• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -14

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
271
பகலிரவு பல கனவு -14

நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பில் அடியெடுத்து வைத்திருந்தாள் சம்யுக்தா. பிரபாகரனும் தனது வருமானத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டிருந்தான். இருவரும் பார்வையில் மட்டுமே காதல் பேசிக் கொண்டிருந்தனர். அதுவே போதுமானது என்று நினைத்திருந்த சம்யுக்தாவை கல்லூரிக்குள் வலம் வந்த காதல் ஜோடிகள் ஆட்டம் காண வைத்தனர். இப்போதெல்லாம் அவளது கல்லூரியில் வடநாட்டு மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்தனர்.

‘என்னடா இது, இந்தப் பசங்க காலேஜ்ல சேர்ந்தே ஒரு மாசம் தானே இருக்கும்? அதுக்குள்ள எப்படி இந்த அளவுக்கு க்ளோஸ் ஆனாங்க?’ என்று அவள் நொந்து போகும் அளவுக்கு இருந்தது சிலரது நடவடிக்கைகள்.

அன்று கல்லூரி வளாகத்தில் இருந்த ஜுஸ் ஷாப்பில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்துத் தீவிர யோசனையில் இருந்தாள் சம்யுக்தா. வழக்கமாக கடைக்குள் நுழைந்தவுடன் தனக்கான ஜுஸை ஆர்டர் செய்த பிறகு தான் இடம் தேடி அமர்வாள். அவளுக்கான ஜுஸ் ரெடியானதும் போய் வாங்கி வருவாள்.

பஸ் ஸ்டான்ட் கடை போல் அல்லாமல் இங்கே யாரும் பிரபாகரன், சம்யுக்தா இடையேயான உறவை அறிய மாட்டார்கள். இருவருமே அதை வெளிப்படுத்த விரும்பவில்லை.

பிரபாகரன் கடையில் இருந்த நேரங்களிலும் மற்றவர் அறியாமல் பார்வையில் பேசிக் கொண்டார்களே தவிர காதலுக்கான வேறெந்த மொழியிலும் பேசவே இல்லை.

‘அடியே சம்யுக்தா! நீயும் தான் நாலு வருஷமா லவ் பண்ற, ஒரு ஹக் உண்டா? கிஸ் உண்டா? இந்தப் பசங்களைப் பாரு, எவ்வளவு ஸ்பீடு?’ என்று மனசாட்சி காரி துப்பியது. அந்த அளவுக்கு மருத்துவம் படிக்க வந்தோம் என்பதையே மறந்தது போல் பலர் பொதுவெளியில் காதல் செய்தனர்.

‘ஓ.. லவ் பண்ணினா இப்படி எல்லாம் இருக்கணுமா?’ என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

இவளது முகம் காட்டும் வர்ண ஜாலங்களைப் பார்த்தபடியே கடையில் நுழைந்தான் பிரபாகரன். அத்தனை யோசனையிலும் அவனைக் கண்டு கொண்டாள். அவனைக் கண்டதும் அவளது யோசனை இன்னும் தீவிரமானது. உள்ளே சென்ற பிரபாகரனுக்கோ இவளது நடவடிக்கைகள் புரியவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டே தனது வேலையைக் கவனித்தான்.

‘ஒரு வேளை இந்த லவ் ஹார்மோன் எல்லாம் நமக்கு ஒழுங்கா வேலை பார்க்கலையோ? நமக்குத் தான் இப்படி இருக்குன்னா நமக்கு வாய்ச்சதும் அப்படியே இருக்கே, அது எப்படி?’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

‘மேடம்! நீங்க தான் டிஆர் மாதிரி தொடாமலே லவ் பண்ணுனா போதும்னு ஆர்டர் போட்டு என்னைக் கட்டிப் போட்டுட்ட. இல்லேன்னா நானெல்லாம் …’ என்று சென்சார் இல்லாமல் காதோரம் பிரபாகரன் ஏதேதோ பேசுவது போல இருந்தது. தலையை உலுக்கி அந்த நினைவில் இருந்து வெளியே வந்தாள். கற்பனையில் நினைத்துப் பார்த்ததற்கே அவளது உடல் சிலிர்த்தது.

“அட, நமக்கும் ஹார்மோன் வேலை பார்க்கத் தான் செய்யுது” என்று சத்தமாகவே சொல்லி விட்டாள் போலும். அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்த போது தான் அதனை உணர்ந்து கொண்டாள்.

“அண்ணே! அந்தப் பொண்ணுக்கு இன்னைக்கு என்ன ஆச்சுன்னே தெரியலண்ணே. வந்ததுல இருந்தே இப்படித்தான் வந்ததும் ஏதோ யோசனையிலேயே இருக்கு. எப்போதும் ஆர்டர் கொடுத்துட்டு தான் உட்காரும். இன்னைக்கு அதுவும் பண்ணல. தானா பேசிட்டு சிரிச்சிட்டு இருக்கு. அப்போ கண்டிப்பா அதுதான்.”

கடையில் வேலை செய்யும் ஒருவன் பிரபாகரனிடம் ரகசியம் பேசினான். அந்த ‘அது’ எது என்று பிரபாகரன் கேட்கவில்லை. அவனுக்குத் தான் தெரியுமே. அவள் கேளாமலே அவளுக்கான ஜுஸைத் தயாரித்துக் கையில் எடுத்துக் கொண்டு அவளை நோக்கி நடந்தான்.

ஆச்சரியமாகப் பார்த்தாலும் கடையில் இருந்த ஊழியர்களுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அமைதியாக அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.

தன் முன்னே நீட்டப்பட்ட ஜுஸை வாங்காமல் அதை நீட்டியவனைக் கண்டு புருவங்களை உயர்த்தினாள் சம்யுக்தா. தன்னைத் தானே கிள்ளிக் கொண்டாள், வானத்தை எட்டிப் பார்த்தாள். அவள் செய்கைக்கான காரணம் புரிந்தவன், அவளுக்கு மட்டுமே கேட்கும் படியாக, “நான் எப்போதும் போல தான் இருக்கேன். நீ தான் வேற ஏதோ ஒரு உலகத்தில உலாவிட்டு இருக்கிற மாதிரி தெரியுது” என்றான்.

ஆனால் அவள் தனது பார்வையை மாற்றிக் கொள்ளவும் இல்லை, ஜுஸ் டம்ளரைக் கைகளில் வாங்கவும் இல்லை. அங்கே இருந்த மற்றவரின் பார்வை இவர்களை நோக்கி கேள்வியாகத் திரும்பியது. சம்யுக்தா அதை உணரவில்லை என்றாலும் பிரபாகரன் உணர்ந்து கொண்டான். ஜுஸ் டம்ளரை மேஜை மீது வைத்தான்.

“நீங்க எதுவுமே ஆர்டர் பண்ணலேன்னு பசங்க சொன்னாங்க மேடம். அதான் எங்க கடையோட ஸ்பெஷல் ஜுஸைக் கொடுக்கலாம்னு வந்தேன். குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.” இந்த முறை பிரபாகரனின் குரல் கடையில் இருந்த அனைவருக்கும் கேட்டது. அந்தக் குரலில் தெரிந்த கண்டனத்தில் சம்யுக்தா விழித்துக் கொண்டாள்.

“ஓ.. ஐயாம் ஸாரி. ஏதோ ஞாபகத்தில் இருந்துட்டேன். தாங்க் யூ ஃபார் தி ஜுஸ்” என்று டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டாள்.‌

பிரபாகரன் தலையசைத்து அவளது நன்றியை ஏற்றுக் கொண்டவனாகத் திரும்பிச் சென்று விட்டான். தந்தை இவனது கல்யாணப் பேச்சை எடுத்து சொதப்பிய நாள் முதல் அவனது உள்ளம் அந்த நாள் எப்போது வருமோ என்று நினைக்கத் தொடங்கி இருந்தது. சம்யுக்தா தான் தனது வாழ்க்கைத் துணை என்று முடிவு செய்துவிட்டான். அவள் இன்னும் திருமணத்திற்குத் தயாராகவில்லை என்பதையும் அறிவான். அதனாலேயே தள்ளி நின்று அவளை ரசிக்கக் கற்றுக் கொண்டான்.

ஆனால் இன்றைய அவளது நடவடிக்கைகள் அப்படி இல்லையோ என்று யோசிக்க வைத்தது. எதுவாக இருந்தாலும் அவள் வாயிலிருந்து வரவேண்டும் என்று முடிவு செய்து அமைதியாக இருந்துவிட்டான்.

அவளோ எப்படிக் காதலை வளர்ப்பது என்று தெரியாமல் பல்வேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்தாள். திடீரென்று ஒரு எண்ணம் தோன்ற, இந்த முறை வெகு ஜாக்கிரதையாக ‘யுரேகா!’ என்று மனதிற்குள் கூவிக் கொண்டாள்.‌

இன்னும் ஓரிரு மாதங்களில் அவளுக்கு இருபத்து ஒன்று முடிந்துவிடும். அரசாங்கம் நிர்ணயித்த திருமண வயது. இந்த மூன்று ஆண்டுகளில் பிரபாகரன் அவளது மனதில் நிலையான இடம் பெற்றிருந்தான். இது பருவ வயதில் வரும் ஈர்ப்பு அல்ல, வாழ்க்கை முழுமைக்கும் நீ வேண்டும் என்று நினைக்க வைக்கும் காதல் என்ற முடிவுக்கு அவள் வந்திருந்தாள்.

அதே நேரத்தில் அவளது பெற்றோரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பற்றி அவளால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. தனது நிலைப்பாட்டை பிரபாகரனுக்குத் தெரிவித்து விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அதற்காக அவள் தேர்ந்தெடுத்த நாள், அவளது பிறந்த நாள்.

சொட்டு விடாமல் கையில் இருந்த ஜுஸைக் குடித்தவள் பிரபாகரனைப் பார்த்துக் கொண்டே கடையில் இருந்து வெளியேறினாள். அவள் குடித்த ஜுஸுக்கான காசு வரவில்லை என்றதும் கடை ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர். ஆளாளுக்குக் கருத்து கந்தசாமியாக மாறிப்போனார்கள்.

“அண்ணே! அந்தப் பொண்ணு காசு கொடுக்காமல் போகுதுண்ணே. நீங்க வேற காஸ்ட்லியான ஜுஸ் போட்டு கொடுத்துட்டீங்க. இப்போ என்ன பண்றது?”

“அதானே, இந்தப் பொண்ணு எந்த உலகத்தில இருக்குன்னே தெரியல. ஒரு நாளும் இப்படி செஞ்சதில்லையே.”

“நீங்க என்ன அவளுக்கு மாமனா மச்சானா சொட்டு விடாமல் ஜுஸ் குடிச்சிட்டு காசு கொடுக்காமல் போறதுக்கு?”

அதையெல்லாம் கேட்ட பிரபாகரனுக்கு சிரிப்பு வந்தது. ‘படுத்துறானுகளே!! அடேய்! நான் அவளுக்கு மச்சான் தான்டா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். வெளியே, “டேய்! போய் வேலையைப் பாருங்கடா. டெய்லி வர்ற பொண்ணு தானே. நாளைக்கு காசை சேர்த்து வாங்கிடுவோம்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் மொபைல் அழைத்தது.

கடையை விட்டு வெளியே வந்த சம்யுக்தா தான் பிரபாகரனின் மொபைலுக்கு அழைப்பு விடுத்தாள். அதை எதிர்பார்த்திருந்தவன் போல முதல் ரிங்கிலேயே அந்த அழைப்பை ஏற்றான். ஆனால் சூழ்நிலை காரணமாக ஹலோ என்று கூடச் சொல்லாமல் அமைதி காத்தான். கடை ஊழியர்களை இவனது இன்றைய செய்கைகள் புருவம் உயர்த்த வைத்தது.

“டேய் அழகு! ஒரு வேளை அந்தப் பொண்ணு தான் நம்ம அண்ணியோ? இன்னைக்கு அண்ணனோட நடவடிக்கை எல்லாம் பார்த்தா சந்தேகமா இருக்கே?” என்று ஒருவன் கேட்க, ‘அப்படியும் இருக்குமோ?’ என்று மற்றவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள்.

அவர்கள் தன்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தும் எதுவும் பேசாமல் மொபைலைக் காதில் வைத்தபடி கடையை விட்டு வெளியே வந்தான்.

“ஹலோ சார்! ரொம்ப நேரம் கடையில இருக்க வேண்டாம் சீக்கிரம் வீடு போய்ச் சேருங்க” என்று படபத்தாள்.

‘என்னடா இது, ஏன் இப்படிச் சொல்றா?’ என்று யோசித்தாலும் வாயைத் திறக்கவில்லை அவன். அவன் அப்படித்தான் என்று அனுபவத்தில் அறிந்திருந்ததால் அவளே தொடர்ந்தாள்.

“ஹுக்கும்.. இவரு வாயைத் திறந்து பதில் சொல்லிட்டாலும்..” நொடித்துக் கொண்டவள்,

“இல்ல.. இன்னைக்கு புதுசா நிறைய விஷயம் நடந்ததா? அதான் மழைல நனைஞ்சு காய்ச்சல் வந்துடக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்தில சொல்றேன். கேட்டால் கேளுங்க, கேட்காட்டி போங்க.”

“தப்பா சொல்றீங்க மேடம். இன்னைக்கு மழை வந்தா அதுக்கு காரணம் நீங்க தான், நானில்லை. நீ தான் ஒரு நாளும் இல்லாத திருநாளா, கடையில உட்கார்ந்து கனாக்கண்டு மனுஷனை ஏத்தி விட்டதும் இல்லாமல் என்னைக் குறை சொல்றியா?” பிரபாகரனின் குரல் உற்சாகமாக வந்தது.

“அச்சோ!!! அதை விடுங்க. நான் ஒரு விஷயம் சொல்லத் தான் இப்போ கூப்பிட்டேன். வர்ற பதினெட்டாம் தேதி என்ன விசேஷம்னு சொல்லுங்க பார்ப்போம்.”

“சொல்றேன்னு சொல்லிட்டு கேட்கிற.. ஜுன் பதினெட்டு என்ன விசேஷம்?? எனக்குத் தெரிஞ்சு ஒண்ணும் இல்லையே.”

கல்யாணம் ஆகி வருடங்கள் கழித்து இந்தக் கேள்வியைக் கேட்டாலே பதில் தெரியாமல் மாட்டிக் கொண்டு விழிக்கும் ஆண்கள் தான் உலகில் அதிக அளவில் இருக்கும் போது, பிரபாகரன் மட்டும் விதிவிலக்கா என்ன? அதனால் எந்த யோசனையும் இல்லாமல் பட்டென்று பதில் சொல்லிவிட்டான். எதிர் முனையில் சற்று நேரம் அமைதியோ அமைதி.

“ஹும்..இப்படித் தான் பதில் வரும்னு தெரிஞ்சே கேள்வி கேட்ட என்னைச் சொல்லணும். அன்னைக்கு என்னோட பிறந்த நாள். I am completing twenty one years” என்று பல்லைக் கடித்தாள்.

“ஓ.. ஐயாம் ஸாரி. எனக்கு ஞாபகம் இல்லை. அன்னைக்கு என்ன பண்ணனும்னு சொல்லு. கண்டிப்பா பண்ணிடுவோம்.”

“அன்னைக்கு காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் என் கூடவே இருக்கணும். எங்க போறதுன்னு நான் அன்னைக்கு காலைல தான் சொல்லுவேன்.”

“ஓகே டன்.”

அப்போது எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று ஏற்றுக் கொண்டவனை ஊரில் யாரும் பார்க்காத இடமாக அழைத்துச் சென்றாள் சம்யுக்தா. மூன்றாம் மனிதர் யாரும் பார்க்கவில்லை, ஆனால் பார்க்கக் கூடாத கண்களில் பட்டுவிட்டார்கள்.

மேகமலைக் காட்டின் நடுவே ஜோடியுடன் நின்று கொண்டு
அவரது சுட்டெரிக்கும் பார்வையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தாள் சம்யுக்தா.


 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -14
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
54
யாரு அவளோட அப்பாவா?
மாமனாரை பார்த்ததும் பயபுள்ள ரியாசன் எப்படி
 
Top Bottom