• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு -1

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 1

கண்ணாடி மனமல்லவா!
துன்பங்கள் துளைக்கையில்
துண்டுகளாகச் சிதறி விடும்!
நொறுங்கிடும் பாகங்களை
ஒட்டவைக்க யார் வருவார்!

மங்கல வாத்தியம் முழங்க, பெரியவர்கள் ஆசீர்வதிக்க, சிறியவர்கள் பூக்களைத் தூவி மகிழ, கோலாகலத்துடன் அந்த அறுபதாம் கல்யாண விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கல்ய தாரணம் இனிதே நிறைவேறியது.

“ கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்!
கருத்த கூந்தல் நரைத்த பின்னும்
காதல் பேசும் நாலு கண்கள்
கல்யாணமாம் கல்யாணம்
அறுபதாம் கல்யாணம்! “


என்கிற பழைய பாடலை யாரோ கைப்பேசியில் சத்தமாக ஒலிக்க வைத்தார்கள். அதைக் கேட்ட அனைவரும் கலகலவென்று சிரித்து மகிழ, சிரிப்புச் சத்தத்தில் பாடல் சத்தம் அடங்கிப் போனது.


உறவினர்களும், நண்பர்களும் மாறி மாறி வந்து தம்பதியரைப் பாராட்டி விட்டு, அவர்களுடன் சேர்ந்து நின்று கேமராவிலும் கிளுக்கிக் கொண்டார்கள்.


“ எவ்வளவு அழகா இருக்காங்க இல்லையா? ரெண்டு பேருமே நல்ல அழகு. அது கூடவே இந்த வயசுக்கேத்த கம்பீரம்! “ என்றாள் ஒருத்தி.


“ சரி சரி கண்ணு போடாதே. எல்லாருக்கும் இவ்வளவு நல்ல வாழ்க்கை அமையறதில்லை. மணிமேகலை இந்த விஷயத்தில் கொடுத்து வச்சிருக்கா. உள்ளங்கையில் வச்சுத் தாங்கற புருஷன் அமையறதுக்குக் கொடுப்பினை வேணும். சொந்த வீடு. கார். வீடு நெறைய வேலைக்காரங்க. அத்தனை வசதிகளையும் செஞ்சு கொடுத்து மகாராணி மாதிரி இல்லை வச்சிருக்காரு திருநாவுக்கரசு! வீட்டை விட்டு வெளியே காலடி வைக்கத் தேவையில்லை. எல்லாத்தையும் கொண்டு வந்து அவளோட காலடியில் கொட்டிடறாரே? ” என்றாள் இன்னொருத்தி.


“ ஆனாலும் அது ஒரு மாதிரி போரிங் லைஃப்னு எனக்குத் தோணுது. பறவையைப் புடிச்சுக் கூண்டுக்குள்ள அடைச்சு வைக்கற மாதிரி. எனக்கெல்லாம் அப்படியே மூச்சு முட்டிரும். வீட்டை விட்டு வெளியே போகாமல் என்னத்தை என்ஜாய் பண்ண முடியும்? தங்கக் கூண்டாவே இருந்தாலும் சிறையில் அடைகிறது மாதிரி தான் இதுவும்!”


“ தங்கமும் வைரமுமா இழைச்சு இப்படிப் பட்டும் பவிசுமா நிக்கற வாழ்க்கை கெடைச்சா எனக்கென்னவோ தங்கக் கூண்டும் சம்மதமே. மணிமேகலை கட்டியிருக்கிற முகூர்த்தப் புடவையைப் பாரேன். நல்ல நீலத்தில் அரக்கு பார்டர். திருபுவனம் பட்டில் வைர ஊசிப் புடவை. ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்துத் தறி போட்டுக் கொடுத்தாங்களாம். அத்தனையும் ஒரிஜினல் வெள்ளி ஜரிகை. புடவை மட்டுமே ஒரு லட்சமாம். அதுக்கு பிளவுஸைப் பாரு. ஆரி வொர்க் எல்லாம் செஞ்சு, முதுகில் ராதா கிருஷ்ணர் எம்பிராய்டரி நல்ல கோல்டன் ஜரிகையால செஞ்சிருக்காங்க. அதுவும் நாப்பது, அம்பது ஆயிரமாவது ஆயிருக்கும். கழுத்தில் வைர நெக்லஸ் புதுசு. இந்த ஃபங்ஷனுக்காவே புதுசா வாங்கிருக்காங்க தெரியுமா? எத்தனை கோடியோ தெரியலை! கழுத்தில் புதுத் திருமாங்கல்யம் கூட வைரத்தில். அதுவும் நல்ல ப்ளூ ஜாகர் வைரமாம்” என்று அங்கலாய்த்த பெண்ணின் குரலில் பொறாமை நன்றாக வழிந்தது.


“ சரி சரி, சாப்பாட்டுப் பந்தி ஆரம்பிச்சாச்சு. வா சாப்பிட்டுட்டுக் கெளம்பலாம். விதவிதமான ஐட்டங்கள் ஏகப்பட்டது மெனுவில இருக்கு. முதல் பந்தில விஐபிகளோட உக்காந்தா கவனிப்பும் நல்லாவே இருக்கும். மீதி வம்பை நாளைக்குப் பேசிக்கலாம்” என்று முடிவு செய்து நகர்ந்தார்கள் இருவரும்.


திருநாவுக்கரசு, கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் கும்பகோணத்தில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்த விழா. சென்னையில் அவருடைய பிறந்த நாளையொட்டி ஒரு விடுமுறை தினத்தில் பிரபலமான அந்த ஹோட்டலில் கேக் வெட்டி விழா கொண்டாடிய போது சென்னையில் வசிக்கும் பிரபலங்கள் பலர் வருகை தந்து நல்ல ஹெவியான பரிசுகளைத் தந்து கௌரவித்தார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், திரை, சின்னத்திரை பிரபலங்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் மீடியாக்காரர்கள் என்று பெரிய கூட்டமே வந்திருந்தது அன்று.


திருநாவுக்கரசு யார் என்று ஆராய்ந்து பார்த்தால், இன்று தமிழ்நாட்டில் வசிக்கும் திறமையான தொழிலதிபர்களில் ஒருவர். வாகனங்களுக்குத் தேவையான டயர் தயாரிக்கும் தொழிற்சாலையின் நிறுவனர். பரம்பரைத் தொழிலதிபர் ஒன்றும் இல்லை அவர். அரசாங்கத்தில் பார்த்துக் கொண்டிருந்த உயர்பதவியை உதறித் தள்ளிவிட்டுப் பணம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பல வருடங்களுக்கு முன்னால் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று வெற்றிக்கொடி நாட்டி விட்டார். பணத்தில் கொழிக்கிறார்.


அரசாங்க வேலையில் இருக்கும் போதே தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டு விட்டதால் திறமையாகத் தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று எல்லாப் புகழையும் மணிமேகலைக்கே அளிக்கும் உறவினர்களின் பேச்சுக்குப் புன்சிரிப்புடன் தலையாட்டி விட்டு நகர்ந்து விடுவார். அவருடைய முகத்தில் படர்வது உண்மையான மகிழ்ச்சிப் புன்னகையா இல்லை கேலிப் புன்னகையா என்று யாராலும் கணிக்க முடியாது.


இங்கு கும்பகோணத்தில் அவருடைய நட்சத்திரப் பிறந்தநாளன்று இந்த அறுபதாம் கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே.


விமரிசையாக நடந்து முடிந்த விழாவில் விருந்துச் சாப்பாடும் சிறப்பாகவே முடிந்தது.


“ அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு. மூணு மணிக்குக் கிளம்பி ஸ்ரீ வாஞ்சியம் போலாம். நம்ம ஜோசியர் போயிட்டு வரச் சொன்னார். ஞாபகம் இருக்கு இல்லையா? நாலு மணிக்குக் கோயில் தெறப்பாங்களாம். அதுக்குள்ள அங்கே போயிடலாம்” என்று மனைவியிடம் கட்டளையிடும் தொனியில் பேசினார் நாவுக்கரசர். எப்போதும் இது போலத்தான் அவருடைய பேச்சு இருக்கும் என்பதால் மணிமேகலைக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.


“ சித்திரனார் புத்திரனார்
சிவனார் பெருங் கணக்கு
நாட்டுக் கணக்கு நமனார் பெருங் கணக்கு
ஊருக் கணக்கு உத்தமனார் தான் கணக்கு
ஏட்டுக் கணக்கு எழுத்தாளர் நல் கணக்கு
எல்லாக் கணக்கும் எடுத்தெழுத வல்லவனார்”


என்று சித்திரகுப்தன் சந்நிதியில் அவருடைய பாடலைப் பாடி அருள் வேண்டி நின்றார்கள்.


ஸ்ரீ வாஞ்சியம் என்கிற சிறிய கிராமம், கும்பகோணத்தில் இருந்து முக்கால் மணி நேரம் காரில் பயணம் செய்தால் அடையும் தூரத்தில் இருக்கிறது. கோயிலில் நுழைந்தவுடன் முதலில் எமதர்மராஜன் மற்றும் சித்ரகுப்தன் இருவரும் வீற்றிருக்கும் சந்நிதி இருக்கிறது. நீண்ட ஆயுள் வேண்டி அங்கே பிரார்த்தனை செய்தால் நோய்நொடியில்லாமல் வாழலாம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.


இந்த சந்நிதியில் தரிசனம் செய்த பிறகு விநாயகரைத் தரிசித்துவிட்டு அந்தக் கோயிலின் மூலவரான வாஞ்சிநாதரை தரிசித்துவிட்டு அடுத்திருந்த மங்களாம்பிகை அம்மனையும் தரிசித்துவிட்டு வந்தனர். அருகிலிருந்த ஆலங்குடி சென்று குரு பகவான், ஆபத்சகாயீசுவரர் மற்றும் ஏலவார்குழலி ஆகிய தெய்வங்களின் அருளையும் வேண்டி வழிபாடு செய்த பின்னர் அங்கிருந்து கும்பகோணம் திரும்பினார்கள். அன்று இரவு ஓய்வெடுத்துக் கொண்ட பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் சென்னை கிளம்பி விட்டார்கள்.


மதியம் சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்த ஆடம்பரமான பங்களாவில் அவர்களுடைய மகிழுந்து வந்து நுழைந்தபோது, வரவேற்பதற்காக ஒரு தனிக் குழுவே காத்துக் கொண்டிருந்தது. ஆலம் சுற்றி, திருஷ்டி கழித்தார்கள். புதுமணத்தம்பதி போலவே வீட்டுக்குள் நுழைந்தார்கள் இருவரும்.


“ அம்மா, கல்யாண மாலையை எடுத்துட்டு வந்திருக்கீங்களா? மாலையும், கழுத்துமா வீட்டுக்குள்ள வாங்க” என்று சமையற்கார மாமி பர்வதம் சொல்ல, நிறைமாலையைக் கழுத்தில் தரித்துக்கொண்டு கைகளைக் கோர்த்தபடி புன்னகை தவழும் முகங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அம்மை, அப்பனாக ஒருசேரக் காட்சி தந்த தங்களுடைய முதலாளி தம்பதியின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தனர் அனைவரும். அனைவரும் என்றால் அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் அனைத்து வேலைக்காரர்களும்தான். இந்த சமயத்தில் வேறு எந்த உறவோ, நட்போ அவர்களுடன் இல்லை.


வீட்டுக்குள் நுழைந்ததும் இருவரும் மாடியில் இருந்த தங்களுடைய அறைகளுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். ஆமாம், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் தங்களுக்குள் பிரைவசி தேவை என்று நினைத்து அவர்கள் எடுத்த முடிவு அது. ஒரு படுக்கையறை இருவருக்கும் பொதுவானது நடுவில். அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய அறைகள். மணிமேகலை தனது அறைக்குள் புகுந்ததும் குளியலறைக்குள் நுழைந்தாள். குளிர்ந்த நீரில் குளித்து மிகவும் எளிமையான ஒரு சுங்குடிப் புடவையைக் கட்டிக்கொண்டு நின்றபோது உடம்புக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.


ஈரத்தலையில் கட்டியிருந்த மலையாளத் துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்ட பின்னர், அறையிலிருந்த கண்ணாடியின் முன்பாக நின்றாள். விதவிதமான மேக்கப் சாமான்கள். விலை உயர்ந்த பிராண்டட் ஃபேஸ் க்ரீம், ஃபவுண்டேஷன், பெர்ஃப்யூம், லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், மிகவும் மென்மையான ஃபேஸ் பவுடர் இருக்கும் வட்ட வடிவ பவுடர் காம்பேக்ட் என்று எத்தனையோ ஆடம்பரமான அழகு சாதனங்கள் டிரஸ்ஸிங் டேபிளில் குவிந்து கிடந்தன. அனைத்தையும் புறக்கணித்து விட்டு நெற்றியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டாள் . பளீர் சிவப்பும் இல்லாமல் அடக்கி வாசிக்கும் மெரூனும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருக்கும் அரக்கு நிறப் பொட்டு. கண்களில் இலேசாக மை தீட்டிக் கொண்டாள்.


மை தீட்டிக் கொள்வது மணிமேகலைக்குக் குழந்தையில் இருந்து பிடித்தமான செயல்.
“ அஞ்சன விழியாள்” என்று பள்ளித் தோழிகள் அவளைக் கேலி செய்வதுண்டு. ஆனாலும் மணிமேகலை பொருட்படுத்த மாட்டாள். மை தீட்டிக் கொள்வதில் என்றுமே பின்வாங்கியதில்லை. அதுவும் அவளுடைய பாட்டி வீட்டிலேயே தயாரிக்கும் மை அல்லவா?


“ மை தீட்டினாக் கண்ணு பளிச்சுன்னு அழகாத் தெரியும். இது மட்டும் காரணம் இல்லை. மை வந்து கண்ணுக்குக் குளுமையும் கூட. கண்ணுக்குக் கவசம் மாதிரி. உனக்கே ஒரு கவசமா இந்த மை செயல்படும்” என்று சொல்வார் பாட்டி.


“ மை எப்படி பாட்டி கவசமாகும்? நீங்க சொன்னதைக் கேட்டு நான்தான் மை தீட்டிக்க ரெடியாயிட்டேனே? அப்புறம் எதுக்கு இப்படி ஓவரா பில்டப் கொடுக்கறீங்க? ” என்று சிணுங்குவாள் மணிமேகலை.


“ என்னவோ புரியாத வார்த்தைல்லாம் பேசினா நான் பயந்துருவேனா என்ன? அது என்ன டப்போ , கப்போ நமக்குத் தெரியாது. ஆனா மை வந்து நிச்சயமாக் கவசம்தான்.உன் மேல யாரும் திருஷ்டி போடாம இருக்க இது உதவும். ஆமாம்”


“ என்னைப் பாத்து யாரு பாட்டி திருஷ்டி போடப் போறாங்க? திருஷ்டி போடற மாதிரி என்ன இருக்கு எங்கிட்ட? ” என்று பேத்தி அங்கலாய்ப்பதைப் பாட்டியால் ஏற்றுக் கொள்ள முடியாது.


“ என்ன இல்லை என் பேத்தி கிட்ட? குத்துவிளக்கு மாதிரி தெய்வீகமான அழகு. நல்ல பழக்கங்கள். பெரியவங்க பேச்சைக் கேட்டு நடக்கற அடக்கமான கொணம், கற்பூர புத்தி, எந்தப் பாட்டைக் கேட்டாலும் அப்படியே உள்வாங்கி உடனே திருப்பிப் பாடற கேள்வி ஞானம், படிப்பில் சுட்டியாக இருக்கறதுன்னு எத்தனையோ அடுக்கிட்டே போலாம். ஒன்னோட வயசுல இருக்கற வேற எந்தக் கொழந்தைக்காவது உன்னளவு தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, அபிராமி அந்தாதி எல்லாம் பாடத் தெரியுமா!? என் பேத்தி கலைவாணி. போற எடத்துக்கு நிச்சயமாப் பெருமைகளை அள்ளித்தரப் போற மகாலட்சுமி” என்று கூறிப் பேத்தியை உச்சி முகர்ந்து கண்களால் கண்ணீர் விட ஆரம்பித்துவிடுவார் பாட்டி.


“ அது என்ன போற எடம்? நான் இங்கயே உன் கூடவே தான் இருக்கப் போறேன். எனக்கு என்னோட பாட்டியும், அப்பாவும் எப்பவும் என் கூடவே இருக்கணும். அம்மா முகத்தைத் தான் நான் பாக்கவேயில்லை” என்று சொல்லும்போது மணிமேகலையின் முகம் வாடிவிடும். நிலவு மறைந்ததும் கூம்பிவிடும் அல்லி மலராக மாறிவிடும் அவளுடைய முகம் அப்போது. அந்த சமயத்தில் பாட்டியின் பேரன்புதான் அவளுக்குப் போர்வையாக மாறி, மனக்குறையை மறக்கவைக்கும்.


“ இல்லாத ஒண்ணைப் பத்தி எதுக்கு நெனைக்கணும்? இருக்கிறதை நெனைச்சு சந்தோஷப்பட்டுக்கோ. அதுதான் நானும், உன்னோட அப்பாவும் உன் கூடவே இருக்கோமே? கடவுள் செய்யற ஒவ்வொரு செயலிலும் ஏதாவது காரணம் ஒளிஞ்சிருக்கும். அதைப் புரிஞ்சுக்கற வயசு இல்லை உனக்கு இப்போ. சமயம் வரும்போது நீயே புரிஞ்சுக்குவே” என்று ஆறுதல் கூறிப் பேச்சை மாற்றிவிடும் சாமர்த்தியம் பாட்டிக்கு இருந்தது.


ஆனால், அம்மாவைப் பற்றி அவர்கள் எதுவும் பேசுவதில்லை. அம்மாவின் படம் கூட வீட்டில் கிடையாது. அம்மாவுக்கு என்ன ஆயிற்று என்றோ எப்படி இறந்துபோனார் என்றோ மணிமேகலைக்குத் தெரியாது.


மைச்சிமிழைக் கையில் ஏந்தியபடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்த மணிமேகலை நனவுலகத்திற்கு வந்தாள். அவளுடைய வாழ்க்கையின் மிகவும் முக்கியமான கட்டத்தில் இன்று இந்தத் தருணத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். அதை நிறைவேற்றும் துணிச்சல் இருக்கிறதா அவளிடம் என்று பார்க்கலாம்.


‘ நான் செய்யப் போற காரியம் சரிதானா? இந்த வயசுல இது தேவைதானா? கல்யாணம் ஆகி இத்தனை வருடங்களை ஒன்றாகக் கழித்துவிட்டு இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா? ’ என்று ஒரு நொடி குழம்பி நின்றாள்.


‘ இல்லை இல்லை, சரிதான். இப்பக் கூட இதைச் செயல்படுத்தலைன்னாப் பிரயோஜனமில்லை. இன்னும் பத்து வருஷம் கழிச்சு உடம்பில் தெம்பும் இருக்காது. மனோதிடமும் கொறைஞ்சிடும். இதுதான் சரியான நேரம். ஆசைப்பட்டதை அமலாக்கு நீ’ என்று மனசாட்சி உள்ளிருந்து ஊக்கம் தர, மனதில் உறுதியுடன் கணவனின் அறையை நோக்கிச் சென்றாள்.


மணிமேகலையின் முடிவால் அந்த வீட்டின் நிலவரமே பாதிக்கப்படப் போகிறது. நாடக மேடையில் நாடகம், நல்லதொரு ஃப்ளோவில் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று குதிக்கும் வில்லன் அனைத்தையும் மாற்றுவது போல, மணிமேகலை எடுத்த முடிவு அவளுடைய மற்றும் திருநாவுக்கரசு இருவரின் வாழ்க்கைகளையும் சின்னாபின்
னமாக்கப் போகிறது என்பது நிச்சயம்.


தொடரும்,


திருபுவனம் நெசவாளி.























 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு -1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
நீருக்குள் பூத்த நெருப்பு...

நெஞ்சுக்குள் புதைத்த
நினைவுகளில்
நிதம் உருகும் மங்கையோ...

இளமைக் காலத்தில்
இவர் பணம் பின் சுற்றி
இல்லத்தரசியை மறந்து விட்டார் போல.....

இன்று விரிசலை காண்கிறது....


ஆரம்பம் அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
 

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
20
Super start ma. வாழ்த்துக்கள்👍
 
Top Bottom