• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 8

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 8




"அப்பா நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கட்டுமா.?" என்று கேட்டதில் அவர் அதிர்ந்து "ஏய் என்ன விளையாடறீயா.?" என்று சீறினார்.

"இல்லப்பா நான் உண்மையா தான் சொல்றேன்.. அவரைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமா.?"

"இது வரைக்கும் உன்னைய நான் அடிச்சது இல்ல.. இப்ப அடிக்க வெச்சராத.."

"ப்பா.."

"பைத்தியம் மாதிரி பேசறதை நிறுத்து.."

"...."

"ஏதோ தெரியாதனமா அப்படி சொல்லிட்ட.. அதுக்காக அவனையே ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணனும்னு அவசியமில்லை.."

"...."

"உன்னைய இப்படி கல்யாணம் பண்ணித் தர தான் கஷ்டப்பட்டு வளர்த்திட்டு இருக்கேனா.?"

"அப்பா.. என்னால..." என்று பேச ஆரம்பித்தவளைப் பேச விடாமல் "நீ சொல்ல வேணாம்.. அவன் வேணாம்.. அவ்ளோதான் சொல்லுவேன்.. இனியும் அப்படியே யோசிச்சுட்டு இருந்த உன்னைய பெத்த அப்பனும் இல்லைனு நினைச்சுக்கோ" என்று விட்டார்.

இவளுக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று தெரியவில்லை. மாறனிடம் பேசி விட்டு வந்ததில் இருந்து இவளின் எண்ணம் முழுவதும் அவன் மட்டும் தான். அவ்வெண்ணமே இறுதியில் அவனையே திருமணம் செய்துக் கொண்டால் என்ன.? என்று நினைக்கவும் வைத்தது.

அதை மறைக்காமல் தந்தையிடம் கூறி வாங்கியும் கட்டிக் கொண்டாள். இப்போதும் தந்தையிடம் 'ஏன் அவருக்கு என்ன குறை.?' என்று கேட்க தான் பெண்ணவளின் நாவு துடித்தது. ஆனாலும் அமைதியாக இருந்து விட்டாள்.

அவனைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எழுந்தது. உடனே அதிரனின் நினைவும் வந்திட, அவனைக் கண்டால் நிச்சயம் பேச வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்.

ஒரு தெளிவு பிறந்ததும் தான் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிந்த தந்தையே அவளின் விழிகளில் விழுந்தார். 'இனி இவரை சமாதானப்படுத்த வேண்டுமே.?' என்று பெருமூச்சுடன் அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

மீனவக்குப்பத்தில் இறந்து போன பெண்களைப் பற்றி விசாரித்தான் மாறன். அனைவரும் ஒன்று போலவே "ரொம்ப நல்ல பொண்ணுக.. எங்களுக்கு அடிப்படை வசதியை வாங்கிக் குடுக்க போராடுனது கூட இவங்க தான்.. இவங்களால தான் இன்னைக்கு எங்க ஊருக்குள்ளயே பஸ் வருது.. எங்க புள்ளைகளும் நாலெழுத்துப் படிக்க பள்ளிக்கூடமும் போகுதுக..

இப்ப கூட எங்களுக்காக தான் போராடுச்சுக.. கடைசில இப்படியாகும்னு நாங்க நினைக்கவே இல்ல.. வள்ளி புள்ளையோட அண்ணன் கூட ஒரு மாதிரி.. ஆனா இந்த வள்ளி புள்ள ரொம்ப தங்கம்.. எல்லாத்துக்கிட்டயும் அவ்ளோ அன்பா அனுசரணையா இருக்கும்.." என்றே கூறினார்கள்.

நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் தான் மீனவக்குப்பம் இருந்தது. அதனால் நகரத்திற்குச் செல்பவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்துச் சென்று தான் பேருந்து ஏற வேண்டும். அந்த குப்பத்தில் இருந்து கல்லூரிக்கு முதன்முதலாக சென்றது வள்ளிதான். அதுவும் காசியின் தயவால். அவன் தான் அவளைக் கல்லூரியில் விட்டு விட்டு மீண்டும் அழைத்து வருவான்.

படிப்பைக் கையிலெடுத்ததன் விளைவு தன்னூர் பிள்ளைகளும் படிக்க வேண்டும்.. எங்கள் ஊரும் மாற வேண்டும் என்ற கொள்கையில் முதலில் பேருந்து விட வேண்டும் என்று ஆரம்பித்தாள் அவளின் முதல் போராட்டத்தை. அதன்பின்பு அலமுவும் இவளுடன் இணைந்துக் கொள்ள, இருவரும் தங்கள் ஊரை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றே தீருவேன் என்ற கொள்கையிலே இருந்தார்கள்.

வள்ளியின் வீட்டில் பணவசதி இருந்ததால் அவளுக்கு பெரியதாக ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஆனால் அலமுவின் வீட்டில் அப்படியில்லை. அவளின் தந்தை தினக்கூலிகாரன் தான். அவரின் சம்பளத்தை வைத்து எப்படியோ மகளைப் படிக்க வைக்க வேண்டும்.. அவள் நல்ல வேலைக்குச் சென்றால் தங்களின் கஷ்டம் தீர்ந்து விடும் என்று எண்ணினார் அவளின் அன்னை.

ஆனால் மகளோ ஊரை மாற்றுவேன்.. உலகத்தைத் திருத்துவேன் என்று சுற்றினால் இவரும் என்ன செய்வார்.? மகளைக் கண்டித்துப் படிப்பில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்று கண்டித்தார். அவளும் அப்போதைக்கு சரி சரியென்று விட்டு வள்ளியுடன் தான் சுற்றினாள்.

இவர்களின் முதல் போராட்டம் பேருந்துவிற்காக இருக்க, மூன்று மாத போராட்டத்தின் விளைவு நாளொன்றுக்கு குறிப்பிட்ட ஓரிரு பேருந்துகள் மட்டும் ஏழெட்டு முறை இவர்களின் ஊருக்குள் வந்து விட்டு செல்வது போலிருக்கும். இப்போதைக்கு இதுவே பெரிய வெற்றி தான் என்று நிறைவும் கொண்டார்கள்.

அதன்பின்பு குடிநீருக்காகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாள். பின்பு பிள்ளைகளின் படிப்பிற்காகவும் அலைந்தாள். ஒவ்வொன்றுக்கும் சம்மதம் வாங்க இவர்கள் பட்டபாட்டைச் சொற்கள் கொண்டு விவரிக்க முடியாது. பல அலைச்சல்களும் வீண் அலைச்சல்களாகவே முடியவும் நேர்ந்தது. அப்போதும் இருவரும் சோர்ந்து போகவில்லை. படிப்பு தந்த தைரியம் அவர்களைப் போராடவே வைத்தது.

அப்போது தான் தேர்தலும் வந்தது. வாக்கிற்காக இவர்களைத் தேடி வந்த ஆளுங்கட்சியின் தலைவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிசை வீடுகளை அகற்றி நல்ல தரமான வீடுகளைக் கட்டித் தருவோம்.. அதோடு இவ்வூரில் பள்ளிக்கூடமும் கட்டித் தருகிறோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

வள்ளியின் தந்தைக்கு அரசியலில் சிறிது பழக்கம் இருப்பதால் அவரின் மூலம் தான் இதெல்லாம் நடந்தது.

அன்றிரவே தந்தையைப் பிடித்து "இவங்க சொல்றது எல்லாம் உண்மையா.? இவங்க ஆட்சிக்கு வந்தா வீடும் பள்ளிக்கூடமும் கட்டித் தருவாங்களா.? இல்ல ஓட்டு வாங்க தான் இப்படி பொய் சொல்லிட்டு இருக்காங்களா.?" என்று அவளின் சந்தேகத்தை வினவினாள்.

உழைத்து உண்பதை விட அரசியலில் இருந்து வரும் பணம் அவரை அடியோடு மாற்றியிருக்கவே செய்தது. அரசியலில் இருப்பதால் தான் அவரைப் பல பேர் தேடியும் வருகிறார்கள். மதிப்பு மரியாதையுடன் சேர்ந்து பணமும் தங்குதடையின்றி அவரின் கைகளில் புரள்கிறதே.. ஒரு மனிதனுக்கு வேறென்ன வேண்டும்.?

மற்றவர்களுக்குச் சந்தேகம் வந்து விட கூடாது என்பதற்காக யாராவது ஏதாவது உதவி கேட்டு வந்தாலும் மறுக்காமல் செய்தும் தருவார். அதனால் யாருக்கும் எந்த சந்தேகமும் இதுவரை அவரின் மேல் எழுந்ததில்லை.

'அட நம்ம பெரிய வூட்டுக்காரரா.? அவரு தங்கமானவராச்சே' என்று தான் யாரைக் கேட்டாலும் கூறுவார்கள். அந்தளவிற்கு மதிப்பும் மரியாதையும் பணம் என்னும் காகிதம் அவருக்கு அளித்திருந்தது. அவரின் குணம் எப்படியோ ஆனால் இப்படி குடுத்து உதவி சிறிது புண்ணியத்தையும் சேர்க்கவே செய்தார்.

அதனால் மகளிடம் "அதெல்லாம் சொன்னதை செய்வாங்கம்மா.. அதுக்கு அவங்க ஆட்சிக்கு வரணும்ல.? அப்பதான் எல்லாமும் நடக்கும்.. ஆனா நம்ம ஜனங்க அவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்கன்னு தான் நினைக்கறேன்" என்றார்.

நம்மூருக்குத் தேவையானது கிடைக்கும் போது ஏன் மறுக்க வேண்டும்.? இவளே ஓரிருவர்களிடம் இதைப்பற்றி பேசிட, அவர்களும் இவளுக்காக சம்மதிக்கவே செய்தனர். ஆனால் அனைவரிடமும் இந்த கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டுமென்று இவள் வற்புறுத்தவில்லை.

'உங்களுக்கு யாருக்கு ஓட்டு போட விருப்பம் இருக்கோ அவங்களுக்கே போடுங்க.. ஆனா யோசிச்சு போடுங்க' என்று மட்டும் தான் கூறினாள்.

படிப்பறிவில்லா இந்த மக்களும் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பித் தான் போனார்கள். அவர்களுக்கே ஓட்டும் போட்டு ஆளுங்கட்சியாக அமரவும் வைத்தார்கள்.

வள்ளியின் தந்தையும் நான் அவங்ககிட்ட பேசி சீக்கிரமே எல்லாமும் பண்ண சொல்றேன்.. என்றாரே தவிர யாரிடமும் எதுவும் பேசவில்லை. இதுவும் ஓட்டு வாங்க ஒரு தந்திரம் என்பதை இவரும் அறியாததா.?

நாட்கள் மாதங்களாக உருண்டோடினாலும் சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவது போல் தெரியவில்லை. வள்ளியும் படிப்பின் இறுதியாண்டிற்குச் சென்றிருக்க, அவளால் முடிந்த முயற்சியை அவளும் செய்யவே முனைந்தாள். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை.

வள்ளியின் காதலன் தான் குமரவேலன். படிக்காதவன்.. மீன் பிடிப்பதே அவனின் பிரதான தொழில். மீனை மட்டும் பிடிக்காமல் வள்ளியின் மனதையும் சேர்த்து மனம் என்னும் வலையில் கட்டி விட்டான்..

அவர்களின் பேச்சு மற்றவர்களின் பார்வைக்கு சாதாரணமாக தான் இருக்கும். ஆனால் இருவரின் வார்த்தைகளில் ஒருவரின் மீதான மற்றொருவரின் அதீத காதலே நிறைந்திருக்கும்.

பார்ப்பவர்களுக்கும் சந்தேகம் எழாத அளவிற்கே அவர்களின் உரையாடலும் நிறைந்திருக்கும்.

அன்றும் அப்படித்தான் "நானும் அவங்க சொன்னதை நம்பிட்டேன் வேலன்.. இப்படி பொய் சொல்லித்தான் எல்லா பக்கமும் வாக்கு வாங்குவாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.. என் காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க.. ஆட்சிக்கு வர்ற வரைக்கும் தான் இதெல்லாம்..

அப்பறம் என்ன நடந்தாலும் நம்மளைய கண்டுக்க மாட்டாங்க.. நம்ம வயித்துக்கு வேணும்னா நம்ம தான் உழைக்கணும்.. அடுத்தவங்கள நம்பி என்னவாக போகுது.? அதுவும் அரசியல்வாதிகளை நம்பவே கூடாதுனு சொன்னாங்க.. நானும் எத்தனையோ மனு குடுத்துப் பார்த்துட்டேன்.. ஒன்னும் நடக்கல" என்றாள் சோர்ந்து போய்.

ஓரிரு மாதங்கள் முன்பு தான் அதீத குடியின் காரணமோ இல்லை அடுத்தவர்களின் வயிற்றில் அடித்து உண்ட பணம் என்னும் பாவத்தின் காரணமாகவோ அவர் செய்த வைத்த புண்ணியமும் கரைந்து விட்ட காரணமோ லாரி ஒன்றில் மாட்டி அவ்விடத்திலே உயிரை நீத்திருந்தார் வள்ளியின் தந்தை.

"நம்மளால என்ன செய்ய முடியும்.? அவங்களுக்கு தேவையானது கிடைச்சதும் இப்படி பண்றதும் சகஜம் தானே.? நம்ம வெச்சு ஏமாத்தறதுல அவங்கள அடிச்சுக்க முடியுமா.? நம்ம அவங்களுக்கு ஓட்டு போடாம இருந்திருந்தாலும் அவங்க எப்படியாவது பணத்தை அள்ளி வீசி ஜெயிச்சுருப்பாங்க.. இதுக்குப் போய் வருத்தப்பட்டு இருந்தா எப்படி.?

விடு வள்ளி நமக்கு தேவைனா நம்ம தான் உழைக்கணும்.. அதைய விட்டுட்டு அடுத்தவங்கள நம்புனா சரியாகிருமா.? இதெல்லாம் இப்ப நடக்கறது சகஜம் தான்.. எதையும் யோசிக்காம நீ படிக்கிற வழியை பாரு.. அந்த அலமு புள்ளையும் உன்கூட சேர்ந்து சுத்திட்டு கிடக்கு.. அதோட அம்மா தான் ஓயாம புலம்புது.. அதோட கோவமும் நியாயம் தானே.?" என்று அவளைத் தேற்றினான்.

அப்போதும் சமாதானமாகாமல் சுற்றிக் கொண்டிருந்தவளை ஈஸ்வரியின் மூலம் எமனின் பாசக்கயிறும் அவர்களின் கழுத்தைச் சுற்ற தயாராக மாறி போனது.

பின்பு என்ன நடந்தது என்பதை பிற்பகுதியில் காண்போம்.

ஓரளவிற்கு விபரத்தை அறிந்துக் கொண்டவனுக்கு அடுத்து என்ன நடந்திருக்கும்.? எதனால் இவர்கள் தற்கொலை செய்துக் கொண்டார்கள்.? என்பது தான் யோசனையாக இருந்தது.

இவன் ஊகித்தது மட்டும் சரியென்றால் தண்டனை கிடைப்பதும் அரிதாகி விடும். இவ்வழக்கில் அவனுக்கு இருந்த ஈடுபாடும் சற்று குறைந்து போனது.

"முடிவா என்ன தான் சொல்றீங்க அதிரன்.? என்னைய கல்யாணம் பண்ணிக்க முடியுமா.? முடியாதா.?" என்று அழும்தோணியில் கேட்டு நின்றவளிடம் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் நின்றான் ஆடவன்.

பெருமூச்சுடன் "முதல்ல உன் அண்ணனுக்கு கல்யாணம் முடியட்டும்.. அப்பறம் இதைய பத்தி பேசலாம்" என்றிட, "இல்ல இப்பவே பேசணும்.. இப்பவே பேசி முடிக்கணும்.. அவனுக்குக் கல்யாணமாகற வரைக்கும் நான் ஏன் வெய்ட் பண்ணனும்.? அவன் என்னைய பத்தி நினைக்கறானா.? அப்பறம் நான் மட்டும் ஏன் அவனைப் பத்தி நினைக்கணும்.? மாட்டேன்.. எனக்கு இன்னைக்கே முடிவு தெரிஞ்சாகணும்" என்று பிடிவாதமாக நின்றாள்.

இவளின் பிடிவாதத்திற்குக் காரணமும் மாறன் தான். நேற்றிரவு யாரோ என்னமோ சொல்லி விட்டார்கள் என்று இவளையும் இவளின் அன்னையையும் மிகவும் தரக்குறைவாக பேசி விட்டான். அந்நிமிடத்தில் இருந்து அவ்வீட்டில் இருக்க மாட்டேன்.. அவனின் பணத்தில் உணவுண்ண மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறாள். இதில் அதிரனும் இவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று நின்றால் இவளும் என்ன தான் செய்வாள்.?

இவளின் தந்தையாலும் மகனிடம் பேச முடியவில்லை. பெண்பிள்ளையையும் தனியாக விடவும் மனதில்லை. மகளின் விருப்பம் அதிரன் என்பதை அவரும் அறிந்திருந்ததால் மகளிடம் திருமணத்தைப் பற்றி பேசிட, அவன் சம்மதம் கூறாமல் இவள் என்னவென்று தந்தையிடம் கூறுவாள்.?

அதனால் தான் விடிந்ததும் அதிரனின் முன்பு பிடிவாதம் பிடித்தும் நிற்கிறாள். அப்போதும் அவன் மசிய மாட்டேன் என்கின்ற ரீதியில் நிற்க, இவளுக்கு அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது.

தேம்பலுடன் "யாருக்கும் நான் முக்கியமில்லாம போய்ட்டேன்ல.? அந்த மாடு தான் யாரோ எவனோ என்னமோ சொல்றாங்கனு என் மேல கோவத்தைக் காட்டிட்டு இருக்கு.. நீயும் என் காதலைப் புரிஞ்சுக்காம என்னைய வேணாம்னு நிற்கற.. எல்லாத்துக்கும் நான் விளையாட்டுப் பொம்மையா போய்ட்டனா.? எனக்கு யாரும் வேணாம்.. எதுவும் வேணாம்.. நான் போறேன்.. எங்கையோ போறேன்.. யாருக்கும் முக்கியமில்லாம இருக்கறப்ப நான் ஏன் இங்க இருக்கணும்.?

என் அம்மா பண்ணுன தப்புக்கு நான் தினமும் அனுபவிக்கறேன்.. கருமம் அதைய யாரு இந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னது.? தப்புக்கு மேல தப்பு பண்ணுனது அது.. ஆனா தண்டனை மட்டும் எனக்கா.?" என்று புலம்பினாள்.

இவனுக்கும் இவளை ரொம்பவே பிடிக்கும்.. ஆனால் வாய்விட்டுச் சொல்லவில்லை. அவளின் புலம்பலில் மெலிதாக புன்னகைத்து "எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.?" என்று கேட்டு அதிர்ச்சி அளித்தான்.

அவளோ வேறொரு சிந்தனையில் இருந்ததால் இவன் கேட்டதும் தவறாக புரிந்திட, "நான் எப்பவோ கல்யாணம் பண்ணிட்டு போறேன்.. உனக்கு என்ன.?" என்று மூக்கை உறிஞ்சினாள்.

அப்போதும் மாறா புன்னகையுடன் "எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் ஹேமா.?" என்று அவ்வார்த்தையையே மீண்டும் கேட்டிட, தன் செவியில் விழுந்தது சரியா.? தவறா.? என்று நினைத்து பெருமுழியென விழிகளை உருட்டினாள்.

"என்ன கேட்டீங்க.? என் காதுல தான் தப்பா விழுந்துச்சா.?" என்று திகைத்துப் போய் கேட்க, "இல்ல சரியா தான் விழுந்திருக்கு.. எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டேன்" என்றான் மீண்டும் பொறுமையாகவே.

"அதி உண்மையாவே கேட்கறீங்களா.? இல்ல விளையாடிட்டு இருக்கீங்களா.? பொய்னு சொல்லிராதீங்க.. என்னால ஏமாற்றத்தைத் தாங்க முடியாதுப்பா" என்று விழிகளில் பூத்த நீருடன் கூறினாள்.

அதிரனும் "உண்மையா தான் கேட்கறேன்.. நீ தான் எப்ப கல்யாணம் பண்ணுவ.? பண்ணுவேனு கேட்ட.? அதான் நானே உன்கிட்டயே கேட்கிறேன்.. எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.. எனக்கு இந்த நிமிடமே சம்மதம் தான்.. ஆனா உன் அப்பா அப்படி விட மாட்டாங்களே.. உன் அப்பாகிட்ட போய் பேசிட்டு மத்ததைச் சொல்லுங்க.. நானும் என் அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்" என்றவனின் வார்த்தைகளை இன்னும் இவளால் நம்ப முடியவில்லை.

மீண்டுமொரு முறை அவனிடம் கேட்டு அவனின் வார்த்தைகளை இவள் உறுதிப்படுத்திக் கொள்ள, பின்பு அதீத சந்தோசத்தில் "தேங்க்ஸ் அதி.. ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க சம்மதம்னு சொன்னதை என்னால நம்பவே முடியல.. நீங்க சம்மதிக்க மாட்டிங்கனு தான் நினைச்சேன்.. உண்மையா இப்ப தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. என்னால இன்னும் நம்பவே முடியல" என்று குதூகலித்தாள்.

அவளின் சந்தோசம் இவனையும் தொற்றிக் கொண்டது. இவளைப் பிடிக்காமல் இல்லை. பார்த்ததும் காதல் கொள்ளவில்லை என்றாலும் அவளிடம் பழக பழக அவளைப் பிடிக்கத்தான் செய்தது.

காதல் கொண்டு ஊர் சுற்றித் திரிய ஆசையில்லை. கணவன் மனைவியாக உலகத்தையே வலம் வந்திடவே ஆசை.

வீட்டிற்குத் தெரியாமல் கள்ளத்தனம் புரிந்திட விருப்பமில்லை. ஆனால் வீட்டினரின் அனுமதியுடன் மங்கலநாணைப் பூட்டி அவளிடம் மட்டும் கள்ளத்தனம் புரிந்திட வெகுவாக ஆசை.

காதல் என்ற பெயரில் காமம் கொண்டு வாழ்வைத் தொலைக்க ஆசையில்லை. ஆனால் கணவன் என்ற முறையில் வாழ்நாள் முழுவதும் அவளிடம் காதலுடன் கலந்த காமத்தையும் கொட்டிட பேராசை.

காதல் என்பதே வித்தியாசம் தான்..
அதே போல் இவனின் காதலின் எண்ணங்களும் வித்தியாசமானவையே.

இதனாலே பெண்ணவளின் மீது ஈடுபாடு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் அண்ணனுக்குத் திருமணமாகட்டும் என்று கூறி தள்ளியும் வைத்தான்.

மாறனின் கடுஞ்சொற்களை இவனும் அறிந்தவன் தான். அவனைத் திட்டு வாங்கிவிட்டு தன்னிடம் வந்து தேம்பி அழுபவளைக் கண்டு பாவமாக இருக்கும். ஆனால் படிப்பு முடியட்டும்.. அவளுக்கென்று ஒரு அடையாளத்தைத் தேடி வாழ்க்கை என்னவென்றால் என்னவென்று அறியட்டும் என்று தான் விலகி விலகி நின்றான்.

இதற்கு மேலும் இவளைக் காயப்பட விட்டு இவன் என்ன செய்ய போகிறான்.? திருமணமாகும் போது ஹேமாவின் கணவர் இவன் என்ற வார்த்தையைத் தான் கேட்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் இவள் தான் அதிரனின் மனைவி என்ற வார்த்தையே மேலோங்கும். சரி இருந்து விட்டு போகட்டும். இப்படித்தான் நடக்க வேண்டுமென்று இருந்தால் அதை எப்படி மாற்றிட முடியும்.?

குதூகலத்துடன் தந்தையிடம் "அப்பா அதி கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லிட்டான்.. அவங்க அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேனு சொன்னாங்கப்பா" என்று மகிழ்ச்சியில் ஆர்பரித்த மகளின் சந்தோசம் அந்த தகப்பனையும் தொற்றிக் கொண்டது.

'ரொம்ப சந்தோசம்' என்பதைப் போல் அவர் கையைத் தூக்கி ஆசிர்வாதம் செய்திட, "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. நான் கல்யாணமாகி போறப்ப உங்களையும் சேர்த்தே கூட்டிட்டு போறேன்.. இனியாவது நிம்மதியா இருங்கப்பா.. உங்களைய விட்டுட்டு எல்லாம் போக மாட்டேன்" என்றாள்.

தந்தை தவறு செய்தவராக இருந்தாலும் எந்த மகள் பெற்றவரை விட்டுக் குடுப்பாள்.? மாறனின் அன்னையை விட்டு விட்டு இவளின் அன்னையை இவர் திருமணம் செய்து கொண்டது தவறென்று தான் இவளும் உரைப்பாள். அதற்காக தந்தையை விட்டு விடுவாளா என்ன.?

'ஏன்ப்பா இப்படி பண்ணுனீங்க.? இதனால உங்களுக்கு என்ன கிடைச்சுது.?' என்று மட்டும் தான் கேட்டாள். வேறெதுவும் கேட்கவும் இல்லை. தந்தையை நன்றாக கவனித்துக் கொள்ளவும் செய்கிறாள். இவளின் கவனிப்பில் தான் அவரின் உடல்நிலையும் நன்றாகவே தேறி வந்திருந்தது.

மகளின் வார்த்தைக்கு அவர் எதுவும் கூறவில்லை. பார்வையை மட்டுமே வீசினார். அவரின் எண்ணம் என்னமோ என் மீதி வாழ்நாள் எப்படியோ கழியட்டும்.. ஆனால் இனியாவது என் பெண் நன்றாகவே வாழ வேண்டும் என்பது மட்டும் தான்.

மாறனும் வீட்டினுள் தான் இருந்தான். இவனின் சம்பாஜனைகள் அவனின் செவியில் விழுந்தாலும் அவன் கண்டு கொள்ளவில்லை.

கண்மூடி கிடந்தவனுக்குத் தான் வாழ்வில் எத்தனை ஏமாற்றங்கள். வாழ்க்கைத் தந்த பாடம் தான் அவனை இவ்வளவு கடுமையாக மாற்றவும் செய்தது. வலியை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் இவர்களிடம் காட்டி கெட்டவன் என்ற பெயருடன் வலம் வருகிறான்.

மனதிலேறிய பாரத்தை இவர்களிடம் கத்தி கத்தி அப்போதே இறக்கி வைப்பதால் தான் அவன் இந்நாள் வரை சிறிது உயிர்ப்புடன் இருக்கிறான். இல்லையென்றால் அனைத்து உணர்வுகளும் எப்போதே மரத்துப் போய் மாறன் என்ற மனிதனையே அடியோடு சாய்த்திருக்கும்.

தங்கையின் வார்த்தையைக் கேட்டு இவனுக்கும் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பவில்லை அவன்.

பல ஆண்கள் அவர்களின் வலிகளை அமைதியாக கடந்து விடக் கூடியவர்கள். அதில் மாறனும் அடக்கம். அவர்களை வாழ்க்கை என்னும் புயல் ஓயாமல் சுழன்றடித்தாலும் அதில் நீந்தி கரை சேரக் கூடியவர்கள். இதில் மாறன் மட்டும் விதிவிலக்கா என்ன.?

'என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.. நான் இப்படித்தான்.. அதற்கு என்ன செய்ய முடியும்.?' என்று நினைப்பவன்.

முதலில் தந்தை.. பின்பு அவனின் அன்னை.. இறுதியில் கரம்பிடித்த அவனின் மனைவி.. இப்படி அவன் நம்பியவர்கள் அனைவரும் துரோகம் என்ற பரிசையே பரிசளித்திருக்க, இவனும் அதை வாங்கிக் கொண்டு வாழ்க்கை என்னும் படகில் விடாமல் நீந்திக் கொண்டிருக்கிறான். இனியும் நீந்துவான் என்பதில் மட்டும் ஐயமில்லை.

காவ்யாவின் பேச்சைக் கேட்டு அவளைத் திருமணம் செய்தால் என்ன.? என்று தோன்றியதில் தான் அவளின் இல்லத்திற்குச் சென்றான். அவர்களிடம் உண்மையை மறைக்க விருப்பமின்றி கூறிட, அதுவே இவனுக்கு வினையாகவும் மாறியது.

உண்மையாக இருக்க நினைத்து கடைசியில் அவனுக்கு கிடைத்ததும் ஏமாற்றமே.. இன்னும் எத்தனை ஏமாற்றங்கள் தான் இவனைச் சூழ்ந்திருக்கிறதோ.?

வாழ்க்கையில் மட்டுமா பணியிடத்திலும் அப்படியே.. உயிரை பணயம் வைத்து குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கூண்டில் நிறுத்தினால் அவர்கள் சுலபமாக பணத்தை வாரியிரைத்து போய் வருகிறேன் என்று நக்கல் சிரிப்பை உதித்து விட்டு செல்கிறார்கள். அப்போதும் அமைதியாக கைகட்டி நிற்பதை தவிர இவனுக்கு வேறு வழியில்லை.

மீண்டும் அதே தவறு.. மீண்டும் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடிப்பது.. பணத்தை வாங்கி விட்டு அவர்களை வெளியில் விடுவது.. தொடர்ந்து நடப்பதும் இதுவே.

பல வழக்குகளை இவன் திறன்பட கையாண்டாலும் சட்டம் பணப்பலம் இல்லாதவர்களை மட்டுமே தாக்குகிறது. இவர்களுக்கு பாராபட்சமின்றி தண்டனையையும் வழங்குகிறது. பணமுதலையர்களுக்குத் தண்டனை கூட ஏதோ போனால் போகுதென்று கிடைப்பது போல் தான் இருக்கும்.

இவன் காக்கி உடைக்கு நேர்மையாக இருந்து என்ன பயன்.? குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பது அரிதாக இருக்கிறதே.?

மீனவக்குப்பத்தில் இறந்த பெண்களின் சாவிற்கானவர்களை இவன் நெருங்கி விட்டான். காரணம் என்னவென்றும் இவன் ஓரளவிற்கு ஊகித்தும் விட்டான். ஆனால் அவர்களை விசாரிக்க தடைவிதிக்கப்பட்டது. இவனின் உழைப்பும் வீண்.. அந்த பெண்களின் முயற்சியும் வீண்.. என்பதைப் போல் தான் இன்றைய காலகட்டமே
இருக்கிறது.

தந்தையும் மகளையும் கண்டு கொள்ளாமல் புயலென வீட்டினுள் நுழைந்த அதிரன் "மாறா உன்னைய பார்க்க வேலன் வந்துருக்கான்.." என்றதில் வேகமாக எழுந்தமர்ந்தான் அவன்.


மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
தந்தை செய்த தவறு
தாய் தவறியது
தன் தாரமும்
தன்னை விட்டு சென்றது...
தங்கையுடன் தந்தை
தன் மனபாரத்தை
திட்டி தீர்த்து கொள்ள....

திருமணத்தை செய்து
தந்தையுடன் கிளம்பிட
தங்கை நினைத்திருக்க...

தற்கொலை செய்ததன்
திட்டமிட்ட சதி என்ன??
தீவிர யோசனையில் இருக்க....

தீர்வுகள் கிடைக்குமா??
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
தந்தை செய்த தவறு
தாய் தவறியது
தன் தாரமும்
தன்னை விட்டு சென்றது...
தங்கையுடன் தந்தை
தன் மனபாரத்தை
திட்டி தீர்த்து கொள்ள....

திருமணத்தை செய்து
தந்தையுடன் கிளம்பிட
தங்கை நினைத்திருக்க...

தற்கொலை செய்ததன்
திட்டமிட்ட சதி என்ன??
தீவிர யோசனையில் இருக்க....

தீர்வுகள் கிடைக்குமா??
🤩😍😍😍
 
Top Bottom