• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

பகலிரவு பல கனவு -1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
பகலிரவு பல கனவு - 1


அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும். தேனியிலிருந்து போடி செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அரண்மனை போன்ற வீடு. தைப் பனியில் அந்த மொட்டை மாடியின் குளிரிலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பிரபாகரன். அருகில் இருந்த அவனது மொபைல் “மணி ஆறாச்சுடா மடையா. எழுந்துக்கோ!” என்று விடாது அலறியது. அப்படி ஒரு அலாரம் செட் செய்து வைத்திருந்தாள் அவனது அருமைத் தங்கை.

உள்ளங்கைகளால் கண்களைத் தேய்த்துக் கொண்டே படுக்கையில் இருந்து எழ முயன்றான்.

முன்தினம் நண்பர்களுடன் வார இறுதியைக் கொண்டாடிய போது உள்ளே சென்ற கலர் கலரான சோம பானங்கள் அவனை எழ விடாமல் தடுத்தன. கோவைப் பழம் போல சிவந்து போயிருந்த கண்கள் தீயாக எரிந்தன.

மற்றபடி நாலு மணிக்கெல்லாம் எழுந்து அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்பவன் தான். நண்பர்களுடன் சேர்ந்து விட்டால் ஆளே மாறி விடுவான்.

சற்று நேரத்தில் யாரோ மேலேறி வரும் சத்தம் கேட்டது. கொலுசொலியை வைத்து வரும் ஆளை அடையாளம் கண்டவன், அவ வந்து தண்ணியை ஊத்தறதுக்குள்ள எழுந்திரிச்சிடுடா பிரபா என்று எழ முயற்சி செய்தவனுக்கு பலன் என்னவோ பூஜ்யம் தான்.

வேகமாகப் படியேறி வந்த மலர்விழி கையில் இருந்த ஒரு குடம் தண்ணீரையும் அண்ணன் மேல் ஊற்றினாள். தொப்பலாக நனைந்தவன் அவசரமாக மொபைலை எடுத்துப் பார்த்தான்.

“உன் டப்பா ஃபோனெல்லாம் தண்ணி பட்டு எதுவும் ஆகிடாது. இப்படியாவது எனக்கு விடுதலை கொடுத்தியேன்னு எனக்கு தாங்க்ஸ் தான் சொல்லும்” என்று சிரித்தவளின் காதைப் பிடித்துத் திருகினான் பிரபாகரன்.

“இந்த ஃபோனோட மகிமை எல்லாம் உன்னை மாதிரி எப்போ பார்த்தாலும் கட்டை விரல் தேயற அளவுக்கு ஃபோனை யூஸ் பண்ணிட்டு இருக்கற பிள்ளைங்களுக்கு எங்க தெரியப் போகுது. இதுல சிக்னல் தொல்லையே வராது தெரியுமா? நீங்க தான் 5ஜி எல்லாம் சொல்லிட்டு டவர் மேல ஏறி நின்னாலும் ஒரு ஜியும் வரலைன்னு சொல்லிட்டு திரியறீங்க” என்று தங்கையைக் கேலி செய்தான், இன்னும் நோக்கியா 3311 காலத்தில் இருந்த பிரபாகரன்.

“அது சரி… காஸ்ட்லியான மொபைல் வாங்காம இருக்க இப்படி ஒரு வியாக்கியானம் சொல்லு. நீ உன் முடிக்கு செலவழிக்கிற காசுல வருஷத்துக்கு நாலு ஐஃபோன் வாங்கலாம் தெரியுமா?” என்று வாதாடினாள் தங்கை.

“இதெல்லாம் கரெண்ட் ட்ரெண்ட்டுல இருக்கிறதுக்காக பண்றது.. என்னைப் பார்க்கிறவங்க நான் எப்படி இருக்கேன்னு முதல்ல பார்ப்பாங்களா இல்ல… என்ன ஃபோன் வச்சிருக்கேன்னு பார்ப்பாங்களா?”

“ஓ… சார் அப்படி வர்றீங்களா?? இந்த முடியைப் பார்த்து பிள்ளைங்க மயங்கிடும்னு நம்பற போல இருக்கு.. எனக்கென்னவோ இந்த முடியையும் உன் மூஞ்சியையும் பார்த்தா.. நம்ம கோடி வீட்டுல ஒரு நாய்க்குட்டி வச்சிருக்காங்களே.. அது தான் ஞாபகம் வருது”

“ஏய் வாண்டு! என்ன லந்தா? பேசாமல் போயிடு, இல்லேன்னா இந்த வார பாக்கெட் மணியைக் கட் பண்ணிடுவேன்.”

“அடப்பாவி அண்ணா! கூட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் நம்ம அண்ணனைக் கேலி பண்ணுதே, நம்ம அண்ணனும் கொஞ்சம் ஸ்மார்ட்ஆ, ஸ்டைலா இருக்கட்டுமேன்னு ஐடியா சொன்னா நீ என் அடி மடியில கைவைக்கிறியே? எப்படியோ போ.. உன் கரடி மூஞ்சிக்காக யார் வரப் போறாங்கன்னு நானும் பார்க்கத் தானே போறேன்.”

நேரம் போவது தெரியாமல் வாதாடிக் கொண்டிருந்த அண்ணன் தங்கையின் காதைக் கிழிப்பது போல ஒரு காரின் ஹாரன் ஓசை மிகவும் அருகில் கேட்டது. அதைக் கேட்டவுடன்,

“அச்சோ!! நான் வந்த வேலையை மறந்துட்டு உன் கூட வம்பு வளத்துட்டேனே. சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வா. நம்ம வீட்டுல இன்னைக்கு நல்ல என்டர்டெயின்மென்ட் இருக்கு” என்று படபடத்தாள் மலர்விழி.

அப்படி யார் வருகிறார்கள் என்று எட்டிப்பார்த்த பிரபாகரனின் முகம் கோபத்தில் கொந்தளித்தது.

“இவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க?” என்று பல்லைக் கடித்தான்.

“அதைத் தெரிஞ்சுக்க தான் சீக்கிரம் கீழே வா” என்று ஓடிவிட்டாள் மலர்விழி. அவர்கள் வந்த காரணம் தெரிந்த பிரபாகரன் காரில் இருந்து இறங்குபவர்களை முறைத்தபடி நின்றிருந்தான். கடைசியாக இறங்கியவள் யதேச்சையாக மேலே நிமிர்ந்து பார்க்க, இவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

ஷவரின் கீழ் நின்றவனுக்கு போன மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவடுக்குகளில் வந்து போனது. தனது வேலை விஷயமாக நண்பனுடன் போடி வரை சென்றிருந்த பிரபாகரன், நகரின் மிகப்பெரிய கல்யாண மண்டபம் ஒன்றைக் கடக்க நேரிட்டது.

வாசலில் இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்தவனுக்கு அங்கு ஏதோ நிச்சயதார்த்தம் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டான். கூடவே அங்கே இருந்த வரவேற்பு பலகைகள் அதிலிருந்த பெயர்கள் எல்லாம் அறிந்தவனது முகம் யோசனைக்குச் சென்றது.

பின்னால் அமர்ந்திருந்த அவனது நண்பன், “என்னடா பிரபா இது? இவங்க உன்னோட… ?” என்று கேட்க ஆரம்பிக்க இவன் அது காதில் விழாதது போல் பைக்கை விரட்டினான்.
அதனுடைய தொடர்ச்சி தான் இன்று வீடு வரை வந்திருக்கிறது என்று அவனுக்கு ஒரு அனுமானம் இருந்தது. பெற்றோர் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்று குழம்பினான்.

அவசரமாக ஒரு குளியலைப் போட்டு ஒரு ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் சகிதமாக கீழே இறங்கி வந்தான். ஹாலில் இருந்த யாரையும் கண்டு கொள்ளாமல்,

"குட் மார்னிங் மம்மி! எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி கொண்டு வாங்க! காலங்காத்தால அதைக் குடிச்சால் தான் எனக்கு நாளே நல்லா இருக்கும்” என்று சமையலறையை நோக்கி சத்தமாகச் சொல்லிக் கொண்டே அன்றைய நாளிதழை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

அவனது காஃபி உடனே வந்தது.
அவனுக்கு ஜெனிலியா போல காப்பியை ரசித்து ருசித்துக் குடிக்க ஆசை தான். எப்போதும் அம்மாவை வெறுப்பேற்றுவதற்காகவே அப்படிச் செய்பவன் தான். ஆனால் இன்று, சுற்றி இருப்பவர்களை வெறுப்பேற்ற வேண்டி அவ்வாறு செய்தான்.

தலைவலியோ காய்ச்சலோ அவருக்கு எது வந்தாலும் அவை தான் ஓர் ஓரமாக ஒதுங்கி நிற்க வேண்டும். அந்த அளவுக்கு என் கடன் பணி செய்து கிடப்பதே என்று விழித்திருக்கும் நேரமெல்லாம் பம்பரமாகச் சுழல்பவர்.

"உடம்பை ரொம்ப அலட்டிக்காதம்மா, அப்பப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று சொன்னாலும், "போடா! நான் அப்படி என்ன வெட்டி முறிக்கிறேன்னு மூலைல உட்காரச் சொல்ற?" என்று சிரித்துக்கொண்டே அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்.

அதையே கொஞ்சம் அழுத்திச் சொன்னால், "ஏன்டா? அம்மா சமையல் அலுத்துப் போச்சா உனக்கு? பொண்டாட்டி கையால சாப்பிடற வயசு வந்தாச்சுன்னு ஜாடையா சொல்ற மாதிரி தெரியுதே? ஹூம்.. எனக்கும் மருமக கையால சாப்பிடணும்னு ஆசையாத் தான் இருக்கு. ஆனால் எதுக்கும் ஒரு குடுப்பினை வேணுமே? உனக்கோ, உங்க அப்பாவுக்கோ அப்படி ஒரு விஷயம் நினப்புல இருக்கிற மாதிரியே தெரியலையே? அதனால, இந்த வீட்டுல நான் இருக்கிற வரைக்கும் என் சமையல் தான் போல” என்று அலுத்துக் கொள்வார்.

அதாவது குடும்ப பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலம் காலமாக இந்த சமூகம் கட்டமைத்த அத்துணை அம்சங்களும் பக்காவாக அமையப்பெற்றவர் பிரபாகரனின் அன்னை காமாட்சி. அதைத் தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு முருகானந்தம், காமாட்சியின் கணவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

வாய் திறந்து பேசாவிட்டாலும் காமாட்சி எந்த விஷயத்திலும் தனது எதிர்ப்பைத் தனது மௌனத்தின் மூலம் தெரிவித்துவிடுபவர். பல நேரங்களில் அந்த எதிர்ப்பிற்கு மரியாதை இல்லாமல் போனதும் உண்டு.

ஒரு கட்டத்தில் அவர் பூகம்பமாகப் பொங்கிய போது வீட்டின் தலைவர் முருகானந்தம் ஆடிய ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் அப்போது இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்றாகிவிட்டது.

அதையெல்லாம் பின்னணியில் ஒட்டியபடி காப்பி குடித்துக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு, “ஏலேய் பேராண்டி! போதும் நீ காப்பி குடிச்ச லச்சணம். வந்திருக்கிறவங்களுக்கு என்ன வேணுமாம். சுட்டு புட்டுன்னு சொல்லிட்டு கிளம்பச் சொல்லு. வீட்டுல ஆயிரம் சோலிக் கழுத கிடக்கு. அதைவிட்டு இவங்க எப்போ வாயத் தொறப்பாங்கன்னு பாத்துட்டு எம்புட்டு நேரம் உட்கார்ந்து இருக்கிறது?” என்ற அப்பத்தாவின் குரலில் ஏதோ “ஙொய்….” என்றது.

காதுக்குள் விரலை விட்டு ஆட்டியவன் அப்பத்தாவை முறைத்தான். அவரோ உன் முறைப்பெல்லாம் என்னை எதுவும் செய்யாது என்று அமர்ந்து கொண்டார்.

“நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல அண்ணி. பொண்ணைக் கட்டின வீட்டுல இருந்து எல்லாரும் வந்திருக்கோம். இன்னும் உங்க பேத்தியைக் கட்டப் போற சம்பந்தி வீட்டு மனுஷங்க எல்லாரும் வந்திருக்காங்க. பெரியவங்க யாருக்கும் வழமை தெரியலை. இந்த மரியாதை தெரியாத பையன விட்டு என்னத்த பேசப் போறீங்க?” என்று ஆரம்பித்தார் வந்திருந்தவர்களில் மூத்த பெண்மணி. மற்றவர்கள் முகமும் அவர் சொன்னதைப் பிரதிபலித்தது.

“அவன் ஆளையும் அவன் மூஞ்சியையும் பாருங்க.. ஏதோ முடியை கரடி மாதிரி வளத்துட்டு அதுல கலர் கலரா சாயம் பூசிட்டு.. பெரிய மன்மதன்னு மனசுக்குள்ள நினைப்பு.. படிப்பு தான் மண்டைல ஏறலேன்னாலும் இந்த ஸ்டைல்ல ஒன்னும் குறைச்சல் இல்லை. நல்ல வேளை என் பொண்ணு தப்பிச்சா. உங்க பையனைப் பிடிச்சிருக்குன்னு வந்து நின்னுட்டா .இல்லேன்னா, இந்த வீட்டு அடுப்படிலயே அவ காலம் முடிஞ்சு போயிருக்கும்” என்று அவனது அத்தை கணவர் அதாவது முருகானந்தத்தின் உடன் பிறந்த தங்கையின் கணவர் சத்தமாகவே பக்கத்தில் இருந்தவரிடம் சொன்னார். அவர் தான் புது சம்பந்தி போலும், நாகரீகம் கருதி அமைதியாகவே இருந்தார். பார்த்தாலே அதிகம் படித்தவர்கள் என்று தெரிந்தது‌.

“நாங்க வழமை தெரியாதவங்களாவே இருந்துட்டு போறோம் மிஸ்டர்.மாமா. நல்லா வழமை தெரிஞ்ச நீங்க இப்போ என்ன விஷயமா வந்திருக்கீங்க? எங்க வீட்டுல இன்னும் ஏதாவது சுரண்ட முடியுமான்னு பார்க்க வரலேன்னு நல்லா தெரியுது. ஏன்னா, அதுக்கு உங்க பொண்டாட்டி மட்டும் தான் தனியா வந்து பாசமலர் வேஷம் போடுவாங்க. பாக்கி இல்லாமல் சுரண்டின பிறகு வேஷம் போட்டு பிரயோஜனம் இல்லேன்னு தானே இந்தப் பக்கம் எட்டியே பார்க்கிறதில்லை.

நீங்க சொல்லலேன்னா விஷயம் தெரியாதுன்னு நினைச்சீங்களா. மாமான்னு ஒருத்தர் இல்லாமலே விமரிசையா நிச்சயம் பண்ணீங்க. இப்போ திடீர்னு வழமை தெரிஞ்சு பத்திரிகை வைக்க வந்திருக்கீங்க. பொண்ணுக்கு மாமான்னு நிச்சயத்துல யார் இருந்தாங்களோ அவங்களையே கல்யாண சீரும் செய்ய சொல்லுங்க. வந்த கடமைக்கு பத்திரிகைய அவர் கையில கொடுத்துட்டு போங்க. ஒரு வேளை நான் தான் மாமான்னு சீரோட வந்து நின்னாலும் நிப்பாரு” என்று தந்தையைக் கை காட்டிவிட்டு, மேலும் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டான் பிரபாகரன்.

“நாங்க என்ன செய்ய முடியும் அண்ணே! இந்த மாப்பிள்ளையைத் தான் பிடிக்குதுன்னு ஒத்தக் கால்ல நின்னுட்டா உன் மருமக. இப்போ பாருங்க இரண்டு பேரும் டாக்டரு. அப்போ தானே நல்லா பொருந்தி வரும். சம்பந்தகாரங்க இரண்டு பேரும் கூட டாக்டருங்க தான். இப்படி ஒரு சம்பந்தத்தை விட்டு ஒன்னும் இல்லாத பிரபாவுக்குப் பொண்ணு கொடுக்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா?” என்று கேட்ட தங்கையை வெறித்துப் பார்த்த முருகானந்தம் இனிமேலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்று வாயைத் திறந்தார்.

“பரவாயில்லம்மா, உங்க நியாயம் உங்களோட இருக்கட்டும். பத்திரிகை கொடுக்க வந்த இடத்தில எதுக்கு வாதம் பண்ணனும். முதல்ல அதைக் கொடுங்க” என்று வாங்கிக் கொண்டார். காமாட்சி ஒரு தட்டில் ஒரு பட்டுப் புடவையும் ஒரு செயினும் கொண்டு வந்து கணவர் கையில் கொடுத்தார்.

“இங்க வாம்மா கல்யாணப் பொண்ணு! இதை வாங்கிக்கோ. ஏதோ இந்த மாமனால முடிஞ்சது இவ்வளவு தான். கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும். நல்லா இரு” என்று ஆசிர்வாதம் செய்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரபா நேராக அந்த ஜுஸ் கடைக்குள் சென்று ஓர் ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டான். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஜூஸ் கடையில் கூட்டம் அலைமோதியது. காரணம், அருகில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த கோச்சிங் சென்டர்.

“சென்டர் ஹெட் சொல்றதைப் நீட் எக்ஸாம் எழுதியே ஆகணும் போல இருக்கே சம்யூ? நம்ம ஸ்கூல்லயே ட்ரைனிங் சேர்த்திருக்கலாம் போல. இப்போ ஒரு ஞாயிற்றுக்கிழமை விடாம உயிரை வாங்குறாங்க” என்று புலம்பிக்கொண்டே அருகில் இருந்த கடைக்குள் நுழைந்த சரண்யா தோழியிடம் இருந்து பதிலில்லாமல போக அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

அந்த சம்யுக்தாவின் கண்களோ அந்தக் கடையில் ஓர்
மூலையில் கோபத்துடன் அமர்ந்திருந்த பிரபாகரனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது‌
 
Last edited:

Author: SudhaSri
Article Title: பகலிரவு பல கனவு -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom