• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பாவை - 10

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
பாவை - 10




அதிரனைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று காவ்யா இருக்க, இவளின் கெட்ட நேரமோ என்னமோ அவனைக் காணும் வாய்ப்பே அமையவில்லை. ஓரிரு முறை மாறனைத் தான் பார்த்தாள். அவனிடம் சென்று பேசி தயக்கமாக இருக்க, பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

ஒரு வழியாக அதிரனும் இவளின் விழிகளில் சிக்கிட, பொது இடம் என்பதையும் மறந்து "அண்ணா அண்ணா" என்று கத்தி அவனின் பின்னே ஓடினாள்.

அவனை வழிமறித்து நின்றவளுக்கு மூச்சு வாங்கியது. இவள் ஏன் இப்படி ஓடி வருகிறாள்.? என்று புரியாமல் அவன் சுற்றியும் பார்த்திட, "ஒன்னுமில்லண்ணா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று மூச்சு வாங்கவே கூறினாள்.

"முதல்ல அமைதியா உட்காரு.. அப்பறம் பேசலாம்" என்று அவளை அதட்டி குடிக்க தண்ணீரையும் நீட்டினான். அவளும் மறுக்காமல் வாங்கி பருகினாள்.

'என்ன பேசணும்.? சொல்லு.."

"அது...'

"என்னம்மா.?"

"எனக்கு அவங்கள பத்தி தெரியணும்.."

"யாரைப் பத்தி.? நீ யாரைச் சொல்ற.?" என்று கேட்டவனுக்கு உண்மையாகவே இவள் யாரைக் கேட்கிறாள் என்று புரியவில்லை.

அதீத தயக்கத்துடனே "மாறன்" என்று இழுத்திட, "அவனைப் பத்தி என்ன தெரியணும்.?" என்றான்.

"உண்மையாகவே அவங்களுக்கு கல்யாணமாகிருச்சா.?"

"ஆமா.. அதுல என்ன பொய் சொல்ல போறோம்.?"

"அவங்க வொய்ப் எங்கண்ணா.?"

நண்பனாக இருந்தாலும் அவனைப் பற்றி அடுத்தவரிடம் கூற இவனின் மனது ஒப்புக் கொள்ளவில்லை.

"அதைய தெரிஞ்சு நீ என்னம்மா பண்ண போற.? அவனைப் பத்தி நான் எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்.? உனக்கு ஏதாவது தெரியணும்னா அவன்கிட்டயே கேளு.. ஆமா அவனைப் பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ண போற.? உனக்கு அதெல்லாம் எதுக்கும்மா.?" என்று மறுக்கவே செய்தான்.

"நீங்க என்னைய என்ன நினைச்சாலும் பரவால்லண்ணா.. எனக்கு அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்.. நான் பாட்டுக்கு ஏதோ பண்ணி விட்டு நீங்க வீட்டுக்கு வந்து என் அப்பா அப்படி பேசி.. திரும்பி போனது மனசை ரொம்பவே பிசையுதுண்ணா.. ஏதோ தப்பு பண்ணிட்டேனு தோணுது.. எனக்கு அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்..

உங்களைய பார்க்கணும் பார்க்கணும்னு ரொம்ப எதிர்பார்த்து இப்பத்தான் என் கண்ணுல நீங்க சிக்கிருக்கீங்க.. ப்ளீஸ்ண்ணா என்ன நடந்துச்சுனு சொல்லுங்க" என்று ஏறத்தாழ கெஞ்சவே செய்தாள்.

இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவளைப் பார்க்கவும் பாவமாக இருந்திட, இவளிடம் சொன்னால் நண்பனின் வாழ்வும் மலர்ந்து விடாதா.? என்ற ஏக்கத்தில் உண்மையைக் கூற நினைத்தான்.

"முதல்ல அவன் குடும்பத்தைப் பத்தி தெரியுமாடா.? தெரிய வாய்ப்பில்லைனு நினைக்கறேன்.. அப்பா இருக்காரு.. அம்மா இறந்துட்டாங்க.. தங்கச்சி ஒருத்தி இருக்கா.. ஆனா அவங்க இவன் கூட பிறந்தவங்க இல்ல" என்று விலாவாரியாக கூறினான்.

மாறன் வேலையில் சேர்ந்திருந்த புதியது. அவன் ஒன்றும் திருமணம் வேணாம் என்றெல்லாம் சந்நியாசம் செல்ல விரும்பவில்லை. அவனுக்கேற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தில் தான் இருந்தான்.

கையிலாகாத தந்தையை வைத்துக் கொண்டு யாரை விட்டு பெண் தேட சொல்லுவான்.? இவனே தான் அனைத்தும் செய்தான்.

இவனின் ஆசையே இவனுக்கென்று ஒரு குடும்பம்.. தனிமையை நீக்கி மனைவி குழந்தைகளுடன் நிறைவான வாழ்வை வாழ நினைத்தான். இவனின் நினைப்பும் சாதாரணமான ஒன்றாயிற்றே.

பெண்ணைத் தேடினான். அப்படி கிடைத்தவள் தான் அகிலா. நன்கு படித்தவள்.. பார்க்கவும் அழகாகவே இருப்பாள். வீட்டிற்கு இரண்டாவது பெண்.. மாறனைப் பற்றி இவளின் பெற்றோர்கள் அறிந்திட, பெற்றோர் இல்லாத குறையைத் தவிர வேறெந்த குறையும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.

அதுவும் நல்லது தான்.. சிறிது நாட்கள் தனியாக இருந்தால் பின்பு மகளையும் மருமகனையும் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம் என்றெண்ணி திருமணத்திற்கும் சம்மதமளித்தனர்.

முதலில் மாறனும் அகிலாவும் தனியாக பேசினார்கள். பின்பு தான் திருமணத்திற்கான ஏற்பாடே தொடங்கியது. மாறனின் பக்கம் அதிரனின் அன்னை தான் முன்னால் நின்று அனைத்தையும் செய்ய வேண்டிய சூழ்நிலை. அதையும் மகனுக்காக ஏற்றுக் கொண்டார்.

வேலை பளுவின் காரணமாக அதிகமாக அவன் அகிலாவுடன் பேச முடியவில்லை. எப்படியும் திருமணத்திற்கு பிறகு அவளுடன் தான் காலம் முழுவதும் இருக்க போகிறோம் என்று தன்னைத் தானே மாறன் தேற்றிக் கொள்ள, இதுவே முதல் குறையாக தோன்றியது அகிலாவுக்கு.

இதிலிருந்து அவனின் மேல் அதிருப்தி ஏற்பட்டது. திருமணத்தின் போதும் அவன் இடைவெளியைக் கடைபிடித்து கண்ணியமாகவே அனைத்தும் செய்ய, அவள் எதிர்பார்த்ததைப் போல் இவனில்லை என்ற எண்ணமே அவளிடம் மேலோங்கி நின்றது.

அதன் விளைவு நண்பனாக பழகிய தீனாவின் மீது ஈர்ப்பும் தோன்றியது. முதலிலே அவனின் மேல் ஒருவித பிடித்தம் இருக்கவே செய்திட, அவன் வேறு இனம் என்பதால் தன் விருப்பத்தை மனதினுள் பூட்டி வைத்திருந்தாள்.

மாறனைப் பார்க்கவும் பிடித்திருந்தது. அதனால் திருமணத்திற்குச் சம்மதம் என்று கூறினாள். ஆனால் இப்போது அவனைப் பிடிக்கவில்லை என்று கத்திக் கூற நினைக்கிறாள். ஆனால் அது முடியவில்லை.

என்ன செய்வது.? என்று புரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தவள் இறுதியாக திருமணம் முடிந்து இரண்டே நாட்களில் காணாமல் போயிருந்தாள். மகளைக் காணாமல் பெற்றவர்கள் துடியாக துடித்திட, அவள் எங்குவென்று தேடிய மாறனுக்கு தீனாவுடன் மறுபடியும் திருமணம் முடிந்த செய்தி வந்தடைந்தது.

அவனால் நம்ப முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு தன் கையால் தாலியை வாங்கி விட்டு அடுத்த இரண்டு நாட்களில் வேறொருவனின் கையாலும் தாலியை வாங்கி இருக்கிறாள்.

இதற்கு திருமணத்திற்கு முன்பே இவள் சென்றிருக்கலாம்.. எதற்கு திருமணம் முடியும் வரை காத்திருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம்.

அகிலாவின் பெற்றவர்களால் மாறனை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை. அவனிடம் மன்னிப்பு வேண்டி இவர்கள் மன்றாட, அவனும் மன்னித்து விட்டான். வேறு என்ன செய்ய இயலும்.? பிடிக்காமல் சென்றவேளை இழுத்து வந்து என்னுடன் தான் நீ வாழ வேண்டும் என்று கூறிட முடியுமா.?

அதிலிருந்து திருமணம் என்ற வார்த்தையே இவனுக்கு கசந்தது. முதலில் இவனின் தந்தை ஹேமாவின் அன்னையைத் திருமணம் செய்ததையே அடியோடு வெறுத்தவனுக்கு இப்போது அகிலாவின் செயலும் நிலைகுலைய வைத்தது உண்மையே.

படித்து பெரிய பதவியில் இருப்பவன் இவன். இவனிடம் என்ன குறை இருக்கிறதோ.? திருமணமான இரண்டே நாட்களில் ஒரு பெண் சென்று விட்டாள்.. என்று இவன் பணிபுரியும் இடங்களில் பேசாத பேச்சுக்கள் இல்லை. அதனையும் கடந்து வர பழகி விட்டான். அனைத்தையும் பழகி பழகி இப்போது அவனின் உணர்வுகளே மரத்தும் போயிருந்தது.

திருமணமே வேணாம் என்றிருந்தவன் காவ்யாவின் பேச்சைக் கேட்டு அவளின் மீது முளைத்த சிறு ஆசையின் காரணமாக அவளின் வீட்டிற்கும் சென்று அவமானப்பட்டு திரும்பி இருக்கிறான். தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவன் இவன்.

"அந்த பொண்ணுக்கு இவனைப் பிடிக்கலயாம்.. அது எதிர்பார்த்த அளவுக்கு இவன் இல்லையாம்.. மத்தவங்கள மாதிரி நடுரோட்டுல கட்டிப் பிடிச்சு முத்தம் குடுத்து நிற்கலயாம்.. அப்பறம் விடிய விடிய இவன் கூட போன் பேசலயாம்.. பெரிய பதவில இருந்தும் வாழ்க்கைனா என்னனு தெரியலயாம்.." என்று அகிலா கூறிய காரணங்களை இவளிடமும் கூறினான்.

காவ்யாவிற்கே இதெல்லாம் ஒரு காரணமா.? என்று தோன்றியது. பேசவில்லை அது சரி.. பொது இடத்தில் நாகரிகமாக நிற்பது தவறா.? விடிய விடிய போன் பேசினால் மட்டும் தான் பிடித்தமா.? அதே போல் சாலையில் சாகசம் செய்தால் தான் பிடித்தம் ஏற்படுமா.? இப்படியும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.

உப்புசப்பில்லாத காரணத்தை அடுக்கி விட்டு இதை அனைத்தையும் செய்பவனுடன் சென்று அந்த பெண்ணால் நன்றாக இருக்கத்தான் முடியுமா.?

திருமண வாழ்க்கைக்குத் தேவையே புரிதலும் காதலும் தான். அதைக் கொட்டி குடுத்தால் போதாதா.? இன்றைய காலகட்டப் பெண்களை என்னவென்று சொல்வது.?

"இதெல்லாம் ஒரு காரணமா.? என்னண்ணா இப்படி.? அந்த பையன் இதெல்லாம் பண்ணுனா அவங்க எதிர்காலத்துக்குத் தேவையான எல்லாமும் கிடைச்சுருமா.?"

"அது கிடைக்கும்னு தான் நினைச்சு போய்ருக்கு.. அதுக்கு என்னம்மா பண்ண முடியும்.?"

"இதெல்லாம் எப்ப நடந்துச்சுண்ணா.?"

"ஒரு நாலு வருசம் இருக்கும்மா.. இப்ப அந்த பொண்ணுக்கு ரெண்டு பொண்ணுக இருக்காங்கனு கேள்விப்பட்டேன்.. அந்த பொண்ணோட அப்பா, அம்மாவும் அதைய ஏத்துக்கிட்டாங்கனு தான் சொன்னாங்க.."

"பெத்த புள்ள தப்பு பண்ணுனாலும் அவங்க அப்படியேவா விட போறாங்க.?"

"ம்ம்ம்ம் உண்மைதான்.. என்ன இருந்தாலும் அவங்க புள்ளையாச்சே.. தப்பு எல்லாம் அவங்க மேல இருந்தாலும் என்னமோ மாறன் தான் தப்பு செஞ்ச மாதிரி இப்ப வரைக்கும் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கான்.. இவனுக்குத் தான் ஏதோ குறை இருக்காம்.. அதான் அந்த பொண்ணா ஓடி போயிருச்சாம்.."

"இதுக்கு என்ன சொல்றதுனு எனக்குத் தெரியலண்ணா.. பேசாம அந்த பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே போய் தொலைஞ்சுருக்க வேண்டியது தானே.? இப்படி அவமானத்துக்கு அந்த அவமானமே பரவால்லயே.? இது மாறனுக்கு மட்டுமா அவமானம்.? அந்த பொண்ணுக்கு இல்லையா.? அந்த பையன் வீட்டுல எப்படிண்ணா ஏத்துக்கிட்டாங்க.?" என்று நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கேட்டாள்.

"அவங்க வீட்டுல முதல்ல ஏத்துக்கலம்மா.. தனியா தான் இருந்தாங்க.. அப்பறம் அவங்களும் என்ன பண்ணுவாங்க பையனுக்காக சம்மதிச்சு தானே ஆகணும்.." என்றான் விரக்தியாக.




அதிரன் கூறியதே தான் திருப்பி திருப்பி ஞாபகத்தில் வந்து இம்சித்தது பெண்ணவளுக்கு. அவளால் அவ்வளவு எளிதாக அதைக் கடந்து விட முடியவில்லை. மாறனின் மேலும் ஒரு வித பிடித்தம் தோன்றியதும் உண்மையே.

மறைக்காமல் அவளின் தந்தையிடமும் இதைக் கூறிட, "ப்ச் பாவம் தான் அந்த தம்பி.. அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.?" என்று அவர் வருந்தவே செய்தார். ஆனால் மகளின் மனதில் வேறொரு எண்ணம் முளைத்திருப்பதை பாவம் அந்த அப்பாவி தகப்பன் அறியவில்லை.

"அப்பா நான் அவங்களயே கல்யாணம் பண்ணிக்கிட்டா.?" என்று கேட்டு அவருக்கு நெஞ்சுவலியை வரவைத்தாள்.

"இன்னும் இதைய விடலயா நீ.?" என்றவர் "வேணாம்மா.. என்ன தான் அந்த தம்பி பாவமா இருந்தாலும் நீ ஏன் ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணனும்.? உனக்கு என்ன குறை.? இல்ல நான் தான் கையிலாகாம இருக்கேனா.? தயவுசெஞ்சு விட்டுரு.. மறுபடியும் இதைய நினைச்சுட்டு இருக்காத" என்று மறுக்கவே செய்தார்.

அவருக்கும் மாறனைப் பிடிக்கவே செய்தது. ஆனாலும் இரண்டாந்தாரம் என்பது மட்டுமே அவரின் மனதை அரித்தது. அவனின் மேல் தவறில்லை என்றாலும் ஒரே மகளை இப்படி திருமணம் செய்து குடுக்க யாரால் முடியும்.? இவரும் சராசரி தந்தை தானே.?

"அவங்க மேல தப்பில்லைனு தெரிஞ்சும் எப்படிப்பா நீங்களும் இப்படியே சொல்றீங்க.?"

"தப்பு இருக்கோ இல்லையோ அந்த பையன் வேணாம்.. விட்டுரும்மா"

"எனக்கு அவரைப் பிடிச்சுருக்கே.?"

"......."

"ப்ளீஸ்ப்பா.. அவருக்கு என்ன குறை.? முதல்ல பேசறப்பவே எனக்கு அவரைப் பிடிச்சுச்சு.. இப்ப அவரையே கல்யாணம் பண்ணுனா என்னனு தோணுது.. ப்ளீஸ்ப்பா.. சம்மதம் சொல்லுங்க" என்று கெஞ்சினாள்.

அவரால் மறுக்கவும் முடியவில்லை. அதே சமயம் ஏற்கவும் முடியவில்லை. மகளிடம் எதுவும் சொல்லாமல் நகர்ந்து சென்றிட, மாறனிடம் இதை எப்படி பேசுவது என்று புரியாமல் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள் இவளுக்கு வேலை வைக்காமல் அவளின் தந்தையே அனைத்தையும் ஏற்க போவதை அறியாமல்.!

அதிரனின் திருமண வேலைகளுடன் அவ்வழக்கும் தொடர்ந்தது. ஒருவழியாக திருநீலகண்டனைப் அனுமதியும் கிடைத்திட, அவரிடம் அப்பெண்களைப் பற்றி விசாரித்தான்.

அவரோ சாதாரணமாக "என்கிட்ட அவங்க பேசுனாங்க.. நானும் அது உண்மையில்லைனு சொல்லி அனுப்பிட்டேன்.. அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுனு எனக்கு எப்படிப்பா தெரியும்.? அந்த பொண்ணுக செத்தா நான் என்ன பண்ண முடியும்.? ஆனா எனக்கும் வருத்தமாக தான் இருந்துச்சு.. ப்ச் வாழ வேண்டிய பொண்ணுக.. இப்படி பாதிலயே சாகணுமா.?" என்று போலியாக வருத்தத்தையும் காட்டினார்.

அவர் தான் குற்றவாளி என்று நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லாததால் மாறனும் அமைதியாக வர வேண்டிய நிலைமை. இப்போது அவர்களிடம் இருக்கும் ஒரே துரும்புச்சீட்டு தரகேஷ் மட்டுமே. அவனின் மூலம் சிலை கடத்தல் உண்மையா.? பொய்யா.? என்றறிந்தால் மட்டுமே அவருக்கு தண்டனை வாங்கி தர முடியும். அதற்கு முதலில் தரகேஷ் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அவனைப் பிடித்து அவ்வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள விரும்ப, அவனோ தந்தைக்கு எதிராக செயல்படுவதை விரும்பாமல் "சாரி சார்.. என் அப்பா தப்பு பண்ணிருக்க வாய்ப்பே இல்லை.. என்னால அவரைச் சந்தேகப்பட முடியாது" என்று மறுத்தான்.

நீங்க சந்தேகப்படணும்னு சொல்லல.. அந்த பொண்ணுக சாவுக்கு நீதி கிடைக்கணும்னு நினைக்கறேன்.. என்று அவனிடம் பேசி பேசியே ஒரு வழியாக தலையாட்டவும் வைத்தான்.



தரகேஷூம் யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவ்வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட ஆரம்பித்தான். அதன் விளைவு வள்ளி கூறியதும் உண்மை என்று நிரூபணம் ஆனது. இவனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. தந்தையை மாட்டி விடவும் மனதில்லை. அதே சமயம் ஈஸ்வரியின் இறப்பிற்காவது நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினான்.

அதற்காகவே தந்தையை மாட்டியும் விட்டான்.. எப்படியும் அவர் வெளியில் வந்து விடுவார்.. அவருக்கு இது புதியதும் இல்லையே.. பெண்களின் சாவிற்கு நியாயம் வாங்கி தந்த திருப்தியாவது கிடைக்கும் என்று மாறனிடம் ஆதாரத்தை அளித்தான்.

"ரொம்ப நன்றிப்பா.. நீ இதைய செய்வேனு நான் நினைக்கல.."

"என்ன சார் பண்றது.? என் அப்பா தப்பு பண்ணுனாலும் வெளில சொல்ல மனசு வரல தான்.. ஆனா ஈஸ்வரிக்காக இதைய பண்ணுனேன்.. கொஞ்சம் மனதிருப்தியாவது கிடைக்கட்டும்.."

"உன்னால கோர்ட்டுக்கு வர முடியுமா.?"

"சாரி சார்.. என்ன இருந்தாலும் அவரு என் அப்பா.. இதுக்கு மேல என்கிட்ட எந்த உதவியும் எதிர்பார்க்காதீங்க.. ப்ளீஸ்.."

"புரியுதுப்பா.. நீ இதைய செஞ்சதே பெருசு தான்.. கண்டிப்பா உன்னைய இழுக்க மாட்டேன்.."

"சார் நீங்க கஷ்டப்பட்டு என் அப்பாவைக் குற்றவாளினு நிரூபிச்சாலும் அவரு அப்பவே வெளில வர தான் போறாரு.. இதுக்கு ஏன் சார் நீங்க இவ்ளோ கஷ்டப்படணும்.?"

"தண்டனை கிடைக்குதோ இல்லையோ என் வேலைக்கு நான் உண்மையா இருக்கணும்னு நினைக்கறேன்.. அது வரைக்கும் எனக்கு போதும்" என்றவன் கிளம்பினான்.

"மாப்பிள்ளை சார் வாங்க வாங்க.." என்று கிண்டலாக அதிரனை வரவேற்றான் மாறன். ஆம் இன்னும் ஒரு வாரத்தில் அதிரன் ஹேமாவின் திருமணம் நடைபெறவுள்ளது. அதுவும் ஹேமாவின் விருப்பப்படியே கோவிலில் தான். அவளுக்கு அதிகமாக ஊரைக் கூட்டி திருமணம் செய்ய ஆசையில்லை. அதிரனின் விருப்பமும் இதுவாகவே இருக்க, திருமணமும் எந்த ஆடம்பரமின்றி நடைபெற்றது.

இதில் அதிரனின் அன்னைக்கு சிறிது வருத்தம் தான்..மகனை மீறி எதுவும் பேச இயலாமல் வாயை மூடியும் கொண்டார். ஹேமாவிற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரு அண்ணனாக செய்தான் மாறன். எந்த குறையும் வைக்கவில்லை. அதில் அதிரனின் அன்னைக்குத் திருப்தி.

அவர்களின் தந்தை ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்ததோடு சரி.. எதையும் செய்யவில்லை.. ஆனால் அவரின் மனதில் தன் மகனுக்கும் இப்படியொரு நிகழ்வு நடந்து விடாதா.? என்று ஏங்கவே செய்தது.



அதிரன் காவ்யாவையும் திருமணத்திற்கு அழைத்திருக்க, அவளும் தந்தையுடன் வருகை தந்திருந்தாள். வந்ததில் இருந்து மாறனின் விழிகளில் அகப்படாமல் இருக்க பெரும்பாடும் பட்டு போனாள்.

திருமணம் முடிந்ததும் தான் எப்படியோ ஆடவனின் பார்வையில் விழுந்திட, "ஏய் இங்க என்ன பண்ற நீ.?" என்று கேட்டு அவளை நோக்கி சென்றான்.

"அது... நானும் கல்யாணத்துக்கு தான் வந்தேன்.."

"நீயா.? ஆமா உன்னைய யாரு கூப்பிட்டது.?"

"அதிரன் அண்ணா தான்"

"அண்ணாவா.? அவனா.?"

"ம்ம்ம்ம் ஆமா.. அவன் கூட எப்ப பழக்கம்.?"

"......"

"ஏய் உன்னைய தான்.."

"எப்பவோ பழக்கம்.. அதைய ஏன் நான் உங்ககிட்ட சொல்லணும்.?"

"ஆஹான்.. சரி போ" என்று விட, பெண்ணவளுக்கு தான் சப்பென்றானது. ஏன் என்னிடம் சொன்னால் என்ன.? என்று கேட்பான் என்று நினைத்தாள். ஆனால் அப்படி எதுவும் அவன் கேட்கவில்லை.

அவனைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே அவள் நகர, மாறனைத் தேடி வந்தார் காவ்யாவின் தந்தை குமரேசன்.

"போலீஸ் தம்பி" என்றழைத்து அவனின் கவனத்தைத் தன் புறம் திருப்பியவர் "வாங்க அங்கிள் வாங்க" என்றழைக்கவே செய்தான். அவரிடம் கோவத்தைக் காட்ட அவர் என்ன தவறு செய்தார்.?

"அன்னைக்கு தெரியாம அப்படி பேசிட்டேன் தம்பி.. என்னைய மன்னிச்சுருங்க" என்று தன் செயலுக்கான மன்னிப்பை இவர் வேண்ட, அப்படி என்ன இவர் பேசுனார்.? என்பதே அவனின் ஞாபகத்தில் இருக்கவில்லை.

தன்னைப் பற்றி தெரியாமல் திருமணத்தைப் பற்றி பேசினார்.. தெரிந்ததும் தன்மையாக தான் முடியாது என்றார். இதில் என்ன தவறு இருக்கிறது.?

"அங்கிள் நீங்க எதுவும் தப்பா பேசலயே.. அப்பறம் எதுக்கு மன்னிப்பு எல்லாம்.?"

"இல்லப்பா வீடு தேடி வந்தவங்க கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது"

"ப்ச் விடுங்க அங்கிள்.. உங்க தப்பு எதுவுமில்ல"

"அப்பறம் முக்கியமான ஒரு விசயம்ப்பா.."

"சொல்லுங்க அங்கிள்.." என்றவன் ஞாபகம் வந்தவனாக "அங்கிள் உங்க பொண்ணுக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை..ரொம்ப கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சு என்ன பண்ண போறீங்க.? கொஞ்ச நாளைக்கு விடுங்க.. அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. இதனால தான் அவங்க இப்படி சொல்லிட்டு இருக்காங்க.. அவங்க விருப்பத்துக்கும் மதிப்பு குடுங்க அங்கிள்" என்று கடந்த கால வாழ்வில் காயம்பட்டவனாக கூறினான்.

இவன் ஏன் இப்படி கூறுகிறான் என்பது அவருக்கும் புரிந்தது.

"அது என் தப்புத்தான்ப்பா.. இனி அப்படி பண்ண மாட்டேன்.. அதைய பத்தி தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேன்.."

"என்கிட்ட என்ன பேசணும்.?"

"என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா.?" என்று கேட்டு அதிர்ச்சியளித்தார். சத்தியமாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை.

அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் "ப்ச் அங்கிள் விளையாடாம போங்க.. எனக்கு நிறையா வேலை இருக்கு" என்றவனிடம் அவர் ஏதோ பேச வர, அதற்குள் பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்குக் கிளம்பியதில் மாறனும் கிளம்ப வேண்டியதாக போயிற்று.

மறக்காமல் அதிரனைப் பார்த்து அவனின் அலைப்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார். முதலில் மகளின் வார்த்தையில் கோவம் கொண்டாலும் மாறனை மறுக்க எந்த காரணமும் அவருக்குத் தோன்றவில்லை.

மகளின் திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவளின் தலையில் எழுதி இருந்தால் அதை மாற்றி எழுதிட இவரால் முடியுமா.? யோசித்தார் நிறையவே யோசித்தார்.. பின்பு ஒரு மனதாக மாறனையும் மருமகனாக மனதில் நிறுத்திட, அவனிடம் பேசவும் தயக்கம் எழவில்லை.

இன்னும் இதை காவ்யாவிடம் கூட கூறவில்லை. மாறனிடம் பேசி விட்டு பின்பு மகளிடம் கூறிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார். இது எதையும் அறியாமல் காவ்யா தான் மாறனிடம் எப்படி பேசுவது என்று தவிப்பாய் தவித்து துடிக்கிறாள்.

பிடித்தம் இல்லாமலே அவளின் தவிப்பு விசித்திரமானது.
காதல் இல்லாமலே அவளின் துடிப்பும் வித்தியாசமானது.
இவன் தான் தன் வாழ்வு என்று அறியாமலே
இவளின் பதட்டம் புதியதானது.
அவனைப் பார்த்தால் பதறி நிற்கும் இவளின் பதட்டமும் தேவையில்லாதது.
இதென்ன விந்தையிலும் விந்தையான செயல்.?
காதல் என்ற ஒன்று வராமலே ஒருவரை இத்தனை படுத்தி எடுக்குமா.?
எடுக்கிறதே.. விடாமல் படுத்தி எடுக்கிறதே இந்த பெண்ணவளை..
அதில் கட்டுண்டு கிடப்பவள் எதைக் கொண்டு மேலேறி வருவாள்.?
எதை தின்றால் பித்தம் தெளியு
ம் என்ற மனநிலையில் இருப்பவள் எதை தின்று மீண்டு வருவாள்.?
இத்தனைக்கும் அருமருந்து மாறன் என்பவன் மட்டும் தான் என்பதை இவளும்
அறிந்து கொண்டாளே.?
ஆனால் புரிந்து கொள்ள வேண்டியவன் புரிந்துக் கொள்வானா.?
விலகிச் செல்வானா.?



மாறுவான்..
 

Author: AArani
Article Title: பாவை - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
197
குற்றம் செய்வதற்கு தண்டனை
கிடைக்குதோ இல்லையோ
குற்றத்தை நிரூபித்த திருப்தி கிடைக்கும்....
மாறனின் எண்ணமும் அதுவோ.....

விளையாட்டுக்கு சொல்லி
வினையாகி போக_ இன்று
விரும்பி நிற்கிறாள்...
விருப்பம் நிறைவேறுமா???
 

AArani

New member
Joined
Mar 27, 2025
Messages
25
குற்றம் செய்வதற்கு தண்டனை
கிடைக்குதோ இல்லையோ
குற்றத்தை நிரூபித்த திருப்தி கிடைக்கும்....
மாறனின் எண்ணமும் அதுவோ.....

விளையாட்டுக்கு சொல்லி
வினையாகி போக_ இன்று
விரும்பி நிற்கிறாள்...
விருப்பம் நிறைவேறுமா???
நன்றிகள்
 
Top Bottom