• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு -3

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 3

கண்ணாடி மனதில்
சீற்றத்தை ஒளித்து வைத்தால்
எரிமலைக் குழம்பாக அது
கொதித்துக் கொதித்து ஒருநாள்
வெடித்துச் சிதறித்தான் போகிறது!


எக்மோர் ஸ்டேஷனை அடைந்து, மதுரை செல்லும் தேஜஸ் விரைவுவண்டியில் ஏறி அமர்ந்தார்கள் இருவரும். தளைகளை அறுத்துக் கொண்டு வெளியே வந்த புதிய மனித உயிராக உணர்ந்தாள். சுதந்திரக் காற்றை சுவாசித்து மகிழ்ச்சி அடைந்த மணிமேகலையின் முகம் தாமரையாக மலர்ந்து விகசித்தது. நேற்று வாடிக் கிடந்த முகம் இன்று இப்படி மலர்ந்து அழகாகத் தெரிவதை அவளுடன் இருந்த பெண்ணும் பார்த்து அந்த மகிழ்ச்சியைத் தானும் அனுபவித்தாள்.

“ அக்கா, உங்க ஆபரேஷன் அக்னி நட்சத்திரம் வெற்றிகரமாக ஆரம்பிச்சுடுச்சு. எப்படி முடிக்கப் போறீங்கன்னு பாக்கப் போறேன். ஆனால், இப்பக் கூட இது சரியா, தப்பான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நீங்க என்ன செஞ்சாலும் அதுக்கு என்னோட ஆதரவு உண்டு அக்கா” என்றாள் அந்தப் பெண்.

“ அப்படிக் கண்மூடித்தனமா என்னை ஸப்போர்ட் பண்ணறதை நிறுத்து. நீயா யோசிச்சுப் பாத்து நான் பண்ணறது சரியான்னு முடிவெடு. மத்தவங்க செய்யறதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்னு நம்பறதை நிறுத்து மொதலில. யாரா இருந்தாலும் அது நானாகவே இருந்தாலும் சட்டுன்னு நம்பிரக்கூடாது. வாழ்க்கையில் இவ்வளவு அடிபட்டும் உனக்கு இதெல்லாம் புரியலையே இன்னும்! ”

“ சரி குருவே! இனிமேல் உங்கள் கட்டளைப்படி அனைத்தையும் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் அந்தப் பெண் மாதவி.

“ சிரிக்கும் போது நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா மாதவி! இப்படியே சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும் நீ. அதுதான் என் ஆசை”

“ எப்படியெல்லாமோ அடிபட்டு நரக வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்த என்னை அந்த நரகத்தில் இருந்து வெளியே எடுத்துத் தூக்கி நிறுத்தி இன்னைக்குச் சிரிக்க வச்சதுக்கு முழுமுதற் காரணம் நீங்கதானே அக்கா? சாக்கடைப் புழுவாக் கிடந்த என்னைக் குளிப்பாட்டி ஊக்கம் தந்து பட்டுப்பூச்சியா மாத்திச் சிறகடிச்சுப் பறக்க வைச்ச உங்களை நான் நம்பாமல் எப்படி இருக்க முடியும்? ” என்று சொல்லும்போது நெகிழ்ந்துபோயிருந்தாள் மாதவி. மணிமேகலை அவளுடைய கைகளை ஆதரவுடன் பற்றிக் கொண்டாள்.

“ பழசை மறக்க முயற்சி பண்ணு மாதவி. நடந்தது நடந்து போச்சு. நடந்து முடிந்ததை யாராலயும் மாத்த முடியாது. ஆனால் இனிமேல் நம்ம வாழ்க்கையில் நடக்கப் போவதைத் தீர்மானிக்கிறது நம்ம கையில்தான் இருக்கு? அதை மட்டும் இலக்கா வச்சு வாழ்க்கைப் பாதையில் முன்னால் அடிகளை எடுத்து வைப்போம். வெற்றி நிச்சயம்”

“ உண்மை அக்கா. நீங்களும் அந்த வெற்றி இலக்கை எட்டத்தானே இந்த ஆபரேஷன் அக்கினி நட்சத்திரத்தை ஆரம்பிச்சு இருக்கீங்க. அது எப்படி இந்தப் பேர் உங்களுக்குத் தோணுச்சு? அக்கினி நட்சத்திரத்துக்கும் அக்காவின் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? ”

“ சம்பந்தம் நம்ம நினைப்பில்தான் இருக்கு மாதவி. அக்கினி நட்சத்திரம்னா வெயில் கடுமையா இருக்கும்னு மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்தச் சூட்டுக்குப் பின்னால் இருக்கற அக்கினியோட பரிதவிப்பு யாருக்கும் தெரியறதில்லை”

“ அது என்ன கதை? எனக்குத் தெரியாது! சொல்லுங்களேன் பாக்கலாம். இப்பயாவது தெரிஞ்சுக்கறேன்”

“ சொல்லறேன் கேளு. விளக்கமா எடுத்துச் சொல்லறேன். பொறுமையாக் கேளு” என்று ஆரம்பித்தாள் மணிமேகலை. டிரெயினில் அவர்களுக்கு அருகில் உட்கார்ந்திருந்த அனைவரும் மணிமேகலை தரும் விளக்கத்தைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். மணிமேகலையும் சொல்ல ஆரம்பித்தாள்.

“வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் அக்னி நட்சத்திர காலத்தை எப்படிக் கடப்பது என்கிற கவலை, கோடைக்காலம் ஆரம்பிச்சதும் எல்லோருக்கும் வந்து விடுகிறது. அதீத சூட்டில் இருந்து நம்மை எப்படி எல்லாம் காத்துக் கொள்வது என்று பலரும் யோசிக்கத் துவங்கி விடுகிறார்கள். ஆனால் அக்னி நட்சத்திரம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றி யாரும் நினைப்பதில்லை.

சித்திரை மாதத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும், அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் உஷ்ணம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். சித்திரை மாதம் 21 ம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம்னு சொவ்லறோம் இல்லையா? ” என்றாள் மணிமேகலை. மாதவியும் தலையாட்டி ஆமோதித்தாள்.

“ சித்திரை மாதத்தில் பரணி 3 ஆம் பாதத்தில் கதிரவன் பிரவேசிக்கும் காலத்தை, அக்னி நட்சத்திர காலம் என்று நம்முடைய பஞ்சாங்கம் சொல்கிறது. இந்தக் காலத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். அறிவியல் உண்மைகளின்படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன் தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.

சூரியனின் பயணத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அப்படி சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அறுவடை முடிந்த வயல்களில் வெடிப்புக்கள் ஏற்படும். இந்த வெடிப்புக்களின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும். வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை, வயல்களின் வெடிப்பின் வழியாக பூமிக்குள் சென்று வெப்பத்தை தணித்ததும் மீண்டும், வெடிப்புக்கள் மூடிக்கொள்ளும்.

அக்னி நட்சத்திரத்திற்கு இணையான வெப்பத்தைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம் என்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான் ஆவார். அக்னி நட்சத்திரம் என்கிற வெப்ப காலம் எப்படி உண்டாயிற்று என்பதற்கு புராணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது” என்று நிறுத்தினாள்.

“ தகவல்களாச் சொல்லிட்டுப் போறீங்களே? கதையைச் சொல்லுங்க முதலில்” என்று பரபரத்தாள் மாதவி. மணிமேகலையும் புன்சிரிப்புடன் தொடர்ந்தாள்.

“ யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய மூலிகைச் செடிகள் அடர்ந்து இருந்ததால் அதிலிருந்து வரும் வாசனை ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவர்ந்து இழுத்தது. இந்த மூலிகைகள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி மழையைப் பொழிந்து பசுமையைக் காத்து வந்தான் இந்திரன். மழையின் அதிபதியான வருணனை வழிநடத்தினான் இந்திரன். இயற்கை அழகு நிறைந்திருந்த இந்தக் காட்டிற்கு அருகில் இருந்த யமுனையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் ஒருமுறை நீராட வந்தார்கள்.

அவர்கள் குளித்து விட்டுக் கரையேறிய போது அந்தணர் ஒருவர் அருகில் வந்தார். ‘ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. இந்த வனத்தில் உள்ள பசிப்பிணி தீர்க்கும் மருந்துகளைச் சாப்பிட்டால் எனது பசி தீரும். இந்த வனத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார். அவருடைய தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடித்த கிருஷ்ணன், வந்திருப்பது அக்னி தேவன் என்பதைப் புரிந்து கொண்டார்.

அவரிடம் கிருஷ்ணனும், அர்ஜூனனும் உண்மை விவரங்களைக் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த அக்னி தேவன், ‘சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து நடத்திய யாகத்தின் விளைவால் அதிகமாக நெய்யை உட்கொண்டு விட்டேன். அதைச் சாப்பிட்டதால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்கு ஏற்ற மூலிகைச் செடிகள் இந்த வனத்திற்குள் தான் உள்ளன. ஆனால் நான் இந்த வனத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் போதெல்லாம் இந்திரன் மழையைப் பெய்ய வைத்து விடுகிறான். அதனால் என்னால் இந்த வனத்திற்குள் செல்ல முடிவதில்லை’ எனக் கூறித் தனது நிலையை விளக்கினான்.அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும், அக்னிக்கு தேவையான வில், அம்புகளைத் தர முடிவு செய்தனர். அக்னி தேவனும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான். ‘உங்களுடைய பசிப் பிணியைத் தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் நீங்கள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையைப் பெய்ய விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று கிருஷ்ணர் கூறினார். அதே போல் அக்னி தேவன் காட்டிற்குள் சென்றதும் மழையைப் பெய்ய வைக்க முயற்சி செய்தான் இந்திரன். அம்புகளை எய்தி அர்ஜூனன், மழையைத் தடுத்து நிறுத்த, காட்டிற்குள் இருக்கும் மூலிகைகளைச் சாப்பிட்டு, தனது பிணியைத் தீர்த்துக் கொண்டான் அக்னி தேவன்.

அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன” என்று கூறி முடித்தாள் மணிமேகலை. சுற்றியிருந்த அனைவரும் கை தட்டித் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.

“ எப்படிக்கா உங்களுக்கு இந்த அளவு புராணக் கதைகள் தெரியுது? ”

“ அதுக்குக் காரணம் என்னோட பாட்டி தான். ஒவ்வொரு விஷயத்தையும் கதை சொல்லி அவங்க விளக்கும்போது மனசுல அப்படியே பதிஞ்சு போயி நிக்குது. அம்மாவைப் பாத்ததில்லைங்கற குறை மனசுல இருந்தாலும் பாட்டியாவது கூட இருந்து என்னைக் கவனிச்சுக்கிட்டாங்களேன்னு நினைக்கும் போது மனசு திருப்தியாகுது. அம்மாவோட அண்மையை இழந்த துரதிருஷ்டசாலியாக நான் இருந்தாலும் பாட்டியோட பாசம் கெடைச்ச விஷயத்துல நான் அதிர்ஷ்டசாலிதான். அம்மா, அப்பா சொல்லித் தரமுடியாத சில விஷயங்களைத் தாத்தா, பாட்டிங்க குழந்தைகளுக்கு எளிதாக் கடத்திடறாங்க. இன்னைக்கு இருக்கற நியூக்ளியர் ஃபேமிலி செட்டப்பில் தாத்தா, பாட்டிகளோட அன்பும், பாசமும் குழந்தைகள் எல்லாருக்கும் கெடைக்கறதில்லை” என்று மணிமேகலை சொன்ன வார்த்தைகளை அங்கிருந்த அனைவரின் மனங்களிலும் ஆழமாக இறங்கியது.

டிரெயினில் இருந்த எல்லோரும் இப்போது மணிமேகலை, மாதவி இருவரிடமும் நட்புடன் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். சில அலைப்பேசி எண்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. புதிய நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே சென்றதில் டிரெயின் பயணமே அவர்களுக்கு இனிமையாகக் கழிந்தது.

மதியம் திண்டுக்கல்லில் வண்டி நின்றபோது இறங்கி விட்டார்கள் அவர்கள் இருவரும். அங்கிருந்து பஸ்ஸில் ஏறித் தங்களுடைய இலக்கை நோக்கி விரைந்தார்கள்.

சிறிது நேரத்தில் கொடைக்கானலின் குளுகுளு காற்று அவர்களை வருடி வரவேற்றது.

தலைவர் படத்தில் வருவது போல இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு,
“ புதிய வானம், புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது!
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது!
ஓஹஹ்ஹோஹ்ஹோஹோ ”

என்று பாடத் தோன்றியது மணிமேகலைக்கு.

கொடைக்கானலில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற போர்டிங் ஸ்கூலில் ஆசிரியையாக வேலை பார்க்கிறாள் மாதவி. பள்ளி வளாகத்திலேயே ஆசிரியைகளுக்கான குடியிருப்பு இருந்தது. அழகான தோட்டங்கள், சரியாகப் பராமரிக்கப்பட்ட புல்வெளிகள் என்று சுற்றிலும் ரம்யமாக இருந்தது. தன்னுடைய குடியிருப்பை அடைந்து அந்த வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள் மாதவி.

” ஒரு படுக்கையறை, ஒரு சிறிய ஹால், சமையலறை, ரெஸ்ட் ரூம் இவ்வளவுதான் என் அரண்மனை” என்று சொன்ன மாதவியைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் மணிமேகலை.

“ அவ்வளவுதான் நமக்குத் தேவை. வேறென்ன வேணும் நமக்கு? எனக்கும் உங்க ஸ்கூலில் வேலையும் கெடைச்சுட்டா நல்லா இருக்கும் மாதவி. உனக்கு சுமையா இங்கே தங்க எனக்கு விருப்பமில்லை எனக்கு”

“ என்ன வார்த்தை சொல்றீங்க அக்கா? நீங்க என்னைக்கும் எனக்கு சுமையாகவே முடியாது. இந்த வாழ்க்கையே நீங்க எனக்குப் போட்ட பிச்சையாகவே நான் நினைக்கிறேன். அப்புறம் உங்க வேலையைப் பத்தி நான் ஏற்கனவே பிரின்ஸிபல் மேடம் கிட்டப் பேசிருக்கேன். ரெண்டு நாளைக்குள்ள யோசிச்சுச் சொல்லறேன்னு சொல்லிருக்காங்க. அப்படியே ஸ்கூலில் வேகன்ஸி இல்லைன்னாலும் வேற எங்கேயாவது ஏற்பாடு பண்ணறதாச் சொல்லிருக்காங்க” என்றாள்.

“ இங்கேயே கெடைச்சுட்டா நல்லது. பாக்கலாம்”

“ ஆமாம், இங்கேயே கெடைச்சுட்டா நீங்க இங்கேயே தங்கிடலாம். வெளியில வேற எடத்துல கெடைச்சா நீங்க இங்கே தங்க முடியாது. அது ஒண்ணு தான் எனக்குக் கவலையா இருக்கு”

“ பாக்கலாம். கவலைப்படாதே” என்று மாதவியிடம் சொன்னாலும் மேகலைக்கு மனதிற்குள் திக், திக்கென்றுதான் இருந்தது.

‘புதிய இடம். கொஞ்ச நாட்களுக்கு மாதவி கூடவே இருப்பது வசதியாகத்தான் இருக்கும். ஒருவேளை இதே பள்ளியில் வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? வேலையே கிடைக்கவில்லை என்றால் இன்னமும் பரிதாபம். முடிந்தவரை பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். கணவனிடம் சவால் விட்டு விட்டு வந்தாச்சு. என்னதான் அவளுக்கு அந்தப் பணத்தில் உரிமை இருந்தாலும் அதை எடுத்தால் அவனைச் சார்ந்திருப்பதாகக் கருதுவானே? அந்தப் பணம் இல்லாமல் ஜெயித்துக் காட்டவேண்டும். ஆனால் இந்த வயதில் நல்ல வேலை கிடைக்கும் என்று நினைப்பதும் முட்டாள்தனமான எண்ணமோ? நிறையப் படித்துத் தகுதிகளை வளர்த்துக் கொண்ட இளைஞர்களே சரியான வேலை கிடைக்காமல் திரியும் போது என்னுடைய தகுதிகள் எந்த மூலைக்கு? ’ என்று மனதுக்குள் குமைந்தபோது கவலைகள் மனதை ஆக்கிரமித்தன.

‘ பரவாயில்லை. நாளைய பொழுது நல்ல பொழுதாகவே விடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் நிறைத்துக்கொண்டு தூங்க முயற்சி செய்தாள்.

எத்தனையோ கவலைகள் மனதிற்குள் சடுகுடு ஆடினாலும் சுதந்திரமாக முடிவெடுத்துத் தனக்குப் பிடித்தமான செயலை முதன்முதலில் நிறைவேற்றியிருந்ததால் மனம் திருப்தியாக இருந்தது. அந்த இடத்தின் குளிரும், கம்பனியின் கதகதப்பும் தேகத்திற்கு இதமாக இருந்ததால் தூக்கம் அவளை அணைத்துத் தாலாட்டி நன்றாகவே தூங்க வைத்தது.

அடுத்த நாள் என்னென்ன ஆச்சர்யங்களையும் திருப்பங்களையும் தயாராக வைத்துக் கொண்டு அவளை வரவேற்கப் போகிறதோ அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.

அக்கினி நட்சத்திரத்தின் முதல் நாள் செயல்பாடுகள் மணிமேகலையின் திட்டமிட்டபடி
சிறப்பாகவே முடிந்திருந்தன.

தொடரும்,


திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -3
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Joined
Jun 30, 2024
Messages
38
காப்பிய மணிமேகலைக்கு மாதவி தாய்.. இந்த மணிமேகலையும் மாதவியும் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். சிறப்பு
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
காப்பிய மணிமேகலைக்கு மாதவி தாய்.. இந்த மணிமேகலையும் மாதவியும் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். சிறப்பு
நானும் இதை தான் யோசித்தேன் மா.... 🤩🤩🤩
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
மகா காப்பியத்தில்
மாதவியின் மகளாக
மணிமேகலை_ இங்கு
மணிமேகலை மகளாக
மாதவியை காக்க....

மனதின் ரணம் எல்லாம்
மறந்து_மீண்டு வந்த
மங்கைகள் பயணம்
மாற்றம் வேண்டி
மனதிடத்துடன் நடைபோட
மகிழ்ச்சியும் உத்வேகமும்....

சூப்பர் 👏🏻👏🏻👏🏻🤩🤩🤩❤️😘💐
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
எங்க mummy இந்த கதை சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்....
மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி..... 🤩🤩🤩
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
20
மணிமேகலையும், மாதவியும் நல்லா கூட்டு சேர்தாங்க.😍😍😍

அக்னி நட்சத்திரம் கதை அருமை 👏👏
 
Top Bottom