• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அர்த்தநாரி

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
299
அர்த்தநாரி!


ஒருவருக்கு ஆறாம் விரல் இருக்கிறது, இன்னொருவருக்கு காதில் முன்பாக சிறிய மொட்டு போன்ற தோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இருவரையும் நீங்கள் ஒரு பேருந்தில் செல்லும்போது கவனிக்கிறீர்கள். 'அடடே! இவருக்கு எப்படி இருக்கே' என்று எண்ணுவதுடன் கடந்து விடுகிறீர்கள்.
ஆனால் ஒரு நபருக்கு ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணைந்தே இருக்குமாறு பிறந்திருக்கிறார். அவரைக் கண்டாலும் அதே உணர்வு தான் நமக்குத் தோன்றுகிறதா? நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

ஒரு ஆண் என்றால் அவனின் அனைத்து குணாதிசயங்களையும் தீர்மானிப்பதில் அவனுடைய விதைப் பைக்கு (testes) முக்கியப் பங்கு உண்டு. அதைப்போலவே ஒரு பெண்ணுக்கு சினைப்பை (ovary). இயற்கையின் விளையாட்டால் ஒரு சிலருக்கு இரண்டும் ஒருங்கே (ovotestes) அமைந்து விடுகிறது. திருநங்கைகள், திருநம்பிகள் போன்ற மூன்றாம் பாலினத்தவர்கள் சிலருக்கு விதைப்பை, சினைப்பை இவை இரண்டும் சேர்ந்தே இருக்கிறது.

இப்படி இந்த இரண்டு உறுப்புக்களையும் கொண்டிருப்பவர்களை True hermaphrodites என்று அழைத்தார்கள். ஆனால் உலக அளவில் மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் இத்தகைய நபர்கள் மிகக் குறைவே. பெரும்பாலானவர்கள் வேறு சில வகைகளின் கீழ் வருவார்கள்.

மனிதனின் குரோமோசோம் அமைப்பைப் பற்றி நாம் ஏற்கனவே படித்திருப்போம். 23 ஜோடிகள் அதாவது 46 குரோமோசோம்கள் மனிதனுக்கு உண்டு. இவற்றில் 2 குரோமோசோம்கள்- ஒரு ஜோடி மட்டும் ஒரு மனிதனின் பாலினத்தை தீர்மானிக்க கூடியவை. அந்த ஒரு ஜோடி XX என்று இருந்தால் பெண். XY என்று இருந்தால் ஆண். 46XX என்ற அமைப்புடன் பிறக்கும் ஒரு குழந்தைக்கு எதிர்பார்ப்புப் படி பெண்ணுக்குரிய வெளியுறுப்புக்கள் இருக்க வேண்டும். ஆனால் சிலரின் பெண்ணுறுப்பு சற்றே வித்தியாசமாக அமைந்து ஆண்களைப்போல் தோற்றம் இருந்தால் 46XX hermaphrodites என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் இவர்களின் உடலுக்குள் கர்ப்பப்பை, சினைப்பை, ஃபெலோபியன் டியூப் இவற்றின் அமைப்பு சாதாரணமானதாகவே இருக்கும். இப்படிப் பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் இந்தப் பெண் சிசுக்கள் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது எதிர் கொள்ள நேரும் அதிகபட்ச ஆண் தன்மையுடைய அகச்சுரப்பிகளால் (male hormones) இருக்கலாம்.

அதேபோல் மரபணு அமைப்பு 46XYயாக இருந்து, ஆனால் எதிர்பார்க்கப்பட்ட ஆண் உறுப்புக்குப் பதிலாக பெண்ணுறுப்பின் தன்மையை கொண்டு பிறப்பவர்கள் 46XY hermaphrodites என்ற பெயரின் கீழ் வருவார்கள். இவர்களின் உடலுக்குள் ஆண்களுக்கே உரிய உடல் உறுப்பு அமைப்புகள் இருக்கும். இது ஆண்- பெண் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால் விளைவது. விதைப் பைகள் சரியாக வளர்ச்சி அடையாத நிலை அல்லது வளர்ச்சி அடைந்தும் போதிய அளவு இயங்காத நிலையால் இது நிகழலாம். சில நேரங்களில் மனிதர்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களை உடல் ஏற்றுக் கொள்ளாததும் (congenital insensitivity to androgens) ஒரு காரணமாக அமையும்.

பிறப்புறுப்பை வைத்து ஆண் என்று நினைத்து வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை பின்னாளில் உள்ளுறுப்புகளின் இயல்பான வளர்ச்சியினால், தன் பதின்பருவத்தில் ஈஸ்ட்ரஜன் போன்ற பெண் தன்மையுடைய ஹார்மோன்கள் சுரக்க, சுரக்க பெண்களுக்கே உரிய உடல் அமைப்புகளுடன் வளர நேரும். அதேபோலத்தான் பெண்ணாகக் கருதி வளர்க்கப்பட்ட ஒரு ஆண் குழந்தைக்கும் நேரலாம்.


பதின் பருவத்தில் மாற்றத்தை உணரும் இப்படிப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் தவிர, பிறப்பிலேயே ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிறப்புறுப்புகள் அமைந்த நிலையை Ambiguous genitalia என்பார்கள். அப்படிப் பிறப்பிலேயே பாலினம் குறித்த குழப்பம் இருந்தால் பல்வேறு பரிசோதனைகள் செய்து ஆணா, பெண்ணா என்று பாலினத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதன்பின் அதற்கான சிகிச்சைகளையும் பிறப்பில் இருந்தே தொடங்கலாம். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைப்பேறு போன்றவை நிகழும் வாய்ப்புக் குறைவே. இருந்தும் பெண் போன்ற உருவ அமைப்பும் சாதாரணமான வாழ்வும் வாழ வழி செய்ய முடியும்.


எல்லாக் காலங்களிலும், எல்லாவிதமான மனித சமூகங்களிலும் இப்படி ஆண்- பெண் இரண்டு பாலினங்களக்கும் உரிய குணங்களை தன்னகத்தே கொண்டு உருவாகிய மூன்றாம் பாலினம் இருந்தே வந்திருக்கிறது. நான்காயிரம் வருடங்களுக்கு முன்பான சுமேரிய நாகரிகத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. மனிதர்களை உருவாக்கும் ஒரு பெண் கடவுள் கொஞ்சம் களிமண்ணை எடுத்து ஆண் உருவத்தைச் செய்கிறார், பின் பென் உருவத்தைச் செய்கிறார். மூன்றாவதாக எந்தவிதமான பிறப்புறுப்பும் இல்லாத ஒரு மனித உருவத்தையும் செய்வதாக புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆணாகப் பிறக்கும் ஒருவனை விதையறுப்பு (castration) செய்து பல பணிகளுக்கு மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டதாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன. அர்த்தநாரீஸ்வரர் என்ற சிவனின் வடிவமே, ஆண், பெண் இரண்டு தன்மைகளுடனும் ஒரு மனிதன் பிறக்க நேர்ந்தால் அதை தெய்வத் தன்மை உடையதாகக் கருதி போற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தத்துவம் என்று சொல்பவர்கள் உண்டு.

வெகுகாலம் வரை மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க, அறிவியல் மற்றும் மருத்துவ உலகில் Hermaphrodites என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது. இந்தச் சொல் கிரேக்கப் பெயரான Hermaphroditos என்பதிலிருந்து வந்தது. இது தொடர்பான கிரேக்கப் புராணக் கதை ஒன்று உண்டு. Hermes என்ற ஆண் கடவுளுக்கும் Aphrodite என்ற பெண் கடவுளுக்கும் பிறந்த மகன்தான் Hermophroditos. சிறந்த ஆணழகனான இவன் மேல் காதல் கொள்ளும் ஒரு பெண், தான் அவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்று தீவிரமாக வேண்டிக் கொள்கிறாள். அவளது பக்தியில் மனமிரங்கிய இன்னொரு கிரேக்கக் கடவுள் இருவரையும் ஒன்றிணைத்து ஒரே உருவமாக ஆக்குகிறார். அதுவே Hermaphrodite என்கிறது கிரேக்க புராணம்.

மூன்றாம் பாலினத்தவரை அலி, ஒம்போது போன்ற பெயர்களால் அழைத்து வந்த இந்த சமூகம் இப்போது தான் மரியாதைக்குரிய பெயருடன் 'திரு' சேர்த்து அழைக்கத் தொடங்கியிருக்கிறது. மனிதர்களில் இவர்கள் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டாலும் பல வகையான நத்தைகள், எல்லா வகை மண் புழுக்கள், சில வகை மீன்கள் எல்லாம் இரண்டு பால் இனங்களும் ஒன்றாக சேர்ந்த உயிரினங்களாகவே இயற்கையில் இருக்கின்றன. அந்த வகை உயிரினங்களுக்குத் தனியாக ஆண், பெண் வடிவம் இல்லை. ஒற்றை உயிரினத்தாலேயே இனப்பெருக்கம் செய்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட இரு பாலினங்களையும் உள்ளடக்கிய உயிரினங்கள் விலங்கின உலகத்தில் 65000 க்கும் மேல் இருப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் இவை தான் ஆதி வடிவம். பெரும்பாலான மரம், செடி, கொடிகளில் இருபாலினக் கூறுகளும் ஒருங்கே அமைந்துள்ளன. பூக்களைப் பற்றி பள்ளி இறுதி வகுப்புகளில் படித்திருப்போம். ஒரு மலரிலேயே ஆண் உறுப்பு (stamen), பெண் உறுப்பு (pistil) என்று அடையாளப்படுத்தப் படக்கூடிய இருவேறு பகுதிகளை படம் வரைந்து பாகம் குறித்தது நினைவிருக்கலாம்.

மேலே சொன்னது போல
பிறப்பிலேயே Ambiguous genitalia கண்டறியப்பட்ட ஒரு குழந்தையை சமீபத்தில் பார்த்தேன். அந்தக் குழந்தைக்கு பிறப்பிலேயே ஆணா பெண்ணா என்று தெரியாத நிலை. பிறந்தவுடன் பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்திருக்கிறார்கள். அவற்றின் முடிவில் மரபணு 46XX என்றும் உடலில் சினைப்பை, கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் டியூப் போன்றவை இருக்கின்றன என்றும் தெரிய வந்திருக்கிறது. அவள் பெண் என்று அடையாளப்படுத்தப்பட்டாள். உடலிலிருந்த ஆண் தன்மைக்குக் காரணம் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு என்றும் தெரிய வந்துள்ளது. கணையம் இன்சுலினை சுரப்பது போல், தைராய்டு சுரப்பி தைராக்ஸினை சுரப்பது போல் அட்ரினல் சுரப்பியில் இருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதற்குத் தேவையான ஒரு மூலப்பொருளான 5alpha reductaseன் குறைபாடுதான் இதற்குக் காரணம். விரைவில் கண்டறிந்ததால் சிறிய இடைவேளைகளில் அந்த ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்தி வந்திருக்கிறார்கள். பத்து வயது வரை முறையாக ஹார்மோன்களை செலுத்தி வர, அந்தக் குழந்தையின் வளர்ச்சி சரியாகவே இருந்திருக்கிறது. அதன்பின் சொந்தக் காரணங்களால் சிகிச்சையை நிறுத்திவிட, அந்தக் குழந்தையின் உடலில் ஆண்தன்மை தலைதூக்கியது. இந்த நிலையில் அந்தச் சிறுமி என்னிடம் அழைத்து வரப்பட, தொடர் சிகிச்சையின் முக்கியத்துவத்தை விளக்கி, சிகிச்சையைத் தொடர்வதற்காக அனுப்பிவைத்தேன். அவளுக்கான தொடர் சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்தும் இத்தகைய பிரச்சனை உடைய குழந்தைகளின் பிற்கால வாழ்வு எப்படியாக இருக்கும் என்பது குறித்தும் அகச்சுரப்பியல் துறையில் நிபுணரான ஒரு நண்பரிடம் விசாரித்தபோது, அவர், 'மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கையைப் போலவே அவர்களின் சிகிச்சை முறையும் குழப்பமான ஒன்றுதான். அதைப்பற்றிப் பேசினாலே மன வருத்தம் தான் நீடிக்கும், விட்டுவிடுங்கள்' என்றார். நல்ல கல்வியறிவும் அபரிமிதமான அனுபவமும் கொண்ட அவரின் இந்த வார்த்தைகள் என்னையும் வருத்தம் கொள்ளச் செய்தன. பாலியல், பாலினம் குறித்த விஷயங்கள் பேசாப் பொருட்களாகத் தான் நம் சமூகத்தில் இருந்து வருகின்றன. அதற்கான சிகிச்சை முறையும் அந்த வட்டத்தின் கீழ் தான் வருகிறதா என்று கவலையாக இருந்தது. செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகளை விட நம்மிடையே ரத்தமும் சதையுமாக உலவும் இந்த மக்களின் சிகிச்சை, நிலை பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் முக்கியம் அல்லவா
என்ற எண்ணமும் எழுந்தது.
 

Author: SudhaSri
Article Title: அர்த்தநாரி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom