• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உயிர்க்கொடியில் பூத்தவளே! 12

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
178
உயிர்க் கொடியில் பூத்தவளே!

அத்தியாயம் 12


கண்மணியைச் சிறிது நேரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்ய, மாதுரி அவளுடன் சேர்ந்துவந்தாள். துகிலனும் கூடவே வந்தான். தன்னுடைய வண்டியிலேயே அவர்களை அழைத்து வந்தான்.

வீட்டுக்கு வந்தவுடன் துகிலனும், மாதுரியும் உடனே மாதுரியின் அறைக்குச் சென்று சோதித்துப் பார்த்தார்கள். ஸ்விட்ச் போர்டின் உள்ளே இருந்த வொயர் தாறுமாறாக வெட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. மாதுரியின் சந்தேகம் ஊர்ஜிதமானது. துகிலனுக்குக் கோபம் தலைக்கேறியது.
அதே கோபத்துடன் அத்தையைச் சந்திக்கச் சென்றான்.

துகிலன் அங்கே போவதற்கு சற்று முன்னால் மாதுரி சென்று நடந்ததை ராஜேஸ்வரியிடம் விளக்கிச் சொன்னாள். ராஜேஸ்வரியும், மந்திராவும் அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

“ கண்மணி அக்காவை இன்னைக்கு முழுவதும் ரெஸ்ட் எடுக்கச் சொலிலிருக்காங்க. நான் போய் கிச்சன் வேலையைப் பாக்கட்டுமா, இல்லை இங்கே உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா? ” என்று கேட்டாள்.

“ சாப்பாடு வெளியே இருந்து அரேஞ்ச் பண்ணிக்கலாம். துகிலன் வீட்டுக்குத் தகவல் அனுப்பினா, இன்னைக்கு மதிய உணவும், இரவு உணவும் அவங்களே அனுப்பிடுவாங்க. நீ எல்லார்க்கும் எடுத்துப் பரிமாற மட்டும் உதவி செய், போதும். சாயந்திரம் தேநீர் மட்டும் போட்டால் போதும். அய்யாவுக்குக் கொஞ்சம் ஸுப், கிச்சடி மாதிரி முடிஞ்சா நீ செய் ” என்று சொல்லிவிட்டார். மாதுரி கண்மணியின் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டாள்.

“ அக்கா, நான் ரெண்டு, மூணு நாளைக்கு உங்க கூடவே இருக்கேன். எனக்கு அந்த ரூமில தங்க பயமா இருக்கு” என்று சொல்ல, கண்மணிக்கும் இந்த ஏற்பாடு மகிழ்ச்சியே தந்தது. இந்தச் சாக்கில் மாதுரியும், அவளும் சேர்ந்து இருக்கலாமே என்று தோன்றியது.

சாக்லேட்டைப் பிரித்துக் கையில் கொடுத்தால் சாப்பிடக் கசக்குமா என்ன என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் கண்மணி.

“ என்ன அத்தை நடக்குது இங்கே? உயிருக்கே ஆபத்து ஏற்படற ஏற்பாடுகளைச் செய்யறது யாருன்னு கண்டுபிடிக்கணும். இதைச் சும்மா விடக்கூடாது. இன்னைக்கு மாதுரிக்கோ, கண்மணிக்கோ ஏதாவது ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்? ” என்று குதிகுதியென்று குதித்தான் துகிலன்.

“ துகிலா , நீ என்னவோ சின்ன விஷயத்தைப் பெருசாக்கற மாதிரி எனக்குத் தோணுது. இதெல்லாம் சின்ன விபத்து தானே? யார் வீட்டில வேணாலும் நடக்கலாம். இதுக்கு நீ ஏன் இவ்வளவு தூரம் ஓவரா ரியாக்ட் பண்ணறேன்னு தெரியலை எனக்கு” என்றார் ராஜேஸ்வரி அமைதியாக.

“ என்ன அத்தை அவ்வளவு அசால்ட்டாச் சொலாலறீங்க? நம்ம உயிருன்னா வெல்லக்கட்டி. நம்ம கிட்ட வேலை செய்யறவங்க உயிருன்னா, குப்பைத் தொட்டில கசக்கிப் போடற காகிதமா? அவங்க குடும்பத்துக்கு யார் பதில் சொல்லுவாங்க? ” என்று கோபத்துடன் கேட்டான் துகிலன்.

“ இங்கே பாரு துகிலா. கண்மணி வீட்டில அவ பேரில பாசத்தைக் காட்ட யாருமே இல்லை. கொஞ்சம் பணத்தைக் கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்கிட்டுப் போயிடுவாங்க. மாதுரிக்குத்தான் உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லைன்னு அவளே சொல்லிட்டாளே? இதை நான் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்
சொன்னேன். நீ சொன்ன வாதத்துக்கு எதிர்வாதமாச் சொன்னேன். மத்தபடி அவங்க பேருல எனக்கும் அக்கறை இருக்கு. அதுதான் ஒண்ணும் ஆகலையே? இத்தோட இந்த விஷயத்தை விடு ” என்று இயல்பாகப்
பேசிய அத்தையைப் பார்த்து, துகிலனுக்கோ ஆத்திரம், ஆத்திரமாக வந்தது.

“ என்ன அத்தை, ஒரு பேச்சுக்குன்னாலும் இப்படியா மனிதாபிமானம் இல்லாமப் பேசுவீங்க? கண்மணிக்கு ஏதாவது ஆயிருந்தா மாதுரி, சும்மா விட்டிருக்க மாட்டா. பேயாட்டம் போட்டிருப்பா. அவ மேல உசுரையே வச்சிருக்கா. இன்னைக்கு
ஹாஸ்பிடலில் கண்மணி, கண் விழிக்கற வரைக்கும் அவ தவிச்ச தவிப்பு இருக்கே? நான் அதைக் கண்கூடாகப் பாத்துட்டுப் பேசறேன். அப்புறம் மாதுரிக்கு யாருமே இல்லைன்னு நினைக்காதீங்க. நான் இருக்கேன். நான் அவளை மனசாரக் காதலிக்கறேன். நாங்க ரெண்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம். அவளுக்கு இப்போ சில பிரச்சனைகள். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கெடைச்சதும் எங்க கல்யாணம் நடக்கும். என் கல்யாணம் என் விருப்பப்படிதான் நடக்கும். உங்க விருப்பப்படி இல்லை” என்று கத்திவிட்டு வெளியேறினான் துகிலன்.

துகிலனின் பேச்சைக் கேட்டு, அதுவும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி அவன் சொன்னதைக் கேட்டு ராஜேஸ்வரி, மந்திரா இரண்டு பேருமே அதிர்ந்து போனார்கள்.

“ ஏதோ அவளை வேலைக்கு இங்கே கொண்டு வந்து சேர்த்ததால் அக்கறை காட்டறான்னு இல்லை நெனைச்சேன் நான்? இங்கே கதை வேற மாதிரி போகுதே? அவளோட ஒரே காலேஜில தானே படிக்கறே நீ? உனக்கு எதிரில என்ன நடக்குதுன்னு கூட உனக்குத் தெரியாதா? ” என்று மந்திராவையும் கோபித்துக் கொண்டார் ராஜேஸ்வரி.

மந்திராவோ அழுதுகொண்டே அறையை விட்டு வெளியேறிச் சென்றாள்.
துகிலனோ, வேலையாட்கள் அனைவரையும் அழைத்துவைத்து விசாரித்தான்.

“ யாரு அந்த ரூமில போயி மின்சார வொயர்களை கட் பண்ணித் தொடறவங்களுக்கு ஷாக் அடிக்கற மாதிரி செஞ்சது? நிச்சயமாக உங்களில் ஒருத்தர் இதுக்கு உடந்தையா இருந்திருப்பீங்க? இந்தத் தடவை உங்க எல்லோரையும் எச்சரிக்கை செஞ்சு விட்டுடறேன். இன்னொரு தடவை ஏதாவது எங்கேயாவது சின்னத் தப்பு நடந்தால் கூட நான் சும்மா விடமாட்டேன். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து உங்க எல்லாரையும் முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்க வச்சுடுவேன். யார் மேலயாவது சந்தேகம் இருந்தால் தைரியமா என் கிட்ட வந்து சொல்லலாம் நீங்க” என்று எச்சரித்துவிட்டுத்தான் வெளியே சென்றான்.

அடுத்த நாளே கண்மணி,தன்னுடைய வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டாள். மாதுரி முடிந்தபோதெல்லாம் சமையலறைக்குச் சென்று அவளுக்கு உதவி செய்தாள்.

அடுத்த ஒரு வாரம் பரபரப்பின்றி நகர்ந்தது. இந்த ஒரு வாரத்தில் நேரம் கிடைத்த போதெல்லாம் மாதுரி, தோட்டத்திற்குப் போவது போலப் போய் அவுட்ஹவுஸில் இருக்கும் அத்தையைத் திருட்டுத்தனமாக சந்தித்து விட்டு வந்தாள்.

அம்மா, அப்பாவை இழந்த பிறகு புதிதாகக் கிடைத்துள்ள இந்த அத்தை உறவு அவளுடைய மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. அடிக்கரும்பாக இனிக்கவே செய்தது.

ராஜேஸ்வரி மேடத்திற்கும் அவளுக்கும் நடுவில் ஏதோ இடைவெளி வந்துவிட்டது போல இருந்தது. அதிகம் பேசிக் கொள்வதில்லை இருவரும். ஆனால், மாதுரி தன் கடமைகளைத் தவறாமல் செய்தாள்.

துகிலன் அவ்வப்போது வந்து தன்னுடைய மாமா, அத்தையை வழக்கம் போல செக் அப் செய்துவிட்டுப் போனான். அவர்களுக்கு எப்போதும் வேலை செய்யும் நர்ஸ் திரும்பி வந்துவிட்டதால் மந்திரா வீட்டிற்குக் கிளம்பினாள். ராஜேஸ்வரி தடுத்து நிறுத்தினாள் அவளை.

“ எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு நினைச்சு மனசைத் தளரவிடாதே. நான் வேற முயற்சிகள் எடுத்துட்டுத்தான் இருக்கேன். துகிலனை எப்படி சம்மதிக்க வைக்கறதுன்னு எனக்குத் தெரியும். ரெண்டு நாட்கள் இங்கே தங்கிட்டுப் போ. நான் என்ன செய்யறேன்னு பாத்து ரசிச்சுட்டுப் போ” என்று சொன்னதால், இரண்டு நாட்கள் தங்கத் தயாரானாள்.

புத்திசாலியான கண்மணிக்கு மாதுரி, துகிலனுக்கு நடுவில் ஏதோ ஓடுகிறதென்று எளிதாக அனுமானிக்க முடிந்தது. அதே போல மந்திராவை மாதுரிக்கு முன்னரே தெரிந்திருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டு மாதுரியிடமே இரண்டு விஷயங்களையும் நேரடியாகக் கேட்டு விட்டாள்.

“ உங்களோட இரண்டு சந்தேகங்களும் சரியானவைதான் அக்கா. நானே உங்க கிட்ட இதைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். துகிலனும், நானும் ரெண்டு வருஷமாப் பழகிட்டு இருக்கோம். அவர் தன்னோட முடிவில் உறுதியா இருக்கார். எனக்குத்தான் மனசுக்குள்ள தயக்கமா இருக்கு. எனக்கு யாருமே இல்லைன்னு சொல்ல முடியாது. எனக்கு ஏதாவது பிரச்சினைன்னா டாக்டர் துடிச்சுப் போயிடறாரு. அவரை அடுத்து நீங்க இருக்கீங்க. அப்புறம் புதுசா இன்னோர் உறவும் கெடைச்சிருக்கு. நான் இங்கே வந்ததே சரிதான்னு தோணுது. என்னுடைய ஒவ்வொரு பிரச்சினையாத் தீந்துட்டு வருது. ஆனால், மந்திரா வந்து துகிலனை விரும்பறா போல இருக்கு. மேடமும் மந்திரா, துகிலன் கல்யாணத்துல விருப்பம் காமிக்கறாங்க. அதுதான் என்னவோ மாதிரி இருக்கு”

“ அதுக்கு நீ என்னம்மா பண்ணுவே? துகிலனுக்கு விருப்பமில்லைன்னா அவங்களால கட்டாயப்படுத்த முடியாது. நீ அதைப் பத்திக் கண்டுக்காதே. நீயும், டாக்டர் ஸாரும் நல்ல ஜோடி. நான் இருக்கேன் உனக்கு. என் சேமிப்பில இருந்து என்னால முடிஞ்சதைச் செஞ்சு உன் கல்யாணத்தை நான் நடத்திவைக்கறேன். இந்த அக்கா கண்டிப்பா உன் கூட நிக்கறேன்” என்று கண்மணி சொல்ல மாதுரி நெகிழ்ந்துபோனாள்.

“ அக்கா, நான் எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கேனோ தெரியலை. உங்களை மாதிரி அக்கா கெடைச்சது எவ்வளவு நல்ல விஷயம் தெரியுமா? பலவீனமா இருந்த மனசுல இப்போ யானை பலம் வந்துருச்சு” என்று சொல்லிவிட்டு கண்மணியை அணைத்துக் கொண்டாள்.

“ எனக்கும் உண்மையான அன்புன்னா என்னன்னு நீ தானேம்மா கத்துக் கொடுத்துருக்கே? நானும் புண்ணியம் செஞஞ்சிருக்கேன். அப்புறம் மந்திராவுக்கும் உனக்கும் நடுவில் என்ன பிரச்சினைன்னு சொல்லு”

“ அது வந்துக்கா, மந்திரா காலேஜில் எனக்கு ஸீனியர். நான் சேந்த புதுசில ரேகிங்ல ரொம்ப மாட்டுவேன். அதுவும் கொல்கத்தால வளந்த நான் பேசற தமிழை மத்தவங்க கேலி பண்ணுவாங்க. மந்திரா கேங் தான் ரேகிங்ல ஜுனியர்களை ரொம்பக் கஷ்டப்படுத்துவாங்க. நான் கொஞ்சம் துணிச்சலானவ. தைரியமாப் போய் கம்ப்ளைன்ட் செஞ்சுட்டேன். ரேகிங் தடை பண்ணப்பட்டாலும் எல்லா இடங்களிலும் நடந்துட்டுத்தான் இருக்கு. கொஞ்சமா, ஃப்ரண்ட்லியா இருக்கற வரைக்கும் ஓகே. ஆனால், அது லிமிட்டை மீறும்போது தப்புதானே? கம்ப்ளைன்ட் வந்துச்சுன்னா கடுமையான தண்டனை தான். மந்திராவோட குழு நல்லா மாட்டிக்கிச்சு. கம்ப்ளைன்டை வித்டிரா பண்ணுன்னு எனக்கு பிரஷர் போட்டாங்க. நான் மாட்டேன்னு உறுதியா நின்னேன். அந்த சமயத்தில் தான் துகிலன், மந்திராவுக்காகப் பேச வந்தார். என்னவோ அவர் பேசின விதம் எனக்குப் பிடிச்சுப் போனதால மந்திராவை மன்னிச்சு விட்டுட்டேன். அவளும் தப்பிச்சுட்டா. ஆனால், அடுத்தடுத்து வன்மத்தைக் கக்கினா. நான் படிப்பில மட்டுமில்லாமல் இசை, நடனம், டிபேட், குவிஸ்னு எல்லாத்துலயும் கலந்துகிட்டு காலேஜில ஸ்டார் ஆனதால அவளுக்கு என்மேல ரொம்பக் கடுப்பாயிடுச்சு. சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெறுப்பைக் காமிச்சா. அதுவே இன்னைக்கு வரைக்கும் தொடருது”

“ ஆனாலும், அவளால தானே நீ துகிலனைச் சந்திச்சிருக்கே? அதுக்காகவாவது அவளை நீ மன்னிச்சு விட்டுரலாம்” என்று கண்மணி சொன்னதும் நியாயமான வார்த்தை என்பதால் தலையசைத்தாள் மாதுரி.

ராஜேஸ்வரியின் அறையில் சேதுபதிக்கு மதிய உணவைக் கொடுத்து விட்டு மாதுரி கிளம்பும்போது அவளுடைய அலைபேசி மீண்டும் மீண்டும் ஒலியெழுப்பியது.

“ எடுத்துப் பேசு. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது” என்றார் ராஜேஸ்வரி.

எடுத்துப் பேசிய மாதுரியின் முகம், சாக்லேட்டைக் கண்ட குழந்தையின் முகமாக மலர்ந்துபோனது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்மையான மகிழ்ச்சி, அவளுடைய முகத்தில் தெரிந்தது. ராஜேஸ்வரி என்ன விஷயமென்று கேட்கவில்லை. மாதுரியும் தானாகவே அவளிடம் சொல்லவும் இல்லை.

சமையலறைக்குத் திரும்பிய மாதுரி, கண்மணியைப் பிடித்துக்கொண்டு தட்டாமாலை சுற்றினாள். கண்மணிக்கு அவளுடைய குதூகலத்தின் காரணம் மட்டும் புரியவில்லை.

தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: உயிர்க்கொடியில் பூத்தவளே! 12
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
48
செம த்ரில். மாதுரி இப்படி எல்லோரையும் நம்புறாங்க?
 

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
194
ராஜேஸ்வரி அம்மா ஏதோ பிளான் பண்ணிட்டாங்க மாதுரிய துகிலன் கிட்ட இருந்த தூரமாக்கா 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top Bottom