• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

விக்றோம் - 3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அத்தியாயம் - 3

இந்தியாவில் கொரோனா காலடி வைக்காத நேரம், வீட்டை விற்று விட முடிவு செய்து பிள்ளையார் சுழியைப் பெரிதாகப் போட்டோம்.

எங்களுக்குள் ஒரு கேள்வி பிறந்தது அன்று. கோழி வந்ததா முதலில் முட்டை வந்தா என்பது போல.. பழைய வீட்டை விற்பதா அல்லது புது வீட்டை வாங்குவதா எதை முதலில் செய்வது என்பது தான் அந்த அருமையான கேள்வி. சாலமன் பாப்பையாவை நடுவராக போட்டிருந்தால் கூட வருடக்கணக்கில் தீர்வு காண முடியாத கேள்வியாகிப் போனது இது.

இது குறித்து எங்கள் இருவருக்கும் இடையே பல நாட்கள் நடந்த காரசாரமான விவாதத்தில் தனசேகரன் தான் ஜெயித்தார். விளைவு பழைய வீட்டை விற்க இப்படிக் கனவில் கூவிக் கொண்டிருக்கிறார்…

"ஏங்க வம்பே வேண்டாம். முதல்ல வீட்டை வித்துடுவோம். அப்புறம் கைல எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு புது வீடு ப்ளான் பண்ணிக்கலாம்"

"ம்ச். இல்லை அபி.. நீ நியூஸ் பாக்குறதே இல்லை. உலகம் பூராவும் ஏதோ பிரச்சினை ஓடிட்டு இருக்கு. நமக்கு எத்தனை நாளைக்கு வேலை இருக்கும்ன்னு தெரியாது. இப்பவே புது வீடு ப்ளான் பண்ணிட்டா.. லோன் வேணும்னா போட்டுக்கலாம்."

"லோன் போட்டு வேலை போயிட்டா எப்படிக் கட்டறது. என்ன பேசறீங்க? முதல்ல வீட்டை வித்துடுவோம். அப்புறம் புது வீடு ப்ளான் பண்ணிக்கலாம்."

"எதுவானாலும் நீ சொல்றது தான் சரின்னு நினைக்காத. ஒரு தடவை நான் சொல்றதைக் கேட்டு தான் பாரேன்."

"ஏதோ பண்ணுங்க.." முடித்தவுடன் அவரது அலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது.

"ஸார்! நாங்க சந்திரா பில்டர்ஸ்ல இருந்து பேசறோம். ஃப்ளாட் வேணும்னு சொல்லி இருந்தீங்க. …."

"ஈவ்னிங் கூப்பிடுங்க ஸார்" என்று வைத்து விட்டார்.

"எப்படிங்க இது, நாம வீட்டுக்குள்ள பேசிட்டு இருந்தோம். இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"

"மொபைல்ல மைக் ஆன் பண்ணி இருந்தால் இப்படி தான் ஆகும். துடைப்பம் வாங்கணும்னு பேசிட்டு இருந்தால் கூட கூகுள் ஆண்டவர் உடனே அமேசான்ல வாங்குங்கன்னு விதம் விதமான துடைப்பத்தோட வந்திடுவார். அத்தனை வெரைட்டி துடைப்பத்தை நீ எங்கேயும் பாத்திருக்க மாட்ட, அதோட விலையைப் பார்த்தாலே நமக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும்."

"அட ஆண்டவா!” என்று அலறி என் அலைபேசியை ஆராய்ந்தேன் நான், ஏகப்பட்ட வீட்டு விளம்பரங்கள்.

நாளொன்றுக்கு குறைந்தது பத்து அழைப்புகள். "உங்க சிபில் ஸ்கோர் ரொம்பவே நல்லா இருக்கு ஸார். உடனே லோன் கிடைச்சிடும். இனிமேல் சிபில் ஸ்கோர் வச்சுத்தான் இன்ட்ரெஸ்ட் ரேட் கூட ஃபிக்ஸ் பண்ணப்போறதா சொல்லிக்கிறாங்க. ஸோ, உங்களுக்கு கம்மி ரேட்லயே லோன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. எங்க ப்ராஜெக்ட் ஹேண்டிங் ஓவர் பீரியட்ல உங்க நீட்ஸூக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு ஸார். எப்போ ஸார் பார்க்கலாம்?" என்று பதினைந்தே நாட்களில் சில நூறு வீடுகளைப் பார்த்து ஒரு வீட்டை வாங்கிவிட்டோம்.

சென்னைக்கு மிக அருகில் என்று நாங்கள் பார்த்த வீடுகளுக்கும் சென்னைக்கும் என்ன சம்பந்தம் என்று எங்கள் சிற்றறிவுக்கு எட்டவே இல்லை. இது தான் உலகமயமாக்கல் போலும்.

வாங்கிய பிறகும் கூட பிரியமாக அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பதில் சொல்லி வாயெல்லாம் வலிக்கிறது. ஆக மொத்தம் நாங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் காலம் மாறிப் போச்சு என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. இப்போது நிலைமை தலைகீழாக மாறி விற்பனை தான் கஷ்டமாக இருக்கப் போகிறது என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

சின்னஞ் சிறிய அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கியதிலும்(ஆயிரத்து ஐநூறு சதுர அடியில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு எங்கள் பழைய வீட்டோடு ஒப்பிடும்போது சின்னஞ் சிறியதாகத் தான் தெரிந்தது) நாங்கள் செய்த ஹிமாலய தவறு எங்கள் தேவைகளைச் சுருக்காததே.

எல்லா வித வசதிகளுக்கும் பழக்கப் பட்டவர்கள் என்பதால் அனைத்தையும் செய்து விட்டுத் தான் வீட்டுக்குள் அடியெடுத்தே வைத்தோம். அதிலும் பல பொருட்களை பழைய வீட்டோடு மறந்து விட்டு புது வீடு புது பொருட்கள் என்று எல்லாமே புதிதாக வாங்கினோம். இப்போது, ஏற்கனவே பிள்ளை குட்டிகளுடன் இருந்த கடன் இப்போது அடுத்த தலைமுறையையும் கண்டுவிட்டது.

"எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்றது எங்கள் வாழ்க்கை.

கொரோனா தனது கோர தாண்டவத்தை நிறுத்தி வைக்க நல்ல வேளையாக கெட்டதிலும் ஒரு நன்மையாக எங்கள் வேலை பறி போகவில்லை. எங்களது பதவி அப்படிப்பட்டது. சம்பள உயர்வு கிட்டவில்லையே தவிர வேறெந்த பிரச்சினைகளும் இல்லை.

அலுவலகம் போல பிள்ளைகளையும் ஜூம் மீட்டிங்கில் காணப் பழகிக் கொண்டோம்.

இப்போது பழையபடி வீடு விற்பனை படலம் தொடங்கி இருக்கிறது. பணம் கட்டிய இணைய தளம் மூலம். இந்த முறை என்னாலான உபயம் இது. டிஜிட்டல் இந்தியாவில் எல்லாமே டிஜிட்டல் மயமானது.

"ஏங்க நாம ஏன் இந்த வெப் சைட்ல ப்ரீமியம் ரெஜிஸ்டரேஷன் பண்ணி வைக்கக் கூடாது. ஃபோட்டோ கூட போட்டு விடலாம். நம்ம கணேஷ் இல்ல. அவன் கூட அப்படித்தான் வீட்டை வித்திருக்கான்." கணேஷ் என் தம்பி.

"ஓ… அவனுக்கு இந்த வெப் சைட் மூலம் தான் ஆள் வந்தாங்களா?"

"இல்ல… ஆனா அவன் கேஷ் பேக் ஆஃபர் போட்டானாம். நாலஞ்சு பேர் வந்து பாத்திருக்காங்க. வேற வழியா வீடு விக்கவும் பணத்தை திருப்பி கொடுத்திட்டாங்க."

"ஓ…"

"என்ன ஓ… நாம போடலாமா வேண்டாமா.. இப்படியே எத்தனை நாள் தான் வீட்டைப் பூட்டி வச்சு தேவையில்லாமல் செலவு பண்ணிட்டு இருக்கிறது. வாடகைக்கு விடவும் நமக்கு மனசில்ல. ஏதோ ஒரு வழியப் பார்த்து விக்க வேண்டாமா?"

"அது சரி. இந்த கேஷ் பேக் எல்லாம் நீயே பாத்துக்கோ. என்னை ஆளை விடு" என்றதோடு அவர் கழண்டு கொண்டார்.

எனக்கு ஆரம்பம் என்னவோ அமர்க்களமாகத்தான் இருந்தது. இருபத்தைந்தாயிரம் சுளையாகக் கட்டி வீட்டைப் பற்றிய விவரங்களை விலாவாரியாக விம் போட்டு விளக்கி, இன்றைய இளம் தலைமுறை புதுப் புது மொபைல் ஆப் எல்லாம் பயன்படுத்தி கலர் கலராக ரீல் விடுவது போல் எங்கள் வீட்டையும் விதம் விதமாக ஃபோட்டோ எடுத்து அடுத்த அரை நாளில் எங்கள் வீட்டை விளம்பரம் செய்ய இணைய தளத்தில் இருந்து பிரத்யேகமாக ஒருவர் தயாராக இருந்தார்.

ஆனால் அவர் விளக்கம் கொடுத்து ஒரேயொரு விஷயம் எனக்கு இன்று வரை ஒரு புரியவே இல்லை.

கேஷ் பேக் ஆஃபர் என்றால் என்ன?? நாம் கொடுக்கும் பணம் பலநூறு தடைகளைத் தாண்டி நம் கைகளில் வந்து சேர வேண்டும் என்ற விதி இருந்தால் தான் வரும். இல்லையேல் நாம் தலைகீழாக நின்றாலும் வராது. அதில் நாம் விளங்கிக் கொள்ள முடியாத வண்ணம் அத்துணை சூட்சுமங்கள் உள்ளது.

நான் பதிந்த இணைய தளம் சொன்ன ஆறு மாதங்களில் இருநூறு பேர் வரை எங்கள் வீட்டில் விருப்பம் தெரிவித்தார்கள். பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் என்னவோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே தான்.

அந்த பத்துப் பேரும் நக்கீரரின் நேர் வாரிசுகளாகி எங்கள் வீட்டின் குறைகளை புட்டுப் புட்டு வைத்தனரே தவிர யாரும்
அதில் ஒரு நிறையையும் காணவில்லை. சில சாம்பிள் இதோ உங்களுக்காக…
 

Author: SudhaSri
Article Title: விக்றோம் - 3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom