Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 46
அத்தியாயம் – 21
தன் யோசனையில் உழன்று கொண்டிருந்த மதுமிதாவை அவளது கைபேசி கலைத்தது. நிரஞ்சன் அழைத்திருந்தான். அவன் அழைத்த பின்னரே அவளுக்குச் சுயஉணர்வு வந்தது. நேரத்தைப் பார்க்க, அவனைச் சந்திக்கக் குறித்திருந்த நேரத்தை விடவும் அரைமணி நேரம் தாண்டியிருந்தது.
என்னவென்று இவனிடம் விளக்குவது என எண்ணியவாறே அழைப்பை ஏற்றாள்.
“எங்க மது இருக்க?” எனக் கேட்டவனின் குரலில் ஒருவித தவிப்பு இருப்பதைப் புரிந்து கொண்டாள்.
“இன்னும் வீட்ல இருக்கேன்” என அவள் பிசிறில்லாமல் சொல்லவும், அவன் ஆழ்ந்த மூச்சசொன்றை இழுத்து வெளியிட்டான்.
“ஏமாத்தமாட்டேன்னு சொன்னியே மது. ஏன் மது? இப்படிக் காக்க வச்சுட்டியே” என அவன் குரலில் வரவழைத்துக் கொண்டு தவிப்புடனும் வேதனையுடனும் பேச, அவள் நெஞ்சம் சர்க்கரைப் பாகாய் உருகியது.
“அஞ்சனா என்னைக் கூப்பிட்டிருந்தாங்க” என அவள் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு ஒரு கணம் மூச்சற்றுப் போனான் நிரஞ்சன்.
கடந்த ஒரு வருடமாகத் தன்னைக் கூட அழைக்காதவள் எதற்காக மதுமிதாவை அழைத்தாள்? தங்களுக்குள் கலகத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறாளோ? அதனால் தான் இவள் தன்னைச் சந்திக்க வரவில்லையோ? அவனுக்குக் கேள்விகள் அடுக்கடுக்காய் தோன்றின.
மனதில் தோன்றிய கலக்கத்தை மறைத்தவாறே, “என்ன சொன்னா?” என நிதானமாக அவன் வினவ,
“நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நெருக்கமா நின்னு ஃபோட்டோ எடுத்துக்கிட்டீங்கன்னு சொன்னாங்க. அதைப் பார்த்து நான் கண் குளிரணும்னு எனக்கு அனுப்பியும் வச்சாங்க. நான் அப்படியே மெய்சிலிர்த்துப் போய் நின்னுட்டேன்” என அவள் நக்கலாகவே சொன்னாள்.
அவள் சொல்லிய விதத்தில் அவன் மனதில் தோன்றிய கலக்கம் மெல்ல மறைய, “பொறாமையா மது?” என நகைத்தவாறு கேட்க, “நான்சென்ஸ்” என மறுத்துவிட்டு, “பெரிய மன்மதன் இவரு...” என நொடித்துக் கொண்டாள்.
மீண்டும் வாய்விட்டு நகைத்தவன், “அப்புறம் ஏன் மது என்னைப் பார்க்க வரலை? உனக்காக இங்க நான் காத்துட்டு இருக்கேன்” என்றான் குரலில் வரவழைத்துக் கொண்ட கனிவுடன்.
“நான் இன்னும் பேசி முடிக்கலை. அஞ்சனா இன்னொன்னும் முக்கியமா சொன்னாங்க. நீங்க அவங்களை ஏமாத்திட்டீங்களாம். அதே மாதிரி என்னையும் காதலிச்சு ஏமாத்தி விட்டுட்டுப் போயிடுவீங்களாம்” என அதையும் மறைக்காமல் அவனிடம் சொன்னாள்.
“நீ அதை நம்பறியா? அதான் வரலையா?” என நிரஞ்சன் ஏமாற்றம் விரவிய குரலில் கேட்க, “எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இது குழப்பமா இருக்கு நிரஞ்சன். நாளைக்கே அஞ்சனா வந்து திருந்திவிட்டேன்... மனம் மாறிவிட்டேன் என உங்களிடம் வந்து நின்னா என்ன பண்ணுவீங்க?
இன்னைக்கு அதைப் பத்தி உங்க கூடப் பேசணும்னு இருந்தேன். என்னன்னு தெரியலை. எனக்கு அதுவே பெரிய உறுத்தலா இருக்கு” என மதுமிதா மடை திறந்த வெள்ளமெனப் பேசிக் கொண்டே போக, “அவளைத் தூசியா நினைச்சு அப்போவே...” என இடையிட்டு தடுத்து நிறுத்த முயன்றான்.
“நான் பேசி முடிச்சிடறேன் நிரஞ்சன். பிளீஸ்...” என இறைஞ்சிவிட்டு, “அன்னைக்கு நான் என் காதலைச் சொன்னப்ப நீங்க உங்க தங்கச்சிக்காக என்னை உதாசீனப்படுத்தின மாதிரி நாளைக்கு அஞ்சனாவுக்காகவும் என்னை உதாசீனப்படுத்த மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?
பவி மேலே இருக்கிற பொறாமைல கேட்கலை. உங்க மேலே இருக்கிற நம்பிக்கையின்மையால் கேட்கிறேன். என் காதலுக்கு மதிப்பில்லைன்னு ஆரம்பத்தில நெஞ்சுல அடிச்சு புரிய வச்சு, எனக்கிருந்த நம்பிக்கையை முழுசா தகர்த்துட்டீங்க. அப்புறம் எனக்கு எப்படி நம்பிக்கை வரும்?” என உள்ளத்தில் உள்ளதையெல்லாம் கொட்டிவிட்டாள்.
இதற்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் அதை அவள் ஏற்றுக் கொள்வாளா? முதலில் அவளுக்கு எப்படி இதைப் புரிய வைக்க முடியும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. இதற்கு ஆதாரம் என்று எதைக் காட்டுவான்?
“மது, வாழ்க்கைல ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கிறதா இருந்தா அது அவங்க மனசுல இருந்து வரணும். இன்னொருத்தர் புரிய வச்சு நம்பிக்கை வர வைக்கிறதா இருந்தா அது நிரந்தரம் கிடையாது. தற்காலிகமானது. அதை நீ மொதல்ல புரிஞ்சுக்கோ” என்றான்.
உண்மையே! மற்றவர்கள் மேல் யாராலும் நம்பிக்கையை வர வைக்க முடியாது. அவளே தான் அவனை நம்ப வேண்டும். ஆனால் எப்படி? அவளுமே குழம்பினாள்.
“எனக்கு உன்னைப் பார்த்ததும் உன் அழகுல மயங்கியோ, அறிவுல மயங்கியோ உன் மேல காதல் கண்டிப்பா வரலை. அது உனக்கு நல்லாவே தெரியும். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உன்னை இழக்க நான் விரும்பலை” என நிறுத்தினான்.
நிரஞ்சனுக்கு ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையில பெரிய பிரச்சனை வந்தது. அதை எப்படித் தீர்ப்பது என்று கூடத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணை அவன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டிருந்தால் அவன் வாழ்க்கை மொத்தமும் ஒருவித குழப்பத்திலேயே இருந்திருக்கும். கண்டிப்பா நாசமாகவும் போயிருக்கும்.
ஆனால் ஒரு பெண்ணால் ஏற்பட்ட பிரச்சனையைச் சுலபமாக வேறு ஒரு பெண் வந்து தீர்த்துவிட்டாள். அந்தப் பொண்ணைத் தன் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் அவனுக்கும் அவன் மனதுக்கும் இதம் தருகிறவளை அவன் அடைய விரும்புவது இயற்கை அல்லவா?
மனதில் இருந்ததை அவனும் பகிர்ந்து கொண்டு, “எல்லோரும் பிரச்சனை இல்லாத வாழ்க்கை வேணும்னு நினைப்பாங்க. எனக்கும் அந்த மாதிரியான ஒரு வாழ்க்கை உன்னோட கிடைக்கும்னு பெருசா நம்பிக்கை இருக்குது. அதுவும் நான் விரும்புற அந்தப் பொண்ணுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு தெரியும் போது எப்படி என்னால விட முடியும் சொல்லு?” என நிறுத்தினான்.
பின்னர்த் தொடர்ந்து அன்று திருமண மண்டபத்தில் அவளை உதாசீனப்படுத்த வேண்டும் என்று அவன் சத்தியமாக நினைக்கவில்லை என்றான். ஏற்கனவே அவன் செய்கையால் மனதில் பலத்த அடி வாங்கியிருந்த தங்கையின் உள்ளக் காயம் மட்டுமே பிரதானமாய் அவனுக்குத் தெரிந்தது.
“என்னோட செயல் இன்னொரு பெண்ணோட மனசுல காயத்தை ஏற்படுத்தும்னு சத்தியமா அப்போ எனக்குத் தெரியாது. அதுக்காக நான் மறுபடியும் உன்னை உதாசீனப்படுத்துவேன்னு நினைக்காத. என்னால இப்போதைக்கு வெறும் வார்த்தையால் மட்டுமே விளக்கம் தர முடியும். இதுக்கு மேல நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம் மது. எனக்கு அவ்வளவு தான் கொடுப்பினைன்னு இப்படியே இருந்திடறேன்” என நீளமாகப் பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட்டான் நிரஞ்சன்.
‘டேய்... இருடா.. நான் இன்னும் பேசி முடிக்கலை’ என அவள் மனம் அடித்துக் கொண்டது.
இப்படிப் பட்டென்று வைத்துவிட்டானே? அவளிடம் மேற்கொண்டு வாதாடுவான். தன்னைப் புரிய வைக்க முயல்வான் என்று எண்ணியிருந்தாள். பேசியே அவளின் மனதை மாற்ற விழைவான் என்று எதிர்பார்த்திருந்தாள்.
ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. அப்படியென்றால் அவள் அவனைக் காயப்படுத்திவிட்டாளோ?
மதுமிதா அப்படி விட்டேற்றியாக அவளிடம் பேசியதும் அஞ்சனாவுக்குப் பிடிக்கவில்லை. எத்தனை திமிர் இருந்தால் அவள் தன்னிடம் இப்படிப் பேசுவாள். தன்னிடம் பேசுவதற்காக எத்தனை பேர் வரிசையில் காத்துக் கிடக்க, இங்கே அவளாக இறங்கிப் போய் மதுமிதாவிடம் பேசினால் இப்படி அலட்சியப்படுத்துகிறாளே.
இவளுக்கு உச்சி முதல் பாதம் வரை திமிர் இருக்கிறது. பின்னே நிரஞ்சன் போன்ற ஒருவனை மடக்கிவிட்டோம் என்ற கர்வமாக இருக்கும். இவளை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டாள் அஞ்சனா.
அன்று மாலையில் தன் தாயைக் கோவிலில் இறக்கிவிட்டுத் தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் மதுமிதா. அவள் அன்னை தன் தோழியுடன் வீட்டுக்கு வந்து விடுவதாகச் சொல்லி, மதுமிதாவைக் கிளம்பச் சொன்னார்.
அவளுக்கும் ஹைதராபாத் செல்வதற்குத் தன் பையை அடுக்க வேண்டும் என்ற காரணம் இருந்ததால் அன்னையிடம் மறுப்புத் தெரிவிக்காமல் அவரைக் கோவிலில் இறக்கிவிட்டவள் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.
வீடு செல்லும் வழியில் திடீரென்று அவளின் இரு சக்கர வாகனத்தின் மீது வேறு ஓர் இரு சக்கர வாகனம் பக்கவாட்டிலிருந்து வந்து மோதியது.
தவறு கண்டிப்பாக அந்த மற்றொரு வாகனத்தின் மீதே. ஏனெனில் மதுமிதா ஓரமாக மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தாள். அவள் மிதமான வேகத்தில் சென்றதால் நல்லவேளையாகத் துரிதமாகச் செயல்பட்டுக் காலை கீழே ஊன்றி வண்டியையும் தன்னையும் சமன்படுத்திக் கொண்டாள்.
ஆனால் அவள் மேல் வந்து மோதியவன் வண்டியிலிருந்து கீழே விழுந்து வலியில் அலற ஆரம்பித்தான். அவனுக்கு அடிபட்டு விட்டதே என மனம் இளகிய மதுமிதா அவனுக்கு உதவிடும் நோக்கில் தன் வண்டியை நிறுத்திவிட்டு அவனருகில் சென்றாள்.
அவள் அருகில் சென்றது தான் தாமதம், உடனே அவளை வசை பாட ஆரம்பித்தான் அந்த வண்டியில் வந்தவன்.
“ஏம்மா கண்ணை எங்க வச்சுட்டு ஓட்டிட்டுப் போற? கொஞ்சமாவது அறிவு இருக்குதா? வண்டிய ஓட்டுறப்ப ஏதோ கனவுலகத்துல இருக்கிற மாதிரி ஓட்டற. இப்பப் பாரு எனக்கு வலிக்குது. என் கை எலும்பு முறிஞ்சிருச்சி... ஆஅஆஅ...” என அவளைச் சரமாரியாகத் திட்டிவிட்டு “அய்யோ அம்மா வலிக்குதே” என அரற்றினான்.
அவள் எங்கே போய் மோதினாள்? இவன் தானே தன்னை நோக்கி வந்து மோதினான்.
“சும்மா வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க. நீங்களா வந்து என் மேல மோதிட்டு என் மேல பழியைப் போடுறீங்களா?” என மதுமிதா பதிலுக்குப் பேச, கூட்டத்தில் நின்றிருந்த வேறொருவன்,
“ஏம்மா, பார்க்கச் சின்னப் பொண்ணா இருக்குற, ஆனா இப்படிப் பொய் சொல்லற. சிவனேனு போயிட்டு இருந்த அந்த வண்டிக்காரர் மேல நீ போய் மோதினதை நான் பாத்தேன்” எனக் கீழே விழுந்தவனுக்குச் சாட்சியாக வந்து நின்றான்.
ஒருவேளை பணம் பறிக்கத் திட்டம் போடும் கும்பாலோ என ஒரு கணம் யோசித்தாள் மதுமிதா. அதற்குள் சுற்றிக் கூடியிருந்த கூட்டம் மதுமிதாவையே சுட்டிக் காட்டித் தாக்க ஆரம்பித்தது.
பின்னே அவளுக்கு எந்த அடியும் படவில்லையே. நன்றாக நின்று பேசிக் கொண்டிருக்கிறாளே. ஆனால் கீழே விழுந்தவன் வலியில் அரற்றிக் கொண்டிருக்கிறான்.
“வந்து இடிச்சதும் இல்லாம இப்படிப் பொய் சொல்லிட்டு இருக்குற? அவருக்கு ஆக வேண்டிய செலவுக்குப் பணத்தைக் கொடுத்துட்டுப் போ. இல்ல, போலீஸைக் கூப்பிடறோம்” எனக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த வேறு ஒருவன் சொல்ல,
“இவங்க தப்பை ஒத்துக்காம சண்டைப் போடுறதைப் பார்த்தா எனக்கு என்னமோ இவங்க ஏமாத்தற மாதிரி தோணுது. பேசாம போலீஸை கூப்பிடுங்க. நான் கம்ப்ளைண்ட் கொடுக்கிறேன்” என வலி நிறைந்த குரலில் பேசினான் கீழே விழுந்து கிடந்தவன்.
‘என்னடா இது வம்பாகிவிட்டது?’ என மதுமிதா கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். பின்னே இது போல் அவள் இதுவரையில் எந்தச் சிக்கலிலும் மாட்டியதில்லை.
பேசாமல் தந்தையை அழைக்கலாமா என அவள் எண்ணிக் கொண்டிருக்க, அதற்குள் கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்து அங்கே பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் வந்து சேர்ந்தார்.
இந்தச் சின்ன விஷயத்திற்காகத் தன் தந்தையை எதற்காகக் கலவரப்படுத்த வேண்டும் என எண்ணி அந்தக் காவலரிடம் தன் நிலையை முறையிட்டாள் மதுமிதா.
ஆனால் கீழே விழுந்திருந்தவனின் கைகளில் சிராய்ப்பும் இரத்தக் காயமும் இருக்க, அதைப் பார்த்த காவலர், “இடிச்சுட்டு ஏம்மா இப்படிப் பொய் சொல்லிட்டு இருக்க?” என அவள் சொல்வதைச் சற்றும் காது கொடுத்துக் கேட்கவில்லை.
அவள் தப்பை ஒத்துக் கொள்ளாமல் வேண்டுமென்றே தர்க்கம் செய்வதாக அங்கிருந்த அனைவரும் அவள் மேல் குற்றம் சாட்ட, அவளது இருசக்கர வாகனத்தைப் பிடித்து வைத்துக் கொண்டு அவள் மேல் வழக்குப் பதிவு செய்தார்.
சாதாரணமான ஒரு விஷயத்திற்கு இப்படியெல்லாம் நடக்கக் கூடுமா என்றே அவளுக்குத் தெரியவில்லை. விபத்து நடந்தால் இப்படித் தான் வழக்கை பதிவு செய்வார்களா என்ன? எதுவும் புரியவுமில்லை.
அவள் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயல, “எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கலாம்” என அவளது கைப்பையையும் கைபேசியையும் பறிமுதல் செய்து கொண்டார் காவலர்.
“மேடம்... ஃபோனை குடுங்க. குடும்பத்து ஆளுங்களுக்குத் தகவல் சொல்லணும். இல்லைனா என்னைக் காணாலைன்னு தேடுவாங்க” என மதுமிதா சொன்னாள். அதற்குச் சற்றும் செவி சாய்க்காமல் அவளைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் காவலர்.
அவள் சென்ற ஒரு மணி நேரத்திற்குள் நிரஞ்சன் அந்தக் காவல் நிலையத்துக்குள் வந்து நின்றான். அவனைப் பார்த்த பின்னரே அதுவரையில் துடிக்காத இதயம் துடிக்க ஆரம்பித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட அவளது மூச்சுக்காற்றும் சீரானது.
சாலையில் இக்கட்டான சூழலில் என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்கையில் அவளுக்கு முதலில் நிரஞ்சனின் ஞாபகமே வந்தது. தன் தந்தையை அழைப்பதை விட நிரஞ்சனை அழைத்தால் பிரச்சனைக்குத் தீர்வு உடனே கிட்டும் என்று நம்பினாள்.
அது மட்டுமல்லாமல் அவளது தந்தை இப்பொழுது தான் உடல்நிலை தேறி வந்திருக்கிறார் அவரிடம் இது போன்ற விஷயத்தைச் சொன்னால் தேவையில்லாமல் பதட்டப்படுவாரோ என்ற பயமும் இருந்தது.
அவள் நிரஞ்சனின் எண்ணை அழுத்திப் பேசும் முன்னர் காவலர் அவளது கைபேசியைப் பறிமுதல் செய்ய அவனால் மேற்கொண்டு அவளிடம் பேச முடியவில்லை. ஆனால் இதுவே விஷயம் என்று அவர்கள் பேசியதிலிருந்து கிரகித்துக் கொண்டான் நிரஞ்சன்.
அடுத்த நொடியே மதுமிதாவின் அன்னையை அழைத்து, “மதுவைக் கூப்பிட்டேன்.. ஃபோனை எடுக்கலை” எனச் சொல்ல, “இப்போ கோவில்ல என்னை இறக்கி விட்டுட்டு வண்டில வீட்டுக்குப் போயிட்டு இருப்பா. அதனால் கேட்டிருக்காது” என்றார்.
மேலும் சற்றுநேரம் பேசி, வேண்டிய தகவல்களைச் சேகரித்து, தனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்து இதோ இப்போது காவல்நிலையத்தில் இருக்கிறான்.
அவன் மட்டும் வரவில்லை. உயர் பதவியிலிருக்கும் அவனது காவல்துறை நண்பனும் அவனுடன் வந்திருந்தான். இப்போது விஷயம் மேலும் தீவிரமடைந்தது. வந்தவர்கள் சும்மா வரவில்லை. விபத்து நடத்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்திருந்த காணொளியுடன் வந்திருந்தனர்.
அந்தக் காணொளியை பார்க்க ஆரம்பித்த அந்தப் பெண் காவலருக்கு வியர்க்க ஆரம்பித்தது. அந்தக் காணொளியில் மதுமிதாவின் மேல் எந்தத் தவறும் இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
வேண்டுமென்றே அவள் மேல் பழி சுமத்தியிருக்கிறான் கீழே விழுந்தவன் என்றும் புரிந்தது.
மதுமிதாவின் மேல் எந்தத் தவறுமில்லை என நிரூபணமாக அவளைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவலரின் முகம் பேயறைந்தது போலானது. என்ன செய்வது என அவர் கையைப் பிசைந்து கொண்டிருக்க,
“எதையும் தீவிரமா விசாரிக்காம இப்படிப் பட்டுன்னு முடிவெடுக்கறது ரொம்பத் தப்பு. எத்தனை குற்றவாளி தப்பினாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாதுன்னு கூட உங்களுக்குத் தெரியலையா?” என அந்தக் காவலரைக் கடிந்து கொண்டான் உடன் வந்த உயர் அதிகாரி.
மதுமிதாவிற்கு எந்தச் சேதமும் இல்லாமல் மீட்டுக் கொண்டு வெளியில் வந்தான் நிரஞ்சன். அவனை ஏறிட்டுப் பார்த்ததும் அதுவரையில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகை பீறிட்டது. அவளின் மனம் மிகவும் பலவீனப்பட்டு இருந்தது. அதனாலேயே அழுகையில் வெடித்தாள்.
“இதெல்லாம் ஒரு விஷயம்னு அதுக்காக அழுதுட்டு இருக்கிற மது. கண்ணை முதல்ல துடை. எல்லாரும் உன்னையே பாக்குறாங்க. வா நம்ம இங்கிருந்து கிளம்பலாம்” என அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான்.
“இல்ல நீங்க இங்க வரலைன்னா என் நிலைமை என்ன ஆயிருக்கும்?” என அவள் மீண்டும் விசும்ப, “ஒன்னும் ஆயிருக்காது. சாணியைக் கரைச்சு ஊத்தற ஆளு நீ? உனக்கு இல்லாத தைரியமா? இதுக்கெல்லாம் நீ அசரலாமா?” என அவன் கேலியுடன் சொல்ல, மதுமிதா அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஏதாவது சாப்பிட்டியா?” என அவளிடம் கேட்க, அவள் ‘இல்லை’ என மறுப்பாகத் தலை அசைத்தாள். அவளை நேராக ஓர் உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். அவள் மிகவும் பசியில் இருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.
அவளுக்கு வேண்டிய உணவை வரவழைத்தவன், “எதையும் யோசிக்காம பேசாம சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போ. நாளைக்கு ஹைதராபாத் கிளம்பணுமே. வண்டியை என் ஆளு ஒருத்தர் மூலமா உன் வீட்ல தரச் சொல்லிடறேன்” என அழகாகத் திட்டமிட்டுக் கொடுத்தான்.
அவன் சொல்வது சரி என்று பட அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.
திடீரென்று நிமிர்ந்து, “ஆமா எப்படி இந்த ஸ்டேஷன்னு கண்டுபிடிச்சு வந்தீங்க?” எனக் கேட்டாள்.
“நீ கூப்பிட்டதும் ஓரளவுக்கு விஷயம் புரிஞ்சது. உடனே உன் அம்மாக்குக் கூப்பிட்டு விசாரிச்சேன்” என நடந்ததைச் சொல்லி, “அப்புறம் என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லி விசாரிச்சு இங்க வந்தேன்” என விளக்கம் தந்தான்.
“நீங்க என் மேல கோபத்துல இருப்பீங்கன்னு நினைச்சேன்” என அவள் சொல்ல, “கோவம் இருக்குது இல்லைன்னு சொல்லலை. ஆனா அதுக்கான தண்டனையை உன்கிட்ட இருந்து பிற்காலத்துல வசூல் பண்ணிக்கிறேன். ஐஸ்கிரீம் கொடுத்தாலும் ஓகே” என அவளைக் குறுகுறுவென்று பார்க்க,
அதற்குமேல் அவனுடன் பேசி அவளே தனக்கு ஆப்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு அவனுடன் தன் வீடு நோக்கிச் சென்றாள்.
தொடரும்...
Last edited: