• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 9

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 9



வேகமாக எழுந்தமர்ந்த மாறன் "வேலனா.? அவன் எதுக்கு இங்க வந்துருக்கான்.? முதல்ல அவனுக்கு நம்ம வீடு எப்படி தெரிஞ்சுச்சு.?" என்று கேட்டான்.

"அது எனக்கு தெரியலடா.. முதல்ல என்னைய தான் தேடி வந்தான்.. வந்து மாறன் சாரைப் பார்க்கணும்னு நிற்கிறார்.. என்னால என்ன பண்ண முடியும்.. சரி வான்னு கூட்டிட்டு வந்துட்டேன்" என்றவனுடன் யோசனை சூழ்ந்த முகத்துடனே வெளியில் வந்தான் மாறன்.

வீட்டிற்குள் எல்லாம் அவனை விடவில்லை. வாசலில் தான் நிற்க வைத்திருந்தான். வீட்டில் பெண் பிள்ளை ஒன்று இருக்கும்போது அந்நிய ஆடவர்களை அழைத்து வந்து நிற்க வைக்க இவன் என்ன பைத்தியமா.?

வேலை விசயமாக யார் வந்தாலும் வீட்டு வாசலோடு பேசி அனுப்பி விடுவான். ஆகாத தங்கையாக இருந்தாலும் பெண்ணின் பாதுகாப்பு மிக முக்கியம். காக்கி உடையை அணிந்தவனின் வீட்டிலிருக்கும் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை..

ஓரிரண்டு முறை அத்துமீறி இரண்டு ஆண்கள் நுழைந்து ஹேமாவிடம் சண்டையும் இட்டுகிறார்கள். அதிலிருந்து மாறனின் கடுமை இன்னும் கூடியது. அதில் தான் கொஞ்சம் பயந்து போய் வீட்டில் வம்பிழுக்க யாரும் வருவதில்லை.

மாறனைக் கண்டதும் "சார் சார் என்னைய மன்னிச்சுருங்க.. பெரிய தப்பு பண்ணிட்டேன்.. நான் வேணும்னே எதுவும் பண்ணல சார்.. என் ஆத்தா சத்தியமா தெரியாம பண்ணிட்டேன்" என்று மாறனின் காலைப் பிடித்து கதறினான்.

இவன் சொல்வதே புரியாமல் இருவரும் மாறி மாறி ஒருவரைப் பார்த்து நிற்க, வேலனின் அழுகையும் குறைந்தபாடில்லை.

"ஏய் ஏய் எந்திரி.. என்ன ஆச்சு.? நீ என்ன தப்பு பண்ணுன.? ப்ச் முதல்ல காலை விடு.. விடுனு சொல்றேன்ல.? முதல்ல எந்திரிடா.." என்று வலுக்கட்டாயமாக அவனைத் தன்னிடம் இருந்து பிரித்தெடுத்து சீறினான் மாறன்.

"சார் நான் தான் அந்த போன் பண்ணுனேன்.. என்னைய மன்னிச்சுருங்க.. நான் வேணும்னே பண்ணல.. நான் உண்மையைச் சொல்லிறேன்.. நான் எந்த தப்பும் பண்ணல.. என் மேல சந்தேகப்படாதீங்க சார்.. உண்மையா நான் எந்த தப்பும் பண்ணல.. காசி தப்பானவனு தான் நானும் நினைச்சேன்..

ஆனா அவன் அப்படியில்லைனு இப்பத்தான் எனக்கு புரிஞ்சுது சார்.. நான் வேணும்னே பண்ணல.. உண்மையா புரிஞ்சுக்காம பண்ணிட்டேன்.. என்னைய மன்னிச்சுருங்க.. நான் உண்மையைச் சொல்றேன்.." என்று சொன்னதையே திருப்பி திருப்பிக் கூறினான் அவன்.

இருவருக்கும் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றிருந்தது. முதலிலே தலைவலியுடன் இருந்த மாறனுக்கு இது இன்னும் பெரிய தலைவலியாக தான் மாறியது. சொல்ல வேண்டியதை இவன் சொல்லித் தொலைந்தால் பரவாயில்லை என்று தான் தோன்றியது.

அதே எரிச்சலில் "சொல்றதை தெளிவா சொல்லு.. இல்லனா கிளம்பு.. எனக்கு வர்ற கடுப்புக்கு ஓங்கி ஒன்னு விடலாம்னு தோணுது.. என் வேலையை விட்டுட்டு நீ புலம்பறதைக் என்று கேட்டுட்டு இருப்பேனு நினைச்சீயா.?" என்று கடுப்படித்தான்.

"காசி வீட்டுல இல்லைனு போன் பண்ணுனது நான் தான் சார்.." என்றவன் தலையைக் குனிந்துக் கொள்ள, "நீயா.? நீ எதுக்கு இப்படி பண்ணுன.? உனக்கு அவன் மேல என்ன கோவம்.? உங்க சண்டைக்கு நாங்க ஊறுகாயா.?" என்று கோவப்பட்டான்.

"தப்புத்தான் சார்.. தப்புத் தான்.. எனக்கு காசி மேல வள்ளி இறந்ததுக்கு அப்பறம் தான் கோவம் சார்.. அதுக்கு முன்னாடி எல்லாம் எதுவும் இல்லை.. அவங்க பாட்டுக்கு இருந்தா நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டு இருப்பேன்.. உண்மையா அவன் மேல என்ன ஒரு கோவமும் இல்லை சார்.. வள்ளி இல்லாம போனதுல தான் எல்லாமும் தப்பு தப்பா நடக்குது" என்றான்.

"அவன் தங்கச்சி இறந்ததுல உனக்கு என்ன.? எதுக்காக அவன் மேல கோவப்பட்டுட்டு இருக்க.?" என்று அதிரன் வினவிட, "நானும் வள்ளியும் காதலிச்சோம் சார்" என்று இவர்கள் எதிர்பாராத ஒரு பதிலைத் தந்தான்.

ஒருசேர இருவரும் "என்ன.?" என்று திகைத்து கேட்க, "ஆமா சார்.. வள்ளியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவளைச் சின்ன வயசுல இருந்து காதலிச்சேன்.. இப்பவும் காதலிக்கறேன்.. ஆனா இது வெளில யாருக்கும் தெரியாது சார்.. முக்கியமா எங்க குப்பத்து ஆளுகளுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்.. அதான் அவ படிச்சு முடிக்கட்டும்.. அப்பறம் வீட்டுல பேசிக்கலாம்..

அதுக்குள்ள நானும் என் உழைப்பால ஒரு நல்ல நிலைமைக்கு வந்தரலாம்னு இருந்தேன் சார்.. இப்ப எல்லாமே தலைகீழா மாறி கிடக்கு.. வள்ளியோட சாவை என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல சார்.. அவ ஏன் இப்படி பண்ணுனா தான் தினமும் புலம்பிட்டு கிடக்கறேன்.. கூட பிறந்த தங்கச்சி இறந்தும் அவன் வேலையை மட்டும் காசி பார்த்துட்டு இருந்ததுல தான் அவன் மேல எனக்கு ரொம்ப கோவம்..

அவன் அப்பன் அரசியல்ல இருந்தவன் தான் சார்.. இவனும் பணத்துக்கு மயங்கி பின்வாங்கிட்டானோனு தோணுனதுல தான் அவன் மேல கொலைவெறில இருந்தேன்.. ஆனா அவன் அப்படியில்லை சார்.." என்று புரியும்படி எடுத்துரைத்தான்.

நாமும் என்ன நடந்தது என்று மீதியைப் பார்த்து விடுவோம்.

அந்த குப்பத்திலே மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்துப் பிறந்தவள் தான் ஈஸ்வரி. வள்ளியை விட இரண்டு வயது சிறியவள். கல்லூரியில் இவள் படிக்க காலடி எடுத்து வைத்திட, பல ஆண்மகன்களின் மனதையும் அவளின் கொள்ளை அழகைக் கொண்டு கொள்ளையடித்தாள்.

யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விட மாட்டாள். இவர்களின் வீடு வசதியில்லை என்றும் கூற முடியாது.. அதற்காக வசதியானவர்கள் என்றும் கூற முடியாது. அன்றாட உணவிற்கு பஞ்சமில்லை. அதே போல் உடுத்தும் உடைக்கும் பஞ்சமில்லை.

அதனால் ஈசியாக படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. வள்ளி படிக்கும் கல்லூரிக்கு தான் இவளும் வந்தாள். முதல் இரண்டு மூன்று மாதங்கள் அமைதியாக சென்ற இவளின் வாழ்வில் நுழைந்தான் தரகேஷ். அவ்வூர் எம்.எல்.ஏ வின் ஒரே புதல்வன்.

கண்டதும் காதல் கொள்ள வைக்கும் மன்மதன். அவனை அதட்ட ஆளில்லாமல் போனதில் அவனின் செயல்களும் தவறான வழியிலே பயணித்தது. அதற்காக இவனை மொத்தமாக கெட்டவன் என்று ஒதுக்கி விட முடியாது. நல்லவன் என்று பட்டமும் அளித்து விட முடியாது. அவனுக்கு சரியென்று பட்டால் அவ்விசயத்தில் அவன் நல்லவன்.. இல்லையென்றால் முற்றிலும் கெட்டவன். அவ்வளவுதான் இவனின் குணம்.

ஈஸ்வரியின் கவனத்தையும் ஈசியாக கவர்ந்து விட்டான். இருவரும் அவ்வப்போது சிநேகமாக புன்னகைத்துக் கொள்வதில் தொடங்கி பின்பு ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரிப்பதில் முடிந்தது. பின்பு பழக்கமும் நன்றாக ஏற்பட, இருவரும் கல்லூரியில் காதல் புறாவாக சுற்றவும் செய்தார்கள்.

இது வள்ளியின் காதுக்குச் சென்றடைந்திட, "நம்ம படிக்க தான் இங்க வந்துருக்கோம்.. நீ என்ன பண்ணிட்டு இருக்க.? வீட்டுக்குத் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கனு ஞாபகம் இருக்கா.? இது தப்புடா.. வயசும் உனக்குப் பத்தல.. முதல்ல படிக்கிற வழியைப் பாரு" என்று சாந்தமாக தான் அவளின் தவறைச் சுட்டிக்காட்டினாள்.

"அக்கா நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. நாங்க ப்ரெண்ட்ஸ் தான்க்கா.. மத்தவங்க அப்படி பேசறதுக்கு நான் என்ன பண்றது.? என் மனசுல எந்த தப்பும் இல்லைக்கா.." என்றாள் தெளிவாக.

வள்ளியும் நம்பினாள். அதன்பின்பு அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அந்நேரம் தான் அவள் எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் எழுப்பி தருகிறேன் என்று கேட்டு ஓட்டு வாங்குனீர்களே அதை நிறைவேற்றுங்கள் என்று ஓயாமல் மனு குடுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தரகேஷ் யாரென்று தெரிய வர, அவனிடம் உதவி கேட்டால் என்றவென்றும் தோன்றியது. முதலில் ஈஸ்வரியிடம் தான் இதைப்பற்றி பேச வேண்டும். பின்பு அவளை வைத்துக் கொண்டு தங்கள் பிரச்சனைகளை இவனிடம் கூறி இவனின் மூலம் அவனின் தந்தையிடம் பேச வேண்டும் என்று நினைத்தாள்.

இவள் நினைத்தது நடக்க தான் செய்தது. ஈஸ்வரியும் தரகேஷிடம் இதைப்பற்றி பேசி இருக்க, அவனும் "நான் என் அப்பாகிட்ட பேசறேன்.. அப்பறம் நீங்க வந்து பேசுங்க.. ஆனா ஆட்சிக்கு வந்த உடனே எல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க.. கொஞ்ச நாள் ஆகணும்.. நீங்க பொறுமையா இருக்கணும்.. இந்த உலகத்துல உங்க ஊரு மட்டும் இல்லை.. நிறையா ஊர்மக்களுக்கு இப்படி வாக்குறுதி குடுத்துருப்பாங்கல.? ஒவ்வொன்னா முடிச்சுட்டு தான் இந்த ஊர் பக்கமும் வருவாங்க" என்றான்.

அவன் கூறுவதும் நியாயம் என்பதால் "சரிங்க.. நீங்க பேசறேனு சொன்னதே சந்தோசம்.. நீங்க இப்படி சொல்லுவீங்கனு நான் எதிர்பார்க்கல" என்று நட்பாக வள்ளி புன்னகைக்க, "இது கூட நான் ஈஸ்வரிக்காக தான் பண்றேன்" என்று மறைமுகமாக அவளின் மேலுள்ள விருப்பத்தைக் கூறினான்.

இதற்கு வள்ளியால் என்ன பதிலுரைக்க முடியும்.? முதலில் அவனின் குணத்தைத் தவறாக எடைப் போட்டிருந்த வள்ளிக்கு இப்போது அவனின் குணத்தில் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் இவள் மறுத்தும் கூறவில்லை. அவனின் வார்த்தையை ஏற்றுக் கொள்வதைப் போல் புன்னகைக்கவும் இல்லை. இவ்வார்த்தை என் செவியில் விழவே இல்லை என்பதைப் போல் தான் நின்றாள்.

இதற்கு பதிலுரைக்க வேண்டியது ஈஸ்வரியாயிற்றே. அவளுக்கு அவனின் கூற்று புரியவில்லை போலும். அவளின் முகபாவனைகள் சாதாரணமாக தான் காணப்பட்டது. இவளுக்கு அவன் கூறியது புரிந்ததா.? இல்லையா.? என்று வள்ளி தான் குழம்ப வேண்டியதாக போயிற்று.

தரகேஷிற்கும் ஏமாற்றமே. அவளுக்குத் தான் கூறியது புரிந்து விடும் என்று நினைத்தான். ஆனால் அவளின் முகம் எந்த பாவனையும் காட்டாமல் போனதில் அவனின் முகமும் சுருங்கி விட்டது.

தரகேஷ் பேசி விடுவான் என்று இவர்கள் நம்பி இருக்க, அவனும் அவனின் தந்தையிடம் பேசினான் தான். ஆனால் அவரோ "இப்பவே எப்படிடா முடியும்.? பார்த்துக்கலாம்னு சொல்லு" என்று மட்டும் கூறி விட்டார்.

இதை அவர்களிடம் சொன்னபோது "ஒரே தடவை உங்க அப்பாவைப் பார்த்து பேச மட்டும் அனுமதி வாங்க தாங்க.. அப்பறம் தொந்தரவு செய்ய மாட்டோம்" என்றிட, இவனும் மறுக்காமல் அதை செய்தான்.

தரகேஷின் தந்தையைப் பார்க்க முதலில் வள்ளியும் அலமுவுடர் சேர்த்து ஊரின் முக்கியமான மூன்று பேர்கள் தான் செல்வதாக இருந்தது. ஆனால் தரகேஷ் கண்டிப்பாக ஈஸ்வரியை அழைத்து வர வேண்டும் என்றிருக்க, அவர்களும் தட்டாமல் சரியென்றிருந்தனர்.

பெண்களை அமர வைத்து விட்டு ஊரின் முக்கியமானவர்கள் மட்டுமே உள்ளே சென்றனர்.

அப்போது தான் ஏதோ சத்தம் கேட்டிட, என்னவென்று பார்க்க முதலில் வள்ளி தான் எழுந்து சென்றாள். சத்தம் வந்த திசையில் அவள் கண்ட காட்சி அவளை நிலைகுலைய வைத்தது. பயத்தில் கத்த நினைத்தவள் அப்படியே வாயை மூடிக் கொள்ள, அவர்களின் பின்னே வந்த அலமுவும் இதைக் கண்டு விட்டாள்.

அவர்களின் முகம் பேயறைந்தது போலானது. காரணம் காணாமல் போன சாமி சிலைகள் இதோ இவர்களின் பார்வையிலே லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வாரமாக கோவில் சிலைகள் காணவில்லை என்று ஓயாத செய்திகள் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க, அதற்கு காரணமான கடவுளோ இதோ லாரியில் பயணிக்க உள்ளார்.

இது எப்படி சாத்தியம்.? இவர்கள் ஏன் சிலைகளை மறைத்து வைத்து நாடகமாடுகிறார்கள்.. இது தரகேஷிற்கும் அவனின் தந்தைக்கும் தெரியுமா.? அவர்களுக்குத் தெரியாமல் இதெப்படி சாத்தியமாகும்.? என்று பலவாறான சிந்தனைகள்.

இவனை நல்லவன் என்றே நம்பி வந்தது தவறு.. இப்போதே அவனின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்ற கோவம் தான் வள்ளிக்கு எழுந்தது. சத்தமிட்டு மாட்டினால் அவ்வளவுதான் என்று சத்தம் வராமல் அவ்விடத்தை விட்டு அகன்று வந்தாள்.

"இதென்ன வள்ளி இப்படியெல்லாம் நடக்குமா.? நம்மளைய தான் ஏமாத்தறாங்கனு நினைச்சா இப்படி கடவுளையும் தூக்கிட்டு வந்து என்னமோ பண்ணிட்டு இருக்காங்க.. நம்மளைய இவங்க பார்ப்பாங்கனு நினைச்சா ஆட்சில உட்கார வெச்சுருக்கோம்.. ப்ச் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பார்க்கல" என்று புலம்பினாள் அலமு.

அவ்வளவாக வெளியில் தெரியாத கிராமத்தில் இருந்த அம்மன் சிலை தான் அது. திடீரென்று காணாமல் போய் விட்டது.. என்று ஓயாத செய்திகளும் அதைக் கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்று அரசியல்வாதிகளும் பேட்டி குடுத்த செய்திகள் தான் எங்கும் பார்த்தாலும் காணப்பட்டது.

இவர்களே கடத்தி வைத்துக் கொண்டு இவர்களே அதைக் கண்டுபிடிக்க போகிறார்களாம்.. கேட்க வேடிக்கையாக உள்ளதல்லவா.? இன்றைய ஆட்சியில் இதெல்லாம் சாதாரண நிகழ்வு என்பது அம்மங்கையர்களுக்குப் புரியவில்லை.

அவர்களுக்குத் தேவையானது கிடைத்தால் போதும்.. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.. அவர்களின் மேல் எத்தனை அதிருப்திகள் எழுந்தாலும் ஆட்சியைப் பிடிக்க பணம் என்னும் மாயையை உள்ளே புகுத்தி விடுகின்றனர்.

அவர்கள் குடுக்கும் இருநூறு, ஐநூறுக்காக மக்களும் நம்பி ஏமாந்து அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றிற்கும் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை. மக்களுக்காக அவர்கள் குடுக்கும் பணமும் மக்களுடையது தான் என்பதே பலருக்கு இன்னும் புரியவில்லை.

கேட்டால் இந்த ஆட்சிக்காரர் தான் இவ்வளவு பணம் தருவார்கள்.. அவ்வளவு பணம் தருவார்கள்.. விலையில்லா பொருட்களும் அளிப்பார்கள்.. மற்றவர்கள் அப்படி எதுவும் தர போவதில்லை என்று பல முட்டாள்கள் கூறும் வார்த்தைகள் இது.

தகுதியற்றவர்களின் கைகளில் ஆட்சியைக் குடுத்து விட்டு வாழ்வாதாரத்தை மட்டுமின்றி பண்டைய கால கடவுள் சிலைகள் காடுகளையும் நாம் இழந்துக் கொண்டிருக்கிறோம். இப்போது ஆட்சிக்கு வருபவர்கள் யாரும் மக்களின் நலனை பேணுவதில் கவனம் செலுத்துவது இல்லை.

முதலில் அவர்களுக்குத் தேவையான சொகுசான வாழ்வை அமைத்துக் கொண்டு தான் வெறும் கண்துடைப்பிற்காக அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வதந்திகளைப் பரப்பி நற்பெயரையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இப்போது கடவுளையும் விட்டு வைக்கவில்லை போலும். அது சரி அவராவது வெளிநாட்டில் எந்த தொந்தரவுமின்றி இருக்கட்டும்.. நம் நாட்டில் இருந்து என்ன செய்ய போகிறார்.? என்ற எண்ணம் தான் போலும்.

தரகேஷின் தந்தையிடம் பேசி விட்டு வந்த ஊரின் முக்கியமானவர்கள் இப்பவே எதுவும் பண்ண முடியாதுனு சொல்றாங்க.. ஆனா கண்டிப்பா நமக்கு வீடும் பள்ளிக்கூடமும் கட்டித் தர்றேனு சொல்றாங்க.. நம்புவோம்.. கிளம்பலாமா.?" என்றனர்.

"கண்டிப்பா அவங்க சொன்னதை செய்வாங்க.. நானும் அப்படியே விட்டு விட மாட்டேன்.. போராடி எப்படியாவது உங்களுக்குத் தேவையானதை வாங்கித் தந்துருவேன்.. நம்பிக்கையா இருங்க.." என்ற தரகேஷின் வார்த்தையில் செயற்கல புன்னகை தான் வள்ளியிடம்.

முதலில் என்றால் அவனின் வார்த்தையில் நெகிழ்ந்து நன்றியுரைத்திருப்பாள். ஆனால் இப்போது நம்பிக்கை முளைக்கவில்லை. மாறாக அவனின் மேலும் சந்தேகமே தோன்றியது.



பார்த்ததை இவர்களால் மறக்கவும் முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை.

ஈஸ்வரியிடம் தரகேஷைப் பற்றி கேட்க, அவளோ "அக்கா அவங்க ரொம்ப நல்லவங்க.. நம்மூரு புள்ளைக பள்ளிக்கூட செலவைக் கூட அவங்களே ஏத்துக்கறேனு சொல்லிருக்காங்க.. நமக்கு வேறெதாவது வேணும்னாலும் தயங்காம கேட்க சொல்லிருக்காங்க" என்றாள்.

கல்லூரியிலும் அவனைப் பற்றி நன்றாக தான் கூறினார்கள். இதை வள்ளியும் அலமுவும் நம்பியதன் பலன் அவர்களின் உயிரும் காவு வாங்கப்பட்டு இருந்தது.

தரகேஷைத் தனியாக அழைத்து அவர்கள் பார்த்ததைக் கூறி "இது உனக்குத் தெரியுமா.? தெரியாதானு தெரியல.. எங்களால இன்னும் நம்பவே முடியல.. கடவுளையே விட்டு வைக்காம ஏன் இப்படி பண்றாங்க.? அதனால இவங்களுக்கு என்ன கிடைக்க போகுது.?" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

"என்னங்க சொல்றீங்க.? உண்மையா இந்த விசயம் எனக்குத் தெரியாது.. அந்த வீடு அப்பாவைப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டும் தான்.. நானும் அம்மாவும் வேற வீட்டுல தான் இருக்கோம்.. அன்னைக்கு கூட நீங்க வர்றீங்கனு தான் நான் அங்க வந்தேன்.. எனக்கும் அரசியலுக்கும் சுத்தமா சேராது.. அதனால அந்த பக்கம் அதிகமா வர்றதும் இல்ல" என்றான்.

இதை அவர்கள் நம்பினார்களா.? இல்லையா.? என்று தெரியவில்லை. இதற்கு மேலும் தாங்கள் கூறிட எதுவுமில்லை என்பதைப் போல் பெண்கள் இருவரும் சென்று விட்டனர்.

அன்றிரவு தந்தையிடம் இதைப்பற்றி தரகேஷ் வினவிட, அவரோ "அப்படியெல்லாம் எதுவுமில்லப்பா.. அந்த புள்ளைக ஏதோ உளரி இருக்கும்.. காணாம போன சிலை இங்க எப்படி வரும்.? நான் சாதாரண எம்.எல்.ஏ தான்.. என்னால இந்த வேலையெல்லாம் பார்க்க முடியுமா.? அப்படி பார்த்தாலும் என் சீட்டைக் கழிச்சு வீசி விட மாட்டாங்க.. நீயே யோசிச்சு பாரு.. அந்த பொண்ணுக வேற எதையோ பார்த்துட்டு பேசறாங்க" என்று சமாளித்து விட்டார்.

தரகேஷூம் நம்பினான். வேறு என்ன செய்ய முடியும்.? தந்தை சொல்வதும் ஒரு வகையில் நியாயமாயிற்றே. பின்பு எங்ஙனம் அவனால் மீண்டும் கேள்வி எழுப்பிட முடியும்.? அவ்வளவுதான் அப்பேச்சை விட்டு விட்டான்.




இவர்களை அப்படியே விட்டு விட்டால் சரிவராது என்று வள்ளியை அழைத்து "நீங்க எதையோ பார்த்துட்டு பேசிட்டு இருக்கீங்க.. தப்பு தப்பா வெளில சொல்லிட்டு இருக்காதீங்க.. அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்" என்று மிரட்டினார்.

"சார் நாங்க சரியா தான் பார்த்துட்டு பேசறோம்.. இப்ப வரைக்கும் வெளில சொல்ல பயமா இருந்துச்சு.. ஆனா இந்த நிமிசம் வெளில சொன்னா என்னனு தான் தோணுது.. சொல்லட்டுமா.?" என்று கேட்டாள்.

"என்னம்மா பேசிட்டு இருக்கீங்க.? போனாபோகுதுனு அமைதியா இருந்தா என்ன வேணுனாலும் பேசுவீங்களா.? நீங்க வெளில சொன்னாலும் அதுக்கு சாட்சினு ஒன்னு வேணும்.. அதுக்கு ஞாபகம் இருக்கா.? நாங்க என்னமோ பண்ணிட்டு போறோம்.. உங்களுக்கு தேவை என்ன உங்க ஊருக்கு வீடும் பள்ளிக்கூடமும் தானே.? அதைய என் செலவுலயே செஞ்சு தர்றேன்.. இதைய மறந்துட்டு போய் படிக்கற வழியைப் பாருங்க" என்றார் கோவமாக.

இருவருக்கும் வாய் சண்டை முற்றி விட, ஒரு கட்டத்தில் தரகேஷின் தந்தை வள்ளியை அறைந்து விட்டார். கூடவே அலமுவின் முடியையும் பிடித்திழுக்க, ஈஸ்வரியோ பயத்தில் கத்த ஆரம்பித்தாள்.

அவளின் வாயை மூடி மூவரையும் ஒரு அறையில் அடைக்க கூறியவர் பின்பு சிலையைக் கடத்த கூறிய மேலிடத்துக்குப் போன் செய்து நடந்ததைக் கூறிட, அவரோ அவர்களை விட்டு வைத்தால் ஆபத்து.. முடித்து விடுங்கள் என்று விட்டார்.

மற்றவர்களின் உயிரை எடுப்பது இவர்களுக்கு என்ன புதியதா.? விடியும் வரை அவர்களை எங்கும் விடாமல் அடைத்து வைத்து விடியும் போது யாருக்கும் பார்க்கும் முன்பே அவர்களின் ஊரின் பகுதியிலே தூக்கில் தொங்கவும் விட்டு விட்டார்கள்.

சந்தேகம் வர கூடாது என்பதற்காகவே எங்கள் சாவிற்கு காரணமானவர்களைக் காவல்துறை தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று எழுதியும் வைத்து விட்டனர். ஏதோ செய்ய போய் இப்போது வேறெதோ நடந்து இவர்களின் உயிரையும் எமனின் பாசக்கயிறு இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இதற்கு சாட்சி கூற தான் யாருமில்லை. அதனால் வழக்கும் நிற்கவில்லை. உடல்கூராய்விலும் உடலில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றே வர, அதில் தான் வழக்கும் இழுத்துக் கொண்டு சென்றது. இறுதியில் மூளையில் போடப்பட்டு விடும் என்று தரகேஷின் தந்தை நினைத்திருக்க, வேலனின் மூலம் போராட்டம் நடைபெற்று இப்போது மாறனின் கையில் வந்து நிற்கிறது.

வேலனுக்கு தரகேஷின் தந்தையைப் பற்றியெல்லாம் தெரியாது. அதைப்பற்றி வள்ளியும் எதுவும் அவனிடம் கூறவில்லை. அதனால் வேலனுக்குத் தெரியாமல் போனது.

வள்ளியின் இறப்பை வேலன் எதிர்பார்க்கவில்வல. முற்றிலும் உடைந்து விட்டான். வேலன் முதலில் சந்தேகப்பட்டது காசியைத் தான்..

தங்கையின் உடலைப் புதைத்ததோடு சரி அதன்பின்பு அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். பெண்களின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரிய வரும் என்று இவர்கள் காத்திருந்து இறுதியாக தான் போராட்டத்திலும் குதித்தது. அப்போது கூட போராட்டத்தில் காசி பங்கேற்கவில்லை.

அதில் தான் அவனின் மேல் சந்தேகமும் வலுத்தது. காதலிப்பது தெரிந்து வள்ளியை ஏதோ அவன் செய்து விட்டான் என்று நினைத்தான்.

அப்படி செய்தாலும் அலமுவும் ஈஸ்வரியும் எப்படி வந்தார்கள்.? என்று யோசித்தான். ஒன்றும் புரியவில்லை. வள்ளி இருக்கும் வரை ஊரிலே இருந்த காசி அதன்பின்பு எங்கு செல்கிறான்.? என்று தெரியாமல் பேச்சுப் பொருளாக மாறி இருக்க, அவனின் மேல் சந்தேகம் கொண்டு தான் மாறனிடம் அவ்வாறு கூறியதும்.

அவன் மேல் மாறன் சந்தேகப்படுவான் என்று இவன் நினைத்திருக்க, சாதாரணமாக அதைக் கடந்து விட்டது தான் வேலனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வேறொருவரின் அலைப்பேசியில் இருந்து காசி வீட்டில் இல்லை என்ற தகவலை அவனுக்கு அளித்தான்.

அந்நேரம் காசி வீட்டில் இருப்பான் என்பதை வேலன் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதிரனும் மாறனும் இவனைத் தேடி வந்ததாக கூறியதும் தான் அடித்துப் பிடித்து ஓடி வந்து காவல் நிலையத்தில் அவர்களைப் பற்றி விசாரித்து அதிரனையும் பார்த்து இறுதியாக மாறனின் முன்பும் நிற்பதும்.

இப்போது கூட தன்னை சந்தேகப்பட்டு விடுவார்களோ.? என்று பயந்து தான் ஓடி வந்தான். அவனுக்கு வள்ளியின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியாது.. ஆனால் அவனால் அவர்களால் சாகவில்லை என்பது மட்டும் உண்மை.

என்ன தான் காதலித்த பெண் என்றாலும் அவள் இறந்து விட்டால் இவனும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி யாருக்கு தான் எண்ணம் எழும்.? அனைவரும் வாழ தான் ஆசைப்படுவார்கள். வள்ளியின் நினைவுகள் அழியாத கற்களாக அவனுள் எப்போதும் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இவன் தான் இவனின் அம்மத்தாவைப் பார்க்க வேண்டும்.. அவருக்காகவாவது இவன் வாழ வேண்டுமே.? இவனைப் சந்தேகப்பட்டு பிடித்துக் கொண்டு சென்று விட்டால் அவரின் நிலைமை.? அதான் ஓடி வந்து நிற்கிறான்.

"ஆமா காசி எங்க போய்ட்டு இருக்கான்.?"

"ஒரு வீட்டுக்கு சார்.."

"வீடா.?"

"ம்ம்ம்ம் ஆமா சார்.. அவங்க அப்பாவோட ரெண்டாவது சம்சாரம்னு சொன்னாங்க.. இப்ப அந்தம்மா பக்கவாதம் வந்து படுக்கைல கிடக்கு.. அவங்கள தான் போய் போய் பார்த்துட்டு வந்துட்டு இருக்கான்.."

"உனக்கு இதெப்படி தெரியும்.?"

"நானும் அவனைப் பின்தொடர்ந்து போய் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.. நான் கூட முதல்ல அந்த பொண்ணுகளோட சாவுல காசிக்கும் பங்கிருக்கும்னு நினைச்சேன் சார்"

"பெரிய வேலை எல்லாம் பார்த்து கடைசில இப்படி புஸ்னு போய் கிடக்க.? இப்ப நீ எதுக்கு பயந்து ஓடி வந்துருக்க.? வந்ததும் இல்லாம என்னைய கண்டுபிடிச்சு மாறன் சாரைப் பார்த்தே ஆகணும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்துருக்க.? அதுக்கெல்லாம் நீ வொர்த் இல்லைனு எங்களுக்குத் தெரியும்.. போ போய் பொழைப்பை பாரு" என்று அவனை விரட்டினான் அதிரன்.

அப்போதும் "சார் எப்படியாவது என்ன காரணம்னு கண்டுபிடிச்சுருங்க.. அந்த பொண்ணுகளோட சாவுக்கு நியாயம் வேணும் சார்.." என்று வேண்டுதலுடனே அவன் விடைப்பெற்றுக் கிளம்பினான்.




"இவன் என்னமோ நினைச்சு என்னமோ வேலை பார்த்து... முடியலடா இவனோட.. காதலாம்.. காதலியாம்.. அவளுக்காக என்னமோ செய்ய நினைச்சு கடைசில உயிர் பயத்துல ஓடி வந்துருக்கான்.. இவனை என்னனு சொல்றது.?" என்று சிரித்தான் அதிரன்.

மாறனிடம் எந்த எதிர்வினையும் இல்லாமல் போனதில் "எதனால அந்த பொண்ணுக செத்தாங்கனு தெரிஞ்சுருச்சா.?" என்று நண்பனை அறிந்ததைப் போல் அதிரன் வினவிட, ம்ம்ம்ம் என்றான் மாறனும்.

"எதனால.? யாரு காரணம்.?"

"திருநீலகண்டன்.."

"அட நம்ம எம்.எல்.ஏ சார்.. அவரு எங்க இதுல சம்பந்தமே இல்லாம வர்றாரு.."

"முக்கிய குற்றவாளியே இவரு தானு நினைக்கறேன்" என்று ஈஸ்வரியைப் பற்றி கல்லூரியில் விசாரித்த போது தரகேஷைப் பற்றியும் தெரிந்துக் கொண்டதைக் கூறினான்.

பின்பு அவனையும் வெளியில் சந்தித்து பேசிட, அவன் எதையும் மறைக்கவில்லை. சிலைகளைப் பார்த்ததாக அவர்கள் கூறியதையும் சேர்த்தே கூறினான்.

"எதுக்கு இப்படி பண்ணுனாங்கனு தான் தெரியல சார்.. அந்த ஈஸ்வரி புள்ளையை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. அதோட சாவை இப்ப வரைக்கும் என்னால நம்ப முடியல.. ஏத்துக்கவும் முடியல.. அவர்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க நானும் காத்துக்கிட்டு இருக்கேன்.. குற்றவாளிக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி குடுங்க சார்" என்று வருத்தத்துடன் கூறினான்.

"ஓஓஓஓ அப்படின்னா அந்த ஆளு தான் இவங்கள பார்த்து பேசி இருக்கணும்.. அப்ப சண்டை வந்து இந்த பொண்ணுகளை அடைச்சு வெச்சு கடைசில தூக்குல தொங்க விட்டதும் அவராக தான் இருக்கணும்.. எப்படியும் இது வெளில தெரிய போறது இல்லை.. அப்படி தெரிஞ்சாலும் அவருக்குச் சமாளிக்க தெரியாதா என்ன.? இந்த பொண்ணுக ஏன் சம்பந்தமே இல்லாம இந்த விசயத்துல மூக்கை நுழைச்சு இப்படி உயிரை விட்டுருக்குக.? என்னத்த சொல்றது.? என்று நடந்ததை நேரில் பார்த்ததைப் போலவே கூறினான் அதிரன்.

அவன் எத்தனை வழக்குகளைக் கையாண்டு இருக்கிறான். இது தான் நடந்தது என்று அவனால் ஊகிக்க முடியாதா என்ன.? இரண்டே நிமிடத்தில் நடந்ததை அப்படியே கூறியும் விட்டான்.

மாறனும் இப்படித்தான் நினைத்திருந்தான். திருநீலகண்டனைப் பார்த்து பேச அனுமதி கேட்டிட, இவனுக்கே அனுமதி மறுக்கப்பட்டது தான் வேதனையின் உச்சம். அந்த தலைவலியில் தான் வீட்டிலும் இருக்கிறான்.

குற்றவாளி யாரென்று தெரிந்தும் அவர்களை நெருங்க முடியாமல் இருப்பது காக்கி உடைக்கு அழகா என்ன.? அப்படி நெருங்கினாலும் அடுத்த பத்தே நிமிடத்தில் அவர்கள் வெளியில் வருவதும் சாத்தியமே.

இன்றைய காலகட்டத்தில் எதையும் கண்டுக் கொள்ளாமல் தான் வாழ்ந்து விட்டு போக வேண்டும் போலும்.. அதுவும் மக்களுக்கு தொண்டு செய்வேன் என்று கஷ்டப்பட்டு படித்து காக்கி உடையை அணிந்தால் படிக்காத தற்குறிகள் கூறுவதையும் அவர்களைப் பார்க்க இவர்கள் அனுமதி வேண்டி நிற்பதும் தான் நடக்கிறது.

இந்த அவலம் எப்போது மாறுகிறதோ அப்போது தான் நாடும் உருப்படும்.. நாட்டு மக்களும் நலமுடன் வாழ்வார்கள்.


மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

EswariSasi

New member
Joined
Jun 3, 2025
Messages
12
நிதர்சனம் கிழிச்சு தொங்க விட்டுட்டீங்க 🥰👍👍👍
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
பெண்கள் படித்தும்
பல பெண்கள் படிப்பிற்காக
பள்ளிக்காக என்று
போராட சென்று
பலியாகி நிற்கிறார்கள்....

உண்மை தெரிந்தும்
ஊமையாக நிற்க
உலகிற்கு தெரிய வரும்
உண்மை மறையாது.... 💐💐💐
 
Top Bottom