• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

முதுமையும் இனிமையே

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
முதுமையும் இனிமையே!


எப்போதோ படித்த கதை ஒன்று திடீரென்று ஞாபகம் வந்தது. கணவனும் மனைவியுமான முதியவர்கள் இரண்டு பேர். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். வீட்டைப் பராமரிக்கவும், பேர்க் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவும் இரண்டு பேரையும் 'எங்க வீட்டுக்கு வாங்க, எங்க வீட்டுக்கு வாங்க' என்று மாறி மாறி அழைத்துப்போய் நான்கு பிள்ளைகளும் வைத்திருப்பர். திடீரென்று பாட்டி இறந்து விட, தாத்தாவைப் பராமரிக்க ஒருவருக்கும் மனம் வராது. 'நீ வச்சுக்கோ; ஏன்? உன் வீட்ல வச்சுக்கிட்டா என்ன?' என்று எல்லாரும் தட்டிக் கழிப்பார்கள். பெண் என்பதால் பாட்டி அனைவர் வீட்டிலும் உபயோகமாக இருந்ததாகவும், தன்னால் எந்த உபயோகமும் இல்லையே என்றும் நினைக்கும் தாத்தா, அவளுக்கு முன் நான் போயிருக்கக் கூடாதா என்று வருந்துவதாகக் கதை வரும்.

இந்தக் கதை நினைவுக்கு வரக் காரணம், இந்த வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் 75 வயதை தாண்டிய முதியவர்கள் இரண்டு பேரின் மரணம். இருவரின் உடலும் உயிரற்ற நிலையில் கொண்டுவரப்பட்டது. முதல் நாள் கொண்டுவரப்பட்ட தாத்தா ஆடு மேய்க்கச் செல்பவராம். வயல் வெளிப் பக்கமாக கிடை அமைத்து அதிலும் அவ்வப்போது தங்கி வருவாராம். ஆடு மேய்க்கப் போன இடத்தில் வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார். வெகு நேரமாகக் காணவில்லையே என்று தேடிப்போக அவருடைய உயிரற்ற உடல் தான் கிடைத்தது.

மறுநாளே, அந்தப் பகுதிக்கு சற்றுத் தள்ளி யாரென்று இனம் கண்டுபிடிக்க முடியாத ஒரு முதியவரின் உடலும் கிடைத்தது. அவரும் பசியிலும் வெயிலின் கொடுமையாலும் உயிரிழந்து தெரிந்தது. அடுத்தடுத்த நாட்களில் இப்படி நிகழ்ந்ததால் மருத்துவமனையையே ஒரு மெல்லிய சோகம் சூழ்ந்து கொண்டது. வழக்கமான பரிசோதனைக்கு வரும் முதியவர்களிடம், 'பதினொரு மணியிலருந்து மூணு மணி வரைக்கும் வெளிய வராதீங்க, வெயில் அதிகமா இருக்கு, ரொம்ப அனல் காற்று வீசுது, தண்ணீர் நிறைய குடிக்கணும்' என்று அறிவுறுத்தி வருகிறோம். ராஜஸ்தான் ஆந்திரா போன்ற இடங்களில் தான் ‌வெயிலின் கொடுமையால் மரணம் (sun stroke) என்ற செய்திகளைப் படித்திருக்கிறோம். எங்கள் பகுதியில் இப்படி அடுத்தடுத்து நடந்தது அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் கூறிய கதையில் வந்தது போல பெண்களுக்காவது வீட்டு வேலை, பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற ஏதாவது பணிகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஓய்வூதியம் இல்லாத ஆண்களுக்கு, குறிப்பாக விவசாயம், கூலி வேலை பார்த்து தங்கள் இளைய மற்றும் நடுத்தர காலத்தை கடந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக முதுமை பெரும் பாரமாக இருக்கிறது.

நான் அறிந்த வரையில் 'ஏ ராசா! நடக்க முடியல.. கொஞ்சம் பைக்கில் ஏத்திக்கிட்டுப் போய் அந்தப் பக்கமா இறக்கிவிடு ராசா!' என்று பாட்டிகள் உரிமையாக சிறியவர்களிடம் கேட்பது போல் தாத்தாக்கள் வாயார உதவிகள் கேட்பது போல் தெரியவில்லை. கம்பு ஊன்றிக் கொண்டே போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நடக்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வெளியே போக முடியாது என்பதால் மட்டுமே மன உளைச்சல் அடைந்த பல முதியவர்கள் உண்டு.

நவீன மருத்துவ வசதிகளால், அறிவியல் முன்னேற்றத்தால் மனிதன் சராசரியாக உயிர் வாழும் வயது உயர்ந்து விட்டது. அதனால் முதுமையின் இயல்பான வியாதிகளான செவித்திறன் குறைவது, கால் மூட்டுகள் தேய்மானம், கண் கோளாறுகள் போன்றவை ஆண்-பெண் என்றில்லாமல் எல்லா முதியவர்களையும் ஒருசேர பாதிக்கின்றன. இளைய தலைமுறை தங்களுக்கென பல லட்சியங்களை வைத்துக்கொண்டு இயங்குவதால் அவர்களது பட்ஜெட்டில் முதியவர்களுக்கு செலவழிப்பதற்கு குறைவாகவே பணம் ஒதுக்க முடிகிறது. என்னுடைய அனுமானத்தின்படி இந்த தலைமுறைப் பெரியவர்கள், பிள்ளைகளிடம், பேரன் பேத்திகளிடம் உதவி கோறுவதை அவமானமாக நினைக்கின்றனர். அதனால் முடிந்தவரை நானே உழைப்பேன் என்று தள்ளாத வயதிலும் வேலை செய்கின்றனர். உழைப்பு பாராட்டுதற்குரியது தான், ஆனால் உரிய நேரத்தில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதும், இயன்ற வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் அவசியம்.

முதிய வயது ஆண்களுக்கு ஏற்படும் சில பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர் கட்டுப்பாடின்மை. நீர் சேகரிக்கும் பையைச் (urinary bladder) சுற்றி ஆண்களுக்கு அமைந்துள்ள பிராஸ்டேட் சுரப்பியானது 60 வயதுக்கு மேல் கெட்டிப்பட ஆரம்பித்து சிறுநீர்ப்பையின் மேல் அழுத்தம் கொடுக்கும். (Benign prostatic hypertrophy) இதனால் சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது முழுதாக சிறுநீர் வெளியேறாமல் அரைகுறையாகத் தேங்கி விடுவது உண்டு. உதாரணமாக மற்றவர்கள் சிறுநீர் கழித்த பின் நீர்ப்பையில் 30 மில்லி அளவு சிறுநீர் மிச்சமிருக்கும். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்களுக்கு அது 100 முதல் 300 மில்லி வரை இருக்கலாம். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் (frequency) என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வும் (urgency) வரும். ஆனால் சீராக வெளியேறாமல் சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறும். இப்படி சிறுநீர் தேங்குவதால் தொற்றுகள் ஏற்பட்டு பல பிரச்சனைகள் வரக்கூடும். அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ நேர்வதால் தூக்கமும் பாதிக்கும்.

சிறுநீர் பிரச்சனை தவிர இயல்பாகவே 60 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலருக்குமே தூக்கம் குறைந்துவிடுகிறது. அதனால் ஏற்படும் மன அழற்சி, பகலில் சோர்வு இவை ஏற்படுவதும் இயல்பே. கழிவறைகளில் தவறி விழுவது, சாலைகளைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துக்கள் இவையும் முதிய ஆண்களில் சகஜம். ஆரம்ப காலத்திலிருந்து வாகனங்கள் ஓட்டிப் பழகி விட்டேன், திடீரென்று அதைக் கைவிட முடியவில்லை என்று உடல் ஒத்துழைக்காத நிலையிலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதால் வரும் விபத்துகளும் முதிய வயதில் அதிகம்.

வயது ஏற ஏற ஞாபகமறதிக் கோளாறுகளின் எண்ணிக்கையும் அதிகம். பொருட்களை இடம்மாற்றி வைப்பது, சொந்த வீட்டிற்கே வழியை மறந்து போவது போன்ற அன்றாடப் பிரச்சனைகளும் உள்ளன. சிறு வயது முதல் கடைப்பிடித்த புகை, மது போன்ற பழக்கங்கள், வயதானால் ஏற்பட அதிக வாய்ப்புள்ள சர்க்கரை மற்றும் இதய நோய்கள் இவையும் முதியவர்களை முடக்கிப் போடுகின்றன. உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளைக் கூட எனக்கு ஆபரேஷன் எல்லாம் வேண்டாம், இப்படியே இருந்துட்டு போறேன் என்று பல முதியவர்கள் மறுக்கிறார்கள்.

இத்தனையையும் மீறி நூலகம், பொதுச்சேவை, நடைபயிற்சி, கல்விச் சேவைகள் மற்றும் முகநூல் போன்ற தளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கும் முதியவர்களும் உண்டு. சீனியர் சிட்டிசன் ஒருவர் இருக்கிறார், எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். அவரைப் பார்த்தாலே நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். "முப்பது வருஷமா சுகர், பிரஷர் இருக்கும்மா. ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் ஆபரேஷன் கூட பண்ணிட்டேன். அதனால என்னம்மா? மாத்திரையை சாப்பிட்டு, வாக்கிங் போயிட்டு, பிடிச்சதை கொஞ்சமா மட்டும் சாப்பிட்டுட்டு, சந்தோசமா இருக்க வேண்டியதுதான்.‌ இன்னைக்கு நேத்து சுகர் வந்தவங்க எல்லாம் புலம்புறதப் பார்த்தா சிரிப்பா இருக்கு" என்பார். "அப்படி நிறைய பேர் வருத்தத்தில் இருக்காங்க.. உங்களத்தான் கவுன்சிலிங் கொடுக்க கூட்டிட்டு போகணும்" என்போம் அவரிடம்.

இப்படிப்பட்ட நம்பிக்கை மனிதர்களை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு விழிப்புணர்வுடன் இருந்து தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டால் முதியவர்களின் இறுதிக்காலம் இனிமையாக இருக்கும்.

No country for old men என்று ஒரு ஆங்கிலத் திரைப்படம். பல ஆஸ்கார் விருதுகளை வாங்கியது. ஒரு பண மூட்டைக்காகத் தொடர் குற்றங்கள் நிகழ்கின்றன. ஊரில் பல மக்களை, குறிப்பாகக் கண்ணில் படும் முதியவர்களை ஒரு சைக்கோ கொலைகாரன் சுட்டுக் கொன்று கொண்டே இருப்பான். அவனை தந்திரத்துடனும் திறமையுடனும் துரத்துகிறார் அந்த ஊர்த் தலைவர் (ஷெரீஃப்). கிட்டத்தட்ட அவனை நெருங்கும் தருவாயில் இறுதியில் அவனைத் தவறவிட்டு விடுகிறார். அப்போது அவருக்கு மறைந்து போன அவரது தந்தை முதுமைக் காலத்துக்குள் இவரை அழைப்பது போன்ற ஒரு கனவு வருகிறது. தனக்கு வயதாகிவிட்டது.. தன்னைப் போன்ற வயதான முதியவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாடு முதியவர்களுக்கானது இல்லை என்று தன் நண்பரிடம் வருத்தமாகச் சொல்வதுடன் கதை முடிகிறது. இது மெக்சிகோ நாட்டை மையமாகக் கொண்ட கதை.

ஆனால் நம் தேசம் முதியவர்களை கொண்டாடும் ஒன்று. சித்தர்கள், ஞானிகள், துறவிகளை தெய்வமாக பார்க்கும் நாடு. 90 வயதிலும் முதல்வராக பிரதமராக ஜனாதிபதியாக சிறப்புடன் வழிகாட்டுபவர்கள் இருக்கும் நாடு. அத்தகைய பெரியவர்களின் வாழ்வில் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி, அவர்களது இளவயது உழைப்பைப் போற்றி, முதியவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்குவதும் விழிப்புணர்வு அளிப்பதும் இளைய தலை
முறைகளின் கடமைதானே!
 

Author: SudhaSri
Article Title: முதுமையும் இனிமையே
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom