• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மலரினும் மெல்லியது

VedhaVishal

Administrator
Staff member
Joined
Jun 17, 2024
Messages
17
மலரினும் மெல்லியது


"ஏம்பா சிவா, உன் பொண்டாட்டி கூட பேசினியாப்பா? அவ கோவிச்சுகிட்டு அவங்கம்மா வீட்டுக்குப் போய் இரண்டு மாசமாகப் போகுது. ஒரு தகவலும் இல்லை".

சிவா பதிலே பேசாமல் எழுந்து சென்றான். மனம் வெறுமையாக இருந்தது. எதற்குப் பயந்து முப்பது வயது வரை திருமணத்தை தள்ளிப்போட்டானோ அதுவே நடக்கையில் யாரை நோவது?. அவனது தாய் இப்பொழுது கேட்டதும் அவனுக்காக அல்ல, இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் அவன் தங்கை ஸ்வேதாவின் திருமணத்திற்காக. தந்தை இல்லாததால் தாரை வார்த்துக் கொடுக்க அண்ணனும், அண்ணியும் வேண்டுமல்லவா? அதுதான் இந்தக் கரிசனத்திற்குக் காரணம் என்று அவனுக்குத் தெரியும்.

அவன் தங்கையும் தம்பியும் தீவிரமாக மொபைலைப் பார்ப்பதான பாவனையில் இருந்தனர். அதிலும் ஸ்வேதா இவனின் பதிலுக்காகக் காத்திருப்பது தெரிந்தது. புகுந்த வீட்டினர் கௌரவமாய் எண்ண வேண்டுமே?. பிறர்க்கு வந்தால் தக்காளி சட்னி கதைதான்.

" நான் ஆபீஸ் போய்ட்டு வரேன்" , பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

நந்தினி, சிவானந்தனின் மனைவி. கல்யாணமாகி எட்டு மாதங்களாகிறது. அவன் அம்மா கிரிஜாவின் குணத்தையும் ஸ்வேதாவின் வாய்த் துடுக்கையும் அறிந்தவன், அன்னையின் வற்புறுத்தலாலும் நந்தினியைப் பிடித்திருந்ததாலும் ஒருவழியாகத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.


நந்தினி நல்ல பெண். எம். ஏ பொருளாதாரம் படித்துவிட்டு தேசிய வங்கியில் வேலை பாரப்பவள். நல்ல படித்த மேல் தட்டுக் குடும்பம். அவள் புத்திசாலியாகவும், கெட்டிக்காரியாகவும் இருந்ததுதான் பிரசினை.

உள்ளூரானதால் திருமணத்திற்கு முன்பே பார்த்து, பேசி பழகினர். அவளது அழகும் சாமர்த்தியமும் சிவாவை ஈர்க்க, அவளுக்கான அவனது ஆசையும் காதலும் வளர்ந்தது, வெளிப்படையாகவே தெரிந்தது. அதன் விளைவாக புதுக் கல்யாண ஈர்ப்புகளைத் தாண்டிய ஒரு நெருக்கமும், இயல்பான 'பேபி' என்ற அழைப்பும் , வேலை பார்க்கும் மனைவிக்கு இசைவாக, ஒத்தாசையாக என முழுதான காதல் கணவனாக மாறிப் போனான். அக்கம் பக்கத்தினரையே வறுத்து வாய்க்குள் போட்டுக் கொள்ளும் கிரிஜா தனக்கே தனக்குக் கிடைத்த மருமகளை விட்டு வைப்பாரா?.

கணவர் இறந்ததிலிருந்து தனக்கும், குடும்பத்துக்கும் மகன் செய்ததையெல்லாம் தள்ளுபடி செய்தவர், சிவாவை நந்தினி மயக்கி விட்டதாகவும், சொக்குப்பொடி போட்டுவிட்டதாகவும் கல்யாணமான மூன்றாம் வாரமே புலம்ப ஆரம்பித்தார்.

சின்னச் சின்ன சண்டையில் ஆரம்பித்தது, ஸ்வேதாவின் நிச்சயத்தன்று மறுநாள் புகைய ஆரம்பித்தது.. வீட்டில் சில உறவினர் இன்னும் தங்கியிருக்க, வழக்கம்போல் சிவா, நந்தினி, அவன் தம்பி சரவணன் மூவரும் வேலைக்குக் கிளம்பினர். நந்தினி மூவருக்கும் மதிய உணவை பேக் செய்தவள், சிவாவிடம் அவளது கைப் பையைக் கேட்டாள். அவனும் அதில் பணம், ஏடிஎம் கார்டு, ஐடி இத்யாதிகளைச் சரி பார்த்து, அவளது ஸ்கூட்டியின் சாவியையும் கொடுத்தான்.


பார்த்துக் கொண்டேயிருந்த அவனது மாமாவின் மனைவி "ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி, நம்ம சிவாவா இது? என்னதான் புதுப் பொண்டாட்டி மேல பிரியம் இருந்தாலும் இப்படியா விழுந்து விழுந்து வேலை செய்வான்? நாளைக்கு அந்தப்பொண்ணு எப்படி அண்ணி உன்னை மதிக்கும்? சூதானமா இருந்துக்கோ. உன் புள்ளைய கண்ட்ரோல்ல வச்சுக்கோ " என ஏற்றி விட்டார்.

இது நடந்து இரண்டு வாரங்களில் புடவை, நகையென ஸ்வேதாவிற்கு வாங்கிய, வாங்க வேண்டியவைகளைப் பற்றிப் பேசும்பொழுது சரவணன்" பொண்ணு கல்யாணம்னா ரொம்ப செலவு, இல்லம்மா?", என்றான்.

அதற்கு நந்தினி இயல்பாகத் தன் கல்யாண செலவை நினைத்து, "ஆமாம் தம்பி அம்மா, அப்பா சேர்த்ததெல்லாம் கரைஞ்சிடுது" எனவும் , வந்தது வினை.

" பாத்தியா சிவா? நீயும் சரவணனும்தான் செலவு செய்யறீங்கன்னுதானே அவ இப்டி பேசறா?, உங்கப்பா இருந்தா இதைவிட அதிகமா செய்வாரு".

"அம்மா அவ ஒண்ணும் அப்படிச் சொல்லலம்மா"


"அத்தை , நான் பொதுவாதான் சொன்னேன், நீங்க வேணா அவரைக் கேளுங்க. அவர் இதுவரை செலவு செஞ்ச பன்னிரண்டு லட்ச ரூபாயை நான் ஏன் எதுக்குன்னு கேட்டிருப்பேனா?" என்று வாயை விட்டாள்.

" அம்மாடியம்மா! இப்படி ஒரு சாமர்த்தியத்தை நான் பார்த்ததில்லை. ஏண்டா , எனக்கே இது வரைக்கும் நீ எவ்ளோ செலவு செஞ்சிருக்கன்னு தெரியாது. உன் பொண்டாட்டி புட்டுப் புட்டு வைக்கிறா. மந்திரம் நல்லாதான் வேலை செய்யுது போல உனக்கு" .

" அம்மா! கொஞ்சம் பேசாம இருக்கியா?"

"என்னையே சொல்லுடா. அவ கால்ல விழுந்து கும்பிடு"

" அத்தை! தேவையில்லாம பேசாதீங்க! எங்க பேங்குலதான் அக்கவுண்ட் வச்சிருக்கார். நான் தினமும் போறதால கணக்கெல்லாம் நான்தான் பார்க்கறேன்".

சண்டை பெரிதாகி, நந்தினி ஃபுல் அழுகை மோடுக்குப் போக, சமாதானம் செய்ய உள்ளே அழைத்துச் சென்றான். கிரிஜாவின் "நல்லா வளர்த்திருக்காங்க, வசியம் பண்ணவும் வாயைக் காட்டவும்" என்றது காதில் விழ, வெளியே வந்தவள், " எங்களுக்கு ஒண்ணும் லவ் மேரேஜ் இல்ல. நீங்கதான் பொண்ணு கேட்டு வந்தீங்க. உங்க பையனை நீங்களே வச்சுக்கோங்க" என்றவள் தன் உடைகள், மற்றும் கைப்பையுடன் கிளம்பிப் போயே போய் விட்டாள்.

அம்மா மற்றும் மனைவியின் உரிமைப் போரில் சிவாநந்தன் சிக்கித் தவிக்கிறான்.
யார் மீது தவறிருந்தாலும் அவனால் பேச முடியாது. ஆனால் ஆறு மாத மணவாழ்க்கை அவனை ஏங்க வைத்தது. மனைவியின் அண்மையை மனம் வேண்டியது. சில பிரத்யேகமான பேச்சுக்கும், தொடுகைக்கும், பார்வைக்கும் ஏங்கினான்.

மாமனார் வீட்டிற்குச் சென்றவனை எல்லோரும் குற்றவாளி போல் பார்த்தனர். நந்தினியிடமும் பிரிவின் தாக்கம் இருந்தாலும் அவள் அதிகம் காட்டிக்கொள்ளவில்லை. மூன்று சந்திப்புகளும் தோல்வியே. ஃபோன் கால்களும் நல விசாரிப்பைத் தாண்டவில்லை.

தற்போது ஸ்வேதாவின் திருமணம் நெருங்கி வரும் நேரத்தில் தாலிக்குப் பொன்னுருக்கச் சென்றவர்களை, சம்பந்தி வீட்டினர் நந்தினியைப் பற்றிச் சுற்றிச் சுற்றிக் கேட்கவே ஒரு வாரமாக இந்தப் பேச்சு நடக்கிறது.

மாலை வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தம்போதே மனோவின் குரல் கேட்டது. ஸ்வேதாவைக் கலாட்டா செய்து கொண்டிருந்தான்.

மனோகரன் சிவாவின் பள்ளி, கல்லூரித் தோழன். இவர்கள் இந்த வீட்டை வாங்குவதற்கு முன் மனோவின் வீட்டில்தான் குடியிருந்தனர். இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. ரசனைகளும் ஒன்று. கிரிஜாவைப் பற்றி அறிந்தவன், சிவா வருந்தக் கூடாதென்று எதையும் கேட்கவில்லை. ஆனால் இன்று கிரிஜாவே அவனை அழைத்து சிவாவிடம் பேசச் சொன்னார்.

"வாடா" என வரவேற்றவன் அன்னையும் ஸ்வேதாவும் ஒருவரையொருவர் பார்ப்பதைக் கண்டு மனோவின் வருகைக்கான காரணத்தைப் புரிந்து கொண்டான். ஏனெனில் அந்த ஞாயிறன்றுதான் இன்னொரு நண்பனின் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் சந்தித்திருந்தனர்.

"என்னடா? எங்க வீட்டுப் பக்கமெல்லாம் காத்து வீசுது. ஸ்வேதா நிச்சயத்துக்கப்பறம் ஆளையே காணும். இதுல நானும் அவளுக்கு அண்ணன்தான்னு டயலாக் வேற".

"அதான் வந்துட்டேன்ல".

"குழந்தை எப்படிடா இருக்கா?"

"இப்பதான் தவழ ஆரம்பிச்சிருக்கா".

சிறிது இடைவெளிக்குப் பிறகு, " சிவா, சிஸ்டர் எப்படியிருக்காங்க?".

சிவா ஸ்வேதாவைப் பார்த்து "நீ மாடிக்குப் போய் விஜய்யோட(மாப்பிள்ளை) ஃபோனை கன்டினியூ பண்ணு" என்றவன் அவள் சென்றதும் "யாருக்குத் தெரியும், நான் பார்த்து ஒரு மாசமாச்சு. பேசியே பத்து நாளைக்கு மேல ஆகுது...மப்ச்..அத விடுடா."

"இப்படியே எத்தனை நாளைக்குதாண்டா இருப்ப? இப்ப தங்கச்சி கல்யாணம் வேற வருதில்ல?"

"இப்ப என்னங்கற? இவங்க சொல்லிதானே வந்திருக்க? என்னப் பத்தின அக்கறையா? தங்கச்சி கல்யாணத்தைப் பத்தின கவலையா? நந்தினி கால்ல விழுந்தாவது அவளை மண்டபத்துக்குக் கூட்டிட்டு வரேன். போதுமா?".

கிரிஜா, " டேய் சிவா! நீ ஏண்டா அவ கால்ல விழணும்?".

"ஆன்ட்டி, நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?, சிவா நீ இப்படி சிஸ்டரையே நினைச்சுக்கிட்டு தேவதாஸ் மாதிரி திரியுறது நல்லாவா இருக்கு? உன் பொண்டாட்டிய உனக்குப் பிடிச்சிருக்கறது என்ன கொரோனா வியாதியா? குஷியாதானடா இருந்தீங்க ரெண்டு பேரும்?
அத நினைச்சு ஜாலியா அசை போட்டு சிஸ்டர சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வழியப் பாருடா".

சிவா ஒரு வறட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
" ஏண்டா மனோ, எனக்கு என்ன டீன் ஏஜ் லவ்வாடா? அவ கேட்ட மாதிரி அவங்க பார்த்த பொண்ணுதானே, நந்தினி? என் வைஃப் மேல நான் ஆசை வைக்கிறதோ, அவளை லவ் பண்றதோ தப்பா? அவளோட நான் சண்டை போட்டார அவங்களுக்கு சந்தோஷமா? வேலைக்குப் போறவளுக்கு ஹெல்ப் பண்றது ஒரு குத்தமாடா? இவங்களுக்கு நான் வீட்டு வேலைல உதவியே செஞ்சதில்லயா?".

"கேட்டியா மனோ எப்படி பேசறான்னு? இவன் சந்தோஷமா இருக்கறத நானா வேண்டாம்னேன்?"

"அம்மா உங்க கிட்ட இப்படிப் பேசறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. ஒவ்வொரு உறவுக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. காதல்லயும் கல்யாணத்துலயும் ஒரு வயசுல ,அந்த உறவோட நெருக்கத்துனால வர ஈர்ப்புனால ஆணோ பெண்ணோ மாறினா மாதிரி தெரியலாம். நமக்குப் பிடிச்சவங்களைப் பார்த்தா அந்த அன்பு தானே வெளிப்படுது. ஒருத்தர் உயர்வா சொல்ற அந்த அன்பும் ஆசையும் இன்னொருத்தருக்கு இகழ்வா இருக்கு. ஆனா எல்லாருமே ஒரு கட்டத்துல காமத்தையும் காதலையும் உணரவும் வெளிப்படுத்தவும்தான் செய்யறாங்க".

" நானோ இல்லை நந்தினியோ சின்னப்பசங்க இல்ல. இந்த வீட்டுல என்னோட இடத்தையும் பொறுப்பையும் விளக்கி அவ சம்மதிச்சதுனாலதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். சண்டைல அவளும் வார்த்தைய விட்டுருக்கா. நாம ஸ்வேதாவோட புகுந்த வீட்ல என்ன எதிர் பார்ப்போமோ அதையேதான் நந்தினி வீட்லயும் கேக்கறாங்க. அவள நான் அப்படியே விட்டுட மாட்டேன். கூப்பிட்டுப் பார்ப்பேன். வரலைன்னா ஸ்வேதாக்கும் சரவணனுக்கும் கல்யாணம் செஞ்சு, நான் என் கடமையை முடிக்கிற வரை காத்திருக்க விருப்பம் இருந்தா இருக்கட்டும். இல்லேன்னா.." என்றவனுக்குக் கண்கலங்கிக் குரல் கரகரத்து விட்டது.

"சிவா", என்று மனோகரும் கிரிஜாவும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.

"சிவா, நான் பேசுனத மனசுல வச்சுக்காதப்பா. நந்தினி ஸ்வேதாக்கு ஆசையாதான் புடவை நகையெல்லாம் செலக்ட் செஞ்சா. நான்தான் எங்கண்ணி பேச்சக் கேட்டு ஏதேதோ சொல்லிப் புதுசா கல்யாணமானவங்களப் பிரிச்சுட்டேன். என்ன மன்னிச்சிடுப்பா. நாளைக்கு நாம இரண்டு பேரும் போய் நந்தினியக் கூப்பிட்டு வந்துருவோம்ப்பா, ஆனா அவ என்னைப் பார்த்தா பேசுவாளோ மாட்டாளோ? சம்பந்தி முகத்தை எப்படிப் பார்க்கறது?".

"என்னம்மா நீங்க, எங்கிட்டப்போய் ஸாரியெல்லாம் கேட்டுகிட்டு. நீங்க நந்தினி கிட்ட ஃபோன்ல பேசுங்க. நான் போய் அவங்க வீட்ல பேசி அவளை அழைச்சுக்கிட்டு வரேன்", என்றவனின் முகம் மென்மையாகி மலர்ந்திருந்தது.

மனோகர், 'காதலோ ஆசையோ மயக்கமோ நண்பனிடம் தானே வெளி விட்டுப் பிரகாசிக்கிறது, மலரினும் மெல்லியதென்று சும்மாவா சொன்னார்கள்?" என நினைத்துக் கொண்டான்.
 
Last edited:

Author: VedhaVishal
Article Title: மலரினும் மெல்லியது
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
20
அருமை 😁😁 யதார்த்தமான கதை 😃
ஒரு பெண், மாமியார் ஆகும் போது இப்படித்தான் நடந்து கொள்கிறாள். நல்லவளாக இருந்தாலும் சுற்றம் விடாது, இப்படி ஏதாவது தூபம் போட்டுக்கொண்டே இருக்கும். 🙄
சிவா மாதிரி மனைவிக்காக புரிந்துணர்வோடு காதலித்தால் , உதவினால் வாழ்க்கை நன்றாக ஓடும்.🥰 ஆனால் அநேக ஆண்கள் இருபக்கமும் பேசாமல் நழுவிக்கொண்டு ஓடுபவர்கள்.
இடையில் மருமகள் மட்டுமே ( மாமியார் ஆகும் வரை???) இரண்டு பக்கமும் கிடந்து அல்லாடும் பிறவி. 😒😍
 
Top Bottom