• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -17

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
314
பகலிரவு பல கனவு - 17

சம்யுக்தா மற்றும் அவளது தந்தையையின் முக பாவனைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு முதல் முறையாகத் தனது தோற்றம் பற்றிய கவலை வந்தது. சில நொடிகளே என்றாலும் கண்ணன் அவனை மேலிருந்து கீழாக துளைக்கும் பார்வை ஒன்றைப் பார்த்த போது தன்னிச்சையாக அவனது கை தலைமுடியைச் சரி செய்தது.

கண்ணன் அங்கே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தே தான் வந்திருந்தான். அவ்வளவு ஏன், அவரை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு ஒத்திகையே பார்த்திருக்கிறான். ஆனாலும் இப்போது பொது இடத்தில் வைத்து அவரது எடை போடும் பார்வையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திணறினான். தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த போதே அவர் நகர்ந்து விட்டார்.

அவர்களின் சந்திப்பு எப்போது நிகழ்ந்திருந்தாலும் இது போன்ற ஒரு எடை போடும் சம்பவம் நடந்திருக்கும் என்பதை அவன் அறிவான். அப்படி இருந்தும் இப்போதைய எதிர்பாராத சந்திப்பு அவனுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை. சம்யுக்தாவுக்கும் அப்படியே இருந்தது போலும். திடீரென தந்தையை அவரது பணியிடத்தில், அதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பார்த்தது அவளை மௌனமாக்கி விட்டது.

காலையில் கிளம்பும் போது இருந்த
உற்சாகம் அத்தனையும் தந்தையைக் கண்ட நொடியில் காணாமல் போய் விட்டது. அவரது பார்வை கேட்ட கேள்விக்கு வழக்கம் போல சட்டென்று பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள். அதுவே அவளைக் காட்டிக் கொடுத்தது. வீட்டுக்குத் தெரியாமல் வரவில்லை தான், நண்பர்களுடன் ஊர் சுற்றப் போகிறேன் என்று சொல்லிவிட்டே வந்திருந்தாள். யார் அந்த நண்பர்கள் என்றோ, எங்கே செல்லப் போகிறோம் என்றோ சொல்லியிருக்கவில்லை.

வழி முழுவதும் தந்தையை எப்படி எதிர்கொள்வது, என்னென்ன கேள்விகள் வரும், காதல் என்று சொன்னால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தீவிரமாக யோசித்தபடியே வந்தாள். அவளது நிலையறிந்து பிரபாகரனும் அமைதியாகவே வந்தான்.

அவளது வீட்டின் அருகே வண்டியை நிறுத்தி, “சம்யூ! தைரியமா இரு. எது வந்தாலும் சமாளிக்கலாம். நைட் கால் பண்றேன். பர்த்டே பேபி எப்போதும் சந்தோஷமா இருக்கணும், ஓகே. டேக் கேர்” என்று அவளது கரங்களைப் பற்றி ஒரு அழுத்தம் கொடுத்துச் சென்றான்.

“ம்ம்..” என்று முனகிக் கொண்டே மெதுவாக வீடு நோக்கி நகர்ந்த சம்யுக்தா தந்தையின் காரைக் கண்டவுடன் தயங்கி நின்று விட்டாள்.

மிகுந்த யோசனையுடன் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தவளை சரண்யாவின் ஆரவாரமான குரல் வரவேற்றது.

“இதோ வந்துட்டாளே பர்த் டே பேபி! ஹேப்பி பர்த்டே சம்யூஊஊஊஊ!!” என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் சரண்யா.

“தாங்க் யூ ஸோ மச் சரண். இப்போ தான் வந்தியா?” என்ன பேசுவது என்று தெரியாமல் கேள்வியுடன் பேச்சைத் தொடங்கி வைத்தாள் சம்யுக்தா. தந்தையின் பார்வை ஒரு பக்கம் அவளைக் கூறுபோட்டது. அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதால் தோழியைக் கவசமாக்கிக் கொண்டாள். இந்த நிம்மதி தற்காலிகமானது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். கொஞ்சம் நேரத்தைக் கடத்தினால் தானும் தெளிவாகிவிடலாமே என்று தான் இந்த யுக்தியைக் கையில் எடுத்துக் கொண்டாள்.

“நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு. காலேஜ்ல இருந்து நேரா இங்கே தான் வரேன். ஆன்ட்டி செஞ்ச ஸ்வீட், பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் ஒரு கை பார்த்தாச்சு. அங்கிள் கூட பொண்ணு பர்த்டேன்னு வந்திருக்காங்க. நீ என்னடான்னா ஆடி அசைஞ்சு மெதுவா வர்ற. உன் சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையா? இன்னைக்கும் காலேஜ் கதவெல்லாம் மூடிட்டு வர்றியா?” படபடவென்று பொரிந்த சரண்யாவிற்கு பதில் பாரதியிடம் இருந்து வந்தது.

“என்னது சின்சியரா.. சரண்யா! உன் ஃப்ரண்டு உன் கிட்ட சொல்லவே இல்லையா? மேடம் இன்னைக்கு காலேஜ் கட் அடிச்சிட்டு ஃப்ரண்ட்ஸோட ஊரைச் சுத்திட்டு வராங்க. காலைல எட்டு மணிக்கே கிளம்பியாச்சு. டியர் மோஸ்ட் ஃப்ரண்டு நீ இல்லாமல் இவ ஊர் சுத்த மாட்டாளே? இன்னைக்கு உன் கிட்ட சொல்லாமலே போயிருக்காளா? இரண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா?”

பாரதியின் பேச்சைக் கேட்டு சரண்யா கொதித்து எழுந்தாள் என்றால் சம்யுக்தா திருதிருவென விழித்தாள். “அடிப்பாவி! உன் பர்த்டேக்கு என்ன ப்ளான்னு எத்தனை தடவை கேட்டிருப்பேன்? எதுவுமே இல்லைன்னு நேத்து சாயங்காலம் வரைக்கும் சொன்னியேடி. நீயெல்லாம் திடீர்னு ப்ளான் போடற ஆள் கிடையாதே?

அப்போ உனக்கு என்னை விட முக்கியமான ஃப்ரண்டு யாரும் கிடைச்சுட்டாங்கன்னு அர்த்தமா? அப்படி யார் அந்த ஃப்ரண்ட்ஸ்? என்னையே மறக்கிற அளவுக்கு? இனிமேல் நான் யாரோ தானா? சொல்லு சம்யூ, சொல்லு!”

எஸ்பிபி மாதிரி மூச்சு விடாமல் பேசிக்கொண்டே தோழியை முறைத்தாள் சரண்யா. அவளால் சம்யுக்தா தன்னை ஒதுக்கி வைத்து ஒரு விஷயம் செய்திருக்கிறாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் வார்த்தைகளால் கேட்ட கேள்விகளை பார்வையால் கேட்டார்கள் சம்யுக்தாவைப் பெற்றவர்கள்.

இன்று காலை வரை “டாடீஸ் லிட்டில் பிரின்ஸஸாக” இருந்தவளுக்கு இப்போது தந்தையின் பார்வையைச் சந்திக்க இயலவில்லை. கண்ணன் வந்தபோதே சரண்யா வீட்டில் இருந்ததால் அவர் மனைவியிடம் மகளைப் பார்த்தது பற்றிச் சொல்லியிருக்கவில்லை. சரண்யாவுக்குத் தெரியாத ரகசியம் எதுவும் சம்யுக்தாவிடம் இருக்காது என்று நம்பியவருக்கு இப்போது குழப்பமாக இருந்தது.

“நிறைய ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இல்லம்மா. ரொம்ப முக்கியமான ஒரேயொரு ஃப்ரண்டு தான். புல்லட்ல இரண்டு பேருக்கு மேல போக முடியாதே” என்று வாயைத் திறந்தார் கண்ணன்.

“என்னங்க சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்க கிட்ட சொன்னாளா?” என்று பாரதி கணவனிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்.

“உங்க பொண்ணுக்கு எப்போதும் அம்மான்னா இளக்காரம் தான். கூடவே இருந்த என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை. எங்கேயோ இருந்த உங்களுக்கு தெரிஞ்சிருக்கு” என்று அவரது புலம்பல் தொடர்ந்தது. விஷயம் தெரியாமல் புலம்பும் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்த கண்ணன் சரண்யாவின் கேள்வியில் அதிர்ச்சி அடைந்தார்.

“புல்லட்டா?? ஏய் சம்யூ! அங்கிள் என்ன சொல்றாங்க? யார் கூட ஊர் சுத்திட்டு வர்ற? அந்தப் பிரபாகரனா? அவனை இன்னும் பார்த்துட்டு இருக்கியா நீ? எத்தனை நாளா இப்படி ஊர் சுத்தறது நடக்குது?” என்று இருக்கும் இடம் மறந்து தோழியைக் கேள்விகளால் துளைத்தாள் சரண்யா.

“பிரபாகரன் தான் சரண். நான் எதுக்காக அவனை விடணும்?” என்று பதில் சொல்ல ஆரம்பித்த சம்யுக்தா பெற்றோரின் அதிர்ந்த பார்வையில் அமைதியாக நின்றாள். பாரதிக்கு மகளின் பேச்சு எதையோ உணர்த்தியது.

“யாருடி அந்த பிரபாகரன்? கூட படிக்கிற பையனா? எத்தனை நாளா பழக்கம்? தனியா ஊர் சுத்தற அளவுக்கு தைரியமா உனக்கு? எங்க போயிட்டு வர்ற?” ஒரு தாயாக கேள்விக் பிறந்தது பாரதியிடமிருந்து.

“அது.. வந்து.. மேக…மலை வியூ பாயிண்ட்….” என்ற சம்யுக்தாவின் வார்த்தைகள் தந்தியடித்தன. பாரதி திகைத்துப்போய் கணவரைப் பார்த்தார். ஆம் என்பது போலத் தலையசைத்தார் அவர். பாரதிக்கு இப்போது தான் கணவனின் திடீர் விஜயத்துக்கான காரணம் புரிந்தது.

“ரொம்ப நாள் பழக்கம் இல்லேன்னா தனியா அவ்வளவு தூரம் வரமுடியுமா?” என்ற கண்ணனுக்கு மகளது புது அவதாரத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு நன்றாகவே தெரியும், நண்பனாக இருந்திருந்தால் பார்த்த போதே அவனை அறிமுகம் செய்து வைத்திருப்பாள். இது அதையும் தாண்டிய உறவு என்பதை இருவரையும் சேர்த்துப் பார்த்தபோதே புரிந்து கொண்டார்.

அவர் ஒன்றும் காதலுக்கு எதிரி அல்ல. அவரது திருமணமே காதல் திருமணம் தான். ஆனால் பெண்ணைப் பெற்றவன் என்ற நிலையில் அந்தக் காதலின் தீவிரத்தை அறிய விரும்பினால் தவறேதும் இல்லையே. அதனால் அடுத்த அடியை எடுத்து வைத்தார் சம்யுக்தாவின் தந்தை.

“உனக்கே அந்த பிரபாகரனைத் தெரியும் போலிருக்கே. நீ சொல்லு சரண்யா. யார் அவன், இவளுக்கு எத்தனை நாளா பழக்கம்?”

“அங்கிள், அது வந்து.. நான் அவகிட்ட வேண்டாம்னு தான் சொன்னேன். ஒரு ஃப்ரண்டா எனக்கு நல்லதுன்னு பட்டதெல்லாம் சொல்லி டைவர்ட் பண்ணிடலாம்னு நினைச்சேன். ஆனால் இவ இவ்வளவு சீரியஸா இருப்பான்னு நானே எதிர்பார்க்கலை.”

“தட்ஸ் ஓகே.. நாங்க உன்னைத் தப்பாவே நினைக்கலை, போதுமா? எனக்கு, என் பொண்ணுக்கு பிடிச்ச அந்தப் பையனோட டீடெயில்ஸ் வேணும். நான் காதலுக்கு மரியாதை பண்றவன் தான். ஆனால் அது நிஜமான காதலான்னு பார்க்கணும். கல்யாணம்னு வரும் போது ஃபேமிலி பேக் ரவுண்ட் தெரியணும், ஃபைனான்ஷியல் ஸ்டேடஸ் என்னன்னு தெரியணும். இது மாதிரி நிறைய விஷயம் இருக்கே. ஜஸ்ட் லைக் தட் பொண்ணை அனுப்பி வச்சுட முடியாது.”

அவரது கேள்விகளுக்கு சரண்யா பதில் சொல்ல ஆரம்பித்த வேளையில் பிரபாகரனின் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்தது.

“காமாட்சி! ஏய் காமாட்சி!” என்று கிட்டத்தட்ட அலறியபடி வீட்டினுள் அடியெடுத்து வைத்தார் சோமசுந்தரம். ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அவரது தாய் மகனை வினோதமாகப் பார்த்தார்.

“எதுக்குடா இப்படி ஏலம் விடற? மருமக சமையல்கட்டுல வேலையா இருக்கா. ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்போ என்ன ஆகிப்போச்சன்னு இப்படிக் குதிக்கிற?”

“இன்னும் என்ன ஆகணும்? என் உசுர வாங்கிறதுக்குன்னே பெத்து வச்சிருக்காளே ஒரு பிள்ளைய, அவன் ஒருத்தன் அடிக்கிற கூத்துல என் மானமே போச்சு.”

“டேய்! இன்னும் ஒரு வார்த்தை எம்பேரனைப் பத்திப் பேசுன, நாக்கை அறுத்துடுவேன் பாத்துக்கோ. அவனெல்லாம் உனக்கு பிள்ளையா பிறந்தது உன்னோட அதிர்ஷ்டம், அவனோட துரதிர்ஷ்டம். சுயம்புடா எம்பேரன். இன்னொரு தகப்பனா இருந்தா அவன் தலைநிமிந்து நிக்கறதைப் பார்த்து பெருமைப் படுவான். நீயும் தான் இருக்கியே!”

“அம்மா! விஷயம் என்னன்னு தெரியாமல் உளறாதீங்க. அவன் என்ன செஞ்சான்னு தெரிஞ்சா உங்களுக்கு என்னை விட அதிகமாவே கோபம் வரும்.”

“அப்படி என்ன செஞ்சுட்டான்னு சொல்லேன், கேட்போம். எதுவா இருந்தாலும் அவன் செஞ்சா அது சரியாத்தான் இருக்கும்.”

“இன்னைக்கு பூராவும் அவன் ஒரு பொண்ணைக் கூட்டிட்டு ஊர் சுத்தியிருக்கான். மேகமலைல அவங்க இரண்டு பேரையும் ஜோடியாப் பார்த்துட்டு வந்து நம்ம மாணிக்கம் கதை கதையா சொல்றான். எத்தனை நாளா பழக்கமோ? என்ன குலமோ? கோத்திரமோ? அறிவிருக்கிறவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்வானா?”

சோமசுந்தரம் தனது கோபத்தை வார்த்தைகளில் காட்டிக்கொண்டிருந்த வேளையில் அவரது தாயும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர்.

“தாயே கௌமாரி! ஒரு வழியா கண்ணைத் திறந்துட்டியா!” என்று மேல் நோக்கிக் கை கூப்பினார் காமாட்சி.

“கண்ணைத் திறக்காமல் போயிடுவாளா அந்த ஆத்தா? எம்பேரன் பட்ட பாட்டுக்கெல்லாம் இனிமேல் எல்லாம் நல்லதா தான் நடக்கும்” என்று மருமகளைச் சமாதானம் செய்தார் அவரது மாமியார். இருவரும் சேர்ந்து அந்தப் பெண் யாராக இருக்கும் என்று ஆராயத் தொடங்கினார்கள்.

தனித்து விடப்பட்ட சோமசுந்தரம் தனது கோபத்துக்கான எதிரொலி கிடைக்காமல் போனதில் கொதி நிலைக்குப் போனார். அந்தக் கோபமெல்லாம் அப்போது உள்ளே வந்த பிரபாகரனின் கன்னத்தில் இடியாக இறங்கியது.

வீட்டின் நடப்பு அறியாமல் சந்தோஷமாக உள்ளே வந்த பிரபாகரன் எதிர்பாராமல் கிடைத்த அடியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.
 

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -17
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

saradhavasan

Member
Joined
Oct 3, 2024
Messages
63
அவன அடிக்கற அளவுக்கு என்ன வந்தது?. இன்னும் தங்கச்சிக்கு சீர் கொடுக்க முடியலைன்னு ஆங்காரம் இந்த அப்பன் எப்ப திருந்துவான்?
 
Top Bottom