• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - 2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 2

கண்ணாடி வாழ்க்கையில்
உணர்வுகளும் கண்ணாடிப் பூக்களோ?
கையாளத் தெரியாவிட்டால்
உடைந்து சிதறுகின்றன!
நொறுங்கித்தான் போகின்றன!

மணிமேகலை என்னதான் உறுதியாக முடிவெடுத்துவிட்டதாக நம்பினாலும் கால்கள் நடக்க முடியாமல் பின்னிக் கொண்டன. அடுத்தடுத்து அடிகளை எடுத்து வைக்க முடியாமல் தடுமாறினாள். ஒருவழியாக மனதைச் சரி செய்து கொண்டு கணவரின் அறைக் கதவைத் தட்டினாள். இரண்டு, மூன்று முறை தட்டியும் பதில் வரவில்லை. சில சமயம் அலைப்பேசியில் அரட்டை அடித்துக்கொண்டு பால்கனியில் நிற்கும்போது, கதவை மென்மையாகத் தட்டுவது காதில் விழாது.

கதவை மெல்லத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். அறையில் எங்கும் அவன் தென்படவில்லை. ஆடையை மாற்றிக் கொண்டுவிட்டான் என்பது ஆங்காங்கே சிதறிக் கிடந்த துணிமணிகளில் இருந்து தெரிந்தது. அவற்றை எடுத்து ஒதுங்கவைக்கப் பரபரத்த கைகளை அடக்கிக் கொண்டாள்.

‘ இன்னைக்கு இப்போதைக்கு வேணாச் செய்யலாம். நாளைல இருந்து அவராத் தானே செஞ்சுக்கணும்? பழகிக்கட்டும்’ என்று முடிவெடுத்துக் கீழே இறங்கி வந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடியே கீழே வரவேற்பறையில் ஸோஃபாவில் ஹாய்யாக அமர்ந்து டி. வி. யில் ஆழ்ந்து போயிருந்தான் திருநாவுக்கரசு. நியூஸ் சேனல், பிஸினஸ் நியூஸ், ஸ்போர்ட்ஸ் சேனல்கள் என்று லாங் ஜம்ப், ஹை ஜம்ப் செய்துகொண்டிருந்த ரிமோட் கண்ட்ரோல், தற்கொலை செய்து கொள்ள என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தது.

அரசு கையில் இருந்த ரிமோட் கண்ட்ரோலைப் பிடுங்குவது போல் வாங்கி முதலில் டிவியை அணைத்தாள். அவரெதிரே சாவகாசமாக உட்கார்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு டிவியை ஆஃப் செஞ்சே? முக்கியமான நியூஸ் பாத்துட்டு இருந்தேன். அணைக்கறதுக்கு முன்னால என்னைக் கேக்கணும்னு கூட உன் மூளையில உறைக்கலையா? எத்தனையோ வருஷமா என் கூட வாழ்ந்துட்டு இருந்தாலும் இன்னும் அறிவு வளரலை. ஸ்மால் டவுன் மெண்டாலிட்டி அப்படியே இருக்கு. என்ன ஜென்மமோ? ” என்று கடுகடுத்தது அவனுடைய குரல்.

“ முக்கியமான விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். அதுக்குத்தான் டிவியை அணைச்சேன்” என்று சொன்னபோது
இறுகிப் போயிருந்தன அவளுடைய முகமும் குரலும்.

“ அப்படி என்ன தலை போற விஷயம்? சீக்கிரமாச் சொல்லித் தொலை”

“ இங்க ஹாலில் வச்சுப் பேச வேணாம். உங்க ஆஃபீஸ் ரூமுக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு கணவனின் அலுவலக அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். எதிர்ப்பைக் காட்டி வரமாட்டேன் என்று சொல்ல வாய்ப்பளிக்காமல் நடந்த மனைவியை எரிச்சலுடன் பின்தொடர்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை திருநாவுக்கரசுவுக்கு. அவள் பின்னே நடந்தாலும், அப்படி என்ன பேசிவிடப் போகிறாள் என்ற அலட்சியம் தெரிந்தது முகத்தில்.

அவனுடைய அலுவலக அறையில் கிடந்த இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

“ நான் இந்த வீட்டை விட்டுக் கெளம்பறேன். இது வரைக்கும் உங்க மனைவியா என்னோட கடமைகளைச் சரிவர நிறைவேத்திட்டதா நான் நினைக்கிறேன். இவ்வளவு நாட்கள் உங்களுக்காக, இந்தக் குடும்பத்துக்காக, இந்த வீட்டுக்காக வாழ்ந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருது. இனிமேல் நான் எனக்காக வாழப் போறேன். எனக்கே எனக்காக” என்று சொல்லி முடித்தபோது, “எனக்காக” என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகக் கூறி முடித்தாள்.

அவள் பேசுவதை நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான் திருநாவுக்கரசு.

‘ என்ன ஆச்சு இவளுக்கு? இது என்ன புது அவதாரம்? மூளை, கீளை பிசகிப் போச்சா? இவ்வளவு தூரம் பேசக் கூடத் தெரியுமா இவளுக்கு? கட்டிப் போட்ட நாய் மாதிரி காலடியில் விசுவாசமாக் கெடந்தவளா இன்னைக்கு இப்படிப் பேசறா? இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? என்னை நிமிர்ந்து பாத்து மூஞ்சிக்கு நேரா நாலு வார்த்தை பேசிக் கூடப் பழகாதவ இன்னைக்கு வீட்டை விட்டுக் கிளம்பறதா இல்லை சொல்லறா? என்ன திமிர்!’ என்று நினைத்தவனுக்குக் கோபம் புஸுபுஸுவென்று ஏறியது.

“ என்ன ஆச்சு ஒனக்கு? வீட்டை விட்டுப் போறேன், கீறேன்னு இது என்ன பேச்சு? உன்னோட விளையாட்டுக்கு நான்தான் கெடைச்சேனா? போய் வேலையைப் பாரு. சாப்பாட்டை எடுத்து வை. கபகபன்னு பசிக்குது எனக்கு. இருக்கற பசியில கோபம் எக்கச்சக்கமா வருது”

“ ஸீரியஸா நான் பேசிட்டு இருக்கும்போது விளையாட்டுன்னு சொல்லிப் புறக்கணிக்க வேண்டாம். நெஜமாத்தான் சொல்லறேன். நான் கெளம்பறேன். நாளைக்குக் காலையில் நீங்க எழுந்திருக்கும் போது நான் வீட்டுல இருக்கமாட்டேன்.சொல்லாமக் கொள்ளாம இங்கிருந்து கெளம்ப மனசு வரலை எனக்கு”

“ அப்படி என்ன சாதிக்கணும் உனக்கு? வீட்டுல இருந்து கிழிச்சது போதாதா? என்னோட ஆதரவு இல்லாமல் தனியா ஒரு நாள் கூட சமாளிக்க முடியாது உன்னால” சீறிப் பாய்ந்தன வார்த்தைகள் அம்புகளாய்.

“ முடியும்னு காட்டத்தான் போறேன். நான் ஒண்ணும் உங்க கிட்ட சவால் விடலை. ஆனால் நான் நெனைச்சதை நிறைவேத்திக் காட்டப் போறேன். போறதுக்கு முன்னாடி சில விஷயங்களை உங்க கிட்டத் தெளிவு பண்ண விரும்பறேன். அதைப் பத்தித்தான் முக்கியமா நான் பேச விரும்பறேன்”

“ அதுதான் போறதுன்னு முடிவு பண்ணிட்டயே? இன்னும் என்ன தெளிவு பண்ணனும்? நான் இதைக் கேட்டுட்டு உன் கையைப் பிடிச்சு, ‘ ஐயோ மேகலை, என்ன விட்டுப் போகாதே. நீ இல்லாமல் என்னால வாழ முடியாது’’ன்னு எல்லாம் கையைப் பிடிச்சுக் கதறி அழுது கெஞ்ச மாட்டேன். எங்கே வேணாலும் போயிக்கோ. எப்போ வேணாலும் போயிக்கோ ரெண்டு நாளில திரும்பி வரத்தான் போற நீ”

“ வெயிட் பண்ணிப் பாருங்க என்ன நடக்குதுன்னு. எனக்கு நீங்க வாங்கித் தந்த விலை உயர்ந்த புடவைகள், நகைகள், பரிசுப் பொருட்கள் எல்லாமே என் ரூமில என்னோட அலமாரியில் பத்திரமாக இருக்கு. நம்ம கல்யாணத்துக்குப் பிறந்த வீட்டுச் சீராக எனக்குக் கொடுத்த நகைகளும், என் மாமியார் எனக்குக் கல்யாணத்துல கொடுத்த பரம்பரை நகைகளும் என் பாங்க் லாக்கரில் பத்திரமா இருக்கு. என் பொண்ணுங்க வரும்போது அவங்க கிட்ட ஒப்படைச்சுடுவேன். மத்தபடி என்னோட வார்ட்ரோபில் இருந்து ஸிம்பிளா இருக்கற ஆறேழு புடவை, பிளவுஸ் தவிர எனக்குத் தேவையான அத்தியாவசிய சாமான் சிலவற்றை மட்டும் எடுத்துட்டுப் போறேன். நான் கெளம்பறதுக்கு முன்னால் நீங்க வேணும்னா சோதனை பண்ணிப் பாத்துக்கங்க” அவள் பேசப் பேச நிலைமையின் தீவிரம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அலட்சியமாக அவளைப் பார்த்த பார்வை இப்போது ஆச்சர்யத்தைச் சேர்த்துக் கொண்டது.

கொஞ்சம் இறங்கி வரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அடிமையாக ஒருத்தர் இருக்கும் போது கிடைக்கும் சௌகர்யங்கள் ஏராளம். ஒருவிதத்தில் அடிமை கூடவே இருப்பதை மனம் விரும்புகிறது; இரசித்து ஏற்றுக்கொள்கிறது. திடீரென்று அந்த சுகம் பறிக்கப்படும் போது ஏற்றுக்கொள்வது கடினமாகி விடுகிறது. பழகிக் கொண்ட சுகங்களை இழந்துவிடுவோமோ என்பதைப் புரிந்து கொள்ளும்போது மனம் பதைபதைக்க ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட அதிர்ச்சியான மனநிலையைத்தான் திருநாவுக்கரசு அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தான்.

தன்னை மீறி எதுவும் செய்ய மாட்டாள் என்று நினைத்த மனைவி இன்று சுதந்திரமாக முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தப் போகிறாள் என்கிற உண்மை அவனுடைய உள்ளத்தைச் சுட்டெரித்தது. ஆனாலும், என்னிடமிருந்து பிரிந்து இவளால் என்ன சாதிக்க முடியும் என்கிற ஆணவம் அவனுடைய அறிவை மழுங்கச் செய்தது.

“ செலவுக்குப் பணம் வேணும்னா என்கிட்டே வந்துதானே ஆகணும்? ”

“ எதுக்கு வரணும்? நானும் உங்க கம்பெனியில் ஷேர் ஹோல்டர். டிவிடன்டா என் கணக்கில் வந்த பணமெல்லாம் செலவழிக்காமல் அதுல இருக்கு. என் பேங்க் அக்கவுண்டில இருக்கற பணம் என்னோடது. அதை நான் எடுத்து செலவு பண்ணறதை நீங்க தடுக்க முடியாது. நான் வேண்டாம், என் பணம் மட்டும் வேணுமான்னு நீங்க கேக்க முடியாது. இத்தனை வருஷங்கள் உங்களுக்கு நான் உதவியா இருந்ததுக்கும், இந்த வீட்டை நல்லபடியா நடத்த நான் போட்ட உழைப்புக்கும் எனக்குக் கெடைச்ச சம்பளம் அது. உங்களோட ஆஃபீஸிலயும் வந்து நான் உங்களுக்கு உதவி பண்ணிருக்கேன்” என்று நெத்தியடி பதில் தந்த மணிமேகலையின் இந்த அவதாரம் முற்றிலும் புதுமையானது.

அவள் சொன்னது உண்மைதான். அவனால் இல்லையென்று வாய் கூசாமல் சொல்ல முடியாது. மணிமேகலை பி. காம். முடித்துவிட்டு ஸி. ஏ. பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களுடைய திருமணம் நடந்தது. தன்னுடைய படிப்பைத் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் அவளுக்கு. ஆனால், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவளுடைய கணக்கு ஞானத்தை உபயோகப்படுத்திக் கொள்ள அரசு தவறியதில்லை. சம்பளப் பட்டுவாடா பெரும்பாலும் அவளுடைய மேற்பார்வையில் நடக்கும்.

“ முதலாளி அம்மாவே நேரடியா வந்து நமக்கு சம்பளப் பட்டுவாடா செய்யக் கொடுத்து வச்சிருக்கணும் நாம. நமக்கெல்லாம் சோறு போடற மகாலச்சுமி அவங்க. அன்னபூரணி அவங்க. நல்லா இருக்கணும்” என்று தொழிலாளர்கள் வாழ்த்துச் செல்வதைத் தனக்குச் சாதகமாகவே எடுத்துக் கொண்டான் திருநாவுக்கரசு. அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் மணிமேகலையின் பேச்சில் தவறேயில்லை.

“ இப்படி திடீர்னு கிளம்பிப் போறேன்னு சொல்லறதுக்கு அர்த்தம் என்ன? ஒரேயடியா டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிடலாமே? நானாவது நிம்மதியா இருப்பேனே? ”

“ இல்லை. இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை. தனியா வாழ்ந்து மொதலில பழகிக்கப் போறேன். மீதியை எதிர்காலத்தில் யோசிச்சுக்கலாம். இப்ப அறுபதாம் கல்யாணம் முடிஞ்சவுடனே நான் டைவர்ஸ் நோட்டீஸ் குடுத்தா உங்களுக்கு அது பெரிய அவமானம். அதுனால கொஞ்சம் கொஞ்சமாப் பிரிஞ்சு வாழப் பழகிக்கிட்டதுக்கு அப்புறம் அடுத்து என்ன நடவடிக்கைன்னு யோசிக்கறேன். இப்போதைக்கு மூணு வாரம் தனியா இருக்கப் போறேன். ஒரு மாதிரி வெகேஷன் எனக்கு” என்றாள்.

“ அது என்ன மூணு வாரம்? வித்தியாசமா இருக்கே? ” என்று எகத்தாளமாகக் கேட்டான் திருநாவுக்கரசு.

“ அக்னி நட்சத்திரம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் மணிமேகலை.

சாப்பாட்டு அறைக்குச் சென்று டைனிங் டேபிள் சேரில் தனியாகவே அமர்ந்தாள். பர்வதம் மாமி வந்து தயங்கி நின்றாள்.

“ ஐயா வரட்டுமாம்மா? ”

“ அவர் வரும்போது வரட்டும். எனக்குச் சப்பாத்தி எடுத்துவைங்க” என்று சொன்ன குரல் புதிதாக ஒலித்தது பர்வதத்திற்கு. ஒன்றும் புரியாமல் திகைத்தவர் சட்டென்று அவளுக்கு உணவு பரிமாறத் தொடங்கினார்.
கணவனுக்குப் பரிமாறி விட்டு அவன் சாப்பிட ஆரம்பித்ததன் பிறகே சாப்பிடும் எஜமானிக்கு இன்று என்ன ஆனது என்ற குழப்பத்தில் இருந்தார் அவர். மணிமேகலை கிடுகிடுவென இரவு உணவை முடித்துக்கொண்டு மாடி அறைக்குச் சென்றுவிட அதற்குப் பிறகு சாப்பிட வந்தான் திருநாவுக்கரசு.

கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனின் வயிறும் அநியாயத்துக்குப் பசித்தது. பரிமாறக் காத்துக் கொண்டிருந்த பர்வதம் மாமியிடமும் எரிந்து விழுந்தான்.

“ என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்க? எடுத்து வைங்க” என்று கத்தினதும், பர்வதமும் நடுங்கிக் கொண்டே பரிமாறினாள்.

“ என்ன சப்பாத்தி செஞ்சிருக்கீங்க? ஸாஃப்டா இல்லையே? குருமாவில் ருசியே இல்லை” என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முணுமுணுத்தபடி சாப்பிட்டு எழுந்தான். ஏதோ தவறாகப் பட்டது பர்வதம் மாமிக்கு. கணவன், மனைவிக்குள் ஏதோ விவகாரம் ஓடிக்கொண்டிருப்பதை அந்த அனுபவசாலியால் புரிந்து கொள்ள முடிந்தது.

மணிமேகலை அவளிடம் எப்போதும் பிரியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வாள் என்பதால் மணிமேகலையிடம் சென்று என்ன பிரச்சினை என்று கேட்கலாமா என்று கூட நினைத்தாள்.

‘ இல்லை, இல்லை, வேண்டாம். மணிமேகலை முகமே வாடியிருந்தது. நிறைய டிராவல் வேற
செஞ்சுட்டு வந்துருக்காங்க ரெண்டு பேரும். ஃபேஷன் வேற முடிஞ்சிருக்கு. களைச்சுப் போயிருக்காங்க பாவம்’ என்று கேட்க நினைத்ததை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போட்டார். ஆனால், அடுத்த நாள் கேட்பதற்கு மணிமேகலை அங்கே இருக்கப் போவதில்லை என்று பர்வதம் மாமிக்குத் தெரியாது பாவம்.

அடுத்த நாள் அதிகாலையில் கையில் ஒரு சிறிய பயணப்பையுடன் புறப்பட்டு விட்டாள் மணிமேகலை. வாசலில் இருந்த வாட்ச்மேன் ஓடிவந்தான்.

“ கோயிலுக்குப் போறீங்களாம்மா? டிரைவரைக் கூப்பிடட்டுமா? ” என்று பவ்யமாகக் கேட்டான்.

“ வேண்டாம். நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு மெயின் கேட்டைத் திறந்து வெளியேறினாள். அப்போது சரியாக அங்கே ஒரு ஆட்டோ வந்தது. அதில் ஏறுவதற்கு முன்னால் திரும்பித் தன்னுடைய வீட்டைப் பார்த்தாள். இந்த வீடு கூட மணிமேகலை பெயரில் தான் இருக்கிறது. அப்படிப் பதிவு செய்ததற்குக் காரணம் அவளுடைய மாமனார்.

‘ இங்கே திரும்பி வருவேனா, மாட்டேனான்னு எனக்கே தெரியலை. பாக்கலாம். மூணு வாரத்துல என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? ’ என்று பெருமூச்செறிந்தாள்.

“ வாங்கக்கா சீக்கிரம். டிரெயினுக்கு நேரமாச்சு” என்று குரல் வந்தது ஆட்டோவில் இருந்து. மணிமேகலையை விட வயதில் இளையவளான மற்றொரு பெண் அதில் அமர்ந்திருந்தாள்.

அடுத்த நாள் காலையில் கீழே இறங்கி வந்த திருநாவுக்கரசின் கண்கள் சுற்றிலும் மனைவியைத் தேடின.

“ டிபன், காஃபி எடுத்து வைக்கட்டுமா? அம்மாவைக் காணோம். கண்ணில் படலை. உடம்பு, கெடம்பு சரியில்லையா? மத்தியானம் என்ன சமைக்கணும்னு கேக்கணும்” என்று தயங்கித் தயங்கி மாமி பேசினார். திருநாவுக்கரசுவுக்குச் சுரீரென்று கோபம் வந்தது.

“ அவ ஊருக்குப் போயிருக்கா. எல்லாம் நீங்களே பாத்துப் பண்ணுங்க. அப்படியே செஞ்சு பழக்கப்படுத்திக்கோங்க இனிமேல்” என்று பொத்தாம் பொதுவாக பதில் சொல்லிவிட்டு, டி. வி. யை உயிர்ப்பித்தான்.

“ இன்று முதல் அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாவதால் வெயிலின் கடுமை மிகவும் அதிகமாக இருக்கும். பொதுமக்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்” என்ற அறிவிப்பு, எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் உபயத்தைச் செவ்வனே செய்தது. எரிச்சல் மண்டியது அரசுவின் மனதில். ரிமோட்டைக் கோபத்துடன் டிவியை நோக்கி எறிந்தான். டிவி திரையின் கண்ணா
டி விரிந்து மாடர்ன் ஆர்ட் வரைந்து கொண்டது.

தொடரும்,

திருபுவனம் நெசவாளி.
 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பாசமும் இல்லை
புரிதலும் இல்லை
பணமும் அதிகாரமும்
பாவையின் மனதை
பிரிவை நோக்கி தள்ள
புரியுமா இப்பொழுதாவது
பண்பில்லா நாவுக்கு.....

முதுமையில் ஒரு
சிறைப் பறவை
சிறகை விரித்து
பறக்க துவங்கியது.....
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
20
தனக்கு பெண்கள் இருக்கிறதை பற்றி சொல்லியிருக்கிறா மணிமேகலை..🤔
ஆனா 60ஆம் கல்யாணத்துல எங்க போனாங்க அவங்க??🤔🤔
பொதுவா குழந்தைகள் சேர்ந்துதான் பெற்றோருக்கு 60, 70, 80ஆம் கல்யாணம்லாம் செய்வாங்க...🤗🤗
 
Top Bottom