• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உசுரே நீதானே - 7

Bandhini

New member
Joined
Mar 27, 2025
Messages
14
உசுரே நீதானே - 7



சிறுவர்கள் கதிரேசனும் குமரேசனும் மாணிக்கத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்ற முடிவுடன் பள்ளியில் நடக்கும் சிறப்பு கவன வகுப்புகளில் கலந்து கொண்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் மாணிக்கத்தின் தவறுக்கு கண் கண்ட சாட்சியாக மாற வேண்டிய சூழல் உருவானது.

சிறையிலிருக்கும் சிறுவர்களின் தந்தை நோய்வாய்ப்பட்டான். அதனால் தன் மகன்களைப் பார்க்க வேண்டும் என்று காவலர்களிடம் விருப்பம் தெரிவித்தான்.

அதனால் சிறைத்துறை காவலர்கள் இருவர் சிறுவர்களைத் தேடி அவர்கள் வீடு செல்ல, அவர்கள் அங்கு வசிப்பதில்லை என்று கூறி மாணிக்கத்தின் வீட்டு முகவரியைக் கூறினார்கள் அக்கம் பக்கத்தினர்.

காவலர்கள் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்து சிவகாமியிடம் விவரம் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் செல்வதற்காக அவர்கள் எங்கே என்று கேட்டார்கள்.

"பசங்க ரெண்டு பேரும் உஸ்கோல் போயிருக்கானுங்க.. பெசல் களாஸ் கீது! சாந்தரம் லேட்டாதான் வருவானுங்க. நீங்க போங்க. நா நாளிக்கு பசங்கள ஜெயிலுக்கு இட்டாறேன்.." என்றாள் சிவகாமி.

"உஸ்கோலுக்கா?" என்று சந்தேகமாகக் கேட்டார்கள் அந்தக் காவலர்கள்.

"இன்னாத்துக்கு இம்மாஞ் சந்தேகம் உனுக்கு? எங்கூட்டு புள்ளீங்கல்லாம் படிக்க கூடாதா? இல்ல படிக்க மாட்டானுங்கன்னு நென்ச்சிகினியா?" என்று கடுகடுப்பாகக் கேட்டாள் சிவகாமி.

"அதில்லம்மா! அம்மாகாரி செத்துட்டா.. அப்பங்காரன் ஜெயிலுக்கு போயிட்டான்.. இப்படிப்பட்டவங்க புள்ளைங்க.. என்னத்த படிச்சி.." என்று அவர்களுள் ஒருவர் இழுக்க,

"என்னாத்த பட்ச்சு என்னாத்த கியிக்க போறானுங்கன்னு நெனச்சிகினியா?" என்று நக்கலாகக் கேட்டாள் சிவகாமி. அவள் நக்கலாகக் கேட்டாலும் அதில் அபரிமிதமான கோபம் இருந்ததை காவலர்கள் உணரவே செய்தனர்.

"அதில்லம்மா!" என்று அவர்கள் ஏதோ சொல்ல முற்பட்டார்கள்.

"நீ ஒன்யும் சொல்ல வோணா! ஜெயில்ல இருக்கறவன்தான் தப்பு செஞ்சிகினான்.. அவன் புள்ளீங்க இல்ல.. நாளிக்கு நா அவங்கள இட்டாறேன்.. இப்ப போங்க!" என்று கடினமான குரலில் அவர்களை விரட்டினாள் சிவகாமி.

காவலர்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றனர்.

சிறுவர்கள் வீடு திரும்பியதும் சிவகாமி காவலர்கள் வந்து கூறிய விவரம் கூறினாள்.

சிறுவர்களுக்கு அது ஒன்றும் உவப்பான செய்தியாக இருக்கவில்லை.

"அந்தாளப் பத்தி பேசினாலே எனுக்கு காண்டாவது அத்த! இப்ப இன்னாத்துக்கு எங்கள பாக்கணுமாம்? அம்மாவ தள்ளிவுட்டு கொன்னு போட்ட மாரி எங்களயும் போடவா?" என்று கோபமாக கேட்டான் இளையவன் கதிர்.

"அப்டிலாம் பேசக்கூடாது கதிரு! ஆயிரஞ் சொல்லு! அவன் உங்க அப்பன்டா! பாவம்! உடம்பு செரியில்லன்னு உங்கள பாக்க ஆசப்படறான்.. நாளிக்கி போய்ட்டு வர்லாண்டா!" என்று தன்மையாக எடுத்துச் சொன்னாள் சிவகாமி.

"ஆமா கதிரு! அப்பா குடிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னால நம்ம மேல எத்தினி பாசமா ருந்தாரு.. அப்றம்தானே.. அந்த நாசமா போற குடி அவர கெட்த்துச்சு!" என்றான் மூத்தவன் குமார்.

இதைக் கேட்டு முணுமுணுத்தாலும் வேண்டா வெறுப்பாகச் சரியென்றான் கதிர்.

ஆனால் மறுநாள் காலை சிவகாமியால் எழுந்து கொள்ளவே முடியாதபடி தலைவலியும் காய்ச்சலும் வந்திருந்தது.

அவள் அரை மயக்கத்தில் அனத்தினாள்.

அவளுடைய முனகல் சத்தத்தைக் கேட்டு கண் விழித்த குமார், அவளைப் பார்த்துவிட்டுப் பதறினான்.

"ஐயியோ! அத்த! உங்களுக்கு இன்னா செய்யிது?" என்று ஓடி வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்தான்.

அவளுடைய உடம்பு கொதித்தது.

உடனே அவன் மாணிக்கத்தைத் தேடினான். அப்போதுதான் அவன் நேற்றிலிருந்து வீட்டுக்கே வரவில்லை என்பது புரிந்தது. நேற்று காலையில் கிளம்பி போன மாணிக்கம், இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

என்ன செய்வது என்று யோசித்தவன் சட்டென்று சிவகாமியின் கைப்பேசியிலிருந்து மீனாவை அழைத்தான்.

"இன்னா அத்த?" என்று மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தாள் மீனா.

"அண்ணி! நா குமார் பேசறன்.. இங்க அத்தக்கு காச்சலடிக்கிது! ஐயோ அம்மான்னு புலம்பிகினு கெடக்காங்க.." என்றான் குமார்.

இவனுடைய பேச்சுக் குரல் கேட்டு எழுந்து வந்தான் கதிர்.

"ஐயியோ! அங்க உங்க அண்ணன் இல்லியா?"

"இல்லண்ணீ! அண்ணன் நேத்தி காலீல வெளிய போச்சு.. உன்னும் வூட்டுக்கு வரல.. எங்களுக்கு இன்னா செய்யணும்னு புரீல.. அதான் உங்களுக்கு கால் பண்ணேன் அண்ணீ!" என்றான் குமார்.

"சரி! சரி! கவலப்படாதீங்க! நா இப்ப வரேன்.." என்று அழைப்பை துண்டிக்கப் போன மீனா,

"டே! ரெண்டு பேரும் ஏதாச்சு சாப்டீங்களா?" என்று கேட்டாள்.

"இல்லண்ணீ! இப்பதா தூங்கி எய்ஞ்ச்சோம்! பாத்தா அத்த கேரா பட்த்திருக்காங்க.." என்றான் குமார்.

"சரிடா! நா இப்ப வரேன். நீங்க அத்த பக்கத்திலயே இருங்க.." என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் தம்பி பூபதியை அழைத்துக் கொண்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினாள்.

செல்லும் வழியில் தான் வேலை செய்யும் ஓட்டலுக்குச் சென்று விடுப்பு கூறிவிட்டு சிறுவர்களுக்கும் தன் வருங்கால மாமியாருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள்.

அங்கு சென்று சிவகாமிக்கும் சிறுவர்களுக்கும் தான் வாங்கி வந்த உணவினைக் கொடுத்து உண்ணச் செய்தாள்.

"உனுக்கு ரொம்ப கஸ்டம் குடுத்துட்டேன் ல்லம்மா!" என்று சிவகாமி வருத்தத்துடன் கேட்டாள்.

"ஐய அத்த! இன்னா ஃபீலிங்கா?" என்று குமாரும் கதிரும் வடிவேல் போல சிரித்தபடி கேட்க, மீனாவும் பூபதியும் உடன் சேர்ந்து சிரித்தனர்.

"டே! ரொம்பத்தான் நக்கல்டா உங்களுக்கு?" என்று கோபமாக ஆரம்பித்த சிவகாமியும் அவர்களுடன் சேர்ந்து சிரிக்கவே செய்தாள்.

"திடீர்ன்னு என்ன அத்த ஆச்சு உங்களுக்கு? நல்லாதான ருந்தீங்க?" என்று கேட்டாள் மீனா.

"தெர்ல மீனா! நல்லாதா ருந்தேன்.. என்னா கர்மம் வந்துச்சுன்னு தெர்ல!" என்றாள் சிவகாமி.

"ரெண்டு பேரும் அத்தைய பாத்துக்கணும்னு இஸ்கூலுக்கு போவலயா?"

"அத்த ஏன்மா கேக்கற?" என்று ஆரம்பித்த சிவகாமி, நேற்று காவலர்கள் வந்து சொன்ன செய்தியைக் கூறினாள்.

"ஜெயில்ல ருக்கற இவங்கப்பனுக்கு உடம்பு சரியில்லயாம்.. இவங்கள பாக்கணும்னு கேக்கறானாம்.. நேத்திக்கு ரெண்டு போலீகாரனுங்க வந்தானுங்க.. பசங்க உஸ்கோலுக்கு போய்கிறானுங்கன்னு சொன்னா அவனுங்க நம்பவேல்ல.. அது இதுன்னு ஒரு மாரி பேசினானுங்க.. பசங்கள நாளக்கி நானே ஜெயிலுக்கு இட்டாறேன்! போய்யான்னு வெரட்டி வுட்டேன்!" என்றாள் சிவகாமி.

"போலீஸ்காரங்க, அப்டியா அத்த சொன்னானுங்க.. நீங்க ஏன் எங்ககிட்ட சொல்லவேல்ல?" என்று கோபமாகக் கேட்டான் கதிர்.

"அட! நீ வேற ஏண்டா எல்லாத்துக்கும் பொசுக் பொசுக்குன்னு கோவப்படற! சொம்மா இருடா!" என்று அவனை அதட்டிய சிவகாமி, பூபதியிடம் திரும்பி,

"பூபதி! பசங்கள அவங்கப்பன பாக்க ஜெயிலுக்கு இட்டுனு போயிட்டு வந்துர்ரியா? போக வர சவாரிக்கு துட்டு நா குட்துர்றேன்!" என்றாள்.

"ஐய! அத்த! இட்டுனு போடான்னு சொல்லுங்க! அத்த வுட்டுட்டு.. இன்னாது துட்டு அது இதுன்னு பேசிகிட்டு?" என்று கேட்டான்.

மீனாவுக்குத் தன் தம்பியை நினைத்து பெருமையாக இருந்தது.

"அதுக்கில்ல கண்ணு! உனுக்கு எப்டினாலும் பெட்ரோல் செலவு ஆகும்ல.. வேற சவாரின்னா பெட்ரோலுக்கு துட்டு கெடச்சிடும்.. பசங்கள இட்டுனு போனா பெட்ரோல் காசு எப்டி கெடக்கும்? சென்ட்ரல் ஜெயில் என்ன பக்கத்து தெருலயா கீது? எம்மாந்தூரம் போவணும்? அதும் எல்லா ரோட்லயும் மெட்ரோ மெட்ரோன்னு பள்ளம் பர்ச்சி போட்ருக்கானுங்க.. நீ ஊரச் சுத்திகிட்டுதான போவணும்?" என்று நியாயமாகக் கேட்டு பூபதியை சமாதானம் செய்தாள்.

"சரிங்க அத்த! நீங்க சொன்னா சரியாதான் ருக்கும்." என்று கூறினான்.

"நீ பசங்கள இட்டுனு கௌம்பு பூபதி! நா அத்தைய முக்கு டாட்டராண்ட இட்டுனு போறன்." என்றாள் மீனா.

"வண்டில ஏறுக்கா! நா உன்னையும் அத்தையும் டாட்டராண்ட எறக்கி வுட்டுட்டு போறன். அத்தையால அம்மாந் தூரம் நடக்க முடியாதுல்ல.." என்றான் பூபதி.

எல்லாரும் கிளம்பி பூபதியின் ஆட்டோவில் ஏறினார்கள். மீனா, வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.

சிவகாமியையும் மீனாவையும் அவர்கள் எப்போது பார்க்கும் அந்தத் தெரு முனையில் இருக்கும் மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டான் பூபதி.

"பாத்து பத்தரமா இட்டுனு போ பூபதி! கதிரு, குமாரு, அப்பாவ பாத்து கோவப்படாம பேசணும்.. இன்னா.. புரீதா?" என்று சிவகாமி அறிவுரை கூறினாள்.

"சரிங்கத்த!" என்றனர் கதிரும் குமாரும்.

பூபதியின் கையில் இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களைத் திணித்த சிவகாமி,

"பூபதி! புள்ளீங்களுக்கு எதுனா சாப்புட வாங்கி குடு! நீயும் சாப்டு!" என்றாள்.

"வேணாம் அத்த! என்னாண்ட துட்டு கீது!" என்று மறுத்தான் பூபதி.

"ஐய! இப்பதானே சொல்லிகினேன்.. நா துட்டு தருவேன்.. நீ வோணா சொல்லக் கூடாதுன்னு.. சொம்மா வச்சிக்க நயினா!" என்று கரிசனத்துடன் கூற, அவன் மீனாவைப் பார்த்தான்.

அவள் வாங்கிக் கொள்ளுமாறு கண்களால் சாடை செய்ய வேறு வழியின்றி பூபதியும் சிவகாமி கொடுத்த பணத்தை வாங்கித் தன் பேன்ட் பேக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

"டாட்டரப் பாத்துட்டு ஆட்டோ புட்ச்சு வூட்டுக்கு கூட்டு போக்கா! அத்தைய நடக்க வுடாத!" என்று தன் அக்காவிடம் கூறினான்.

"சரிடா! நீ பத்ரமா போ!" என்றாள் மீனா.

"நீ சகாயத்துக்கு போன் பண்ணு! அவன் ஆட்டோ எடுத்தாருவான்.. அவன் ஆட்டோல வூட்டுக்கு போ! சரியா! நா வரேன்! வரேன் அத்த!" என்ற பூபதி,
சிறுவர்களை அழைத்துக் கொண்டு மத்திய சிறைச்சலை நோக்கி வண்டியை ஓட்டினான்.

******

தன்னிடம் உள்ள வைரங்கள் போலவே தோற்றம் கொண்ட போலி வைரங்கள் வாங்கிக் கொண்ட மாணிக்கம் தனக்குள் குரூரமாகச் சிரித்துக் கொண்டான்.

'சேட்டு! இப்ப வச்சிக்கறேன் உனுக்கு கச்சேரி!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அந்த வைரங்களை சேட் கொடுத்தது போலவே பேக் (pack) செய்து தன் பேன்ட் பேக்கெட்டில் வைத்துக் கொண்டான். உண்மையான வைரங்கள் அடங்கிய வெல்வெட்டால் ஆன சுருக்குப் பையை எடுத்து தன் கைக்குட்டையில் சுருட்டி தன் பனியனுக்குள் போட்டு நன்றாக மறைத்துக் கொண்டான். அது கீழே விழுந்துவிடாமல் தன் பேன்டை இறுக்கமாக கிளிப் செய்து கொண்டான். எல்லாம் சரியாக உள்ளதா என்று தன்னையே ஒரு முறை சோதித்துக் கொண்டு திருப்தியான பின் பஜன்லால் சேட்டைப் பார்க்கச் சென்றான்.

"வா! வா! மாணிக்கம்! சரக்க பத்ரமா கொண்டு வந்துச்சா?" என்று கேட்டான் சேட்.

"வந்துச்சு! வந்துச்சு! இந்தா! உன் சரக்கு!" என்று சொல்லிக் கொண்டே போலி வைரங்கள் அடங்கிய பேக்கை அவனிடம் நீட்டினான் மாணிக்கம்.

சேட் அதை வாங்கி ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்துவிட்டு,

"ஓகே மாணிக்கம். நிம்மள் இப்ப போறான். நம்மள் பணத்த உன் அக்கவுன்ட்ல போடறான்!" என்றான் சேட்.

"இல்ல சேட்டு! எனுக்கு அவசரமா பணம் தேவப்படுது. நீ பணத்த அக்கவுன்ட்ல போடாத.. கையில குடு!" என்று கேட்டான் மாணிக்கம்.

"இப்ப நம்மள் கையில அவ்ளோ பணம் இல்ல.. நீ நாளக்கி வரான்.. நம்மள் கையில பணம் தரான்!" என்றான் சேட்.

"இல்ல சேட்டு.. அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல.. டாட்டராண்ட இட்டுனு போவணும்.. நீ இப்பயே பணம் குடு!" என்று பிடிவாதமாகக் கூறினான் மாணிக்கம்.

சேட் முணுமுணுத்துக் கொண்டே மாணிக்கத்துக்கு தருவதாக வாக்களித்த பணத்தை வேண்டா வெறுப்பாக அவன் கையில் கொடுத்தான்.

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட மாணிக்கம்,

"சரி சேட்டு! நா கௌம்பறேன். அட்த்த வேல வரப்ப போன் பண்ணு. டான்னு ஒன் முன்னால வந்து நிப்பான் இந்த மாணிக்கம்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

சேட் தன்னிடம் நன்றாக ஏமாந்து விட்டான்; அவனை எளிதாக ஏமாற்றிவிட்டோம் என்று அவனுடைய மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் இதை நினைத்து நினைத்து வருந்தித் துடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் அவன் குதூகலமாக நடந்து கொண்டிருந்தான்.









- தொடரும்....



 

Author: Bandhini
Article Title: உசுரே நீதானே - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom