• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விக்றோம் - 5

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அத்தியாயம் ‌- 5

சனிக்கிழமை காலை இனிதே விடிந்தது. வெகுநேரம் கழித்தே தூங்கிய நான் ஒரு அலைபேசி அழைப்பில் எட்டேமுக்கால் மணி அளவில் விழித்தேன்.

"குட் மார்னிங் மேடம். என் பெயர் சிவகுமார். வீடு சேல்ஸுக்கு இருக்குன்னு சொல்லி இருந்தீங்க! நானும் அதே ஏரியாவில தான் இருக்கேன்" என்று ஆரம்பித்தார்.

கடவுளே! இவரே எங்கள் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு சனிக்கிழமை காலையை புத்தம் புதிய டிகாஷனோடு வரவேற்கத் தயாரானேன்.

மனமோ "விக்றோம்!! .." என்று பாடியது. அந்த மகிழ்ச்சியின் ஆயுள் இருபத்து நாலு மணி நேரம் கூட இல்லை.

ஞாயிறு காலை பத்து மணிக்கு நாங்கள் சிவகுமாரைச் சந்திக்க பழைய வீட்டிற்கு சென்றோம்.

வணக்கத்துடன் அமர்ந்த சிவகுமார், “நான் இதே ஏரியால கொஞ்சம் உள்ளே இருக்கேன். இந்த வீட்டைத் தாண்டும் போதெல்லாம் வீடுன்னா இப்படி இருக்கணும்னு நினைச்சிருக்கேன். இதையே வாங்க முடியும்னு நினைக்கும் போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல” என்று பெரிய முகஸ்துதியுடன் ஆரம்பித்தார். உடன் வந்திருந்த அவரது தர்ம பத்தினி கணவனது வார்த்தைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கண்களால் வீட்டை அலசிக் கொண்டிருந்தார்.

“வாங்க முதல்ல வீட்டைச் சுத்திப் பாத்துடலாம்” என்று தனசேகரன் எழுந்து விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஹாலில் பேச்சு வார்த்தைக்கு அமர்ந்தோம்.

“எங்களுக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு” இதுவும் சிவகுமார் தான். ஆனால் இப்போது அவரது மனைவியிடம் கணவனின் பேச்சை ஆதரிக்கும் வகையில் ஒரு புன்னகை வெளிப்பட்டது.

“ரேட் கூட நீங்க சொல்றது எங்களுக்கு ஓகே தான்” இது சிவகுமாரின் மனைவி.

எங்களுக்கு காற்றில் பறப்பது போல இருந்தது. ஆனால் அவர்கள் சொன்ன அடுத்த வார்த்தைகள் அப்படியே தரையில் தள்ளி விட்டது.

“நாங்க இப்போ இருக்கிற வீட்டை விற்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். அது போக பேலன்ஸ் லோன் போடலாம்னு இருக்கோம். வீடு சீக்கிரம் வித்துடும். அதுவரையில் நீங்க வேற யாருக்கும் இந்த வீட்டைக் கொடுத்திட வேண்டாம். நாம வேணும்னா டோக்கன் அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுக்கிறோம். ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கலாம்”

நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு ஒரு லட்சம் டோக்கன் அட்வான்ஸ்.. கேட்கவே சிரிப்பாக இருந்தது.

அதற்கு வருடங்கள் ஆனால் நாங்கள் என்ன செய்வது? எங்களைப் போலவே சிந்திக்கும் மற்றும் ஒரு ஜோடி. வேறென்ன சொல்ல?

அவர்களுக்கு நாட்டின் நிலவரத்தை புரிய வைக்க வேண்டும் என்று நாங்கள் எங்கள் அனுபவத்தைச் சொன்னது தான் பெரிய தவறாகப் போனது. நூறு அடி சாலையில் பஸ் ஸ்டான்ட், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனைகள் , பள்ளி கல்லூரி மற்றும் இன்னபிற அத்தியாவசிய பொருட்களை ஐந்து நிமிட நடை பயண தூரத்தில் பெறும் வசதி உள்ள எங்கள் வீட்டுக்கே நாங்கள் வருடக்கணக்கில் தடுமாறும் போது, இவற்றுக்கெல்லாம் இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகும் அவர்களது வீட்டின் நிலைமை எப்படி இருக்கும்?

கூடுதல் தடங்கலாக இருபத்து நான்கு மணி நேரமும் மூடியே இருக்கும் ரயில்வே கேட் அந்தப் பகுதியை மெயின் ரோட்டில் இருந்து பிரித்தே வைத்திருந்தது. சப்வே ஒன்று வரப் போகிறது என்று என்று புலி வருது கதையாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இன்று வரை அதற்காக ஒரு செங்கல் கூட வரவில்லை. இவையெல்லாம் சேர்த்து சென்னையில் இருந்தாலும் அந்தப் பகுதி சில வசதிகளைப் பெற இயலவில்லை.

அவர்கள் நிலைமை இப்படி இருக்க, அதைப் புரிய வைக்க முயன்ற எங்களை திருமதி.சிவகுமார் சற்று அதிகமாகவே பேசிவிட்டுச் சென்று விட்டார். அதன் சாராம்சம் இதுதான்.

“என்ன மேடம், கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசறீங்க? உங்க வீடு விக்கலேன்னா, எங்க வீடும் விக்காதா? என்ன, எங்களுக்கு சாபம் கொடுக்கறீங்களா? நீங்க ப்ளான் இல்லாமல் வீடு வாங்கிட்டு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க.”

நானோ, தனசேகரனோ இப்படி ஒரு பேச்சை இதுவரை எதிர்கொண்டதே இல்லை எனலாம். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நாங்கள் விழிக்க எங்கள் உதவிக்கு சிவகுமார் வந்தார். மனைவியின் காதில் என்ன சொன்னாரோ அவர் விடுவிடுவென்று வெளியேறிவிட்டார்.

அதன் பின்னர் எங்களிடம் மன்னிப்பு கோரிய சிவகுமாரும் வெளியே சென்று விட்டார். நாங்கள் தான் நடந்ததை ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டு இருந்தோம்.

எத்தனை நேரம் நின்றோமோ தெரியாது, பிள்ளைகளிடம் இருந்து வந்த அழைப்பு எங்களை நிதானப் படுத்தியது. வழக்கமாக சனிக்கிழமை இருவரும் இணைந்து கான்ஃபரன்ஸ் வசதியுடன் அழைத்து விடுவார்கள். வீடியோ காலில் இன்றைய நிகழ்ச்சியின் பாதிப்பை மறைப்பதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்க, பிள்ளைகளின் பேச்சு அதற்கு அவசியம் இல்லாமல் செய்து விட்டது.

அவர்கள் இருவரும் சொன்ன செய்தி அப்படி. “மா! வர்ற புதன் கிழமை நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரோம். ஒரு மாசம் லீவ் கிடைச்சிருக்கு.”

“அப்படியா! ரொம்ப சந்தோஷம் கண்ணா!”

வீட்டை என்ன பண்ணுவது என்று ஒரு மாதத்திற்குப் பிறகு யோசிக்கலாம் என்று ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கேஷ் பேக் ஆஃபர் போயே விட்டது. அவர்கள் போனால் என்ன, அவர்களைப் போலவே இருக்கும் இன்னும் பலர் சொந்தத்தை விடப் பிரியமாக என்னை அழைத்து தினம் ஒரு தகவல் போல அவர்களது பேக்கேஜ் விவரங்களை மறக்காமல் ஒப்புவித்து விடுகிறார்கள்.

இதற்குத் தீர்வு தான் என்ன?? யாம் அறியோம் பராபரமே!

பிள்ளைகள் வந்து போய் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆயிற்று. இப்போது நாங்கள் மாற்றி யோசி என்று யோசனை செய்தோம்.

உள்ளூர் தரகர்கள் மூலம் வீட்டை விற்பது என்பது தான் அது. ஏற்கனவே சிலர் எங்களை அணுகவும் செய்தனர். அப்போது கொஞ்சம் பயமாக இருந்த விஷயம், இப்போது பரவாயில்லை என்று தோன்றியது.

இந்த விஷயத்தை நாங்கள் அக்கம் பக்கத்தில் சொன்ன போது முதலில் எங்களை அணுகியவர் எங்கள் ஏரியாவில் இஸ்திரி கடை வைத்திருந்த சண்முகம். “சார்! என் கிட்ட நீ சொல்லவே இல்லையே சார். சொல்லி இருந்தா இந்நேரம் வீடு முடிஞ்சிருக்குமே” என்றார்.

‘முடிஞ்சிருக்குமா!!! என்னடா இது???’ என்று நான் நினைக்க தனசேகரன், “நீங்க இந்த பிஸினஸ் பண்றீங்கன்னு இப்போ தான் தெரியும் சண்முகம், அதான் உடனே சொல்லிட்டேன். கொஞ்சம் பாத்து முடிச்சு கொடுங்க” என்றார்.

‘இவருமா.. அப்பனே முருகா! நல்ல படியா எங்க வீட்டை வித்துக் கொடுப்பா! ’ என்று வேண்டிக் கொண்டேன்.

அன்று மாலையே இருவரை அழைத்து வந்தார் சண்முகம். நான் மூவரையும் அமருமாறு உபசரிக்க, அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து கொள்ள, சண்முகமும் மற்றொருவரும் இருபுறமும் கைகட்டி நின்றனர். எனக்கு ஏதோ சினிமா பார்த்தது போல இருந்தது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவர் தனசேகரனை விசாரிக்க, “அவர் ஆஃபீஸ்ல இருந்து வர லேட் ஆகும் சார். நான் தான் வீட்டுல இருந்தே வேலை பார்க்கிறேன். நீங்க என் கிட்டயே பேசலாம்” என்றேன் என்றேன். அதில் ஆல் டீடெயில்ஸ் ஐ நோ என்ற தொனி இருந்ததை அவர் ரசிக்கவில்லை போலும்.

வீட்டைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டவர் இருபது வருடங்களாக எங்களுக்குத் தெரியாத எங்கள் வீட்டின் குறைகளை மட்டுமே பட்டியல் இட்டு, அதனால் அந்த வீட்டின் விலை இவ்வளவு தான் இருக்க முடியும் என்றார். கிட்டத்தட்ட அடிமாட்டு விலையில் விற்பனை செய் என்றார்.

நான் அதிலேயே அதிர்ந்து போய் நின்றேன். “சார் வந்ததும் பேசிட்டு சொல்லுங்க. நீங்க ஓகே சொன்னா அண்ணாச்சி இரண்டு நாளிலேயே ரெஜிஸ்டிரேஷன் பண்ணிடுவாரு” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார்.

யார் அந்த அண்ணாச்சி என்று நான் விழிக்க எங்கள் ஏரியாவின் ஒரு முக்கியப் புள்ளி என்று தெரிந்தது. புலி வாலைப் பிடித்து விட்டது போன்ற ஒரு உணர்வு. ஆனால் அவர் சொன்ன விலைக்கு தனசேகரன் வீட்டைக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட அதன் பிறகு வந்து பார்த்தவர்கள் அனைவரும் அந்த விலையை ஒட்டியே பேரம் பேச ஆரம்பித்தார்கள்.

இதில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் அருமையான ஐடியா ஒன்று கொடுத்தார்கள். வீட்டை அவர்கள் எத்தனை விலையில் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்வார்கள். ஆனால் நமக்கு அவர்கள் சொன்ன தொகை தான் தருவார்கள், காரணம் இருபது ஆண்டுகள் பழமையான வீடு. இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்

‘என்ன கொடுமை சரவணா இது!’ என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது.

நாட்கள் உருண்டோடின. வீடு விற்பனை செய்வது எப்படி என்று பெரிய சீரியல் எடுக்கும் அளவுக்கு எங்கள் அனுபவம் பல்கிப் பெருகி இருந்ததே தவிர தீர்வு என்ற ஒன்று கிடைத்ததா என்றா இல்லை.. இல்லை… இல்லவே இல்லை…

பெண் படிப்பு முடித்து அங்கேயே வேலைக்குச் சென்று விட்டாள். திருமணம் பற்றிய பேச்சே இப்போது கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறாள். அவளது திருமணம் அவளது உரிமையாம். இன்றைய தலைமுறையினரை எதுவும் சொல்வதற்கில்லை. பெற்றோராக திருமணத்திற்குக் கட்டாயம் அழைப்பு வரும் என்று நானும் தனசேகரனும் காத்திருக்கிறோம்.

பையன் சிங்கப்பூரில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு மேற்படிப்பிற்கு நியூசிலாந்தைக் குறி வைத்திருக்கிறான். இடையே ஒரு மாதம் மட்டுமே வந்து சென்றான்.

திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து நானும் தனசேகரனும் தனிக்குடித்தனம் என்பது எப்படி இருக்கும் என்பதை என்ஜாய் செய்யப் பழகி இருக்கிறோம் (!?)

பெரிய வீட்டில் இருவர் மட்டுமே தங்குவது என்பது சாத்தியமே இல்லை. அதனால் ஃப்ளாட் வாழ்க்கையே போதும் என்று ஆகிவிட்டது. இப்போதெல்லாம் வாரம் ஒரு முறை பிக்னிக் செல்வது போல் பெரிய வீட்டுக்கு சென்று எங்கள் வசந்த மாளிகையின் பழைய நினைவுகளை அசைபோட்டு திரும்புகிறோம்.

முன்பு போல் தனசேகரன் வீடு விற்பனை பற்றி அலட்டிக் கொள்ளவதே இல்லை. ஆனால் அபிராமியாகிய நான் அந்த நாளை எதிர்நோக்கி ஆர்வமாகக் காத்திருக்கிறேன். என் வானத்தில் விடிவெள்ளி தோன்றும் நாள் எந்நாளோ??

*******
 

Author: SudhaSri
Article Title: விக்றோம் - 5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom