Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 45
நெஞ்சம்-5
சரயு, அயோத்தியில் ஓடும் நதியின் பெயர். ராமர் ஜலசமாதி அடைந்து நேரே தன் இருப்பிடமான வைகுந்தத்துக்குச் செல்ல தேர்ந்தெடுத்த புனிதமான நதி. சந்துருவின் தங்கை பாரதியின் சந்தேக புத்திக்கார கணவனுக்கு, புத்தியில் உரைக்கட்டும் என்றே அவள் மகளுக்கு இந்த பெயரைச் சூட்டினான் சந்துரு.
அம்மாச்சி, மாமா, சித்திகள், பெரியம்மாக்களின் கவனிப்பில் வளர்ந்தவள். யாரும் ஒரு குறை சொல்ல முடியாமல் சூட்டிகையாய், குடும்ப பாங்காக ராஜாத்தியால் கண்ணும், கருத்துமாக வளர்க்கப் பட்டவள்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் கடைசி வருடத்தில் இருக்கிறாள். ஆறுமாத ப்ராஜெக்ட் வசந்துக்கு தெரிந்த கம்பெனியில் செய்தாள். அதுவும் முடிவுக்கு வந்திருக்கக் கடைசிக் கட்ட அறிக்கையை சமர்ப்பிக்க இன்று கல்லூரி சென்று இருக்கிறாள். கேம்பஸ் இன்டர்வ்யூவில் செலக்டாகி, இரண்டு கம்பெனி ஆஃபர் லெட்டரையும் கையில் வைத்துள்ளாள்.
அதனால் தான், ராஜாத்தியும் சந்திராவுமாக அடுத்து அவளுக்குத் திருமணம் செய்துவிட உத்தேசித்து இருந்தனர். சாருமதி குடும்பத்தில் அவள் அம்மா மலையாளியாக இருந்த போதும், அப்பா விக்கிரமன் இவர்கள் இனம் தான். அதனாலேயே கீதாவின் மகன் நரேனும், மென்பொறியாளனாக சென்னையில் வேலை செய்கிறான் எனவும், சரயுவுக்குப் பார்க்கலாம் என முடிவு செய்து உள்ளனர்.
தெரியாத இடத்தில் பெண்ணை கொடுத்தால், தேவையில்லாத கேள்விகள் வரும். கீதா, பாரதியோடு உடன் படித்தவள், சிநிகிதி மகளைப் பாசமாக வைத்துக் கொள்வாள் என்றே, யமுனா வழியாகப் பேசி வைத்திருக்கின்றனர்.
சந்துரு இந்தியா வந்து பத்து தினங்கள் ஓடியிருந்தது. ராஜாத்தியம்மாள் வலது கையை அசைக்கக் கூடாது எனத் தொட்டில் போல் ஆர்ம் ஸ்லிங் பவுச் போட்டிருக்க, மகன் அம்மாவுக்குத் தாயாகி நேர நேரத்துக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.
“ போதும் ராஜா, நீ சாப்பிடு” என அவர் கதறிக் கொண்டு இருக்க,
“ இது மட்டும், மாத்திரை போடத் தெம்பு வேண்டாமா” என மகன் நான்காவது இட்லியை வைத்து ஊட்டிக் கொண்டிருக்க,
“ இவ்வளவு எல்லாம் என்னால சாப்பிட முடியாது. செரிமானம் ஆகாது. சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறியே. “ புலம்ப,
“செரிமானத்துக்கு நாட்டுப்பழம், பேரிச்சம்,கிஸ்மிஸ்ன்னு சாப்பிட்டுக்கலாம், இந்த சால்ஜாப்பு எல்லாம் சொல்லாதீங்க.” என மிச்சத்தையும் ஊட்டி விட்டேன் ஓய்ந்தான் மகன்.
மேல் மாடியில் ரதி இருந்தாலும் கூட, கீழே தனியாகச் சமையலுக்கு ஆள் போட்டு இருந்தார்கள். ராஜாத்திக்கு , சமைக்க இவ்வளவு பணமா மனம் பொறுக்கவில்லை . ஆனாலும் சரயு படிக்கும் பெண், அவளை வேலை வாங்கக் கூடாது, மகனுக்கும் தனது மேற்பார்வையில் நல்லதாகச் சமைத்துப் போட வேண்டும் என்றே சமையல் ஆளையும் ஒத்துக்கொண்டார்.
“காலாகாலத்தில கல்யாணம் பண்ணியிருந்தா, இதுக்கெல்லாம் ஆள் வைக்க வேண்டியதில்லை” என்ற புராணத்தைப் பாட, சிரித்தவன்,
“அப்படியும் சொல்ல முடியாது, இப்போ இருக்க பொம்பளைங்களுக்கு நாற்பது வயசிலேயே எல்லாம் கழண்டு போகுது, அக்கா, சந்திரா எல்லாம் அப்படித் தானே இருக்காங்க” அவன் உதாரணம் காட்ட ,
“நீ சொல்றதும் வாஸ்தவம் தான், ஆறு புள்ளை பெத்தேன், என்னை அம்மா வீட்டுக்குக் கூட அனுப்பாமல் மகராசி உங்க அப்பத்தாவே எனக்கு எல்லாம் பார்த்தாங்க. நானும் இவளுகளுக்கு பார்த்துத் தான் விட்டேன். இரண்டு புள்ளைகளுக்கு பார்க்கிறதுக்குள்ளேயே உன் உடன் பிறந்தவளுக திணறுறாளுகளே” புலம்ப,
“உங்க ஊட்டம் அவுங்களுக்கு இல்லைலம்மா. சாப்பிடுற பொருள் எல்லாத்திலும் செயற்கை உரம்,கலப்படம், அப்படி தான் இருக்கும். “ என சந்துரு காரணம் சொல்ல, அம்மாவும், “என்னமோ போ” என ஒத்துக் கொண்டார்.
அம்மாவும், மகனுக்கும் பேச அவ்வளவு விஷயம் இருந்தது, போதாதற்கு அன்று சந்திராவும், மேலிருந்து ரதியும் வந்து விட, ஒரே அரட்டை கச்சேரி தான்.
“சந்துரு, அம்மாவுக்கும் ஒகே தான். சரயுவுக்கும் இன்னையோட காலேஜ் முடியுது. நோ மோர் சால்ஜாப்பு. நம்ம மதுரைக்கு போறோம்” என்றாள் சந்திரா.
“இந்த கையை வச்சுக்கிட்டு, அம்மா எப்படி வருவாங்க. அவர்களுக்குத் துணைக்கு நான் இருத்துக்குறேன், நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” என்று சொல்ல,
“அம்மாவுக்கே ஆட்சேபனை இல்லை, வந்தே பார்த் தானே, போயிடலாம்கிறங்க, உனக்கென்ன பிரச்சனை. நம்ம ஸ்கூலுக்கு போற அன்னைக்கு அம்மா, பானு வீட்டில் இருக்கட்டும். அடுத்த இரண்டு நாள் எல்லாருக்குமா தான் ரிசார்ட் புக் பண்ணி இருக்கு. டெம்போவும் புக் பண்ணியாச்சு” சந்திரா சொல்ல,
“ ரிசார்ட் போற அன்னைக்கு நாங்க வந்து ஜாயின் பண்ணிக்கிறோம் அக்கா” என்றாள் ரதி.
“உங்க மாமாவும் வருவாரு, மறக்காமல் கூட்டிட்டு வந்துடுங்க” சந்திரா சொல்ல,
“அம்புட்டு அக்கறை இருக்கவ , உன்னோடைய கூட்டிட்டு வர வேண்டியது தானே” சந்துரு கேட்க,
“போகலாம் தான், அதுல இரண்டு விஷயம் இருக்கு. முதல்ல என் பேரன் விட மாட்டான், இரண்டாவது மல்லிகை மணாளா செண்டையார், தாமரை மணாளா செண்டையருக்குள்ள டெர்ம்ஸ் ஒத்து வராது. சகலைகளுக்குள்ள ரகளை தான் நடக்கும். உன் பாடு தான் கஷ்டம், பரவாயில்லையா” என சந்திரா கேட்க, அவளது இரட்டை கையெடுத்துக் கும்பிட்டான். “அது”எனச் சந்திரா சொல்ல, ரதி சிரித்தாள்.
“அடியே, உன் வாய் சாதுரியத்தை, பெரியவ வீட்டுல வந்து காட்டாத. அந்த மனுஷன் எதுடா சாக்குன்னு இருக்காரு, பெரியவளும் சேர்ந்து பாயிவா” என ராஜாத்தி சொல்ல,
“கொஞ்சம் கஷ்டம் தான் பார்த்துக்கலாம்” என்றாள்.
“பாரதி அக்கா, நல்லா வாழ்த்திருந்தா அந்த சகலையோட கூட்டணி போட்டு இருப்பார்” ரதி சொல்ல,
“அந்த பேச்சே எடுக்காத. அவன் ஒரு ஆளு, வக்கிரம் புடிச்சவன். அவனை அடக்கத் தெரியாத, அம்மா, அப்பா, அக்கா குடும்பம். அவன் வக்கிரத்துக்கு என் மகள் தான் கிடைச்சாளா” என ராஜாத்தி பொருமினார்.
“நம்ம சோகம் பெருசு தான். அதுக்கப்புறம் அந்த ஆளும் ஒன்னும் வாழலையே. போனவனை பத்தி எதுக்குமா பேச்சு, விடுங்க. விசாரிக்காமல் கொடுத்த நம்மளை சொல்லணும், ” சந்துரு தன மேல் பழியைப் போட்டுக் கொள்ள,
“நாம விசாரிச்ச வரை நல்ல குடும்பம் தான் சந்துரு. அந்தாளு அரைக் கிறுக்கு, பாரதியைத் தான் காட்டினாலே கட்டுவேன்னு வந்தான். அதீத அன்பும் ஆபத்தானது தான்னு நமக்கு அப்புறம் தானே தெரிஞ்சது” எனச் சந்திரா பெரு மூச்சு விட,
“சரயுவையாவது நல்லா வாழ வைக்கணும்” ராஜாத்தி புலம்ப,
“அதுக்கு தான் மா, நம்மளை மாதிரி முன்னேறின குடும்பம், கீதாவோடது. அவள் மகனையே பார்ப்போம்” என்ற சந்திரா, “சந்துரு, உனக்கு ஓகே தானே” என்றாள்.
“ சரயுவுக்கு பிடிச்சா சரிதான். சந்தோசமா செஞ்சு வெச்சுடுவோம்” என்றான், அதன் பின் சாரு குடும்பத்தைப் பற்றிய பேச்சு ஓடியது. சாரு , தன் வாழக்கையை பணயம் வைத்து, தங்கைகளை வாழ வைத்த கதையைப் பேச, சந்துருவுக்கு மனம் கனத்து போனது.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று செய்யும். சரயுவின் வாழ்க்கையை இவர்கள் ஒரு விதமாக உறுதி செய்ய நினைக்க, அவள் தந்தை வழி சொந்தமும் தேடி வந்தது.
ஆம், மூன்று மாதத்துக்கு முன், அவள் ட்ரைனிங் சென்ற மென்பொருள் நிறுவனத்தின் பைனான்சியல் பார்ட்னர் என ஒருவன் வந்தான். க்ரூம் செய்யப்பட்ட தாடியும், மீசையும், கறுப்பு கண்ணாடி, டெனிம் சர்ட் ஜீன்ஸ் , ஷூ என ஆளே பார்க்கக் கொஞ்சம் ரக்கடாக தான் இருந்தான். ஸ்கார்பியோவில் ஹை எண்டு வாகனம், கருப்பு குதிரை போல் கீழே வந்து நின்றாலே, இவன் வந்திருக்கிறான் என்று பொருள்.
இவள் உடன் வந்த தோழிகள் அவனைப் பார்த்து, செம ஆளு என விமர்சனங்கள் வைத்த போதும், “ ஏய் வந்த வேலையை மட்டும் பாருங்கடி” என அவனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாமல் கடந்து இருந்தாள்.
மூன்று மாதத்தில் நான்கு, ஐந்து முறை மட்டுமே வந்திருப்பான். எம் டி அறையில் அவன் அமர்ந்திருக்க, ஓரிரு முறை அவளுக்கான ப்ராஜெக்ட் ஹெட் அவளையும் எம்டி யோடு டிஸ்கஷன் என அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல, அந்த அறையில் அவனும் ஓர் இருக்கை போல் கூலர்சோடு யாரைப் பார்க்கிறான் என்பதே அறிய முடியா வண்ணம் அமர்ந்திருப்பான். ஆனாலும் அவளின் உள்ளுணர்வு , அவளைத் தான் பார்க்கிறான் என அறுதியிட்டுச் சொல்ல, அவன் பக்கம் மறந்தும் திரும்பாமல் கட்டுப்பாட்டோடு வந்து விடுவாள்.
சரயு ட்ரைனிங்க் முடியும் இரண்டு நாள் முன்பு எம் டி கேபினிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவள் ப்ராஜெக்ட் சம்பந்தமானதை எடுத்துச் சென்று,
“. மே ஐ கம் இன் சார்” என்ற அனுமதி வேண்ட, “ கம் இன்” என்ற கனமான குரலே கேட்டது.
இவள் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல, எம்டி சேரில் அவன் தான் அமர்ந்திருந்தான்.
“ சார்” என அவள் தயங்க,
“ சிட்” என எதிர் இருக்கையைக் காட்டினான்.
“என் ட்ரைனிங் முடிஞ்சது. எம் டி சைன் பண்ணினா, காலேஜ்ல சமிட் பண்ணிடுவேன்” அவள் வந்த காரணத்தைச் சொல்லிக்கொண்டு நுனி சீட்டில் அமர்ந்திருந்தாள். கண்கள் அவனைத் தவிர்த்து, எம் டியை தேடின.
“இப்போ உன்னை வரவழைச்சது உன் எம்டி, இல்லை. நான் தான்” என கூலர்ஸை கழட்டி விட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்க்க, அந்த பார்வை அவள் மனதை ஏதோ செய்தது. கொஞ்சம் அச்சம், கொஞ்சம் குளிர், கொஞ்சம் படபடப்பு, வயிற்றிலிருந்து பயப்பந்து தொண்டையை அடைத்தது. குளிரூட்டியையும் தாண்டி நெற்றியில் வியர்வை துளி.
அதைக் கண்டவன், “ஜஸ்ட் ரிலாக்ஸ். இவ்வளவு டென்ஷன் ஆகாத” என்றான். அவன் ஒருமை பேச்சில் முகம் சுருக்கினாள்.
“நான் யாருன்னு உனக்குத் தெரியாது. பட் நீ யாருன்னு எனக்குத் தெரியும். சராயு பாரதி கண்ணன்…” என ஆரம்பித்தவன், அவளின் மொத்த வரலாற்றையும் சொல்லி முடித்தான்.
“ஆமாம், நான் தான். என் பர்சனல் எல்லாம் , நீங்க ஏன் சொல்றிங்க. உங்களுக்கு என்ன வேணும்” அவள் புரியாமல் கேட்க,
“நீ தான் வேணும்” என்றான் தீர்க்கமாக.
“வாட்” அவள் கண்ணைச் சுருக்கி அவனைக் கேள்வியாகப் பார்க்க,
“நீ தான் வேணும். நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்” என்றான்.
ஒரு நொடி அவளுக்கு மூச்சடைத்தது, “புரியலை, என்ன திடிர்னு” அவள் விளக்கம் கேட்க,
“திடிர்னு எல்லாம் இல்லை. ரொம்ப வருஷ திட்டம். உன் மாமா எப்போ வருவார்னு சொல்லு, நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு வந்து பேசுறேன் ” எனவும், அவளுக்கு சுர்ரென கோபம் வந்தது.
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க நினைச்சா போதுமா” அவள் காரமாகவே கேட்க,
“ வேறென்ன வேணும்” என்றான் இடக்காக,
“என் சம்மதம், எங்க வீட்டில் இருக்கவங்க சம்மதமும் வேணும்” என்றாள் கறாராக.
“அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. உனக்கு என்னை பிடிச்சு தான் இருக்கு” என்றான்.
“ வாட் ரப்பிஷ், நான் எப்ப உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்?”
“ வாய் திறந்து சொல்லை, ஆனால் உன் உடல் மொழி சொல்லிடுச்சு.”
“அது எப்படி, நான் உங்களைத் திரும்பிக் கூட பார்த்தது இல்லை”
லேசாகச் சிரித்தவன், “அதே தான்,ஓவர் டிபென்சிவ் ஆட்டம். பார்த்தா பிடிச்சுடுமோங்கிற பயம்” என்றான்.
“எனக்கென்ன பயம், நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க. எம் டி ரூம்ல உட்கார்ந்து இருக்கிறதால உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். அதர் வைஸ், நீங்க யாரோ. முன்ன பின்னத் தெரியாத ஆளுகிட்ட நான் பேசவும் மாட்டேன். அயம் நாட் இன்டெரெஸ்ட்டேட்” என மொழிந்து விட்டு, அவள் வெளியே செல்ல எத்தனிக்க, அவனுக்குக் கோபம் வந்தது.
ஒரு எட்டில் அவள் முன் வந்து நின்று வழியை மறைத்தவன், நூலளவு இடைவெளி விட்டு நின்று, “ யாரோ இல்லை, உன் மேல சகல உரிமையும் இருக்க முறை பையன். இந்த ஜென்மத்துக்கு நீ தான் என் பொண்டாட்டி “ .
வெகு அருகில் நின்று அவன் அழுத்தமாகச் சொல்ல, முதலில் அதிர்ந்தவள், அவனின் உஷ்ணமான மூச்சு படவும் அரண்டு பின் சமாளித்து, “ என் மாமாவுக்குக் கல்யாணமே ஆகலை, எங்கிருந்து புதுசா ஒரு முறைப்பையன் முளைச்சான், இதெல்லாம் நம்ப வேற ஆளை பாரு” என அவனைக் கடந்து செல்ல முயல,
சட்டெனத் திரும்பி, அவளையும் திருப்பி கதவில் சாய்த்து, அவள் கைகளைச் சிறை செய்து, மற்றொரு கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, தன முகத்தைப் பார்க்க வைத்தவன், “ உன் மாமன் மட்டும் தான், உனக்கு முறை மாப்பிள்ளையை பெத்து தருவாரா? அப்பா கூட பிறந்த அத்தை பெத்த பையனும் முறை மாப்பிள்ளை தான்” என அவன் தன் பரிச்சயம் சொல்ல, அவள் உடல் நடுங்கியது.
“என் பிறப்பையே சந்தேகப்பட்டு, என்னையே தன் பிள்ளை இல்லைனு சொன்னவர் , என் அம்மா சாவுக்குக் காரணமான ஆளையே நான் ஒத்துக்கல , அவர் சொந்தத்தையா ஒத்துக்க போறேன். பகல் கனவு காணாமல் , போயி ஆகிற வேலையை பாருங்க”
“அப்புறம் எதுக்கு, உன் பேருக்குப் பின்னாடி கண்ணன்னு போட்டுக்குற” என்றான் இடக்காக.
“எங்க அம்மா நடத்தை மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு தான். அதுவும் கோர்ட்ல , டி என் ஏ டெஸ்ட் பண்ணிப் போட்டது. எனக்கு அந்தாளோட சொத்தோ, சொந்தமோ தேவை இல்லை. எங்க அம்மா உதமிங்கிற பேர் போதும்” என்றவள்,
“நீ யாரோவா இருந்தா கூட, உங்க ப்ரப்போசலை கன்சிடர் பண்ணி இருப்பானோ, என்னமோ? எனக்கு உயிர் கொடுத்தவன் பேரை சொன்னேல்ல, இந்த ஜென்மத்துக்கும் நான் உனக்குக் கிடைக்க மாட்டேன்” என அவனைத் தள்ளி விட்டு சிட்டாகப் பறந்து இருந்தாள் சரயு.
அதற்குப் பின் மென்பொருள் நிறுவனத்துக்குச் சரயு செல்லவில்லை, சர்டிவிகேட்டை ஆன் லையனில் அனுப்பச் சொல்லி வாங்கிக்கொண்டாள். ராஜாத்தி விழும் முன்பே இது நடந்திருக்க, அதன் பின் அந்த ரக்கடு அத்தை மகன் அவளைத் தொல்லை செய்யவில்லை. தேவையில்லாமல் வீட்டினரைக் குழப்ப வேண்டாம் எனச் சரயு, அவனைப் பற்றி வீட்டில் சொல்லாமல் விட்டாள் . ஆனால் தான் அப்படியெல்லாம் சுலபத்தில் விடுபவனல்ல என்பதை அவள் முன் மீண்டும் வந்து நின்று உணர்த்தினான்.
அதிர்ந்து நின்றது அவள் நெஞ்சம் .
Author: Kasavu
Article Title: நெஞ்சம்-5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நெஞ்சம்-5
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.