந்தது மை. வா.


தனிக்குடித்தனம் வந்த நான்வது நாள். வாமனமூர்த்தி டிகாக்ஷன் போட்டு, பாலை காய்ச்சி, இளங்காலை நேரத்தை மனைவியுடன் செலவிடக் காத்திருந்தான். எழுந்து வந்தவளிடம்,

“குட் ஆஃப்டர்நூன் லல்லூஸ், ஏழு மணில இருந்து காஃபி குடிக்காம உனக்காக வெய்ட் பண்றேன்”

தனது வழக்கமான நக்கலுடன் அவன் மதிய வணக்கம் வைத்ததில் எரிச்சலான லலிதா மிகத் தாமதமாக (10.30 மணி!), (அதுவும் அவளது அலுவலகத்திலிருந்து பதினோரு மணிக்கு க்ளையன்ட் கால் என்று அழைப்பு வந்து கணவன் எழுப்பியதால்) எழுந்ததோடன்றி, வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல்,

“உங்களுக்கு வேணும்னா நீங்களே காஃபி கலந்து குடிக்க வேண்டியதுதானே, நானா வெய்ட் பண்ண சொன்னேன்?”

“அதுசரி, நீ என்ன எனக்கு முன்னால எழுந்து காஃபி போட்டு என்னை எழுப்பவா போற?”

“எக்ஸ்க்யூஸ் மீ, டோன்ட் ஈவன் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் .மீ என்னால அதெல்லாம் முடியாது. நான் என்ன சும்மாவா இருக்கேன்? அப்படி யாராவது போட்டு குடுத்துதான் காஃபி குடிக்கணும்னா உங்கம்மா…”

வாமனமூர்த்தியின் கூர்ந்த பார்வையில் லலிதாவின் பேச்சு தானாகவே நின்றது.

“போட்டு வெச்ச காஃபிய சேர்ந்து குடிக்கலாமேன்னு வெய்ட் பண்ணினா இஷ்டத்துக்கு பேசற? எங்கம்மாவை விட நீ ஒன்னும் பிஸி கிடையாது. எத்தனை வேலை இருந்தாலும் எங்கப்பாக்கு அவங்கதான் காஃபி குடுக்கறாங்க. அவங்களை பத்தி பேசற வேலை வேண்டாம். செஞ்சு விட்ருவேன்” என கையிலிருந்த தினசரியை விட்டெறிந்தவன், செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேறி விட்டான்.

சில மணி நேரங்கள் நீடித்த வாமனனின் கோபம் குறைந்து இயல்பாகி விட்டாலும்
அதன்பின்னான நாள்களில் காஃபி, டீ என எதற்கும் அவன் லலிதாவைக் கேட்கவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. மனைவி விழித்திருந்தால் தன்னோடு அவளுக்கும் சேர்த்தே கலந்து வைப்பான்.

அவள் போடும் காபி, டீயை அவன் ஏற்பதில்லை என்பதே லலிதாவிற்கு மூன்று நாள்களுக்குப் பின்தான் புரிந்தது. அதில் ‘போயேன், எனக்கென்ன’ என்ற அலட்சியத்துடன் வீராய்ப்பாகத் திரிந்தாள்,

வாமனமூர்த்தியும் இந்த ஒரு விஷயத்தைத் தவிர, நக்கல், நையாண்டி, சீண்டல் என தனிமை கொடுத்த சுதந்திரத்தை வீண் செய்யாது மனைவியுடன் கூடிக் களிப்பது உள்பட தன் இயல்பு மாறாது இருந்ததாலோ என்னவோ, அவனது மனநிலையை லலிதாவால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை.

இதைத்தவிர, இருவருக்கிடையில் வேறு பிரசினை எதுவும் எழவில்லை. பத்து நாள்களுக்கு மேல் சென்றிருக்கும். அன்று லலிதா முதலில் வந்துவிட, சிறிது நேரத்திற்கெல்லாம் வந்த வாமனன், வரும்போதே கண்ணும் முகமும் ஜிவுஜிவுவென சிவந்து, தொண்டை கரகரக்கத் தும்மியபடி வந்தான்.

“என்னாச்சு?”

“சளி, தலைவலி’ என்றவனுக்கு தைலத்தை எடுத்துத் தந்தவள், எங்கே, சொல்லிவிட்டு செய்தால் மறுப்பானோ என்ற எண்ணத்திலும், ‘இந்த மாதிரி நேரத்துல வேண்டாம்னு சொல்ல மாட்டான்’ என்ற நம்பிக்கையிலும் சளிக்கு இதமாக அவளுக்குக் கை வந்த ஒரே கலையான இஞ்சியைத் தட்டிப் போட்டு டீ போடச் சென்றாள்.

தேநீருடன் வெளியில் வர, வாமனனைக் காணாது திகைத்தாள். மொபைலில் அழைக்க, அது கட்டிலின் மேலே கிடந்ததை வைத்து, அவன் எதிர் வீட்டுக்குச் சென்றிருப்பான் என்பது உறுதியானது.

’அவசரம்னா உங்கம்மாவை கேளு’ என்றவளுக்கு இருமலும் சளியும் வாட்டும் அவசியமான நேரத்தில் கூட, கணவன் தன்னிடம் கேட்காது அவனது தாயை நாடிச் சென்றதில், அவளது ஈகோ பலமாக அடி வாங்கியது.

அதுவரை லலிதா வெளிக்காட்டிய அலட்சியம் நிறமிழந்து போய் அதனடியில் இருந்த குற்றவுணர்வும் நிராகரிப்பின் வலியும் மேலெழுந்ததில் மனம் சோர்ந்தாள்.

கதவை திறந்து உள்ளே வந்து, சோஃபாவில் சுருண்டிருந்த மனைவியையும் டீ டேபிளில் இருந்த இரண்டு கோப்பை தேரீரையும் பார்த்த வாமனமூர்த்தியும் அவன் எங்கே சென்றான் என சொல்லவும் இல்லை, லலிதா கேட்கவும் இல்லை.

கணவனை நெருங்குவதற்குத் தடையாக இருப்பது தானும் தனது போக்கும், எண்ண ஓட்டமும் என்பது புரியாது, லலிதா மாமியார் சீதளாவை தனக்குப் போட்டியாக எண்ணத் தொடங்கினாள்.

‘வாமனனுக்குப் பிடிக்கும்’ என்ற பெயரில் கிட்டத்தட்ட தினமும் குறைந்தது ஏதேனும் ஒரு ஐட்டமாவது அங்கிருந்து வந்துவிடும்.

இதே யோசனையில் சுற்றியவள் , ஸ்வேதாவே இரண்டு மூன்று முறை துருவிக் கேட்டும் காஃபி கதையை சொல்ல ஏனோ விரும்பவில்லை.

தன்னைச் சேர்ந்தவர்களுடன் இணங்கிச் செல்வதுதான் லலிதாவின் இயற்கையான சுபாவம். பிறந்த வீட்டில் படிப்பிலும் பிறகு வேலையிலும் பிஸியாக இருந்தவளை அவளது பெற்றோர் அதிகம் வேலை ஏவியதில்லை. லலிதா ஒரே பெண்ணான காரணத்தால், அதற்கான அவசியமும் நேரவில்லை. அப்படி சொன்ன வேலையை செய்யாதவளும் இல்லை.

ஆனால், தான் கண்டது, கேட்டது, படித்தது என பலவும் சேர, திருமணம், கணவன், புகுந்த வீட்டு உறவுகள் குறித்தான சில முன் தீர்மானங்களோடு இருந்தவள், வாழ்வின் நிதர்ஸனங்களை எதிர்கொள்கையில் நேராக இருந்தவற்றையும் முரணாக எண்ணிக் குழப்பிக் கொண்டாள்.

சிந்தனையும் செயலும் வெவ்வேறாகக் கொண்டிருந்த லலிதா, தனது சிந்தனையில் / கற்பனையில் தன்னை ஒரு முற்போக்கான பெண்ணியவாதியாக எண்ணியவள், நடைமுறையில் கணவன், மாமியார், மாமனார் என எல்லோரிடமும் பெரும்பாலும் ஒத்துச் சென்றாள். அப்படி ஒத்துச் செல்வது, லலிதாவிற்கு (குறிப்பாக கணவன்) பல சமயங்களில் பெண் அடிமைத்தனமாகத் தோன்றியது.

இன்னும் எளிதாகச் சொன்னால், நம் எல்லோருக்குள்ளுமே இந்த முரண் இருக்கிறது.
சாம்பிராணி புகையின் நடுவே தலையில் ஈரத் துண்டோடு கொல்லைத் துளசியைச் சுற்றி, கணவனுக்கு குட்மார்னிங் சொல்லி, கொட்டில் பசுவுக்கு தீனிவைத்து, பம்பரமாகச் சுற்றி, எல்லோரது தேவைக்கும் ஈடுகொடுத்து புகுந்த வீட்டின் அச்சாணியாய் இருக்கும் ஆசையும்….

‘நீயும் படிச்சிருக்க, நானும் படிச்சிருக்கேன். நாம ரெண்டு பேருமே சம்பாதிக்கறோம். ரெண்டு பேரும் ஈக்வல், ஈக்வல். வீட்டு வேலை எல்லாத்தையும் நீ ஷேர் பண்ணிக்கனும். நான் என்ன செஞ்சாலும், செய்யலைன்னாலும் நீ கேள்வி கேட்கக் கூடாது. மனசிருந்தா சமைப்பேன், இல்லையா, இருக்கவே இருக்கு ஸ்விக்கி, ஸோமேட்டோ’

‘ நீ என் கணவன், உன்னை கேள்வி கேட்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நான் உன்னோட மனைவிதான்னாலும், என்னோட தனிப்பட்ட சுதந்திரத்துல, முடிவுகள்ல என் அனுமதி இல்லாம நீ தலையிட முடியாது’

‘இருபத்தாறு வருஷமா ஒரு வீட்டோட, குடும்பத்தோட பழக்க வழக்கங்கள்ல தொடங்கி, சாப்பாடு, தூக்கம்னு என் தினசரி நடைமுறையைக் கூட நான் மட்டும் ஏன் உங்களுக்காக மாத்திக்கணும், நீங்க மாறினாத்தான் என்ன?’

என்பது போன்ற கேள்விகளும் எல்லா பெண்களிடமும் உண்டுதானே?


அனுசரித்து நடக்கும் தன்மையும் அதற்கு எதிரான மனப்போக்கும் என (Cognitive dissonance) லலிதாவின் நடத்தை வேறாகவும் நம்பிக்கை வேறாகவும் இருந்தது.

புகுந்த வீட்டினரிடம் நற்பெயரும் நன்மதிப்பும் பெற விரும்பிய அதே நேரத்தில், அவள் தன் உரிமையாகக் கருதிய அவளுடைய தனிப்பட்ட சுகங்களை, நேரத்தை, உறக்கத்தை இழக்க விரும்பவில்லை.

கூழுக்கும் மீசைக்கும் மட்டுமன்றி, வாழைப்பழத்தை உரிக்காமலே உண்ணவும் ஆசைப்பட்டாள்.

இதில் அலுவலகத்தில் இவளுக்கு முன்னே திருமணமான நட்புகளின் அனுபவ பாடம் வேறு!

“எட்டரை மணிக்கு எழுந்தா, எங்க மாமியார், நான் என்னவோ பெரிய கொலை குத்தம் செஞ்ச மாதிரி பேசறாங்கடீ. ஒரு ஈடு இட்லியும் சட்னியும் வைக்கறதுல இவங்களுக்கு என்ன சிரமம்னு சொல்லு?” என்ற தீப்தி.

“நீயே சொல்லு, நான் ப்ரெக்னென்ட்டா இருக்கேன், அவங்க வீட்டு வாரிசை சுமந்துக்கிட்டு இருக்கேன்னு கூட பாக்காம, கர்ப்பமா இருக்கறது ஒன்னும் வியாதி இல்ல, நீதான் முதமுதல்ல புள்ளை பெத்துக்கப் போற மாதிரி…, நாட்ல ஒரு நாளைக்கு எழுபத்தஞ்சாயிரம் குழந்தைங்க பொறக்குது, போவியாங்குதுடீ என் மாமியா”


அத்தை/ மாமியார் என்று வரும்போது மட்டும் ஏனோ, ஐடியின், நகர வாழ்க்கையின், நவநாகரிகத்தின் அத்தனை பூச்சுகளும் உதிர்ந்து பல்லிளிக்கத் தொடங்கிவிடுகிறது.

டீம் லீடர் பூர்ணிமாவின் எழுபது வயது மாமியார் இறந்துவிட, போன வருடம் திருமணமான மணிமேகலை “என் மாமியாருக்கு இப்பதான்டீ அம்பத்தஞ்சாகுது” என்றதில் ஆஃபீஸே சிரிப்பில் அதிர்ந்தது.

லலிதா இருவருக்குமான இடைவெளியை நிரப்பும் வழி தெரியாது திகைக்க, வாமனன் அவன் போக்கில் இருந்தான்.

லலிதாவிற்கு திருமணமான சமயம் பவித்ராவிற்கு மசக்கை படுத்தியதால் ஹோட்டலில்தான் விருந்தளித்தனர். அதன்பிறகு இயல்பாக சிலமுறை அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும், இப்போது பவித்ராவிற்கு ஆறுமாதங்களாகி விட, அந்த வார இறுதியில் அவர்கள் வீட்டில் சினிமா பார்க்கவும், இரவு சேர்ந்து தங்கவும் கூடவே விருந்துக்கும் அழைத்தனர்.

அங்கே….

குழந்தை மருத்துவரான பவித்ராவின் வீட்டையும், அவளது சமையலையும், ஸ்ரீராமுக்கும் அவளுக்குமான புரிதலையும் கண்ட லலிதாவிற்கு தான் எதையோ மிஸ் செய்வதாகத் தோன்றியது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.

பவித்ராவிடம் சீதளாவின் சமையல், சாதுர்யம், சாமர்த்தியத்தோடு, ஸ்ரீசைலத்தின் நிதானமும் இருந்தது.

ஸ்ரீராம் ‘பவி’ என்ற மறு கணம், தன் வேலை, பேச்சு என அனைத்தையும் விட்டு அவனிடம் செல்வதைக் காண லலிதாவிற்கு வேடிக்கையாக இருந்தது.

வாமனமூர்த்தி அத்தனை கச்சிதமான தன் இரட்டை சகோதரியிடம் மட்டுமன்றி, ஸ்ரீராமிடமுமே தன்னிடம் பேசுவதைப் போல்தான் பேசுகிறான் எனப் புரிந்தது.

உணவு, பேச்சு, சினிமா என நேரம் செல்ல, உறங்க அறைக்குச் செல்லும்போது இரண்டரை மணி.

வாமனன்தான் “நீயே டாக்டர். ப்ரெக்னென்ட்டா இருக்கறவ எத்தனை நேரம் தூங்காம உக்கார்ந்தே இருப்ப?” என அதட்டி படத்தை பாதியில் அணைத்து விட்டான்.

அறைக்குள் வந்தபின் “ரொம்ப யோசிக்காதடீ, மூளை உருகிடப் போகுது“ என்றவனிடம் மொட்டையாக “ஸாரி” என்றாள்.

“இல்லையே, சன் ட்ரெஸ்”

“ஹான்…”

“நமக்கு கல்யாணமாகி இன்னைக்கு வெற்றிகரமான நூறாவது நாள்டீ. போய் இதை போட்டு வா” என ஒரு கவரை கொடுத்தான்.

அதில் இருந்தது பஞ்சமிட்டாய் ரோஸுக்கு வெகு அருகாமையில் ஆர்க்கிட் பிங்க் நிறத்தில் ஒரு சன் ட்ரெஸ்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

******************

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வியாக முதலில் வருவது உணவுப் பிரச்சனையே.

‘உயிர் வாழத்தான் சாப்பாடு’

‘என்ன, ஒரு குழம்பு, ஒரு காய், போதாதா?’

‘வேளா வேளைக்கு விதவிதமா சாப்பிடணும்னு என்ன கட்டாயம், அப்படி என்ன நாக்கு கேக்கறேன்?’

-இது போன்ற தத்துப் பித்துவங்களைப் பேசிக்கொண்டே ரீல்ஸிலும் ஷார்ட்ஸிலும் வரும் ஒரு சமையல் வீடியோவை கூட விடாது பார்ப்பவர் பலர்.

தெரிந்த தயிர்சாதத்துக்கே ஒரு முறை ரெசிபி புத்தகம் அல்லது வீடியோவை பார்த்து ரிவைஸ் செய்யாதவர்கள் வெகு சொல்பம்.

சமையலறை என்பது வீட்டின் பவர் ஹவுஸ். அங்கு இரு பெண்கள் இருந்தால்தான் போட்டி என்பது இல்லை. அங்கு புழங்குபவர் யாராக இருப்பினும், ஒருவித ஆளுமையும் அதிகாரமும் தானே வந்துவிடும்.

மேல் வேலைகளுக்கு ஆள் இருக்க, காலை உணவை நேரத்துக்கு உண்டு பழகிய வாமனமூர்த்தி சில நாட்கள் மனைவி கண்விழிக்கும் முன்பே வேலை இருக்கிறதென வெளியில் சென்று விடுவான்.

லலிதாவாகவே ஐந்து மனமும் குளிர்ந்து, அலார சத்தம் காதில் கேட்டு எழுந்து, உடனடியாக கிச்சனுக்குள் செல்லும் நன்னாள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாததில், வாமனமூர்த்தி காலை உணவை தினமும் தானே தயாரிக்கத் தொடங்கினான்.

‘விட்டது பிரச்சனை’ என வாரம் முழுவதும் கணவன் சமைத்து போட்டதை சந்தோஷமாக சாப்பிட்டு ஹாயாக இருந்தவள், ரவா, சேமியா, அவல், பிரட் என வரிசை கட்டி வந்த உப்புமாக்களைப் பார்த்ததும் “இதென்ன உப்புமா வாரமா?” என்று பொங்கிய
லலிதா, தனக்குச் சிறிதும் பிடிக்காத சேமியா உப்புமாவை, தொடாமலே அலுவலகத்திற்கு சென்று விட்டாள். சரியாக மதியம் அவள் சாப்பிடப் போகும் நேரத்திற்கு ரேபிடோவில் லஞ்ச் வந்தது.


ஸ்வேதா தொடங்கி டீம் லீடர் வரை ‘புருஷோத்தமன் வாமனமூர்த்தி ஸ்வாமிகி ஜெய்!’ என கோஷம் போடாத குறையாக புகழ்ந்து தள்ள…

காலையில் சாப்பிடாமல் வந்த தன் பசியறிந்து, தன்னை சமாதானம் செய்ய தக்க சமயத்தில் உணவு அனுப்பிய கணவன் மீது ஆர்ட்டீஸன் ஊற்றாகப் பொங்கிய உணர்வு (காதல்?!), அவன் அனுப்பிய டப்பாக்களை திறந்ததும் கர்நாடகம் கைவிரித்த காவிரியாய் வறண்டது.

ஆம், வாமனன் அனுப்பி இருந்தது அதே சேமியா உப்புமாவும் தொட்டுக்கொள்ள டொமேடோ கெட்ச் அப்பும்தான்!


ஸ்வதாவும் கதிரவனும் எதிரே அமர்ந்திருக்க, லலிதாவிற்கு கொட்ட முடியாது முழுங்க வேண்டிய கட்டாயம்!

இதில் ஸ்வேதா வேறு ‘உப்புமா சூப்பர்டீ லலிதா. வெங்காயத்தை தனியா வதக்கி மேலாக தூவி இருக்கறது செம்ம டேஸ்ட் தருது’ என,

கதிரவன் ‘லலிதா,. ப்ரோக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லு. சேமியா பிரியாணி வேற லெவல் போ” என இருவரும் மாறி மாறி வாமனனுக்கு ‘பீமா’ விருதை வாரி வழங்கினர்.

‘ஏன்’ என்றதற்கு வாமனமூர்த்தி,

“வேலை மெனக்கெட்டு ஒருத்தன் செஞ்சு வெச்சா, டேஸ்ட் கூட பார்க்காம அப்டி என்ன அலட்சியம் உனக்கு, அதான் அனுப்பி வெச்சேன்”

“எனக்கு உப்புமாவே புடிக்காது. அதிலயும் சேமியா உப்புமா… காஷ்!” - லலிதா ஒவ்வாமை தெறிக்க உடலை சிலிர்த்துக் கொண்டாள்.

“ காலைல எழுந்து உனக்கு என்ன புடிக்குமோ செய்யறதை யார் வேண்டாம்னா? ஆலு பராட்டா, சேவை, இடியாப்பம், பணியாரம்னு நீ செஞ்சு குடுத்தா நான் மட்டும் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்?”

“...”

“ஹலோ மிஸஸ் வாமனமூர்த்தி, என்ன ஒரு ரியாக்ஷனையும் காணும்?”

தனக்கு முன்னே சொடக்கிட்டு கையசைத்தவனின் செயல் லலிதாவின் ‘அகத்’தையும் ஆத்திரத்தையும் தூண்ட,

“நாளைல இருந்து நானே செய்யறேன்” என்றாள் ரோஷத்துடன்.

வாமனன் சிம்பிளாக “ஓகே” என்றான்.

கன ஜோராக பொங்கல் கொத்சுவில் ஆரம்பித்த நாஷ்தா புயல் , கடை மாவில் இட்லி, தோசை, மேகி என நிலை கொண்டு, ஐந்தாம் நாள் காலை போஹாவில் கரையைக் கடந்தது.

“இது என்ன?” - வாமனன்.

“போஹா” - லலிதா.

“தமிழ்ல?”

“அவல் உப்புமா?”

“கம் அகைய்ன்”

“...”

“அவல்ல கடலையைப் போட்டு கிண்டிட்டு நீ போஹான்னாலும் ஆஹான்னாலும் அது பேர் உப்புமாதான், வெளங்குதா?”

மனைவியானவள் தன் தவறை
ஒத்துக்கொள்ளல் மஹாபாவம் என்ற மரபு குருதியில் ஓடியதில், லலிதா அநிச்சை செயலாக பிரச்சனையை திசை திருப்பினாள்.

“நான் மாத்திரம் என்ன சும்மாவா இருக்கேன், அடுத்த வாரம் ப்ராஜக்ட் டெவிவரி. லஞ்ச், டின்னர் மாதிரி இதையும் யாருக்கு முடியுதோ, யாரு ஃப்ரீயா இருக்கமோ அவங்க செய்யலாம். நீங்க வேலையை ஷேர் பண்ணிக்கலைன்னா, இனிமேல் எனக்கு வீட்ல பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச் ரெண்டுமே வேணாம். நான் ஆஃபீஸ் கேன்டீன்லயே சாப்ட்டுக்கறேன்”

“உன் இஷ்டம்”

ஒர்க் ஃப்ரம் ஹோம் வசதி இருந்தும் சாப்பிடுவதற்காகவே அலுவலகம் சென்றாள். ப்ராஜக்ட் டெலிவரி சமயத்தில் இரவு புறப்பட நேரமானதில், ஒரிரு நாட்கள் இரவு உணவும் அலுவலகத்திலேயே. தொடர்ந்து பர்கர், பிரியாணி, பீட்ஸா, சான்ட்விச் என உண்டதில் அசிடிட்டி, வாயு, வயிற்றுவலி என பக்கவிளைவுகள் வேறு படுத்தியது.

அந்த நாள்களில், லலிதாவிடம் வாமனன் எதை சமைத்தான், என்ன சாப்பிட்டான், உண்டானா இல்லையா போன்ற கேள்விகள் கூட இல்லை.

இத்தனைக்கும் இரவில் ‘இன்னிக்கு நாள் எப்படி போச்சு, ப்ராஜெக்ட் டெலிவரி முடிஞ்சுதா, அடுத்தது என்ன ப்ராஜெக்ட், லஞ்ச்ல என்ன சாப்பிட்ட?’ என வாமனன் விடாது விசாரிப்பான்.

லலிதாவிற்கு அது போன்ற கேள்விகளை அவனிடம் கேட்கக் கூடாது என்பதில்லை, கேட்கும் எண்ணமே எழவில்லை என்பதே நிஜம்.

அந்த வார இறுதியுடன் ப்ராஜக்ட் டெலிவரி முடிந்துவிட, அடுத்த ப்ராஜக்ட் வரும் வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் என குஷியாக வீடு திரும்பியவளுக்கு சனிக்கிழமை காலை எழும்போதே பசிக்க, அப்போதுதான் தான் கேன்டீனில் சாப்பிடுவதே நினைவு வந்தது.

தயாராகி வெளியில் வந்தவள் கண்டதெல்லாம் அதிகாலை மூன்று மணிவரை லல்லு, ஜில்லு என்றவன், மனைவி என்றொரு ஜீவன் இருப்பதைப் பற்றிக் கவலையே படாது பூரி, சோளேவை ரசித்து, ருசித்துக்கொண்டிருந்த வாமனமூர்த்தியைத்தான்.

பூரியா, ரோஷமா என்ற போட்டியில் பூரி ஜெயிக்க, அருகில் சென்று அமர்ந்தவள், ஸ்வாதீனத்தை வரவழைத்துக் கொண்டு அவனது தட்டிலிருந்தே ஒரு பூரியை எடுத்து மடித்து ஸ்பூன் போல் செய்து, அதில் சோளேவை நிரப்பி, ஒரு வாய் கடித்தவளுக்கும் சொர்க்கத்திற்கும் இடையே இரண்டு விரற்கடைதான்.


அனுபவித்து உண்ட லலிதா “யம்மி”

“இருக்காதா, அது என் மம்மி செஞ்சது”

“...”

“உன் கேன்டீன் சாப்பாடு என்னாச்சு?”

அவள் உண்ணும் வரை இயல்பாக இருந்தவனின் காத்திருந்த கேள்வியில் என்னவோ போலாக, சட்டென எழுந்தவள் “வீக் என்ட் ஆஃபீஸ் கிடையாது. அதோட, இன்னும் கொஞ்ச நாள் ஒர்க் ஃப்ரம் ஹோம்தான்”

“ம்…”

“ஸாரி”

“எதுக்கு?”

“... உங்களைக் கேக்காம உங்க தட்டுல இருந்து சாப்ட்ட…”

“புல் ஷிட்… பைத்தியமாடீ நீ?” வாமனமூர்த்தி கிட்டத்தட்ட குரைத்தான்.

“...”

“இருக்கறது நாம ரெண்டு பேரு. நான் சொல்றது புடிக்கலைன்னா கேள்வி கேளு, சண்டை போடு, சட்டையைப் புடி. ப்ராக்டிகலா உன்னால இதுதான் முடியும்னு ஒத்துக்கோ. முடியறதை செய். அதைவிட்டு ஆட்டையைக் கலைச்சிட்டு புடிவாதமா வெளில சாப்பிட்டா என்ன அர்த்தம்?”

“...”


“நேத்து உங்கம்மா எங்கம்மாக்கு ஃபோன் செஞ்சு, லலிதா அசிடிட்டிக்கு மருந்து சாப்பிடறாளாம். அவளுக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது. நாலு நாளைக்கு ரோஸ்மில்க் குடுங்கன்னு சொல்லி இருக்காங்க”

‘ஐயோ, இது வேறயா?’

“நீ எதுவும் ஜெயில்ல இருக்கியா, உன்னை எதையும் செய்யாத, சாப்பிடாதன்னு இங்க யாராவது சொன்னாங்களா? நீ வீட்ல சாப்பிடாததை பெருமையா உங்கம்மா கிட்ட சொல்லி வெச்சதுல, எங்க வீட்ல காலங் காலைல எனக்கு பரேட் நடந்தது”

“...”

“வெளில சாப்பிடறேன், வயிறு சரியில்லைன்னு சொன்னவ, அது எதனாலன்னும் சொல்லி இருக்க வேண்டியதுதானே?”

“...”

“இல்ல, தெரியாமதான் கேக்கறேன், எங்கிட்ட அப்படி என்ன ஈகோ உனக்கு? நீ பார்த்து, சம்மதிச்சுதானே என்னை கல்யாணம்… ம்ப்ச்…
ஓகே, நான் வர லேட் ஆகும். நேரத்தோட ஏதாவது செஞ்சு சாப்பிடு. ஃப்ரிட்ஜ்ல ரோஸ்மில்க் கலந்து வெச்சிருக்கேன், குடி”

விருட்டென எழுந்து பைக் சாவியை எடுத்தவன், லேப்டாப் பையுடன் வெளியேறினான்.

தொட்டில் பழக்கமாக நடப்பது அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்பவள், பேச்சோடு பேச்சாக கேன்டீனில் உண்பதையும் சொல்லி விட, மகளின் ஆரோக்கியம் தொடர்பானது என்பதால், அம்மா லக்ஷ்மி நேரடி ஆக்ஷ்னில் இறங்கி விட்டாள்.

ஏறிக்கொண்டே சென்ற தனது க்ரைம் ரேட்டில் கணவனை எப்படி சமாதானம் செய்வதென்ற யோசனையிலேயே அன்றைய நாள் செல்ல, சிகரம் வைத்தது போல் மாலையில் மகளை பார்க்கவென லக்ஷ்மியும் ரங்கராஜனும் வந்தனர்.


பெரியவர்கள் மூவரும் அவர்களிடம் இயல்பாகப் பேச, மாமியார் சீதளாவின் முகம் தன்னிடம் மட்டும் இறுக்கமாக இருப்பதாக லலிதாவிற்குத் தோன்றியது.

சீதளா சம்பந்திகளுக்கு இரவு உணவை அங்கேயே தயார் செய்ய, ஏழரை மணி போல் திரும்பி வந்த வாமனமூர்த்தி
தன் முகத்தை முகத்தைப் பார்த்த மனைவியின் பக்கமே திரும்பவில்லை. ஆனால், மாமனார், மாமியாரை கார் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தான்.

படிக்கும் விளக்கைப் போட்ட வாமனன் தீவிரமாக வேலை செய்யும் பாவனையில் இருந்தவளிடமிருந்து லேப்டாப்பை எடுத்து கீழே வைத்தவன், பின்னிருந்து அணைத்து “லால்ஸ், புது சோப்பாடீ?” என வாசம் பிடிக்க, லலிதா நடப்பதறியாமல் திருதிருத்தாள்.

“இது என்னடீ திருட்டு முழி?”

“நத்திங்”

“லல்லுவா இருப்பன்னு பாத்தா, சரியான உல்லுவா (ஆந்தை/ முட்டாள்) இருக்கடீ”

லலிதா முறைத்தாள்.

“ஒரு விஷயம் புடிக்கலையா, உறுத்துதா, அதனால சண்டையா, அதுக்கான கோபமோ, வருத்தமோ, அழுகையோ கொஞ்ச நேரம் இருக்கலாம். அதை சுமந்துக்கிட்டே திரியக்கூடாது, புரியுதா?”

“ம்…”

“முட்டிக்கோ மோட்லயே இருந்தா கட்டிக்கோ, ஒட்டிக்கோவெல்லாம் என்னாறது?”

வாமனானந்தா தன் அருளுரையைத் தொடர்ந்து, சாமியார்களின் சாகச வேலையில் இறங்க, லலிதா சிறந்த சிஷ்யையானாள்.

****************

புதிய ஒப்பந்தப்படி இருவரும் சரிபாதியாக வேலைகளை பகிர்ந்து கொள்வதாக முடிவானது. விளைவு…
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: Mr. மாமியார் 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Jeeona

New member
Joined
Jan 1, 2025
Messages
7
இவங்க ரெண்டு பேரையும் என்ன ரகத்துல சேக்குறது 🤔
 

kothaisuresh

Active member
Joined
Jun 19, 2024
Messages
132
இரண்டும் ஏட்டிக்கு போட்டியா இருக்கு? இந்த லலிதா இன்னும் கொஞ்சம் பொறுப்பா இருக்கலாம்
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
19
இந்த லலிதா ஏன் இப்படி இருக்கா?🤔
வீட்ட கவனிக்கறதுக்கும், கணவனை கவனிக்கறதுக்கும் கூட தனியா டிப்ளோமா course படிக்க வச்சிருக்கணுமோ??🤔
அம்மாவும், மாமியாரும் தனி குடுத்தனுத்துக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தானா?🤔
வாமனனோட அருமை தெரியல 😍😍🤩
 

dharani

Member
Joined
Jul 6, 2024
Messages
32
அசோ வேதா மா இப்போ trend யில் இருக்க couples யை அப்பொடியே கண்ணுல பார்த்த மாதிரி இருக்கு கொஞ்சம் 90ஸ் couples யும் எட்டி பாக்குரங்க... இந்த சாம்பார் எடுத்துட்டு.போகணும்னு சொல்லும் போது தீனாவா ஹெப்பாரா னு சொல்லுறளே லலிதா என்ன அது...
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
60
இந்த லலிதா ஏன் இப்படி இருக்கா?🤔
வீட்ட கவனிக்கறதுக்கும், கணவனை கவனிக்கறதுக்கும் கூட தனியா டிப்ளோமா course படிக்க வச்சிருக்கணுமோ??🤔
அம்மாவும், மாமியாரும் தனி குடுத்தனுத்துக்கு சொன்ன அட்வைஸ் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் தானா?🤔
வாமனனோட அருமை தெரியல 😍😍🤩
படிச்சா மட்டும் புத்தி வருமா என்ன?
கணவனை காதலிக்க வரனும். அடிப்படை புரிதல் இல்லை. சீக்கிரமாக தப்பா பேசி தாமதமாக சரிசெய்ய முயற்சிக்கிறள்.
 

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
60
இந்த காலத்து இளசுகள் பலர் பச்ச சட்டைக்காரன, சிகப்பு சட்டைகாரனைதான் நம்பி வாழராங்க
 
Last edited:

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
60
லலிதா கர்ப்பமாக ஆனால் எவ்வளவு ரோஸ் மில்க் கலக்கனும்? வாமனா அதுக்கு ஒரு plan போடு
 
Top Bottom