• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

காண்பது எல்லாம் உனது உருவம் 5

Uppada

New member
Joined
Mar 27, 2025
Messages
10
காண்பது எல்லாம் உனது உருவம் 5

பக்கத்து கிராமத்துக்கு போன விக்ரமன் அங்கிருந்த பஞ்சாயத்து ஆஃபீஸ்க்கு நேராக போய் சேர்ந்தான்.

அவனை பார்த்ததும் வரவேற்ற பஞ்சாயத்து தலைவர் "தம்பி வந்தாச்சு..வாங்க தம்பி..உக்காருங்க.." என சொல்லி குடிக்க தண்ணீர் குடுத்தார்.

அவருடைய கண் ஜாடையில் டீயும் சுண்டலும் வர விக்ரமனிடம் குடுத்து சாப்பிட சொன்னார்.

அவன் சாப்பிட்ட பின் விக்ரமனிடம் "தம்பி மதிய சாப்பாடு நம்ம வீட்டுல தான்..பிரயாணம் பண்ணி வர்றவங்களுக்கு உடம்பு ஒத்துக்குமோ..ஒத்துக்காதோங்கற யோசனையால தலைமுறை தலைமுறைகளா வெளியூர்லேந்து வர்ற ஆளுங்க நம்மூர்ல கை நனைச்சாலே சைவ சாப்பாடு தான்..உங்களுக்கு சரி தானே.."

"ரொம்ப சரி ஐயா..நீங்க சொன்ன மாதிரி தான்..வெளி சாப்பாடுனே சொன்னாலே நான் சைவ சாப்பாடு தான் சாப்பிடறது.."

"அதுவும் இல்லாம என் வீட்டம்மா சுத்த சைவம்ங்க..முட்டை கூட சாப்பிட மாட்டாங்க..
அவங்களுக்காகவே நான் அசைவம் சாப்பிடறதில்லைங்க.."

"யப்பா..ஏய்..இதை கேட்டு குறிச்சு வெச்சுக்கங்க பா..தம்பியை மாதிரி பொண்டாட்டிக்காக விட்டு குடுத்து வாழ பழகுங்க பா..

"நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லைங்க ஐயா..சொந்த விவகாரத்தை விட்டுட்டு நான் வந்த வேலையை பத்தி பேசலாம்ங்களா.."

"அதுக்கு தானே வந்திருக்கீங்க..நல்லா பேசுங்க தம்பி.."

ஏற்கனவே அவனுடைய நண்பர்களால் செக் செய்து எடுக்கப்பட்ட அந்த ஊரின் நிலத்தின் மண்வளம், நீர் பிடிப்பு, அதன் போக்கு போன்ற தகவல்களை ஒரு முறை சரி பார்த்தவன் தன் லேப்டாப்பை டீவியோடே இணைத்து பேச ஆரம்பித்தான்.

அவன் சொன்ன தகவல்களை கேட்டு ஊரின் முதியவர்கள் நம்ப ஊர் விஷயம் இவ்ளோ இருக்கா.. என ஆச்சர்யப்பட இளையவர்களோ அவனின் தகவல் களஞ்சியத்தால் சந்தோஷப்பட்டனர்.

மதியம் அங்கேயே சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இளையவர்களோடு பேசி சிரித்து விட்டு நாலு மணிக்கு கிளம்பியவன் நேராக தங்களது ஆஃபீஸ்க்கு வந்து எல்லாம் விஷயங்களையும் சேர்த்து மெயிலாக அனைவருக்கும் அனுப்பி விட்டு வீட்டுக்கு போனான்.

வீட்டுக்குள் நுழைவதற்கே முன்பே அவன் அப்பாவும் நித்யாவும் மூக்கில் மாஸ்க்கோடு இருப்பதை பார்த்தவன் இந்த அம்மா அடங்க மாட்டாங்க..என மனதுக்குள் திட்டியபடி நித்யாவை தூக்கி கொண்டு அப்பாவை அழைத்து கொண்டு மாடியில் இருந்த அவர்கள் அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்தான்.

"கொஞ்சம் இரு பா தோ வரேன்." என கீழே போனவன் போன வேகத்தில் மேலே வந்து கையோடு கொண்டுவந்த டிஃபன் கேரியரை திறந்து அப்பாவுக்கு தட்டில் போட்டு குடுத்தவன் நித்யாவுக்கு ஊட்ட அவளும் அமைதியாக சாப்பிட்டு உடனே தூங்கி போனாள்.

"என்ன பா இது..நீயும் குழந்தையை மாதிரி பண்றே..மணி என்ன ஆகுது..நான் வர்ற வரைக்கும் சாப்பிட கூட இல்ல.."

"அண்ணி தான் பாவம் கடையில பிசியா இருக்காங்க..அவங்கள எதுவும் சொல்ல முடியாது.."

'குழந்தையை நான் தான் பாத்துக்கறேன்னு எப்ப பாரு சொல்லி புலம்புற அம்மா நாலு மணி வரைக்கும் குழந்தைக்கு சாப்பிட கூட குடுக்காம என்ன தான் பண்ணாங்க பா.."

"வீட்டுல கவுச்சி நெடி அடிக்கிது டா..வீட்டுல இருக்கவே முடியல..நித்யா சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா டா..'

"இன்னிக்கு மறுபடியுமா பா.."

"ஆமா டா..உங்கம்மாக்கு எத்தனை சொன்னாலும் புரியல டா..அவளுக்கு நாக்கு நீளம் குறையல டா.."

"நம்ம வீட்டுல அசைவமே செய்யறதில்லனு பொண்ணை
மாப்பிள்ளையை சாக்கு வெச்சு இவ வாரத்துல ரெண்டு தடவை செய்யறா டா..செஞ்சு சாப்பிட்டு அப்பறம் மூச்சு விட முடியலனு என் உயிரை வாங்கறா.."

"அவளுக்கு உடம்புக்கு முடியாம போய் தானே நாம எல்லாம் அசைவம் சாப்பிடறதை நிறுத்தினோம்..ஆனா அவ அடங்க மாட்டேங்குறா.."

"சும்மா அலுத்துக்காதே பா..என்ன செய்யலாம் நீ சொல்லு.."

"அவளோட என்னால போராட முடியாது..அதுக்கு என் மனசுலயும் தெம்பு இல்லை..வயசும் ஆச்சு.
இனி என்ன வேணா ஆகட்டும்..என் விதியை நொந்து வாழ்ந்துட்டு போக வேண்டியது தான் டா.."

"அப்பா..ஏன் பா..இப்படி விரக்தியா பேசறே..இதை பத்தி எல்லாம் இப்ப யோசிக்காதே..சாப்பிட்டல்ல..
கொஞ்சம் நேரம் தூங்கு.."
என அதட்டலாக சொன்னவன் அவருக்கு படுக்கை சரி செய்ய அவரும் இருந்த அலுப்பில் படுத்ததுமே தூங்கி போனார்.

மெல்ல சப்தமிடாமல் வெளியே வந்தவன் ரூம் கதவை மூடி விட்டு அண்ணியை கூப்பிட்டு அப்பாவும் நித்யாவும் தங்களது அறையில் தூங்குவதாக சொல்லிவிட்டு அப்பாவின் கடைக்கு போனான்.

அங்கு போய் கடையில் உட்கார்ந்து சிறிது நேரம் செலவிட்டவன் அப்பா கடைக்கு திரும்பி வந்ததும் கிளம்பி ரத்னா வீட்டுக்கு வந்தால் அவளுக்கு அசைவ வாடை ஆகாதே..வாந்தி எடுப்பாளே..எப்படி வீட்டுக்கு அழைத்து செல்வது என்ற குழப்பத்தோடு ரத்னாவின் ஆஃபீஸ் வாசலில் சரியாக ஆறு மணிக்கு வந்து நின்றான்.

"என்ன அண்ணா..பொண்டாட்டிய மாமியார் வீட்டுக்கு கூப்பிட்டு போய் விட இவ்ளோ வேகமாகவா வருவீங்க.."

"வா..அம்ருதா..என்னை சொல்றது இருக்கட்டும்..இன்னும் சித்தப்பா வரலையா.."

"அவர் வர்றத்துக்கு கொஞ்சம் நேரமாகுமாம்..அதனால என்னை பஸ் பிடிச்சு ஊருக்கு போக சொல்லிட்டார் அண்ணா.."

"ஓஹோ..சரி சரி ஜாக்கிரதையா போ.."

"மாமியார் வீட்டுல விருந்தா அண்ணா..உங்களுக்கு கொண்டாட்டம் தான் "

"இன்னிக்கு மாசத்தோட மொதல் வெள்ளிக்கிழமை..அவ அக்கா, அண்ணன் ரெண்டு பேரும் குடும்பமா வருவாங்க.."

"பாவம் மா அவ..ஆஃபீஸ்லயும் உழைச்சிட்டு எங்க வீட்டுலயும் உழைக்கறா...ரெண்டு நாள் அவங்க கூட சந்தோஷமா இருந்துட்டு வரட்டும்.."

"சரி..சரி..உங்க பொண்டாட்டியை ஒண்ணும் சொல்லலை. நீங்க பத்திரமா கூப்பிட்டு போய் விடுவீங்களாம்...என்னை கேட்டா நாளைக்கு வரேன்னு அத்தை கிட்ட சொல்லிடுங்க அண்ணா..நான் கிளம்பவா..பஸ் போயிடும்.."

"கிளம்பு..அதோ ரத்னா வந்துட்டா..நானும் கிளம்ப வேண்டியது தான்.."

ரத்னாவை ஏற்றி கொண்ட வண்டி நேராக அவள் அம்மா வீட்டு வாசலுக்கு போய் நின்றது.

அவள் இறங்கியதும் விக்ரமன் வண்டியை திருப்பி கிளம்ப போக வீட்டுக்கு உள்ளிருந்து "என்ன சகலை..இந்த குடும்பத்துல அண்ணன் தனியா வந்து மாட்டியிருக்கேனே...கூட ஆதரவா இருப்போம்னு நெனக்காம நீ பாட்டுக்கு கிளம்பற.." என்ற உற்சாக குரல் கேட்டது

"ஈஸ்வரன் அண்ணா..எப்ப வந்தீங்க..வீட்டுல எல்லாம் எப்படி இருக்காங்க?

"எல்லாரும் நல்லா இருக்காங்க..நீ எப்படி இருக்க..வீட்டுல எல்லாம் சௌக்யமா"

"எல்லாம் வழக்கம் போல தான் அண்ணா..எத்தனை மணிக்கு வந்தீங்க.."

"நான் வந்தது இருக்கட்டும்..நீ என்ன வாசலோட போற..உள்ளே வா.."

"தோ..ஒரு சின்ன வேலை..இப்ப வரேன்"

"அங்கிருந்து கிளம்பி அவன் நண்பனின் வீட்டுக்கு போனவன் அவர்களால் வீட்டில் தயாரிக்கப்படும் ராகி லட்டு, சிறு தானிய முறுக்கு எல்லாம் வாங்கி கொண்டு நேராக மாமியார் வீட்டுக்கு வந்தான்.

உள்ளே போய் வாங்கி வந்ததை குழந்தைகள் கைகளில் குடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டான்.

"வா..வா..இது என்ன"

"குழந்தைகளுக்காக அண்ணா"

மாப்பிள்ளை வந்ததை பார்த்த அவன் மாமா பரமசிவம் "வாங்க மாப்பிள்ளை..வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா.."

"எல்லாரும் நல்லா இருக்காங்க..நீங்க.."

"எங்க மேல பாசமா இருக்கற நீங்க எல்லாம் இருக்கறதால ரொம்ப நல்லா இருக்கோம் மாப்பிள்ளை..பார்வதி மாப்பிள்ளை வந்திருக்காரு பாரு"

"வாங்க மாப்பிள்ளை..டீ குடிக்கறீங்களா..பசியா இருப்பீங்க..சூடா வடையும் போட்டிருக்கேன்..டீ கூட வடையும் சாப்பிடுங்க.."

"ரத்னா கை கால் அலம்பிட்டு வந்துட்டா மாப்பிள்ளையை கை கால் அலம்ப தோட்டத்து பக்கம் அழைச்சிட்டு போ"

அவர் சொல்லி முடிப்பதற்குள் விக்ரமனே தோட்டத்துக்கு போய் கை கால் முகம் அலம்பி வர ஈஸ்வரன் மகன் அம்பரீஷ் "சித்தப்பா டவல் இந்தாங்க.."என குடுத்தான்.

அதில் ஆச்சரியம் அடைந்து ஈஸ்வரனை பார்க்க "எல்லாம் நம்ம மாமனார் ட்ரையினிங் டா..வீட்டுக்கு வந்தவங்க முகம் அலம்பிட்டு வந்தா டவல் தரணும்னு நல்லா பழக்க வெச்சிருக்காரு.."

"அடேய் சூப்பர் டா..கண்ணு..இப்படியே இரு.."

"எத்தனை நாள் இருப்பீங்க அண்ணா.."

"ரெண்டு நாள் நான் இங்க தான் இருக்க போறேன்..நீயும் இரு..நாம கொஞ்ச நேரம் ஜாலியா பேசலாம்.."

"இல்லங்கணா..கொஞ்சம் வேலை இருக்கு..வீட்டுக்கு போகணும்..
நாளைக்கு காலைல வரேன்.."

"மச்சான் நான் சொன்னா கேக்க மாட்டான்..வீட்டு ஆளா நீ இவனை இருக்க சொல்லு.."

"அத்தான் சொல்றது போல ரெண்டு நாளைக்கு இங்க இருந்துட்டு போங்களேன் மாப்பிள்ளை.."

"அது இல்லை மச்சான்..அண்ணா ஊர்ல இல்ல..பாப்பா நான் இல்லேனா தூங்க மாட்டா..அதான் யோசனையா இருக்கு..

"ஒண்ணு பண்றேன்ங்க மாப்பிள்ளை..நீங்க இங்க இருங்க..

பாப்பாவை இங்க அழைச்சிட்டு வர நான் வரேன்னு அக்கா கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுங்க

நான் போய் பாப்பாவை அவளை கூப்பிட்டு வரேன்.."

"இங்கயும் குழந்தைங்க இருக்கு..பாப்பா இங்க வந்தா ரெண்டு நாளைக்கு அவளும் ஜாலியா விளையாடுவா.."

"அப்பறம் என்ன அதான் வீட்டுக்கு சொந்தக்காரர் சொல்லிட்டாரே..
தங்கிடு ராசா..இல்லேனா அவரு கோவிச்சுப்பாரு.."

அதற்குள் டீயும் வடையும் வர ஈஸ்வரனோடு பேசி கொண்டே விக்ரமன் சாப்பிட்டு முடித்தான்.
"சரிங்க அண்ணா..நீங்க சொல்ற மாறியே செய்யறேன்..வீட்டுக்கு போயிட்டு அப்பா கிட்ட சொல்லிட்டு எனக்கு தேவையானதை எடுத்துட்டு வந்திடறேன்..." என்றான் (தொடரும்)
 
Last edited:

Author: Uppada
Article Title: காண்பது எல்லாம் உனது உருவம் 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Mar 21, 2025
Messages
43
அம்மாவின் அராஜகம்
அப்பாவின் வேதனை
அனுசரணையாக மகன்
அனைத்தும் சரி தான்
ஆனால் மனைவிக்கு
அவள் மனதுக்கு
அன்பு தந்தாயா
ஆறுதல் தருகிறாயா??
அவனுக்கு தான் வெளிச்சம்....
 
Top Bottom