Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 45
நெஞ்சம் -9
பன்றி மலை, திண்டுக்கல் மாவட்டத்தில் பலரும் அறியாத ஒரு கோடை வாசஸ்தலம். காட்டாறுகள், நீர் வீழ்ச்சி, சின்ன நீரோடைகள், தடுப்பணைகள் என வித விதமாக நீராட்சி நடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சுவர்க்க பூமி . புல்லா வெளி நீர்வீழ்ச்சி, ஆத்தூர் டேம் ஆகியவை குறிப்பிட தக்கவை.இது இல்லாமல் செல்லும் வழி எல்லாம் மேகம் நம்மைத் தாலாட்டும், இதமான குளிர் நம்மைச் சீராட்டும். பைக் ரைடிங், மலையேற்றம் எனச் சுவாரஸ்யம் தரும் அனுபவங்களும் உண்டு.
ரஜினீஸ் ராமின் அம்மா பிறந்த ஊர். அவன் அப்பா, அம்மா இருக்கும் வரை அங்கு உள்ள எஸ்டேட் நிலங்கள், காபி தோட்டங்களைப் பராமரித்து வந்தனர். தாய் வழி தாத்தா பாட்டியோடு சேர்ந்தே வசித்தனர்.
அம்மாவின் தம்பி கண்ணன், சினிமா மோகத்தில் வீட்டை எதிர்த்து சென்னைக்குச் சென்றவன், வாய்ப்புகள் அமையாமல், வீட்டுக்கும் திரும்ப முடியாமல், கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு இருந்தான். கோவிலில் வைத்து பாரதியைப் பார்த்தவன், அவளைக் கட்டினாளே ஆயிற்று எனச் சுற்றித் திரிந்து, அம்மாவையும் அக்காவையும் தாஜா செய்து பெண் கேட்க வைத்து, பாரதியை மணமுடித்துக் கொண்டான்.
பாரதி குடும்பம், கண்ணனிடம் பிரச்சினை எனச் சென்ற போது, அவன் எங்க பேச்சையுமே கேட்டதில்லை, என கை விரித்தனர். பெண் பாவம் பொல்லாதது எனும் சொல்லுக்கு இணங்க, அடுத்து கண்ணனும் குடித்தே உயிரை விட்டான். சில வருடங்களுக்குப் பின், ரஜினீஷின் அப்பா, அம்மா, அம்மாச்சி, தாத்தா பயணித்த கார் விபத்துக்கு உள்ளாகி தாத்தா மட்டும் உடல் ஊனத்தோடு பிழைத்துக் கொள்ள, மற்ற மூவரும் விபத்தில் பலியாகினர்.
சாகேத்ராம், சாருவை மணந்து இருந்த சமயம், பெற்றவர்களை இழந்த தம்பி மகனை, தன்னோடு சேர்த்துக் கொண்டார். பெரியப்பாவின் அறிவுரையில், பணம் தான் எல்லாம் என்பது போல், பெரிய ஓட்டுதல் இன்றி , ரக்கடு ஆணாகத் தான் வளர்ந்தான்.
சாரு, சாகேத்ராமை கடமையாகப் பார்த்ததால், விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு வரும் ரஜினிஷ் மீது பெரிய அக்கறையைக் காட்டவில்லை. அவர்கள் உறவும் தாமரை இலை தண்ணீர் போல் தான் இருந்தது. பெரியப்பாவுக்குப் பின் சாருவைக் கவனிப்பது தன் கடமை என ஏற்றுக் கொண்டான்.
சிறு வயது முதல் வளர்த்த தாத்தாவிடம் பாசம் உண்டு. இரண்டு ஆண்களிடம் வளர்ந்தவன், சரயுவைப் பார்த்த பின் எல்லாம் தலைகீழ் மாற்றம். தனக்கான ரத்த சொந்தம், மாமன் மகள் என்ற விதையைத் தாத்தா அவன் மனதில் விதைக்க, நேசமெனு நீர் ஊற்றி அதை வளர்த்தான்.
சரயுவின் தாய் வழி மூலத்தை , துப்பு துலக்க உடன் பிறந்தவர்கள் , அவர்களின் பிள்ளைகள், உறவு, நட்பு எனச் சகலமும் ஆராய்ந்து, சாருமதி வரையிலான அவர்கள் சம்பந்தத்தை அறிக்கையாகச் சமர்ப்பித்து இருந்தனர். சந்துரு, சாருவைப் பற்றிய குறிப்புகளும் இருக்க, தன் பெரியப்பாவுக்குச் சேவைகள் செய்தாலும், அவர் கோபம், சில அத்துமீறல் கொடுமைகளைப் பொருத்த போதும், மனதளவில் தன்னை அவரின் பணியாளாகவே பாவித்து, சாரு ஒதுங்கிய காரணமும் புரிந்தது.
தாத்தாவின் ஆசைப்படி ,சரயுவை மனைவியாக அடைய வேண்டுமெனில், சாருவின் வழியாகச் செல்வதே சிறந்த வழி எனத் தீர்மானித்து காயை நகர்த்திக் கொண்டு இருந்தான். இதுவரை சாகேத்ராமின் தம்பி மகன் என்ற அடையாளத்தை, சாருவின் வளர்ப்பு மகன் என மாற்றிக் கொண்டான்.
பள்ளிக்குச் சென்று வந்த தினமே, மாலையில் சாருவை வற்புறுத்தி, தன் தாத்தா திருமேனியைப் பார்க்க , பன்றி மலைக்கு அழைத்துச் சென்றான். மலைமேல் அவர்கள் பழைய கால வீடு இருந்தது.
“ரெண்டுகெட்டான் வயசுல, பெத்தவுகளை பறி கொடுத்தவன்மா என் பேரன். கலக்க ன்னு பாசக்காரனா இருந்த அவன் இயல்பையே, அந்த விபத்து மாத்திடுச்சு. என் மகன், மருமகளுக்குச் செஞ்ச கொடுமை, எங்களைக் காவு வாங்கிடுச்சு. நான் எல்லாத்தையும் சரி பண்ணனும்னு நினைக்கிறன் . நீ சொன்னா, அந்த குடும்பம் கேட்கும், பொண்ணோட மாமாவுக்கு நம்பிக்கை வரும்னு என் பேரன் சொல்லுறான். எப்படியாவது, இந்த கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு தாயி. என் மகளாட்டம் நினைச்சு உன்னை கேட்குறேன்” என அவர் கையெடுத்துக் கும்பிட, சாரு உருகி விட்டாள்.
“அவுங்க என் பேச்சை கேட்பாங்களான்னு தெரியலைப்பா, ஆனா கட்டாயம் முயற்சி செய்வேன். ரஜ்ஜு கல்யாணம் என் பொறுப்பு. ராம் சாருக்கும் வாக்கு கொடுத்திருக்கேன். கட்டாயம் அவன் சார்பில் நிற்பேன்” என்றாள்.
இரவே, ராம்ஸ் வொண்டர் ரிஸார்டுக்கு அதே ஸ்கார்பியோவில் சாருவை முன்னே அமர்த்தி அழைத்துச் சென்றான். இருளை கிழித்துக் கொண்டு அவ்வாகணம் முன்னேறியது. மலையின் நெளிவு, சுழிவு மனப்பாடம் ஆனவன் போல் நேர்த்தியாகக் காரை ஓட்டினான்.
நாற்பத்தெட்டு வருடச் சாருவின் வாழ்க்கையில் இது புது அனுபவம்.இரு புறமும் கண்ணாடிகள் ஏற்றப் பட்டு , காரில் இருந்த குளிர் அதிகமாகத் தெரிந்தது.
“ கண்ணாடி இறக்கிப் பார்க்கலாமா?” அவள் கேட்க,
“ நிறையப் பூச்சிகள் பறக்கும். ஹெட்லைட் வெளிச்சத்துக்கு நம்மளை தேடி உள்ளேயும் வந்திடும். கொஞ்சம் ரிஸ்க். பகல்ல கூட்டிட்டு போறேன்” என்றான். தலை ஆட்டியவள், பயணத்தை ரசிக்க, “ உங்களுக்கு ட்ராவல் பிடிக்குமா” கேட்க,
“ முந்தி சமையல் வேலைக்காக, அம்மா கூட பஸ்ல போறது பிடிக்கும். உன் பெரியப்பா வீட்டுக்கு வந்த பிறகு, அதிகபட்சம் ஹாஸ்பிடல் போறது தான். “ என்றாள். பேசிக் கொண்டே இருக்க, பத்து நிமிடத்தில் ரிசார்ட் வந்திருந்தது.
அவனுக்கான காட்டேஜ் முன் வந்து நிறுத்தியவன், அவளை உள்ளே அழைத்துச்செல்ல, பணியாட்களும் பவ்யமாகவே வணக்கம் வைத்தனர். சாருவுக்குத் தான், தன் மனதில், சாகேத் ராமின் பணியாள் என்ற நினைவே தவிர, தன் வசதிக்கு உரிய மதிப்போடு, வைரக்கம்மல், தங்கச் சங்கிலி, வளையல் , உயர் ரக பட்டு என மேல்தட்டு முதலாளியம்மா தோற்றத்தில் கண்ணியமாகவே வைத்திருந்தார். இதனை ஆண்டுக்கால மாளிகை வாசத்தில், செழுமையாகவே இருந்தாள். அவளுக்கு இருக்கும் மதிப்பை அவளே அறிய மாட்டாள். இந்த ராம்ஸ் ரிசார்டின் முதலாளியம்மாவாக தான் அவளைப் பார்த்தனர்.
இரவு உணவு முடித்து, அவளுக்கு வசதி எல்லாம் செய்து கொடுத்து, தந்து அறைக்குக் கிளம்ப முற்பட்டவனிடம்,
“ ரஜ்ஜுக்கிட்ட ஒன்னு கேட்கனும்.” என்றாள் சாரு
அவன் கேளுங்க என்பதாகத் தலை அசைக்க, “தாத்தா ஆசைனு, அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறியா. அப்படி இருந்தா அது பொறுப்பு, கடமையில் சேர்ந்திடும். திருமண வாழ்க்கைக்குப் பொறுப்பை விட, அன்பும், ஆசையும் வேணும்” எடுத்துச் சொல்ல,
“ உங்களுக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுது” என்றான்.
“ சமீபமா ரொம்ப மாற்றம். நீ தானான்னு எனக்குச் சந்தேகமே வருது” என்று விட்டு, கோபப்படுவானோ என அஞ்சி அவன் முகம் பார்க்க, சட்டெனச் சிரித்தான்.
“ உங்களுக்கே சந்தேகம் வருதில்ல. எனக்குமே அப்படி தான். எல்லாமே அவளைப் பார்த்த பிறகு வந்த மேஜிக்.” அசடு வழிய, சாரு ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“உங்களுக்கே தெரியும், ஹையர் ஸ்டெடிஸ் படிக்கவே நான் ஃபாரின் போனவன். நான் பார்க்காத பெண்கள் இல்லை” அவன் ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட,
“ ரஜ்ஜு” எனச் சாரு அதட்டினாள்.
“ ஓஹ், சாரும்மா, நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. டைப்ஸ் ஆஃப் பொண்ணுங்களோட பழகி இருக்கேன்னு சொன்னேன். லைஃப், வாழ்க்கைனு வந்துட்டா, பெயருக்கேத்த ராமனா, ஒரே பொண்ணோட தான் வாழனும். அது சரயு தான்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன்” என்றான்.
“ அவசரமா முடிவெடுக்காத ரஜ்ஜு. அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கனும், அவ குடும்பம் உன்னை ஏத்துக்கனும். ஒரு உண்மையை சொல்லவா, இந்த ட்ரிப்பே, கீதா மகன் நரேனுக்கும், சரயுவுக்கும் பேசி முடிக்க தான் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.” சங்கடமாக அவள் சொல்ல,
“ நீங்க என்ன நினைக்கிறீங்க. யாரை சப்போர்ட் பண்றீங்க” என்றவனின் குரலில் ஒரு தவிப்பு .
“ அந்த பொண்ணோட விருப்பம் தான் முக்கியம்” என்றாள்.
“ ஓகே, ஐ அக்ரீ. ஆனால் அந்த சாய்ஸ்ல நானும் இருக்கனும்ல. எனக்காக நீங்க கேட்பிங்களா? உங்க தங்கச்சி மகனைத் தானே சப்போர்ட் பண்ணுவீங்க. இப்போ உங்ககிட்ட பேசுறதை கூட, என் ஆதாயத்துக்காக பேசுறேன்னு நினைக்கலாம். ஆனா ஒன்னு, நான் எந்த வீட்டில பொண்ணு கேட்கிறதா இருந்தாலும். உங்களைத் தான் கூட்டிட்டு போயிருப்பேன். காண்டேக்ட் சர்டிபிகேட் படிச்ச ஸ்கூல்ல தானே வாங்க முடியும். வேற யாரையும் விட, உங்களுக்கு தானே என்னைப் பத்தி நல்லா தெரியும்” என்றான்.
அவள் பேசும் முன், “நீங்க இவ்வளவு யோசிக்கிறீங்கன்னா, எனக்குக் கஷ்டமா இருக்கு சாரும்மா” என்றவன் குரல் கம்மியிருந்தது.
“ நான் உனக்காகப் பேச மாட்டேன்னு சொன்னேனா. நானே அவுங்க முன்னாடி எப்படி போவேன்னு பயந்துட்டு இருக்கேன். நிலைமை புரியாமல் பேசிட்டு இருக்க” என்றாள், இறங்கிய குரலில்.
“சாரி, சாரி, சாரி. நீங்களும் என் நிலமையில தான் இருக்கீங்கன்னு புரியாமல் பேசிட்டேன்” எனவும்,
“ அதென்ன ஒரே நிலைமை.” அவள் நெற்றியைச் சுருக்க,
“ லவ்வரை பார்க்கிற டென்ஷன்” எனச் சிரித்தான்.
“ ஏய்” அவள் முறைக்க,
“ இல்லேம்பிங்களா. ஊருக்கே தெரியும், உங்க சொல்லாத காதலை . மனுசன் உங்க பேரைச் சொல்லவும், வந்துருக்கீங்களோன்னு அலை மோதுனாரு” அவன் சிரிக்க,
“ எதாவது சொல்லாத ரஜ்ஜு. உன் பெரியப்பாவோட விதவையா தான், நான் நிக்கிறேன்” தன் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டாள்.
“ வாழும் போதே அவர் மனைவியா வாழலை. அப்புறம் ஏன் இப்போ கவலைபடுறீங்க” என்றான். அவள் அமைதியாக இருக்க “முதல்ல புரியலை. அப்புறம் புரிஞ்சது. பெரியப்பா தண்ணி அடிச்சிட்டு புலம்பி இருக்காரு.” அவள் விழுக்கென நிமிர்ந்து பார்க்க,
“ தப்பா இல்லை. நல்ல விதமா தான் புலம்பினார். ஆஸ்திரேலியால இருந்தப்போ, ஒரு ஆக்சிடெண்ட்ல ஆண்மை இழக்கவும், லிவ்விங்க்ல இருந்த அவருடைய மனைவி கழட்டி விட்டுட்டாங்க. அதே காரத்துக்காக, தாம்பத்தியம் இல்லைங்கிறதை அடவாண்டேஜா எடுத்துக்கிட்டு தான், அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. உங்க ஏழ்மையை அவர் யூஸ் பண்ணிகிட்டதா புலம்பினார்.” சாருவுக்கு தவிப்பாகப் இருந்தது.
“அவர் நல்லா இருக்கும் போது, சாரு மாதிரி ஒருத்தியை கண்ணுல காட்டுலையேனும் புலம்பினார், அவருக்கு உங்கள் காதல் தெரிஞ்சு இருந்தது” என்றான்.
“அது எனக்கும் தெரியும்.” என்றவள், “என்னைத் திருப்பிக் கொண்டு போயி, மதுரையிலேயே விட்டுட்டேன். என்னால சந்துருவைப் பார்க்க முடியும்னு தோணலை” கண்கள் குளமாக அவள் சொல்ல,
அருகில் சென்று , நடுங்கும் கைகளைப் பற்றி ஆதரவாக அணைத்துக் கொண்டவன், “ அந்த நொடியை நீங்கக் கடந்து வந்து தான் ஆகனும், சாரும்மா. போனவருக்கான உங்க கடமை முடுஞ்சது. இனி உங்களுக்காக வாழ பாருங்க. உங்க கூட மகனா நான் நிற்கிறேன்.” அவன் சொல்ல, குலுங்கி அழுதவள்,
“அந்த நினைப்பெல்லாம் இல்லைப்பா. கடைசி வரைக்கும் நாங்க, எங்க குடும்பத்துக்காகத் தான் யோசிப்போம். சந்துரு கல்யாணம் பண்ணி இருந்தா கூட மறந்து இருப்பேனோ என்னவோ. தனியா நிற்கிறதை யோசிச்சா தான் மனசில் குத்துது. பதினாலு வயசுல , மதுரையை விட்டுப் போகும் போது, லெதர் பர்ஸ் வாங்கி கொடுத்தேன். இரண்டுமாசம் எம்பிராய்டரி போட்ட காசு. அதுக்கு திருப்பி என்ன தர்றதுன்னு தெரியாலையின்னு, நெஞ்சில் கையை வச்சு, ஒரு பிடி அள்ளி கொடுக்கிற மாதிரி, மனசை என் கையில் கொடுத்துட்டேன்னு சொன்னான். இப்போ சொல்ற மாதிரி பப்பி லவ்வா கூட இருந்திருக்கலாம். அதுக்காக ஒருத்தன் கல்யாணம் பண்ணாம இருப்பானா. அந்த நினைப்பு தான் , வாழ்க்கை முழுசும் என்னை வாட்டுது” என்றாள் .
“ சாரும்மா, நீங்க ஒரு ஏஞ்சல், அது தான் அவர் மனசுல பதிஞ்சு போயிட்டிங்க. நாளைக்கு வரட்டும். மீட் பண்ணுங்க. யாரு கண்டா, அப்பா, அம்மா இல்லாத அனாதையா நிக்கிற எனக்கும், அவளுக்கும் நீங்க இரண்டு பேரும் எல்லாமா இருக்கலாம்ல.” அவன் சிரிக்க,
“கடைசில உன் காரியத்தில வந்து நிற்கிற பாரு. நாங்க இரண்டு பேரு மட்டும் எடுக்கிற முடிவு இல்லை மகனே, ஒரு ஊரே இருக்கு. அவருக்கு, பாரதியைத் தவிர நாலு அக்கா, தங்கச்சி,மாமன் மச்சினேன். இந்த பக்கம், என் தங்கச்சிங்க, அவ புருஷனுங்க. இது எல்லாத்துக்கும் மேல, சரயுவும் , அவ அம்மாச்சி, ராஜாத்தி மாமியும் இருக்காங்க” என்றாள்.
“ரொம்ப கஷ்டம்” என்றான்.
“நீ சரயுவோட சேருறது தானே?” எனவும்,
“ ம்ஹூம், சந்துரு அப்பா, உங்களை கரெக்ட் பண்றது” என்றான்.
“நீ முடிவே பண்ணிட்டியா, பேசாம போ” எனக் கோவிக்க ,
“நான் சரயுவைக் கல்யாணம் பண்றேனோ இல்லையோ. உங்களைச் சேர்த்து வைக்க எல்லா வேலையும் பார்ப்பேன்” என அறிவிக்க,
“இதென்ன பக்கத்துக்கு இலைக்கு பாயாசமா “
“இல்லையே, சாரும்மா இலைக்கு வந்துடுச்சுன்னா, நானே எடுத்துக்குவேன்” என்றான்.
“கற்பனையை வளர்த்துக்காத ரஜ்ஜு. எங்களை விடு, உனக்காக நான் பேசுறேன், அது தான் முக்கியம்” சாருவின் வாயிலிருந்தே, தனக்கான வாக்குறுதியை வாங்கிக் கொண்டான் ரஜினீஷ்.
இங்கு அம்மா, மகனாக மனதைப் பகிர, மதுரையில் தூக்கம் வராமல் உலாவிக் கொண்டிருந்த மாமனும், மருமகளும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தனர்.
“அந்த பையன் , பேரே அருமையா இருக்குல்ல குட்டிமா” சந்துரு கேட்க,
விழாவில் எடுத்த போட்டோக்களை யமுனாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தவள், “ எந்த பையன் பேரு” அசட்டையாகக் கேட்க,
“அது தாண்டா, ரஜினீஷ். ஆளும் ஹேண்ட்சம்மா சூப்பரா இருந்தான்.” எனவும்,
“உங்க தலைவர் பேருன்ன உடனே இப்படி தான் சொல்லுவீங்கன்னு முதவே நினச்சேன்” அவள் நொடிக்க,
“அது இல்லைடா, சாருவோட வளர்ப்பு மகனாம். அதுதான் அருமையா பேசுறான்” எனவும் , ‘யாரு அவனா, எப்படி மிரட்டுவான்னு எனக்கு தானே தெரியும். ஆள் யாருன்னு தெரிஞ்சா, மாமா இப்படிப் பேச மாட்டார்’ என மனதில் நினைத்தவள்,
“நீங்கச் சாரு அத்தை பேரைச் சொல்லவும், எமோஷனல் ஆகுறீங்க. அந்தாள் பக்கா பிஸ்னெஸ்மேனா தெரியிறான்” என்றாள்.
“ இருக்கட்டும்டா, குடும்பம், தொழில் இரண்டையுமே பேலன்ஸ் பண்ணணும்ல. பணத்தை குடுத்துட்டு, பேசாமல் இருக்கலாம். ஸ்கூலுக்கு வரணும்னு என்ன அவசியம். சாரு குடும்பத்துக்கு, அவன் பெரியப்பா நிறையவே செஞ்சுருக்கார். பாவம் அந்த நல்ல மனுஷனைப் பார்க்க நமக்கு கொடுத்து வைக்கலை” என்றான்.
“மாமா, இருபத்தஞ்சு வருஷம் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி, அவங்க வாழ்க்கையோதா சேர்த்து, உங்க வாழ்க்கையையும் அழிச்சுருக்கார். அவரை போயி உயர்வா சொல்றிங்களே.” சரயு கோபப்பட,
“அன்னைக்குச் சாரு குடும்பம் இருந்த நிலைமைக்கு, அவர் தானேம்மா உதவி பண்ணியிருக்கார். சாரு தன்னையே கொடுத்தாலும், மூணு தங்கச்சிங்க, அவங்க அம்மானு நாலு பேரு , நிம்மதியா வாழ வழி பண்ணி இருக்காரே” என்றான்.
“எனக்கு, அந்த அத்தை மேலையும் கோவம் தான். ஏன் உங்க கிட்ட ஒரு வார்த்தை உதவின்னு கேட்டு இருக்கலாம்ல”
“எப்படிம்மா, எந்த உரிமையில் கேட்பா. இப்போ நினைச்சதை எல்லாம் பேசிடுறிங்க. முப்பது வருஷம் முன்னாடி அது முடியாது இல்லையா. எங்க கடமைகளை உதறிட்டு, சுயநலமா யோசிச்சு, கல்யாணம் ஆகாத மூணு பொண்ணுகளோட எங்க அம்மாக்களைச் சிரமப்பட விட்டுருந்தா, எங்களுக்கு நரகத்திலே கூட இடம் கிடைச்சு இருக்காது. நானும் , ஆறு பொண்ணுங்களை கரை சேர்க்கிற நிலைமையில் இல்லை.” என வருந்திப் பேச,
“ என் அம்மாவும், நானும் தான் உங்க வாழ்க்கைக்குத் தடைக் கல்லா இருந்துட்டோம்” சரயு உணர்ச்சிவயப்பட,
“அடி போட்டேன்னா பாரு. பாரதி நல்லா இருந்திருந்தாலும், ரதி வரைக்கும் எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி என் கடமையை முடிச்சிருந்தாலுமே, சாருவைக் கல்யாணம் பண்ண, நான் போராடத் தான் வேண்டியது இருந்திருக்கும். நான் குடும்பத்தை குற்றம் சொல்லை. அப்போ இருந்த சூழ் நிலை அப்படி” என்றான்.
“ அப்போ சரி, இப்போ தான், அந்த பெரியவர் இல்லையிலே . சாரு அத்தையை நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்க கூடாது” அவள் நேரடியாகவே கேட்க,
“சரயு. அப்படியெல்லாம் கேட்காத. நான் என்னமோ அந்த பெரியவர் சாகக் காத்து இருந்த மாதிரி போயிடும். அவளுக்கும் கெட்ட பேரு. எங்க நட்புக்கும் கெட்ட பேரு.” சந்துரு பதட்டமானவன்,
“இந்த ஐடியால தான், இந்த ட்ரிப் பிளான் பன்னிங்கன்னா, நான் இப்பவே சென்னைக்குக் கிளம்பி போறேன்” என்றான்.
“போங்க, யாரு வேணாம்னா. கடைசில நீங்களும் சராசரி மேல் சவனிஸ்டுன்னு நிரூபிச்சிட்டீங்க.” என முறைக்க,
“அப்படி என்ன செஞ்சுட்டேன்னு, எனக்கு இந்த பட்டம் குடுக்குற” சந்துரு கட்டமாகவே கேட்டான் ,
“சாரு அத்தையை, விதவையா தானே பார்க்குறீங்க?’ என்று விட,
“அந்த வார்த்தை கூடச் சொல்லாத. அவளை அப்படியெல்லாம் என்னால பார்க்க முடியாது. என் நெஞ்சே வெடிச்சிடும்” சந்துரு கண் கலங்க,
“சாரி மாமா, உங்களை ஹெர்ட் பண்ணும்னு நான் அப்படி சொல்லை. அந்த ரக்கடு மேன் , இன்னைக்கே சாரு அத்தையை அங்க கூட்டிட்டு போயிட்டாராம். யமுனா அத்தை சொன்னாங்க. நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க.” எனச் சமாதானமாகப் பேச,
“ போகலாம் டா. உன் கல்யாண பேச்சு தான் முக்கியம். கீதா மகனை பாரு. உனக்கு பிடிச்சா பேசுவோம். இல்லைனா பிரெண்ட்ஸா கை குலுக்கிட்டு வந்துடுவோம். மாமா என்ன சொலுவேனோ, அம்மாச்சி என்ன சொல்லுவாங்களோன்னு எல்லாம் யோசிக்க வேண்டாம்” எனவும்,
“என் மாமான்னா, மாமா தான்” என அவன் தோளில் சாய்ந்து ஐஸ் வைக்க,
“சந்தடி சாக்கில், மாமாவை மேல் சாவனிஸ்டுன்னு சொல்லிட்டியே குடிமா.” என அவன் வருந்த, “சாரி மாமா” என்றாள்.
அவன் பெருமூச்சு விட, “இப்ப என்னவாம்” என்றாள்
“அந்த பரதேவதையே நினைத்தால் தான் பயமா இருக்கு. அவ கண்ணே, ஆயிரம் கேள்வி கேட்கும். அதுக்கு தான் பயமே” கண்ணை மூடி திறக்க,
“ அம்மாச்சி, சித்தி ,பெரியம்மாவையெல்லாம் சமாளிச்சிங்கள்ல, அத்தையும் சமாளிங்க ” அவள் சொல்ல,
“அதுவும், இதுவும் ஒண்ணா போம்மா” என்றான்.
“பூவாக என் காதல் தேனூருதோ…
தேனாகத் தேனாக வானூருதோ…
கண்ணம்மா… கண்ணம்மா…
கண்ணிலே என்னம்மா…” பிரதீப் குமார், காலா படத்தில் அவன் தலைவனுக்காகப் பாடி உருகிக் கொண்டிருக்க, சந்துருவும், சாருவின் நினைவில், நாளை சந்திக்க இருக்கும் கணத்துக்காகக் காத்திருந்தான்.
ஆர்ப்பரித்து அலைந்தது அவன் நெஞ்சம்.
Author: Kasavu
Article Title: நெஞ்சம் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம் -9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.